Saturday, May 19, 2007

கம்பனும் கபீரும்

இறைவனைப் போற்ற, அவனுடைய குணாதிசயங்களை, எத்தனை விதமாக பல காலங்களிலும் பல மகான்களும் பாடியிருக்கின்றனர் ! அவனை (அல்லது அவளை) புராணக்கதைகளுடன் இணைத்து அவரது பராக்கிரமங்களைப் போற்றி மகிழ்வது ஒரு வகை. இதை சகுண உபாசனை (வழிபாடு) என்பர் பெரியோர். அதாவது தமக்குப் பிடித்த வடிவத்திற்கு ஒரு குணத்தைக் கற்பித்து அதிலேயே லயத்து விடுவது. திரையில் பார்க்கும் நமக்குப் பிடித்த நடிகர் நடிகைகள் மேல் அளவு கடந்த ஒரு பிரேமையை வளர்த்துக் கொள்வதும் பின் அவர்களின் பித்தாக மாறுவதும் ஒரு வகையில் சகுண உபாசனைதான். அத்தகைய ஈடுபாடு கடவுளை நோக்கித் திரும்பும் பொழுது பக்தியின் உச்சத்தை பக்தன் அடைகிறான். இது பக்தி மார்க்கம்.

ஆனால் ஞான மார்க்கத்தில் உள்ளோர் அணுகுமுறையே வேறுவிதமாகும். ஆதிசங்கரர் சொல்வது போல நேதி (ந+இதி) "இது அல்ல" என்பதாக ஒவ்வொன்றாக, புலன்களால் அறியப்படுபவற்றை- விலக்கிக் கொண்டே போனால் கடைசியில் எஞ்சியிருக்கும் ஆத்ம உணர்வுதான் மனிதன் அறிய வேண்டிய இறையுணர்வு என்பர். "வாக்கும் மனமும் இல்லா மனோலயம்..." என்று ஔவையார் போற்றும் நிலை அது. அங்கே உருவ வழிபாடு மறைந்து தானே எல்லாமாகி நிற்கும் அத்வைத நிலை கைகூடுமாம். இதற்கு நிர்குண (குணமற்ற) உபாசனை என்று பெயர்.

அத்தகைய உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் அவர்கள் உருவ வழிபாட்டை துறப்பதில்லை. இதுவும் நம் போன்ற சாதாரண மனிதர்களின் முன்னேற்றத்திற்காகவே. மணிவாசகர் இந்த இரண்டு முறைகளையும் இணைத்து வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்று புலன்களால் உணரப்படுவனற்றிலிருந்து ஆரம்பித்து உண்மையுமாய் இன்மையுமாய் என்றும் உரைக்கிறார். அதேபோல் அருணகிரியாரும் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று சகுணத் தன்மையையும் நிர்குணத்தன்மையையும் ஒருங்கே போற்றுகிறார்.

கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் வரும் இறைவணக்கம் இப்படி உள்ளது.
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;
அன்றே என்னின் அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்; உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பிக் குடி வாழ்க்கை ! நமக்கு என்னோ பிழைப்பு ? அம்மா !


இந்தக் கருத்தை அப்படியே கபீரும் ஒரு தோஹாவில் பிரதிபலிக்கிறார்.

एक कह तो है नहीं दॊ कहूं तो गारी
है जैसा तैसा रहे कहे कबीरा बिचारी


ஏக் கஹ் தோ ஹை நஹி, தோ கஹும் தோ காரி
ஹை ஜைஸா தைஸா ரஹே, கஹே கபீரா பிசாரி


ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

(உரையில் = உரை+இல் ; உரைக்க இயலாத)

கம்பனின் அடிகளை நினைவூட்டும் பொருட்டே மொழிபெயர்ப்பிலும் அதே நடை கையாளப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பையும் இங்கே தருகிறேன்.

ஒன்றே என்னில் சரியன்று இரண்டு என்றுரைக்கின் தவறேயாம்
சொல்லற்று உரைப்பான் கபீர்அது என்றும் எதுவோ அதுவேயாம்


இந்த மொழிபெயர்ப்பை எழுதி வைத்து பல மாதங்களுக்கு பின்பே கம்பரின் மேற்கண்டப் பாடலை காண நேர்ந்தது. இரண்டிலும் காணப்பட்ட "ஆம்" என்ற இயைபு மோனையும் 'என்று உரைக்கின்' என்கிற சொல்லாட்சியும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனால் இரண்டிற்குமுள்ள ஒற்றுமையை பலப்படுத்த அடிக்கு இருமுறை 'ஆம்' என்ற இயைபு வரும் வண்ணம் மாற்றியமைத்தேன்.

கம்பர் நான்கு அடிகள் வைத்து சகுணம் நிர்குணம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கடவுளைப் போற்றுகிறார். ஆனால் கபீர் இரண்டாம் அடியிலேயே தன் இயலாமையை தெரிவித்துக் கொள்ளுகிறார்.

"உரையற்ற தொன்றை உரை செய்யும் ஊமர்காள்" என்னும் திருமந்திர அடிகளின் பெருமையை உணர்ந்தவர் போல் அதற்கு மேலும் ஏதாவது சொல்ல முற்பட்டால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது போலாகும் என்று நினைத்தாரோ என்னவோ!

எனக்கு ஒன்றும் தெரியாது ' அது என்றும் எதுவோ அதுவே' என்று முடித்து விட்டார்.

கம்பர் "ஆம்" என்ற வகையில் இறைவனின் எல்லா குணங்களையும் ஏற்றுக் கொண்டு போகிறார். ஆனால் கபீரோ "சரியன்று" "தவறு" என்று எதிர்மறைப் பொருளாய் அணுகுகிறார். இது மேலே சொன்ன "நேதி" வகையைச் சாரும். எப்படிச் சொன்னால் என்ன ? " இருள் இல்லை" என்றாலும் "வெளிச்சம் உள்ளது" என்றாலும் ஒரே நிலையைத்தானே குறிக்கும்.

பிசாரி ( பரிதாபத்திற்க்குரியவன்) என்று கபீரும் 'என்னோ பிழைப்பு அம்மா ' என்று கம்பரும் முடிவினில் காட்டியிருக்கும் ஒரு இயலாமையில் -இறைவனின் பெருமையை சொற்களால் அடக்கமுடியாத் தன்மையை- இருவரின் எண்ண ஒற்றுமையை காணமுடிகிறது.

4 comments:

  1. அருமையான பதிவு.

    நடையும் பிரமாதம்.

    தொடருங்கள் கபீரன்பன்..

    ReplyDelete
  2. ஆஹா, கம்பனையும் சேர்த்து கபீருக்கு மெருகூட்டியிருக்கறீர்கள்!

    உரையின்ன்றிப் போகும் நாள் எந்நாளோ?
    அது நானல்ல இது நானல்ல பின் எது நான்
    என வியம்பி எம்பிரானைக் காணும் நாள் எந்நாளோ?

    ReplyDelete
  3. அருமை! கமபன் தமிழுக்கு கபீர் வடமொழிக்கு..இருவரையும் இணைத்து அளித்தது சிறப்பு ரசித்தேன்.
    ஷைலஜா

    ReplyDelete
  4. நன்றி இராமநாதன்,ஜீவா ஷைலஜா. எல்லாம் கபீர் செயல்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி