Friday, November 23, 2007

சிரிப்பு பாதி அழுகை பாதி

பலருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு திரைப்படப் பாடல். எங்க வீட்டுப்பெண் படம். முதல் வரி் "சிரிப்பு பாதி அழுகை பாதி, சேர்ந்ததல்லவோ மனித ஜாதி".

உலக நியதியின் படி இன்பம் துன்பம் என்பது மாறி மாறி வருவதே. அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. நாம் விரும்பும் வகையில் நிகழ்சிகள் நடக்கும் போது எல்லாம் மகிழ்சியே. அப்படி இல்லாத போது துன்பமே.

உலகின் பெரும்பாலான மக்கள் சிறு குழந்தைகள் போல. தூங்கி எழுந்து பசியாறி வேறு தேவைகள் இல்லாத நிலையில் விளையாட்டில் மனம் ஈடுபட்டு தன்னை மறந்து இருக்கும் ஒரு குழந்தை. அப்பொழுது வீட்டின் ஞாபகமோ தாயின் ஞாபகமோ அதற்கு இருப்பதில்லை. அதுவே விளையாடும் போது அடிபட்டால் உடனே "அம்மா அம்மா" என்று அழுது தீர்த்துவிடும். அதனுடைய தாய் வந்து ஒரு பெரும் முயற்சி எடுத்து சமாதானம் செய்வதற்குள் பிறருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

வாழ்க்கையில் நமக்கு சிறு துன்பம் வந்துவிட்டால் உடனே இறைவனின் ஞாபகம் வந்துவிடும். யாருக்கும் இல்லாத துன்பம் நமக்கு மட்டுமே ஏற்பட்டு விட்டது போல் துடித்து விடுவோம். உலகில் நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வரையில் கடவுளின் அவசியம் தெரிவதில்லை. இந்த இயல்பை கபீர் இப்படி உரைக்கிறார்.

सुख के माथे सिल परै, राम हृदय से जाय ।
बलिहारी व दुखकी, पल पल राम रटाय ॥


ஸுக் கே மாதே ஸில் பரை, ராம் ஹ்ருதய் ஸே ஜாய்
பலிஹாரி வ துக்கீ, பல் பல் ராம் ரடாய்


மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்
விதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்


ஹிந்தியில் पल पल (பல், பல்) என்றால் ஒவ்வொரு கணமும் என்று பொருள். கஷ்டகாலத்தில் ஒவ்வொருகணமும் இடைவிடாது இராமனை செபிக்கக் கூடியவர்கள், சுகமான காலத்தில் கல்நெஞ்சக்காரர்கள் ஆகிவிடுவார்களாம்.

ஒரு வணிகனுக்கு கடன் தொல்லை மிகுதியாகி ஒரு சமயம் பெருமாளிடம் வேண்டிக்கொண்டானாம். "பெருமாளே நீ என் வியாபாரத்தை நல்ல முறையில் பெருக்கிக் கடன் தொல்லையைத் தீர்த்துவிடு. பதிலுக்கு என்னுடைய நிலத்தில் ஒரு காணியை விற்று உனக்கு காணிக்கையாக உண்டியலில் சேர்த்து விடுகிறேன்." அதாவது நிலத்தை விற்றுத் தீர்க்கக்கூடிய கடன் அல்ல. அதை விடவும் பல மடங்கு பெரிது. ஆகவே பெருமாளுக்கு ஒரு சிறிய கமிஷன்.

பெருமாளின் அருளால் விரைவிலேயே அவன் நிலைமை முன்னேறி வியாபாரம் செழித்தது. கடனெல்லாம் தீர்ந்தது. வணிகனின் மனைவி அவனுக்கு வேண்டுதலைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். நிலத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. வணிகனுக்கோ காணி நிலம் விற்றுவரக்கூடிய பணம் இப்பொழுது மிகப் பெரிதாகத் தெரிந்தது. கடவுளையும் [மனைவியை என்று கொள்க :))] திருப்தி படுத்தவேண்டும். பணத்தையும் இழக்கக்கூடாது என்கிற நிலை. பல நாள் யோசனைக்குப் பின் அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தரகர்களிடம் "என் நிலத்தை வாங்குபவர்கள் அதில் காவலுக்கு இருக்கும் நாயையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். நிலத்தின் விலை ஒரு தங்கக் காசு. நாயின் விலை ஆயிரம் தங்கக் காசுகள்" என்று சொல்லி வைத்தான். எப்படி அவன் தந்திரம் !! இதைத்தான் கபீர் ’சுகத்தில் மதியும் இறுகிடும்’ என்கிறாரோ? (माथे -புத்தி, அறிவு, सिल परै- கல் போலாதல்).

வேறு சில துன்பங்கள் கர்ம வினைகளை ஒட்டி வருவன. பிறவி ஊனம், பெரும் பிணிகள் போன்றவற்றிற்கு இறைவனையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவைகளை பரமஹம்ஸர் குடிக்கூலி என்பார். குடியிருக்கும் வீட்டிற்கு ஒருவன் வாடகை கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து விடுதலை எப்போது? தாயுமானவர் இவற்றை ஒரு பொருட்டாக கருதவில்லை. இறைவனின் அருள் வெள்ளம் பெருகும் போது அதன் முன்னே இந்த கர்மாக்கள் என்ன செய்ய முடியும் எனக் கேட்கிறார்.

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு
கல்லின் முன் எதிர் நிற்குமோ
கர்மமானவை கோடி முன்னே செய்தாலும் நின்

கருணைப் பிரவாக அருளைத்

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ ... (எங்கும் நிறைகின்ற பொருள்-6)


கர்ம வினைகளெல்லாம் வெறும் காக்கை கூட்டம் போலனவாம். இறைவனின் திருநாமம் என்ற ஒரு கல்லை வீசுங்கள் போதும் அவையெல்லாம் பறந்து போகும் என்கிறார். அந்த உண்மையை உணர்ந்த கபீருக்கும் அதனாலேயே துன்பப் படுபவர்களைக் கண்டால் ஆச்சரியம் தோன்றுகிறது.

दुख में सुमिरन सब करे, सुख में करे न कोए ।
जो सुख में सुमिरन करे, दुख काहे को होए ॥


துக் மே சுமிரன் ஸப் கரே, ஸுக் மே கரே ந கோய் |
ஜோ ஸுக் மே சுமிரன் கரே, துக் காஹே கோ ஹோய் ||


துயரில் துய்வர் அவன் நாமம்,
உயர்வில் உன்ன மறப்பரே

உயர்விலும் உன்னுவராயின்
துயரின் சாயலும் தொலையுமே

(உன்னுதல்= இடைவிடாது நினைத்தல்)

துக் காஹே கோ ஹோய் "என்றால் "துன்பம் எதற்காக வரும்" என்று பொருள்.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"


கடவுளின் சிந்தையில் மூழ்கியவனுக்கு பிறருக்கு தீங்கு செய்தல் என்பது இல்லை. அப்புறம் அவனுக்கு துன்பம் எதற்காக வரும். தெய்வ ப்ரீதி, பாப பீதி என்று இதையே ரத்தின சுருக்கமாக சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியவர்கள்.

Saturday, November 03, 2007

நீரோட்டமும் மனவோட்டமும்

பூங்காவின் ஒரு மூலையில் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் பயிற்சியை ஒரு சில இளைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். இலக்கை விட்டுத் தள்ளியே எல்லோரது குண்டுகளும் துளைத்துக் கொண்டிருந்தன. எவ்வளவு விலகிச் சென்றதோ அதை வைத்தே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதும், வேடிக்கைப் பேச்சுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. 

 ஒரு சுவாமிஜி நமட்டுப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஏளனமே ஒருவனை உசுப்பேற்றியது. "நீங்களும் ஏன் முயன்று பார்க்கக் கூடாது" என்று வம்புக்கிழுத்தான்.

 வாழ்க்கையில் முன்பின் துப்பாக்கியைப் பிடித்திராத சுவாமிஜி சிரித்துக்கொண்டே தனக்கும் அந்த வேடிக்கை சம்மதமே என்பது போல் கையில் துப்பாக்கியை வாங்கிக் கொண்டார். 

 ஒன்று...இரண்டு... மூன்று. 

 குறிதவறாத குண்டுகள் அவருடைய கரங்களிலிருந்து இயக்கப்பட்ட அதே துப்பாக்கியிலிருந்து. வாயடைத்து நின்றனர் இளைஞர்கள். "நீங்கள் எங்கே பயிற்சி பெற்றீர்கள்?" "உங்களுடைய தேவை மனப் பயிற்சி. கைப் பயிற்சி அல்ல. மனதை ஒருமுக படுத்துங்கள். பின்னர் எல்லாம் ஒழுங்கு படும்"என்று சொல்லி விடை பெற்றார் சுவாமிஜி. 

 விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்தின் போது நடைப்பெற்ற இந்த சம்பவம் வெற்றிக்கு மனஒருமைப்பாடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. சரியான முறையில் மனப்பயிற்சி இல்லாவிட்டால் அது கட்டுபாடற்ற நீர் ஓட்டம் போல் பயனற்றதாகி விடும் என்கிறார் கபீர்தாஸரும்.

  पानी केरा बुदबुदा, अस मानस की जात ।
देखत ही छिप जायेगा, ज्यों सारा परभात ॥ 

  பானீ கேரா புத்புதா, அஸ் மானஸ் கீ ஜாத் 
தேகத் ஹீ சிப் ஜாயேகா ஜ்யோம் ஸாரா பர்பாத் 

நில்லாது நீரில் குமிழியும், நில்லாது மனதின் இச்சையுமே
நில்லாது, வைகறைப் புலர்விலே, தாரைகள் மின்மினி ஒளியுமே 
 
மாற்று : 
 நில்லாத நீரும் விரயமே, நில்லாத மனமும் வீழ்வதே
நில்லாது, வைகறைப் புலர்விலே, தாரைகள் மின்மினி ஒளியுமே 

  (வீழ்தல் - வீணாகக் கழித்தல். தாழ்வுறுதல், தாரை -நட்சத்திரம், ஒளியுமே -ஒளிர்தல் மற்றும் ஒளிதல் என்ற இரு பொருள்களிலும் கொள்ளலாம்) 

[ இரு வேறு  விளக்கங்களை அனுசரித்து 'மாற்று' தரப்பட்டுள்ளது ]

  ஓடும் நீரை அணையைக் கட்டி தேக்கினால் மின் உற்பத்திக்கும், உணவு உற்பத்திக்கும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நிலத்தில் சிதறி இங்குமங்காய் பாய்ந்து குறிப்பிட்ட எந்த பயனும் அடையமுடியாதபடி விரயமாகிவிடும். 

 அது போலவே மன ஓட்டத்தையும் கட்டுப்படுத்தாதவன் ஆற்றலை இழக்கிறான். எவ்வளவு வேகமாக இந்த விரயம் நிகழ்கிறது என்று கேட்டால் கதிரவன் தோன்றியதும் நட்சத்திரங்களின் ஒளி மறைந்துவிடும் வேகத்தில் நடக்கிறதாம் ! - இது ஹிந்தி மூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.

 சூரியனையும் நட்சத்திரங்களைக் கொண்டு வெறும் ஆற்றல் வீணாவதைப் பற்றி மட்டுமா கபீர் சொல்லுவார்? அவ்வளவு பொருத்தமாக இல்லை என்று தோன்றியது. இதற்கு மேலும் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கும் எனவும் தோன்றியது. 

அந்நோக்கத்தைப் பற்றி பேசும் முன் இரு மகான்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்சிகளைப் பார்ப்போம். 

       இரமணர் அண்ணாமலையாரைத் தேடிச் சென்றது அவருடைய பதினைந்தாவது வயதில். ஞான அனுபூதிக்கு முன்னும் பின்னும் அவர் திருவண்ணாமலையை விட்டு வெளியே சென்றதில்லை. வேறெந்த கல்வியும் யாரையும் தேடிச் சென்று பெற்றதில்லை. ஆனால் தமிழறிஞர்களும் வியக்கும் வண்ணம் உபதேச சாரம் என்ற நூலை அடியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றினார். முப்பது பாக்கள் கொண்ட அத்வைத சாரமாக விளங்கும் அதை பின்னர் அவரே வடமொழியிலும் அதன் பின்னர் தெலுங்கிலும் படைத்தார். உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவனாய் வெளியே வந்தவருக்கு மூன்று மொழிகளில் உயரிய வேதாந்தத்தை செய்யுள் செய்யும் புலமை எங்கிருந்து வந்தது? 

    ஷிரடி ஸாயியின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே நானாஸாஹேப் சாந்தோர்கர் கீதையின் சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஸாயிக்கு வடமொழி தெரியாது என்ற உண்மையும் தனக்கு வேதாந்தத்தில் உள்ள தேர்ச்சியையும் எண்ணி அவர் கர்வமடைந்திருந்தார்.
  பாபா : நானா என்ன முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாய்
நானா : கீதையின் ஒரு சுலோகம். 
பாபா : என்ன சுலோகம் . பலமாக கூறு

நானா நாலாவது அத்தியாயத்திலிருந்து 34 ஆவது சுலோகத்தை கூறினார்.

     அதன் பின்னர் அதன் பொருள் பற்றிய பாபாவின் பல நுணுக்கமான கேள்விகளுக்கு நானா விடைதெரியாமல் தவித்தார். பாபா நானாவுக்கு அதன் ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கவுரையும் வியாசரின் (வியாசரால் சொல்லப்பட்டது தானே மஹாபாரதம்) கண்ணோட்டத்தையும் விவரமாகச் சொல்லச் சொல்ல நானாவுக்கு தன்னுடைய அறிவு எவ்வளவு குறைவானது என்று புரிந்தது. 

 பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை செய்து வளர்ந்த சாயி சொல்லிக்கொள்ளும் வண்ணம் எந்த படிப்பும் பயின்றவர் இல்லை. ஆனால் ஒரு பெரிய பண்டிதருக்கே கீதைக்கு பொருள் சொல்லும் வல்லமை அவருக்கு எங்கிருந்து வந்தது ? 

 இந்த இரு நிகழ்சிகளிலும் புலப்படுவது ஒன்றுதான். பூரண ஞானமடைந்தவனுக்கு புறத்தாக ஒன்றும் கிடையாது. அவர்கள் மனதில் ஒன்றை நினத்தவுடனே (சங்கல்பித்த உடனேயே) அதற்கான ஆற்றல் அவர்களின் உள்ளிருந்து பெருகுகிறது. 

   இதையே கபீர், கதிரவன் (ஞான) உதயத்திற்கு ஒப்பிடுகிறார். அந்த ஞானத்திற்கு முன்னிலையில் மனிதர்களாகிய நம்முடைய தனிப்பட்ட திறமைகளும், ஆற்றல்களும் சாதனைகளும் பெருமைகளும் எல்லாம் மின்மினிகளின் ஒளிர்தலை போன்றதே.
 இவையெதுவுமே ஞானிகளுக்கு பெரிய விஷயமில்லை. ஏனெனில் அவர்கள், உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண காரியம் இருப்பதையும் ஒரு மிகப் பெரிய நியதியின்படி அது நடந்து வருவதையும் முற்றிலுமாக அறிந்தவர்கள் ஆவார்கள். ஆகையால் உலகாதாய வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வித நாட்டமும் இருப்பதில்லை. 

    கபீரின் மேற்கண்ட ஈரடியில் அத்தகைய ஒரு ஞானத்தை பெறுவதற்கான மன ஆற்றலை வளர்த்து கொள்வதே வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அடியில் வீணாகும் ஆற்றலைப் பற்றியும் இரண்டாம் அடியில் அடைய வேண்டிய உண்மையான ஆற்றல் பற்றியும் கூறியிருக்கிறார் எனக் கொள்வோமானால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.