Thursday, December 18, 2008

ஈரக் கம்பளம் சுமையதிகம்

உப்பு வியாபாரி ஒருவன் தன் கழுதை மேல் உப்பு மூட்டையை ஏற்றி ஊர் ஊராகச் சென்று உப்பு விற்று வருவது வழக்கம்.

ஒருநாள் வழியிலே ஒரு ஓடையை கடக்க வேண்டியிருந்தது. கடக்கும் போது அடி சறுக்கி கழுதை நீரில் விழுந்தது. உப்பெல்லாம் நீரில் கரைந்து முதுகில் இருந்த பாரமெல்லாம் காணாமல் போயிற்று. வியாபாரியோ தன் கெட்ட நேரத்தை நொந்து கொள்கையில் கழுதைக்கு பெரும் ஆச்சரியம், கொஞ்ச நேரத்திலேயே பெரும் சுமை மாயமானதைப் பற்றி. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அப்பாதையில் போகையில் அதே ஓடை. இம்முறை வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்தது. வெற்றி ! வெற்றி!! இம்முறையும் சுமையெல்லாம் மாயம்.

அடுத்தடுத்து சில முறை இது தொடர்ந்து நிகழவே வியாபாரிக்கு கழுதையின் தந்திரம் புரிந்தது. அவன் கழுதையை ஒரு வண்ணானுக்கு விற்று விட்டு வேறு ஒரு கழுதையை வாங்கி வியாபரத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

கழுதை அறியுமோ சுமையின் தரம். வண்ணான் தன் துணி பொதியை ஏற்றிக்கொண்டு அதே ஓடைக்குச் சென்றான். துவைப்பதற்கு சரியான இடம் தேடி ஓடையில் நடத்திச் சென்றான். கழுதைக்கு மட்டில்லா மகிழ்ச்சி. புது எஜமானனிடத்தும் தன் புத்திசாலித்தனத்தை நம்பி கால் இடறியது போல் நீரில் விழுந்தது. நீர் பொதியில் புகுந்ததும் பொதியின் பாரம் கூடியது. எத்தனை முயற்சித்தும் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. வண்ணானும் விடுவதாயில்லை. அதை கோலினால் புடைக்க ஆரம்பித்தான்.நேரமாக ஆக பாரம் கூடிக்கொண்டே போனது. கழுதையோ அடி வாங்கி துவண்டு போனது.

கபீரின் ஒரு ஈரடி மேற்கண்ட கதையை நினைவு படுத்தியதால் கதையை முதலில் சொல்லிவிட்டேன். கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இப்போது ஈரடியை பார்ப்போம்.

अति हठ मत कर बावरे, हठ से बात न होय |
ज्यूं ज्यूं भीजे कामरी, त्यूं त्यूं भारी होय ||


அதிப் பிடிவாதம் வேண்டா,வாதத்தில் இல்லை சமாதானம்
நனைதல் கூடக் கூடவே, கம்பளம் தன் சுமையும் கூடும்

மாற்று :
வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்

மிக எளிமையான உதாரணம். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. கழுதைக்கு வந்த மயக்கத்தை போல நமக்கும் அறிவு மயக்கம் வந்துவிட்டால் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே மெச்சிக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் அதைப் போலவே அஞ்ஞானிகளாகி விடுகிறோம். அப்போது கீழிருப்பவர்கள் வாயை அடக்குகிறோம். மேலிருப்பவரோடு விவாதம் செய்வதோ தட்டிக் கழிப்பதோ செய்கிறோம்.

ஏதோ ஒரு வகையில் வாதம் முடிவுக்கு வந்த பின்னரும் பலநாட்களுக்கு மனதிற்குள்ளே அதே வாத பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருப்போம்.‘அப்படி பேசாது இப்படி சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ’ என்று உள்ளுக்குள்ளே உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும். இதை கம்பளத்தில் ஈரம் ஊறியது போல மனம் இந்த வாதப் பிரதிவாதங்களில் ஊறுகிறது என்ற வகையில் ஒப்பிடுகிறார் கபீர்.

இப்படி மனம் சதா ..நானே சரி... நானே சரி ..என்ற எண்ணத்தில் ஊறும் போது உண்மை நிலையை உணர தவறி விடுகிறது.

ஈரமான கம்பளியை யாராவது போர்த்திக் கொள்ள முடியுமா? குளிர் நேரத்தில் கூட அதை யாரும் சீந்த மாட்டார்களே. அது போல பிறர் நம்மை தள்ளி வைத்து விடுகிறார்கள்.

வீண் விவாதங்களால் மனக்கசப்பு வளர்கிறது. அன்பு முறியும் அபாயம் ஏற்படுகிறது. பொதுவாக இது யாவருக்கும் பொருந்தும்.

நிறைகுடம் தளும்பாது, Empty wagons rattle the most என்றெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம். மனமுதிர்ச்சி இல்லாதவர்களே விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

உண்மையை உணர்வதற்கு விவாதங்கள் தேவையில்லை.அமைதி காத்தால் போதும்.
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த
முற்றுணர்வோர் ஒன்று மொழியாரே- வெற்றி பெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும் பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி. (நீதி வெண்பா-35)

(ஆன்று அமைந்த முற்று உணர்வோர்= கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்)


அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். மனதின் போக்கைக்குறித்து குருவிடம் இவ்விதம் பிரார்த்திக்கிறார்.
.......
......
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து
ராவண ஆகாரமாகி
இதயவெளி எங்கணும் தன்னரசு நாடு செய்து
இருக்கும் இதனொடு எந்நேரமும்
வாங்காநி லா அடிமை போராட முடியுமோ
மௌன உபதேச குருவே
மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்
மரபில் வரு மௌன குருவே .


மௌனத்தின் அருமையை உணர்ந்தவர் அவர். ஆதலால் பலவிதமான தர்க்கங்களில் ஈடுபடும் பண்டிதர்களின் போக்கைக் கண்டு இன்னொரு பாடலில் பரிகாசம் செய்கிறார்.

பூதலயமாகின்ற மாயையை முதல் என்பர் சிலர்
பொறிபுலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர்
கரண முடிவென்பர் சிலர், குணம்
போன இடமென்பர் சிலபேர்,
நாதவடிவென்பர்,சிலர் விந்துமயமென்பர் சிலர்
நட்ட நடுவே இருந்த
நாமென்பர் சிலர்; உருவமாம் என்பர் சிலர்
நாடில் அருவென்பர் சிலபேர்,
பேதமற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர்
பேசில் அருளென்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட சூனியம் அதென்பர் சில பேர்
பிறவுமே மொழிவர்;இவையால்
பாதரசமாய் மனது சஞ்சலப்படுமல்லால்
பரம சுக நிட்டை பெறுமோ
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே.


உலகிலே நாம் வந்திருக்கும் காரியம் ”பரமசுக நிட்டை பெறுதல்”. அதை விட்டு விட்டு சிருஷ்டியின் குண விசேஷங்களை பல்வேறு விதமாக ஆராய்ந்து தர்க்கம் செய்வதால் மனதுக்கு சஞ்சலம் மட்டுமே எஞ்சுகிறது. பாதரசம் சிந்தினால் அதை பிடித்து எடுக்க முடியாது. தெர்மாமீட்டரை உடைத்தவர்களுக்கு அது தெரியும். நாலாப்பக்கமும் சிதறி ஓடும் அதை மீண்டும் பிடித்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பல்வேறு விவாதங்களால் மனமும் அதைப் போலவே சிதறி ஓடுகிறது.

மன ஒருமையில்லாது போனால் எந்த காரியமும் கை கூடாது. மன ஒருமைக்கு மௌனம் சாதனம்.அதற்கு வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது ஆரம்பப் பாடம்.

ஆரம்பப்பாடம் சரியாக இருந்தால்தானே பின்னால் கற்கப் போவது நிற்கும். இல்லாவிட்டால் கதையில் வந்த கழுதையை போல அவஸ்தையை அனுபவிக்க வேண்டியிருக்கும்

Friday, December 05, 2008

மரணமில்லா பெரு வாழ்வு

இந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான்.

தனக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற அவனை அந்த சாது ’உன் வழியே நீ போ’ என்று சர்வ சாதாரணமாகக் கூறியதைக் கேட்டதும் கோபத்துடன் வாளை உறுவி அவரை கொல்ல எத்தனித்தான். அவரோ எவ்வித சலனமும் இல்லாமல் “எனக்கு மரணம் இல்லை.நான் ஆத்மாவில் உறைபவன்” என்று பதிலுரைத்தார். அவரது தன்னம்பிக்கையும் பயமற்ற நிலையும் மாவீரனுடைய கோபத்தையும் பணிய வைத்தது.

தக்ஷசீலத்தின் மன்னன் போரஸ்-ஸுடன் நடந்த போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அலெக்ஸாண்டரின் படைபலம் வெகுவாக குன்றி விட்டிருந்தது. மாஸிடோனியாவிலிருந்த கிளம்பிய படையில் கால் பாகமே எஞ்சியிருந்தது. அவனுக்கு மிகவும் அத்யந்தமாக இருந்த குதிரையும் இறந்து விட்டது. தன் உயிர் நண்பன் ஒருவனை இழந்தது போல் துக்கம் அவனை வாட்டியது. எல்லோருடைய வற்புறுத்தலின் பேரில் படைகளை திருப்பினான் அலெக்ஸாண்டர்.

வழியில் பெர்ஷிய மன்னன் சமாதியிருந்த நினைவு மண்டபத்தைக் கடக்க நேர்ந்தது. அதிலிருந்த வாசகம்;

“நான் தான் சைரஸ்.இந்த பெரும் பெர்ஷிய ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவன். நீங்கள் யாராயிருப்பினும்,எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இதோ,என்னை மூடியிருக்கும் இந்த மண்ணை மட்டுமாவது எனக்காக விட்டு வையுங்கள் “

அரசும் புகழும் எவ்வளவு நிலையற்றது என்பதை அறிந்த அலெக்ஸாண்டர் மனம் மிகவும் கலங்கியது.

அந்த தினங்களில் இந்தியாவிலிருந்து அலெக்ஸாந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பல அறிஞர்களும் அவனுடன் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் (அவர் பெயரை Calnus-என்கிறது ஆங்கில குறிப்பு) தன் இறுதி தினம் வந்ததைப் புரிந்து கொண்டு ஒரு சிதையை மூட்டச் சொன்னார். தனக்குரிய இறுதி சடங்குகளை தானே செய்து தன் கிரேக்க நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “மன்னனிடம் சொல்லுங்கள்.விரைவிலேயே பாபிலோனில் சந்திப்போம்” என்று அவர்களிடம் சொல்லி அமைதியாக சிதையில் அமர்ந்து நெருப்போடு கலந்து போனார்.

பலமாதங்கள் தொடர்ந்த பயணத்தில் மேன்மேலும் துர்சகுனங்கள் காணப்பட்டன. முன் கோபத்தால் அலெக்ஸாண்டர் தன் நெருங்கிய நண்பனையே மதியிழந்து கொன்றுவிட்டான். அதை நினைத்து வருந்தி நாளெல்லாம் உணவும் நீரும் இன்றி அழுது கொண்டிருந்தான்.

எப்போதுமே வெற்றிகளுக்கு நாயகனாக இருப்பினும் அலெக்ஸாண்டர் மனம் துன்பத்தால் வாடியது. அளவுக்கு அதிகமாகக் குடித்தான். பாபிலோனை அடைந்தபோது அவனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டது. பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வைத்தியங்கள் பலனளிக்காமல் கி.மு 326 ஜூன் 10ஆம் தேதி அவன் மரணமடைந்தான்.

பஞ்சாப்-சாதுவின் தீர்க்கமும், சைரஸ்ஸின் வாசகமும், சிதை புகுந்த அறிஞனின் அமைதியான மரண வரவேற்பும், நண்பனைக் கொன்றதும் அவனுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னுடைய சவ அடக்கத்தின் போது சவப்பெட்டிக்கு வெளியே கைகள் இரண்டும் ஆகாயத்தை பார்த்தவாறு வெளியே தெரியட்டும் என்றும் “இந்த மாவீரன் கடைசியில் கொண்டு சென்றது எதுவும் இல்லை என்பதை யாவரும் அறிந்து கொள்ளட்டும்” என்றும் சொல்லியிருந்தானாம் அலெக்ஸாண்டர்.

சைரஸ்ஸைப் போலவும் அலெக்ஸாண்டரைப் போலவும் வந்து சென்றவர்கள் எத்தனையோ பேர். மரண தேவனின் பிடியிலிருந்து தப்பியவர் எவருமில்லை.

மனிதப்பிறவி தரப்பட்டிருகும் நோக்கத்தை மறந்து வாழ்நாளில் அவர்கள் போடுகின்ற ஆட்டம் ஞானிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. கபீரின் வரிகளிலே சொல்வதானால்,

चहूँ दिस ठाढ़े सूरमा,हाथ लिये तलवार ।
सबही यह तन देखता, काल ले गया मार ॥


நாற்புரம் காத்தனர் வீரர், கையில் ஏந்திய வாளொடு
பார்த்து நின்றனர் பாரோர்,பிராணன் போனது நமனொடு

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி.

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)

மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு உழக்கு அன்னம்,சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே. மேலும் சொல்கிறார் ஔவையார்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். (நல்வழி -15)

உபாயம் இதுவே மதியாகும்! எதுவே? சிவாய என்று சிந்தித்திருப்பதே அறிவுள்ள செயலாகும். விதியை மாற்ற நினைக்கும் எந்த முயற்சியிலும் ’விதியே மதியாகிவிடும்’. அதாவது விதியினுடைய வழியே ஓங்கி நிற்கும். இதை விளக்கும் ஒரு சுஃபி கதை.

காலிஃப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் போது மரணதேவனின் தூதன் நின்றிருந்தான். “உனக்கு என்ன வேலை ?”என்று வினவினான் காலிஃப். ”இன்றைய பொழுதே உன் நண்பனுக்கு கடைசி தினம்”என்று பதில் வந்தது. கவலை கொண்ட காலிஃப் அரண்மனைக்குத் திரும்பி நண்பனை அழைத்து தன்னுடைய சிறந்த குதிரையை அளித்து ’மாலைக்குள் பாக்தாத் போய்விடு’ என்று விரட்டினான். மீண்டும் பூங்காவிற்கு வந்த போது தூதன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.”மாலை வரை காத்திருக்க வேண்டுமா ?”என்றான் காலிஃப். “அவனுக்கு மரணம் பாக்தாத்தில் அல்லவோ! அவனுக்காக பாக்தாத்தில் இன்னொரு தூதன் காத்திருக்கிறான். அவன் இன்னமும் இங்கேயே உள்ளானே என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்” என்று சொல்லி மறைந்தான் தூதன். விதி காலிஃபாவின் மதியுள் புகுந்து வென்றுவிட்டது. விதியே மதியாகிவிட்டது !

ஆனால் கடவுளையே நம்பினவர்க்கு இந்த கவலை இல்லை. தன்னையே எக்காலும் சிந்தித்திருந்த மார்க்கண்டேயனுக்காக கூற்றுவனையும் எட்டி உதைத்த சிவனை போற்றி தாயுமானவரும் மரணபயம் பக்தனுக்கேது என்று பாடுகிறார்.

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப்
பார்க்கின் அன்பெர்க்கென்ன பயங்காண் பராபரமே

(மறலி=எமன்) - பராபரக்கண்ணி 128

பரமனை சிந்தித்திருப்பதே சிறந்த வழி என்று ஔவை சொன்னதும் அதனாலேயே. கபீரின் கருத்தும் அதுவே

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥


பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரும் ஒருநாள்
தனையாள் இராம மந்திரம் செபிக்கும் கபீரனுக் கில்லை இறுநாள்


(தீர்த்தவன்= பிணி தீர்த்தவன் ; இறுநாள்= மரண நாள்)

அப்படி இடைவிடாது சிந்தித்து இருக்கும்போது மரணமற்ற நிலை தானே வந்தெய்துகிறது. எப்படி நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வித சிரமும் இல்லாமல் கொடியிலிருந்து தானே பிரிந்து விடுமோ அதுபோல் இறைப் பற்றில் பழுத்த ஜீவனும் உலகப்பற்றை விட்டு பரமனடி சேர்கிறது. எல்லோராலும் அறியப்பட்ட மிருத்யுஞ்ஜெய மந்திரத்தின் சாரமும் அதுவே.

மிருத்யுஞ்செயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். ஆர்வமுள்ளவர்களுக்காக மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्द्धनम्
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தநான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


ஊர்வாருகம் +இவ என்பது ’வெள்ளரிப்பழத்தைப் போல’ என்று ஒரு பொருள் வரும். ஊர்வ +ஆரூகம் என்று பிரித்துக் கொண்டால் பெரும் வியாதி என்று இன்னொரு பொருள் கிடைக்கும். இந்த காரணத்தினால்தான் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளவர்களுக்காக பிறர் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊர்வ ஆரூகம் இவ பந்தனான் (பெரும் வியாதி போன்றத் தளை) என்பது பிறவிப் பிணியை குறிப்பதாகக் கொள்ளலாம். அப்போது அமிர்தம் அளித்து மோக்ஷத்தை அளி என்ற கோரிக்கை வியாதியஸ்தர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக யாவருக்கும் பொருந்தும்.

Saturday, November 22, 2008

குறையொன்றும் இல்லை எனக்கு

பொன்னியின் செல்வன் :அத்தியாயம் -16 (சுந்தர சோழர்-குந்தவை உரையாடல்)

சக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, "என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது? அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது", என்றார்.

"அப்படி ஏன் நிராசை அடையவேண்டும்? அப்பா! பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்."

"அவர் சொல்வதை நம்பி நீயும் இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர ஆள் அனுப்பியிருக்கிறாயாம்! நான் கேள்விப் பட்டேன். மகளே! என் பேரில் உனக்குள்ள பாசத்தை அது காட்டுகிறது....

...... ஆனால் இலங்கையிலிருந்து மூலிகை வந்தாலும் சரி, சாவகத் தீவிலிருந்து வந்தாலும் சரி, தேவலோகத்திலிருந்து அமுதமே வந்தாலும் சரி, எனக்கு உடம்பு இந்த ஜன்மத்தில் குணமாகப் போவதில்லை..."

"ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்!" என்றாள் இளவரசி.

"... உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது?"

"தந்தையே, மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?"

"கவிகளுடைய அதிசயோக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய்! நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை..."


அமரர் கல்கியின் பேனாவிலிருந்து விழுந்த எழுத்துகள் கபீர்தாஸரின் ஈரடிக்கு உயிர் கொடுப்பவை போல அமைந்துள்ளது.

चिंता ऐसी डाकिनी काट कलेजा खाए ।
वैद बिचारा क्या करे, कहां तक दवा लगाए ॥


சிந்தையுள் புகுந்த கவலைப்பேய், சிதைத்திடும் தேக நலமே
எத்தனை காலம் தருவான், பேதை வைத்தியன் அவிழ்தமே


(அவிழ்தம்= ஔஷதம், மருந்து)

சுந்தர சோழனைப்போல ராஜ்ய பாரத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்ட ஒரு அரசன் ஒரு நாள் காலையில் தனிமையை விரும்பி மாறு வேடத்தில் நகருக்கு வெளியே போய்க்கொண்டிருந்தான். அப்போது இனிமையானப் பாடல் கேட்டது.

சற்று தூரத்தில் ஒரு உழவன் நிலத்தை உழுது கொண்டே பாட்டு பாடிக்கொண்டிருந்தான். ஏர் இழுத்த காளைகளும் அவனுடைய பாட்டை ரசித்தது போல் அயர்ச்சி இல்லாமல் நிலத்தை உழுது கொண்டிருந்தன. அந்த ரம்யமான இயற்கை சூழலும், அவனது பாடலும் அரசனை வெகு நேரம் தன்னை மறந்து அமர்ந்திருக்கச் செய்தது. அவனது மனமும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு இயற்கையை ரசித்ததாலோ என்னவோ அப்போது மிகவும் இலகுவானது.

உழவன் சிரம பரிகாரம் பொருட்டு வேலையை நிறுத்தி மரத்தடிக்கு வந்தான். “ஏனப்பா,இந்த வெய்யிலிலும் உன்னால் எப்படி சந்தோஷமாக பாட்டு பாடி வேலை செய்ய முடிகிறது ?” என்று ஆச்சரியத்துடன் அவனைக் கேட்டான் அரசன்.

அவனை ஒரு வழிப்போக்கன் என்று நினைத்து உழவன் பதில் சொன்னான். ”வாரி வழங்கக் காத்திருக்கும் பூமித்தாய், மும்மாரி தரும் நல்லறம் உள்ள அரசாட்சி, மனையிலே சொன்ன பேச்சைக் கேட்கும் மனையாள் என இப்படி யாவையும் இறைவன் கொடுத்திருக்கும் போது என் சந்தோஷத்திற்கு என்ன குறைவிருக்க முடியும் ?” என்றான் உழவன்.

அவனுடைய மகிழ்ச்சிக்கானக் காரணத்தை அவன் பதிலிலேயே கண்டு கொண்டான் மன்னன். உழவனின் உள்ளத்திலிருந்து பெருகிய நன்றி உணர்ச்சியே அவனது பதிலில் பிரதிபலித்தது.

நன்றி பெருகும் மனதில் எதைப்பற்றியும் யாரைப் பற்றிய குறைகளும் தங்குவதில்லை. அந்த அழுக்குகள் நன்றி என்னும் உணர்ச்சிப் பெருக்கில் அடித்துச் செல்லப்படுவதால் மனம் சுத்தமாக இருக்கிறது. அப்போது ஆனந்தம் அங்கே குடி கொள்கிறது. பாட்டு தானாக வெளிப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவரின் நிலை அதுவல்லவே !

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தா அடவி என்று விடப்பெறுவேன்
...

என்கிறது கந்தரநுபூதி. குடும்பம், செல்வம் என்பன வெல்லாம் கடக்கமுடியாத காடு போல கவலை தரும் விஷயங்கள் ஆகும்.

கபீர் சொல்லும் நோயை ஒத்த கவலைகளுக்கான காரணங்களை பட்டியல் இடுகிறது சிறுபஞ்ச மூலம்.

அரம் போல் கிளை, அடங்காப் பெண், வியக்கத்தொண்டு
மரம் போல் மகன், மாறாய் நின்று-கரம் போலக்

கள்ளநோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல்

உள்ள நோய் வேண்டா உயிர்க்கு.
(சிப.மூ-62)

சிறிது சிறிதாக மரம் அறுக்கும் அரம் போல உறவினர்களின் உபத்திரவம், அடங்காத மனைப் பெண்டிர், பணிவற்ற வேலைக்காரர், அறிவற்ற மகன், பகை உணர்ச்சியோடு கூடிய அண்டை வீட்டார் ஆகிய ஐந்தில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் வேறு நோய் தேவையில்லை. அதுவே பெரு நோய் ஆகிவிடும்.

கவலைகள் என்னும் பாரத்தை ஓரளவு தாக்கு பிடிக்க முடியும் தன்னம்பிக்கையின் பலத்தால். ஆனால் தலையில் சுமக்கப்படும் பாரத்திற்கு ஒரு அளவு இருப்பது போல அதற்கும் ஒரு எல்லை உண்டு. அளவுக்கு மீறி கவலைகள் பெரிதாகி விட்டால் உடல் நலம் தளர்வுற ஆரம்பிக்கிறது. கபீர் சொல்வது போல இதற்கு வைத்தியன் தரும் மருந்துதான் என்ன செய்யும் ?

விமானத்திலோ,பேருந்திலோ அமர்ந்தபின் அதற்குரிய ஓட்டுனர் பத்திரமாக ஓட்டுவாரோ இல்லையோ என்று கவலைப்பட ஆரம்பித்தால் பயணம் இனிதாக இருக்குமா?

பல வருடங்கள் குடும்பம் நடத்திய பின்னும் ஒருவர் மற்றவரின் தவறுகளை பெரிதுபடுத்தும் வீட்டில் மன அமைதிதான் நிலைக்குமா ? பரஸ்பர நம்பிக்கையற்ற நிலைதான் இப்படிப்பட்ட கவலைகளின் பிறப்பிடம்.

கவலைகள் இன்றி மன அமைதி பெறும் வழி பற்றி பகவான் ரமணரை ஒருவர் கேட்ட பொழுது “ஊருக்கு போக வேண்டும் என்று ரயிலில் ஏறுகிறாய். ஏறிய பின்னும் சுமையை தலையில் சுமந்து கொண்டிருப்பாயா அல்லது ’அப்பாடா’ என்று அதை மேலே சாமானுக்கான இடத்தில் வைத்து விட்டு பிறருடன் சந்தோஷமாக பேசிக் கொண்டு போவாயா ? அது போலவே கவலைக்கான காரணங்களை பகவானிடம் விட்டு விடு. அப்புறம் கவலை என்கிற பாரம் ஏது ?” என்று பதில் வந்தது.

ஆழ்ந்த இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படி கவலையற்று இருக்க முடியும்.

”யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி” என்று இறைவனை ஏத்துகிறது திருவாசகம்.நாம் எவ்வளவுக்கெவ்வளவு கவலைப் படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ‘யான் எனது’ என்ற எண்ணம் நம்மை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நமது ஆன்மீக முன்னேற்றத்தை சுய பரிசோதனை செய்து கொள்ள இது ஒரு நல்ல உரை கல்.

அறிவற்ற மகன் என்று ஆத்திரப்பட்ட திருவெண்காடரின் அறிவுக் கண்ணைத் திறந்து பட்டினத்து அடிகளாக மாற்றிய இறைவன் நமது குறைகளையும் போக்க வல்லவன் தான்.

குபேரனுக்கு இணையாக செல்வம் படைத்திருந்த திருவெண்காடர்,குப்பையிலே கிடக்கும் கரித்துணியை கட்டிக்கொண்டு குறையில்லை என்று பாடுவதை பாருங்கள்

உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து
ஐந்துண்டு,உரைப்படியே
செருக்கித் தரிக்க திருநீறும்
உண்டு, தெருக்குப்பையிலே
தரிக்க கரித்துணி ஆடையும்
உண்டு,எந்த சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன் குறை
ஏதும் எனக்கு இலையே.

(திருவெழுத்து ஐந்து =பஞ்சாட்சர மந்திரம்)

Count the Blessings என்பது போல் நமக்குக் கிடைத்திருப்பவற்றிற்கு நன்றியுடன் இறைவனை நினைத்திருப்போர்க்கு குறையோ கவலையோ எந்நாளும் இல்லை.

Monday, November 03, 2008

பேர் சொல்லும் பிள்ளை

“தோன்றிற் புகழொடு தோன்றுக.”

ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் முதல் ராங்க் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போலத்தான் இதுவும் என்று பலமுறை நினைத்ததுண்டு.

எந்தத் துறையில் பார்த்தாலும் சிலர் தங்களது அயராத உழைப்பால் அதில் புகழ் பெற்று திகழ்கின்றனர். பெரும்பான்மையான பலர் அந்த உயரத்தை அடைய முடியாமல் பல இடை நிலைகளிலேயே நின்று போகின்றனர்.

இந்த உண்மை வள்ளுவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும் ?

பின் எதற்காக ”அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று“ என்று சொன்னார் ?

புகழ் என்கிற வார்த்தைக்கு இன்றைய கண்ணோட்டத்தில் நாம் பொருள் கொள்ள விழைவதால் வரும் குழப்பமே இது எனக்கொள்ளலாம்.

மின்னஞ்சலில் பலமுறை வலம் வந்த ஒரு செய்தியின் சாராம்சத்தை இங்கே பார்ப்போம்.

1963-ல் பௌதிகத்திற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யார்?

1981 ல் ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் யார் ?

1998 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகர் யார் ?

2004ல் நாடகத்துறையில் கலைமாமணி விருது பெற்றவர் யார்?

இந்தியாவின் ஆறாவது ஜனாதிபதி யார் ?

இவற்றில் எதற்குமே நமக்கு விடை தெரியாது என்றால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. மேலே உள்ள கேள்விகளின் விடைக்குரிய நபர்கள் யாவரும் மிகப்பெரிய பிரபலங்கள் தான். என்ன ! நமக்கு கொஞ்சம் மறதி அல்லது அசிரத்தை. அவ்வளவுதான் :(

இப்போது வேறு சில கேள்விகளை கவனிப்போம்.

பள்ளியிலும் கல்லூரியிலும் உங்கள் மனங்கவர்ந்த ஆசிரியர் யார் ?

உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு உதவி செய்த நபர் யார் ?

நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருந்த சம்பவம் எது? அதற்கு காரணமானவர் யார் ?

வழிகாட்டியென நீங்கள் மதிக்கும் ஒரு நபர் யார் ?

மேற்கண்ட கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் தயக்கமற்ற விடைகள் இருக்கும். ஆனால் விடைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. விடைகளில் குறிப்பிடப்பெறும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் பாராட்டுக்குரிய செயலாற்றியவர்கள் தாம்.

பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் மூலமாக அறியப்படும் ஒரு பெரும் தலைவராகவோ, கலைஞனாகவோ,விளையாட்டு வீரனாகவோ, விஞ்ஞானியாகவோ உள்ள ஒருவர் தான் புகழுடன் வாழ்பவர் என்று நினைக்கத் தேவையில்லை.

தம் சுற்றத்தாராலும் நண்பர்களாலும் நல்லவிதமாகப் நினைவுகூரப்படும் எந்த ஒரு தனி நபரும் புகழுடன் வாழ்பவரே.

மனிதனின் வாழ்க்கை அப்படி போற்றுதலுக்குரியதாக இருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. பிறருக்காக வாழும் போது ஒருவன் சமுதாயத்தில் போற்றப் படுகிறான். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்று புகழ் அதிகாரத்தின் முதற் குறளிலேயே ஒருவனுடைய புகழுக்கு காரணாமாயிருப்பது பிறருக்கு செய்யும் தர்மம் என்று சொல்கிறார். அந்த புகழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ”இவன் தந்தை என் நோற்றான் கொல்” என்று இன்னொரு குறளில் மகனுடைய கடமையாக ரத்தின சுருக்கமாக கூறுகிறார்.

ஊரிலோ நாட்டிலோ எத்தனை பேர் பாராட்டினார்கள் என்பதல்ல கணக்கு. ஓரிருவரே ஆயினும் சான்றோர்களால் கூறப்பட்டதா என்பதே கவனிக்கத்தக்கது.

உலகத்தவர் போக்கில் இன்னொரு விசித்திரம்.

எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருப்பினும் ஒருவரை புகழ்தல் என்று வரும் போது பலருக்கும் பல விதமான மனத்தடைகள் உருவாகிறது. ஆனால் குறை காணுதல் அல்லது இகழ்தல் என்று வரும் பொழுது தங்கு தடையில்லாமல் சேற்றை அள்ளி வீச தயாராகி விடுவார்கள்.அதனால் தானோ என்னவோ புகழ்தற்குரிய செயல்களை செய்ய முடியுமோ இல்லையோ குறைந்த பட்சம் இகழ்ச்சிக்குரிய செயல்களில் ஈடுபடாதே என்று கபீர் அறிவுறுத்துகிறார்.

जब तूँ आया जगत में, लोग हँसे तू रोए,
ऐसी करनी न करी, पाछे हँसे सब कोए।


உலகோர் நகைக்க நீ அழுதாய், இப்புவிதனில் வருகையிலே

உலகோர் நகைக்கும் செயல்வேண்டா, புவிதனை நீ விடுகையிலே

எனது செட்டி நாட்டு வாழ்க்கையின் போது ஒரு பெரியவரை தினம் நகரப் பேருந்து நிற்கும் இடத்தில் நிழற்குடையின் கீழ் சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. கொத்தனார் தொழில் செய்து இயலாமையினால் ஓய்வு அடைந்திருந்தவர் அவர். அப்பகுதியின் சுமார் அறுபது எழுபது வருட சரித்திரம் அவருக்கு அத்துபடி. நகரப் பேருந்து வரும் வரை அப்பகுதியின் பல ருசிகரமான தகவல்களை சொல்லிக் கொண்டிருப்பார்.

இடையிடையே சுற்று வட்டாரத்தில் உள்ள பல பெரிய மனிதர்களை பற்றி பெருமையாகவும் சிலரை பற்றித் தாழ்வாகவும் கருத்து சொல்வதுண்டு. ஒரு முறை ஒரு செல்வந்தரைப் பற்றி சொல்லும் போது “அவுரு வீட்டு எச்சி(ல்) எலைய நாய் கூட மோந்து பாக்காது” என்றார். பிறர் சிரிக்க வாழவேண்டாம் என்று கபீர் சொல்வதைக் குறிப்பிடும் போது அந்த வாசகம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இப்படி ஊரிலுள்ளோர்களுக்கெல்லாம் வேண்டாதவராய் போய் விடுவோர் எவ்வளவு துரதிர்ஷ்டசாலிகள்.

அப்பேர்பட்டவர்களை குறிப்பிடும் வகையில் தானோ என்னவோ ‘தான் பிறரால் சாவ என வாழான்’ என்று சிறுபஞ்ச மூலம் சொல்கிறது.

தான் பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்து
தான் பிறரால் கருதப்பாடு உணர்ந்து- தான் பிறரால்
சாவ என வாழான், சான்றோரால் பல்லாண்டும்
வாழ்க என வாழ்தல் நன்று.

தான் பிறந்த குடியின் பெருமை உணர்ந்து, நல்லொழுக்கம் மாறாமல்,மற்றவர்களால் மதிக்கப்படும் செயல்களை செய்து,இவன் இறந்து போகட்டுமே என்று இழிவாகப் பழிக்கப்படாது, சான்றோர்களால் இவன் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தப் படுகின்ற வாழ்க்கையே நல்லது.

கவனித்து நோக்க வேண்டிய சொற்றொடர் ‘சான்றோரால் பல்லாண்டும் வாழ்க’ என வாழ்த்தப்படுவதே. எல்லோரிடமும் சான்றிதழ் எதிர்பார்க்க முடியாது. அதற்காக ஒருவர் கவலையும் படக்கூடாது.

நம்மால் பிறருக்கு உபகாரம் உண்டோ இல்லையோ அபகாரம் செய்யாமலிருந்தால் அதுவே பெரிய உபகாரம். அப்போது பிறர் நம்மை கேலி பேச வாய்ப்புகள் இருக்காது.

அப்படி தவிர்க்க வேண்டிய செயல்கள் எவையெவை என்பதை பட்டினத்தாரின் சாடலில் புரிந்து கொள்ளலாம்.

ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதி ஆயிரம்
செய்வர், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்கு உபகாரம்
செய்யார், தமை அண்டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்து என்ன போய் என்ன
காண் கச்சி ஏகம்பனே

இருந்தென்ன போயென்ன என்று பட்டினத்தார் சொல்வதை ’இல்லாமலே போய் விடு’ என்பதாக வள்ளுவர் ‘...தோன்றலின் தோன்றாமை நன்று ’ என்று கூறிவிட்டாரோ? இல்லை. பட்டினத்தார் சொல்லியது நிராசையின் வெளிப்பாடு. வள்ளுவர் சொல்ல முற்பட்டது ஒரு அறிவுரை.

ஆங்கிலத்தில் Famous மற்றும் Infamous இரண்டு வார்த்தைகள் உண்டு. இரண்டுமே மக்களால் ஒருவர் நன்கு அறியபட்ட நிலையையே குறிக்கும். ஆனால் அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் இரு துருவங்களுக்கு இடையே உள்ளது போல். முதலாவது நல்ல காரணங்களுக்கானது.இரண்டாவது,தவறான காரணங்களுக்காக அறியப்பட்டிருப்பது.

இராமன்-இராவணன் முதல் விஜயகுமார்-வீரப்பன் வரை உதாரணங்கள் எண்ணில் அடங்காது.

எந்த தாய் தந்தையராவது தமது பிள்ளை தவறான காரணங்கள் ஆனாலும் பரவாயில்லை அவன் எதிர்மறை புகழ்(infamous) அடைய வேண்டும் என்று விரும்புவரா? சுற்றத்தாரிடையே என் மகன் களவு செய்து சிறை சென்றிருக்கிறான் என்று பெருமை கொள்ள முடியுமா ? முடியாது, ஏனெனில் ‘பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை’. கபீர் சுட்டிக்காட்டுவது போல் அது பிறரது நகைப்புக்கு இடம் தருவதாகிவிடும். அதைவிட அவன் எவ்வித அடையாளமும் இல்லாதவனாய் வாழ்ந்து மறைவதே மேல் என்பதையே விழைவர்.

எனவே தோன்றல் என்பது சமுதாயத்தில் பலரால் கவனிக்கப்படுவராக உருவெடுப்பது. பிறருடைய கவனத்துக்கு வராமல் வாழ்ந்து மறைவதே ‘தோன்றாமை’.

இப்படியாக அந்தக் குறளுக்கு கபீர் மற்றும் பட்டினத்தார் போன்ற ஞானிகளின் கருத்தைப் பொருத்திப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் விளக்கம் :-

புகழொடு தோன்றுக= நல்ல காரணங்களுக்காக புகழ் அடைவது , அஃதிலார்= அப்படி இயலாதவர்கள், தோன்றலின்=தவறான காரியங்களுக்காக அறியப்படுவதைக் காட்டிலும், தோன்றாமை= ஏதும் செய்யாமலும் அறியப் படாமலும் இருப்பதே, நன்று =நல்லது.

கபீரைப் பற்றி சொல்ல வந்து அது திருக்குறள் ஆராய்ச்சி ஆகி போனது. ஏகம் சத்,விப்ரா பஹுதா வதந்தி என்று சொல்வதுண்டு. உண்மை என்பது ஒன்றே. பண்டிதர்கள் பலவிதமாய் உரைப்பர் என்று பொருள்படும். நமது முயற்சியும் அந்த உண்மையைச் சுற்றியே இருக்கட்டும்.

கருத்துள்ள இந்த திரைப்பாடலையும் கேளுங்கள் : பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர்...

இதையும் படியுங்கள்

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

*************************************************************

Thursday, October 23, 2008

பணக்கார ஏழையும் ஏழைப் பணக்காரனும்

பணக்கார இளைஞன் ஒருவன் ஏசுநாதரை அணுகிக் கேட்டான்

“ஐயனே! நித்திய வாழ்விற்கு தேவையான நற்செயல்களாக நான் செய்ய வேண்டியன என்ன?”

“எது நல்லது என்று எதற்காக கேட்கிறாய்? நித்திய வாழ்வை(eternallife) விரும்புவர் எவரும் அவனுடைய கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்.”

“அவை யாவை ?”

“களவு கொலை,பொய்,பிறன் மனை நேயம் இவைகளை கைவிடுதல்,தாய் தந்தையரை நல்ல முறையில் பேணுதல் மற்றும் அண்டை அயலாரை உள்ளன்புடன் நேசித்தல்...”

“இவை யாவற்றையும் கடைபிடித்து வருகிறேன். இன்னும் என்ன செய்ய வேண்டும்?”

அப்படியானால் உன்னிடமுள்ள சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு என் பின்னாலே வா. உனக்காக பெரும் நிதியம் பரலோகத்தில் காத்திருக்கிறது

இதைக் கேட்ட இளைஞன் முகம் வாட்டமடைந்தது. எதுவும் பேசாது விலகிச் சென்றான்.

அவன் சென்றதும் ஏசுநாதர் சீடர்களிடம் கூறினார் “உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். செல்வந்தர்கள் பரலோகம் சேர்வது மிகக் கடினம்.மீண்டும் சொல்வேன், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழையலாம் பணக்காரன் பரலோகத்தில் நுழைவது முடியாது.” (மத்தேயு 19:19)

எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் யார்? மன மகிழ்ச்சியைத் தொலைத்தவர்கள்.

எதுவும் இல்லாமலே எல்லாம் பெற்றவர்கள்? மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள்.

மகிழ்ச்சியுடன் வாழமுடிந்தவனுக்கு இகலோகமே பரலோகம்.

ஏனெனில் உண்மையான மகிழ்ச்சிக்கான ரகசியம் தெரிந்தபின் அவனுக்கு இரண்டு உலகிலும் ஆனந்தம் உறுதிசெய்யப்படுகிறது.

பெரும்பாலும் மகிழ்ச்சி தொலைந்ததற்கானக் காரணம் மனிதனுடன் பிறந்த தன்னல எண்ணமே. அது எதிர்காலத்தைப் பற்றி மனதில் ஒரு பீதியை உண்டாக்கி ‘வருங்காலத்திற்கென’ என்று பல முன்னேற்பாடுகளை தீட்டுகிறது. அந்த திட்டங்கள் அளவில்லாமல் போய் ஒரு பெரிய (வாழ்க்கைச்)சுழலில் சிக்கிக் கொண்டு விடுகிறது. அப்போது மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.

இதை கபீர் ஒரு ஈரடியில் அழகாக சித்தரிக்கிறார்.

आसा जीवै जग मरै, लोग मरै मरि जाइ ।
सोइ सूबे धन संचते, सो ऊबरे जे खाइ ॥


நிலைத்த ஆசை நிலையா வாழ்க்கை, மருளில் மறைவரே உலகோர்
மலைத்தகு சீரை மறைத்தே சென்றார், கொடுத்தவர் காண்பார் வீடு

(மருள்= அஞ்ஞானம் ; மலைத்தகு சீர்= மலையளவு செல்வம் அல்லது மலைக்க வைக்குமளவு செல்வம்,வீடு=முக்தி)

நம்முடைய முப்பாட்டனார்கள் உணவு, உடை உறைவிடம் தேடி அலைந்தனர். இன்று நாமும் அதையே செய்கிறோம். நம் சந்ததிகளும் இதையே தான் செய்யப் போகிறார்கள். தேடிய விதம், வேகம் மற்றும் அளவுகளில் காலத்திற்கேற்ப மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் தேடுதல் ஒன்றே.

அடிப்படை தேவை பூர்த்தியானதை புரிந்து கொள்ளாது பின்னர் வேறு பல வசதிகளையும் மனம் பற்றிக் கொள்கிறது. இறைவனை விட்டு அந்த ஆசைகளை துரத்த ஆரம்பிக்கிறது. இதைத் தான் “ஆஸா ஜீவை” அல்லது நிலைத்த ஆசை என்கிறார் கபீர்.

வாழ்நாள் எல்லாம் தான் சம்பாதித்ததை சந்ததியினருக்கும் தேவைப் படும் என்று எங்கோ புதைத்து வைக்கும் பழக்கமும் உண்டு. இன்றைக்கும் வரிகட்டாத பணத்தை எங்கெங்கோ மறைத்து வைப்பதாகக் கேள்வி. அதை சொல்வதற்கும் முன்பே மறைந்து போகிறார்களே அவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டனர் என்று கபீர் வருத்தப் படுகிறார்.

தம்முடைய காலத்திலேயே ஏசுநாதர் சொன்னபடி தான தருமங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்திருந்தால் அவர்களுக்கு பரலோகம் சுலபமாக கிடைத்திருக்குமே.

கொடுத்தவர் காண்பார் வீடு என்பதை வள்ளுவரும் கொடுத்தால் வீடு பேறு காணலாம் என்று வலியுறுத்துகிறார்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் 4:38

ஒருநாளையேனும் வீணாகக் கழியாது அறம் செய்து வந்தால்,அது பிறப்பு இறப்பென்னும் சுழற்சியின் வழி அடைக்கும் கல்லாக வீடுபேறு நல்கும்

முதலில், கொடுப்பதால் குறைவு ஏற்படும் என்ற பயத்தை விலக்க வேண்டும். இந்த அறியாமையைப் போக்குவது எப்படி?

இங்கே கபீர் தைரியம் அளிக்கும் வகையில் ஒரு உதாரணம் சொல்கிறார்.

दान दिये धन ना घटे, नदी न घटे नीर ।
अपनी आंखों देख लो, यों क्या कहे कबीर ॥


கொடுத்துக் குறையாது சீரும், எடுத்தால் குறையாது நதி நீரும்
எடுத்துச் சொல்வான் கபீரும், ஏனென்றே பார்த்துணர்வீர் நீவிரும்

மாற்று:

குறையாதே கொடையால் சீரும், குறையாது நதியின் நீரும்
அறிவாய் பார்த்தே நீயும், ஏனிதைச் சொன்னான் கபீரும்

கங்கை கரையில் வசிப்பவர்க்கு இது மிகப் பொருத்தமான உதாரணம் தான். ஊரெல்லாம் கூடி குடம் குடமாக நீரை அள்ளிச் சென்றாலும் கங்கை நீர் குறைந்து விடாது தான்.

இறைவன் படைப்பிலே பிற உயிர்கள் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்க்கையைத் தொடரும் போது மனித இனம் மட்டும் ஏனிப்படி தடம் மாறிச் செல்கிறது ?

ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தமது சமூகத்தின் நிலை இறங்குமுகம் கண்டு வருவது பற்றி கேட்டபோது அவர் சொன்னது:

“அதோ அங்கே போறானே ஒருத்தன், அவன் எப்படி போறான்?”

“சைக்கிள்-ல போறான் ஸ்வாமி”

“ஏறி உக்காந்தா சைக்கிள் தானா போயிடுமா?”

“இல்லை ஸ்வாமி. உட்காந்திருப்பவர் அதைத் தொடர்ந்து மிதிக்கணும்”

“மிதிக்கிறது நின்னு போனா?”

“கொஞ்சம் தூரம் போயி விழுந்துடுவான்”

“லோகத்திலே நம்ம க்ஷேமமும் அப்படிதான். தொடர்ந்து தான தருமங்களை செஞ்சிண்டிருந்தால் மனுஷனும் க்ஷேமமாய் இருப்பான். அது கொறஞ்சு போனா அவன் ஸ்திதியும் க்ஷீணமாயிடும் இல்லையா ”

கேள்வி கேட்டவர்களுக்கு அவர்கள் மனம் நோகாதபடி விடையளித்தார் அந்த மகான்.

பெரியவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இந்த கருத்தை படிக்காசு புலவரும் பாடியிருக்கிறார்.

சலியாமல் தண்டலையில் தாயகனார்
அருள்கொண்டு தருமம் செய்யப்
பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்
ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்
விளைந்திடும் நன்மாரி ஆகும்!
கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்
இல்லை ஒருகாலும் தானே.

(கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள்= உழவுத் தொழிலால் கிடைத்த செல்வத்தில்; மலிவாகி செல்வமுண்டாம்= மிகுதியான செல்வம் உண்டாகும், கலியாண பஞ்சமில்லை = சிறப்பு மிகும் சுப காரியங்களுக்கு குறைவில்லை, களப்பஞ்சம் இல்லை = நெல்லடிக்கும் களங்களுக்கும் குறைவில்லை)


ஈந்தவை போக மீந்தால் என்பதற்கு தமிழறிஞர்கள் இப்படி பொருள் சொல்கின்றனர். முன்னோர்களுக்கும், தெய்வத்திற்கும்,விருந்தினருக்கும் அரசனுக்கும், சுற்றத்தாருக்கும் தனக்கும் போக மிச்சமாகும் செல்வம்.

தன்னலமற்ற தரும காரியங்களில் ஈடுபடும் போது குறைவில்லாமல், கங்கை பெருகி வருதல் போல, அதற்கான தேவையை பூர்த்தி செய்வான் இறைவன்.

‘இறைக்கிற கேணி ஊறும்’ என்ற பழமொழி நம்மூரிலும் உண்டு.

நமது நாட்டில் ஆழமான சில கருத்துகளை அன்றாடப் பேச்சு வழக்கில் காணலாம்.

“எங்க பெரியவங்க செஞ்ச பூசை தர்மம்; எல்லோரும் நல்லா இருக்கிறோம்”

”எந்த ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ இப்ப அனுபவிக்கிறேன்”

என் மூதாதையர் செய்த அதர்மத்தால் கஷ்டப்படுகிறேன் என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயத்தில் யாரேனும் அதர்ம காரியத்தில் ஈடுபட்டால் பெரியவர்கள் “வேண்டாம் அந்த பாவம். ஏழு தலைமுறைக்கு தட்டும்” என்பது போல பலப் பல.

பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு நமது நாகரீகத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

இப்படியாக சந்ததிக்குப் போய் சேர்வது நாம் செய்யும் பாவ புண்ணியங்களே அன்றி நாம் சேர்த்து வைக்கும் செல்வம் அல்ல. அப்படி வரும் செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் சத்கர்மங்கள் இல்லையென்றால் வந்த செல்வமும் விரைவிலேயே போய்விடும்.

கபீர் சொல்வது போல இதெல்லாம் கண்டு உணரவேண்டிய விஷயங்கள். கொடுத்துக் காண்போம் வீடு.

Thursday, October 09, 2008

கற்றவர் படும் பாடு

நமக்கு இருக்கும் கல்வியறிவே நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாய் விடுகிறது என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது. அது இறைவனிடமிருந்து நம்மை தூர விலக்கி வைத்து விடுகிறது. அதனால் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன என்பதை உணர முடியாத அளவுக்கு ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறது.

அதன் முக்கிய காரணம் அன்பு அறிவை விட மேலானது என்பதை மறந்து போவதே. அன்பின் அடிப்படையில் அல்லவோ இறைவன் உலகை இயக்குகிறான்.

ஆற்றோரம் நடந்து செல்லும் இரண்டு மெத்தப் படித்த அறிஞர்களிடையே ஒரு உரையாடல்

முதல் நபர் : ”ஆற்றில் மீன்கள் எவ்வளவு ஆனந்தமாக நீந்துகின்றன

இரண்டாம் நபர் : “நீ என்ன மீனா ஆனந்தம் என்பதை சொல்ல ?”

முதல் நப்ர் : “நீ என்ன நானா? எனக்குத் தெரியும் தெரியாது என்று சொல்ல

( நன்றி : இராமகிருஷ்ண விஜயம் ஜூன் 2008)

சாதுர்யமான பேச்சுகளின் மேலுள்ள நாட்டத்தால் நம் சந்தோஷத்தை எப்படி இழந்து விடுகிறோம் என்பதை சுட்டிக்காட்டும் துணுக்கு அது.

கூடவே நாம் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் அன்னியமாகி எப்படி அன்பை இழந்து விடுகிறோம் என்பதையும் காட்டுகிறது.

இப்படிப்பட்ட புத்தியுள்ளவர்கள் தம்மைச் சுற்றி ஒரு சிறு உலகை படைத்துக் கொண்டு அதிலேயே ஆனந்தம் காண்பார்கள். அவர்களுடைய உள்ளம் ஒரு மூடிய கதவு. அங்கே புதிய கருத்துகளுக்கோ பரிமாற்றங்களுக்கோ வகையில்லை.

அவர்கள் பெரும் சாதுக்களையோ ஞானிகளையோ அணுகும் போதும் அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதில்லை. அவர்களின் நிலை பற்றி கபீர் சொல்வது

साधु शब्द समुद्र है, जामे रतन भराय ।
मन्द भाग मुटठी भरै, कंकर हाथ लगाय ॥


சாது என்பவன் சமுத்திரம், கிடைக்கும் அங்கே இரத்தினம்
மூடரோ விரும்பிக் கொள்வர், கை நிறைய கல்லும் மண்ணும்.

கடலுக்குச் சென்றவன் அங்கே கிடைக்கூடிய முத்து ரத்தினத்தைப் பற்றி கவலைப் படாமல் வெறும் கல்லையும் மண்ணையும் அள்ளி வருபவன் போலே, பெருமளவிலான மக்கள் ஞானிகளையோ சாதுக்களையோ வெறும் மேற்போக்காகக் கண்டு அல்லது கேட்டு அவர்களைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபாடு கொள்வர். அந்த விமரிசனங்களால் ஆகப் போவது ஒன்றும் இல்லையென்றாலும் பலர் அதில் ஈடுபடுவதன் மூலம் அற்ப மகிழ்ச்சி கொள்கின்றனர். இதைப் பற்றி ஞானிகளும் கவலைப் படுவதில்லை.

இப்போது உண்மையிலே இழந்தவன் யார்? இழந்தது என்ன ?

திறந்த உள்ளம் இல்லாமல் குறைகாணுவதில் ஈடுபட்ட மனம், தான் என்னும் எண்ணத்திலே திளைத்திருக்கிறது. அதனால் அது இழந்தது ஆன்மீக முன்னேற்றம்.

அப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களை தவிர்க்கவே ஞானசம்பந்தர் உபதேசிக்கிறார்.

நீ நாளும் நன்னெஞ்சே நினைக் கண்டாய், யாரறிவார்
வா நாளும் சா நாளும் - சாய்காட்டு எம் பெருமாற்க்கே
பூ நாளும் தலைசுமப்ப புகழ் நாமம் செவி கேட்க
நா நாளும் நவிந்தேற்ற பெறலாமே நல்வினையே.

(சாய்காட்டுப் பெருமான்= திருச்சாய்க்காடு என்னும் தலத்தில் இருக்கும் சிவன்)

ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் !

அப்படியானால் போலிகளுக்கிடையில் அசலைக் கண்டறிவது எப்படி ?

அண்மையில் நெருங்கிய உறவினரோடு மைசூர் அருகே புதிதாக உருவாகி வரும் ஒரு ஆசிரமத்தை கண்டுவரச் சென்றோம். உறவினர் தேவி உபாசகர். வயதில் மிகப் பெரியவர், ஆழ்ந்த பக்தி உடையவர். சாதுக்கள் என்றாலே வயதைப் பொருட்படுத்தாமல் காலில் விழுந்து ஆசி கோருபவர்.

எதிர்பாராத விதமாக ஆசிரம அதிபதியின் தரிசனமும் அன்று கிடைத்தது. அவர் ஆசிரம திட்டங்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் எப்படி இறைவனே அதற்கான தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதையும் கூறினார். எல்லாம் முடிந்து வீடு திரும்புகையில் பலமான சர்ச்சை. அவர்களுக்கு பணம் எவ்வாறு வருகிறது, இந்த படாடோபம் அவசியம்தானா, கள்ளப் பணத்தை ஒளிக்கும் வழியிது இப்படி பலவாறான பேச்சு எங்களிடையே ஏற்பட்டது.

அப்போது அந்த பெரியவர் சொன்னது
”மனசுக்கு ஒட்டினா திரும்பவும் போங்க. இல்லேன்னா விட்டுங்க. கடவுளோட சித்தத்தில ஒரு சில காரியங்களை ஒரு சிலரை வச்சு ஏதோ ஒரு வகையில நடத்தணும்-னு இருக்கும். அதைப் புரிஞ்சுக்க நம்மால முடியாது.

அவதூறான பேச்சினால் அவங்களை நாம மாத்த முடியாது.
ஆனால் கடவுளின்
பார்வையில் நம்மை நாமே தாழ்த்திக்கிறோம் என்பது மட்டும் நிஜம்.
காலப்போக்கிலே
நல்லது நிற்கும்,அல்லாதது அடிச்சிகிட்டு போயிடும்.
நாம பேசி என்ன பிரயோசனம்?”


நம்முடைய பகுத்தறிவிற்கு கடிவாளம் எங்கே இருக்கிறது என்பதை அவர் நன்றாகச் சுட்டிக் காட்டினார் என்றே நினைக்க வேண்டியிருந்தது.

தங்களை மகான்களாகக் காட்டிக் கொண்டவர்கள் பலரும் எந்த மகிமையும் இல்லாமலே மறைந்து விட்டனர்.

அதே சமயம் எந்த மகானைத்தான் சமூகம் எள்ளி நகையாடாமல் விட்டிருக்கிறது?

உண்மையான மகாத்மாவுக்கு சமூகத்தின் அங்கீகரிப்பால் ஆவது ஒன்றும் இல்லை.

ஆகையால் இவற்றை பற்றி நாம் செய்யும் எந்த ஒரு தீர்மானமும் நடுநிலைமை இல்லாமல் போய்விடும். நடு நிலைமை இல்லாத சொற்களால் செயல்களால் கெடுதல் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.

கண்டிப்பாக சாதகனின் நோக்கம் அதுவல்ல. அப்படியானால், பெரியவர் சொன்னது போல வாய்மூடி மௌனியாக யாவும் இறைவன் செயல் என்றிருப்பதே உத்தமம்.

அப்பப்பா ! இந்த ஆராய்ச்சி செய்யும் மனதினால் எவ்வளவு சிக்கல்கள்.

படிப்பறிவற்ற எளிய மனம் படைத்தவனுக்கு நம்பிக்கையின் பலத்திலேயே இறைவன் காட்சி கிட்டும். ஆனால் அறிவினால் வரும் ஆராயும் மனப்பான்மை, நம்பிக்கையின் மூலம் எழும் விசுவாசத்தை தகர்த்து முதலுக்கே மோசம் உண்டாக்குகிறது. மகான்களின் முன்னிலையில் இத்தகைய குதர்க்க புத்தியோடு போனால் நாம் மூடர்கள் தாமே. எனவே மூடர்கள் என்று கபீர் சொல்வதில் தவறேதும் இல்லை.

வாசலில் செருப்பை கழற்றிவிட்டு கோவிலுக்குள் செல்வது போல் ஆன்மீகத்தை அணுகும்போது அறிவு தரும் ஆணவத்தை கழற்றிவிட்டு உள்ளே புக வேண்டும். செருப்பு காலுக்கு தரும் பாதுகாப்பு வெளியே வீதிக்கு மட்டுமே. அதுபோல் அறிவு தரும் பாதுகாப்பு வெளி உலக விவகாரங்களுக்கு மட்டுமே. இறை உலகத்திற்கு உள்ளே தேவைப்படுவது நம்பிக்கை ஒன்றே.

எவ்வளவு நாள் வாழ்ந்திருப்போம் எப்போது மரணம் வருமோ தெரியாது. சிவனே என்று அவன் புகழைக் கேட்டு, பாடி அர்ச்சித்தாலே நல்வினை பெருகி அவனடி சேரலாமே பின்னெதற்கு வீணாக உன்னைப் பற்றிய எண்ணங்களிலே உழல்கிறாய் என்று சம்பந்த பெருமான் மனதுக்கு (நமக்கு) செய்யும் உபதேசமும் அந்த நம்பிக்கையை பலப்படுத்தவே.

இங்கு அன்பே பிரதானம். அதனால் அதில் வெற்றி நிச்சயம்.

யாவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்

Wednesday, September 24, 2008

பழையதை தின்று சும்மா கிட

திருமணம் ஆகி குழந்தை பிறந்திருப்பினும் இல்வாழ்க்கையில் விருப்பமின்றி துறவி போல வாழ்க்கையை நடத்தியவர் ஆனந்தம்மாள். ரமணபகவானின் திருவடிகளிலே தவம் செய்து காலம் கழித்தார். ஒருநாள் கனகம்மாள்- இன்னொரு பக்தை-அவரைக் கண்டுவரச் சென்றார். கண் மூடி தியானத்திலிருந்த ஆனந்தம்மாள் சத்தம் கேட்டு திரும்பினார். கனகம்மாளைக் கண்டதும் தன்னருகில் அமருமாறு அழைத்தார். அருகிலமர்ந்த கனகம்மாள் அவரிடம் ஒரு சிறிய தின்பண்டப் பொட்டலத்தை நீட்டினார்.

“என்ன அது! என்ன கொண்டு வந்தே “

“ஒன்றுமில்லை. சாதுக்களுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. கொஞ்சம் பக்கோடா செய்து கொண்டு வந்திருக்கிறேன்”

அதை பிரித்துப் பார்த்துவிட்டு “சரி சரி ரொம்ப நல்லாயிருக்கு! சாதுக்களுக்கு இதெல்லாம் வேண்டுமா! அதோ அந்த மூலையைப் பார். தனம் ஊரிலில்லை. இரண்டு நாளைக்கு வேண்டிய சாதத்தை அந்த பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கும்படி சொன்னேன். பசிக்கும் போது எடுத்து சாப்பிடுவேன். அதற்கு மேல் என்ன வேண்டும். அப்படியே சும்மா இருக்க வேண்டியதுதானே ! எண்ணம் வந்ததாம்! அதற்காக செய்து கொண்டு வந்தாளாம்! கண்ணை மூடிண்டு சும்மா கிடப்பியா ! அதை இதை செய்துண்டு அலைவியா. பகவான் என்ன சொல்லித்து, எதையும் நினைக்காமல் சும்மா கிடக்கும்படித்தானே சொல்லித்து.அதை விட்டு விட்டு நீ ஏன் நேரத்தை வீணாக்குகிறாய். அவன் சன்னிதியில் கண்ணை மூடிண்டு கிடக்க வேண்டியது தானே” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

தாயுமானவரின் கீழ்கண்ட வரிகளை படித்தவுடன் மேலே சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே

(இச்சித்து =விரும்பி)


கடவுளின் பற்று அதிகமாகுமளவும் உலகக் கடமைகளை அவன் குறைத்து விடுவானாம், இது கீதை சொல்லும் வழி.

அப்படி குறைத்து வருவதை அறியாமல் மீண்டும் மீண்டும் புதுப் புது ப்ரவ்ருத்திகளை உண்டாக்கிக் கொள்வது வலையில் சிக்கிக் கொண்ட பறவையைப் போலவே ஆகும். “பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும். புது விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளுமளவும் ‘நேரம் வீணாகிறது’அதாவது பிறவி வீணாகிறது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் எவ்வளவு பொருள் பொதிந்த கருத்துகள்.

போகட்டும், நாம் செய்ய முனையும் காரியங்கள் எதுதான் நம் விருப்பப்படி நடக்கிறது ! தாயுமானசுவாமிகள் ஆராய்கிறார் பாருங்கள்.

ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார். சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

பிரம்மனிலிருந்து தொடங்கி, சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க விரும்பும் சாதாரண பக்தன் வரை யாருடைய செயலின் முடிவும் அவர்கள் கையில் இல்லை என்பதை ஒரு நகைச்சுவை ரஸத்தில் விவரித்திருக்கிறார். கண்கூடாக இதை காலந்தோறும் கண்டும் நமக்கு ஏனோ புரியாமல் போகிறது. அதை ஔவையாரும் சொல்லி வியக்கிறார்.

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

எல்லாமே ஈசன் செயல் என்றுதான் கபீரும் சொல்கிறார். தான் வெறும் ஒரு சூத்திர பொம்மை. சூத்திரத்தை கையில் வைத்து ஆட்டுவிப்பவன் எங்கோ இருக்கிறான்.

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ

ஓரொரு சமயம் நாம் நினைப்பது நடந்து விடுகிறது. உதாரணம் கபீரின் வலைப்பூ. அப்போது ”செய்விப்பவன் அவன் யாரோ’என்ற வரியை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. ஔவை சொல்வது போல் ‘அது வரினும் வந்தெய்தும்’

எப்படியோ இந்தவலைப்பக்கம் ஐம்பத்தியொரு பதிவுகளுடன் இரண்டாம் வருடத்தை நிறைவு செய்கிறது. பல முறை பல தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் அவன் இதை நடத்திக்கொண்டு வருகிறான். ”பழையதை தின்று சும்மாக் கிடக்காமல்” பதிவுகளை எழுத மனம் பரபரக்கும் போது பல மனக்குழப்பங்கள், குற்ற உணர்வு.

எல்லாவற்றையும் மீறி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தனி மடல்களிலும் பின்னூட்டத்திலும் வாசகர்கள் காட்டிய பரிவும் அன்புமே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

குருவருள் அவர்களுக்கு என்றும் பெருகட்டும்.
__________________________________________________

இதுவரை வெளியாகியிருக்கும் ஈரடிகளை தேடவும் புதிதாக காணப் பெறுவோர்க்கு அவர்கள் அறிந்திருக்கும் தோஹாக்களின் மொழிபெயர்ப்பைத் தேடவும் வசதியாக கூகிள் தேடு பொறி ஒன்று பக்கப்பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே தமிழ் அல்லது ஹிந்தி இரண்டிலும் உள்ளீடு செய்யலாம். தேடலுக்கான விடை புதிய பக்கத்தில் தரப்படும். இதைத் தவிர அந்த ஈரடிகள் அதன் ஹிந்தி மூலத்துடன் ஒரு சிறு மின்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அதற்கான இணப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


மின்புத்தகத்தை இங்கேயே படிப்பதற்கு வசதியாக அதை முழுத் திரைக்கு விரித்துக் கொள்ளலாம். எழுத்துகளை பெரிதாக்கிக்கொள்ளவும் இதில் + - மெனுக்கள் உள்ளன. இதை புத்தகம் போல பக்கங்களை புரட்டவும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது மேலிருந்து கீழே நகர்த்திச் செல்லத் தேவையில்லை.

மென்புத்தக்கதைப் பற்றியும் அதை மேம்படுத்தவும் தங்கள் கருத்துகளை பின்னூட்டமாகவோ தனி மடலிலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தரவிறக்கம் செய்ய விழைவோர் இந்த esnip சுட்டியை பயன்படுத்தவும்.

Wednesday, September 17, 2008

நாவாய் இன்னும் நடுக்கடலில்...

ஆணவமலம் என்பது எல்லா நிலைகளிலும் வெவ்வேறு பரிணாமங்களில் எப்போதும் கூடவே இருப்பது.மனம் இருக்குமளவும் அதுவும் இருக்கும். வேறொரு வகையில் சொல்வதானால் அது தான் மனதின் செயற்பாட்டுக்கே தளமாகிறது.

மகரிஷி நாரதரையும் அது விட்டு வைக்கவில்லையாம். சர்வ சதா காலமும் நாராயண மந்திரம் செபிக்கும் அவருக்கும் எங்கோ மனதின் ஒரு மூலையில் தன்னைவிட ஒரு பெரிய பக்தன் இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது. அந்த நாராயணனிடமே தன் சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்கிறார்.பூலோகத்தில் ஒரு பால்காரனை சுட்டிக்காட்டி அனுப்புகிறார் பெருமாள்.

மிகவும் ஆர்வத்துடன் அவனது நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகிறார் நாரதர். இருள் விலகும் முன்பே நாராயண நாராயண என்று சொல்லிக் கொண்டே எழுந்த அவன் தன் தினசரி வேலைகளான பசுக்களைக் குளிப்பாட்டுவது, தீனி வைப்பது, பால் கறப்பது, கறந்த பாலை வீடு வீடாக கொண்டு சென்று விற்று வருவது, மதியத்தில் பசுக்களுக்கு புல் அறுத்து வருவது மீண்டும் மாலை பால் கறப்பது,விற்பது இப்படி மூச்சு விட நேரமில்லாமல் வேலையில் ஆழ்ந்து விட்டான். இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை நாராயண நாராயண என்று சொல்லிக் தூங்கிப் போய் விட்டான்.

இவன் எப்படி பெரும் பக்தனாக முடியும் ?

ஏதும் புரியாமல் பெருமாளிடம் மீண்டும் வந்தார் நாரதர். சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு எண்ணெய் வழியும் கிண்ணம் கொடுத்து ”ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகத்தை ஒரு முறை சுற்றி வாரும்” என்றார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் நாரதர்.

’என்ன புரிந்ததா’ என்று வினவினார் பெருமாள்.இல்லை என்று தலையசைத்தார் நாரதர். “சரி சுற்றி வரும் பொழுது எவ்வளவு முறை செபித்தீர்கள்?” என்று கணக்கு கேட்டார்.

’நீங்கள் சொட்டு எண்ணெய் கூட சிந்தக்கூடாது என்றதனால் என் கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. உங்கள் நாம செபம் செய்யும் மனநிலை இருக்கவில்லை’ என்று உண்மையை ஒத்துக்கொண்டார் நாரத ரிஷி.

“அப்பா! இந்த சிறிய வேலையினாலேயே உன் கவனம் என்னைவிட்டு அகன்று விட்டதே, அந்த பால்காரனுக்கோ ஆயிரம் கஷ்டம், குடும்ப பாரம், உடற்நலப் பிரச்சனைகள். அதனிடையேயும் அவன் மறக்காமல் இருமுறை என்னை நினைத்துக் கொள்கிறானே. அவனும் என்னுடைய சிறந்த பக்தன் தானே” என்றாராம் நாராயணன்.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொல்லிய கதை இது.

கர்வபங்கம் என்பது இறைவன் பக்தரை தடுத்தாட்கொள்ளும் விதமாக செய்யும் ஒரு லீலை.அதனால் உண்மையான பக்தன் சிறுமைப்படுவதில்லை. பதிலாக அவன் தடை நீங்கப் பெற்று இன்னும் வேகமாக முன்னேறுகிறான்.

இறை வடிவமான குருவிடம் பூரண சரணாகதி என்பது இதற்கான ஒரு உபாயமே. பாதையை தவறவிடாது மேலே செல்ல வழி காட்டுபவர் குரு. அதைக்குறித்து கபீர் சொல்வது

लेने को गुरु नाम है ,देने को अन्न दान ।
तरने को आधीनता, बूडन को अभिमान ॥


லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்ன தான்
தர்னே கோ ஆதீனதா, பூடன் கோ அபிமான்


கொள்வ தற்கு குருநாமம், கொடுப்ப தற்கு அன்னதானம்
பணிவதால் மிதத்தல் கூடும்,கர்வத்தால் கலம் மூழ்கும்

(மிதத்தல் =ஆன்மீகப் பயணம்; கலம் மூழ்கல்=ஆன்மீகப் பயணத்தில் தோல்வி)

பேச்சு வழக்கில் ”லேனா தேனா” என்றால் எடுத்தலும் கொடுத்தலும் என்பதைக் குறிக்கும்.நம் உலக வாழ்க்கைகான அச்சு லேனா-தேனா.அதைச் சுற்றியே வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. எதையாவது எடுத்துக்கொண்டால் பதிலாக வேறு எதையாவது கொடுக்க வேண்டியிருக்கிறது.

பழைய திரைப்படப் பாடல் ஒன்று.

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான்
அதில் ஆயிரமாயிரம் பொருள் குவித்தான்
அவரவர் தகுதிக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்.

ஆசைப்படும் வாழ்க்கைக்கு ஏற்ப விலை தர வேண்டும். சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

பெரும்பாலானோர் ஆசைப்படாத ஆனால் விலை மதிக்கமுடியாத பொருள் ஒன்று உண்டு. அதுவே குருவருள். அதற்கு தர வேண்டிய விலை மிக சுலபம்.பிற உயிர்களின் பசியாற்றுதலும் அன்பு பாராட்டுதலுமே ஆகும். எளிமையாக இவைகளை போற்றி வாழ்ந்தாலே குருநாமம் சித்தியாகி பிறவி கடலை கடந்து கரை சேர்ந்து விட முடியும். மனதில் ஆயிரமாயிரம் பொருட்களுக்கான ஆசையை விலக்கி “லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்னதான்” என்பது எவ்வளவு சுலபமான வழி ! நேர்வழியே ஆனாலும் அபாயம் இல்லாமல் இல்லை. குரு கபீர் அதையும் உணர்த்துகிறார்.

அதுவே நம்மை அறியாமல் உள்ளே புகுந்து கொள்ளும் கர்வம்.பணிவான மனம் உடையவன் வெற்றிகரமாக மிதந்து கரை சேர்ந்து விடுவான். ஆனால் கர்வம் என்ற குணம் பிறவிக் கடலை கடக்க வொட்டாமல் நடுவிலேயே மூழ்கடித்துவிடும். அது எப்பேர்பட்டவரையும் ஏமாற்றி உட்புகுந்து விடும். அதை சுட்டிக்காட்டுவதே மேற்குறிப்பிட்ட ராமகிருஷ்ணரின் கதை.

இன்னுமொரு ஈரடியிலும் இதே உதாரணத்தைக் கையாளுகிறார் கபீர்.

कबीर गर्व न कीजिएं, रंक न हसिये कोय ।
अजहूं नाव समुद्र में , ना जानैं क्या होय ॥


கபீர் கர்வ் ந கீஜியே ரன்க் ந ஹஸியே கோய்
அஜ்ஹூ நாவ் ஸமுத்ர் மே, நா ஜானை க்யா ஹோய்


காவாய் கர்வம் கபீரா, எளியரைக் கண்டே எள்ளாய்
நாவாய் இன்னும் நடுக்கடலில்,நடப்பதை முன்னம் ஏதறிவாய்

(காவாய்= காத்துக்கொள்வாய்; எள்ளாய் =இகழாதே, நாவாய்= படகு)

கர்வம் என்கிற பிணியிலிருந்து எப்போதும் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். ஏனெனில் அது உள்ளே புகுந்துவிட்டால் அவரிடம் உள்ள பல நல்ல குணங்களை பறித்துக் கொள்ள வாய்ப்புண்டு. பின்னர் கீழான செயல்களில் மனம் இறங்கும். கீழான மனம் எந்த நிலைக்கு தாழ்ந்து போகும் என்பதை நாலடியார் சொல்கிறது.

கடுக்கென சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர் மாட்டு வைக்கும் அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம்,விறன்மலை நன்னாட !
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் (348)

எப்போதும் கடுஞ்சொல் பேசுவது, இரக்கமற்றிருப்பது,பிறர்க்கு துன்பம் செய்து மகிழ்வது, மீண்டும் மீண்டும் கோபப்படுவது ஆகியவை கீழ்மக்கள் குணங்களாகும். அவற்றை விடமுடியாது, விடச் சொல்பவரை இகழவும் செய்வர்.

அப்படி பிறருக்கு ஏற்படுத்தும் மனத்துன்பத்தின் பின் விளைவு எப்போது எந்த வடிவத்தில் அவரிடமே திரும்புமோ சொல்ல முடியாது. அதனால் தடைப்படப் போவது அவரது பயணம் தான்.

கடல் நடுவே பெரும் சுழல்களும் உண்டு,சூறாவளிகளின் அபாயமும் உண்டு. கரை சேரும் வரை எதுவும் நிச்சயமில்லை. தீவினைப்பயன்கள் அத்தகைய சுழலாகவோ சூறாவளியாகவோ வந்து தாக்கக்கூடும். அதைக் குறிப்பிடவே நாவாய் இன்னும் நடுக்கடலில் என்று கபீர் குறிப்பிடுகிறார்.

கண்ணாடி மாளிகையுள் இருந்து கொண்டு பிறர் மீது கல் வீசலமா?

ஒருவனுக்கு நல்ல காலம் பிறந்து நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அவனுக்கு ஏற்றம் வந்துவிடுகிறது. அதனோடு கூடவே அவன் அகங்காரமும் பெரிதாக வளர்ந்து விடுகிறது. உற்றார் பலரும் விட்டு விலகி போகின்றனர். அதைப்பற்றிக் கவலைப்பட நேரமும் அவனுக்கில்லை. போனால் போகிறது.

குறைந்தபட்சம் எதிரிகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா? காலப்போக்கில் நண்பர்கள் குறைந்தது மட்டுமின்றி எதிரிகள் பெருகி நிம்மதியை குலைத்தது.

புராணத்திலும் வரலாற்றிலும் இப்படிஅல்லலுற்ற அசுரர்கள், சக்ரவர்த்திகள்,செல்வந்தர்கள்,பண்டிதர்கள் மற்றும் கலைஞர்கள் எத்தனையெத்தனையோ !

அவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை மன உளைச்சலில் கழிக்கின்றனர்.

குறுகிய அறைக்குள் புழுக்கம் அதிகரிக்கிற்து.உட்கார முடிவதில்லை.கர்வத்தால் குறுகிப் போன மனதிலும் இதே நிலைமைதான்.மனப்புழுக்கம்.

வாழ்க்கையை தமக்குத் தாமே நரகமாக்கிக் கொள்கின்றனர் மக்கள். அறையை விட்டு வெளியே வந்தால் குளிர்ந்த காற்று வரும். செருக்கு என்ற தாழ்பாளை நீக்கி வெளி வந்து மனம் குளிர்ந்து யாவருடனும் உறவாட ஆரம்பித்தால் உறவினரும் நண்பரும் தாமே தேடி வருவர். இதையே வள்ளுவர்

தமராகி தற்றுறந்தார் சுற்றம், அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு தமக்கு உறவினாராயிருந்து தாமாகவே தன்னை விட்டுப் பிரிந்து சென்ற சுற்றத்தார், அதற்குரிய காரணம் நீங்கப் பெறின் தாமாகவே பகையின்றி மீண்டும் வந்து சேர்வர் என்று உரைக்கிறார். பிரிந்து செல்வதற்கான காரணம் ஒருவனுடைய செருக்கு. அதை அழித்து விட்டால் பிரிவதற்கான காரணம் நீங்கப் பெற்று மீண்டும் உற்றார் வந்து உறவாடுவர். கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

जग में बैरी कोई नहीं, जो मन शीतल होय ।
यह आपा तो डाल दे, दया करे सब कोय ॥


ஜக் மே பைரீ கோய் நஹி, ஜோ மன் ஷீதல் ஹோய் |
யஹ் ஆபா தோ டால் தே, தயா கரே ஸப் கோய் ||


செருநர் சகத்தில் இல்லை, சீதள மாயின் மனமே
செருக்கு செத்தப் பின்னே,செறிஞர் சேருவர் தாமே

(செருநர்=எதிரிகள்; சகம்= உலகம் சீதளம்=குளிர்ச்சி,ஆணவமில்லா நிலை; செருக்கு= ஆணவம்; செறிஞர்=உற்றார்)

ஆபா தோ டால் தே ’ என்பது “ நான் என்ற எண்ணத்தை
தூக்கி எறிந்து விட முடிந்தால் ...” தயா கரே ஸப் லோக் யாவரும் அன்பு பாராட்டுவர் என்று பொருள் படும். அது “செருக்கு செத்த பின்னே, செறிஞர் சேருவர் தாமே என்பதாக மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .
____________________
பிற்குறிப்பு:

ஆரம்பத்தில் கண்ட ”லேனே குரு நாம் ஹை” என்ற தோஹாவில் கபீர் சொல்ல விழையும் உட்பொருளை முதலில் எழுதி வைத்திருந்தேன். ஆனால் அது வெளிப்படையாக சொல்லப் படாததால் மேலே அதற்குரிய முறையான மொழி பெயர்ப்பை தந்துள்ளேன். கீழே உட்பொருளை பிரதிபலிக்கும் ஈரடியை தருகிறேன்.

துணைக்கொள் ளகுரு நாமம், ஈவதற்கு அன்ன தானம்
கரை சேரவே தயை வேண்டும், கலம் கவிழ கர்வம் தானே

Saturday, September 06, 2008

பெருநெறி பற்றும் பேராளர்

வால்-பையன் ஒருவன். துறுதுறுவென்று அலைபாயும் கண்கள். ஒரு நிமிடம் கூட கை கால்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது. எதை வேண்டாம் என்று தடுப்பரோ அதை செய்து பார்த்துவிடும் துடிப்பு. அவன் கை வைத்தால் அந்த பொருள் அதோகதிதான். ஆனால் அவன் செல்லப்பிள்ளை.

ஓரொரு சமயம் ”அம்மா, இனிமே செய்யமாட்டேன், நல்ல பையனா இருக்கேம்மா ” என்று அடிபட்டு அழும்போது கோபமெல்லாம் கரைந்து அவனை உச்சிமுகந்து குளிர்ந்து போகிறாள் தாய்.

அந்த இன்பம் சிறிது நேரத்திற்குத்தான். அது அவளுக்கும் தெரியும்.

பின்னர் மீண்டும் தொடர்கிறது அர்ச்சனை, “சனியன், குரங்கு! கைய வச்சதெல்லாம் நாசம். ஊர்ல எல்லோருக்கும்தான் பொறக்கலையா? அது என்ன! எனக்குன்னு இப்படி ஒரு பிசாசு வந்து வாய்ச்சிருக்கு'' . ஆற்றாமையால் புலம்புகிறாள் அவன் தாய்.

பிறத்தியாருக்கு சிரிப்பு, வேடிக்கை. அந்த தாயின் நிலையை புரிந்து கொண்டவர் அவளுடைய மாமியார் மட்டும் தான். “ஹும் அப்பனைப் போல பிள்ளை. போகப் போக சரியாயிடும் பாரேன். இன்னிக்கு எவ்ளோ சாதுவா இருக்கான். அவன் குழந்தையா இருந்த போது படுத்தின பாடு இருக்கே...........” கதை தொடர்கிறது.

நம்முடைய மனதுடன் நமது போராட்டம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அது செல்லப்பிள்ளை. இழுத்த இழுப்பெக்கெல்லாம் ”முடியாது” என்று சொல்ல முடியாமல் அதன் வழியே ஓடுகிறது சித்தம்.

நல்லதற்கு அல்ல என்று புரிந்தாலும் ஒரு இயலாமை. வாழ்க்கையில் துன்பம் வருத்தும் போது ஞானிகளின் பேச்சை கேட்பது போலவும் புரிந்து கொண்டது போலவும் ஒரு பாவனை. ஆனால் வேதாளம் மீண்டும் மரம் ஏறிக்கொள்கிறது.

பில்வமங்கள் என்பவன் இப்படித்தான், தன் மனதின் போராட்டத்தை வழிக்குக் கொண்டுவர பல வருடங்கள் காட்டிலே சென்று தவம் செய்தான். சற்றே சித்தம் தெளிந்தது. இப்போது ஊருக்குள் செல்வதால் மக்களுடன் பழகுவதால் ஏதும் கேடு வராது என்றெண்ணி பிட்சைக்காக ஊருக்குள் போய் வர ஆரம்பித்தான். ஒருநாள் வீதியிலே மிக அழகான பெண்மணி நடந்து செல்வதைக் கண்டதும் வேதாளம் மரமேறியது. அவளையே பின் தொடர்ந்தான். அவள் தன் வீட்டுக்குள் சென்றதும் இவன் வாயிலருகே நின்றிருந்தான்.

வெளியே ஒரு சாது பிட்சைக்காக நிற்கிறார் என்றெண்ணி அப்பெண்மனியின் கணவர் அவரை மரியாதையுடன் வரவேற்கிறார். வெளியே நின்றபடியே ”வீட்டின் எஜமானியை நான் காணலாமா?” என்று வினவுகிறான் பில்வமங்கள். அவளும் வந்து பாதநமஸ்காரம் செய்கிறாள். “ அம்மணி தங்கள் தலையில் உள்ள கொண்டை ஊசியை தரமுடியுமா” என்று யாரும் கேட்காத யாசகம் கேட்கிறான். ஏதும் புரியாதவளாய் கொண்டையின் ஊசியை கழற்றிக் கொடுத்தாள் அப்பெண்மணி. அடுத்து அவருடைய செய்கை யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் நீ காணக் கூடாது” என்று கூறியபடியே தன் இருகண்களையும் அந்த ஊசியினால் அங்கேயே குருடாக்கிக் கொண்டான்.

மனம் சில கணங்களே தடம் புரண்டாலும், அவ்வளவு நாட்கள் செய்த தவத்தின் பயனாய், (பின்னாலே தரப் போகும் கிருஷ்ண தரிசனத்திற்காக) தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் மனவலிமையை அந்நேரத்தில் இறைவனே கொடுத்தான் போலும்.

பிற்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்மிர்தம் பாடிய லீலா ஷுகர் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான மனப் போராட்டம் அத்தகையது.

இந்த நிலையைக் கண்டு கபீரும் பரிதாபம் கொள்கிறார்.

मन के मारे बन गये, मन तजि बस्ति मांहि ।
कहैं कबीर क्या कीजिए, यह मन ठहरै नांहि ॥


மனமொ ழியவனம் புகுவாய், மாய்வ தில்லை மனமே
மனம்நிற்க வழியு மேது, கபீரது நிலையின்றி திரியுமே

புலன்களால் அலைக்கழிக்கப்படும் வரை மனம் ஒரு நிலைகொள்ளாது. அந்த அவத்தையை திருநாவுக்கரசர் இப்படிச் சொல்கிறார்.

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறையுடைத்தாய்
அரைமுழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து

பெருமழை வாழ்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன்

கருமுகில் தவழும் மாடக் கச்சியேகம்ப னீரே


( குட்டம்= குட்டை, நீர்நிலை; பெருமழை= பெரு நெறி, முக்திக்கான ஞானம்; முதலை ஐந்து= ஐம்புலன்கள்)

ஐம்புலன்களின் ஆட்டம் அடங்காத வரையில் நமது ஆன்மீக நாட்டம் வெறும் 'பிதற்றலாக'த்தான் இருக்கும் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுபாடுள்ள மனம் தான் ஞானத்திற்கு வழி காட்டமுடியும். ஆனால் பொறி வழித் திரியும் அதனை பிசாசு, குரங்கு, சனியன் என்று பலவாறாக பலர் வைதாலும் அது செல்லக் குழந்தைதான். அதைவிட்டால் நம் பிறவிக்கு அர்த்தம் கிடையாது. எப்படி? கபீர் தரும் இந்த உதாரணத்தை பார்ப்போம்.

कुंभै बांधा जल रहै, जल बिन कुंभ न होय ।
ज्ञानै बांधा मन रहै, मन बिनु ज्ञान न होय ॥


கலசத் துள்ளே நீரடக்கம், நீரின்றி யதுகலச முமாகுமோ
ஞானியுள் மனமொ டுங்கும், மனமின்றி ஞானமும் வருமோ


ஒரு சிறிய செம்பினுள் நீரைப்பிடித்து மாவிலையும் தேங்காயும் அதன் மேல் வைத்து “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.... என்று பிரார்த்திக்கும் போது அது கலசம் என்ற ஒரு மேலான அந்தஸ்து பெறுகிறது. சிவோஹம் சிவோஹம் என்றோ, ஸோஹம் ஸோஹம் என்றோ மனதை நிறுத்த முடிந்தால் நம் பிறவியும் சிவனடியைப் பற்றிக்கொள்ள தகுதியுடையதாகிறது.

ஆனால் மனம் என்று ஒன்று இல்லாமலே போனால் இதை எப்படி செய்ய முடியும்? அல்ஜெமிர் (Alzhemier disease) வியாதியால் பீடிக்கப் பட்டவர்களுக்கு மனம் வேலை செய்யாது (செய்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது) அப்படி மனமற்றவர்களை ஞானிகள் என்று ஏற்றுக் கொள்ளுமா உலகம் ?

ஞானிகளிடம் மனம் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடல் வலிமையுடன் கூடிய ஆற்றல் உடையவனை வீரன் என்று சொல்வர். மன வலிமை மிக்கவர்கள் தீரன் எனப்படுவர்.

யாழ்பாணத்து யோகசுவாமி ரமணாசிரமத்திற்கு விஜயம் செய்த போது இரு ஞானிகளுக்கும் இடையில் பேச்சு பரிவர்த்தனை எதுவும் இருக்கவில்லை. திரும்பி செல்லும் வழியில், வெகு நேரத்திற்குப் பின் “தீரனடா அவன்” என்று மட்டும் குறிப்பிட்டாராம்.

இந்த அடங்காத மனதை வழிபடுத்துவது எப்படி?

ரமணகீதை ”தீரம் சேர் புத்தியினால்” என்று வழி சொல்கிறது.

தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்ல மெல்ல
நேரச் செயவேண்டு நிச்சலன - மாரதனே

சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு

மித்தனையு மெண்ணிடாதே மந்தி- யொத்தே (26)


எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த
மெதெதனைப் பற்றியே யேகு-மததினின்

றீந்த்தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்
சேர்த்தித் திரமுறவே செய்யிங்ஙன் - சேர்த்தே (27)

இரண்டாவது பாடலை பிரித்து படித்தால் :
.
..................................... மந்தி ஒத்தே
எதுவும் (ஸ்)திரம் இன்றி என்றும் அலை சித்த(ம்)
எதெதனைப் பற்றியே ஏகு(ம்)- அததனின்(று)
ஈந்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்து (ஸ்)திரமுறவே செய் இங்ஙன் - சேர்த்தே


ஆன்மாவை உணர்ந்த ஞானியால் மட்டுமே ஆன்மாவை உணர்விக்க முடியும்.
அப்படி வழிகாட்ட ஒரு குரு கிருபை கிடைக்காத வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

லீலாசுகரின் பிரபலமான 'கஸ்தூரி திலகம் 'என்று தொடங்கும் பாடலை இந்த சுட்டியில் கேட்கலாம். வலையேற்றியிருக்கும் அன்பருக்கு நன்றி.

அதையே பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் குரலில் கேட்க

Thursday, August 21, 2008

தொண்டராம் தொண்டர்க்குத் ..... தொழும்பன்

நாக் மஹாஷயர்- மூன்றாம் பகுதி

பெரியது கேட்கின் வரிவடிலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது....
என்று தொடங்கும் ஔவையின் பாடலில் எல்லாவற்றிலும் பெரிதாகச் சொல்லி முடிப்பது “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே !”

ஏனென்றால் அந்த பரம்பொருளே தொண்டர் உள்ளத்து ஒடுங்கியவன்.

ஆகையால் யாவரிலும் இறைவனைக் கண்ட நாக் மஹாஷயர் தொண்டர்களுக்கு செய்யும் சேவையையே இறைவனுக்கு செய்யும் சேவையாகக் கொண்டார். அவருடைய மனநிலையை கபீரின் வார்த்தைகளில் வடிக்க வேண்டுமானால்;

दास कहावन कठिन है , मैं दासन का दास ।
अब तो ऐसा होय रहूं, पांवतले की घास ॥


அடியவன் என்பது கடினமே, அடியவர்க்கும் யான் அடியனே |
அடிப்புல்லாய் அவரடி கிடப்பினும், தன்ய னாவேன் ஐயனே ||

(தன்யன் = பாக்கியசாலி ; ஐயன் = தலைவன், இறைவன்)


”பாவ்தலே கீ காஸ்” என்பது காலடியில் மிதிபடும் புல் என்று பொருளாகும்.
இறைவனுடைய உண்மையான அடியவன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கில்லையாதலால் அது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அவனுடைய உண்மையான அடியவர்களின் காலடியில் கிடக்கும் புல்லாக இருந்தாலும் அதை பாக்கியம் என்று உணர்வேன்.

கபீரின் கூற்றிற்கு ஏற்ப இருந்தது அவர் வாழ்க்கை. எந்த ஒரு இடத்திலும் அவர் தனக்கென ஒரு முக்கியத்துவம் எதிர்பார்த்ததில்லை.யாவரும் அமர்ந்திருக்க இவர் ஒரு மூலையில் நின்று கொண்டே காற்றாடியை பிறர்க்காக விசிறிக் கொண்டிருப்பார். தான் கடவுளுக்கு அடிமையென்பது உண்மையானால் எல்லோருள்ளும் இருக்கும் அந்த கடவுளுக்கு அதே அளவு மரியாதை காட்டவேண்டும் என்று உறுதியாக நம்பியதே அதற்கு காரணம்.

சாலையில் போய்கொண்டிருக்கும் பொழுது அவர் யாரையும் தாண்டிச் செல்ல மாட்டார். முன்னே செல்வோரது நிழலையும் மிதியாது நடப்பார். பிறர் அமர்ந்திருக்கையில் சரி சமமாக அமர மாட்டார். வேறொருவர் புகைப்பதற்கு புகையிலை தயாரித்துக் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார். ஆனால் தான் யாவருக்குமாக புகையிலையை தயார் செய்து கொடுப்பார். ”எனக்கு எந்த பெரிய காரியமும் தெரியாது. என்னால் முடிந்த சிறிய சேவை இது தான். அதை தயவு செய்து மறுக்காதீர்கள்” என்று பிறரிடம் வேண்டிக்கொள்வார்.

இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டாலன்றி எங்கும் உணவை ஏற்கமாட்டார். உணவிலே உப்பும் இனிப்பும் அறவே ஒதுக்கினார். உலக விஷயங்களில் அவை ஈடுபாட்டை உண்டு செய்யும் என்று நம்பியதே காரணம்.

ஒரு முறை தன் வீட்டில் குவிக்கப் பட்டிருந்த அரிசி தவிடு கண்டு “உயிரோடு உடல் ஒட்டியிருக்க இதை தின்றால் கூட போதுமே! எதற்காக வீண் ருசிக்கு அடிமையாக வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அடுத்த இரண்டு நாட்களும் நீரை தவிட்டில் கலந்து தவிடையே உணவாகக் கொண்டார். இதைக் கண்ட வீட்டார் உடனே அத்தனை தவிடையும் விற்றுத் தீர்த்தார்கள்.

சுவாமி விவேகானந்தர் அவரை மடத்திலேயே தங்கி விடும்படி ஒரு முறை வேண்டிக்கொண்டார். ஆனால் குரு ராமகிருஷ்ணர் இல்லறத்திலே இருக்குமாறு பணித்திருப்பதால் மடத்தில் ஒரு சன்யாசியாக இருக்க முடியது என்ற தன் இயலாமையை நாக் மஹாஷயர் விளக்கினார்.

நாக் மஹாஷயர் உலகத்தாரின் பார்வைக்கு இல்லறத்தில் இருப்பினும் அவர் மனம் இல்லற சுகத்தை நாடியதில்லை. தந்தையின் வற்புறுத்தலுக்காக இல்லறத்தான் செய்ய வேண்டிய விருந்தோம்பல் போன்ற கடமைகளை நிறைவேற்ற மட்டுமே இரண்டாவது மணம் செய்து கொண்டார்.

அவருடைய ஒவ்வொரு செயலிலும் புலன்களையும் மனதையும் அவர் கட்டியாளுவதில் காண்பித்த தீவிரம் புலனாகிறது. நாக் மஹாஷயர் போன்ற மஹாத்மாக்கள் தாமரை இலை நீர் போல் உலகில் வாழ்பவர்கள். உலகத்தவர்கள் மத்தியில் சாமானியர் போல் இல்லறத்தில் இருந்த போதும் உடன் உறவாடுபவர் குற்றங் குறைகள் இவர்களுக்கு ஒட்டாது. கபீர் அதை, பாம்பு சந்தனமரத்தில் ஊர்வதற்கு ஒப்பிடுகிறார்.

चन्दन जैसा साधु है, सर्पहि सम संसार ।
वाके अंग लपटा रहे, मन मे नाहि विकार ॥


உரவோர் மனமொக்கும் ஈகம், உலகோர் போக்கொக்கும் நாகம் |
உறவாடினும் ஊடே யிருந்து, ஊறுமோ பிறன் தன் விகாரம் ||

( ஈகம்= சந்தனம்; பிறன் தன் விகாரம்= பிறருடைய குற்றம் குறைகள்)


சந்தன மரத்தின் கிளைகளில் விஷமுள்ள நாகம் ஊர்ந்து திரிந்தாலும் அதனுடைய விஷம் மரத்தினுள் ஊறாது. அதன் சேர்க்கையால் சந்தனத்தின் மேன்மை எவ்வகையிலும் குறைவு படுவதில்லை. அதைப்போல் சாதுகளின் மனம் பிறருடைய குறைகளை கண்டு சஞ்சலப்படுவதில்லை

கிரீஷ் சந்திர கோஷ் பலமுறை வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. இரண்டு பேர்களை தன் வலையில் வீழ்த்த முடியாமல் மகாமாயை தோற்றுப்போனாள்.

முதலில் நரேன். அவள் தன் வலையை பெரியதாக்கியதளவும் நரேன் அதை விட பெரியவராகி வலையில் சிக்காமல் மாயையின் முயற்சிகளைத் தோற்கடித்தார்.

இரண்டாவதாக நாக்மஹாஷய். இவரோ தன்னை குறுக்கிக் கொண்டே போய் (அஹங்காரமே இல்லாமல் போய்) வலையின் எந்த ஒரு சிறிய கண்ணிலிருந்தாவது தப்பித்து வெளியேறிவிடுவார். இப்படி இவரையும் மாயையால் பிடிக்க முடியவில்லை.

அவரைப் பற்றி விவேகானந்தர் கூறுகையில்: “நான் உலகின் பல பாகங்களிலும் பயணம் செய்து பலவாறான மக்களை கண்டிருக்கிறேன். ஆனால் நாக மஹாஷயரைப் போன்று ஒரு மஹாத்மாவை கண்டதில்லை.

सब बन तो चन्दन नहीं, शूरा के दल नाहिं ।
सब समुद्र की मोती नहीं, यो साधु जग माहिं ॥


அடவி யெலாம் சந்தனமல்ல, படையெல்லாம் சூரரும் அல்லர் |
கடலெல்லாம் முத்தும் அல்ல, மனிதரெலாம் ஞானியர் அல்லர் ||

காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் சந்தன மரங்கள் அல்ல, அரசனுடைய படையில் உள்ளவர்கள் எல்லாம் பெரும் சூரர்கள் அல்லர்; மிகப் பெரிய கடலில் முத்து மிக மிகக் குறைவே அது போல மானுட ஜென்மம் எடுத்தவர்களில் உண்மையான ஞானியர்கள் மிக மிகக் குறைவே

மஹான் நாக் மஹாஷய் வாழ்க்கை அப்படியே கபீரின் வரிகளுக்கு உயிர் கொடுப்பவையாக அமைந்து விட்டது. இன்றும் எத்தனை துர்காசரண் நாக் நம்மிடையே உலவுகின்றனரோ ? அவர்களை அறியாமலே காலம் போய்க்கொண்டிருக்கிறது.

கட்டுரையின் தலைப்பு, சிறுமணவூர் முனுசாமி முதலியார் இயற்றிய நடராஜர் பத்து என்ற பதிகத்தின் கடைசி பாடலை ஒட்டி வந்தது.
...........
....................யென்முன்
கனி போலவேபேசி, கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி, கர்த்த நின் தொண்டராம்
தொண்டர்க்குத் தொண்டரின் தொண்டர்கள்
தொழும்பனாக்கி, இனியவள மருவு சிறுமணவை
முனுசாமி யெனை யாள்வதினி யுன்கடன்காண்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லை வாழ் நடராஜனே

(தொழும்பன் = அடியவன், இழிஞன்)

Tuesday, August 12, 2008

சாதுவின் சகவாசம், சுகந்த வாசம்

நாக் மஹாஷய் -இரண்டாம் பகுதி. முதல் பகுதிக்கு இங்கே

பெரியம்மை தாக்கியிருந்த ஒரு அந்தண சிறுவனை அவனுடைய விதவை தாயார் இறக்கும் தறுவாயில் நாக் மஹாஷயர் வீட்டு வாசலில் தந்து இட்டு
விட்டாள். அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை யாருக்கும் இருக்கவில்லை. இறைவன் திருவுள்ளம் அவன் விரைவிலேயே குணமடைந்தான். அது எப்படி என்று சுரேஷ் மஹாஷயரை வினவியபோது 'அவன் குணமாக்கப் பட்டது' உண்மைதான் ஆனால் எப்படி என்பதை தன்னால் சொல்ல இயலாது என்று கூறிவிட்டார்.

பல சித்த புருஷர்களின் கடைக்கண் பார்வை இப்படி நோய் தீர்க்கும் மருந்தாக செயல் பட்டதை படித்திருக்கிறோம், கேள்விப் பட்டிருக்கிறோம். இதை கபீரும்
சூலத்தால் குத்தப்பட்டு அனுபவிக்கப்பட வேண்டிய பெருவலியும் ஞானியர் அருள் இருந்தால் சிறு முள் குத்திய வலியைப் போல ஒன்றுமில்லாததாகிவிடும்
என்கிறார்.

कबीर दर्शन साधु का, बडे़ भाग दरशाय ।
जो होवै सूली सजा, कांटे ई टरि जाय ॥


ஞானியர் தரிசனம் கபீரா, ஞாலத்தே பெரும் பேறாகும்
சூலம் பாய்ந்த பெருவலியும், முள் தைத்தது போலாகும்

நாக் மஹாஷய் ஒரு பொறுப்புள்ள மகனாக தந்தைக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். ஆனாலும் அவருடைய ஆன்மீகப் போக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டிருந்தது. அதை அவருடைய தந்தையால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறையே வரும் 'அர்த்தோதய யோக' பூஜை வங்காளத்தில் பிரசித்தமானது. இது கிரகண தினத்தன்று செய்யும் வழிபாடு.

அந்நேரத்தில் கங்கையில் நீராடுவது என்பது மிக விசேஷமானது. ஆசார அனுஷ்டானங்களில் ஆழ்ந்த நம்பிக்கை யிருந்த நாக் மஹாஷயரின் தந்தை,
தீனதயாளுக்கு பெரும் ஏமாற்றம். கல்கத்தாவில் இருக்கும் தன் மகன் மூன்று நாட்களுக்கு முன்பே தேவ்போக் (நாக் மஹாஷயரின் ஊர்) வந்துவிட்டானே என்று.

கங்கையில் நீராடி பூஜை செய்து வரக்கூடிய புண்ணியத்தை தவற விட்டு விட்டானே என்ற ஆதங்கத்தில், “உன்னுடைய அனுஷ்டானத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரும் கங்கா ஸ்நானத்திற்கென இங்கிருந்து கல்கத்தாவிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பொழுது அதை விட்டு இங்கே வந்து விட்டாயே. என்ன பக்தியோ உன்னுடையது. இப்போதும் என்னோடு புறப்படு. நேரம் இருக்கிறது” என்று புண்ணிய நீராடுதலுக்காக ஏங்கினார்.

”கங்கை தாயினிடம் உண்மையான பக்தி இருந்தால் அவளே இங்கு வருவாள். அவளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தந்தைக்கு பதிலளித்தார் மகன்.

அந்த நாளும், கிரஹண முகூர்த்தமும் நெருங்கியது. கைலாஷ் போஸ், ஸ்ரீமதி ஹரகாமினி (மனைவியின் சகோதரி) மற்றும் பல அடியவர்கள் தேவ்போக் மனையில் அந்நேரத்தில் இருந்தனர். அப்போது ஹரகாமினி ஈசானிய மூலையில் ஒரு வெடிப்பு தோன்றி முற்றத்துள் ஒரு நீரூற்று குபு குபுவென ஓசையுடன்
பெருகி வருவதை கவனித்து யாவரையும் அழைத்தார். அறைக்குள் அமர்ந்திருந்த நாக் மஹாஷயர் வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் ”மா! தேவி, கங்கா!!
பாவங்களைத் தொலைப்பவளே” என்று பலவாறாகத் துதித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். சிறிது நீரை அள்ளி தலையில் பக்தியுடன் தெளித்துக் கொண்டார். வீட்டிலிருந்த அனைவரும் அந்நீரிலே புனித நீராடினர். விஷயம் பரவி அப்பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் அங்கே குழுமி விட்டனர். ஜெய் கங்கா ஜெய் கங்கா என்ற கோஷம் எங்கும் எதிரொலித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீர் சிறிது சிறிதாகக் குறைந்து நின்று போனது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி நாக் மஹாஷயர் எப்போதும் பேசியதே கிடையாது. யாராவது மிக வற்புறுத்திக் கேட்டாலும் ‘ஒன்றுமில்லாததை பெரிது படுத்துகிறார்கள்' என்று தட்டிக் கழித்து விடுவாராம்.

ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் பல கோவில்-குளங்களையோ, புனித நீராடலையோ தேடிசெல்லும் அவசியமில்லை. அவர்கள் உள்ளேயே எல்லாம் சங்கமம்.

அதைத்தான் கபீர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

मथुरा, काशी द्वारिका, हरिद्वार, जगन्नाथ ।
साधु संगति हरि भजन बिन, कछु न आवै हात ॥


அரித்வாரம் சகன்னாத்தும், மதுரா, துவாரகை, காசியும் ஏனோ
அரிசெபமும் சத்சங்கம் இன்றி, அவனும் பிடிக்குள் வருவனோ

(அரித்வாரம்=ஹரித்வார், சகன்னாத்=புரீ, ஜகன்நாத், அரிசெபம்= ஹரி ஜெபம் அவனும் =இறைவனும்)

இறைவன் அருளைப்பெற அவன் அடியவரை பிடித்துக் கொள். உண்மையான ஞானியின் தரிசனமும் சத்சங்கமும் இல்லாத தீர்த்த யாத்திரை போன்ற மற்ற
எல்லாமுயற்சிகளும் பெரிய பலனை தந்துவிடாது. பக்தியில் ஆழமிருந்தால் அங்கே உடனே இருப்பான் இறைவன். இதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் கபீர்.

கங்கையின் வரவு கூட தன் தந்தையின் ஏக்கத்தை போக்குவதற்காக ஒரு ஞானி சொன்ன வாக்கு பொய்த்து விடக்கூடாது என்பதற்காக இறைவன் திருவுள்ளம் கொண்டான் என்பதாகக் கொள்ள வேண்டுமே அன்றி அவருக்கு தன் சித்தியை பிரதர்சனம் செய்யும் எண்ணம் அல்லவென்று புரிந்து கொள்ள வேண்டும்.

தேவ்போக்கில் கங்கை வந்தது பற்றி பின்னொரு நாளில் விவேகானந்தரிடம் சிலர் குறிப்பிட போது 'ஞானிகளின் சங்கல்பத்தால் ஆகாததும் உண்டோ. அவர்கள் சங்கல்பித்தால் முக்தியும் கிட்டும்' என்று பதிலுரைத்தாராம்.

(இதே போல ஒரு தீண்டத்தகாதவனுக்கு ஆதரவு தந்ததால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்ட ஸ்ரீதர் அய்யாவாள் என்ற பெரும் மஹானும் தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை பெருகச் செய்த நிகழ்ச்சி தமிழ் நாட்டில் உண்டு. அதை ஆசார்யஹ்ருதயத்தில் காண இருப்பதால் அதை விட்டுவிடுவோம். )

அன்னை சாரதா தேவி பேலூர் நீலாம்பர் பாபுவின் தோட்டத்தில் தங்கியுள்ளார் என்பதை அறிந்து அவரை தரிசித்து வர சக்ரவர்த்தி என்பவர் துணையோடு நாக்
மஹாஷயர் கிளம்பினார். அன்னைக்கென சிவப்பு சரிகை உள்ள ஒரு துணியும் கொஞ்சம் இனிப்பும் வாங்கினார். படகில் செல்லும் பொழுது ஒரு குழந்தையின்
குதூகலம் அவரிடமிருந்தது. கரையிறங்கியதுமே, அன்னையை தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவரை பேரானந்தத்தில்ஆழ்த்தியது. சுவாமி பிரேமாநந்தர் அவரை அன்னையிடம் அழைத்துச் சென்றார். பரவசமென்னும் காற்றில் அலைக்கழிக்கப்படும் சருகு போல தள்ளாடி அன்னையின் முன் போய் சேர்ந்தார்.

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த பின்னும் ஆனந்த பரவசம் அவரை ஆட்கொண்டிருந்தது. “ஓ! அய்யனை விட அன்னைக்குத்தான் எத்தனை கருணை” என்று சொல்லிச் சொல்லி சந்தோஷத்தில் திளைத்தார். பிரேமானந்தர் அதற்கானக் காரணத்தை விளக்கினார். நாக் மஹாஷயர் கொண்டு சென்றிருந்த இனிப்புகளை சாரதாமணி தேவியார் விரும்பி சுவைத்ததும் அவருக்கு தன் கையாலே பிரசாதம் வழங்கியதுமே அதற்கு காரணம்.

சாதாரண லௌகீக ரீதியில் பார்க்கும் பொழுது இரு அன்பர்கள் சந்தித்துக் கொள்வதில் ஒருவர் தின்பண்டம் வாங்கிச் செல்வதும் மற்றவர் தேநீர் சிற்றுண்டி தந்து உபசரிப்பதும் சகஜம் தான். ஆனால் அதையெல்லாம் மீறிய ஒரு ஆனந்தம் தந்தது எதுவென்றால் அன்னையின் அருளும் அதை போற்றத் தெரிந்த மனநிலையும் தான்.

அத்தகைய ஒரு மனநிலையைத் தான் கபீர்தாஸர் ஒரு ஈரடியில் ஆச்சரியப்பட்டு உரைக்கிறார். உயர்ந்த மனங்கள் சேரும் போது அங்கு உலக விசாரங்கள் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றுக்கு இடமில்லை. அங்கு பரிமாறிக் கொள்ளப்படுவது உயர் நிலை ஆனந்தம் மட்டுமே.

कबीरा संगत साधु की, ज्यो गन्धी की बास ।
जो कुछ गन्धी दे नहीं, तो भी बास सुबास ॥


சுகந்த வாசம் போலாகும், கபீரா சாதுவின் சகவாசம்
சுகந்தம் தந்ததே துமில்லை, பின்னும் ஏதோ உல்லாசம்

'ஜோ குச் கந்தீ தே நாஹி' என்பது கண்கள் அறியும் வண்ணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை குறிப்பதாகும். காற்றிலே கலந்து வரும் மணம் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது போல சாதுக்களின் முன்னிலையில் காணும் ஆனந்தம் மனதால் மட்டுமே உணரக் கூடியது.

Sunday, August 10, 2008

தண் மதிக்கு ஏங்கும் குமுதம்

இராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உண்டு. அதில் பலரால் அறியப்பட்டவர் M என்ற பெயரில் ராமகிருஷ்ணரைப் பற்றியும் அவரது அருளுரைகளைப் பற்றியும் தொகுத்து வந்த மகேந்திரநாத் குப்தா எனப்பட்ட கல்லூரி பேராசிரியர்.

இன்னும் ஒருவர் உண்டு அவரைப்பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ஏனெனில் அவர் தொண்டர் அடிப்பொடியாக, எளியருக்கும் எளியவனாக வாழ்க்கையை கழித்தார். 'நாக் மஹாஷய்' என்று போற்றப்பட்ட துர்காசரண் நாக் ஒரு மருத்துவர்.

வழக்குரைஞர்கள், பொறிஞர்கள், மருத்துவர்கள் போன்றோர்களுக்கு தம் தொழில் சம்பந்தமான கர்வம் இருக்கும் என்று இராமகிருஷ்ணர் பொதுப்படையாகச் சொன்னதை ஆத்மார்த்தமாக எடுத்துக்கொண்டு, தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாகும் எனக்கருதியதால் மருந்து புட்டிகளை கங்கையில் வீசி எறிந்து அத்துறையை கைவிட்டவர். அப்பேர்ப்பட்ட ஒரு குரு பக்தி.

தந்தையை மகிழ்விக்க இரண்டாம் மணம் செய்து கொண்டார். குரு ராமகிருஷ்ணரின் அறிவுரைப்படி இல்லறத்திலே இருந்தார். ஆனால் மனமோ காளி தேவியின் திருவடிகளையே நினத்திருந்தது. அவருக்கு பரமஹம்சரின் தொடர்பு கடைசி நான்கு வருடங்களே வாய்த்தது.

அவருக்கு இருந்த தீவிர இறை நாட்டத்தை விவேகானந்தருடைய வார்த்தைகளிலே காண்போம்.

”குரு ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பிறகு நாக் மஹாஷய் தீவிர உபவாசம் இருப்பதாகக் கேள்விப்பட்டு நானும் ஹரிபாயும் அவர் கல்கத்தாவில் தங்கியிருந்த சிறிய ஓட்டு வீட்டை தேடி அடைந்தோம். படுத்திருந்த அவர்
எழுந்தார். 'மஹாஷய் இன்று உங்கள் வீட்டில் தான் பிட்சை' என்றேன். நாங்களும் உணவு உண்டு அவரையும் உட்கொள்ள செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மிக்க சந்தோஷத்துடன் சாமான்களை தந்து நாங்கள் குளித்து தயாராவதற்குள் உணவு தயாரித்து வைத்திருந்தார். அவரையும் கூட அமர்ந்து உண்பதற்காக அழைத்தும் மறுத்து விட்டார். சரி, நாம் உண்ட பின்னால் அவரை உண்ண வைக்கமுடியும் என்றெண்ணி அவருக்காக சற்று எடுத்து வைத்துவிட்டு உணவை முடித்துக் கொண்டு அவரை உட்கொள்ள மீண்டும் வேண்டினோம்.

வற்புறத்தலில் அவருக்கு மனதின் ஆற்றாமை பெருகி, அன்னம் இருந்த சட்டியை போட்டு உடைத்து, தலையில் அடித்துக் கொண்டு 'கடவுளை அறிய இயலாத இந்த உடம்பிற்கு உணவும் ஒரு கேடா' என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். நாங்கள் திக்பிரமை பிடித்தவரானோம். மிகப் பெரிய பிரயாசத்திற்கு பிறகே கொஞ்சம் உணவு உட்கொண்டார். கடவுளுக்கான அப்படி ஒரு தீவிர பக்தியைக் காண்பது அரிது.”

அந்த நிலையை கபீரின் வார்த்தைகளில் காண்போம்.

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं ।
धन का भूखा जो फिरै, सो तो साधू नाहीं ॥


ஸாதூ பூகா பாவ் கா, ன் கா பூகா நாஹி
தன் கா பூகா ஜோ ஃபிரை, ஸோ தோ ஸாதூ நாஹி


அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை
பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை

மேற்கண்ட நிகழ்சியில் அருளின் பசியை பார்க்கிறோம். நாக் மஹாஷயருக்கு பொருள் திரட்டும் நோக்கம் அறவே இருக்கவில்லை என்பதை இன்னொரு சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. உப்பளங்களுக்கு அதிபதிகளாக இருந்த
'பால்' கம்பெனியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு கடுமையான வைசூரி நோய் கண்டிருந்தது. வேறு எந்த சிகிச்சை முறையும் பலன் தராது போகவே அவர்கள் நாக் மஹாஷயரை மருந்து தரும்படி கேட்டுக்கொண்டனர். அவர் கொடுத்த ஹோமியோபதி மருந்துகள் உடனடியாக குணம் தந்தது. மகிழ்ந்து போய் அவர்கள் ஒரு பெரும் தொகையை சன்மானமாகத் தர முன்வந்தனர். ஆனால் இவரோ அதை மறுத்துவிட்டார். அதையும் மீறி அவர்கள் மிக வற்புறுத்திய போது ஒரு குழந்தையைப் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். “கடவுளே எனக்கு ஏன் இந்த அறிவை கொடுத்தாய்? அது இல்லாமல் இருந்திருந்திருந்தால் இந்த துன்பம் எனக்கு வந்திருக்காதே”.

செல்வத்தைத் துன்பத்தின் நிழலாகக் கண்டார் அவர்.

வேறொரு சமயம் அதே கம்பெனியார், போஜேஸ்வரில் அவர் ஒரு ஏற்றுமதி மேற்பார்வை செய்தபின் கல்கத்தா திரும்பிச் செல்ல எட்டு ரூபாய் நீராவி படகு கட்டணமும் குளிருக்காக ஒரு கம்பள சால்வையும் கொடுத்து வழி
அனுப்பினர். போஜேஸ்வரிலிருந்து படகுத்துறை எட்டு மைல். செல்லும் வழியில் பசியால் நலிந்திருந்த ஐந்தாறு குழந்தைகளோடு பிச்சை வேண்டிய ஒரு பெண்மணியின் துயர நிலை அவர் மனதை உருக்கி விட்டது.

லோகமாதாவையே அவளுடைய கண்களில் கண்டார். கம்பெனியார் கொடுத்த எட்டு ரூபாயையும் கம்பள சால்வையும் அவளுக்கு கொடுத்து விட்டார். இப்போது நீராவி படகுக்காரனுக்கு கொடுக்க காசில்லை. நடைப் பயணமாகவே கல்கத்தாவிற்கு கிளம்பினார். கையிலிருந்ததோ ஏழு அணாவும் ஆறு பைசாக்களும் மட்டுமே. அகலமான ஆறுகள் வந்தபோது படகுகளின் துணையில் கடந்தார். குறுகிய கால்வாய்களை நீந்திக் கடந்தார். வழியில் ஏதேனும் ஆலயங்களில் கிடைத்த பிரசாதமே பல நாட்கள் உணவானது. ஒரு வழியாக அவர் கல்கத்தா அடைந்த போது இருபத்தியொன்பது நாட்கள் ஓடிவிட்டிருந்தன. ஆனால் மனமோ சதா அன்னையின் சரணத்திலேயே லயத்திருந்தது.

நாக் மஹாஷயர் இயல்பிலேயே தன்னை ஆன்மீகத்திற்கு அருகதையற்றவராக கருதி வந்தார். விவேகானந்தர், பாவி, sinner போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தவர். பாவி என்று எவனும் கிடையாது. அனைவரும் அமிருத புத்திரர்கள் என்பதே அவர் கொள்கை.

விவேகானந்தரைப் போலல்லாது தன்னை ஒரு 'பாவக் குப்பை' 'புழுவினும் கடையன்' என்றெல்லாம் நாக் மஹாஷயர் சொல்லிக்கொள்வார். அப்படி ஒரு முறை கிரீஷ் பாபு வீட்டில் சுவாமி நிரஞ்சனானந்தாவுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் கிரீஷ் பாபு இதைப்பற்றி வினவினார்.

“குருதேவ் அடிக்கடி சொல்வதுண்டே நாம் எப்படி நினக்கிறோமோ அப்படி ஆகிவிடுவோம் என்று. தாங்கள் ஏன் தங்களைப் பற்றி அப்படி ஒரு தாழ்வான மனப்பான்மை கொள்ள வேண்டும்?”

“என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? உண்மையை சொல்வதில் என்ன தயக்கம்? என்னை சிவனென்று (சிவோஹம்) சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்னுள் பக்தியோ ஞானமோ பெருகவில்லை. எலும்புகளாலும் தசைகளாலும் ஆன இந்த கூட்டின் மீது உள்ள அபிமானம் நீங்காத வரையில் நான் எப்படி சிவனாக முடியும். உங்களுடைய உதவியோடும், தாகூரின் (பரமஹம்ஸர்) அருளும் இருந்தால் என் பிறவியும் கடைத்தேறும்”

அவருடைய குரலில் இருந்த உண்மையான பணிவு, மேற்கொண்டு அதைப்பற்றிய உரையாடலை தொடரமுடியாமல் செய்து விட்டது.

அவர் ஞானியாக பரிமளித்ததன் ரகசியம் இதுதான். அழுக்குக் குட்டையிலே இருந்தாலும் ஆம்பல் சந்திரன் வரவுக்காக மட்டுமே காத்திருக்கும். சதா இறை சிந்தனையிலே ஊறிப் போயிருப்பினும் தேக நினைவு வரும் பொழுது அது ஒரு
பாழ் குட்டமாக இருக்கும் உண்மை புரியும். அவர் அந்த உண்மையைப் பேசினார்

ஆனால் மனமோ இறைவனுடன் இருந்ததால் அவருடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்கவில்லை.

जल में बसै कमोदनी, चन्दा बसै आकास ।
जो है जाको भावता, सो ताही के पास ॥


ஜல் மே பஸை கமோதினி, சந்தா பஸை ஆகாஸ் |
ஜோ ஹை ஜாகோ பாவ்தா, ஸோ தாஹி கே பாஸ் ||


அம்பரத்தே உறை மதி கண்டே, ஆம்பல் மலரும் குட்டத்தே
உம்பர்தம் உறவும் உண்டே, உள்ளத்தே எழும் நாட்டத்தே

(அம்பரம்= ஆகாயம் ; உறை=உறைகின்ற; மதி =சந்திரன் ; உம்பர்= வானோர்; குட்டம்= குளம், நாட்டம்= விருப்பம்)


இதே கருத்தைச் சொல்லும் ஒரு நீதி வெண்பா பாடல்

செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே
சந்திரோதயம் பார்க்கும் தண்குமுதம்-கந்தமிகும்
பூ அலரப் பார்க்கும் பொறி வண்டு, அரன் அன்பர்
தேவரவைப் பார்ப்பர் தெளிந்து

(பொறிவண்டு= புள்ளிகளுடைய வண்டு)


நாக் மஹாஷயரின் அஹங்காரமே இல்லாத பரிசுத்த நிலையை கண்ட சுவாமி நிரஞ்சனானந்தர் “ஒரு மனிதனின் அஹங்காரம் முழுதும் அழிந்துவிட்ட நிலையில் மட்டுமே நாக் மஹாஷயரின் நிலையை அடைய முடியும்.
அத்தகையவர்களின் திருவடி பூமியில் பட்ட இடமெல்லாம் புனிதமாகிவிடும்”.

சுவாமி நிரஞ்சனானந்தரின் வாக்கை உண்மையாக்குவது போல் அவருடைய வாழ்க்கை அமைந்தது. வங்காளத்தில் ப்ளேக் பெரு நோய் பெருமளவில் தாக்கிய காலத்தில் தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் மடிந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிலர் ஒரு உண்மையை கவனித்தனர். நாக் மஹாஷயர் சுற்றி வந்த பகுதிகளெல்லாம் ப்ளேக் கட்டுக்குள் இருந்தது. அதனால் தேவ்போக், போஜேஷ்வர் பகுதி மக்களெல்லாம் தம்முடைய ஊரில் ஒரு முறையாவது அவர் திருவடி பட வேண்டும் என்று அவரை வேண்டி தத்தம் ஊரில் பூஜைகள் ஏற்பாடு செய்தனர்.

साधु दरशन महाफल, कोटि यज्ञ फल लेह ।
इक मन्दिर को का पडी नगर शुद्ध करि लेह ॥


ஸாது தர்ஷன் மஹாபல். கோடி யக்ஞ் பல் லேஹ் |
இக் மந்திர் கோ கா படீ, நகர் ஷுத் கரி லேஹ் ||

சாலச் சிறந்தது சாது தரிசனம், கோடி வேள்வி செய்பலனே
ஆலயம் அம்மட்டே, ஊரையும் செய்குவான் புனிதம் அவனே

(ஆலயம் அம்மட்டே= ஆலயம் மட்டும் தானா )


பாடல் பெற்ற தலங்கள் என்று நாம் போற்றுவது அப்பெரும் தவச்சீலர்கள் வரவினால் அவ்வாலயங்களில் செய்யும் வழிபாடு விசேஷமானதாகக் கருதுகிறோம். ஆனால் அப்பெருமக்கள் கால் வைத்த இடமெல்லாம் புனிதமாயிற்று என்பதை கபீர் மூலமாகவும் நாக் மஹாஷயரின் மூலமாகவும் அறிகிறோம்.

(Nagmahasaya : Ramakrishna Math, Mylapore Chennai ISBN 81-7120-238-1)

Thursday, July 17, 2008

எழுதித் தீருமோ எம் குரு பெருமையும்

கல்லூரியில் மகனையோ மகளையோ சேர்க்கும் முன் பல மத்திய தர குடும்பங்களில் பல மாதங்களுக்கு பெரிய வாத பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல்விதமான துறைகள், ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள். பல தரப்பட்ட கல்லூரிகள். இப்பெரிய உலகில் அக்குழந்தைகள் அடியெடுத்து வைப்பதற்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசுவோரே இல்லை. பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி மனதைக் குழப்பியும் பயமுறுத்தியும் விடுவர்.

கடைசியில் ஒரு பெரியவர் ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். “இதோ பாரு! நீ எந்த ஃபீல்டல போனாலும் பெரிய ஆளா வரலாம். உனக்கு வேண்டியது கஷ்டப்பட்டு படிக்கிற குணமும், கடவுள் மேல நம்பிக்கையுந்தான். அம்மா அப்பாவுக்கு பணக்கஷ்டம் மனக் கஷ்டம் இல்லாத மாதிரி எந்த சப்ஜெக்ட்டை எந்த காலேஜ்-ல வேணுமானாலும் எடுத்து படி. அவன் வழி காட்டுவான்

ஆன்மீகத்திற்கு வேண்டியதும் இந்த மனப்பக்குவமே, "அவன் வழி காட்டுவான்"

எல்லாத் துறைகளைப் போலவே ஆன்மீகத்திலும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரவரும் கடந்து வந்த பாதையை வைத்து தத்தம் அனுபவங்களைக் கொண்டு கடவுளைப் பற்றி விவரிக்கின்றனர். எல்லோர் சொல்வதும் ஏதோ ஒரு விதத்தில் சரியே. ஆனால் அது எல்லாமே குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து வர்ணித்தது போலவே ஆகும். இந்த நடைமுறை நிலையை கபீரும் ஏற்றுக் கொள்கிறார்.

गुरु गुरु में भेद है, गुरु गुरु में भाव ।
सोइ गुरु नित बन्दिये, शब्द बतावे दाव ॥


குரு குரு மே பேத ஹை, குரு குரு மே பாவ் |
ஸோயி,குரு நித் பந்தியே, ஷப்த் பதாவே தாவ் ||


குரு குருவிலும் பேதம் உண்டு, குரு குருவிலும் பாவனை வேறு
குரு அவனடி தினம் பணிந்திடு, நாதத்தில் கூட்டிடும் நாதன் பேறு

(நாதன் பேறு = இறைவன் என்ற செல்வம் )


[ இரண்டாவது அடியை உரைநடையில் “நாதத்தில் நாதன் பேறு கூட்டிடும் குரு, அவனடி தினம் பணிந்திடு” எனக் கொள்க.]

'ஷப்த் பதாவே தாவ்' என்று கபீர் சொல்வது ஔவையின் “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி'' என்ற வரிகளை நினைவூட்டுகிறது.

சப்தம் அல்லது நாதம் சிருஷ்டியில் முதலில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி கட்டத்தில் சாதகன் உணரும் நிலையும் அதுவே எனப்படுகிறது. சிவமே எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குகிறது என்கிறது திருமந்திரம்.

சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்தறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே (1973)

நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும், யாரும், அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவ பெருமான் இருக்குமிடம் அதுவே என்பதை அறிவர்.

அதை உணர்ந்தே பட்டினத்தாரின் சீடராகிய பத்திரகிரியாரும்

வேதாந்த வேதமெல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூலம் நடு இருப்பது எக்காலம் ? -

என்று ஏங்குகிறார்.

தமக்கென்று வாய்த்த குருவின் உரையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்லியபடி பயிற்சிகளை செய்து கொண்டு போனால் தானே வழி பிறக்கும். குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? கபீர் அதனால் தான் நாமசெபத்தின் பயனை மேலும் வலியுறுத்துகிறார்.

नाम भजोमन बसि करो, यही बात है तंत ।
काहे को पढि पचि मरो, कोटिन ज्ञान गिरंथ ॥


நாம் பஜோமன் பஸி கரோ, யஹி பாத் ஹை தந்த் |
காஹே கோ படீ பசீ மரோ, கோடின் ஞான் கிரந்த் ||


செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே

மாற்று

மனமே செபித்து வசிகொள், இதுவே நாதன் அருளின் இரகசியம்
தினமே செப்பிடும் சாத்திரம் நூறு, இன்னும் அதுவோ அவசியம்

ஆராய்ச்சியால் அறியப்படுபவன் அல்ல கடவுள். ஆராய்ச்சி செய்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதலாம், படிக்கப்படலாம். ஆனால் அவையெல்லாம், வள்ளலாரின் மொழியில் “சாத்திரக் குப்பை” தாம்.

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?

என்று பத்திரகிரியார் குறிப்பிடும் (மெய்ஞான புலம்பல்: 155 ) சூத்திரமே குருவழி வரும் மந்திர உபதேசம். அதை முறையாக செபித்தால் அது இறைவனிடம் இட்டுச் செல்லும். அதை உறுதி செய்வது போல் இருக்கிறது திருமந்திரத்தின் இன்னொரு பாடல்.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே

இருட்டு நேரத்தில் தன் படகை அடைய வேண்டிய படகுகாரன் படகைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் முன்னேறிச் சென்று படகை அடைவது போல, ஒவ்வொரு முறை நாமத்தை உச்சரிக்கும் போதும் சங்கிலியின் ஒரு இணைப்பின் அளவு இறைவனை நெருங்குகிறோம் என்பாரம் அன்னை சாரதா தேவி.

இன்று வியாச பூர்ணிமை. குரு மேன்மையை நினைவு கூற சிறப்பான தினம். கபீர் தமது குரு மீது வைத்துள்ள அன்பையும் பெருமையும் ஒருங்கே அவரது கீழ்கண்ட ஈரடியில் காணலாம்.

सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥

ஸப் தர்தீ காகத் கரூன், லிகனீ ஸப் பன்ராய் |
ஸாத் ஸமுத்ர் கா மஸி கரூன், குரு குண் லிகா ந ஜாய் ||


அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்

(அடவி= காடு ; கோல்= எழுது கோல்; இத்தரை = நிலம்; பத்திரம்= காகிதம்.; மசி =எழுதும் மை)

ஞானியர் அருளில் ஞாலம் ஒளிரும்.