Thursday, January 24, 2008

நீ நீ என யாவும் நீயே

அசோக மன்னனை ஒரு போரின் அவலங்கள் மனம் மாறச் செய்தது என்றால் ஒரு சில நாட்களின் சிறைவாசம் அரவிந்தரை ஆன்மீகத்திற்கு திருப்பியது. தீவிரமான கருத்துகளோடு சுதந்திரப் போராட்டத்திலிருந்த அவரை திசை திருப்பிய நிகழ்சியைப் பற்றி அவரது சொற்களிலே காண்போம்.

நான் கைது செய்யப்பட்டு லால் பஜார் ஹஜத்-க்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்ட போது சிறிது காலம் கலங்கிவிட்டேன். அவன் திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன் பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது.
நாட்கள் நகர்ந்தன ஒன்று, இரண்டு மூன்று என. அப்போது ஒரு குரல் கேட்டது.“பொறுத்திருந்து பார்”.
அதன்பின் மனம் சற்று அமைதி அடைந்து பொறுமையுடன் காத்திருந்தேன்.

லால் பஜாரிலிருந்து அலிபூர் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தனிமையில் அடைக்கப்பட்டேன். ஒருமாத காலம் வெளி உலகத்துடன் எவ்வித தொடர்புமின்றி இருந்தேன். அங்கே இறைவனின் குரலுக்காக இரவும் பகலும் காத்திருந்தேன். அந்த தனிமையில் எனக்கு முதல் இறை அனுபவம் கிடைத்தது.


நான் கைது செய்யபடுவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு எனக்கு அவனிடமிருந்து வந்த அழைப்பை புறக்கணித்த நினைவு வந்தது. " எல்லாவற்றையும் விட்டு வந்துவிடு. உன்னுள் என்னைத் தேடு” என்ற பலமான உள் உந்துதலை வலுக்கட்டாயமாகப் புறக்கணித்தேன். அதற்கு என் மன பலவீனமே காரணம் என்று நினைக்கிறேன். நான் கடமை என்று கருதிய பொறுப்புணர்வில் மனம் கண்டிருந்த பெருமையும் காதலுமே அதற்கு காரணம். நான் இல்லாவிட்டால் அவையெல்லாம் அப்படியே நின்று போகும் அல்லது அழிந்து போனாலும் போகும் என்று நினைத்தேன்.
இப்போது 'நீயாக வழிக்கு வரமாட்டாய் என்பது தெரிந்துதான் இந்த ஏற்பாடு' என்று சொல்வது போல் தோன்றியது. ‘உனக்கு நீயே ஏற்படுத்திக் கொண்ட தளைகளை அறுத்து எறிய சக்தியில்லாததால்தான் நானே அதை துண்டிக்க முடிவு செய்து விட்டேன். நீ அதிலே தொடர்வது என் சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்.

அப்பொழுது பகவத்கீதையின் பிரதியொன்று எனக்கு கிடைத்தது. அதன் வலிமை முழுவதுமாக என்னுள் சேர்ந்தது. பற்றற்று செயல்புரியவும், இறைவனின் கையில் ஒரு கருவியாக இருப்பதன் உண்மையும்,வெற்றி-தோல்வி, நண்பன்-எதிரி, மேலோன் -கீழோன் என்ற வித்தியாசங்கள் எல்லாம் பொய்மை என்பதையும் பூரணமாக புரிந்து கொண்டேன். என் மனதிலிருந்து எல்லா வேற்றுமைகளும் மறையத் தொடங்கியது. என் பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டது.

என்னையும் பிறரையும் பிரிக்கும் அந்த சிறைச்சாலையின் பெரும் சுவர், சுவர் என்ற எண்ணத்தை உண்டாக்கவில்லை. என் வாசுதேவனே என்னை சுற்றி நிற்பது போல் தோன்றியது. என் அறைக்கு எதிரே நின்ற அந்த மரம் கிருஷ்ணனாகவே காட்சியளித்தது. வெளியிலே காவல் காத்து நின்றவரைப் காணும் போது என் நாராயணனே என்னை காவல் புரிவதாகத் தோன்றியது. எனக்கு கொடுக்கப்பட்டிருந்த முரமுரப்பான போர்வையை போர்த்துக் கொள்ளும் பொழுது கிருஷ்ணனே தன் கையால் என்னை அரவணைத்திருப்பது போல உணர்ந்தேன். அங்கிருந்த சக கைதிகளைப் பார்த்தபோதும் எல்லோரும் வாசுதேவனாகவே காட்சியளித்தனர். அவர்களில் திருடர்களும், கொலை கொள்ளை பாதகம் புரிந்தவர்களும் அடக்கம். ஆனால் அவை எதுவும் என்னுள் வேற்றுமையை தோற்றுவிக்கவில்லை. இந்த அனுபூதி பலநாட்கள் தொடர்ந்தது.

என் வழக்கும் ஒரு நாள் விசாரணைக்கு வந்தது.நான் மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பொழுது அவனுடைய குரல் மீண்டும் கேட்டது. “என்னை ஏன் பாதுகாக்கத் தவறினாய் என்று புலம்பினாய் அல்லவா? இப்பொழுது உன்னை குற்றம் சாட்டும் வழக்குரைஞரையும் நீதிபதியையும் பார்”.

அங்கே நீதிபதி அமர்ந்திருக்கவில்லை. அங்கே அமர்ந்திருந்தது என் வாசுதேவன். வழக்குரைஞர் பக்கம் பார்த்தேன். என் பிரிய நண்பன் கிருஷ்ணனல்லவோ என்னைப் பார்த்து புன்னகைத்தான்.

"என்ன இன்னுமா பயம்?” என்று அவன் கேட்டான். “எல்லோருள்ளும் இருப்பவன் நானே. அவர்களது செயலையும் சொற்களையும் நானே முடிவு செய்கிறேன்.உன்னைக் காக்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடு. இந்த வழக்கின் போக்கை என்னிடம் விடு. உன்னை இங்கு வரவழைத்தது என்னுடைய பிற வேலைக்காக. இந்த வழக்கு வெறும் ஒரு மேற்போக்கான காரணம் தான்”.


(பாரதீய வித்யாபவன் பிரசுரித்த How God came in to my Life (4th edition 1990) என்ற புத்தகத்திலிருந்து)

அந்த அனுபவத்திற்கு பிறகு சாட்சி பாவத்துடன் அரவிந்தர் வழக்கை ஒரு வேடிக்கை போல காணத் துவங்கினார். வங்காளத்தின் மிகப்பெரும் வழக்கறிஞரான சித்தரஞ்சன் தாஸ் ஒரு கட்டத்தில் தாமாகவே முன்வந்து அரவிந்தரின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்டார். அதன் பின் பாண்டிச்சேரிக்கு சென்று அவர் தமது ஆன்மீக சாதனைகளைத் தொடர்ந்தது வரலாறு.

அரவிந்த கோஷ் அவர்களின் இந்த அனுபவம் எல்லா ஞானிகளுக்கும் உரியது என்பதை கபீர் அவர்களின் வார்த்தைகளிலும் காணலாம்.

तूतू करता तू भया, मुझमें रही न हूंय ।
बारी तेरे नाम पर, जित देखूं तित तूंय ॥

தூ தூ கர்தா தூ பயா, முஜ்மே ரஹீ ந ஹூய்
பாரி தேரே நாம் பர், ஜித் தேகூம் தித் தூய்


துறந்தே(ன்) என்னை உன் நினைவில் நீ நீ யென யாவும் நீயே
திறந்தே வழிதரும் உன் நாமம், எதைக் காணினும் அதில் நீயே

'நாக்கு தழும்பேறும் வரை செபி, மந்திரம் சித்தியாகும்' என்பார் வாரியார் சுவாமிகள். மந்திரம் சித்தியானது என்பதற்கு அடையாளந்தான் அரவிந்தரின் அனுபவம்.

நாம செபம் என்பது எறும்பு ஊர்தல் போல இருக்க வேண்டுமாம். எப்படி தன் வழியில் வரும் சுவர், தூண், பள்ளம்,மேடு எல்லாவற்றையும் தாண்டி தன் காரியமே கண்ணாக சென்று கொண்டிருக்குமோ அது போல நாம செபத்தில் ஈடுபட்ட மனம் அமைதியாக காமம்,குரோதம்,ஆணவம் போன்ற தடைகளை தாண்டி இறைவனை சேரும் வலிமை பெறுகிறது. இதை பிப்பலிகா மார்கம் என்பர். பிப்பலிக்கா என்றால் எறும்பு.

நாமசெபம் செய்ய காலம் இடம் போன்றவை தடையில்லை. மனம் மட்டும் ஒத்துழைக்க வேண்டும். எந்த விஷயத்தில் மனம் ஈடுபாடு கொள்ளுமோ அப்போது அதன் ஒத்துழைப்பு முழுவதுமாக இருக்கும். ஈடுபாடு கொள்ள வேண்டுமானால் பொதுவாக எதைக் கண்டு ஆச்சரியப்படுமோ அப்போது அதில் ஈடுபாடு வரும். ஆச்சரியப் படுவதற்கு கடவுளின் படைப்பில் பஞ்சமா என்ன?

அமரகவி, ‘காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே, நீ கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே' என்று எல்லாவற்றிலும் அவன் ஊடுருவி நிற்கும் பெருமையை வியக்கிறார்.

'பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, நின்றன் பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா' என்று அரவிந்தர் கண்ட உண்மையையும் பறைசாற்றுகிறார். அவருடைய தாசனோ 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதியின் சக்தி போற்றுதலை எதிரொலிக்கிறார். கபீரும் சக்தியின் பெருமையை இன்னும் ஒரு படி மேலே போய் பச்சை வர்ணத்தில் மறைந்திருக்கும் செந்நிற வர்ணமாக அவளைக் காண்கிறார்.

साहिब तेरी साहिबी, सब घट रही समाय ।
ज्यों मेहंदी के पात में, लाली लखी न जाय ॥

சாஹிப் தேரீ ஸாஹிபி, ஸப் கட் ரஹி ஸமாய்
ஜ்யோம் மெஹந்தீ கே பாத் மேம், லாலீ லகீ ந ஜாய்


பெருமாளே, இல்லந் தோறும் இலங்குவாள் உந்தன் இறைவி
மருதாணி இலையுளும் மருவினாள், மங்காத செந்நிறச் செல்வி
( இறைவி = தலைவி ; மருவுதல் = கலந்திருத்தல் )

நன்கு அரைக்கப்பட்டு கையிலே பூசி கழுவிய பின்னும் பலநாட்களுக்கு மங்காமல் இருக்கும் மருதாணி செந்நிறத்தின் மர்மம் என்ன ? அதிலே மறைந்து இருப்பதும் அவனுடைய சக்தியே அன்றோ ! உயிர்வேதியியல் படித்தவர்கள் இன்று இதற்கு பலவிதமான விளக்கங்கள் அளிக்கலாம். ஆனால் அவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போலத்தான்.

அவளுடைய தத்துவத்தை அறிந்தவர்கள் சிவனும் மாலும் மட்டும் தானாம், வியந்து அவளைப் போற்றுகிறார் அபிராம பட்டர்.

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - என்றன் நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில்
துயின்ற பெம்மானும், என் ஐயனுமே (அபிராமி அந்தாதி-56)

இயற்கையின் அற்புதங்களை மேலும் மேலும் கண்டு மனம் வியக்கக் கற்றுக் கொள்ளுமானால் அது தானாகவே கடவுளின் பால் நாட்டம் கொள்ளும். அதன் பின்னர் அதன் முழு ஒத்துழைப்பும் நாம செபத்திற்கு கிடைக்கும். அரவிந்தரை போல சாட்சி பாவத்தில் 'எல்லாம் அவன் செயல்’ என்று மனதை வைத்துக் கொண்டால் சிருஷ்டியின் மேன்மையை போற்ற நேரம் கிடைக்கும். அதிலேயே மனம் லயக்கும் போது எல்லாம் அவனாகவே தெரிகிறது கவிஞனுக்கும் ஞானிக்கும்.

பள்ளியில் பயின்ற ஒரு பிரார்த்தனை:

சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவதும் எவராலே
காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் தெரிவன அவையென்ன
பேரிடி மின்னல் எதனாலே பெருமழை பெய்வதும் எவராலே
யாரிதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ.

இதை எழுதியது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று நினைவு. தவறானால் சுட்டிக்காட்டவும். திருத்திவிடலாம்.

Monday, January 07, 2008

உணர்வில் உணவின் தாக்கம்

குரு நானக் தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நிலசுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோ நானக் கை தேடி வந்து கேட்கலானார்.

“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”

“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால் பாயி லாலோவுடன் தங்கினேன்”

லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?”

“அவசியம் தெரிய வேண்டுமா ?”

“ஆம்”

“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும் பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.

மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”


“அன்பிற்குரிய பாகோ உன்னை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.

குருவினுடைய கூற்றை உண்மையாக்கிக் காட்டினார் குரு நானக். ஆம், கபீர்தாஸரை நானக்கின் குரு என்று கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவர்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சீக்கியர்களின் கிரந்த சஸாஹேப் எனப்படும் புனித நூலில் கபீரின் 541 ஈரடிகளும் பாடல்களும் உண்டு. கிரந்தஸாஹேப்~ல் இல்லாத ஈரடிகளை கபீரது மூல ஈரடிகள் அல்லவென்றும் பிற்சேர்க்கையெனவும் கொள்வோர் உளர்.அந்த அளவிற்கு கபீரின் போதனைகளுடன் ஒன்றியிருந்தார் குரு நானக்.

இப்போது கபீரின் அந்த ஈரடியைக் காண்போமா?

सहत मिलै सो दूध है, माँगी मिलै सो पानी ।
कहैं कबीर वह रक्त है, जामे एंचातानी ॥


ஸஹத் மிலை ஸோ தூத் ஹை, மாங்கீ மிலை ஸோ பானீ |
கஹை கபீர் வஹ் ரக்த் ஹை, ஜாமே ஏம்சாதானீ ||


பாலொக்கும் தானே வந்தது,நீரொக்கும் இரந்து பெற்றது
ஒறுத்து ஆர்தல் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது
.

(ஒக்கும் = போல;ஒறுத்து =துன்புறுத்துதல்;ஆர்தல்= அனுபவித்தல்,புசித்தல்,குடித்தல்; செந்நீர்= இரத்தம்; கேண்மினோ =கேட்பீரே)

மாற்று :
வழிமுறை வந்தது பாலொக்கும், நீராகும் இரந்து பெற்றது
வலித்து புசிப்பின் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது


(வழிமுறை =முறையான வழி, தர்மத்திற்குட்பட்ட வழி; வலித்து =துன்புறுத்தி
)

உடல் வளர்ச்சியைப் போலவே ஆன்ம வளர்ச்சியும் இன்றிமையாதது. இதை அருட்செல்வம் என்பார் வள்ளுவர்.
"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்...." என்று குறிப்பிடுகிறார். பால் உடலின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவது. அருட்செல்வம் ஆன்மாவிற்கு ஊட்டமாகும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)'


என்ற குறளில் தீய வழியில் அல்லாமல் முறையறிந்து நேர்மையாக செயல் புரிந்து தேடிய செல்வம் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் என்கிற கருத்தை பார்க்கிறோம்.லாலோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே குருஅருளுக்கு முழுவதும் தகுதியானவர்கள்.

ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் பிறன்கையை எதிர்பார்க்காமல் வாழ்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுவதுண்டு.அத்தகைய நிலைமையில் பிறரிடமிருந்து பெருகின்ற உதவி ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக உதவாவிட்டாலும் பாதை பிறழாது இருக்கலாம். எப்படி குடிநீரில் ஊட்டச்சத்து இல்லாவிடினும் அது உடலுக்கு அத்தியாவசியமோ அது போல சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரத்தலும் ஈகையும் ஒரு முக்கிய அங்கம்.

துறவிகளும், வறியவர்களும் அபலைகளும் இரத்தல் மூலமே ஈகைக்கான வாய்ப்பை பிறருக்கு அளிக்கிறார்கள்.
இதை திருவள்ளுவரும் அங்கீகரிக்கிறார்.

இரக்க இரக்கத்தக்கார்க் காணின், கரப்பின்
அவர்பழி; தம்பழி அன்று (1051)
[யாசித்தலுக்கு ஏற்றவரிடம் சென்று யாசிக்கலாம்.அவர் மறைத்து இல்லை என்றால் அது அவருக்கே பழியாகும்,யாசிப்பவருக்கு இல்லை]

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
[பொருளற்ற ஏழையின் கடும்பசியைத்தீர்ப்பதே தன் செல்வத்தை தனக்குப்பின் உதவுவதற்காக சேர்த்து வைக்கும் சிறந்த இடமாகும். ]

பாலும் நீரும் உடலுக்கு இன்றியமையாதது போல ஈகையும் இரத்தலும் உலகில் அற வாழ்க்கைகு இன்றியமையாதது.

ஆனால் பிறரை துன்புறுத்தி பயனடைபவர் போக்கு அசுரகுணத்தை சேர்ந்தது. அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவை பிறரின் இரத்தத்தை குடிப்பதற்கு சமானமாக சொல்கிறார் கபீர்.

குருநானக் இந்த நிகழ்ச்சி மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எவனொருவன், பாகோ போன்ற சித்தசுத்தி இல்லாதவர் கையால் உணவை ஏற்பானோ அவனது சித்தமும் அன்னமிட்டவனின் சித்தத்தைப் போலவே அசுத்தம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. (இதை எழுதும்போது இதை ஒட்டிய இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது. பதிவின் நீளம் கருதி அதை பின்னொரு சமயம் பார்ப்போம்).

நம் எண்ண அதிர்வுகள் எந்த அளவுக்கு பிறரை பாதிக்கக்கூடும் என்பதையும் அதன் காரணமாக நல்ல எண்ணங்களை வளர்ப்பதிலும் காப்பதிலும் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பும் இதன் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார் மகான் குரு நானக்.