Sunday, February 03, 2008

தூங்காதே தம்பி தூங்காதே

இறைவனின் படைப்பில் இரண்டு விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் உலகமே ஒரு பெரிய மனநோய் மருத்துவமனை போல் இருந்திருக்கும். அது என்ன இரண்டு விஷயங்கள் ? மறதியும் தூக்கமும். இவையிரண்டையும் மிகப் பெரிய வரமாகக் கருதுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள். தூக்கம்,சக்தியின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே தேவி மஹாத்மியம் அவளை “யா தேவி ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”என்று போற்றுகிறது.

ஆனால் 'ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை'என்று புலம்புவோர்களுக்கு இடையே,'சே சனியன் புடிச்ச தூக்கம்! சீக்கிரம் எழுந்திருக்கவே முடியல'என்று திட்டிக் கொண்டே அரக்க பரக்க காலையில் பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க ஓடுபவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். வயது கூடக் கூட தூக்கம் குறைந்த பெருசுகள், தூங்குவதே சுகம் என்று காலை பத்து மணியானாலும் படுக்கைவிட்டு எழாத இளசுகளை கண்டு பொருமுகிற காட்சி இன்று வீட்டுக்கு வீடு காணலாம். பலருக்கு தைராய்ட் போன்ற சுரப்பிகளின் குறைபாடு. சுறு சுறுப்பில்லாமல் எப்போதும் ஒரு தூங்கி வழியும் நிலை. போதாத குறைக்கு ‘கால் சென்டர்'போன்ற புது குழப்பங்கள் வேறு. மாறிவரும் வாழ்க்கை முறையில் மன அழுத்தம்தான் மிச்சம்.

தியானம் செய்தால் மனஅழுத்தம் குறையும். அதனால் இரவில் தூக்கம் நன்றாக வரும் என்று யாரோ சொல்ல தியான வகுப்பில் சேர்ந்தாச்சு. கழுத்தும் முதுகுதண்டும் ஒரே நேர்கோட்டில் வருமாறு சுகாசனத்தில் மிடுக்காக அமர்ந்து மூன்றுமுறை ஆழ்சுவாசம் செய்து பின், மெல்லிய குரலில் கட்டளைகள் தரும் மாஸ்டர் ரிலாக்ஸ்..ரிலாக்ஸ் என்று சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே நம்மை மறக்கும் ஆனந்தம் பற்றிக்கொள்கிறது. அடுத்துத் தெரிவது கோலால் முதுகில் ஒரு மெல்லிய தட்டு. கண் திறந்தால் புரிகிறது; பழங்கள் பழுத்த மரத்தின் கிளைகள் வளைந்து தாழ்ந்து விடுமாமே அப்படி, தலையும் மார்பும் வளைந்து பூமியை தொடும் நிலையை அடைந்து விட்டிருப்பது. தியானம் பழுக்கவில்லை, தூக்கம் பழுத்து விட்டது. 'பாழும் தூக்கம்'வேண்டாத இடத்தில் வந்து எல்லோர் முன்னும் மானத்தை வாங்குகிறது.

இதையே “The spirit is willing but the flesh is weak" என்று பைபி்ள் சொல்கிறது. ஏசுநாதர் பீட்டரையும் அவனுடன் இருந்த இரு சகாக்களையும் விழித்திருக்கும்படி பலமுறை கேட்டுக் கொண்ட பின்னரும் அவர்கள் இயலாமை கண்டு அவர் கூறுவதாக வரும் வாசகம் இது. (மத்தேயு-26:42)

இப்படி புத்தியும் உடலும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்காத நிலையில் இறைவனின் சிந்தனை எப்படி கைகூடும்?

தேகத்தில் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளபோதே ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள வேண்டும். வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் மனம் சண்டி மாடு போல பணியாது, உடல் ஒத்துழைக்காது என்பது அனுபவம் மிக்க ஞானிகளின் வாக்கு.

பிரம்மமுஹூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து செய்யப்படும் பிரார்த்தனையும் தியானமும் ஆன்ம பலம் சேர்க்கும் என்று எல்லா ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்கள் இடைவிடாமல் போதித்தாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்காகவே முடிகிறது. தன் பங்குக்கு கபீரும் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறார்.

कबीरा सोया क्या करे, उठि न भजे भगवान ।
जम जब घर ले जाएँगे, पडा रहेगा म्यान ॥


கபீரா சோயா க்யா கரே, உடி ந பஜே பக்வான் |
ஜம் ஜப் கர் லே ஜாயேங்கே, படா ரஹேகா ம்யான் ||


துஞ்சுவான் கபீர் என் செய்ய, விழித்தும் விளியான் பரமனை
அஞ்சும் போய்த் துஞ்சிய பின், விழைவார் இல்லை இக்கூட்டினை

(துஞ்சுதல் =உறக்கம், விழித்தல்= கண் விழித்தல், விளியான் =கூப்பிட மாட்டான், பரமன்= இறைவன், விழைதல்= விருப்பப் படுதல்)

இன்னும் சற்று மோனை அதிகம் வரலாமென்றால்

துஞ்சுவான் கபீரென் செய்ய, துஞ்சரித்தும் துதியான் பரமனை
அஞ்சும் போய்த் துஞ்சியப் பின், துதிப்பாரில்லை இக்கூட்டினை
(துஞ்சரித்தல்= கண் விழித்தல்; துதித்தல்=போற்றுதல்)

'அஞ்சும் போய் துஞ்சுதல்'என்பது மரணத்தைக் குறிப்பதற்காக வந்தது. ஐந்து புலன்களும் அடங்கிப் போகும் பெரும் தூக்கம்.

காலாகாலத்தில் எழவில்லைதான்,போகட்டும். ஆனால் எழுந்த பின்னாவது இறைவனை துதி செய்கின்றனரா மக்கள். அதற்கும் நேரமில்லை. காலன் அழைத்துப் போகும் காலத்தில் உடன் வரக்கூடிய சற்கருமங்களை சம்பாதிக்காமல் போனால் எதற்கு பிறவி ? உயிர் போனபின் இந்த உடலுக்கு மதிப்புதான் ஏது என்று வினவுகிறார் கபீர்.

ஆனால் அருளாளர்கள் உலகம் எப்போது அடங்கும், எப்போது ஏகாந்தத்தில் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்போடு இரவை எதிர் நோக்கி யிருப்பார்களாம். இராமலிங்க அடிகளுக்கும் தூக்கம் போய் விட்டது. இறைவனே அவனை எழுப்பி அருள் செய்கிறானாம். அந்த பேரின்பத்தை தன்னைப் போலவே யாவரும் பெற வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாதி இரவில் எழுந்தருளிப்
பாவியேனை எழுப்பி யருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது;என் போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே

அடுத்து வரும் ஒரு ஈரடியிலும் நாளுக்கு நாள் நம்மை துரத்தும் காலனை கபீர் நினைவூட்டுகிறார். கடவுளை துதிக்காமல் போன நேரம் விரயமே. ஆகையால் மீதமுள்ள நேரத்தையாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கம் அவர் வரிகளிலே தெரிகிறது.

नींद निशानी मौत की, उठ कबीरा जाग ।
और रसायन छांडि के, नाम रसायन लाग ॥


நீந்த் நிஷானீ மௌத் கீ, உட் கபீரா ஜாக் |
ஔர் ரசாயன் சாடி கே, நாம் ரசாயன் லாக் ||


தூக்க மென்பது காலனின் சுவடு, கபீரா விரைந்து விழித்திடு
ஊக்கமோ டருந்து நாமரசம், விட்டுவிடு வேறு விடயரசம்
(விடயம் =விஷயம், ரசம்= ருசி, இன்பம்; புலனின்பங்கள்.)

'உட்' என்பது எழுந்திடு என்று பொருள் படும். ‘ஜாக்' என்பது உணர்வால் விழித்துக் கொள்வது அல்லது புரிந்து கொள்வது. உலக விஷயங்களில் ஏற்படும் நாட்டத்திலிருந்து விடுபட இறைவன் நாமத்தை துணை கொள்ள வேண்டும். அதற்கான காரணத்தை திருமூலர் பொருத்தமாகச் சொல்கிறார்.

நெஞ்சு நிறைந்து அங்கிருந்த நெடுஞ் சுடர்
நஞ்செம் பிரான் என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே

(நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் நம் செம்பொருளான சிவம்; அஞ்சு=ஐம்புலன்கள்; அற்று விட்டது =கட்டுப்பாடு இல்லாமல் போனது)

இரவில் தூங்கச் செல்லும் வரையிலும் இறைவனை தொழுது கொண்டே இருங்கள். அப்படிச் செய்யத் தவறினால் யானையின் பலத்துடன் ஐம்புலன்களும் நம்மை அலைக்கழித்து விடும் என்கிறார். “விழித்தும் விளியான் பரமனை” என்று கபீர் கவலைப் படுவதற்கான காரண மூலம் நமக்கு புரிகிறது.

இரட்டை மாடுகளால் இழுக்கப்படும் வண்டி, இந்தப் பிறவி. மனம் புத்தி இவையிரண்டும் தான் இரட்டை மாடுகள். இரண்டிற்கும் மூக்கணாங்கயிறு உண்டு, வைராக்யம் மற்றும் விவேகம்.

ஆரம்பக் காலத்திலிருந்தே ஜோடி மாடுகளாக்கி பழக்கினால்தான் பயணத்திற்கு பயன்படும். சேர்ந்து பழகாத மாடுகள் வண்டி இழுக்கவோ ஏர் உழவோ பயன்படாது. விவேகத்தையும் வைராக்கியத்தையும் முறையாக பயன்படுத்தி அவற்றை பழக்க வேண்டும் என்பது பெரியவர்கள் நமக்கு சொல்லி வைத்திருக்கும் வழிமுறை. மனம் தன் போக்கில் ஐம்புலன்கள் துணையோடு பலவித வாசனைகளுக்கு அடிமையான பின்பு புத்தி அதை வழிபடுத்த முனைந்தால் அது ஒத்துழைக்குமா? எனவே தான் 'உட் கபீரா,ஜாக்' (எழுந்து உணர்ந்திடு) என்று கபீர் ஆதங்கத்தோடு நம்மை அறியாமையிலிருந்து தட்டி எழுப்புகிறார்.

20 comments:

  1. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே....

    இந்தப் பாட்டு நினைவுக்கு வருதுங்க.

    ReplyDelete
  2. //தேகத்தில் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளபோதே ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள வேண்டும். வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் மனம் சண்டி மாடு போல பணியாது, உடல் ஒத்துழைக்காது//
    நம்மில் பலருக்கு, ஆன்மீகமா - அது கடைசி காலத்துக்கானதே - ஆன்மீகமா, அதற்குள்ளா - என்பவர்கள்தான் அதிகம்!

    மோனையுடன் கூடிய முதல் ஈற்றடியின் இரண்டாவது செய்யுளும் மிக்க நன்றாகவே வந்திருக்கிறது.

    ReplyDelete
  3. துளசி டீச்சர் நல்வரவு, உள்குத்து ஏதுமில்லையே :) ஏன்னா நான் ஒரு குழாய் விளக்கு. இன்னொரு தூங்க வைக்கிற பாடல்'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, காலமிதை தவறவிட்டால் தூக்க மில்லை மகளே'. 'தூங்காத கண்ணொன்று உண்டு' அப்படீன்னு ஆரம்பிக்கிற பாட்டொண்ணும் இருக்கு. முத்தமிழுக்கு வாங்க. ஒரு 'தூக்கம்'தொடர் போட்டுறலாம் :))

    ReplyDelete
  4. நன்றி ஜீவா.
    //இரண்டாவது செய்யுளும் மிக்க நன்றாகவே வந்திருக்கிறது //

    எனக்கும் அதுதான் பிடித்திருந்தது. ஆனால் பலருக்கும் “துஞ்சரித்தல்” என்பதன் பொருள் உடனடியாக பிடிபடாது என்பதால் அதற்கு இரண்டாம் இடம் கொடுத்தேன்.

    ReplyDelete
  5. எழு என்று கபீர் குறிப்பிடுவது அஞ்ஞான இருள் அல்லது

    உறக்கத்திலிருந்து எழுந்து ஞானத்தினை அடைய

    முடியாமல் தடுக்கும் காம, க்ரோத, மத மாத்ஸர்ய

    மனோபாவங்களை அழித்து ஈசனை நாட வழி

    தேடுவதுதான்.
    கபீரின் மற்றும் இரு பாடல்கள் இதைத்

    தெளிவாக்குகின்றன்.
    जागहु रे सोवहु कहा ...
    जम बटपारै रून्धे पहा
    जागि चेति कछु करी उपाई, मोटा वैरी है जमराई..... (351)
    ஏ மனிதா! ஏன் அஞ்ஞான நித்திரையில் உறங்கிக்கொண்டு

    இருக்கிறாய் ? ஏன் விழித்துக்கொள்ளாமல் இருக்கிறாய்?

    யமன் போன்ற திருடன் உறக்கம். உனது வழி எது என

    புரிந்துகொள்ள தடையாக இருக்கிறான்.
    எழுந்துகொள். ஏதேனும் நன்றாக யோசித்து உபாயம் செய்.

    जाग्या रे नर् नीन्द नसाई,
    चित चेत्यो च्य्म्तामणि पाई
    सोवत सोवत बहुत दिन बीते, जब जाग्या तसकर गये रीते
    जन जागे का ए सहिनाण विष से लागै बेद पुराण‌
    कहै कबीर अब सोवै नाहि राम रतन पाया घट माहि.. (352)

    ஏ மனிதனே ! நீ மோகம் ஆகிய நித்திரை விலகி விழித்து,

    உனது சித்தமதில் வேகத்தினைத் தருவாயாகில்
    அப்போது நீ விரும்பும் சிந்தாமணி கிடைத்துவிட்டது எனப்

    புரிந்து கொள். தூங்கித் தூங்கிப் பல நாட்கள்
    ஆகிவிட்டன. நீ விழித்துக்கொள்வதால், க்ரோதம் போன்ற

    திருடர் தம் வேலையைச் செய்ய முடியவில்லை.
    ஹரியின் தோன்றல்களானவர் விழித்துக்கொண்டனர்

    என்பதன் சின்னமே வேதம், புராணம் ஆகியவை அவனுக்கு

    விஷமாகத் தோன்றி விடும். கபீர் சொல்கிறேன்; நான்

    தூங்கவில்லை. நான் ராமன் எனும் ரத்தினத்தை

    அடைந்துவிட்டேன்.

    (சித்தசுத்தியினால், வைராக்கிய நிலை கொண்டு, பர

    ஞானம் அடைந்தோருக்கு வேதம், புராணம் எல்லாமே

    விஷம் போன்றது தான்.)

    உறக்கம், தூக்கம் எனக் கபீர் குறிப்பிடுவது பெளதீக (

    biological ) தூக்கத்தை அல்ல என்றே நான் நினைக்கிறேன்.
    சொல்லப்போனால், நாம் எல்லாம் ஆழ்ந்த நித்திரையில்

    சுஷுப்தி என்னும் நிலையில் (எல்லா புலன்களின் செயல்

    பாடுகளும் அற்ற நிலையில்) பிரும்மனுடன் இணைந்து

    விடுகிறோம். ஆத்மனுக்கு பிரும்ம சாக்ஷாத்காரம்

    கிடைக்கிறது என்று அறிந்தவர் கூறுவர்.

    விழித்திருக்கும்போதும் இந்த நிலை பெற வேண்டின், உலக

    விவகாரங்களிலுந்து நீங்கியிருத்தல் முதற்கண் அவசியம்.

    இதையே தாயுமானவர் கூறுவார்:

    "தூங்கிவிழித் தென்னபலன்
    தூங்காமல் தூங்கி நிற்கும்
    பாங்கு கண்டா லன்றோ
    பலன் காண்பேன் பைங்கிளியே.."
    பலன் காண்பேன் பைங்கிளியே.."

    மற்றும்
    "தூங்காமல் தூங்கிச் சுகப் பெருமான் நின் நிறைவில்
    நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ ?"

    தூங்காமல்: =எனது யோகமார்க்கத்தில் நிலைத்து நின்று
    தூங்கி = எனது ஐம்புலன்களெல்லாம் அழிந்த நிலையில்.

    அடுத்து,
    "முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
    முற்றுமுணர்ந்த பின்னும்
    தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
    தாழ்வுற்று நிற்போமோ ?"

    எனப் பாரதி சொன்னானே..அந்த தாழ்வுற்ற நிலை

    உறக்கம்.தூக்கம். ஐம்புலன்களின் ஆதிக்கத்தினால்
    தன்னை வென்றாளாது நிற்கும் நிலை.

    கருத்து சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  6. நன்றி சூரி ஐயா,
    நீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு தோஹாக்களும் என்னிடம் உள்ள தொகுப்பில் இல்லை. வலைப்பக்கங்களில் இருந்தால் இணைப்பு சுட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    முதலாவதின் உத்தேசமான மொழிபெயர்ப்பு :

    //जागहु रे सोवहु कहा ...
    जम बटपारै रून्धे पहा
    जागि चेति कछु करी उपाई, मोटा वैरी है जमराई //

    விழுமின் விழுமின் என்னுரை கேண்மின்,
    எமகிங்கரர் ஓரும் கணக்கை எண்மின்

    விழுமின் பதைமின் தேறும் வழி பார்மின்,
    எமனே நும் விழுப்பகை அதை அறிமின்.

    ReplyDelete
  7. கபீர் இயற்றிய அனைத்துமே தோஹா எனப்படும் மீட்டரில் இல்லை. ஆக, கபீர் இயற்றியவைகளுக்கு
    தொகுத்துப் பொருள் சொன்னவர் பொதுவாக எல்லா பாடல்களையும், ஸாகி, பத, ரமைனி, என மூன்றாகப்
    பிரித்துள்ளார்கள். நான் குறிப்பிட்டவை இரண்டுமே பத் ( padh )

    நிற்க.கபீரின் எல்லா பாடல்களையும் அதன் பொருட்கேற்ப பிரித்து ( ஆன்மீகம், உலக இயல், சமுதாய இயல்) ் எளிய நடையில் தமிழில் பாடல்களாக நீங்கள் மொழி பெயர்த்தால், அது நமது சமுதாயத்திற்குச் செய்யும் சிறந்த
    தொண்டாக அமையும் என்பது என் கருத்து.

    முன்னவனே முன் நின்றால், முடியாத பொருளதோ ? என்பர். யத் பாவம் தத் பவதி. You become What you believe in என்கிறது உபனிஷத். இறைவன் அருளினால், இதை நீங்கள் எடுத்துச் செய்தல் வேண்டும்.
    சிவ.சூரிய நாராயணன்.
    சென்னை.

    ReplyDelete
  8. இதையே பட்டிணத்தாரும் "காலன் வருமுன்னே கண் பஞ்சடையுமுன்னே.... குற்றாலத்தானைக் கூறு என்றார்

    ReplyDelete
  9. //நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
    ஓதி முடியாது;என் போல் இவ்
    உலகம் பெறுதல் வேண்டுவனே//

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு வள்ளலார் உலகத்துக்கும் சேர்த்துக் கேட்டிருக்கிறார். வள்ளலார்தான், அதான் இப்படி எல்லாம் நினைக்க முடிஞ்சது.

    ReplyDelete
  10. ரொம்ப ஆழ்ந்து படிச்சு, கபீரையும், வள்ளலாரையும், திருமூலரையும் இணைச்சுக் கொண்டு வந்திருக்கீங்க, நல்லா உள்வாங்கினால்தான் முடியும், அருமையா எடுத்துச் சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  11. முத்தமிழுக்கு வாங்க. ஒரு 'தூக்கம்'தொடர் போட்டுறலாம் :))
    ?????????????????????? முத்தமிழில்? என்ன பேரில்?

    ReplyDelete
  12. உண்மையில் நான் தான் குழல் விளக்கு! :((((((

    ReplyDelete
  13. நன்றி தி.ரா.ச.

    நன்றி கீதா மேடம்.

    //?????????????????????? முத்தமிழில்? என்ன பேரில்?//

    க்ர்ர்ர்ர்ர்...நெஜ‌ம்மா தெரியாதா ! அண்ணா தி.ரா.ச‌ வை கேளுங்க‌ :))

    ReplyDelete
  14. க்ர்ர்ர்ர்ர்...நெஜ‌ம்மா தெரியாதா ! அண்ணா தி.ரா.ச‌ வை கேளுங்க‌ :))

    முதல்லே "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"க்கு ராயல்டி வேணும், அப்புறம் திராச, என்னிடம் அதெல்லாம் சொல்ல மாட்டார்! :P நீங்களே சொல்லிடுங்க, மண்டை காய்ஞ்சுடும் போலிருக்கே? :P :P

    ReplyDelete
  15. ///முதல்லே "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"க்கு ராயல்டி வேணும் ///

    என்னப்பனே ! தில்லை நடராஜா, சிவகாமி நேசா, உமையாளீசா, அம்மையப்பா !!
    வழி சொன்னாலும் கேட்காதவர்களுக்கு நீயே வழி சொல்லப்பா. ராயல்டியெல்லாம் கேட்டு பயமுறுத்துறாங்களே. ஏழை என் செய்வேன்? :))

    ReplyDelete
  16. எதுக்கு எல்லாரும் என் மண்டையை இப்படி உருட்டறீங்க! நான் பாட்டுக்கு சாம்பசிவமேன்னு இருக்கேன்.கிர்ர்ர்ர்ர்ர்ர் தெரியாதா. சரி நஞ்சன்கோடு பல்பொடி தெரியுமா "நறநற"ன்னு இருக்குமே

    ReplyDelete
  17. ///எதுக்கு எல்லாரும் என் மண்டையை இப்படி உருட்டறீங்க! ///

    அதுதான் மூலவனிடம் பொறுப்பை விட்டாச்சே. நீங்க டென்ஷன் ஆயிடாதீங்க. இந்நேரம் அவரு புரிய வைச்சிருப்பாரு. :))

    ReplyDelete
  18. என் மனசுக்குள்ள ஏத்திக்க வேண்டிய செய்திகளை சொல்லும் நல்ல பதிவு :) மிக்க நன்றி.

    ReplyDelete
  19. தொடர்ந்து கடந்த இரண்டு மணி நேரமாக பல பதிவுகளை படித்துவிட்டேன். எதற்கும் பின்னூட்டம் இடவில்லை. விடியற்காலையில் எழுந்திரு என்று சமீப காலமாக பல இடங்களில் பல விதமாக என் கிரிதாரி சொல்லி பார்க்கிறான். :)
    thanks for all your posts. i am liking every post of yours.
    ~
    Radha

    ReplyDelete
  20. Welcome Shri Radha

    Thanks for the compliments. Very nice to that know you like the essays on Kabir.
    Welcome again.
    Thanks for the feed back

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி