Thursday, May 22, 2008

அன்னை எத்தனை அன்னையோ !

ஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதைகள் அவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தின. பல வருடங்களுக்குப் பின் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த அவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. இது பலரும் அறிந்திருக்கக் கூடிய கதைதான்.

கவி காளமேகம் வைஷ்ணவத்திலிருந்து சைவத்திற்கு தன் பக்தியை மாற்றிக்கொண்டவர். ஒருநாள், பெருமழையில் வழியில்லாமல் திருக்கண்ணபுரக் கோவிலில் ஒதுங்க முற்பட்டார். அங்கிருந்த வைஷ்ணவர்கள் அவரிடம் ''கண்ணபுரத்தானை உயர்த்திப் பாடுவதானால் உமக்கு இடமுண்டு '' என்று வழி மறித்தனர்.'ஆஹா அதற்கென்ன' என்றவர் “கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்'' என்று முதல் அடியை சொல்லி உள்ளே புகுவதற்கு வழி செய்து கொண்டார். மழை விட்டதும் கிளம்பும் போது தன் குறும்பைக் காட்டினார்.

கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலும் யான் அதிகம்; ஒன்றுகேள்-முன்னமே

உன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை.

என் பிறப்பு எண்ணத் தொலையாதே !


இப்பாடலைத் தொடர்ந்து இன்னும் ஒரு பாடல் இருந்தது. அதில் “நான் எண்ணிறந்த பிறவிகளில் குடித்திருக்கும் தாய்ப்பால் உன் பாற்கடலினும் பெரிது“ என்பதாக பொருள் வரும். அப்பாடல் மதுரை தமிழ் திட்ட தொகுப்பில் காணக் கிடைக்கவில்லை இந்த இரண்டாம் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

எப்படியோ! காளமேகம் நம்மையும் கூட பெருமாளை விட பெரிய ஆளாக்கி விட்டார். ஏனெனில் நாம் கூட காளமேகத்திற்கு நம் பிறப்புகளின் எண்ணிக்கையில் சளைத்திருக்க மாட்டோம். ஹூம் ! எப்படியெல்லாம் பெருமை கொள்ள முடிகிறது மனிதனால் !!

வெறும் எண்ணிக்கையில் பெருமை கொள்ளும் விஷயமா இது ? இன்பம் தரும் விஷயமாக இருந்தால் பெருமை கொள்ளலாம். பிறவி என்பதே துன்பமயமானது என்னும் போது ‘பிறவிப் பெருங்கடலை நீந்தும்' வகையறியாது காலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.

அதனால் கபீர் போன்ற ஞானிகளுக்கு உலகமக்கள் பிறப்பை கொண்டாட்டத்திற்கான காரணமாக கொள்ளும் போது வருத்தம் மேலிடுகிறது.

बेटा जाये क्या हुआ, कहा बजावै थाल ।
आवन जावन होय रहा, ज्यों कीडी़ के नाल ॥

பேடா ஜாயே க்யா ஹுவா, கஹா பஜாவை தால் |
ஆவன் ஜாவன் ஹோயி ரஹா, ஜ்யோன் கீடீங் கே நால் ||


பிறந்தான் குமரன் என்று, குமண்டை குணலி எதற்கு
பிறந்து மடிவன கீடம், நெளியும் சலதியில் பாரங்கு


(குமண்டை=செருக்கிய செயல், குணலி=ஆரவாரக் கூத்து, கீடம்= புழுக்கள், சலதி=சாக்கடை)

சாக்கடையில் பிறக்கின்ற புழுவும் கூட உண்டு, உறங்கி(?) இனப்பெருக்கம் செய்து பின் மடிகிறது. அதை விட எந்த வகையில் நம்முடைய இந்த பிறவி உயர்ந்ததாகிறது ?

..............................................
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்

சொல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்....
(சி்வபுராணம்)

என்று மாணிக்க வாசகர் இறைவன் படைப்பின் தன்மை குறித்தும் மனிதனின் குறிக்கோள் குறித்தும் ஒருங்கே சொல்லிவிடுகிறார்.

சங்கரரைப் போல பிறவியிலேயே ஞானியாக இருக்க முடியாதுதான். அட ராமானுஜரைப் போலவோ, இராகவேந்திரரைப் போலவோ இல்லறத்தில் இருந்து பின் குரு சேவையால் உயர்ந்து வழிகாட்டிகளாக முடியாவிட்டாலும் பரவாயில்லை. நந்தனார் போலவோ ஆண்டாள் போலவோ பக்தி செய்ய இயலாவிட்டாலும் போகட்டும். வயதுக்கேற்ற முதிர்ச்சியே இல்லாமல் 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத பிறவி' களைப்பற்றி என்ன சொல்வது ?

கண்களில் திரைப் பூத்து பார்வை மங்கிவிட்டது. செவிகளின் கேட்கும் திறன் குன்றி விட்டது. தலையில் வெள்ளிக்கம்பிகள் போல நரைமயிர் ஒளிர்கின்றது. ஆயினும் மன்னன் யயாதி போல உலக சுகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் ஆசை விடுவதில்லை. அப்படிப் பட்டவர்களை கண்டு கபீருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.

आंखि न देखे बावरा, शब्द सुनै नहि कान ।
सिर के केस ऊजल भये, अबहूं निपट अजान ॥


ஆன்கி ந தேகே பாவ்ரா, ஷப்த் சுனை நஹி கான் |
ஸிர் கே கேஸ் ஊஜல் பையா, அப்ஹூ நிபட் அஜான் ||


கண்ணிலே ஒளியும் மங்குது, செவியிலே ஒலியும் மெலியுது
தலையிலே நரையும் ஒளிருது, கடையிலே பேதமை நிற்குது

(கடையிலே= மரணகாலத்தில், பேதமை=அஞ்ஞானம்)

மாற்று :
ஒளியிழந் தனவே கண்கள், செயலிழந் தனவே செவிகள்
வெளியே றும்வழி தேடார்,பின்னும், வெளிற்முடி வெளியாரே


(வெளியேறும் வழி= முத்திக்கான வழி; தேடார் = தேட மாட்டார்கள்; வெளிறு=வெண்மை; வெளியார்= அறிவற்றவர்கள் )

ஒரு புகழ் பெற்ற பெண், ஆங்கில, உபன்யாசகர் சொன்ன ஒரு நிகழ்ச்சி. அவரது அமெரிக்க சொற்பொழிவுகளுக்கு ஏகக் கூட்டம். பாதிக்கு மேல் தமிழ் பேசுபவர்கள். ஒரு முறை நிகழ்ச்சி துவங்க இன்னும் அவகாசம் இருந்தது. பார்வையாளர் இருக்கையில் ஏதொவொரு பின் வரிசையில் சொற்பொழிவாளர் அமர்ந்திருக்கிறார். அவர் முன் அமர்ந்திருந்திருந்த இரு தமிழ் மூதாட்டிகள் ஏதேதோ பேசிக் கொள்வது இவர் காதில் விழுகிறது. அப்போது ஜீன்ஸ் பாண்ட் அணிந்த ஒரு இளம் பெண் இவர்களை தாண்டிச் சென்றாள். பேச்சை பாதியிலே நிறுத்தி, அவள் போன திசையை பார்த்தபடியே ஒரு மூதாட்டி சொன்னது

“அடுத்த ஜென்மத்திலாவது அமெரிக்கால பொறந்து ஜீன்ஸு, ரேபான் க்லாஸ் மாட்டிகிட்டு சுத்தணும்”.

!!!!!!!

ஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.

இவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடும் பொழுது நாம் வெளிப்படுத்திக் கொள்வது நம் மன முதிர்ச்சி இன்மையையே.

கழிந்துபோன இளமை, ஆனால் முடிவில்லாத புதுப் புது ஆசைகள். பிறப்பென்னும் பிணியை தொடர வைக்கும் சங்கிலி. நம்முடைய இந்த நிலை கண்டு பெரியவர்கள் வேறென்ன செய்ய முடியும் ? கபீர் போலவும் பட்டினத்தார் போலவும் ஒரு பாட்டை பாடி வைத்துவிட்டு போகத்தான் முடியும்.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்

இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ

என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.
(திரு ஏகம்பமாலை)


அருகில் காணப்படும் ஓவியம் இறுதி தீர்ப்பு நாள் பற்றிய ஓர் ஓவியம். அதைக் கண்டபோது கபீர் சொன்ன ”சலதியில் நெளியும் புழுக்கள்” நினைவுக்கு வந்தது. ஓவியர் கிட்டோ,(Gitto) 16 ஆம் நூற்றாண்டு.

Monday, May 05, 2008

விளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்

கோல்கொண்டா பிரதேசத்தின் சுல்தான் தானி ஷா இரவு உணவு முடித்து தாம்பூலம் தரித்து சயனிக்கும் வேளை. இரண்டு இளைஞர்கள் அவனை எழுப்பி, கோபண்ணா என்பவன் அரசாங்கத்திற்கு பட்டிருக்கும் கடனைத் தீர்க்க வந்திருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் யார், எப்படி உள்ளே வந்தனர் என்ற கேள்வியெல்லாம் எழுவதற்கு பதிலாக அவர்களின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கி அவர்கள் சொன்னதற்கெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டவன் போல் செயலாற்றுகிறான் சுல்தான். தங்க நாணயங்களை எண்ணி கணக்கு ஒப்புவித்தபின் சுல்தானிடம் ரசீது வேண்டினர்.

எழுதும் மை வைக்கப்பட்டிருக்கும் இடமா அது, அதுவும் அந்த அகால வேளையில்! 'உங்கள் தாம்பூல எச்சில் சாயத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள் போதும்' என்று சொல்லி ரசீது பெற்று செல்கின்றனர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு கோபண்ணாவுக்கு திடீரென்று விடுதலை. அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை பத்ராசலத்து ராமன் கோவில் கட்டுவதற்காக செலவிட்டு விட்டார் என்று தண்டனை அனுபவித்து வந்தார். பணத்தை திருப்பிக்கட்டும் வரையில் சிறைவாசம் விதிக்கப் பட்டிருந்தது.
இவர் ஆந்திர மாநிலத்து மணிவாசகப் பெருமான்.

மறுநாள் காலை பத்ராசலராமன் கோவில் ராமன் காலடியில் அந்த ரசீது காணப்பட்டது. பக்தனுக்காக ஒரு மானுடனின் எச்சிலையும் சுமந்தான் இராமன். கோபண்ணாவின் பக்தியை உணர்ந்த தானி ஷா அந்த நிதியை மீண்டும் கோவில் செலவுக்கென கொடுத்து விடுகிறான்.

பத்ராசல ராமதாஸர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கோபண்ணாவுக்கு மனதில் ஒரு சந்தேகம்.

தான் பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன? அதே ராமனின் கருணை இன்னும் முன்பே வந்திருக்கலாமே. பின்னொரு நாளில் அவருக்கு கூறப்பட்ட காரணம், பிந்தைய சென்மம் ஒன்றில் அவர் ஒரு கிளியை பன்னிரெண்டு நாட்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்தாராம். அந்த கிளியின் மனத்துன்பம் இந்த சென்மத்தில் தொடர்ந்து வந்து பீடித்தது என்று அறிந்து கொண்டாராம்.

தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான் நூறு
கோடி கல்பம் சென்றாலும் கோதையே! செய்த வினை
நாடி நிற்கும் என்றார் நயந்து.

என்கிறது நீதி வெண்பா. நம் செய்கைகளின் நல்லதும் கெட்டதும் அதற்குரிய பலனை கொடுக்காமல் விடாது. நிழலைப் போலே பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

करता था तो क्युँ रहा, अब काहे पछताये ।
बोये पेड बबूल का , आम कहा से खाये ॥


கர்தா தா தோ க்யூ ரஹா, அப் காஹே பச்தாயே |
போயே பேட் பபூல் கா, ஆம் காஹா ஸே காயே
||

செய்வினை விளையாட்டு வேடிக்கை, பின்னாலே வேதனையே வாடிக்கை
செய் அதிலே விளைந்ததோ ஆமிலம், பின் இவரும் விழைவரே ஆமிரம்.

(செய்வினை= செய்கின்ற செயல்கள், செய்= வயல்; ஆமிலம்= புளியமரம் ஆமிரம் =மா மரம்)
கபீர் சொல்லும் பபூல் என்பது கருவேல மரத்தை குறிப்பது. சொல் நயத்திற்காக ஆமிரம் ஆமிலம் என்று கையாளப்பட்டிருக்கிறது.

What you sow, so you reap. கருவேல மரத்தை (அல்லது புளிய மரத்தை) வளர்த்து விட்டு பின்னர் அதில் மாங்காய் வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி முடியும் ?
நாம் அனுபவிக்கக் கூடிய சுகதுக்கங்களுக்கான முழு பொறுப்பும் நம்முடையதே. இப்போது வெறுக்க தக்க சூழ்நிலைகளில் இடர்படுகிறோம் என்றால் எப்பொழுதோ அது போன்ற வெறுக்கத்தக்க சூழ்நிலையை பிறர்க்கு நாம் உண்டாக்கியிருக்க வேண்டும், பத்ராசலர் கதையில் கண்டது போல.

மனித உடலை விளைநிலத்திற்கு ஒப்படும் வழக்கம் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது வினைநிலம்.

'ஐவருக்குமாம் ஒரு செய் விளைந்தது....' என்பார் திருமூலர்.

'நெஞ்சப்புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து' ...என்பார் பட்டினத்து அடிகள்

பல்வேறு வினைகளால் வந்திருக்கும் உடல், மீண்டும் நல்ல வினைகளை ஆற்றி பிறவித் துன்பத்திலிருந்து கரை காண்பதற்கான ஒரு வாய்ப்பு. ஆகவே திருவள்ளுவரும் கூறுவார்.

துறப்பார்மன் துப்புர(வு) இல்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அனுபவிக்க வேண்டிய துன்பங்களெல்லாம் அனுபவித்து, அனுபவிப்பதற்கு எதுவும் இல்லாதவன் நிலையான இன்பமாகிய வீடு பேறு அடைய வேண்டிய துறவியாவான்

மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.

நல்ல உழவன் பாடுபட்டு நிலத்தை சீர் திருத்தி நீர்பாய்ச்சி நல்ல விதைகளை ஊன்றி களை பறித்து தனக்கும் சமூகத்திற்கும் உபயோகமாகும் பொருட்களை உற்பத்தி செய்கிறான்.

மனிதன் செய்யக் கூடிய தர்ம காரியங்கள்தான் நல்ல விதைகள். அவன் மனதில் உருவெடுக்கும் தீய எண்ணங்களும் ஒரு வகை விதைகளே. அவைகள் அதிகம் வளர்ந்தால் முறையான பயிரை தலையெடுக்க விடாத களைகள் எனப்படும்.
களைகளை வளர விட்டு பின்னால் துன்பமுறும் பொறுப்பற்ற உழவன் போல் தீய வினைகளின் பலன் வரும் போது அறிவற்றவன் மனம் துன்பத்தை அனுபவிக்கிறது. கபீரின் இன்னொரு ஈரடி அந்த அறியாமையை கண்டு எள்ளுகிறது.

काया खेत किसान मन, पाप पुन्न दो बीब ।
बोया लूनै आपना, काया कसकै जीब ॥

காயா கேத் கிஸான் மன், பாப் புன் தோ பீப் |
போயா லூனை ஆப்னா, காயா கஸ்கை ஜீப் |
|

காயமே நிலம், மனமே உழுநன், பாவ புண்ணியமே வித்தாம்
முன்னதை விதைத்தவன் நீ, பின்னதை என்னோ நோவதாம்

(காயம்=உடல்; முன்னதை = முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள பாவத்தை ; பின்னதை = பின் +அதை = சில தினங்களுக்குப் பிறகு+ செய்த காரியத்தை ; நோவதாம் =வருந்துதல் )

நம் மனதில் ஏற்படும் மிகச்சிறிய எண்ண ஓட்டங்களும் மிக வலுவானவை. அவை அழியாது நின்று அதற்குண்டான வடிவத்தைப் பெறும் என்பதற்கு பாகவதத்தில் பூதனையின் செயலை உதாரணமாகச் சொல்வர்.

உருவில் பச்சிளம் பாலகன், அந்த அந்தண சிறுவன் மகாபலியை யாசகத்திற்காக அணுகிய போது அருகே இருந்த அவன் மகளுக்கு மனதில் தாய்பாசம் பொங்கியது. அவனை அள்ளியெடுத்து உச்சிமுகர வேண்டும் போலிருந்தது. விரைவிலேயே அச்சிறுவனால் தன் தந்தையின் பெருமை சிறுமைபட்ட பொழுது அவனை ஒரேயடியாக அழித்து விடத் துடித்தது அவள் மனது.

மிகச் சிறிய இடைவெளியில் ஏற்பட்ட அந்த மனவோட்டத்தில் எத்தனை வேறுபாடு. இரண்டும் நேரெதிர் துருவங்கள். யுகங்கள் கழிந்தன. இப்போது மகாபலியின் மகள் பூதனை என்ற அரக்கியாக சென்மம் எடுத்திருந்தாள். கம்சனால் ஏவப்பட்ட பூதனை பாலூட்டும் வகையில் குழந்தை கிருஷ்ணனை அழித்துவிடப் பார்க்கிறாள்.

முதலில் எந்த விஷ்ணு அவதார குழந்தையைக் கண்டு எண்ணங்கள் உருக்கொண்டனவோ பின்னர் அதே விஷ்ணுவின் அவதாரத்தில் அதே
எண்ணங்கள் செயல் வடிவம் பெறுகிறது. அவனாலேயே அந்த செயல் வடிவமும் முற்றுப் பெறுகிறது.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அழிவதில்லை. நாமே மறந்து போயிருப்பினும் தக்க காலத்தில் உருப் பெற்று நமக்கு இன்பமோ துன்பமோ கொடுக்கின்றன. இக்கருத்தை சொல்லும் ஒரு நாலடியாரின் பாடலோடு நிறைவு செய்வோம்.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு (110)

குறையாது கூடாது முறை மாறி போகாது. வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும் எவராலும் அதை தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும் போதே உயிர்க்கு விதிக்கப்பட்டு விட்ட உண்மை . இது உணர்ந்து கொள்ளாமல் துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்தி என்ன பயன் ? (பரிவு- வருத்தம் )