Thursday, August 21, 2008

தொண்டராம் தொண்டர்க்குத் ..... தொழும்பன்

நாக் மஹாஷயர்- மூன்றாம் பகுதி

பெரியது கேட்கின் வரிவடிலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது....
என்று தொடங்கும் ஔவையின் பாடலில் எல்லாவற்றிலும் பெரிதாகச் சொல்லி முடிப்பது “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே !”

ஏனென்றால் அந்த பரம்பொருளே தொண்டர் உள்ளத்து ஒடுங்கியவன்.

ஆகையால் யாவரிலும் இறைவனைக் கண்ட நாக் மஹாஷயர் தொண்டர்களுக்கு செய்யும் சேவையையே இறைவனுக்கு செய்யும் சேவையாகக் கொண்டார். அவருடைய மனநிலையை கபீரின் வார்த்தைகளில் வடிக்க வேண்டுமானால்;

दास कहावन कठिन है , मैं दासन का दास ।
अब तो ऐसा होय रहूं, पांवतले की घास ॥


அடியவன் என்பது கடினமே, அடியவர்க்கும் யான் அடியனே |
அடிப்புல்லாய் அவரடி கிடப்பினும், தன்ய னாவேன் ஐயனே ||

(தன்யன் = பாக்கியசாலி ; ஐயன் = தலைவன், இறைவன்)


”பாவ்தலே கீ காஸ்” என்பது காலடியில் மிதிபடும் புல் என்று பொருளாகும்.
இறைவனுடைய உண்மையான அடியவன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கில்லையாதலால் அது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அவனுடைய உண்மையான அடியவர்களின் காலடியில் கிடக்கும் புல்லாக இருந்தாலும் அதை பாக்கியம் என்று உணர்வேன்.

கபீரின் கூற்றிற்கு ஏற்ப இருந்தது அவர் வாழ்க்கை. எந்த ஒரு இடத்திலும் அவர் தனக்கென ஒரு முக்கியத்துவம் எதிர்பார்த்ததில்லை.யாவரும் அமர்ந்திருக்க இவர் ஒரு மூலையில் நின்று கொண்டே காற்றாடியை பிறர்க்காக விசிறிக் கொண்டிருப்பார். தான் கடவுளுக்கு அடிமையென்பது உண்மையானால் எல்லோருள்ளும் இருக்கும் அந்த கடவுளுக்கு அதே அளவு மரியாதை காட்டவேண்டும் என்று உறுதியாக நம்பியதே அதற்கு காரணம்.

சாலையில் போய்கொண்டிருக்கும் பொழுது அவர் யாரையும் தாண்டிச் செல்ல மாட்டார். முன்னே செல்வோரது நிழலையும் மிதியாது நடப்பார். பிறர் அமர்ந்திருக்கையில் சரி சமமாக அமர மாட்டார். வேறொருவர் புகைப்பதற்கு புகையிலை தயாரித்துக் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார். ஆனால் தான் யாவருக்குமாக புகையிலையை தயார் செய்து கொடுப்பார். ”எனக்கு எந்த பெரிய காரியமும் தெரியாது. என்னால் முடிந்த சிறிய சேவை இது தான். அதை தயவு செய்து மறுக்காதீர்கள்” என்று பிறரிடம் வேண்டிக்கொள்வார்.

இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டாலன்றி எங்கும் உணவை ஏற்கமாட்டார். உணவிலே உப்பும் இனிப்பும் அறவே ஒதுக்கினார். உலக விஷயங்களில் அவை ஈடுபாட்டை உண்டு செய்யும் என்று நம்பியதே காரணம்.

ஒரு முறை தன் வீட்டில் குவிக்கப் பட்டிருந்த அரிசி தவிடு கண்டு “உயிரோடு உடல் ஒட்டியிருக்க இதை தின்றால் கூட போதுமே! எதற்காக வீண் ருசிக்கு அடிமையாக வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அடுத்த இரண்டு நாட்களும் நீரை தவிட்டில் கலந்து தவிடையே உணவாகக் கொண்டார். இதைக் கண்ட வீட்டார் உடனே அத்தனை தவிடையும் விற்றுத் தீர்த்தார்கள்.

சுவாமி விவேகானந்தர் அவரை மடத்திலேயே தங்கி விடும்படி ஒரு முறை வேண்டிக்கொண்டார். ஆனால் குரு ராமகிருஷ்ணர் இல்லறத்திலே இருக்குமாறு பணித்திருப்பதால் மடத்தில் ஒரு சன்யாசியாக இருக்க முடியது என்ற தன் இயலாமையை நாக் மஹாஷயர் விளக்கினார்.

நாக் மஹாஷயர் உலகத்தாரின் பார்வைக்கு இல்லறத்தில் இருப்பினும் அவர் மனம் இல்லற சுகத்தை நாடியதில்லை. தந்தையின் வற்புறுத்தலுக்காக இல்லறத்தான் செய்ய வேண்டிய விருந்தோம்பல் போன்ற கடமைகளை நிறைவேற்ற மட்டுமே இரண்டாவது மணம் செய்து கொண்டார்.

அவருடைய ஒவ்வொரு செயலிலும் புலன்களையும் மனதையும் அவர் கட்டியாளுவதில் காண்பித்த தீவிரம் புலனாகிறது. நாக் மஹாஷயர் போன்ற மஹாத்மாக்கள் தாமரை இலை நீர் போல் உலகில் வாழ்பவர்கள். உலகத்தவர்கள் மத்தியில் சாமானியர் போல் இல்லறத்தில் இருந்த போதும் உடன் உறவாடுபவர் குற்றங் குறைகள் இவர்களுக்கு ஒட்டாது. கபீர் அதை, பாம்பு சந்தனமரத்தில் ஊர்வதற்கு ஒப்பிடுகிறார்.

चन्दन जैसा साधु है, सर्पहि सम संसार ।
वाके अंग लपटा रहे, मन मे नाहि विकार ॥


உரவோர் மனமொக்கும் ஈகம், உலகோர் போக்கொக்கும் நாகம் |
உறவாடினும் ஊடே யிருந்து, ஊறுமோ பிறன் தன் விகாரம் ||

( ஈகம்= சந்தனம்; பிறன் தன் விகாரம்= பிறருடைய குற்றம் குறைகள்)


சந்தன மரத்தின் கிளைகளில் விஷமுள்ள நாகம் ஊர்ந்து திரிந்தாலும் அதனுடைய விஷம் மரத்தினுள் ஊறாது. அதன் சேர்க்கையால் சந்தனத்தின் மேன்மை எவ்வகையிலும் குறைவு படுவதில்லை. அதைப்போல் சாதுகளின் மனம் பிறருடைய குறைகளை கண்டு சஞ்சலப்படுவதில்லை

கிரீஷ் சந்திர கோஷ் பலமுறை வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. இரண்டு பேர்களை தன் வலையில் வீழ்த்த முடியாமல் மகாமாயை தோற்றுப்போனாள்.

முதலில் நரேன். அவள் தன் வலையை பெரியதாக்கியதளவும் நரேன் அதை விட பெரியவராகி வலையில் சிக்காமல் மாயையின் முயற்சிகளைத் தோற்கடித்தார்.

இரண்டாவதாக நாக்மஹாஷய். இவரோ தன்னை குறுக்கிக் கொண்டே போய் (அஹங்காரமே இல்லாமல் போய்) வலையின் எந்த ஒரு சிறிய கண்ணிலிருந்தாவது தப்பித்து வெளியேறிவிடுவார். இப்படி இவரையும் மாயையால் பிடிக்க முடியவில்லை.

அவரைப் பற்றி விவேகானந்தர் கூறுகையில்: “நான் உலகின் பல பாகங்களிலும் பயணம் செய்து பலவாறான மக்களை கண்டிருக்கிறேன். ஆனால் நாக மஹாஷயரைப் போன்று ஒரு மஹாத்மாவை கண்டதில்லை.

सब बन तो चन्दन नहीं, शूरा के दल नाहिं ।
सब समुद्र की मोती नहीं, यो साधु जग माहिं ॥


அடவி யெலாம் சந்தனமல்ல, படையெல்லாம் சூரரும் அல்லர் |
கடலெல்லாம் முத்தும் அல்ல, மனிதரெலாம் ஞானியர் அல்லர் ||

காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் சந்தன மரங்கள் அல்ல, அரசனுடைய படையில் உள்ளவர்கள் எல்லாம் பெரும் சூரர்கள் அல்லர்; மிகப் பெரிய கடலில் முத்து மிக மிகக் குறைவே அது போல மானுட ஜென்மம் எடுத்தவர்களில் உண்மையான ஞானியர்கள் மிக மிகக் குறைவே

மஹான் நாக் மஹாஷய் வாழ்க்கை அப்படியே கபீரின் வரிகளுக்கு உயிர் கொடுப்பவையாக அமைந்து விட்டது. இன்றும் எத்தனை துர்காசரண் நாக் நம்மிடையே உலவுகின்றனரோ ? அவர்களை அறியாமலே காலம் போய்க்கொண்டிருக்கிறது.

கட்டுரையின் தலைப்பு, சிறுமணவூர் முனுசாமி முதலியார் இயற்றிய நடராஜர் பத்து என்ற பதிகத்தின் கடைசி பாடலை ஒட்டி வந்தது.
...........
....................யென்முன்
கனி போலவேபேசி, கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி, கர்த்த நின் தொண்டராம்
தொண்டர்க்குத் தொண்டரின் தொண்டர்கள்
தொழும்பனாக்கி, இனியவள மருவு சிறுமணவை
முனுசாமி யெனை யாள்வதினி யுன்கடன்காண்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லை வாழ் நடராஜனே

(தொழும்பன் = அடியவன், இழிஞன்)

Tuesday, August 12, 2008

சாதுவின் சகவாசம், சுகந்த வாசம்

நாக் மஹாஷய் -இரண்டாம் பகுதி. முதல் பகுதிக்கு இங்கே

பெரியம்மை தாக்கியிருந்த ஒரு அந்தண சிறுவனை அவனுடைய விதவை தாயார் இறக்கும் தறுவாயில் நாக் மஹாஷயர் வீட்டு வாசலில் தந்து இட்டு
விட்டாள். அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை யாருக்கும் இருக்கவில்லை. இறைவன் திருவுள்ளம் அவன் விரைவிலேயே குணமடைந்தான். அது எப்படி என்று சுரேஷ் மஹாஷயரை வினவியபோது 'அவன் குணமாக்கப் பட்டது' உண்மைதான் ஆனால் எப்படி என்பதை தன்னால் சொல்ல இயலாது என்று கூறிவிட்டார்.

பல சித்த புருஷர்களின் கடைக்கண் பார்வை இப்படி நோய் தீர்க்கும் மருந்தாக செயல் பட்டதை படித்திருக்கிறோம், கேள்விப் பட்டிருக்கிறோம். இதை கபீரும்
சூலத்தால் குத்தப்பட்டு அனுபவிக்கப்பட வேண்டிய பெருவலியும் ஞானியர் அருள் இருந்தால் சிறு முள் குத்திய வலியைப் போல ஒன்றுமில்லாததாகிவிடும்
என்கிறார்.

कबीर दर्शन साधु का, बडे़ भाग दरशाय ।
जो होवै सूली सजा, कांटे ई टरि जाय ॥


ஞானியர் தரிசனம் கபீரா, ஞாலத்தே பெரும் பேறாகும்
சூலம் பாய்ந்த பெருவலியும், முள் தைத்தது போலாகும்

நாக் மஹாஷய் ஒரு பொறுப்புள்ள மகனாக தந்தைக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். ஆனாலும் அவருடைய ஆன்மீகப் போக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டிருந்தது. அதை அவருடைய தந்தையால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறையே வரும் 'அர்த்தோதய யோக' பூஜை வங்காளத்தில் பிரசித்தமானது. இது கிரகண தினத்தன்று செய்யும் வழிபாடு.

அந்நேரத்தில் கங்கையில் நீராடுவது என்பது மிக விசேஷமானது. ஆசார அனுஷ்டானங்களில் ஆழ்ந்த நம்பிக்கை யிருந்த நாக் மஹாஷயரின் தந்தை,
தீனதயாளுக்கு பெரும் ஏமாற்றம். கல்கத்தாவில் இருக்கும் தன் மகன் மூன்று நாட்களுக்கு முன்பே தேவ்போக் (நாக் மஹாஷயரின் ஊர்) வந்துவிட்டானே என்று.

கங்கையில் நீராடி பூஜை செய்து வரக்கூடிய புண்ணியத்தை தவற விட்டு விட்டானே என்ற ஆதங்கத்தில், “உன்னுடைய அனுஷ்டானத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரும் கங்கா ஸ்நானத்திற்கென இங்கிருந்து கல்கத்தாவிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பொழுது அதை விட்டு இங்கே வந்து விட்டாயே. என்ன பக்தியோ உன்னுடையது. இப்போதும் என்னோடு புறப்படு. நேரம் இருக்கிறது” என்று புண்ணிய நீராடுதலுக்காக ஏங்கினார்.

”கங்கை தாயினிடம் உண்மையான பக்தி இருந்தால் அவளே இங்கு வருவாள். அவளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தந்தைக்கு பதிலளித்தார் மகன்.

அந்த நாளும், கிரஹண முகூர்த்தமும் நெருங்கியது. கைலாஷ் போஸ், ஸ்ரீமதி ஹரகாமினி (மனைவியின் சகோதரி) மற்றும் பல அடியவர்கள் தேவ்போக் மனையில் அந்நேரத்தில் இருந்தனர். அப்போது ஹரகாமினி ஈசானிய மூலையில் ஒரு வெடிப்பு தோன்றி முற்றத்துள் ஒரு நீரூற்று குபு குபுவென ஓசையுடன்
பெருகி வருவதை கவனித்து யாவரையும் அழைத்தார். அறைக்குள் அமர்ந்திருந்த நாக் மஹாஷயர் வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் ”மா! தேவி, கங்கா!!
பாவங்களைத் தொலைப்பவளே” என்று பலவாறாகத் துதித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். சிறிது நீரை அள்ளி தலையில் பக்தியுடன் தெளித்துக் கொண்டார். வீட்டிலிருந்த அனைவரும் அந்நீரிலே புனித நீராடினர். விஷயம் பரவி அப்பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் அங்கே குழுமி விட்டனர். ஜெய் கங்கா ஜெய் கங்கா என்ற கோஷம் எங்கும் எதிரொலித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீர் சிறிது சிறிதாகக் குறைந்து நின்று போனது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி நாக் மஹாஷயர் எப்போதும் பேசியதே கிடையாது. யாராவது மிக வற்புறுத்திக் கேட்டாலும் ‘ஒன்றுமில்லாததை பெரிது படுத்துகிறார்கள்' என்று தட்டிக் கழித்து விடுவாராம்.

ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் பல கோவில்-குளங்களையோ, புனித நீராடலையோ தேடிசெல்லும் அவசியமில்லை. அவர்கள் உள்ளேயே எல்லாம் சங்கமம்.

அதைத்தான் கபீர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

मथुरा, काशी द्वारिका, हरिद्वार, जगन्नाथ ।
साधु संगति हरि भजन बिन, कछु न आवै हात ॥


அரித்வாரம் சகன்னாத்தும், மதுரா, துவாரகை, காசியும் ஏனோ
அரிசெபமும் சத்சங்கம் இன்றி, அவனும் பிடிக்குள் வருவனோ

(அரித்வாரம்=ஹரித்வார், சகன்னாத்=புரீ, ஜகன்நாத், அரிசெபம்= ஹரி ஜெபம் அவனும் =இறைவனும்)

இறைவன் அருளைப்பெற அவன் அடியவரை பிடித்துக் கொள். உண்மையான ஞானியின் தரிசனமும் சத்சங்கமும் இல்லாத தீர்த்த யாத்திரை போன்ற மற்ற
எல்லாமுயற்சிகளும் பெரிய பலனை தந்துவிடாது. பக்தியில் ஆழமிருந்தால் அங்கே உடனே இருப்பான் இறைவன். இதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் கபீர்.

கங்கையின் வரவு கூட தன் தந்தையின் ஏக்கத்தை போக்குவதற்காக ஒரு ஞானி சொன்ன வாக்கு பொய்த்து விடக்கூடாது என்பதற்காக இறைவன் திருவுள்ளம் கொண்டான் என்பதாகக் கொள்ள வேண்டுமே அன்றி அவருக்கு தன் சித்தியை பிரதர்சனம் செய்யும் எண்ணம் அல்லவென்று புரிந்து கொள்ள வேண்டும்.

தேவ்போக்கில் கங்கை வந்தது பற்றி பின்னொரு நாளில் விவேகானந்தரிடம் சிலர் குறிப்பிட போது 'ஞானிகளின் சங்கல்பத்தால் ஆகாததும் உண்டோ. அவர்கள் சங்கல்பித்தால் முக்தியும் கிட்டும்' என்று பதிலுரைத்தாராம்.

(இதே போல ஒரு தீண்டத்தகாதவனுக்கு ஆதரவு தந்ததால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்ட ஸ்ரீதர் அய்யாவாள் என்ற பெரும் மஹானும் தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை பெருகச் செய்த நிகழ்ச்சி தமிழ் நாட்டில் உண்டு. அதை ஆசார்யஹ்ருதயத்தில் காண இருப்பதால் அதை விட்டுவிடுவோம். )

அன்னை சாரதா தேவி பேலூர் நீலாம்பர் பாபுவின் தோட்டத்தில் தங்கியுள்ளார் என்பதை அறிந்து அவரை தரிசித்து வர சக்ரவர்த்தி என்பவர் துணையோடு நாக்
மஹாஷயர் கிளம்பினார். அன்னைக்கென சிவப்பு சரிகை உள்ள ஒரு துணியும் கொஞ்சம் இனிப்பும் வாங்கினார். படகில் செல்லும் பொழுது ஒரு குழந்தையின்
குதூகலம் அவரிடமிருந்தது. கரையிறங்கியதுமே, அன்னையை தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவரை பேரானந்தத்தில்ஆழ்த்தியது. சுவாமி பிரேமாநந்தர் அவரை அன்னையிடம் அழைத்துச் சென்றார். பரவசமென்னும் காற்றில் அலைக்கழிக்கப்படும் சருகு போல தள்ளாடி அன்னையின் முன் போய் சேர்ந்தார்.

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த பின்னும் ஆனந்த பரவசம் அவரை ஆட்கொண்டிருந்தது. “ஓ! அய்யனை விட அன்னைக்குத்தான் எத்தனை கருணை” என்று சொல்லிச் சொல்லி சந்தோஷத்தில் திளைத்தார். பிரேமானந்தர் அதற்கானக் காரணத்தை விளக்கினார். நாக் மஹாஷயர் கொண்டு சென்றிருந்த இனிப்புகளை சாரதாமணி தேவியார் விரும்பி சுவைத்ததும் அவருக்கு தன் கையாலே பிரசாதம் வழங்கியதுமே அதற்கு காரணம்.

சாதாரண லௌகீக ரீதியில் பார்க்கும் பொழுது இரு அன்பர்கள் சந்தித்துக் கொள்வதில் ஒருவர் தின்பண்டம் வாங்கிச் செல்வதும் மற்றவர் தேநீர் சிற்றுண்டி தந்து உபசரிப்பதும் சகஜம் தான். ஆனால் அதையெல்லாம் மீறிய ஒரு ஆனந்தம் தந்தது எதுவென்றால் அன்னையின் அருளும் அதை போற்றத் தெரிந்த மனநிலையும் தான்.

அத்தகைய ஒரு மனநிலையைத் தான் கபீர்தாஸர் ஒரு ஈரடியில் ஆச்சரியப்பட்டு உரைக்கிறார். உயர்ந்த மனங்கள் சேரும் போது அங்கு உலக விசாரங்கள் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றுக்கு இடமில்லை. அங்கு பரிமாறிக் கொள்ளப்படுவது உயர் நிலை ஆனந்தம் மட்டுமே.

कबीरा संगत साधु की, ज्यो गन्धी की बास ।
जो कुछ गन्धी दे नहीं, तो भी बास सुबास ॥


சுகந்த வாசம் போலாகும், கபீரா சாதுவின் சகவாசம்
சுகந்தம் தந்ததே துமில்லை, பின்னும் ஏதோ உல்லாசம்

'ஜோ குச் கந்தீ தே நாஹி' என்பது கண்கள் அறியும் வண்ணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை குறிப்பதாகும். காற்றிலே கலந்து வரும் மணம் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது போல சாதுக்களின் முன்னிலையில் காணும் ஆனந்தம் மனதால் மட்டுமே உணரக் கூடியது.

Sunday, August 10, 2008

தண் மதிக்கு ஏங்கும் குமுதம்

இராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உண்டு. அதில் பலரால் அறியப்பட்டவர் M என்ற பெயரில் ராமகிருஷ்ணரைப் பற்றியும் அவரது அருளுரைகளைப் பற்றியும் தொகுத்து வந்த மகேந்திரநாத் குப்தா எனப்பட்ட கல்லூரி பேராசிரியர்.

இன்னும் ஒருவர் உண்டு அவரைப்பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ஏனெனில் அவர் தொண்டர் அடிப்பொடியாக, எளியருக்கும் எளியவனாக வாழ்க்கையை கழித்தார். 'நாக் மஹாஷய்' என்று போற்றப்பட்ட துர்காசரண் நாக் ஒரு மருத்துவர்.

வழக்குரைஞர்கள், பொறிஞர்கள், மருத்துவர்கள் போன்றோர்களுக்கு தம் தொழில் சம்பந்தமான கர்வம் இருக்கும் என்று இராமகிருஷ்ணர் பொதுப்படையாகச் சொன்னதை ஆத்மார்த்தமாக எடுத்துக்கொண்டு, தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாகும் எனக்கருதியதால் மருந்து புட்டிகளை கங்கையில் வீசி எறிந்து அத்துறையை கைவிட்டவர். அப்பேர்ப்பட்ட ஒரு குரு பக்தி.

தந்தையை மகிழ்விக்க இரண்டாம் மணம் செய்து கொண்டார். குரு ராமகிருஷ்ணரின் அறிவுரைப்படி இல்லறத்திலே இருந்தார். ஆனால் மனமோ காளி தேவியின் திருவடிகளையே நினத்திருந்தது. அவருக்கு பரமஹம்சரின் தொடர்பு கடைசி நான்கு வருடங்களே வாய்த்தது.

அவருக்கு இருந்த தீவிர இறை நாட்டத்தை விவேகானந்தருடைய வார்த்தைகளிலே காண்போம்.

”குரு ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பிறகு நாக் மஹாஷய் தீவிர உபவாசம் இருப்பதாகக் கேள்விப்பட்டு நானும் ஹரிபாயும் அவர் கல்கத்தாவில் தங்கியிருந்த சிறிய ஓட்டு வீட்டை தேடி அடைந்தோம். படுத்திருந்த அவர்
எழுந்தார். 'மஹாஷய் இன்று உங்கள் வீட்டில் தான் பிட்சை' என்றேன். நாங்களும் உணவு உண்டு அவரையும் உட்கொள்ள செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மிக்க சந்தோஷத்துடன் சாமான்களை தந்து நாங்கள் குளித்து தயாராவதற்குள் உணவு தயாரித்து வைத்திருந்தார். அவரையும் கூட அமர்ந்து உண்பதற்காக அழைத்தும் மறுத்து விட்டார். சரி, நாம் உண்ட பின்னால் அவரை உண்ண வைக்கமுடியும் என்றெண்ணி அவருக்காக சற்று எடுத்து வைத்துவிட்டு உணவை முடித்துக் கொண்டு அவரை உட்கொள்ள மீண்டும் வேண்டினோம்.

வற்புறத்தலில் அவருக்கு மனதின் ஆற்றாமை பெருகி, அன்னம் இருந்த சட்டியை போட்டு உடைத்து, தலையில் அடித்துக் கொண்டு 'கடவுளை அறிய இயலாத இந்த உடம்பிற்கு உணவும் ஒரு கேடா' என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். நாங்கள் திக்பிரமை பிடித்தவரானோம். மிகப் பெரிய பிரயாசத்திற்கு பிறகே கொஞ்சம் உணவு உட்கொண்டார். கடவுளுக்கான அப்படி ஒரு தீவிர பக்தியைக் காண்பது அரிது.”

அந்த நிலையை கபீரின் வார்த்தைகளில் காண்போம்.

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं ।
धन का भूखा जो फिरै, सो तो साधू नाहीं ॥


ஸாதூ பூகா பாவ் கா, ன் கா பூகா நாஹி
தன் கா பூகா ஜோ ஃபிரை, ஸோ தோ ஸாதூ நாஹி


அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை
பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை

மேற்கண்ட நிகழ்சியில் அருளின் பசியை பார்க்கிறோம். நாக் மஹாஷயருக்கு பொருள் திரட்டும் நோக்கம் அறவே இருக்கவில்லை என்பதை இன்னொரு சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. உப்பளங்களுக்கு அதிபதிகளாக இருந்த
'பால்' கம்பெனியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு கடுமையான வைசூரி நோய் கண்டிருந்தது. வேறு எந்த சிகிச்சை முறையும் பலன் தராது போகவே அவர்கள் நாக் மஹாஷயரை மருந்து தரும்படி கேட்டுக்கொண்டனர். அவர் கொடுத்த ஹோமியோபதி மருந்துகள் உடனடியாக குணம் தந்தது. மகிழ்ந்து போய் அவர்கள் ஒரு பெரும் தொகையை சன்மானமாகத் தர முன்வந்தனர். ஆனால் இவரோ அதை மறுத்துவிட்டார். அதையும் மீறி அவர்கள் மிக வற்புறுத்திய போது ஒரு குழந்தையைப் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். “கடவுளே எனக்கு ஏன் இந்த அறிவை கொடுத்தாய்? அது இல்லாமல் இருந்திருந்திருந்தால் இந்த துன்பம் எனக்கு வந்திருக்காதே”.

செல்வத்தைத் துன்பத்தின் நிழலாகக் கண்டார் அவர்.

வேறொரு சமயம் அதே கம்பெனியார், போஜேஸ்வரில் அவர் ஒரு ஏற்றுமதி மேற்பார்வை செய்தபின் கல்கத்தா திரும்பிச் செல்ல எட்டு ரூபாய் நீராவி படகு கட்டணமும் குளிருக்காக ஒரு கம்பள சால்வையும் கொடுத்து வழி
அனுப்பினர். போஜேஸ்வரிலிருந்து படகுத்துறை எட்டு மைல். செல்லும் வழியில் பசியால் நலிந்திருந்த ஐந்தாறு குழந்தைகளோடு பிச்சை வேண்டிய ஒரு பெண்மணியின் துயர நிலை அவர் மனதை உருக்கி விட்டது.

லோகமாதாவையே அவளுடைய கண்களில் கண்டார். கம்பெனியார் கொடுத்த எட்டு ரூபாயையும் கம்பள சால்வையும் அவளுக்கு கொடுத்து விட்டார். இப்போது நீராவி படகுக்காரனுக்கு கொடுக்க காசில்லை. நடைப் பயணமாகவே கல்கத்தாவிற்கு கிளம்பினார். கையிலிருந்ததோ ஏழு அணாவும் ஆறு பைசாக்களும் மட்டுமே. அகலமான ஆறுகள் வந்தபோது படகுகளின் துணையில் கடந்தார். குறுகிய கால்வாய்களை நீந்திக் கடந்தார். வழியில் ஏதேனும் ஆலயங்களில் கிடைத்த பிரசாதமே பல நாட்கள் உணவானது. ஒரு வழியாக அவர் கல்கத்தா அடைந்த போது இருபத்தியொன்பது நாட்கள் ஓடிவிட்டிருந்தன. ஆனால் மனமோ சதா அன்னையின் சரணத்திலேயே லயத்திருந்தது.

நாக் மஹாஷயர் இயல்பிலேயே தன்னை ஆன்மீகத்திற்கு அருகதையற்றவராக கருதி வந்தார். விவேகானந்தர், பாவி, sinner போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தவர். பாவி என்று எவனும் கிடையாது. அனைவரும் அமிருத புத்திரர்கள் என்பதே அவர் கொள்கை.

விவேகானந்தரைப் போலல்லாது தன்னை ஒரு 'பாவக் குப்பை' 'புழுவினும் கடையன்' என்றெல்லாம் நாக் மஹாஷயர் சொல்லிக்கொள்வார். அப்படி ஒரு முறை கிரீஷ் பாபு வீட்டில் சுவாமி நிரஞ்சனானந்தாவுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் கிரீஷ் பாபு இதைப்பற்றி வினவினார்.

“குருதேவ் அடிக்கடி சொல்வதுண்டே நாம் எப்படி நினக்கிறோமோ அப்படி ஆகிவிடுவோம் என்று. தாங்கள் ஏன் தங்களைப் பற்றி அப்படி ஒரு தாழ்வான மனப்பான்மை கொள்ள வேண்டும்?”

“என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? உண்மையை சொல்வதில் என்ன தயக்கம்? என்னை சிவனென்று (சிவோஹம்) சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்னுள் பக்தியோ ஞானமோ பெருகவில்லை. எலும்புகளாலும் தசைகளாலும் ஆன இந்த கூட்டின் மீது உள்ள அபிமானம் நீங்காத வரையில் நான் எப்படி சிவனாக முடியும். உங்களுடைய உதவியோடும், தாகூரின் (பரமஹம்ஸர்) அருளும் இருந்தால் என் பிறவியும் கடைத்தேறும்”

அவருடைய குரலில் இருந்த உண்மையான பணிவு, மேற்கொண்டு அதைப்பற்றிய உரையாடலை தொடரமுடியாமல் செய்து விட்டது.

அவர் ஞானியாக பரிமளித்ததன் ரகசியம் இதுதான். அழுக்குக் குட்டையிலே இருந்தாலும் ஆம்பல் சந்திரன் வரவுக்காக மட்டுமே காத்திருக்கும். சதா இறை சிந்தனையிலே ஊறிப் போயிருப்பினும் தேக நினைவு வரும் பொழுது அது ஒரு
பாழ் குட்டமாக இருக்கும் உண்மை புரியும். அவர் அந்த உண்மையைப் பேசினார்

ஆனால் மனமோ இறைவனுடன் இருந்ததால் அவருடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்கவில்லை.

जल में बसै कमोदनी, चन्दा बसै आकास ।
जो है जाको भावता, सो ताही के पास ॥


ஜல் மே பஸை கமோதினி, சந்தா பஸை ஆகாஸ் |
ஜோ ஹை ஜாகோ பாவ்தா, ஸோ தாஹி கே பாஸ் ||


அம்பரத்தே உறை மதி கண்டே, ஆம்பல் மலரும் குட்டத்தே
உம்பர்தம் உறவும் உண்டே, உள்ளத்தே எழும் நாட்டத்தே

(அம்பரம்= ஆகாயம் ; உறை=உறைகின்ற; மதி =சந்திரன் ; உம்பர்= வானோர்; குட்டம்= குளம், நாட்டம்= விருப்பம்)


இதே கருத்தைச் சொல்லும் ஒரு நீதி வெண்பா பாடல்

செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே
சந்திரோதயம் பார்க்கும் தண்குமுதம்-கந்தமிகும்
பூ அலரப் பார்க்கும் பொறி வண்டு, அரன் அன்பர்
தேவரவைப் பார்ப்பர் தெளிந்து

(பொறிவண்டு= புள்ளிகளுடைய வண்டு)


நாக் மஹாஷயரின் அஹங்காரமே இல்லாத பரிசுத்த நிலையை கண்ட சுவாமி நிரஞ்சனானந்தர் “ஒரு மனிதனின் அஹங்காரம் முழுதும் அழிந்துவிட்ட நிலையில் மட்டுமே நாக் மஹாஷயரின் நிலையை அடைய முடியும்.
அத்தகையவர்களின் திருவடி பூமியில் பட்ட இடமெல்லாம் புனிதமாகிவிடும்”.

சுவாமி நிரஞ்சனானந்தரின் வாக்கை உண்மையாக்குவது போல் அவருடைய வாழ்க்கை அமைந்தது. வங்காளத்தில் ப்ளேக் பெரு நோய் பெருமளவில் தாக்கிய காலத்தில் தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் மடிந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிலர் ஒரு உண்மையை கவனித்தனர். நாக் மஹாஷயர் சுற்றி வந்த பகுதிகளெல்லாம் ப்ளேக் கட்டுக்குள் இருந்தது. அதனால் தேவ்போக், போஜேஷ்வர் பகுதி மக்களெல்லாம் தம்முடைய ஊரில் ஒரு முறையாவது அவர் திருவடி பட வேண்டும் என்று அவரை வேண்டி தத்தம் ஊரில் பூஜைகள் ஏற்பாடு செய்தனர்.

साधु दरशन महाफल, कोटि यज्ञ फल लेह ।
इक मन्दिर को का पडी नगर शुद्ध करि लेह ॥


ஸாது தர்ஷன் மஹாபல். கோடி யக்ஞ் பல் லேஹ் |
இக் மந்திர் கோ கா படீ, நகர் ஷுத் கரி லேஹ் ||

சாலச் சிறந்தது சாது தரிசனம், கோடி வேள்வி செய்பலனே
ஆலயம் அம்மட்டே, ஊரையும் செய்குவான் புனிதம் அவனே

(ஆலயம் அம்மட்டே= ஆலயம் மட்டும் தானா )


பாடல் பெற்ற தலங்கள் என்று நாம் போற்றுவது அப்பெரும் தவச்சீலர்கள் வரவினால் அவ்வாலயங்களில் செய்யும் வழிபாடு விசேஷமானதாகக் கருதுகிறோம். ஆனால் அப்பெருமக்கள் கால் வைத்த இடமெல்லாம் புனிதமாயிற்று என்பதை கபீர் மூலமாகவும் நாக் மஹாஷயரின் மூலமாகவும் அறிகிறோம்.

(Nagmahasaya : Ramakrishna Math, Mylapore Chennai ISBN 81-7120-238-1)