Wednesday, September 17, 2008

நாவாய் இன்னும் நடுக்கடலில்...

ஆணவமலம் என்பது எல்லா நிலைகளிலும் வெவ்வேறு பரிணாமங்களில் எப்போதும் கூடவே இருப்பது.மனம் இருக்குமளவும் அதுவும் இருக்கும். வேறொரு வகையில் சொல்வதானால் அது தான் மனதின் செயற்பாட்டுக்கே தளமாகிறது.

மகரிஷி நாரதரையும் அது விட்டு வைக்கவில்லையாம். சர்வ சதா காலமும் நாராயண மந்திரம் செபிக்கும் அவருக்கும் எங்கோ மனதின் ஒரு மூலையில் தன்னைவிட ஒரு பெரிய பக்தன் இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது. அந்த நாராயணனிடமே தன் சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்கிறார்.பூலோகத்தில் ஒரு பால்காரனை சுட்டிக்காட்டி அனுப்புகிறார் பெருமாள்.

மிகவும் ஆர்வத்துடன் அவனது நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகிறார் நாரதர். இருள் விலகும் முன்பே நாராயண நாராயண என்று சொல்லிக் கொண்டே எழுந்த அவன் தன் தினசரி வேலைகளான பசுக்களைக் குளிப்பாட்டுவது, தீனி வைப்பது, பால் கறப்பது, கறந்த பாலை வீடு வீடாக கொண்டு சென்று விற்று வருவது, மதியத்தில் பசுக்களுக்கு புல் அறுத்து வருவது மீண்டும் மாலை பால் கறப்பது,விற்பது இப்படி மூச்சு விட நேரமில்லாமல் வேலையில் ஆழ்ந்து விட்டான். இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை நாராயண நாராயண என்று சொல்லிக் தூங்கிப் போய் விட்டான்.

இவன் எப்படி பெரும் பக்தனாக முடியும் ?

ஏதும் புரியாமல் பெருமாளிடம் மீண்டும் வந்தார் நாரதர். சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு எண்ணெய் வழியும் கிண்ணம் கொடுத்து ”ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகத்தை ஒரு முறை சுற்றி வாரும்” என்றார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் நாரதர்.

’என்ன புரிந்ததா’ என்று வினவினார் பெருமாள்.இல்லை என்று தலையசைத்தார் நாரதர். “சரி சுற்றி வரும் பொழுது எவ்வளவு முறை செபித்தீர்கள்?” என்று கணக்கு கேட்டார்.

’நீங்கள் சொட்டு எண்ணெய் கூட சிந்தக்கூடாது என்றதனால் என் கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. உங்கள் நாம செபம் செய்யும் மனநிலை இருக்கவில்லை’ என்று உண்மையை ஒத்துக்கொண்டார் நாரத ரிஷி.

“அப்பா! இந்த சிறிய வேலையினாலேயே உன் கவனம் என்னைவிட்டு அகன்று விட்டதே, அந்த பால்காரனுக்கோ ஆயிரம் கஷ்டம், குடும்ப பாரம், உடற்நலப் பிரச்சனைகள். அதனிடையேயும் அவன் மறக்காமல் இருமுறை என்னை நினைத்துக் கொள்கிறானே. அவனும் என்னுடைய சிறந்த பக்தன் தானே” என்றாராம் நாராயணன்.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொல்லிய கதை இது.

கர்வபங்கம் என்பது இறைவன் பக்தரை தடுத்தாட்கொள்ளும் விதமாக செய்யும் ஒரு லீலை.அதனால் உண்மையான பக்தன் சிறுமைப்படுவதில்லை. பதிலாக அவன் தடை நீங்கப் பெற்று இன்னும் வேகமாக முன்னேறுகிறான்.

இறை வடிவமான குருவிடம் பூரண சரணாகதி என்பது இதற்கான ஒரு உபாயமே. பாதையை தவறவிடாது மேலே செல்ல வழி காட்டுபவர் குரு. அதைக்குறித்து கபீர் சொல்வது

लेने को गुरु नाम है ,देने को अन्न दान ।
तरने को आधीनता, बूडन को अभिमान ॥


லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்ன தான்
தர்னே கோ ஆதீனதா, பூடன் கோ அபிமான்


கொள்வ தற்கு குருநாமம், கொடுப்ப தற்கு அன்னதானம்
பணிவதால் மிதத்தல் கூடும்,கர்வத்தால் கலம் மூழ்கும்

(மிதத்தல் =ஆன்மீகப் பயணம்; கலம் மூழ்கல்=ஆன்மீகப் பயணத்தில் தோல்வி)

பேச்சு வழக்கில் ”லேனா தேனா” என்றால் எடுத்தலும் கொடுத்தலும் என்பதைக் குறிக்கும்.நம் உலக வாழ்க்கைகான அச்சு லேனா-தேனா.அதைச் சுற்றியே வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. எதையாவது எடுத்துக்கொண்டால் பதிலாக வேறு எதையாவது கொடுக்க வேண்டியிருக்கிறது.

பழைய திரைப்படப் பாடல் ஒன்று.

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான்
அதில் ஆயிரமாயிரம் பொருள் குவித்தான்
அவரவர் தகுதிக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்.

ஆசைப்படும் வாழ்க்கைக்கு ஏற்ப விலை தர வேண்டும். சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

பெரும்பாலானோர் ஆசைப்படாத ஆனால் விலை மதிக்கமுடியாத பொருள் ஒன்று உண்டு. அதுவே குருவருள். அதற்கு தர வேண்டிய விலை மிக சுலபம்.பிற உயிர்களின் பசியாற்றுதலும் அன்பு பாராட்டுதலுமே ஆகும். எளிமையாக இவைகளை போற்றி வாழ்ந்தாலே குருநாமம் சித்தியாகி பிறவி கடலை கடந்து கரை சேர்ந்து விட முடியும். மனதில் ஆயிரமாயிரம் பொருட்களுக்கான ஆசையை விலக்கி “லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்னதான்” என்பது எவ்வளவு சுலபமான வழி ! நேர்வழியே ஆனாலும் அபாயம் இல்லாமல் இல்லை. குரு கபீர் அதையும் உணர்த்துகிறார்.

அதுவே நம்மை அறியாமல் உள்ளே புகுந்து கொள்ளும் கர்வம்.பணிவான மனம் உடையவன் வெற்றிகரமாக மிதந்து கரை சேர்ந்து விடுவான். ஆனால் கர்வம் என்ற குணம் பிறவிக் கடலை கடக்க வொட்டாமல் நடுவிலேயே மூழ்கடித்துவிடும். அது எப்பேர்பட்டவரையும் ஏமாற்றி உட்புகுந்து விடும். அதை சுட்டிக்காட்டுவதே மேற்குறிப்பிட்ட ராமகிருஷ்ணரின் கதை.

இன்னுமொரு ஈரடியிலும் இதே உதாரணத்தைக் கையாளுகிறார் கபீர்.

कबीर गर्व न कीजिएं, रंक न हसिये कोय ।
अजहूं नाव समुद्र में , ना जानैं क्या होय ॥


கபீர் கர்வ் ந கீஜியே ரன்க் ந ஹஸியே கோய்
அஜ்ஹூ நாவ் ஸமுத்ர் மே, நா ஜானை க்யா ஹோய்


காவாய் கர்வம் கபீரா, எளியரைக் கண்டே எள்ளாய்
நாவாய் இன்னும் நடுக்கடலில்,நடப்பதை முன்னம் ஏதறிவாய்

(காவாய்= காத்துக்கொள்வாய்; எள்ளாய் =இகழாதே, நாவாய்= படகு)

கர்வம் என்கிற பிணியிலிருந்து எப்போதும் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். ஏனெனில் அது உள்ளே புகுந்துவிட்டால் அவரிடம் உள்ள பல நல்ல குணங்களை பறித்துக் கொள்ள வாய்ப்புண்டு. பின்னர் கீழான செயல்களில் மனம் இறங்கும். கீழான மனம் எந்த நிலைக்கு தாழ்ந்து போகும் என்பதை நாலடியார் சொல்கிறது.

கடுக்கென சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர் மாட்டு வைக்கும் அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம்,விறன்மலை நன்னாட !
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் (348)

எப்போதும் கடுஞ்சொல் பேசுவது, இரக்கமற்றிருப்பது,பிறர்க்கு துன்பம் செய்து மகிழ்வது, மீண்டும் மீண்டும் கோபப்படுவது ஆகியவை கீழ்மக்கள் குணங்களாகும். அவற்றை விடமுடியாது, விடச் சொல்பவரை இகழவும் செய்வர்.

அப்படி பிறருக்கு ஏற்படுத்தும் மனத்துன்பத்தின் பின் விளைவு எப்போது எந்த வடிவத்தில் அவரிடமே திரும்புமோ சொல்ல முடியாது. அதனால் தடைப்படப் போவது அவரது பயணம் தான்.

கடல் நடுவே பெரும் சுழல்களும் உண்டு,சூறாவளிகளின் அபாயமும் உண்டு. கரை சேரும் வரை எதுவும் நிச்சயமில்லை. தீவினைப்பயன்கள் அத்தகைய சுழலாகவோ சூறாவளியாகவோ வந்து தாக்கக்கூடும். அதைக் குறிப்பிடவே நாவாய் இன்னும் நடுக்கடலில் என்று கபீர் குறிப்பிடுகிறார்.

கண்ணாடி மாளிகையுள் இருந்து கொண்டு பிறர் மீது கல் வீசலமா?

ஒருவனுக்கு நல்ல காலம் பிறந்து நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அவனுக்கு ஏற்றம் வந்துவிடுகிறது. அதனோடு கூடவே அவன் அகங்காரமும் பெரிதாக வளர்ந்து விடுகிறது. உற்றார் பலரும் விட்டு விலகி போகின்றனர். அதைப்பற்றிக் கவலைப்பட நேரமும் அவனுக்கில்லை. போனால் போகிறது.

குறைந்தபட்சம் எதிரிகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா? காலப்போக்கில் நண்பர்கள் குறைந்தது மட்டுமின்றி எதிரிகள் பெருகி நிம்மதியை குலைத்தது.

புராணத்திலும் வரலாற்றிலும் இப்படிஅல்லலுற்ற அசுரர்கள், சக்ரவர்த்திகள்,செல்வந்தர்கள்,பண்டிதர்கள் மற்றும் கலைஞர்கள் எத்தனையெத்தனையோ !

அவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை மன உளைச்சலில் கழிக்கின்றனர்.

குறுகிய அறைக்குள் புழுக்கம் அதிகரிக்கிற்து.உட்கார முடிவதில்லை.கர்வத்தால் குறுகிப் போன மனதிலும் இதே நிலைமைதான்.மனப்புழுக்கம்.

வாழ்க்கையை தமக்குத் தாமே நரகமாக்கிக் கொள்கின்றனர் மக்கள். அறையை விட்டு வெளியே வந்தால் குளிர்ந்த காற்று வரும். செருக்கு என்ற தாழ்பாளை நீக்கி வெளி வந்து மனம் குளிர்ந்து யாவருடனும் உறவாட ஆரம்பித்தால் உறவினரும் நண்பரும் தாமே தேடி வருவர். இதையே வள்ளுவர்

தமராகி தற்றுறந்தார் சுற்றம், அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு தமக்கு உறவினாராயிருந்து தாமாகவே தன்னை விட்டுப் பிரிந்து சென்ற சுற்றத்தார், அதற்குரிய காரணம் நீங்கப் பெறின் தாமாகவே பகையின்றி மீண்டும் வந்து சேர்வர் என்று உரைக்கிறார். பிரிந்து செல்வதற்கான காரணம் ஒருவனுடைய செருக்கு. அதை அழித்து விட்டால் பிரிவதற்கான காரணம் நீங்கப் பெற்று மீண்டும் உற்றார் வந்து உறவாடுவர். கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

जग में बैरी कोई नहीं, जो मन शीतल होय ।
यह आपा तो डाल दे, दया करे सब कोय ॥


ஜக் மே பைரீ கோய் நஹி, ஜோ மன் ஷீதல் ஹோய் |
யஹ் ஆபா தோ டால் தே, தயா கரே ஸப் கோய் ||


செருநர் சகத்தில் இல்லை, சீதள மாயின் மனமே
செருக்கு செத்தப் பின்னே,செறிஞர் சேருவர் தாமே

(செருநர்=எதிரிகள்; சகம்= உலகம் சீதளம்=குளிர்ச்சி,ஆணவமில்லா நிலை; செருக்கு= ஆணவம்; செறிஞர்=உற்றார்)

ஆபா தோ டால் தே ’ என்பது “ நான் என்ற எண்ணத்தை
தூக்கி எறிந்து விட முடிந்தால் ...” தயா கரே ஸப் லோக் யாவரும் அன்பு பாராட்டுவர் என்று பொருள் படும். அது “செருக்கு செத்த பின்னே, செறிஞர் சேருவர் தாமே என்பதாக மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .
____________________
பிற்குறிப்பு:

ஆரம்பத்தில் கண்ட ”லேனே குரு நாம் ஹை” என்ற தோஹாவில் கபீர் சொல்ல விழையும் உட்பொருளை முதலில் எழுதி வைத்திருந்தேன். ஆனால் அது வெளிப்படையாக சொல்லப் படாததால் மேலே அதற்குரிய முறையான மொழி பெயர்ப்பை தந்துள்ளேன். கீழே உட்பொருளை பிரதிபலிக்கும் ஈரடியை தருகிறேன்.

துணைக்கொள் ளகுரு நாமம், ஈவதற்கு அன்ன தானம்
கரை சேரவே தயை வேண்டும், கலம் கவிழ கர்வம் தானே

5 comments:

  1. //குறுகிய அறைக்குள் புழுக்கம் அதிகரிக்கிற்து.உட்கார முடிவதில்லை.கர்வத்தால் குறுகிப் போன மனதிலும் இதே நிலைமைதான்.மனப்புழுக்கம்.

    வாழ்க்கையை தமக்குத் தாமே நரகமாக்கிக் கொள்கின்றனர் மக்கள். அறையை விட்டு வெளியே வந்தால் குளிர்ந்த காற்று வரும். செருக்கு என்ற தாழ்பாளை நீக்கி வெளி வந்து மனம் குளிர்ந்து யாவருடனும் உறவாட ஆரம்பித்தால் உறவினரும் நண்பரும் தாமே தேடி வருவர்.//

    சத்தியமான உண்மை.
    மனத்தில் வாரி கட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு அங்கங்கே முத்துக்கள் தெறித்திருக்கின்றன.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நல்வரவு ஜீவி,

    //அங்கங்கே முத்துக்கள் தெறித்திருக்கின்றன //

    தங்கள் கனிவான பாராட்டுகளுக்கு நன்றி. தங்களின் அனுபவத்திற்கும் எழுத்திற்கும் முன் இவைகள் ஏதும் பிரமாதமில்லை. தங்களுக்கு பெரிய மனது. மிக்க நன்றி

    ReplyDelete
  3. //செருநர் சகத்தில் இல்லை, சீதள மாயின் மனமே
    செருக்கு செத்தப் பின்னே,செறிஞர் சேருவர் தாமே//

    அருமை அருமை. செருக்கின்றி பணிதலே சீவனுக்கு நன்று. ஜீவி ஐயா சொன்னாற் போல சிதறியிருக்கும் எல்லா முத்துகளையும் எடுத்துக் காட்டினால் பின்னூட்டம் மிக நீண்டு விடும்! மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வருக கவிநயா,

    இம்முறை நம்மிருவர் பதிவிலும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய குறிப்பு !

    அந்த பெருங்கடல் ஈன்ற முத்துகள் தானே எல்லாம் :)

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  5. "கொள்வ தற்கு குருநாமம், கொடுப்ப தற்கு அன்னதானம்
    பணிவதால் மிதத்தல் கூடும்,கர்வத்தால் கலம் மூழ்கும் " அருமையான வார்த்தைகள். கர்வம் களைவதும் குருவருளாலே என்றுதான் கொள்ளவேண்டும்

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி