Sunday, February 22, 2009

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பல வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் மைசூர் அருகே உள்ள கிராமத்திற்கு போக வேண்டியிருந்தது. சந்திக்க வேண்டியிருந்த நபர் வீட்டில் இல்லாததால் அவருடைய பாக்குத் தோப்புக்கே அவரைத் தேடிச் சென்றோம். தோப்புக்குள்ளே நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி விட்டு வெறுங்காலில் தோப்புக்குள் சுற்றினோம்.

தஞ்சை,காரைக்குடி வாசத்தின் போது கடைகளில் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்று வியாபாரம் செய்ததுண்டு. அது வீதியின் தூசியும் அழுக்கும் உள்ளே வராமல் தடுக்க செய்யும் ஒரு கட்டுப்பாடு. ஆனால் விளை நிலத்தில் ஏனிந்தக் கட்டுப்பாடு ?

நகரப் பக்கங்களிலேயே படித்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம்.உழைப்பு ஒன்றையே நம்பி நிலத்தையும் மழையையும் ஆதாரமாகக் கருதும் விவசாயிகள் பூமியை தெய்வமாக வணங்குகிறார்கள். இறைவனுடைய படைப்பான நமது கால்கள் நேரடியாக பூமியில் படிவதில் பாவமில்லை. ஆனால் மனிதன் படைத்த செருப்பை அவனுடைய படைப்பின் இடையே புகுத்துவதால் அதை ஆணவத்தின் சின்னமாகக் கருதினரோ என்னவோ!

இத்தகைய சிறு சிறு நம்பிக்கைகளிலும் நடத்தைகளிலும் நமது பண்பாட்டின் ஆழம் புரிகிறது. பணிவு என்பதை மனதில் வேரூன்றச் செய்கிறது.

இறைவன் படைப்பில் மனிதன் மட்டுமே பூமியின் மாசுபாடுகளுக்கு காரணமாகிறான். எத்தனைவிதமாக பூமியை துன்புறுத்துகிறோம் ! ஆனால் அவளோ எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு பலவிதமான நன்மைகளை மனித குலத்துக்கும் பிற உயிர்களுக்கு தந்து கொண்டேயிருக்கிறாள் ! எனவே தான் பொறுமைக்கு பூமியை உதாரணமாகக் கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் ஏற்பட்டது.

அதனை ஒட்டியே வள்ளுவரும் பொறுமைக்கான அவசியத்தை பூமியை வைத்தே சொல்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)


தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலத்தைப்போல மற்றவர் அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான தருமம் ஆகும்.

கபீர்தாஸரும் வள்ளுவர் வழியிலே சொல்லும் கருத்தைப் பார்ப்போம்.

खोद खाद धरती सहे, काट कूट वनराय ।
कुटिल वचन साधु सहे, और से सहा न जाय ॥


வெட்டி அகழ்தல் பூமி சகித்தது, வெட்டி முறித்தல் காடும் சகிக்குதே,
வெட்டி ஏச்சை சகித்தனன் சாது, வேறெவரு மிவை சகித்த லரிதே


(வெட்டி ஏச்சு= பயனற்ற ஏச்சு)

க்ஷமா என்ற வார்த்தைக்கு சரியாக பொருள் கொள்ள வேண்டுமானால் மன்னித்து அருளுதல். வெறும் மன்னிப்பது மட்டுமல்ல துன்புறுத்தியவர்கள் நல்ல வழிக்கு திசைதிரும்ப அருளும் பெருங்குணம் அது. அது எப்படி சாத்தியமாகிறது ?
ஞானிகளுக்கு துன்பம் செய்தவனையும் தன்னிலே ஒரு பகுதியாகக் காணக்கூடிய அன்பு நிறைந்திருப்பதாலேயே அது முடிகிறது. தன்னில் ஒருவனாக காணும் பண்பை எளிமையாக விளக்குகிறது நீதி நூல் (341) செய்யுள் ஒன்று.

நாவையே கடித்ததென பல் தகர்க்கும்
பேர் உளரோ;நடக்கும் வேளை,
பூவையே,பொருவு கழல் சருக்கியது என்று
அதைக் களைவோர் புவியில் உண்டோ;
காவையார் உலகம் எனும் பேருடலி
நவையம் போல் கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்க அறிவுடையோர்
கமைசெய்தல் தகுதி யாமால்


(நவை =இகழ்ச்சி; தாவு= துன்பம்; கமை=க்ஷமை, பொறுமை)

உலகம் என்ற பேருடலில் மக்கள் உறுப்புகளைப் போன்றவராம். உறுப்புகள் தவறினால் வருகின்ற துன்பங்களுக்கு உறுப்புகளை யாரும் தண்டிப்பதில்லை. நாக்கைக் கடித்தது என்று பல்லை யாரும் உடைப்பதில்லை, கால் வழுக்கியது என்று காலை வெட்டி விடுவதில்லை. அப்படி அறியாமையால் செய்கிற தவறுகளை பொறுத்துக் கொள்ளக்கூடிய அரிய குணம் மகான்களுக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

உருவ வழிபாடு என்பது மனதை ஒருமை படுத்திக்கொள்ள ஒரு கருவியாகும். அதுவே மித மிஞ்சிப்போய் மூட பழக்க வழக்கங்கள் மண்டிய நிலையில் வேத வழிமுறையை அனுசரித்து ஆரிய ஸமாஜத்தை ஆரம்பித்தவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. .அவர் உருவ வழிபாட்டு முறை வேதங்களில் சொல்லப்படவில்லை என்பதை பல சமஸ்தானங்களின் பண்டிதர்களையும் கண்டு விவாதித்து வெற்றி பெற்று வந்தார். அவற்றில் ஜெய்பூர் ஆஜ்மீர்,ஆக்ரா, குவாலியர், மீரட் கான்பூர் போன்றவை அடக்கம்.

காசியிலும் ஒரு பெரும் விவாத அரங்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அன்று அக்டோபர் 22, 1869, சுமார் அறுபதினாயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் காசி மன்னன் நடுவராக வீற்றிருக்க இருபத்தியேழு பண்டிதர்களை எதிர்த்து விவாதம் செய்ய தனி மனிதனாக அமர்ந்திருந்தார் தயானந்தர்.அவர் தன் கருத்தை நிலைநாட்ட வேதங்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களுக்கு பண்டிதர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

அப்போது ஒரு பண்டிதர் எழுந்து வந்து அவரிடம் இரண்டு பக்கங்கள் அடங்கிய ஒரு கட்டுரையை கொடுத்து ஒரு கேள்வி கேட்டார். தயானந்தர் அதை படிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். அவரிடமிருந்து பதில் ஏதும் வராததால் அரசர் அவசரப்பட்டு காசி பண்டிதர்களே வெற்றி பெற்றதாகக் கூறி விட்டார். பண்டிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி. எங்கும் ஆரவாரம்.சில விஷமிகள் தயானந்தரை அவமதிக்கும் வகையில் செருப்புகள்,கல்,சாணம் முதலியவற்றை அவர் மேல் எறிந்தனர். அதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.ஆனால் அவர் மட்டும் எதுவும் நடவாதது போல அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவருடைய அமைதியே எதிர் தரப்பு அறிஞர்களின் அமைதியை குலைத்தது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்.

தலைமை பண்டிதர் தாராசரண் தர்கரந்தா மற்றும் பாலா சாஸ்திரி இருவரும் எழுந்து தயானந்தரின் கூற்றுகளில் உள்ள உண்மையை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கைவிடமுடியாமல் தாம் தான் வீண் தர்க்கம் செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.காசி மன்னனும் தன் தவறுக்காக வருந்தி அவரை அரண்மனை சிறப்பு விருந்தினராக கௌரவித்து தன் மரியாதையை செலுத்தினான்.

இன்னுமொரு முறை அவருடைய அருவ கொள்கையை எதிர்த்த ஒருவன் வெற்றிலையில் (பான்) விஷத்தை வைத்து கொடுத்து விட்டான். அதை உட்கொண்டதுமே அவருக்கு விஷத்தின் தன்மை புரிந்து விட்டது. தானறிந்து வைத்திருந்த யோக முறைகளின்படி உட்கொண்டதை முழுவதுமாக வாந்தியாக வெளியேற்றி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை. அவரது மனதில் வருத்தம் மேலிட்டது. மக்கள் சொல்ல வந்த கருத்தின் உண்மையை உணராது இப்படிப்பட்ட தவறான வழிகளில் ஈடுபடுகின்றனரே என்பது தான் அதற்குக் காரணம். விஷயம் எப்படியோ வெளிவந்து காவல்துறையினர் அந்த விஷமியை பிடித்து வழக்கு தொடர முற்பட்டபோது தயானந்தர் அதை தடுத்து விட்டார். ”நான் தளைகளை அறுக்க முயல்பவன். நீரோ ஒருவனை தளைக்குள் (சிறைக்குள்) சிக்க வைப்பதிலேயே குறியாயிருக்கிறீர்களே” என்று கூறினார்.

சீர்திருத்தக்காரர்களுக்கு வாழ்நாளெல்லாம் போராட்டம் தான். 1883-ல் செப்டம்பரில் ஜோத்பூர் மஹாராஜாவின் விருந்தினராக தங்கியபோது சோதனை ஆரம்பித்தது. ஒருநாள் இரவு நேரத்தில் அருந்திய பாலில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக தீராத வயற்றுவலி உருவாகியது.அரண்மனை மருத்துவர் அலிமர்தன் கான் கொடுத்த மருந்துகள் எதுவும் பலன் தரவில்லை. தயானந்தரின் உடல் முழுவதும் கொப்புளங்கள் வெடித்து இரத்தம் வடியலாயிற்று. ஒருநாள் யாரும் அருகில் இல்லாதபோது சமையற்காரனான தவூல் மிஷ்ராவை அழைத்தார்.

அவருடைய உடலில் இருந்த புண்களின் தீவிரம் கண்டு அவனால் அழுகையை அடக்கமுடியவில்லை. தான் தீயவர்களின் சேர்க்கையால் பெரும் தவறு செய்து விட்டதாகவும் அவர் அருந்திய பாலில் பொடித்த கண்ணாடி துகள்களை சேர்த்து தந்தவனும் தானே என்ற உண்மையைக் கூறி பாவமன்னிப்புக் கோரி அழுதான்.

அந்த மகானோ ”என் விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கிறது. நீ நொந்து கொள்வதில் என்ன பயன்?” என்று சொல்லி விட்டு பையிலிருந்து இருநூறு ரூபாய்களை எடுத்துக் கொடுத்தார். “இதோ பார் மஹாராஜாவுக்கு இந்த உண்மை தெரிந்தால் உனக்கு பெரும் கேடு விளையும். ஆகையால் இந்த பணத்தை வைத்து கண் காணாத நேபாளத்துக்கு போய்விடு.அங்கே ஒரு புது வாழ்க்கையை துவங்கு” என்று சொல்லி அவனை பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

பகைவனுக்கருள்வாய் -நன்னெஞ்சே
பகைவனுகருள்வாய்.

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? நன்னெஞ்சே

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே !
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே !


என்கிற பாரதியின் வாக்குபடி உள்ளத்தின் நிறைவில் சிறிதும் கள்ளமில்லாமல் வாழ்ந்ததால்தான் மன்னர்களும் போற்றி வழிபடும் அளவிற்கு தயானந்தரின் பெருமை உயர்ந்திருந்தது.

ஜோத்பூர் மன்னன் மவுண்ட் அபூவில் தயானந்தரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அவரது பல்லக்கை தானே சிறிது தூரம் சுமந்து சென்று வழியனுப்பி வத்தான். சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று மாலை ஆறு மணியளவில் தன் சீடர்கள் அருகில் அமர்ந்திருக்க காயத்ரி மந்திரம் செபித்து ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் தேகத்தை விலக்கி முக்தி அடைந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரியசமாஜம் பல முன்னேற்றக் கருத்துகளையும் மாற்றங்களையும் நாட்டில் ஏற்படுத்தியது. இன்று வட நாடு முழுவதும் பரவி இருக்கும் DAV(Dayanand Arya Vidyashala) கல்வி நிலையங்கள் சுவாமி தயானந்தரின் சீடர்களால் துவக்கப்பட்டவையே ஆகும்.

வள்ளுவர், கபீர், பாரதி்யார், நீதிநூல் போல் எல்லோரும் வலியுறுத்துவதும் ஒரே கருத்தைதான்.

பொ்றையே சத்தியம், பொறையே தர்மம்
பொறையே யோகம், பொறையே யாகம்
பொறையே அஹிம்சை, பொறையே கருணை,
பொறையே நியதி, பொறையே யாவும்.

தயானந்தரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே

Friday, February 06, 2009

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ

கதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம் நம் கண் முன்னே உலவும். நமக்கு தெரிந்த ஒருவரை நினைவூட்டும். பாத்திரத்தின் பெயர் மறந்தாலும் குணாதிசயம் நினைவிலே நின்றுவிடும்.

கபீர்தாஸரின் ஒரு ஈரடியை படிக்கும் போது அப்படி ஒரு பாத்திரம் நினைவில் நிழலாடியது. சிவசங்கரி அவர்களின் அப்பாத்திரத்தை நினைவுக்கு கொண்டு வர அவர்களின் புத்தகத்தை தேடிப் பிடித்தேன்.

குணசித்திரப் பகுதி மட்டும் இங்கே:

”என்னப்பா சௌக்கியம்தானே?” என்று ஒரு சின்னக் கேள்வியைக் கேட்டதும் வழக்கம் போல பொருமித் தீர்த்தான் (பாண்டியன்).

”எங்கங்க நல்லா இருக்க விடறாங்க! நினைச்சதை செய்ய,பேச சுதந்திரமில்லாத வீட்டுல பிள்ளையா பிறந்திட்ட எனக்கு சந்தோஷமா பேச,சிரிக்க யோக்கியதை ஏதுங்க? எஞ்சினீரிங் படிக்கணும்னு விருப்பபட்டேன். அப்பா தடுத்திட்டாரு.சரி விவசாயத்துல புதுசா எதையாவது பண்ணணுவம்னு நினைச்சேன். தாத்தா அதெல்லாம் எதுக்குப்பானிட்டாரு.மனசுக்கு புடிச்சவளை கட்ட அம்மா தடை விதிச்சிட்டாங்க.....செக்கு மாடு கணக்கா வாழ்க்கை ஓடுது.மொத்தத்துல லைஃப் ரொம்ப போருங்க..”

நூற்றுக்கிழவன் மாதிரி அங்கலாய்க்கும் பாண்டியனின் வயசு என்ன தெரியுமா? இருபத்தி மூன்று.

கண்ணியமான,கட்டுப்பாடான,அடக்க ஒடுக்கமான குடும்பம்.வசதியில் எந்த குறையும் இல்லை.

என்ஜீனீரிங் படிக்க விரும்பினேன்,நடக்க விடவில்லை என்று ஆற்றாமை கொள்ளும் பாண்டியன் படித்தது பத்தாவது மட்டுமே.காரணம் படிப்பு ஏறவில்லை.எட்டாவது படிக்கும் போது பணக்கார நண்பன் ஒருவன் ஏற்காடு கான்வெண்ட் பள்ளிக்கு படிக்கப் போக,தானும் அந்த மாதிரி பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்று-தான் அவ்வப்போது பாடங்களில் வாங்கும் முட்டைகளை மறந்து-பாண்டியன் அடம் பிடித்தான்.

“எதுக்குடா தம்பி? எங்களுக்கு இருக்கிறவன் நீ ஒருத்தன் தானே...இங்கே இல்லாத படிப்பா?” என்றார் தந்தை

“நிச்சயம் இல்லாத படிப்புதான். அந்த கான்வெண்டுல படிச்சா என்ஜினீரிங் கல்லூரியிலே இடம் சடக்குன்னு கிடைக்குமாம்,ரவி சொன்னான்.”

“அந்த படிப்பெல்லாம் உனக்கெதுக்கு? உன்னைப் பிரிஞ்சு உங்கம்மா இருக்க மாட்டா...”

பேச்சு அத்தோடு முடிந்தது. ஆனால் ‘ஆசைப்பட்ட படிப்புக்கு அப்பா சம்மதிக்கவில்லை என்று முனகத் துவங்கி,அதையே சாக்காக வைத்து பத்தாவதோடு நிறுத்தினான்.

விவசாயத்திலும் அதே கதைதான். நிலத்தில் இறங்கின அன்றே டிராக்டர் அது இது என்று பட்டியல் போட்டவனிடம் பழங்கால மனிதரான தாத்தா “முதல்ல தொழிலை சரிவர புரிஞ்சுக்க அப்புறமா பாக்கிய பேசிக்கலாம்”என்றதும் விவசாயம் பற்றிய ஆர்வம் புஸ்வாணமாயிற்று.

பாண்டியன் யோசிக்காமல் தட தடவென்று திட்டம் தீட்டுவதில் மன்னன். அதைக் கேட்டு யாராவது இது சாத்தியமா? என்று புருவத்தை தூக்கினால் போயிற்று- அதோடு அந்த விஷயம் டமால்.அடுத்த விஷயத்திற்கு தாவி விடுவான்.


(அத்யாயம் 6 - சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது ? வானதி பதிப்பகம் 1991)

இளைஞர்களின் பெரும்பாலானோர் போக்கு இப்படித்தான் இருக்கிறது. கஷ்டங்களை அறியாததால் குறிக்கோள் என்று பிரமாதமாக ஒன்றும் இருப்பதில்லை. எனவேதான் சக தோழர்களைக் கண்டு கண்டதே காட்சி கொண்டதே கோலமாக திகழ்கிறார்கள்.கடின உழைப்பு அதன் மேன்மை இவற்றைப் பற்றிய ஆழமான உணர்வுகள் எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை. பலர் சோம்பேறிகளாய் விடுவதற்கும் அந்த வசதியே காரணம்.

“அவன் இந்த பக்கத்து துரும்பை கூட எடுத்து அந்தண்டை போடமாட்டான்” என்று சிலரைப் பழித்துக் கூறக் கேட்டிருக்கிறோம்.

அதையே கபீர் ’விரல்களை கூட அசைக்க விருப்பமில்லா சோம்பேறிகள்’ என்று சொல்கிறார்.

श्रम ही ते सब कुछ बने,बिन श्रम मिले न काहि ।
सीधी अंगुली धी जम्मो, कबहूं निकसै नाही ॥


உழைப்பா லுருவாகும் யாவும்,உழைப்பின்றி வருவன இல்லை
விறைத்த விரல்கள் எவையும், பற்றியப் பொருட்களு மில்லை


கீழே கிடக்கும் ஒரு சாதாரண பொருளை எடுத்து மேசை மீது வைப்பதற்கு கூட குனிந்து,விரல்களை மடக்கி பொருளை பற்றி எடுக்க வேண்டியிருக்கிறது.

விரல்கள் விறைத்திருப்பது என்பது செயலில் விருப்பமற்ற நிலையை குறிக்கிறது.

நம்மூர் மொழியில் சொல்வதானால் இவர்கள் உரித்த வாழைப் பழம் கேட்பவர்கள். கபீர்தாஸரின் ஈரடியை வாழைப்பழ உவமையை வைத்துச் சொல்வதானால்

உழைப்பா லுருவாகும் யாவும்,உழைப்பின்றி வருவன இல்லை
விறைத்த விரல்களால் யாரும்,உரித்த பழங்களு மில்லை


(இங்கே பழத்தை ஞானத்திற்கும் விறைத்த விரல்களை விருப்பமற்ற மனப்போக்கிற்கும் உதாரணமாகக் கொள்ளவும்)

மனம் ஒரு விஷயத்தில் நாட்டம் கொள்ளாது போனால் அது முக்கியமான கடமைகளையும் தள்ளிப்போடச் செய்யும்.அது உழைப்பிலே கவனம் குன்றியதற்கான அறிகுறி.
அப்படி ஒரு கவனக்குறைவு இயற்கையின் நியதியில் ஏற்பட்டால் என்னவாகும் ?

உழைப்பு என்பது இறைவனின் வடிவம் அல்லது இயற்கையின் நியதி என்பர் பெரியோர்.அண்டத்தில் கோள்கள் யாவும் ஒரு நியதியின் படி தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. பருவ காலங்களும் அதற்குரிய காலத்தில் வந்து போகின்றன.நம்முடைய உத்தரவுக்கு காத்திராமலே இருதயம்,சுவாச உறுப்புகள் ஜீரண உறுப்புகள் யாவும் விடாமல் தத்தம் கடமையை செய்து வருகின்றன.

மனிதனுக்கும் உழைப்பு விதிக்கப்பட்டிருக்கிறது. அதுவே இறைவனைத் தேடுவது. ஆனால் மனமே ஒரு வில்லங்கமாக குறுக்கே நிற்கிறது. அது பாம்பின் வாய் தவளை போல் மாய வலையில் விழுந்து ஆன்ம சாதனையை விட்டு பிறவியை வீணடிக்கிறது.

எனவே தான் பட்டினத்தார் சொல்கிறார்;

அற்புதமாம் இந்த உடல் ஆவி அடங்கும் முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமை பெரு வாழ்வை நம்பிச்
சற்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே.


கபீர் ஞானியாக இருப்பினும் தன் தொழிலான துணி நெய்வதை விடாது நடத்தி வந்தார்.ஒருமுறை கோவிலிலிருந்து ராம்லாலாவுக்காக புது வஸ்திரத்திற்கான வேண்டுகோள் வந்தது.உற்சாகத்தோடு தன்னை ராம செபத்தில் மறந்து கபீரும் துணி நெய்து கொண்டே இருந்தார். அவரது மகன் ”போதுமப்பா.நீர் நெய்து இருப்பது அந்த விக்கிரகத்திற்கு வேண்டியதை விட பல மடங்கு மிகப்பெரியது” என்று சொல்லி அவரை நிறுத்தினான். அதை அப்படியே வெட்டிக் கொடுத்து “போ உடனே இதை கோவிலுக்கு சென்று கொடு “என்றார் கபீர்.

“இவ்வளவு பெரியது எதற்கு?” என்று கேட்டான் மகன்.“பரவாயில்லை,நீ போய் கொடு” என்று அனுப்பி வைத்தார்.அங்கே சென்று ராம்லாலாவுக்கு அணிவித்த போது நெய்யப்பட்டத் துணியின் அளவு மிகச் சரியாக இருந்தது !

கபீர் சுட்டிக்காட்டியது என்ன? கடவுளுக்கென்று நீ செய்யும் எதுவும் அதிகமாகி விட முடியாது.அவன் அத்தனையையும் ஏற்று தனக்குள் அடக்கிக் கொண்டுவிடுவான்.அதனால் வாழ்நாள் முழுதும் அவனுக்காகவே வாழலாம். அதனால் நமக்கு கிடைக்கப்போவது ஆனந்தமே.

அந்த ஆனந்தத்திற்காக உழைக்கும் வழியை பட்டினத்தார் சொல்கிறார்.

உழப்பின் வரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுறவு வுளவோ
அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கி தூர்வை செய்து

அன்பென் பாத்தி கோலி முன்புற (5)
மெய்யெனும் எருவை விரித்தாங்கு ஐயமில்
பத்தித் தனிவித்து இட்டு நித்தலும்
ஆர்வத் தெள்நீர் பாய்ச்சி.......
.................
.................
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பைய பழுத்துக் கைவர (25)
எம்மானோர்கள் இனிதினிது அருந்திச்
செம்மாந்திருப்பச்

அவரே மேற்கொண்டு இதில் ஈடுபாடு இல்லாமல் காலம் கழிப்பவரைப் பார்த்து தொடர்கிறார்

சிலர் இதின் வாராது
மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக (30)
.......
.......
துன்பப் பலகாய் தூக்கிக் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவாது (40)
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே



பட்டினத்து அடிகள் உழப்பின்வாரா உறுதிகள் உளவோ என்று சொல்லும் போது வெறும் வெளி வாழ்க்கைகாக மட்டுமில்லாமல் உள்முகமாக செய்ய வேண்டிய சாதகனின் உழைப்பையும் குறிக்கிறார்.

மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் எந்த செயலும் உழைப்புதான். Ramakrishna was inactive outside but intensely active inside whereas Vivekananda was intensely active outside but totally inactive inside என்று சொல்கிறார் சுவாமி சித்பவானந்தர்.

வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கு உடல் உழைப்பு தேவைப்படுகிறது. அருட்பசி வரும் போது உழைப்பு மனதால் செய்யப்பட வேண்டியதாகிறது.

பட்டினத்து அடிகள் போல ஞானியல்ல திம்மக்கா.

படிப்பறிவற்ற இவர் மணமாகி குழந்தை பேறு இல்லாமல் பல நிந்தனைகளைக் கேட்க நேர்ந்தது. பலர் வற்புறுத்தியும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் கணவர் சிக்கையா.கணவனும் மனைவியுமாக வாழ்க்கைக்கு ஒரு பொருள் தேடினர்.

தென்னை மரத்து மட்டை விழுந்த பின்பும் அது கிளைத்த இடம் மரத்தில் ஒரு வடுவாக நிற்கிறது. அது போல தமக்கு பின் இந்த சமுதாயம் த்ம்மை நினைவில் வைக்க வேண்டும் என்று விரும்பினர்.

குழந்தை வரம் வேண்டுவது எதற்காக? பிற்காலத்தில் தமக்கு ஆதரவாக இருப்பர் என்றுதானே. நமக்கு மக்கள் இல்லாமல் போனால் என்ன மரங்களையே குழந்தைகளாக வளர்ப்போம்.அவை பலருக்கும் பலகாலத்துக்கும் ஆதரவு தருமே என்ற எண்ணம் தோன்றியது. எண்ணம் உடனே செயல் வடிவம் கொண்டது.

அருகே இருந்த பாறை பெயர்க்கும் க்வாரியில் கல்லுடைத்து தினசரி கஞ்சிக்கான வருவாய் சேர்த்தார் திம்மக்கா. தேக நலம் சரியில்லாத சிக்கையா ஆடுகளை மேய்த்து வந்தார்.எஞ்சிய நேரத்தில் கணவனும் மனைவியுமாக ஆலமரத்து கன்றுகளை பதியன் செய்து மழைகாலத்தில் நட ஆரம்பித்தனர். முதல் வருடம் பத்து அடுத்த வருடம் பதினைந்து அதன்பின்னர் இருபது என்று கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றனர்.(மூன்றாவது வருட கடைசியில் பராமரிக்கப்பட்ட கன்றுகள் 45)

அப்படி, ஹுலிக்கல் மற்றும் கடூருக்கு இடையே இருக்கும் நான்கு கி.மீ நீளமுள்ள அப்போதைய மண் சாலையில் அவர்கள் வளர்த்த குழந்தைகள் 294! நாற்பது வருடங்களுக்கு முன் அவைகளை காப்பாற்ற குடம் குடமாக நீரை சுமந்து மேலும் கீழுமாக தினம் பலமுறை அந்த சாலையில் நடந்திருக்கிறார்கள். முதல் வருடத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் நீரூற்றுவது அவசியம்.மரக்கன்றுகள் அதிகரிக்கும் போது நீரூற்றும் முறை நாட்களும் மாறி மாறி வரும். அதனால் தினமும் நீர் குடத்தை இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாக பல கிலோமீட்டர் நடப்பது வாடிக்கையாய் போனது.

மேலும், ஒவ்வொரு மரக்கன்றையும் ஆடுமாடுகள் தின்றுவிடாமல் இருக்க சுற்றிலும் முள்ளை வெட்டி போட்டு பாதுகாத்து வந்தனர். அப்படிப்பட்ட பாதுகாப்பு பத்து வருடங்கள் வரை கூட தேவைப்படுமாம். அன்று அவர்களைக் கண்டு சிரித்தவர்கள் உண்டு. ஆனால் உதவியவர்கள் இல்லை.

அமைதியாக ஒரு வேள்வி நடத்திக் கொண்டிருந்தனர் சிக்கய்யாவும் திம்மக்காவும். மனம்,வாக்கு,காயம் அந்த ஒரே செயலில் ஈடுபட்டிருந்தது.
இன்று அந்த மரங்கள் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்குவதுவதற்கு இடமும் உணவும் கொடுப்பது மட்டுமன்றி ஆடுமாடுகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் நிழலும் தந்துதவுகின்றன. மரங்களின் இன்றைய மதிப்பு 15 லட்ச ரூபாய்கள். அவைகள் அப்பகுதியின் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு உதவியிருக்கின்றன. இவ்வகையில் அவைகளால் சுற்று சூழலுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் பயனோ பல கோடிகளுக்கும் மேல் என்கிறது FAO, சர்வதேச நிறுவனமான Food Agriculture Organisation .

திம்மக்கா 1991ல் கணவனை இழந்தார். 1995-லிருந்து அவர்களது உழைப்பின் பெருமை உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. பல தேசீய சர்வதேச பரிசுகள் குவியத் தொடங்கின. அவற்றின் பொருள் அவருக்கு புரியவில்லை. அவற்றை தன் குடிசையில் வைத்துக்கொள்ள இடமும் இல்லாமல் திகைக்கிறார் திம்மக்கா.அவருடைய வாழ்க்கை முறையில் எந்த அவருடைய துக்கம் தன் கணவன் இவற்றை பகிர்ந்து கொள்ள இல்லையே என்பது தான்.முடிந்தால் தன்னுடைய சிறு கிராமத்திற்கு ஒரு மருத்துவ மனை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதற்கு மேல் ? அடுத்த பிறவியில் ஒரு மரமாக பிறக்க வேண்டும்.

இதை விட சித்த சுத்தி உடைய ஒரு விண்ணப்பம் இருக்க முடியுமா? பலன் கருதாத உழைப்பில் தன்னைத் தேய்த்து கொண்ட அவரும் ஒரு யோகிதான்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் பிறரது நன்மைக்காக செலவழிக்கப்படும் போது அது பயனுள்ள உழைப்பாகிறது. அங்கே லாபநஷ்ட கணக்கு இல்லை.அப்படி செய்யும் போது அதுவே இறைவன் ஆராதனையாகிறது.

ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப்பின் மூலம் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வழியை திம்மக்கா நமக்கு புகட்டி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.