Thursday, November 19, 2009

உடமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

சக்கிலியன் ஸைமன் குடிசையின் முன்னே பெரிய கோச் வண்டி வந்து நின்றது

மூன்று குதிரைகளால் இழுக்கப்பட்ட ஸ்லெட்ஜ்-கோச்சில் அந்த வட்டாரத்தின் மிகப் பெரும் சீமான் ஸைமனின் குடிசைக்கு முன்னே வந்து நின்ற போது ஸைமனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. குடிசையின் தாழ்வான கதவில் தலையை குனிந்து உள்ளே வந்த அவனைப் போன்ற ஒரு ஆகிருதி, தேககாந்தியை ஸைமைன் கண்டதில்லை. பின்னாலேயே அவன் வேலைக்காரனும் உடன் வந்து நின்றான்.

அவன் பேச்சும் போக்கும் ஆணையிடுவது போன்று இருந்தது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப் பட்ட மிக விலையுயர்ந்த பதப்படுத்திய தோலைக் காட்டி ’இது போல் தோலைக் கண்டிருக்கிறாயா’ என்று கேட்டான். ஸைமன் இல்லையென்று தலையசைத்தான். ’இதன் விலை தெரியுமா உனக்கு?’ என்று மிரட்டுவது போலக் கேட்டான். ’இருபது ரூபிளாக்கும்’ என்றதும் ஸைமன் வாயடைத்து நின்றிருந்தான்.

நடக்கும் போது சுருக்கங்கள் விழாது, ஒரு வருடத்துக்கு உழைக்கக்கூடிய,
குதிகால் உயரம் உள்ள முழுக்காலணிகளை தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று சீமான் கேட்டான். ஸைமன் மைக்கேலைப் பார்த்தான். மைக்கேல் கனவானைப் பார்க்கவில்லை. அவன் பின்னாலிருந்த சுவர் மூலையை உற்று நோக்கி கொண்டிருந்தான். திடீரென்று அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. முகத்தில் ஒரு புதிய ஒளி தோன்றியது.

”என்ன தயார் செய்ய முடியுமா?” என்று சீமானின் குரல் அதிகாரத் தொனியில் வினவியது. ”கண்டிப்பாக செய்து தருகிறேன்” என்று மைக்கேலின் சம்மதம் இல்லாமலே சொன்னான் ஸைமன். “நினைவிருக்கட்டும், அதில் சுருக்கங்கள் வரக்கூடாது. சரியாகத் தைக்காமல் பின்னால் ஏதேனும் பிரச்சனை வந்தால் உங்களை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன்” என்று சொல்லியவாறே தன் ஒரு காலை நீட்டினான். உடனே அவனது வேலைக்காரன் அவனது காலணியை விலக்கினான். சீமான் குளிருக்காக அணிந்த கால் உள்ளுறையும் மிக விலையுயர்ந்தது என்பது தெரிந்தது. ஸைமன் அவன் பாதங்களை ஒரு தாளில் வரைபடமாக பதிவெடுத்துக் கொண்டான்.

சீமானின் மிடுக்கான பேச்சும் தோற்றமும் ஸைமனுக்கும் அவன் மனைவிக்கும் மிரட்சியை உண்டு பண்ணியது. அவன் திரும்பி வெளியே செல்ல எத்தனித்த போது நிமிர்ந்த தலை குனிய மறந்ததால் வாயில் நிலையில் மோதிக் கொண்டது. தலையைத் தேய்த்தவாறு மீண்டும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே கோச் வண்டியில் ஏறி சென்றான் அந்த சீமான்.

மைக்கேல் ஸைமனிடம் வந்து சேர்ந்து சில வருடங்கள் ஓடி விட்டிருந்தன. அவன் வந்து சேர்ந்த விதமே விசித்திரம். மைக்கேல் அவசியமின்றி பேசுவதே இல்லை. எவ்வளவு தேவையோ அவ்வளவே பேசினான். அவன் முகத்தில் வருத்தமோ சந்தோஷமோ கண்டதில்லை. மூன்றே தினங்களில் பல வருட அனுபவமுள்ள ஒரு சக்கிலியன் ஒப்ப வேலையைக் கற்றுத் தேர்ந்தான். அவனுடைய திறமையில் முழு நம்பிக்கை உடையவனாய் இருந்தான் ஸைமன். சீமான் விட்டுச் சென்ற தோல் துண்டை எடுத்து மைக்கேல் வெட்ட ஆரம்பித்தான். ஆனால் மேற்கொண்டு அவன் அதை செருப்பாக தைத்துக் கொண்டிருந்தான். பாதங்களை மூடும் முழுக் காலணியாக வடிவமைக்கவில்லை.

ஒருபுறம் அவன் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஸைமன் அவன் போக்கிற்கே விட்டு விட்டான். மைக்கேலின் எந்த முடிவும் தவறாக இருக்காது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். அன்று மாலைக்குள்ளாகவே மீண்டும் அந்த குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த வேலைக்காரன் சீமான் கொடுத்த அந்த தோலை திருப்பி தரும்படி சீமாட்டி பணித்ததாகவும் அந்த தோலில் சீமானின் காலளவுக்கு ஒரு செருப்பு போதுமென்றும் கூறினான்.

ஸைமனின் ஆச்சரியம் எல்லை கடந்தது. ஏனிந்த மாற்றம் என்று வினவினான். போகும் வழியிலேயே சீமான் உயிர் துறந்ததாகவும் அவனுடைய பிணந்தான் வீடு சென்று இறங்கியதாகவும் சொல்லிய வேலைக்காரன் இப்போது தேவைப்படும் செருப்பு அவருடைய இறுதி யாத்திரைக்கு எனவும் தெரிவித்தான். தயாராக இருந்த செருப்பையும் மிச்சம் இருந்த தோல் பகுதிகளையும் சுருட்டிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் ஸைமன்.


WHAT MEN LIVE BY ? [மனிதர் வாழ்வது எதனால் (நிர்ணயிக்கப்படுகிறது)? ] எனப்படும் லியோ டால்ஸ்டாயின் கதையிலிருந்து ஒரு பகுதியே மேலே படித்தது. இக்கதையில் மைக்கேல் ஒரு தேவதூதன். கடவுளின் ஆணை ஒன்றை மீறியதற்காக பூமியில் மூன்று கேள்விகளுக்கு விடையறிந்து வர அனுப்பப்பட்டவன். அந்த மூன்று கேள்விகள்:

1) What dwells in men ? -- மனிதருள் நிறைந்திருப்பது எது ?

2) What is not given to him ?- அவர்களுக்கு அளிக்கப்படாதது எது ?

3) What men Live by ? -மனி்தர் வாழ்வது எதனால் ?

இரண்டாவது கேள்விக்கான விடையை அந்த சீமானின் வருகை மூலம் அறிந்து கொண்டதாலே அவன் முறுவலித்தான்.

யாருக்கு எப்போது எது தேவை என்பதை கடவுள் மட்டுமே அறிவான். ”தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது”. அந்த சீமானின் வாழ்க்கை மூலம் மைக்கேல் தெரிந்து கொண்ட விடை இது.
{முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடை ’அன்பு’ என்பது கதையோட்டத்தில் விளக்கப்படுகிறது.}
சில நிமிடங்களிலே உயிர் போகப் போகின்றத் தருணத்திலும் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உழைக்கக்கூடிய காலணிகளை கேட்க்கும் சீமானைப் போன்றவர்களே உலகத்தோர் என்பதை மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளார் டால்ஸ்டாய் அவர்கள். இதுவே நிலையாமை.

’உலகத்திலேயே மிக ஆச்சரியம் தரும் விஷயம் யாது?’ என்கிற யக்ஷனுடைய கேள்விக்கு தருமபுத்திரர் கொடுத்த விடையும் நாம் யாவரும் அறிந்ததே. தினம் தினம் இறப்பவர்களை கண்முன்னே கண்டு கொண்டே இருப்பினும் நாம் மட்டும் சாஸ்வதம் என்கிற வகையில் செயல்படும் மனிதரை விட வேறு என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

திருமூலர் இந்த நிலையாமையை நாடகப் பாணியில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு வரியிலும் ஒரு காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே


[அடப்பண்ணி= உணவை சமைத்து ; அடிசில் = சமைக்கப் பட்ட உணவு; மடக்கொடி =இளம் மனைவி ; இறை= சிறிது]

நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைவன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

[கடைமுறை =இறுதி முறையாக ; நம்பி= தலைவன்; நடக்கின்ற வாறே= நடந்து போகும் விதம்]

தில்லியில் ஒரு மிகப் பெரும் நிறுவனம், பத்து மாடி கட்டிடம் (Corporate Office) ஒன்றை, மூன்று வருட காலத்தில் கட்டியது. அதன் சேர்மனாக இருந்தவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து அவரது இளைய சகோதரர் புதிய கட்டிடத்தில் சேர்மனாகப் பதிவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகி தேதியும் குறிப்பிடப்பட்டு திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவிட்டன. சேர்மனுக்கான அலுவலகம் பலருடைய உழைப்பால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. ஆயின் இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் பதவியேற்க வேண்டிய அந்த இளைய சகோதரர் மாரடைப்பால் திடீரென்று காலமானார். அப்போது நிறுவனத்தில் நிலவிய ஏமாற்றத்தை சொல்லி முடியாது.

அத்தகைய சோக நிகழ்ச்சிகளைக் காணும் போது கபீர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மை சுரீரென்று் உறைக்கிறது.

कबीरा गर्व न कीजीयॆ, ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना, ऊपर जम्सी घास

செருக்கு வேண்டா கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ!, காலன் கிடத்தும் இடங் கண்டு


(புல் முளைக்கும் என பொருள்வரும் ’ஜம்ஸி காஸ்” என்று கபீர் சொல்லியிருப்பது எதுகை அமைப்புக்காக எருக்கு முளைப்பதாக மாறியுள்ளது )

காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகுக்கு வேண்டியவற்றை சேர்த்தாகி விட்டது. குடும்பத்தினருக்கும் இன்னொரு தலைமுறைக்கு வேண்டியது இருக்கிறது.

தேவைகளை சுருக்கிக் கொள்ளத் தெரிவதில்லை. ஒன்று தொட்டு ஒன்று, எதன் காரணமாகவோ அது வளர்ந்து கொண்டே போகிறது. எதையோ பற்றிக் கொண்டு எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில் இவையெதும் உடன் வரப்போவதில்லை, தெரியும். உடன் வரக் கூடியதை சம்பாதிக்க மனம் ஈடுபடுவதில்லை. ’காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்பதன் பொருள் தெரிந்தும் மனதுள் இறங்குவதில்லை. அது தன் போக்கில் இழுத்துக் கொண்டே போகிறது. அப்போது அது சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகள்தான் எத்தனை எத்தனை! அதை அதிவீரராம பாண்டியர் வரிகளில் பார்ப்போம்.

உடமையும் வறுமையும் ஒரு வழிநில்லா

குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ் சாலை அடையினும் அடைவர்

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்

குன்றத்தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

எழுநிலை மாடம் கால்சாய்ந்துக்குக்
கழுதை மேய் பாழாகினும் ஆகும்


[ நண்ணுதல் = சேர்தல்; அறக்கூழ் சாலை= தர்ம சத்திரம் ]

காலன் எவருக்கும் தனி மரியாதை கொடுப்பதில்லை. அரண்மனை வாசமிருக்கும் மன்னனும்,வெளியே திரியும் பிச்சைக்காரனும் அவன் புத்தகத்தில் ஒன்றே.

அதனால் இடையே ஏற்படும் பலவிதமான செருக்குகள் இறுதியில் அர்த்தமில்லாமல்போய்விடுகிறது . குலச் செருக்கு,செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு,அதிகாரச் செருக்கு இப்படி பலவாறாக நம்மை ஆட்டிப் படைக்கும் மாயை ஒரே கணத்தில் அவற்றை ஏதுமில்லாமலும் செய்து விடுகிறது.

இப்படி எத்தனைத் தினங்கள் (அல்லது பிறவிகள் )கழியப் போகின்றன. மனதிற்கு இவைகளிலுள்ள நிலையாமை ஏன் புரியாமல் போகிறது? இதை குறிப்பிடும் வகையிலும் கபீர் சொல்லும் இன்னொரு ஈரடி:

क्या करियॆ क्या जॊडिये, थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


அற்ப வாழ்வு அவனியிலே, அலைவ தென்ன அடைந்த தென்ன
சொற்ப தினமே போயின யாவும், தனம் திவரம் கிருகம் தேகம்

( திவரம்= தேசம், ராஜ்யம் )

இந்த மனம் இறைவன் பெயரில் இருக்கும் சுகத்தை அறியாததனால் தானே இப்படிக் கிடந்து உழலுகி்றது.

அவன் தான் இந்த சக்கரச் சுழலுக்கு அச்சு. வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் ஈ, பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப குலுங்கிக் குலுங்கி பயணம் செய்யும். அது மெள்ள நகர்ந்து அச்சாணியை அணுகுமளவும் ஆட்டம் குறைந்து கொண்டே போகும். கடைசியில் அச்சாணியிலே அமர்ந்து விட்டால் பாதையின் மேடு பள்ளங்கள் அதை பாதிக்காது.

ஆகவே பரம சுகம் தரும் கடவுளின் நாமத்தைப் பிடித்துக்கொள். இறைவனுக்கு அருகே செல்வதற்கு அதுவே வழி. இல்லாவிட்டால் காலன் வாயிலில் மீண்டும் மீண்டும் புகுவதே வேலையாகிவிடும். இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது என்று எச்சரிக்கிறார் கபீர்.

कबीर सब सुख राम है, औरहि दुख की रासी ।
सुर नर मुनि अरु असुर सुर, पडे काल की फांसि ॥


இராம நாமமே பரமசுகம் கபீரா, மற்றன வெல்லாம் துன்பமயம்
தேவ முனிவரும் நராசுரரும், சேர்வரே கடையில் காலன்வயம்

( நராசுரர்= நரர்+அசுரர்)


புரந்தரதாஸருக்கும் அதே கருத்து. ராம ராமா என்னிரோ என்கிற அவருடைய பாடல் ஒன்றை சமீபத்தில் சிருங்கேரி சென்றிருந்த போது நண்பர் ஒருவருடைய மகள் இப்பாடலை பாடக் கேட்டு மனது உருகியது. அதன் ஒலிப்பதிவு இங்கே தரப்பட்டுள்ளது.
[Cam coder -ல் பதிவு செய்தபடியால் சில குறுக்கீட்டு உரையாடல்கள் இடையிடையே கேட்கும். மன்னிக்கவும். சில நல்ல விஷயங்களுக்காக சில அல்லல்களைப் பொறுத்துக் கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்
:) ]

சிறுமியின் பெயர் ரம்யா. எளிதாக புரியும் வார்த்தைகள்தான், ஆயினும் மொழி பரிச்சயமில்லாதவர்கள் பாடலைத் தொடர அதன் பொருள் கீழே தரப்பட்டுள்ளது. ’என்னிரோ’ என்றால் சொல்லுங்கள் என்று பொருள் படும்.
sringeri.mp3


கட்டிய மனைவியும் கூட வர மாட்டார் ;ராம ராமா என்று சொல்லுங்கள்.
தன்னவர் என்று வளர்க்கப்பட்ட மக்களும் தன்னவர் ஆவதில்லை; ராம ராமா என்று சொல்லுங்கள்.
நிலம், கால்நடை தான்யம் தனம் யாவும் விட்டு செல்வனவே; ராம ராமா என்று சொல்லுங்கள்.
கெட்ட சம்ஸாரம் இது, சுகம் என்பது கிஞ்சித்தும் இல்லை ராம ராமா என்று சொல்லுங்கள்.
சிருஷ்டியில் முதல்வனான புரந்தர விட்டலனை மறவாது
ராம ராமா என்று சொல்லுங்கள்.
நரஜென்மம் என்பது ஸ்திரமில்லை, அந்த கோமளாங்கன் நாமம் அந்த (கடைசி)வேளைக்கு வராது. ராம ராமா என்று சொல்லுங்கள்.

இப்போதிலிருந்தே இறைவன் நாமத்தை செபித்து பழகாவிட்டால் கடைசி நேரத்தில் அது துணைக்கு வராது என்பதையும் புரந்தரதாஸர் குறிப்பிட்டு சொல்கிறார்.

நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.

Thursday, November 05, 2009

பக்தித் துவாரம் குறுகியது

அந்த சிறுவனை ட்யூஷனுக்கு அழைத்து வந்திருந்தார் அவனுடைய தாய். கபடமற்ற கண்கள். அவன் நெற்றியில் சிறு திருநீற்றுக் கீற்று. பாலமுருகனையே கண்டது போல் இருந்தது. சாதுவான பையன் என்பதை சொல்லத் தேவையே இல்லை.
“ சார், இவனுக்கு எல்லார் கிட்டேயும் நல்ல பேர். டீச்சர்ஸ் கூட அவனைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரிதான் சொல்றாங்க. வீட்டுலேயும் அவனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன்பாட்டுக்கு நேரத்துக்கு எழுந்து, குளிச்சு சாப்பிட்டு ஸ்கூலுக்கு கெளம்பிடுவான். எந்த பிடிவாதமும் கிடையாது. சொன்ன பேச்சை கேட்பான். ஆனா எந்த ஸப்ஜெக்டிலேயும் மார்க் மாத்திரம் வர மாட்டேங்குது. கிட்டத்தட்ட எல்லா ஸப்ஜெக்ட்லேயும் ஃபெயில். எங்களுக்கு என்ன செய்றதுன்னே புரியவில்லை. ஏண்டா! டீச்சர் சொல்றது புரியலையான்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டான். ஸ்லோ லெர்னர். இவன் ஒரு மனுஷனா ஆவானா சார் ? என்று மிகுந்த கவலையுடன் விசாரித்தார்.

இப்படிப்பட்ட கவலைதான் ஞானிகளுக்கும் பல பக்தர்களை காணும் போது ஏற்படுகிறது. அந்த பக்தர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. சராசரி நித்ய கடமைகளை தவறாமல் செய்கின்றனர். ஆனால் அவற்றின் மூலம் கற்க வேண்டிய பாடத்தை மட்டும் கற்றுத் தெளிவதில்லை. இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது. யோகி வேமனாவுக்கும் தன் தாயாரின் விஷயத்தில் அப்படி ஒரு கவலைத் தோன்றியது.

வேமனா ஆந்திராவின் மிகப் புகழ் பெற்ற யோகி. அனு வேம ரெட்டி என்ற அரசனின் தம்பி. இளம் வயதில் வழி தவறியவராய் இருப்பினும் சிவயோகி ஒருவரின் தொடர்பினால் ஞான வழிக்கு திரும்பினார். அவருடைய ஆயிரக்கணக்கானப் பாடல்கள் இன்றும் ஆந்திரத்தில் ஆன்மீக ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது.

அவருடைய தாயார் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினார்.

’நீ திரும்பி வரும் பொழுது இந்த தாமிர தாயத்து தங்கமாய் மாறியிருக்குமா பார்ப்போம்’ என்று ஒரு ரட்சை அணிவித்து அனுப்பி வைத்தார். அம்மையாரும் புரீ காசீ கயா போன்ற பல புண்ணிய தலங்களில் நீராடி கோவில்களில் பூசைகள் செய்து பலமாதங்களுக்கு பின்னர் திரும்பினார். அவருக்கு வேமனா கூறியிருந்தது மறந்தே போயிருந்தது.

வேமனா அவரைக் கண்டதும் தாயத்து தங்கமாய் மாறியதா என்று தாயத்தைக் காட்டச் சொன்னார். செப்பு செப்பாகவே இருந்ததைக் கண்டு ’பக்தியும் சிரத்தையும் இல்லாமல் செய்யும் எந்த யாத்திரைக்கும் பலனிராது’ என்றார். தாயாருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அதெப்படி செப்பு தங்கமாக முடியும் என்று வினவினர்.

’முடியும்’ என்று சொல்லி அந்த தாயத்தை வாங்கி ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சிறிது நீரை சொரிந்தார். யாவரும் வியக்கும் வண்ணம் செப்பு தாயத்து தங்கமாக மாறியது. அதை தாயாரின் கையில் வைத்து ‘உண்மையான பக்தி இருந்தால் நீ இருக்குமிடமே காசி. ஏனிந்த சிரமம்?’ என்று கூறினாராம்.

வேமனா குறிப்பிடும் தங்கம், மனிதர்கள் கோவில் குளம் என்று சுற்றுவதெல்லாம் இறைவனின் பெருமையை உன்னி உன்னி படைப்பில் சர்வமாக வியாபித்து இருக்கும் அவன் பால் அன்பு பெருகி வர வேண்டிய மன மாற்றத்தைக் குறிப்பதாகும். ஆனால் சாமானியர்களான நமக்கோ எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே ஊறி இருப்பதால் உண்மையான பக்தி என்பது என்னவென்றே புரிவதில்லை. இது வகுப்பிலே அமர்ந்திருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவன் போன்றது.

புரியாததன் விளைவாக கடைசியில் பலனேதும் இல்லாமல் போகிறது. வேமனாவின் தாயாரைப் போலே, கிடைக்காத பலனைப் பற்றிய ஞானமும் குறைவே. ஞானிகள் இந்த நிலையை கண்டு பரிதாபம் கொள்கின்றனர். இதை கபீர் இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிடுகிறார்.

जप तप दीखै थोथरा, तीरथ व्रत विशवास ।
सूआ सेमल सेइया, यौं जग चला निरास ॥


செல்வார் யாத்திரை, நேர்வார் நோன்பு, செபதபத்திலு மாசை
இலவு கொத்தும் கிளி போலும், இறுதியில் நிற்பதோ நிராசை


புண்ணியம் வரும் பாவம் போய்விடும் என்று செய்யப்படும் பலவிதமான விரதங்கள், யாத்திரைகள், செப தபங்கள் எல்லாம் கடைசியில் அர்த்தமின்றி போய்விடுவதாக கூறுகிறாரே கபீர் என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் அவற்றிற்கான பலன் எப்போதும் உண்டு. ஆனால் அது பிறவிச் சுழலிலிருந்து விடுதலை தராது. ஞானிகள் எதிர்பார்ப்பது பிறவித் தளையிலிருந்து விடுதலையைத்தானே !

பையன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டும். எத்தனை வருடங்கள் ஒரே வகுப்பில் பெஞ்சை தேய்க்க முடியும்? எனவே தான் கபீர் காலவிரயத்தை இலவு காத்த கிளிக்கு ஒப்பிடுகிறார்.

பரமஹம்ஸர் பக்தியின் நிலையை இரண்டாகப் பிரித்து சொல்கிறார். முதல் நிலை வைதீக பக்தி. இரண்டாம் நிலை பிரேம பக்தி. முதல் நிலையில் சாத்திரப்படி ஏதேனும் வழிபாட்டு முறையை மேற்கொண்டு சிரத்தையுடன் நடத்தி வருவது. அப்படி செய்வதே நாளடைவில் இரண்டாம் நிலைக்கு இட்டுச் சென்று தன்னுடையது என்று எதுவுமின்றி எல்லாம் இறைவனுக்காகவே, இறைவனாகவே காணும் மனப் பக்குவத்தை பக்தன் அடைவது.

நேரத்தில் எழுந்து குளித்து, சாப்பிட்டு பள்ளிக்கு போவது போன்றது வைதீக பக்தி. அங்கே சொல்லிக் கொடுக்கப்படும் பாடத்தை கேட்டுத் தெளிவது பிரேம பக்தி. சத்கர்மங்கங்களிலும் சத்சங்கங்களிலும் தீவிரமான நாட்டம் கொண்டு குரு உபதேசத்தை மனதில் நிறுத்தி கடைபிடிப்பது பிரேம பக்தி. புரிந்து கொண்ட பாடத்தின் இறுதி நிலை என்ன? திருமந்திரம் விடை சொல்கிறது.

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவமாகுமே.

(பயில்வுற்று= பயின்று; துரிசு அற்று=குற்றம் இல்லாத)

உலகில் பெரும்பாலானவர் முதல் இரண்டு வகையில் அடக்கம். சரியை பல தலங்களுக்கும் சென்று பரம்பொருளை வழிபடுவது. கிரியை என்பது மாலை மலர் சாற்றி, அர்ச்சனை, நிவேதனம் செய்து உள்ளும் புறமும் வழிபடு்வது. யோக நெறியில் புகுவதற்கான அருளை பெறும் முன் சரியை கிரியையில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய இருக்கும் வகுப்பில் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படிப்பட்ட பக்தர்களுக்கு இறைவன் அருள் நிலைக்கிறது என்பதை மற்றொரு பாடலில் சொல்கிறார் திருமூலர்.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்குழல் சேர வொண்ணாதே

(ஊனினை நீக்கி= உடற்பற்றை நீக்கி )

கானகத்தில் கிடைக்கும் எல்லா மலர்களையும் மணம் கமழும் சந்தனத்தையும் பூசித்தாலும் உடற்பற்றை நீக்கி உணர்பவர்க்கல்லாமல் இறைவன் திருவடியை அடைய முடியாது.

இந்த ஊன் பற்றை விலக்குவதில் தான் பிரச்சனை. தன்னால் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் குறுக்கே வந்து முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதை ஆணவமலம் என்பர் ஞானிகள். மனதில் ஆணவமலம் இருக்கும் வரை உடற் பற்றும் இருக்கும். அதை முழுவதுமாக மாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை இன்னொரு ஈரடி மூலம் கபீர் விளக்குகிறார்.

भक्ति दुवारा सांकरा, राई दशवें भाय ।
मन तो मैंगल होय रहा, कैसे आवै जाय ॥


பத்தித் துவாரம் குறுகியது, கடுகளவில் பத்தில் ஒன்று
மத்தம் பிடித்தக் களிறது, மனமும் உட்புகும் வழியெது ?


மனதைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் மதம் பிடித்த யானையைப் போன்றதாம். அதனை கடுகின் அளவில் பத்திலொரு பாகம் அளவே இருக்கும் பக்தி எனப்படும் துவாரத்தின் வழியே நுழையச் செய்வது எப்படி என்று வினவுகிறார் கபீர்தாஸ்.

நாக மஹாசயரைப் போல் அன்பே வடிவினராய் தொண்டராம் தொண்டருக்கு...தொழும்பனாய் மாறினால் முடியும்.

அன்பு முதிர்ந்தால் ஆணவம் உதிர்ந்து விடும். அப்போது இறைவன் அவன் நெஞ்சத்தை கோயிலாய் கொள்கிறான்.

அன்பின் முதிர்ச்சியை இன்னொருவர் வாழ்க்கையில் காண்போம். திருமூலர் சொல்லும் ஊன்பற்று நீங்கி எல்லா உயிர்களிலும் இறைவனையே கண்டவர். அவரும் ஒரு தல யாத்திரை மேற்கொண்டார். அவரு்டையது பெரிய யாத்திரை.

முதல் கட்டமாக கங்கையை அடைந்து அங்குள்ள புண்ணிய தலங்களை சேவித்தார். அடுத்த கட்டமாக அங்கிருந்து குடங்களில் கங்கையை நிரப்பி காவடியாக சுமந்து ராமேஸ்வரம் சென்று அங்கே ராமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறே போய்க் கொண்டிருக்கும் பொழுது வழியிலே ஒரு கழுதை தாகத்தால் வாய் உலர்ந்து மரணத்தைத் தழுவும் நிலையை எட்டியிருந்தது. யாத்ரிகரது மனம் மிகவும் இளகியது. சுற்றும் முற்றும் நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. தேடிக் கொண்டு வருவதற்குள் கழுதையின் உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்கிற நிலை.

கையில் இருப்பது சிவனுக்கென கொண்டு செல்லும் கங்கை நீர் மட்டுமே. ஒரு பிராணியின் தாகத்தைத் தீர்க்க போதுமானதா என்பதும் புரிய வில்லை. அந்த ஜீவனிலும் குடியிருப்பது சிவன் தானே. அதைக் காப்பாற்ற பயன்படாத நீர் எவ்வளவு புண்ணிய தீர்த்தமாய் இருந்தென்ன?

உத்தவனுக்கு கிருஷ்ணன் சொல்லவில்லையா ’எல்லாவற்றிலும் என்னையே காண்பாய். என்னை சோதிப்பதற்காக்வே தான் இப்படி ஒரு நிலைமையை காட்டியிருப்பான் போலும்’ என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது. ஒரு உயிரை காப்பாற்றுவதைக் காட்டிலும் பெரிய தர்மம் இருக்க முடியாது என்பதை ஆழமாக உணர்ந்தார். குடத்தில் இருந்த கங்கை நீரையெல்லாம் அந்த அப்பாவி ஜீவனை குடிக்கச் செய்தார். உடனிருந்தவர் ராமேஸ்வரத்திற்கு என்ன செய்வது என்று கேட்டனர். இதோ இதுவே தான் ராமேஸ்வரம் என்று பதில் சொன்னாராம். அவரைப் பொறுத்தவரை எந்த சிவனுக்காக நீரை கொண்டு சென்றாரோ அவனை அது அடைந்து விட்டது.

பக்தியென்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு வழிபாடு செய்த அந்த யாத்ரிகனே ஏகநாத் என்று மகாராஷ்டிரத்தில் போற்றப்படும் மகான். மகாராஷ்டிரத்தில் ஞானேஸ்வரரின் கீதையைப் போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஏகநாதருடைய பாகவதம் மிகவும் போற்றப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். காலத்தால் ஞானேஸ்வரருக்கு பிற்பட்டவர். முன்னூறு ஆண்டுகளுக்கு பிந்தையவர் ஆயினும் ஞானேஸ்வரரின் தரிசனம் கிடைத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஞானேஸ்வரியை செப்பனிட்டு மீண்டும் வெளியிட்டவர் அவரே என்றும் சொல்வர்.

கபீரின் எந்த ஈரடியை யாருடைய பார்வையில் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சுற்றிச் சுற்றி ஒரே மையப்புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆம் அன்பு ஒன்றுதான் அச்சாணியாக உலகைத் தாங்கி நடத்திச் செல்கிறது.