Saturday, February 27, 2010

தோற்பவருக்கு உண்டு அரியிணையே

அந்த காலத்து பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு ‘பிழைக்கத் தெரியாத’ கதாபாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு வயதான தந்தையாகவோ, மூத்த சகோதரனாகவோ அல்லது பள்ளி ஆசிரியராகவோ, ஊர் பெரியவராகவோ சித்தரிக்கப்பட்டிருக்கும்.

அந்த கதாபாத்திரம், தவறான வழிமுறைகளில் வெற்றி பெறுவதை விட நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிறருக்குச் சொல்லிக் கொண்டிருக்கும். படத்தின் முடிவில் தவறானப் பாதையில் ’வெற்றியைத்’தேடிச் சென்றவரெல்லாம் மன்னிப்புக் கோரி நேர்மைக்கு வெற்றியை சூட்டிவிடுவார்கள். மூன்று மணி நேரக் கதையானதால் அந்த வெற்றியை உடனடியாகச் சொல்லித் தீர வேண்டிய அவசியம் கதாசிரியருக்கு ஏற்படுகிறது.

ஆனால் இறைவன், தான் எழுதுகிற நாடகத்தில் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் முடிச்சை அவிழ்த்து விடுவதில்லை.

எழுபது வருடங்களுக்கு முன் ஒரு ஏழை பள்ளி ஆசிரியர் தனது இரண்டு மகன்களை பொறியியல் படிக்க வைத்து மூன்று பெண்களை நல்ல இடங்களில் மணமுடித்து அவர்கள் யாவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். உலகப் போரின் இடையே பலவிதமான பற்றாக்குறைகள். குடும்பத்தில் நிதி நிலைமை எப்போதுமே தட்டுபாடுதான். ஆனாலும் குடும்ப பாரத்தை நேர்மை தவறாது தாங்கினார்.

நல்ல நிலைமை அடைந்த மக்களும் தமது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து நல்ல வேலைகளில் அமர்த்தி அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பி தங்கள் கடமையை தவறாது செய்தனர்.

இதில் யாருடையது பெரிய சாதனை? பல இன்னல்களுக்கு இடையே வசதியற்ற ஆசிரியர் சாதித்ததே பெரியது. ஏனெனில் அவரது மக்களின் சாதனை அவர்களுக்கிருந்த நல்ல நிதி நிலைமையை அனுசரித்து வந்தது. பல்வித வாய்ப்புகள் பெருகியிருந்தது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இடர்கள் மிகவும் குறைவாக இருந்தது.

இள வயதில் வசதியான வாழ்க்கைப் பெற்றிருந்த ஆசிரியரின் பால்ய நண்பர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வயதான ஆசிரியரின் சாதனையை வெகுவாக மெச்சினார். ஏனெனில் தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அவர் பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் ஏதும் செய்திருக்கவில்லை. பொதுவாக குடும்பம் க்ஷீண தசையிலிருந்தது. இப்போது ஆசிரியரின் நிலைமை மிக மிக நன்றாக இருந்தது.

அன்றைய சாமானிய ஆசிரியர் இன்றைய வெற்றியாளராக மாறியிருந்தார். நம் பார்வையில், காலப் போக்கில் ஏற்படுகின்ற மாறுதல்கள் இப்படி வெற்றி என்பதன் அளவு கோலை மாற்றி விடுகிறது.

உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.

உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.

ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும்.

கபீர்தாஸ் சொல்வதைப் பாருங்கள்.

हरिजन तो हारा भला, जीतन दे संसार ।
हारा तो हरि सो मिले , जीता जम के द्वार ॥


நன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே
வென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே


[அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]


கபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.

அவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.

“Master Francis! What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"

[பிரான்ஸிஸ் பெருந்தகையே! ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]

அறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.

ஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.

லயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.

முதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.

புது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.

இப்போது சொல்லுங்கள்! அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா?

சாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.

இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறது

I asked God for strength, that I might achieve
I was made weak, that I might learn humbly to obey..

I asked for health, that I might do great things
I was given infirmity, that I might do better things..

I asked for riches, that I might be happy
I was given poverty, that I might be wise..

I asked for power, that I might have the praise of others
I was given weakness, that I might feel the need of God

I asked for all things, that I might enjoy life
I was given life, that I might enjoy all things


இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.

நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )

எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம். (16: 16)


[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]

பலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வாழ்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர் வென்றார் போவார் எமபுரமே என்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.

இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.

Dearest Lord,
Teach me to be generous.
Teach me to serve you as you deserve;
To give and not to count the cost;
To fight, and not to heed the wounds;
To labor, and not to seek to rest;
To give of myself and not to ask for reward,
Except the reward of knowing that I am doing
YOUR WILL.

Thursday, February 11, 2010

மண்ணே மண்ணை வியக்குது

வங்காளத்தில் சைதன்ய பிரபு ஹரி நாமம் பாடிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். வழியிலே ஒரு வாட்டமடைந்த வண்ணானைப் பார்த்து ’ஹரி போல் ஹரி போல்’ என்று இறை நாமத்திற்கு தூண்டினார். அவனோ சாதுவிடம் தயக்கத்துடன் தனக்கு பாட வராது என்று மறுத்தான். சைதன்யர் விடுவதாயில்லை. அவனும் வழியின்றி அரைமனதுடன் ’ஹரி ஹரி’ என்றான்.

இன்னமும் உரக்கச் சொல் என்று தூண்டினார். இன்னம் இன்னம் என்று ஒவ்வொருமுறையும் உரக்க கூவச் சொன்னார்.அவனுடைய வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அவனையும் இறைப் போதம் பற்றிக் கொண்டது. அப்போது அவனுடைய மனைவி அவனுக்கு உணவு கொண்டு வந்தாள். அவளுக்கும் அது பிடித்துக்கொண்டது. அவளைத் தேடி வேறு சிலர் வந்தனர். அவர்களும் ஹரி ஹரி என்று ஆனந்த கூத்தாடினர். சிறிது நேரத்தில் அந்த கிராமமே ஹரி போதத்தில் திளைக்க ஆரம்பித்தது.

ஹரி நாமம் செய்த வேடிக்கையை சிரித்தவாறே சிறிது நேரம் பார்த்திருந்து சைதன்யர் அங்கிருந்து அகன்றார்.

कबीर हरिरस बरसिया, गिरि परवत सिखराय | 

नीर निवानू ठाहरै , ना वह छापर डाय ||

ஹரி ரசம் பொழியுது கபீரா, மலைமுகடு மடுவெங்கும் பொழியுது

மடுவிலே மட்டும் தங்குது, மலையில் நில்லாது ஓடுது

சாமான்யர்களுக்கு மகாத்மாக்கள் இறையின்பதை சிறிது காலம் அனுபவிக்கச் செய்ய இயலும். ஆனால் அது நிரந்தரமாக தங்குவதில்லை. அதற்கு காரணம் அவர்களிடம் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் மனப் பணிவு இருப்பதில்லை.

புல்லா ஷாவின் கதைக்கு வருவோம். -முதல் பாகத்தைப் படிக்க இங்கே சுட்டவும்

அவரும் சில பக்தர்களுடன் இறைவன் புகழைப் பாடிக் கொண்டு ஆனந்தமாக இருந்தார். அவரது தந்தையாருக்கு விஷயம் தெரிந்து தன் மகனை அந்த தாழ்ந்தவர் கூட்டத்தினடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல மிக்க கோபத்துடன் அங்கே சென்றார். அவரைக் கண்ட புல்லா பாடலானார்.

மலர் மாலை அணிவர் யாவரும்

எந்தை நீ அணிவாய் செபமாலை

உன்னால்

முடியொன்றை அசைக்க இயலாது

மூலி அரைத்து அவிழ்தம் காண்பாய்

மூலியரைத்து அவிழ்தம் காண்பாய்.

சைதன்யப்பிரபு கதையில் கண்டது போலவே புல்லாவின் ஆனந்த நிலை அவரது தந்தையையும் பற்றிக்கொண்டது. அவரும் தன்னை மறந்து பாட ஆரம்பித்தார். கண்டிக்கச் சென்றவர் கருணை வெள்ளத்தில் அமிழ்ந்து போனார்.

பேறு பெற்றவர் ஆயினர் அவர்

பேறு பெற்றவர் ஆயினர்

பிள்ளைத் தருவனே இறைபோதம்

பெற்றவருக்கும் முத்தியே அவனால்

மூலியரைத்து அவிழ்தம் கண்டேன்

மூலியரைத்து அவிழ்தம் கண்டேன்

(மூலி =மூலிகை; அவிழ்தம்= மருந்து)

தாவரங்கள்தான் மருந்துகளுக்கு ஆதாரம்.

ஓம் நமோ ப்ரம்ஹணே, நமோஸ்து அக்னயே, நமஹ ப்ருதிவ்யை, நமஹ ஔஷதேப்ய: என்பது தினசரி சொல்ல வேண்டிய நன்றி செலுத்தும் பிரார்த்தனை. பரம்பொருளுக்கு, அக்னிக்கு, பூமிக்கு, தாவரங்களுக்கு வந்தனம் என்ற பொருளில் சொல்லப்படுவது.

தாவரங்கள் ஆதாரமாக இருப்பதனாலேயே மருந்தை ஔஷதி என்றழைக்கின்றனர்.

அதை நேரே பெறுவது சுலபமல்ல. பக்குவம் அறிந்து பறித்து வந்து தகுந்த சேர்க்கைப் பொருட்களுடன் கலந்து இடித்து, கொதிக்க வைத்து, வடித்து, காலமறிந்து உட்கொள்ளப்படும்போது அது மருந்தாகிறது. அதை நிர்வகிப்பதற்கு வைத்தியன் துணை அவசியம்.

அது போல நமக்குக் கொடுக்கப்பட்ட உடலிலும் தெய்வநிலைக் காண தகுந்த குருவின் உதவித் தேவைப்படுகிறது. இங்கேயும் அரைப்பது இடிப்பது கொதிக்கவைப்பது என பல வழி முறைகளை சீடனின் பக்குவம் அறிந்து குரு வைத்தியம் செய்வார்.

குருவின் வைத்தியம் தொடங்கியது.

ஒருமுறை புல்லே ஷா தன் குரு இனாயத் ஷாவை குடும்பத் திருமணத்திற்கு அழைத்திருந்தார். குருவோ தான் போகாமல் தன் சீடன் ஒருவனை பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். அவரும் குருவைப் போலவே அர்யன் குலத்தை சார்ந்தவராதலால் சையது குலத்தைச் சேர்ந்த புல்லே ஷா குடும்பத்தினர் அவரை தகுந்த முறையில் வரவேற்காமல் அலட்சியப்படுத்தினர். எப்படியோ புல்லா ஷாவும் இந்த தவறுக்கு அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்.

சீடன் திரும்பியதும் திருமணம் பற்றி விசாரித்தார் குரு. நடந்ததை கூறினார் சீடன்.

“ ஓ ! அப்படியா ? அவனால் நமக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இனி நீரின் போக்கு அவனுடைய பாத்தியிலிருந்து உன்னுடைய பாத்திகளுக்கு பாயட்டும்.” என்று தமது அருளின் பாதையை மாற்றிவிட்டார் குரு.

அந்த நிமிடத்திலிருந்து புல்லா அனுபவித்து வந்த ஆனந்தம் மறைந்து விட்டது. இறைக்காட்சியும் மறைந்தது.

இனாயத் ஷா அவரது அருளை மட்டும் நிறுத்தவில்லை. தன்னைப் பார்க்க வரக்கூடாதென்றும் கட்டளையிட்டுவிட்டார்.

பெரும் பணக்காரன் ஒருவன் திடீரென்று ஏழ்மையைத் தழுவினால் அவன் நிலை எப்படியிருக்கும்?

நீரை விட்டு அகலிய மீனைப் போலத் துடிக்கலானார் புல்லா

குருவின் மனம் மட்டும் கல்லாகி விட்டது.

குருவின் பழைய ஆதரவுக்காக புல்லா ஏங்கலானார்.

துளைப்பனவே பிரேமையின் கணைகள்

துளைப்பனவே பிரேமையின் கணைகள்

வாழ்வும் இன்றி மரணமும் இன்றி

என் துன்பதிற்கு ஏது எல்லை

என் முறை கேளாயோ நாதா

பகலிரவு அமைதியிலை

பிரேமைக் கணமும் குறைகிலை

துளைப்பனவே என்னை கணைகள்

என் செய்கேன், என் செய்கேன்

துளைப்பனவே என்னை கணைகள்

[புல்லா ஷாவின் பாடல்களில் கவிதை நயம் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவரது தாய் மொழி பஞ்சாபியில் பாடப்பட்டிருக்கும் பாடல்களின் அழகை ஆங்கில வார்த்தைகள் மூலம் அறிந்து சொல்லப்படும் பொழுது கண்டிப்பாக அவரது கவிதைகளுக்கு ஒப்பாக முடியாது. ஆயினும் அவரது மன ஏக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்பதனால் அவற்றின் சாரத்தை காண்போம்.]

என் தவறேது இதில் ?

என்னைத் தவிக்க விட்டுப் போனான்.

வாளினும் கூராய், வேலினும் பலமாய்

துளைக்குதே பிரேமையின் வலி

தீர்க்கும் வைத்தியன் இல்லை

கணப்பொழுது அமைதியும் இல்லை

ஓ புல்லா !

நாதன் விரும்பினால் மழைபொழியும்

நாளும் மகிழ்ச்சி நிரம்பிடும்.

தவிக்கவிட்டு போவானே

என் தவறேது இதில் ?

----------------- துன்பம் இழைத்து

முகத்தை மறைத்துக் கொண்டாய்

யாரிடம் கற்றாய் இதை ? அன்பே !

உன் பிரேமையில் என்னை இழந்தேன்

உன் கடைக்கண் கிட்டாது கலங்குகிறேன்.

பிரேமை எனும் விடம் குடித்த

மூடனாகி விட்டேன் அந்தோ !

துன்பம் இழைத்து

முகத்தை மறைத்துக் கொண்டாய்.

அவருடைய ஏக்கம் பல வருடங்கள் நீடித்தது. பல பாடல்களில் அவை வெளிப்பட்டது

ஒரு முறை வீதியில் பாட்டுப்பாடி பிழைக்கும் கூட்டத்தினரை அடைந்து அவர்களிடம் பெண் வேடம் பயின்று முகத்தை மறைத்துக் கொண்டு குருவுக்கான ஏக்கத்தை குரு முன்னிலையிலேயேப் பாட இனாயத் ஷா அவரை அடையாளம் தெரிந்து கொண்டார். அவர் மனம் இளகிற்று. சீடன் முற்றும் கனிந்துள்ளான் என்பதை அறிந்து அவனை ஆரத்தழுவி தன் அன்பை முழுவதுமாக வழங்கினார்.

வெளிப்பார்வைக்கு இனாயத் ஷாவின் போக்கு கடுமையாகக் காணப்பட்டாலும் கபீர் அதன் உட்பொருளை விளக்குகிறார்

गुरु कुम्भार सीस कुम्भ है, घडी घडी काडे खोट |  

अन्दर हाथ सवर दे, बाहर मारे चोट ||

மாற்று :

गुरु कुम्हार सिस कुम्भ है, गढ़ि-गढ़ि काढ़ै खोट |
अन्दर हाथ सहाय दे, बाहर मारै चोट ||

குருவே குயவன், சீடனே களிமண், கலம் உருப்பெறும் போதிலே

ஒரு கை உள்ளே தாங்குதே , மறு கை வெளியில் அடிக்குதே

(Picture courtesy createspace.com)

சீடனுக்கு நிலையான இறையனுபவம் தர பல வகைகளிலும் அவர்களை பண்படுத்த வேண்டிய அவசியம் உண்மையான குருவுக்கு வருகிறது. அதுவரையிலும் கடுமையானவர் போலே நடந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அழுதழுது சீடனின் அகங்காரம் எல்லாம் கரைந்து போன நிலையில் மீண்டும் அவனருள் சீடருள்ளே பாய்கிறது.

குரு இனாயத் ஷா கபீரின் மொழிகளை பிரதிபலிக்கும் வகையில் புல்லாவுக்கு அருளினார். அதன் பின் புல்லாவின் ஆன்மீக வாழ்க்கையில் யாதொரு தடையும் இருக்கவில்லை. புல்லாவின் வாழ்க்கை காலம் 1680-1758.

புல்லா ஷாவின் பாடல்களில் அத்வைத அனுபவமே சுட்டிக்காட்டப்படுகிறது. யாவுமே மண்ணிலே தோன்றி மண்ணிலே மறைவதால் காட்சிகள் மட்டும் வெவ்வேறு, அடிப்படையில் யாவும் ஒன்று என்பதை ஒரு பாடலில் சொல்கிறார்.

மண்மிசை, பன்மையில் ஒருமை

மண்ணால் ஆனதே யாவும்

ஓ புல்லா !

மண்ணே குதிரை, மண்ணே வீரன்

மண்ணே மண்ணைத் துரத்துது

மண்ணாலான ஆயுதம் கொண்டு

மண்ணே மண்ணைக் கொல்லுது

மண்ணைப் பிடித்த மண்ணை

மண்ணின் ஆணவம் ஆட்டுது

மண்ணே சோலை மண்ணே அழகு

மண்ணே மண்ணை வியக்குது

மண்மிசை சீவசக்கரம் சுழலுது

மண்ணில் மீண்டும் அது சேருது

புரியா புதிர் இதை அவிழ்த்திடு

ஓ புல்லா

சிரமிசை சுமையை நீக்கிடு

கருத்து நிறைந்த புல்லா ஷாவின் இன்னொரு பாடல்.

புல்லாவின் வரலாறு பற்றி முழுதும் அறிய இந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும்