Saturday, February 27, 2010

தோற்பவருக்கு உண்டு அரியிணையே

அந்த காலத்து பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு ‘பிழைக்கத் தெரியாத’ கதாபாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு வயதான தந்தையாகவோ, மூத்த சகோதரனாகவோ அல்லது பள்ளி ஆசிரியராகவோ, ஊர் பெரியவராகவோ சித்தரிக்கப்பட்டிருக்கும்.

அந்த கதாபாத்திரம், தவறான வழிமுறைகளில் வெற்றி பெறுவதை விட நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிறருக்குச் சொல்லிக் கொண்டிருக்கும். படத்தின் முடிவில் தவறானப் பாதையில் ’வெற்றியைத்’தேடிச் சென்றவரெல்லாம் மன்னிப்புக் கோரி நேர்மைக்கு வெற்றியை சூட்டிவிடுவார்கள். மூன்று மணி நேரக் கதையானதால் அந்த வெற்றியை உடனடியாகச் சொல்லித் தீர வேண்டிய அவசியம் கதாசிரியருக்கு ஏற்படுகிறது.

ஆனால் இறைவன், தான் எழுதுகிற நாடகத்தில் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் முடிச்சை அவிழ்த்து விடுவதில்லை.

எழுபது வருடங்களுக்கு முன் ஒரு ஏழை பள்ளி ஆசிரியர் தனது இரண்டு மகன்களை பொறியியல் படிக்க வைத்து மூன்று பெண்களை நல்ல இடங்களில் மணமுடித்து அவர்கள் யாவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். உலகப் போரின் இடையே பலவிதமான பற்றாக்குறைகள். குடும்பத்தில் நிதி நிலைமை எப்போதுமே தட்டுபாடுதான். ஆனாலும் குடும்ப பாரத்தை நேர்மை தவறாது தாங்கினார்.

நல்ல நிலைமை அடைந்த மக்களும் தமது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து நல்ல வேலைகளில் அமர்த்தி அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பி தங்கள் கடமையை தவறாது செய்தனர்.

இதில் யாருடையது பெரிய சாதனை? பல இன்னல்களுக்கு இடையே வசதியற்ற ஆசிரியர் சாதித்ததே பெரியது. ஏனெனில் அவரது மக்களின் சாதனை அவர்களுக்கிருந்த நல்ல நிதி நிலைமையை அனுசரித்து வந்தது. பல்வித வாய்ப்புகள் பெருகியிருந்தது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இடர்கள் மிகவும் குறைவாக இருந்தது.

இள வயதில் வசதியான வாழ்க்கைப் பெற்றிருந்த ஆசிரியரின் பால்ய நண்பர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வயதான ஆசிரியரின் சாதனையை வெகுவாக மெச்சினார். ஏனெனில் தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அவர் பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் ஏதும் செய்திருக்கவில்லை. பொதுவாக குடும்பம் க்ஷீண தசையிலிருந்தது. இப்போது ஆசிரியரின் நிலைமை மிக மிக நன்றாக இருந்தது.

அன்றைய சாமானிய ஆசிரியர் இன்றைய வெற்றியாளராக மாறியிருந்தார். நம் பார்வையில், காலப் போக்கில் ஏற்படுகின்ற மாறுதல்கள் இப்படி வெற்றி என்பதன் அளவு கோலை மாற்றி விடுகிறது.

உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.

உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.

ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும்.

கபீர்தாஸ் சொல்வதைப் பாருங்கள்.

हरिजन तो हारा भला, जीतन दे संसार ।
हारा तो हरि सो मिले , जीता जम के द्वार ॥


நன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே
வென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே


[அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]


கபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.

அவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.

“Master Francis! What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"

[பிரான்ஸிஸ் பெருந்தகையே! ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]

அறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.

ஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.

லயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.

முதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.

புது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.

இப்போது சொல்லுங்கள்! அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா?

சாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.

இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறது

I asked God for strength, that I might achieve
I was made weak, that I might learn humbly to obey..

I asked for health, that I might do great things
I was given infirmity, that I might do better things..

I asked for riches, that I might be happy
I was given poverty, that I might be wise..

I asked for power, that I might have the praise of others
I was given weakness, that I might feel the need of God

I asked for all things, that I might enjoy life
I was given life, that I might enjoy all things


இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.

நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )

எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம். (16: 16)


[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]

பலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வாழ்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர் வென்றார் போவார் எமபுரமே என்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.

இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.

Dearest Lord,
Teach me to be generous.
Teach me to serve you as you deserve;
To give and not to count the cost;
To fight, and not to heed the wounds;
To labor, and not to seek to rest;
To give of myself and not to ask for reward,
Except the reward of knowing that I am doing
YOUR WILL.

13 comments:

  1. இணைக்கும் விதம் அருமை! வாழ்த்துகள். எது எழுதினாலும் மிகையாகிவிடும். மெளனமாய் ரசிப்பதே சிறப்பு.

    ReplyDelete
  2. நல்வரவு கீதாமேடம்,

    //மெளனமாய் ரசிப்பதே சிறப்பு //

    ”டேய் வாய விட்டு சத்தம் போட்டு படி. இல்லாட்டா நீ படிக்கிறியா தூங்கறயான்னு தெரியாது” -ன்னு எங்கம்மா கீழ் வகுப்பில இருக்கும் போது சொன்னது ஏனோ நினைவுக்கு வருது. :)))))

    விடாம படிச்சு ஆசிர்வாதம் சொல்லிட்டுப் போங்க. நன்றி

    ReplyDelete
  3. //டேய் வாய விட்டு சத்தம் போட்டு படி. இல்லாட்டா நீ படிக்கிறியா தூங்கறயான்னு தெரியாது” -ன்னு எங்கம்மா கீழ் வகுப்பில இருக்கும் போது சொன்னது ஏனோ நினைவுக்கு வருது. :)))))//

    ஸ்லோகங்களைத் தவிர மற்றவற்றைச் சத்தம் போட்டுப் படிக்கிற வழக்கமே இல்லை. அதையும் சத்தம் போட்டுச் சொல்லுவது எதற்கெனில் வேறு யாரேனும் கேட்டுப் பயனடைவார்கள் என்பதாலேயே. என் பெரியப்பா சொல்லிக் கொடுத்த ஒரு அறிவுரை இது. :)))))))))))))))))

    ReplyDelete
  4. ///எங்கம்மா கீழ் வகுப்பில இருக்கும் போது சொன்னது ...//

    பாவம்! அவளுக்கு கை வந்த அந்த காலத்து ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் அது. :)

    ///ஸ்லோகங்களைத் தவிர மற்றவற்றைச் சத்தம் போட்டுப் படிக்கிற வழக்கமே இல்லை. அதையும் சத்தம் போட்டுச் சொல்லுவது எதற்கெனில் வேறு யாரேனும் கேட்டுப் பயனடைவார்கள் என்பதாலேயே ///

    அது மட்டுமில்லே. உச்சரிப்பு சுத்தம் வரணும்ங்கறதும் ஒரு காரணம். இப்போதும் எங்கப்பா தவறான உச்சரிப்புகளை உடனே சுட்டிக் காட்டிவிடுவார். இதனால் பல கோவில்களில் அர்ச்சகர்களுக்கு தர்ம சங்கடம்.

    ReplyDelete
  5. இறைவன், தான் எழுதுகிற நாடகத்தில் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் முடிச்சை அவிழ்த்து விடுவதில்லை.

    EVEN MAHAN ALSO IN SURPRISE.

    PEOPLES COMES TO MEET ME, THIS IS DONE AS PER MY FATHER WILL - TOLD BY MY GURU YOGIRAMSUARATKUMAR.

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்..ஆசீர்வாதம்!

    ReplyDelete
  7. வருக பாலு சார்,

    //THIS IS DONE AS PER MY FATHER WILL - TOLD BY MY GURU YOGI RAMSUARATKUMAR. //

    யோகிகள் கணக்கணமும் அதை உணர்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். நம் போன்ற சாமானியர்கள் எப்பொழுதாவது ஒருமுறைதான் அப்படி நினைக்கிறோம். அதுதான் நம்மையும் அவர்களையும் பிரித்துக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. //ம்ம்ம்ம்..ஆசீர்வாதம்!//

    "யானும் அதுவே வேண்டினேன் அல்லால் வேண்டும் பரிசொன்று எனக்கில்லை"

    நன்றி தி.வா சார்.

    ReplyDelete
  9. //I asked God for strength, that I might achieve..............
    ..................................
    I was given life, that I might enjoy all things.//

    ஓ.. என்ன அழகான கவிதை!
    இதைப் பேசாமல் அப்படியே அட்டையில் எழுதி, வீட்டுச்சுவரில் மாட்டி வைத்து அனுதினமும் காலையில் எழுந்தவுடன் ஒருமுறை பார்த்துப் படித்துப் பயின்று அனுபவப் பாடம் பெறலாம்.

    அத்தனை வெற்றிகளும், பின்னாலே தன்னாலே வரும்! இப்படிப் பயிலும் பாடத்தின் உள்ளடக்கமாக ஒரு விசேஷமும் இருக்கிறது. வெற்றி பெற்றோரும் பட்டறிவால் வந்த வெற்றி ஆதலின்,மமதை கொள்ளாது
    கொழுங்கொம்பாக அவனையே இறுகப் பற்றி இறுதி வெற்றியாக அவன் தாள் சேரலையேக் கொள்வர்!

    எப்படிக் கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தாலும் எதுக்கு எது எதற்காக என்னும் விடை தெரியாத அற்புதக் கணக்கு தான் அவனது!

    மிக்க நன்றி, கபீரன்ப! நல்லதொரு படிப்பினை தந்த பதிவிது!

    ReplyDelete
  10. ///எதுக்கு எது எதற்காக என்னும் விடை தெரியாத அற்புதக் கணக்கு தான் அவனது///

    மிக அழகாக கூறிவிட்டீர்கள் ஜிவி ஐயா!

    கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. வழக்கம் போல அருமை. :)

    //இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். //

    கேட்கவே கசப்பாக இருக்கிறது. :)
    எப்பவும் "நான் ! நான் !" என்று ஒரு மிதப்பில் அலைந்து பழகி விட்டேன். :)

    ReplyDelete
  12. //தோற்பவருக்கு உண்டு அரியிணையே//
    அரியிணையா? அரியணையா? அடியிணையா?

    ReplyDelete
  13. வாருங்கள் ராதா,

    //அரியிணையா? அரியணையா? அடியிணையா? //

    ஜீவி ஐயாவும் இதே கேள்வியை தனி மடலில் கேட்டிருந்தார். ஹரி இணையடிகள் என்பது அரி இணை என்று சுருங்கி அரியிணை ஆயிற்று.

    உங்களுக்கு எது பிடித்தமோ அதை வைத்துக் கொள்ளுங்கள். :))

    வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி