Monday, August 16, 2010

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்

பக்குவமுற்ற சீடனை குருவே வந்து ஆட்கொள்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை ஆன்மீகத்தில் வலுவாகவே உண்டு. ஒரு சிலருக்கு இது எதிர்பாராதவிதமாக நடைபெறுவதுண்டு என்றும் பலருக்கு ஆண்டாண்டு காலமாய் தேடியப் பின்னரே வாய்க்கிறது என்றும் அறிகிறோம். எதிர்பாராத விதத்தில் நடைபெறும் போது அதை பிந்தைய சென்மங்களில் செய்த முயற்சியின் தொடர்ச்சி என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது.

எப்படியாயினும் சீடன் பக்குவமுற வேண்டும்.

மேல்தோல் பச்சையாய் இருக்கும் வரை காய். அதில் சற்றே மஞ்சள் காணத் துவங்கும் போது கனியாகிக் கொண்டிருக்கிறது என்கிற குறிப்பு தெரிகிறது. அதைப் பறித்து அரிசி டப்பாவுக்குள்ளோ அல்லது வைக்கோற்புல் கூடைக்குள்ளோ வைத்துப் பழுக்க வைப்பர். இதை மூட்டம் போடுவது என்று சொல்லக் கேள்வி. அதை நல்ல முறையில் செய்வதற்கும் அந்தத் துறையில் தேர்ச்சி இருக்க வேன்டும். குரு ஒருவருக்கே சீடன் கனிந்து கொண்டிருக்கும் பக்குவத்தை முறையாக புரிந்து கொள்ள முடியும்.

பத்திரகிரியார் பாடல் ஒன்று :

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல் லாமறிந்து
குருவையறிந் தேநினைந்து கும்பிடுவது எக்காலம் ?

( தெரிவை terivai : (page 2036) (யாழ். அக.) 4. Appearance, visibility; தோற்றம். (W.) 5. That which is known or ascertained; அறியப்பட்டது )

இதில்காய் கனிந்து கொண்டிருக்கும் நிலையை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ’எல்லாமறிந்த அந்த குரு என்னை அடையும் நாள் எப்போதோ’ என்ற காத்திருக்கும் மன அடக்கத்தையும் காட்டுகிறது.

நல்ல சீடர்களாக அறியப்பட்டவரின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அப்பேற்பட்டப் பக்குவம் என்பது என்ன என்பதை ஓரளவு கண்டு கொள்ளலாம்.

அப்படி ஒரு நல்ல சீடர் சுப்பிரமணியன் என்னும் தமிழ் புலவர். உ.வே. சாமிநாதையர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற தமிழறிஞர்களால் சங்ககால இலக்கியங்களுக்கு நிகரான தமிழ் பாடல்கள் படைக்க வல்லவர் என்று பாராட்டப் பெற்றவர்.

அவரைத் தேடி இரண்டு புத்தகங்கள் அவரது மாமனார் வழியே வந்தடைந்தது. குருவின் திருவுள்ளம் யார் மூலம் செயல்படும் என்பதை யாரும் அறியார். பிற்காலத்தில் தன் மகளை விட்டு விட்டு மனையைத் துறந்து பிட்சாடனம் போவதற்கான வழியை அவரே திறந்து விட்டார்.

அருணாசல ஸ்துதி பஞ்சகம் மற்றும் நான் யார் என்ற தலைப்புடைய புத்தகங்களே அவை. சுப்பிரமணியன் போய் முருகனார் என்ற சீடர் கிடைப்பதற்கு வழி செய்தன.

ஸ்ரீ ரமண பகவானின் மிகப்பிரியமான பக்தருள் ஒருவர் முருகனார். சீடன் என்பதன் இலக்கணத்தை அறிய வேண்டுமென்றால் அது முருகனாரின் வாழ்க்கையை அறிவதே எனலாம்.

சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார் சுப்பிரமணியன். பகவானைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போதெல்லாம் உடனே ஆஸ்ரமத்திற்கு வந்துவிடுவார். ஆனால் திரும்பிப் போகும் போது தேனில் விழுந்த வண்டைப் போல சிக்கித் தவிப்பார்.

கிளம்பிச் சென்றவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து நிற்பார். இதைக் கண்ட பகவான் யாரையாவது அவர் கூடவே அனுப்பி ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வரும்படி செய்வார். அப்படி அனுப்பியும் சில நேரங்களில் ஆஸ்ரமத்திற்கு திரும்புவதுண்டு .

இரயில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தன்னை மறந்த நிலையில் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் உலவிக் கொண்டு இருப்பார். அவரது நிலை பரிதாபமாக இருக்கும். அதன் பின்னர் ரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் வரை கூட இருந்து வழியனுப்புவதை சில நண்பர்கள் வழக்கப்படுத்திக் கொண்டனர்.

அப்பேற்பட்ட மனநிலை வாய்க்காத வரையில், நம்மை ஆன்மீக சாதகர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ அல்லது குரு அருள் இல்லையே என்று ஏங்கவோக் கூட தகுதியுள்ளவர்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஸ்ரீ முருகனார் பகவான் தரிசனத்திற்கு வருவதே ஒரு வினோதம். பகவானைப் பார்த்தமாத்திரத்தில் அவர் உள்ளம் நெகிழ்ந்து உடல் ஒடுங்கி நடை தளர்ந்து விடும். அவரது பார்வை பகவானைத் தவிர வேறெதையும் பார்க்காது. இந்த நெகிழ்வுடன் பகவானைப் பணிந்துவிட்டு ஹாலில் ஒரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பகவானைப் பார்த்த வண்ணம் இருப்பார். அவரது குருபக்தி காலத்தைக் கடந்து நிற்கிறது.

இங்கே கபீர்தாசரின் அனுபவத்தை முருகனாரில் காண்கிறோம்.

गुरु मूरति गति चन्द्रमा, सेवक नैन चकोर ।
आठ पहर निरखत रहे, गुरु मूरति की और ॥


தண்நிலவாம் குருவுருவம் சீடனுக்கு, சகோரமாய் கண்கள் தொடருது
எண்சாமம் நினைவின்றி போகுது, எல்லாம் குருவுருவில் மறந்து

எட்டு ஜாமம் போவது அறியாமல் வேறெந்த சிந்தனையுமின்றி அமர்ந்திருக்க வேண்டுமானால் அது, குரு சீடனுள் தூண்டிவிட்ட மெய்யுணர்வு அனுபவம் ஆகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறு அருள் நோக்கால் தம்மை மறக்க நேரிடும் சீடன், மீண்டும் மீண்டும் அதற்காக ஏங்குவதை சகோர பட்சி, நிலவின் ஒளிக்காக ஏங்குவதை ஒப்பிடுகிறார் கபீர்.

வெறும் நிலவின் ஒளியிலேயே அமிர்தத்தை உண்டு வாழ்வது சகோர பட்சி என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. பிற பறவைகள் போல புழு பூச்சிகளை உண்ணாமால், காய் கனிகளிலும் விருப்பம் கொள்ளாத பட்சி அது.

இது பூவுலக ஆகர்ஷணங்களுக்கு ஆட்படாமல் மிக உயர்ந்த ஆன்ம தத்துவத்திற்காக ஏங்கும் சீடனின் நிலையை குறிப்பிடுவதற்காக சொல்லப்படுவது. குரு அருளுக்கு பாத்திரமாவதே மிகப் பெரிய சாதனையாகும்.

இதற்கானக் காரணத்தை முருகனாரின் பாடல் ஒன்றிலேயே காணலாம். முருகனாரின் திருக்கண்ணோக்கம் (9)

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானைத் தந்நோக்கால்
நோக்குறுவார் நோக்காரா நோக்காதார் நோக்குதலால்
நோக்கரிய நோக்கானை நோக்கலுறிற் றடையாமந்
நோக்கற வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானை :பார்க்கும் பார்வையில் பார்ப்போனாயிருக்கும் உணர்வுருவாயிருந்து, பார்வையினூடே உள்ளத்தில் நுழைந்தானை
தந்நோக்கால் நோக்கு உறுவார் :தன்னை உணரும் மெய் அறிவினால் அன்பர்கள் காண்பார்கள்.
நோக்காரா நோக்காதார் : நிறைந்த பார்வையிலாதார் காண இயலாது.
நோக்கரிய நோக்கானை :பார்பதற்க்கரிய மெய்யறிவு உடையானைக்
நோக்கலுளில் தடையாம் :காண்பதனால் தன்னைக் காண்பதிலுள்ள தடையாயிருக்கும்
அந்நோக்கற : (அந்த நோக்கு அற) அந்த சுட்டறிவு (அகந்தை) அறவே நீங்கும்.
வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ :(அத்தன்மையான) வேங்கடனை கண்டு களித்திருப்போம்.
(வேங்கடராமன் ரமணரின் இயற்பெயர்)

குருவின் அருட்பார்வை தம்மை தரிசிக்கும் அடியார்களின் விழிவழியாக ஊடுருவி சென்று, எழும்பும் அகந்தையை எழுமிடத்திலேயே அழித்து விடும் ஆற்றல் உடையது. அகந்தை அழிந்தால் எஞ்சியிருப்பது மெய்யுணர்வே. இந்த மெய்யுணர்வில் நிலைப்பட்டவர்க்கு தனக்கு அன்னியமாய் எதுவும் தோன்றாது.அப்படிப்பட்ட மெய்யுணர்விற்கு ஏதேனும் தடையிருந்தால் அதை அறவே நீக்குவதே பகவானது அருள் நோக்கு என்று கூறுகிறார்.

குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ

என்று குருவருள் பெற்ற சீடன் நிலையை பட்டினத்து அடிகள் அருட்புலம்பலில் (489) சொல்கிறார். உருவழிக்க வந்தானோ என்பதை தன்னோக்கால் நோக்கு உறுவார் என்ற முருகனாரின் வரிகளால் உண்மை என்று அறியலாம். மெய்யுணர்வை அடைந்த நிலையில் புற உருவின் நினைவை இழப்பவன் சீடன் அன்றோ !

[Thanks for photo courtesy : davidgodman.org ] Muruganar seated on the Verandah


அவ்வாறு அவர் அடைந்த அனுபவத்தை ஒரு சிறிய நிகழ்வு மூலம் அறிகிறோம்.

வேறொரு ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் அவர்களது குருவின் வழிமுறையை பகவான் ரமணரிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களது முறைப்படி குரு சிஷ்யர்களை தினமும் சில ஆயிரம் செபங்களைச் செய்யச் சொல்லி இறுதியில் அதை குருவிற்கு அர்ப்பணம் செய்யச் சொல்லுவாராம். தான் அதைத் தவறாமல் செய்து வருவதாகவும் ரமணாசிரமத்தின் முறை என்ன என்பதையும் தயங்கிய படியே கேட்டார்.

இதைக் கேட்ட பகவான் சிரித்துவிட்டு “ஓஹோ ! அப்படியா! பரவாயில்லையே! குருவிற்கு சிரமில்லாமலே நாமத்தை சிஷ்யர்கள் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்களே ! அவருக்கு நல்ல லாபம்தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முருகனார் வந்தார்.

பகவான் அவரிடம் விஷயத்தைச் சொல்லி “. .அப்புறம் அந்த சிஷ்யருக்கு என்ன மிஞ்சுமோ! அசலை வைத்துக் கொண்டு வட்டியைக் கொடுப்பது போல குருவிற்கு காணிக்கைத் தர வேண்டும். எப்படி இந்த ஏற்பாடு!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்ட முருகனார், “அந்த குரு தேவலையே! முதலையாவது விட்டு வைக்கிறாரே ! வட்டியைத் தானே கேட்கிறார். (பகவானைக் காட்டி) இந்த குருவோ முதலையே விழுங்கி விடுமே! பிறகு வட்டியைக் கொடுப்பதற்கு யார் மிஞ்சி இருக்கிறார்கள்? வட்டியும் முதலும் ஒரு சேர தீர்ந்துவிடும் அப்புறம் என்ன இருக்கிறது " என்று கண்ணீர் மல்க பதில் கூறினார்.

பக்தியின் ஆழத்திலிருந்து வெளியான மிக உயர்ந்த நகைச்சுவை உணர்வு!

பகவானிடமிருந்து புன்முறுவலே பதிலாயிற்று.

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)
அண்ணாமலை ரமணன்

( திருமதி கனகம்மாள் அருளிய நினைவில் நிறைந்தவை என்ற புத்தகத்தில் காணப்படும் விவரங்களை வைத்து எழுதப்பட்டது. இது ஒரு ரமணாசிரம வெளியீடு)

திருக்கண்ணோக்கம் , கடைக்கண்பார்வைக்கு ஞானியர்கள் ஏங்கியதும் இதனால்தானோ! முருகனையே குருவாக அடையப் பெற்ற அருணகிரிநாதரும்

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ

[என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? ]

என்று திருச்செங்கோடு முருகனை நோக்கிப் பாடுகிறார். [ நன்றி :கௌமாரம்]

-------------------

முருகனார் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 தேதி இறைவன்டி சேர்ந்தார். அவரைப்பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்

(பல தவிர்க்க முடியாத காரணங்களால் சற்று காலதாமதமாக இந்த இடுகை வந்துள்ளது. வாசகர்கள் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)

10 comments:

  1. வாய்கிறது என்றும் ==வாய்க்கிறது என்று வந்திருக்கணுமோ??

    நினைந்துக் கும்பிடுவது= இங்கே "க்" தேவையா?? வேணாமோனு தோணுது!.

    இங்கே கபீரிதாசரின் அனுபவத்தை முருகனாரில் காண்கிறோம்.//

    கபீர்தாசர்னு வந்திருக்கணும், இல்லையா? தாமதத்திற்குக் காரணம் வலுவானதுனு இந்தச் சிறு தவறுகளின் மூலம் புரிகிறது. மெதுவாவே வரட்டும். அவசரமே இல்லை.

    //அப்பேற்பட்ட மனநிலை வாய்க்காத வரையில், நம்மை ஆன்மீக சாதகர்களாகவோ அல்லது குரு அருள் இல்லையே என்றோ ஏங்கக் கூட தகுதியுள்ளவர்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது//

    நிச்சயமாத் தகுதியே இல்லாதவள் என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். இப்போதும்!!!! நன்றி வழக்கம்போல் அருமையான மேற்கோள்களுடன் கூடிய இடுகை. ரொம்பப் பாராட்டினால் செயற்கையாய் இருக்கும். மனசுக்குள் அனுபவிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  2. நல்வரவு கீதா மேடம்

    தட்டச்சு தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.அவற்றைத் திருத்தி விட்டேன். மேலும் ஒன்றிரண்டு காணப்பட்டன. அவற்றையும் சரி செய்து விட்டேன்.

    //ரொம்பப் பாராட்டினால் செயற்கையாய் இருக்கும்.///

    பாராட்டெல்லாம் வேண்டாம். தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்த வலைப்பூவுக்கு வருவதே பெரிய ஆசீர்வாதம். அது தொடர்ந்து கிடைத்தால் போதும்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. reading or listening the ramanashram devotees is something special.

    every situation or happenings in their life are very simple .but with deep meanings.

    isnt it?

    ReplyDelete
  4. வருக பாலு சார்,

    //every situation or happenings in their life are very simple .but with deep meanings //

    மிகவும் உண்மை. மிகச் சாதாரண நிகழ்வுகளிலேயே எவ்வளவு ஆழமான உண்மைகளை சொல்லிவிடுகிறார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. //ஒரு சிலருக்கு இது எதிர்பாராதவிதமாக நடைபெறுவதுண்டு என்றும் பலருக்கு ஆண்டாண்டு காலமாய் தேடியப் பின்னரே வாய்க்கிறது என்றும் அறிகிறோம். எதிர்பாராத விதத்தில் நடைபெறும் போது அதை பிந்தைய சென்மங்களில் செய்த முயற்சியின் தொடர்ச்சி என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது.//

    அது முந்தைய ஜென்மங்களில் செய்த முயற்சிகளின் தொடர்ச்சி போலவே, கொண்டிருந்த தொடர்புகளின் தொடர்ச்சியாகக் கூட அமையலாம். இதை ஜென்மாதி ஜென்மாய்த் தொடரும் தொடர்ச்சி என்று கூடச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. எப்பொழுது ஒரு ஜென்மத்து கிரியைகளுக்கும் (செயல்களுக்கும்) அடுத்த ஜென்மத்துப் வாழ்வுக்கும் தொடர்பு உண்டு என்று ஆயிற்றோ அதுபோலவான ஒரு தொடர்பு தான் இதுவும். சிலரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பிடிப்பும் பரவசமும் அவருடன் பழக வேண்டும் என்கிற வேட்கையும் தோன்றுவது இதனால் தான்; தொடர்புச் சங்கிலியின் நீட்சி, கொழுங்கொம்பாகப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறது.

    ReplyDelete
  6. வருக ஜீவி ஐயா,

    //எப்பொழுது ஒரு ஜென்மத்து கிரியைகளுக்கும் (செயல்களுக்கும்) அடுத்த ஜென்மத்துப் வாழ்வுக்கும் தொடர்பு உண்டு என்று ஆயிற்றோ அதுபோலவான ஒரு தொடர்பு தான் இதுவும். சிலரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பிடிப்பும் பரவசமும் அவருடன் பழக வேண்டும் என்கிற வேட்கையும் தோன்றுவது இதனால் தான்; தொடர்புச் சங்கிலியின் நீட்சி, கொழுங்கொம்பாகப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறது.//

    மிகவும் உண்மை.

    வெகு நாட்கள் காத்திருப்பினும் வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு தான் உபதேசம் கொடுக்காமல் உரிய காலத்தில் அவரை சேஷாத்திரி ஸ்வாமிகளிடம் அனுப்பி வைத்தார் ரமணர் என்று படித்திருக்கிறேன்.

    யாருக்கு யார் சீடர், எப்பொது அவரை அடைவார் என்பது எல்லாமே முன்கூட்டியே, பல சென்ம தொடராகத், தீர்மானிக்கப் பட்டது போல் இருக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. தெரிவை terivai

    , n. < id. 1. Woman between 25 and 31 years of age; 25 வயது முதல் 31 வயதுக்குட்பட்ட பெண். (திவா.) 2. [M. terava.] Woman; பெண். (சூடா.)
    இது இன்னும் பொருத்தமில்லையா?
    எப்போது ரமணர் பற்றி படித்தாலும் நெகிழ்ந்து போகிறேன்.

    ReplyDelete
  8. வருக திவா சார்,

    //< id. 1. Woman between 25 and 31 years of age; 25 வயது முதல் 31 வயதுக்குட்பட்ட பெண். (திவா.) 2. [M. terava.] Woman; பெண். (சூடா.)
    இது இன்னும் பொருத்தமில்லையா?//

    உண்மைதான். பத்திரகிரியாரும் அந்தப் பொருளில்தான் பாடினாரோ என்னவோ !

    ஆனால் நான் எடுத்துக் கொண்ட உதாரணமான காய் கனியாவதைக் குறிக்க ”தோற்றம்” அல்லது “அறியப்பட்டது” என்ற பொருளில் எடுத்துக் கொண்டேன். அவ்வளவுதான்.:)
    வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி.

    ReplyDelete
  9. குருவினுடைய பார்வை,குருவினுடைய நினைவு,குருவினுடைய் சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது.

    அவருடைய் உதவி கிடைப்பதற்கு ஒரு நிமிடமாவது சிந்திருக்க வேண்டும்,தேடி இருக்க வேண்டும் சாதகன்.

    ஒரு மனிதனுடைய கர்மா,அவனுடைய செயல், அவனுடைய சிந்தனை,அவனுடைய தெளிவு,அவனுடைய அறிவு வேகம் எல்லாம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுக்கிறது.

    அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே.

    குரு தானாக வருவார்.

    ReplyDelete
  10. வருக கோமதி மேடம்,

    1) ///அவருடைய உதவி கிடைப்பதற்கு ஒரு நிமிடமாவது சிந்திருக்க வேண்டும்,தேடி இருக்க வேண்டும் சாதகன்.///

    2)//குரு தானாக வருவார்.///

    நிபந்தனை (1) பூர்த்தியானால் நிபந்தனை (2) ம் பூர்த்தியாகும் என்கிறீர்கள். மிகவும் சரி. நம்பிக்கைதான் விளக்கு.

    கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி