Sunday, November 14, 2010

சிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3

ஆசிரியர் அறிமுகம் :

”படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம், தெரிந்து கொள்ள முயல்கிறோம்!
ஆனால் கோடிக்கணக்கான வார்த்தைகள், நூற்றுக் கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம், அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி "எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது?" என்பதுதான்!வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி" என்கிறார் ஸ்ரீ அரவிந்தஅன்னை!


மேலே காணும் உபதேசத்தின் முதல் பகுதியை சென்ற பதிவில் கவிநயா அவர்கள் தமது இடுகையில் கூறிய பயனற்ற ஏட்டுக்கல்வி என்கிற மையக்கருத்தில் கண்டோம். மேற்கண்ட ஸ்ரீ அன்னையின் வாசகங்களையே தமது வலைப்பூவின் மையக்கருத்தாக வைத்திருக்கும் இந்த ஆசிரியரின் வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, Consent to be.... nothing. (நான் புரிந்து கொண்டது “willing to be a zero” -தானொரு பூஜ்யம்). இது மட்டுமல்லாமல் (சு)வாசிக்கப் போறேங்க என்கிற வலைப்பக்கத்தில் படித்ததில் பிடித்தது என்னும் வகையில் தம் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

தமது வலைப்பூவை ஒரு காலிப் பாத்திரமாக சித்தரித்துக் கொள்ளும் இவர் அப்பாத்திரத்தினின்று படைக்கும் அமுது பல்சுவையானது. ஆரம்பத்தில் அரவிந்தருக்கும் ஸ்ரீ அன்னைக்கும் மட்டுமேயான ஒருவலைப்பூ என நான் நினைத்திருந்த போது அது ஆன்மீகம், அரசியல், மனித வளம், கல்வி, சுய முன்னேற்றம், விளம்பரத்துறை என பல பரிமாணங்களில் மலர்ந்த போது ஆசிரியருடைய உற்சாகத்தைக் கண்டு வியக்கிறேன். அவருடைய வெளிப்படையான விமரிசனங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் என்னை அவரது வலைப்பூக்களின் தொடர் வாசகனாக வைத்திருக்கிறது.

இந்நேரம் நீங்களே ஊகித்து இருப்பீர்கள்!

வேறு யாருமல்ல, பெருமளவு பதிவர்களுக்கு நன்கு அறிமுகமான திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களே இந்த சிறப்பு இடுகையை அளிக்க முன்வந்துள்ள விருந்தினர்.

அவர் நம்அழைப்பை ஏற்று கபீரைக் குறித்து எழுதுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

கபீரைப் பற்றிய இந்த இடுகையிலும் ஸ்ரீ அன்னைக் குறிப்பிடும் “கணநேர அனுபவ”த்தின் அருமையையும் கபீரின் பெருநோக்கையும் சுட்டிக்காட்டுகிறார்.

இனி திரு கிருஷ்ணமூர்த்தி பேசுவார்.

----------------------------------------------------------------------

தெரியாதவனையும் தேடி வந்த கபீரின் கனிமொழிகள்

இறைவன் இருக்கின்றானா - மனிதன் கேட்கிறான்!
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே
வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் -அவன் வசப்படவில்லை!
நான் நாத்திகனானேன் அவன்
பயப்படவில்லை!

நீண்ட நாட்களுக்கு முன்னால் ’அவன் பித்தனா’ என்ற படத்தில் டி.எம் சௌந்தரராஜன்-சுசீலா இருவரும் இணைந்து பாடிய ஒரு அருமையான பாடல், இப்போது ஒரு கேள்வியாக எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வியை எனக்குள் எழுப்பியது எனக்கு கபீரன்பன் அவர்கள் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்!

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தில் நூறு இடுகைகளை நிறைவடைந்ததை ஒட்டி சில சிறப்புப் பதிவுகளை அதன் வாசக-பதிவர்களைக் கொண்டு வெளியிடும் தன் உத்தேசத்தைத் தெரிவித்து அதற்கு என்னிடமிருந்தும் ஒரு கட்டுரை வேண்டியிருந்தார்.

1965 களில் உணர்ச்சிகளைக் கிளறி விட்டு ஹிந்தி எதிர்ப்பு என்று நடந்த கண்மூடித் தனமான போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு, ஹிந்தியைப் படிப்பதைத் தவிர்த்தவன் நான். இன்றைக்கும் எனக்கிருக்கும் ஒரே வருத்தம், இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த மகான்களைப் பற்றி, குறிப்பாக மீராபாய், கபீர் தாசர், துளசிதாசர், சைதன்ய மஹாப்ரபு போன்ற வட இந்தியாவில் பிறந்த வாழ்ந்த மகான்களைப் பற்றிய நேரடியான பரிச்சயம், இந்த மொழி வெறுப்பினால் கைகூடாமல் போய்விட்டதே என்பது தான்!

அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம் என்று எதை எதையோ தொட்டு எழுதத் தெரிந்த, எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற என்னைப் போய், ஒரு மகானைப் பற்றி எழுது, அவரைப் பற்றி உனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள் என்று கேட்டால், எதுவும் தெரியாத நான் என்னவென்று எழுதுவேன்? எப்படி எழுதுவேன்?

ஒரு கவிஞனின் வார்த்தைகளில் வெளிப்படுகிற உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும் சரி, அதை மொழி பெயர்ப்பில் அப்படியே கொண்டு வருவது என்பது மிகவும் சிரமம். அதுவே ஒரு உன்னதமான மெய்ஞானத்தைப் போதிப்பதாக இருந்தால்.........!

முஹமது ஜலாலுதீன் ரூமியின் சூஃபி கவிதைகளை, நெருடல் எதுவுமில்லாமல் மொழிபெயர்த்திருந்த எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.

நீ


உயிராய்ப் பூமியில் தோன்றிய தருணமே

ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!

ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன் பயம் கொள்ள வேண்டும்?
மரணம் உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறுதுளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!


(ஜலாலுதீன் முகமது ரூமி !)

அனேகமாக எல்லா விஷயங்களையுமே தேடிப் படிப்பதால், ஒரு வாசகனாக, பல விஷயங்களையும் அனுபவித்து, அதில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளைப் பதிந்து கொண்ட வகையில் எழுதியவை இவை. மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததில்லை இது.

இவை இணையத்தில், தேடிப் படித்துக் கொண்டிருக்கும் தருணங்களில் ஆங்கிலத்தில் கிடைத்தவை. அவைகளை ஆர்வத்தோடு கவனித்து வருகிறேன். ரூமியின் கவிதை எவ்வளவு தூரம் சிவபுராணத்தின்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

என்கிற வரிகளோடு ஒத்துப் போகிறது என்பதை பார்க்கும் போது ஒன்று புரிகிறது. தேசங்கள், மொழிகள், காலங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், மெய்ஞானிகள் அத்தனை பேருக்கும் ஒரே ஆன்மீகத் தேடல் தான், ஒரே ஆன்மீக உண்மைதான் வெளிப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட தேடல் நமக்குள்ளும் நிகழவேண்டும் என்பதற்காகவே இந்தமாதிரி ஒப்புமை, சிந்தனைகளை இறைவன் நமக்களிக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டு, அந்தக் கண நேரத்து வெளிச்சக் கீற்றையும் அனுபவித்திருக்கிறேன். ஒரு சராசரி, ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக, இருப்பதில் இருந்து உயரவேண்டும் என்ற வேட்கையை இந்தமாதிரிக் கணநேர வெளிச்சக் கீற்றுக்கள் தான் தீர்மானிக்கின்றன இல்லையா?

கபீரின் ஈரடி கொண்ட பாடல்களை, தோஹே என்று சொல்கிறார்கள், தமிழில் மிக எளிமையாக மொழிபெயர்த்து வருகிற இந்த வலைத் தளத்தில் தான், ஹிந்தி மொழியை அறியாத நான், கபீர்தாசர் என்ற மகாத்மாவின் பாடல்களை ஜீவனுடன் தமிழிலேயே பரிச்சயம் செய்துகொள்ள ஆரம்பித்தேன்.

கருவூரார் சன்னதியில் என்றைக்கோ பார்த்த வாசகங்கள், "குரு அருளே திருவருள்!" என்பதாக நினைவுக்கு வர, மணிவாசகப் பெருமானது வார்த்தைகள் "அவனருளாலே அவன் தாள் வணங்கும்" நுட்பத்தைச் சொல்லாமல் சொல்லின. குருவருளாகக் கிடைத்தாலொழிய இறை அனுபவத்தைப் பேசுவதோ, வார்த்தைகளில் சொல்ல முனைவதோ கைகூடாது என்பதும் நன்றாகவே உறைத்த அந்தத் தருணம்....!

நன்றறியேன் தீதறியேன் நான்என்று நின்றவன்ஆர்
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே


என்று தாயுமானவர் பராபரக் கண்ணியில் கசிந்துருகியதை நினைத்துக் கொண்டு, என்னுடைய ஏலாமையைக் கபீரன்பனிடம் இன்னொரு மின்னஞ்சலில் தெரிவித்தபோது, கபீரின் பாடல் ஒன்றை அவரே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்.

ஜலாலுதீன் ரூமியின் பாடலுக்கும் மணிவாசகப் பெருமானுக்கும் நாம் காணும் ஒற்றுமையின் ஒளிக்கீற்று கபீரின் இந்தப் பாடலில் பட்டப் பகலென ஒளி விடுகிறது. வெறும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள் இறைக்காட்சியை கொடுக்க முடியாது என்பதை இருமதத்தினருக்கும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடவுள் ஹிந்துவமல்ல முஸ்லீமும் அல்ல. அவன் வசிப்பது தெற்கிலோ மேற்கிலோ அல்ல. இடைவிடாத சிந்தனையின் மூலம் தன்னுள்ளே உணரப்படும் ஒரு அரிய பேருணர்வே என்பதை இந்தப் பாடல் மூலம் கபீர் சொல்கிறார்.

अलहु एकु मसीति बसतु है अवरु मुलखु किसु केरा ॥
If the Lord Allah lives only in the mosque, then to whom does the rest of the world belong?
மசூதியில் மட்டுமே அல்லா வாழ்ந்தால் இவ்வுலகம் யாருக்குச் சொந்தம்?

हिन्दू मूरित नाम निवासी दुह मिह ततु न हेरा ॥१॥
According to the Hindus, the Lord's Name abides in the idol, but there is no truth in either of these claims.
மூர்த்தத்தில் இருப்பவன் இறைவன் எனும் ஹிந்துவும் சரியல்ல

अलह राम जीवउ तेरे नाई ॥
O Allah, O Raam, I live by Your Name.
அல்லா! ராமா!! உம் பெயரில் வாழ்பவன் நான்

तू किर िमहरामित साई ॥१॥

Please show mercy to me, O Master.

கருணை பொழிவாய் ஓ தலைவனே !

दखन देसि हरी का बासा पिछिम अलह मुकामा ॥
The God of the Hindus lives in the southern lands, and the God of the Muslims lives in the west.
தெற்கில் வசிப்பதோ ஹிந்துவின் கடவுள், இசுலாமியர்தம் கடவுளோ மேற்கே

कहतु कबीरु सुनहु नर दिल् मिह खोजि दिलै दिल खोजहु एही ठउर मुकामा ॥२॥
So search in your heart - look deep in to your heart of hearts: this is the home and the place where God lives.
இதயத்தில் தேடு, உள்ளே ஆழ்ந்து தேடின் அதுவே இறைவன் வாழும் இல்லம்

बर्हमन िगआस करिह चउबीसा काजी मह रमजाना ॥
The Brahmins observe twenty-four fasts during the year, and the Muslims fast during the month of Ramadaan.
அந்தணர் நோன்பு இருபத்திநாலு மணியாம், இசுலாமியருக்கோ அது ரமதான் மாதம்


गिआरह मास पास कै राखे एकै मािह िनधाना ॥३|
The Muslims set aside eleven months, and claim that the treasure is only in the one month. ||3||
பதினோரு மாதம் விட்டு எஞ்சிய ஒரு மாதமே இறைபுகழாம்

कहा उडीसे मजनु कीआ िकआ मसीति सिरु नांएं ॥
What is the use of bathing at Orissa? Why do the Muslims bow their heads in the mosque?
ஒரிஸ்ஸாவில் தீர்த்த நீராடல் எதற்கு ? மசூதியில் தலை வணங்குவதும் எதற்கு?

दिल मिह कपटु िनवाज गुजारै किआ हज काबै जांएं ॥४॥
If someone has deception in his heart, what good is it for him to utter
prayers? And what good is it for him to go on pilgrimage to Mecca? ||4||

கபடம் மண்டிய மனதில், பிரார்த்தனையின் பயனும் என்ன? ஹஜ் பயணமும் எதற்கு?

एते अउरत मरदा साजे ए सभ रूप तुम्हारे ॥
You fashioned all these men and women, Lord. All these are Your Forms.
தேவனே, உன் விருப்பில் வந்தனர் ஆடவரும் பெண்டிரும்; யாவரும் உன் வடிவே.

कबीरु पूंगरा राम अलह का सभ गुर पीर हमारे ॥५॥
Kabeer is the child of God, Allah, Raam. All the Gurus and prophets are mine. ||5||
இறைவனின் குழந்தை கபீரன், அல்லா, ராம், குரு யாவரும் என்னவரே

नरवै परहु एक की सरना ॥
Says Kabeer, listen, O men and women: seek the Sanctuary of the One.
கபீர் உரைப்பேன், தஞ்சம் அடைவீர் , மாந்தரே

केवल नामु जपहु रे पर्ानी तब ही निहचै तरना ॥६॥२॥
Chant the Naam, the Name of the Lord, O mortals, and you shall surely be carried across.

செபித்திடுவீர் அவன் நாமம், அக்கரை சேர்வதும் நிச்சயமே.


கிட்டத்தட்ட இதே கருத்து அமைந்த இன்னொரு கபீரின் பாடலை, திரு ஜீவா வெங்கட்ராமன் தனது அருள் என்ற வலைப்பதிவில் மூன்றே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழில் மொழி பெயர்த்துப் போட்டிருப்பதையும் காணலாம்.

”என்னை எங்கே தேடுகிறாய்” என்று இறைவன் கேட்பது போல் அமைந்த அந்த பாடலின் ஒலி-ஒளி வடிவம் யூட்யூப் தளத்திலிருந்து இங்கே:


[ஸ்ரீ அன்னை சொன்ன ”..வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி" என்ற கருத்தையே இந்தப் பாடலில் கபீரும் வலியுறுத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது - கபீரன்பன் ]

கபீர் தாசர் தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, தன்னுடைய மறைவுக்குப் பின்னால் கூட ஒரு குறுகிய மத அடையாளம் தன்மேல் சுமத்துவதை விரும்பியதில்லை என்பதுமே ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லப்படுகிறது.

இருக்கும்போதும் ஹிந்து முஸ்லிம்
சர்ச்சை

இறந்தபோதும் கபீரைத் தொடர்ந்து வந்தது.
அவரவர் மத வழக்கப்படிதான்
அடக்கமோ எரிப்பதோ என்று
இருதரப்பும் கோபத்துடன் குரலெழுப்பிக்
கொண்டிருந்த தருணம்

கபீர் எழுந்தார்! இருதரப்புக்கும் சொன்னார்!
"என் சடலத்தைத் தூக்குங்கள்!"
சீடரும் அவ்வாறே தூக்கினர்!

சடலம் இருந்த இடம்
முழுக்க மலர்கள்! மணம் வீசும் மலர்கள்!

இருகூறாய்ப் பிரித்துக் கொண்டு இருதரப்பும்
இருவிதமாய் கபீரை
அடக்கம் செய்தனர் என்றே

செவிவழிச் செய்தியைக் கதையொன்று சொல்லும்!

மேன்மக்கள் அமைதியை,
சமத்துவத்தைச் சுமந்து வந்தபோதிலும்
கீழ்மையில் இழிந்த மாந்தர்
அவரை வைத்து
அடித்துக் கொள்வதற்கான

காரணத்தைத் தான் தேடி நிற்பார்!
பூரணமாய் நின்ற பொருள்

கண்ணெதிரே தோன்றிடினும்
கிஞ்சித்தும் அதைக் காணார்.

ஹிந்துவென்றும் முசல்மான் என்றும்
கபீர் தன்னைச் சொன்னதில்லை!

ஹிந்துதானென்று ஒருதரப்பு, இல்லை இல்லை
சூஃ பி தான் என்றொரு தரப்பும்
மாறி மாறி வம்புதான் செய்திருக்கக்
கபீரின் கனிமொழியைக்

கண்டுணரக் காலம் கனிந்து வரவேணும்!
மொழிகடந்த மெய்ஞானம்

கபீரின் கனிமொழிகள் தளத்தில்
தமிழில் பெருகிவர
உள்வாங்கும் திறம் வேண்டும்!
குருவருள் குறையின்றி இப்பணியை நடத்தட்டும்!

கபீரின் கனிமொழியைத்
தமிழில் தந்ததற்கு நன்றியுடன் வணங்குகிறோம்!


--------------------------------------

வாரம் மூன்று நான்கு இடுகைகளை பலவிதமான தலைப்புகளில் இடும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது கட்டுரையுடன் அனுப்பி வைத்த குறிப்பில்

“....இப்படி ஒரு சாக்கை வைத்தாவது, கபீரின் மொழிகளைத் தொடர்ந்து சிந்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறதே என்பதில் மிகவும் சந்தோஷம்”
என்று எழுதியிருந்தார்.

சந்தோஷம் அவரது மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரதும் ஆகும் என்று கூறி நமக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி. அவரது ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எழுத்துக்கள் அதிக அளவில் வாசகர்களை அடையட்டும் என்று வாழ்த்தி நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

9 comments:

  1. சிறப்பான பதிவு. அருமையான தேர்வு. எப்படி எல்லாம் எழுதணும் என்பதையே உங்கள் வலைப்பக்கங்களில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. ///...வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, Consent to be.... nothing. (நான் புரிந்து கொண்டது “willing to be a zero” -தானொரு பூஜ்யம்)///

    என்ற என்னுடைய அறிமுக வரிகளுக்கு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனி மடலில் அளித்த விளக்கத்தின் சுருக்கம் கீழே.

    consent to be nothing....இந்த வரிகள், சாவித்ரியில் இருந்து எடுக்கப் பட்டவை.

    எல்லாவற்றையும் விட்டு விட்டு, எதுவானாலும், எந்த நிலையிலும், உன்னுடைய சித்தத்தின் படியே, நடந்தேறட்டும். எனது ஆசைகளின் படியல்ல, உனது சங்கல்பப்படியே ஆகட்டும் என்கிற நிலை வரவேண்டும் என்பதற்காகத் தான், consent to be nothing and none என்கிற சம்மதப் பட்ட நிலை வர வேண்டியிருக்கிறது."


    முழு விளக்கத்தையும் படிக்க இங்கே சுட்டவும் பதிவர் குமரன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலாக வந்திருக்கிறது விளக்கம்.

    நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா,

    ReplyDelete
  3. வருக கீதா மேடம்,

    //சிறப்பான பதிவு //

    கிருஷ்ணமூர்த்தி சாருக்கு நன்றி.

    //அருமையான தேர்வு//

    இப்ப நான் காலரை தூக்கி விட்டுக்கலாம் :)))

    //எப்படி எல்லாம் எழுதணும் என்பதையே உங்கள் வலைப்பக்கங்களில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் ///

    வாஸுதேவார்ப்பணமஸ்து ( வாசுதேவனும் கிருஷ்ணமூர்த்தியும் ஒருத்தரே ):))

    ReplyDelete
  4. திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். கருத்து சொல்லும் அளவு தகுதியில்லை... மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை நிறைய சொல்லியிருக்கிறீர்கள்.

    அருமையான விருந்து படைத்துக் கொண்டிருக்கும் கபீரன்பருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. நல்லபல கருத்துகள்..நன்றி.. கருத்துக்களை எங்களுடன் பகிரவைத்த கபீரன்பனுக்கும் ...நன்றீ.

    ReplyDelete
  6. சிறுபிள்ளை மணல்வீடு கட்டி இது தான் உலகத்திலேயே பெரிய வீடு என்று நினைத்துக் கொள்கிற மாதிரி பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தவனை, விருந்தினர் இடுகை எழுத அழைத்தபோதே எனக்கு ஒரு சந்தேகம், திருமதி கீதா சாம்பசிவம் சொன்ன மாதிரி, நல்.முத்துக்களாகத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தன் வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிற கபீரன்பனுடைய முயற்சிக்குத் தகுந்த தங்கச் சரடாக நான் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை முந்தைய பதிவுகளிலேயே சொல்லி இருக்கிறேன். இந்த விருந்தினர் இடுகைக்கு வரும் பின்னூட்டங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பதிவு சிறப்பாக இருந்தால், அது அதைத் திறமையாக செப்பம் செய்து ஒழுங்கு படுத்திய கபீரன்பனுக்கே போய்ச் சேர வேண்டிய பாராட்டு.

    திருமதி கீதா சொல்கிற மாதிரி, வெறும் வாசகர்கள் எண்ணிக்கையைக் கருதாமல், வருகிறவர்கள் எத்தனை பேரானாலும் தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது ஒன்று மட்டுமே குறியாக, கபீர்தாசருடைய அருள்மழையைத் தமிழிலும் தந்து கொண்டிருக்கும் கபீரன்பனிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.அதுவும் மொழி தெரியாத என்னைப் போலத் தற்குறிகளுக்கு இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.

    கவிநயா அம்மா சொன்ன மாதிரி, கபீரின் கனிமொழிகளைப் பற்றி தான் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதை விட, வாசகர்களும் சேர்ந்து எழுதட்டுமே என்று ஒரு வித்தியாசமான விருந்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார், நானும் அதை மகிழ்ச்சியோடு எல்லோருடனும் சேர்ந்து அருந்திக் கொண்டிருக்கிறேன் என்பதை விடப் பெரிதாக என்ன சொல்லி விட முடியும்!

    ReplyDelete
  7. //தனி மடல் வாழ்த்து //

    அருமை! அருமை! அருமை!

    என்றென்றும் அன்புடன்,
    வடிவேல் கன்னியப்பன்.

    ReplyDelete
  8. கிருஷ்ணமூர்த்தி சார்! மிக்க நன்றி. அங்கே போய்ப் பார்த்தேன். மனம் நெகிழ்ந்த அனுபவம் பெற்றேன்.
    ஆற்றுப்படுத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  9. சிறப்பு விருந்தினர் அவர்களின் பதிவு சிறப்பான பதிவு.

    //வெளியே தேடுவதை விட தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி.//

    அன்னையின் வாக்கு எனக்கு மிகவும் பிடித்தது.

    என்னை எங்கே தேடுகிறாய் பாடல் அருமை.

    //செபித்திடுவீர் அவன் நாமம்,அக்கரை சேர்வது நிச்சியம்//

    ஆம், நாமஜபம் ஒன்றே கடை தேறும் வழி.

    கிருஷ்ணமூர்த்தி அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கபீரன்பனுக்கு.

    //உமது திருவுளப்படியே ஆகுக.என்னுடைய வாழ்வு உம்முடைய பாதுகாப்பில் இருப்பதால் நான் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை நான் உம்முடையவன் என்று.//

    அரவிந்த அன்னை.

    கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனி மடல் படித்தவுடன் எனக்கு இந்த அன்னையின் வாக்கு நினைவுக்கு வந்தது.

    அவர் பதிவுகள் படித்து விட்டு மறுபடியும் வருகிறேன். நன்றி மீண்டும்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி