Monday, August 15, 2011

இச்சிறியேனால் ஆவது என்னே ?

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
பணிகின்றேன், பதியே, நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
உறங்குகின்றேன், உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ
இச்சிறியேனால் ஆவது என்னே ! (
இராமலிங்க அடிகள்)

ஆவுடையக்காள் பதிவை நிறைவு செய்யும் வகையில் அவரது சுபமங்களம் ஜெய மங்களம் என்று முடியும் ஒரு பாடலை வைத்து பூர்த்தி செய்திருந்தேன். அப்போதே மனதில் ஒரு குறுகுறுப்பு. இதுவே கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்திற்கும் இறுதியான பதிவு என்று வாசகர்கள் நினைத்துக் கொள்வார்களோ என்று. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள் அதை உண்மையாக்கி விடுவது போல் நடந்ததென்னவோ நிஜம். மகான்களின் வாக்கிற்கு என்றுமே அதிசய சக்தி உண்டு :))

புதிய ஊர்,மும்பை, புதிய சூழ்நிலை. கடந்த நான்கு மாதங்களாக இணைய வசதி இல்லாமை. அகலவழிப் பாதையும் ஒற்றை வழியாகிப் போனது. அதாவது ப்ராட் பேண்ட் உள்ள அலுவலகக் கணிணியில் தனி அஞ்சல்கள் வலைப்பூக்கள் மேய்வதற்கு தடை. தனிக் கணிணியில் அலை பேசி இணைய இணைப்பு மூலம் ஒரு சில அஞ்சல்களைப் படித்து பதில் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும் நத்தை வேகம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நிலைமை சீரடையலாம் என்று கருதுகிறேன்.

சரி இணையம் இல்லாவிட்டால் போகட்டும், கபீரின் கைங்கரியம் ஏதாவது செய்யலாமென்று நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்தது ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை தொகுத்து மென்னூலாக்குவது. அப்படியே, சுதந்திரத் தினத்தினுள் செய்து முடிக்கவேண்டும் என்ற முனைப்போடு கடந்த பத்து நாட்களாக முயன்று செய்து முடித்தாயிற்று. விருந்தினர் இடுகைகளைத் தொகுத்து அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூல் தயாரித்து e-snip வலை தளத்தில் ஒரு வழியாக ஏற்றிவிட்டேன். ஒரு MB கோப்பை வலையேற்ற எடுத்துக் கொண்ட நேரம் 54 நிமிடங்கள், அதுவும் பலமுறை முயற்சித்தப் பின்னரே கைகூடியது.

தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவோரும் இணையத்திலேயே முன்னோட்டம் காண விழைவோரும் கீழுள்ள சுட்டியினை பயன் படுத்தவும்

கபீரின் நிழலில்....... அன்பின் சங்கமம்

இந்தத் தொகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களை கலந்து வெளியிட விரும்பினாலும் மேலே சொன்ன காரணங்களால் இயலாமல் போனது. அழகான கட்டுரைகள், அருமையான நட்பு வட்டம் இவற்றைக் கருத்தில் கொண்டு இதற்கு யாரிடமும் மறுப்பு இருக்காது என்ற உரிமையுடன் செயல்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த இடுகைக்கான கபீர் ஈரடி ஒன்றைக் காண்போம்.



सातों शब्द जू बाजते, घरि घरि होते राग ।
ते मन्दिर खाली पडे, बैठन लागे काग ॥


சப்தசுர ராகம் தாளம், அலை அலையாய் கேட்டதொரு காலம்
கேட்பாரில்லா மாடம், அங்கேக் கூடிக் கரைவன காகம்.


வெறி பிடித்தவர்கள் போல் செல்வம் ஈட்டுவதில் உள்ள போட்டியும் அதன் காரணமாய் நடைபெறும் பெரும் ஊழல்கள் வன்முறைகள் யாவும் எதற்காக ? பெரிய மாளிகைகளைக் கட்டி அங்கே ஆடலையும் பாடலையும் ரசித்து அனுபவிக்கவா? அதற்குத்தான் பலருக்கு நேரமே இருப்பதில்லையே. அப்படியே அனுபவித்தாலும் கடைசியில் அவர்கள் கதியும் என்னாயிற்று ? வெறும் காகங்கள் அமர்ந்து கரையும் இடிபாடு நிறைந்த கட்டிடங்களாவன்றோ காலப்போக்கில் மாறி விடுகின்றன.

இப்படி நிலையற்ற உலக வாழ்வில் சுகத்தை நாடுவதை விட்டு நித்திய சுகம் தரும் இறைவன் கழல்களைப் பற்றிக் கொண்டால் உய்ய வழியுண்டு என்று சொல்லும் வள்ளலாரின் பாடலை இங்கு சேர்த்து நினைவுகூர்வோம்

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே,
கற்றதெல்லாம் பொய்யே, நீர் கணித்ததெல்லாம் வீணே
உண்டதெலாம் மலமே, உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே,
விண்டதனால் என் ? இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்,
இறவாத வரம் பெறலாம், இன்புறலாமே

---------------------
இன்று இந்திய சுதந்திரதினம் மாத்திரமன்று, மகான் அரவிந்தரின் ஜன்ம தினமும் கூட. நல்ல ஆன்மாக்கள் விரும்பும் சுதந்திரத்தை குறிக்க வந்த தினமாகவும் கொள்ளலாம். பாரதியார் இந்திய சுதந்திரத்தை விரும்பி ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றால் இராமலிங்க பெருமானும் ஆன்மாவிற்கான சுதந்திரத்தை துய்த்துப் பாடுகிறார்.

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்,
மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழை
அன்பினொடும் பாடிப் பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்,
எண்ணம் எலாம் நிரம்பினேனே.

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்.

இனி அடுத்த இடுகை எப்போது வருமோ தெரியாது !
இச்சிறியேனால் ஆவது என்னே !!!