Sunday, July 21, 2024

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே

 திருமலதாஸ் என்பவன் ஒரு சலவைத் தொழிலாளி. 

இது சுமார் 700 ஆண்டுகள் பழைய சரித்திரம்.  ( click here for details )

அவனுடைய பேறு  ஸ்ரீபாத  ஸ்ரீவல்லபரின் குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.  தொடர்பு மட்டுமல்ல  அவருடைய அருளும் இருந்தது. 

அதன் பயனாக முதிர்ச்சி அடைந்திருந்த அவனுடைய ஞானம், சங்கர்பட்டிடம் தன்னுடைய அடுத்த பிறப்பின் ரகசியத்தை வெளியிட்டது. அதுவும் ஸ்ரீபாதரால் அவருக்கு தெரியப்படுத்தப் பட்டதே.

அதை  ஸ்ரீபாத சரிதாம்ருதத்தின் கீழுள்ள பக்கங்களில் காணலாம். ( while reading on mobile screen click on the image to expand for better readability)

  


ஸ்ரீபாதரின் சரிதாம்ருதத்தை மொழி பெயர்க்கும் போதே ' யாரிந்த காட்கே மஹராஜ்' என்ற எண்ணம் எழுந்தது.  அந்த சரிதாம்ருதத்தில் வந்த  பல கூற்றுகள்  வித்யாரண்யர், ராமலிங்க சுவாமிகள்,  சிவாஜி, சமர்த்த ராமதாஸர் ராகவேந்திரர், ஷிரடி சாயி போன்றவர்களின் வருகைகள் முன் கூட்டியே சொல்லப்பட்டு அவைகள் நிஜமானதைக் கண்டு  இந்த காட்கே மஹராஜ் பற்றியும் அறிய ஆவல் எழுந்தது.

இணையத்தேடலின் போது ஒரு பெரும் பொக்கிஷமே கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் மஹாராஷ்ட்டிரத்தில் நன்கு அறியப்பட்ட பெரும் சீர்திருத்தவாதி. 

  அமராவதி பகுதியில் ஷேண்காவ் என்ற கிராமத்தில் வண்ணாரக் குலத்தில் பிறந்தவர். இயற் பெயர் தேபூஜி  ஜிங்ராஜி  ஜானோர்கர்.  தீண்டாமை, வறுமை போன்ற காரணங்களால்  முறையான எழுத்தறிவு பெற முடியாவிட்டாலும் கிராமத்து சிறுவர்களை சேர்த்துக் கொண்டு பஜன் மண்டலி அமைத்து விழாக் காலங்களில் கீர்த்தனங்கள் செய்வதில் சுற்றுப்புற வட்டாரங்களில் மிகவும்  பிரபலமானார்.

அவர் பிறந்தது  பிப்ரவரி 23, 1876

குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட அவருடைய தந்தையை இளவயதிலேயே இழந்த அவருள்  சமுதாய மாற்றத்திற்கான அவசியம் ஆழப்பதிந்தது.

பதினெட்டு வயதில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமானார். 
தாய்மாமனுடன் விவசாயத்தில் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றிய போதும் தன் கீர்த்தனங்களை நிறுத்தவில்லை.  அவரது 29 வது வயதில் ஒரு  கடன் பத்திர மோசடி மூலம் தன் நிலத்தையும் இழக்க நேர்ந்த போது எழுத்தறிவுக் கல்வியின் அவசியம் புரிந்தது. அதற்கெனவே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு குடும்ப வாழ்வை துறந்தார்.

ஊர் ஊராக சென்று தனி மனித விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். கையில் எப்பொழுதும் ஒரு விளக்குமாறு,  தலைமேல் கவிழ்க்கப்பட்ட -உடைந்த -மண் ஓடு (காட்கே- Gadge).  இதுதான் அவருடைய அடையாளங்கள். (தற்கால மொழியில் சொல்வதானால் 'பிராண்ட் இமேஜ்' ).

ஒரு கிராமத்தை அடைந்ததும் தெருவுகளையும்,  சாக்கடைகளையும் சுத்தம் செய்ய ஆரம்பிப்பார். உடன் சேர்ந்து கொள்பவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப் படுவதில்லை. யாரேனும் உணவளித்தால் மண் ஓடு பிட்சை பாத்திரமாகும்.  மாலையில் கீர்த்தனங்கள். இடையிடையே கேள்வி பதில் பாணியில் சீர்திருத்தக் கருத்துகள். இவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அடுத்த நாள் மற்றொரு கிராமம்.

அவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஈடுபாடு கொள்ளவில்லை. ஆனால் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நலிந்தவருக்கும் வறியவர்களுக்கும் சேவை செய்வதில் அக்கறை காட்டினார். 

அவர் கபீரைப் போலவும் வள்ளலாரைப் போலவும் தெய்வத்தை உயிருள்ள ஜீவனில் கண்டார். கல்லில் காணவில்லை.  அவருடைய கீர்த்தனங்களில்  நாமதேவரின் அபங்கங்களும்  கபீரின் தோஹாக்களும்  மிக அதிகமாக இடம் பெற்றன.  


கபீர் சொல்வது போல பேசாத சிலைகளை விட நடமாடும் ஆத்மாக்களிடையே இறைவனைக் காண்பாய் என்பதை அவர் நடைமுறையில் செய்து காட்டினார்.

कबीर जेता आतमा , तेता सालिगराम  | 
बोलनहारा पूजिये,  नहीं पाहन सो काम ||

நேரடி மொழி பெயர்ப்பு
கபீர், ஜீவித ஆத்மா அதுவே சாளக்கிராமம் |
உயிரோட்டத்தைத் தொழு, கற்பூசனைகள் ஆகாது||

மிகச் சுருக்கமாக கூறப்பட்டுள்ள கபீரின் ஈரடிக்கு சற்றே விளங்கும் வகையில் நீளமான தமிழ் மொழி பெயர்ப்பு :

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே, இத்தேகமே சாளக்கிராமம்,  கபீரா |
மன்னுயிரில் அவனை வணங்கு,  மூர்த்தி பூசனை எதுவும் பயன் தரா  ||

[ அகம் = குடியுள்ள வீடு ;  சாளக்கிராமம் = கண்டகி நதியில் கிடைக்கும் திருமாலின் அம்சம் உள்ள விசேஷமானக் கல் '; மன்னுயிர் =உலகில் உள்ள உயிர்கள் ; மூர்த்தி பூசனை = விக்கிரக ஆராதனை.]

தொன்று தொட்டு சாளக்கிராம கற்களை பூஜை அறையில் வைத்து பூஜிப்பது  நம் நாடெங்கும் உள்ள வழக்கம். பெருமாள் உள்ள கல் புனிதமானால், அவனே குடியிருக்கும் ஜீவன்கள் இன்னும் எத்தனை புனிதமானவை !! அவற்றிற்கு செய்யப்படும் சேவை நிஜத்தில் பெருமாளுக்கே செய்த பூஜையாகும் என்பதை இந்த தோஹாவில் கபீர் வலியுறுத்துகிறார்.

காட்கே மஹராஜ் மூட நம்பிக்கைகளை வெறுத்தார். ஆனால் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. அவருடைய கீர்த்தனங்களில் மிகவும் பிரபலமானது " கோபாலா கோபாலா தேவகி நந்தன கோபாலா "  என்பதாகும்.

விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காட்கே மஹராஜரினுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மானவ சேவையே  மாதவன் சேவை  என்பதில் அவர் குறியாக இருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தையும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதிலும்,  யாத்திரிகர்களுக்கு அன்ன சத்திரங்கள், மருத்துவ மனைகள், கோசாலைகள், தொழுநோயாளிகளின் சிகிச்சை கூடம், அபலையர் நலிவுற்றோர் இல்லம் கட்டுவதில் செலவிட்டார்.
ஏழைகளோடு ஏழையாகவே வாழ்ந்தார்.

அவருடைய வாழ்க்கையை இன்னொரு கபீரின் ஈரடி அழகாக படம் பிடிக்கிறது.

दीन  गरीबी  बंदगी  साधून  सौं   आधीन  | 
ताके  संग  मैं यौं  रहूं , ज्यौं पानी संग  मीन  || 

விழைவேன் ஏழையின் எளிமை, செய்வேன் சாதுவிற்கு பணிவிடை |
மகிழ்வேன் அவர்தம்  உறவில்,  திளத்திருக்கும் மீன்போல் நீரிடை  ||

மீனுக்கு நீரில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அப்படி  சத்சங்கத்தில், சாதுக்களுக்கு பணிவிடை செய்யவும் எளிய மக்களுடன் கூடியிருப்பதுமே தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்ற கபீர் வரிகளுக்கு மஹராஜ் இலக்கணமாகத் திகழ்ந்தார். 

பண்டரிபுரத்தில்  அவர் கட்டிய சத்திரத்தை  டாக்டர் அம்பேத்கரின்  People's Education Society க்கென நன்கொடையாக கொடுத்து விட்டார். அம்பேத்கரும் அவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒருவர் செயலை மற்றொருவர் போற்றினர். தனது கீர்த்தன சொற்பொழிவுகளில் அடிக்கடி அம்பேத்கர் அவர்களின் கல்வியையும், உழைப்பையும் மேற்கோள் காட்டி ஒவ்வொரு சிறுவனும் அவர் போல் முன்னுக்கு வர வேண்டும்  என்பதை வலியுறுத்துவார். 

பாடத்திட்டத்தில் தொழிற் கல்விக்கு  அதிமுக்கியத்துவம் கொடுத்தார். இதனால் தன்னம்பிக்கை உள்ள  இளைய தலைமுறை பெருகியது.  அவர் மஹாராஷ்ட்ராவில்  நிறுவிய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களில் 36 கல்விக் கூடங்கள்  அடங்கும்.

டாக்டர் அம்பேத்கர் 06/12/1956 -ல் இயற்கை எய்திய போது  பெரிதும் துக்கமடைந்தார் மஹராஜ்.  சரியாக இரண்டு வாரங்களில் ( 20/12/1956) மஹராஜும் இறைவனடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது எண்பது. அவர் டாக்டர் அம்பேத்காரை விட பதினைந்து வருடங்கள் மூத்தவர். இருப்பினும் அவர் கீர்த்தனங்களின் போது  அம்பேத்கரை கடவுளுக்கு சமமாக மதித்தார். தன்னை ஒரு போதும் முன்னிறுத்திக்  கொள்ளவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதியான காட்கே மஹராஜுக்கு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது  கொடுத்து அந்த விருதிற்கு பெருமை சேர்த்தது இந்திய அரசு.   

1983-ல் நாக்பூர் பல்கலைகழகத்திலிருந்து பிரித்து  "சந்த் பாபா காட்கே அமராவதி பல்கலைகழகம்" என்ற பெயரில் புதிய பல்கலைகழகத்தை துவக்கினர்.  ஆனால் காட்கே மஹராஜோ தன் மரணத்திற்குப் பின் தனக்கு சமாதி, சிலை வைப்பது எதுவும் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். 

எந்த ஒரு தன்னலமற்ற சேவையும் காலத்தால் போற்றப்பட வேண்டும். அடுத்து வரும் தலமுறைகளை நல்வழியில் நடத்த அவை வழிகாட்டும் என்பதை வைத்து பார்க்கையில் மஹராஜின் வார்த்தைகள் மீறப்பட்டதாக நினைக்க வேண்டியதில்லை. திருவள்ளுவர் கூறுவது போல் 
  
நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது  புத்தேள் உலகு   

ஒருவன் நிலவுலகத்தில் நிலையான புகழ் தரும்  செயல்களை செய்வானாயின் தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டும் சிறந்தவரை விரும்பாது. 

இன்று ( 21-07-2024) குரு பூர்ணிமை. காட்கே மஹராஜ் போன்ற கர்மயோகிகளை போற்றி நினைப்பதும் குரு வந்தனையாகும்.  அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்.

ஜெய் குருதேவ்.