Friday, December 23, 2022

குருவைத் தேடி.....

குருவின்றி ஞானம் இல்லை என்பது ஆன்மீகத்தின் அரிச்சுவடி பாடங்களில் ஒன்று. கபீர் தாஸ் அவர்களின் ஒரு ஈரடி இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

कबीरा ते नर अन्ध है, गुरु को कहते और ।
हरि रूठे गुरु ठौर है, गुरु रुठै नहीं ठौर ॥

மனிதரில் அவனே குருடன், கபீரா, குருவை அறியாதவன் | 

அரி முனிந்தால் குருவுண்டு, குரு முனிந்தால் யாருண்டு ||

( அரி = ஹரி  ;  முனி = கோபம், வெறுப்பு)

கடவுளே நமது கர்மங்களினால் நம்மீது வெறுப்படைந்திருந்தாலும்  குருவானவர் நமக்கு அடைக்கலம் தந்து அவற்றின் கடுமையை தணிக்கச் செய்ய வல்லவர். ஆனால் அத்தகைய குருவிற்கே நம்மீது கோபம் ஏற்பட்டுவிட்டால் அப்போது அந்த கடவுள் கூட துணை வரமாட்டான். அப்படிப்பட்ட குருவை புரிந்து கொள்ள முடியாத மனிதரெல்லாம் குருடருக்கு ஒப்பானவர் என்பதே இதன் பொருள். (ஹிந்தியில் ठौर (டௌர்) என்றால் அடைக்கலம். )

நானும் சில வருடங்களாக எனக்கேற்ற குருவை எப்படிக் கண்டறிவது என்ற சிந்தனையிலேயே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். சுவாமி ஓம்காரானந்தாவை சென்று சந்திக்க ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அவர் திடீரென்று கோவிட் தொற்றில் சமாதி அடைந்து விட்டார். என் தேடல் தொடர்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு  ஒரு யூட்யூப் காணொளியில் ஸ்ரீ வி. வி. பிரம்மம்  என்பவரை பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆந்திராவில் தாடிபத்ரி யில் அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சிறு வயதிலிருந்து பஞ்சாட்சிர செபம் செய்து திருவண்ணாமலை ரமணருடைய சமாதி முன் ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவர். இது நடந்தது அவருடைய இருபத்தியெட்டாம் வயதில். தற்போது 79 வயதாகியுள்ள ஸ்ரீ பிரம்மம்  ஒரு விருத்தாஸ்ரமும் அனாதைகளுக்கான இல்லத்தையும் ஸ்ரீ ரமணரின் பெயரில் தன் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி நடத்தி வருகிறார். யாரிடமும் நிதி கேட்டு செல்வதில்லை. அவருடைய பிள்ளைகளும் மருமகனும் இவைகளை கவனித்துக் கொள்வதில்அவருக்கு பேருதவியாக இருக்கின்றனர்.

" அவருடைய சொற்பொழிவை கேட்க அறையில் நுழைந்த உடனே என்னை ஒரு பேரமைதி கவ்விக் கொண்டது. அப்போது இன்னமும் அவர் அறைக்குள் வந்திருக்கவில்லை. சொற்பொழிவிற்குப் பின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இருந்தது. பலரும் பற்பல கேள்விகளுடன் வந்திருந்தனர்.  ஆனால் அவர் பேசி முடித்ததும் எல்லோருடைய சந்தேகங்களும் மறைந்து போயின. கேள்விகள் இல்லாமலே அவரவர்களுக்கு தேவையான பதில் கிடைத்திருந்தது.  எந்த அமைதியை வாழ்நாளெல்லாம் நான் தேடினேனோ, குருஜியின் சந்திப்பிற்குப் பின் அதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அனுபவித்தேன்"  

மேற்கண்ட அனுபவத்தை சொல்லியிருப்பவர்  "யங்கா" என்னும் செக்கோஸ்லோவேகிய அன்பர். அந்த காணொளியை பதிவின் கடைசியில் காண்போம்.

இப்படி பலவாறாக தூண்டப்பெற்று  அப்பெருமானை சந்தித்து ஆசிகள் பெற்று வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்ற மாதம் 23 ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து கிளம்பி, என் மனைவி மகனுடன், அவருடைய இல்லத்தை சென்றடைந்தோம்.   அவரை நமஸ்கரித்த பின் அவருடைய முதல் கேள்வி ( எல்லாம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்)

" எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்" ? 

" தங்களுடைய ஆசிகளை பெற்றுச் செல்லலாம் என்று....."

" எங்கிருந்து வருகிறீர்கள் ?"

"புட்டபர்த்தி "

"சத்யஸாயியே ஒரு அவதாரம். அவர் சொன்னதை கடைபிடித்தால் போதும். அதைவிட்டு ஏனிப்பிடி சுற்றுகிறீர்கள்? "

 ( அமைதி)

 "ஆசி வேண்டுமென்றால் அதற்கு தகுதி வேண்டுமல்லவா?"

(பொட்டென்று முகத்தில் யாரோ அறைந்தது போலிருந்தது. )

" சரி, தியானம் செய்வது உண்டா?"

"குருஜி,  காலை மாலை காயத்ரி செபம் செய்வேன், அடிக்கடி நாமசங்கீர்த்தனம், குருவார பூஜை என்று வீட்டில் ஏதாவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்...."

"அவைகளெல்லாம் வெறும் மனதை சுத்தப்படுத்துவதற்கே அல்லாமல் அவற்றால் சாட்சாத்காரம் கிடைக்காது.  It is all play of the mind . The ego will not go. தியானம் செய்யுங்கள். தினமும் விடாது செய்யுங்கள்" என்று அறிவுறுத்தினார்.  

'நமது இயற்கை குணமே ஆனந்தம், ஒரு குழந்தைக்கு உள்ளது போல. யாவும் மனதின் சலனம். அதில் அமைதியை தேடுவதும் அடங்கும்'. 

காயத்ரி செபம் செய்யும் போது  அதன் மூலத்தில் எழும் சப்தத்தை கவனி. 

( இதைத்தான் மாணிக்கவாசகர் " ...உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா " என்று சிவ புராணத்தில் கூறுகிறாரோ !)

 என்று பலவாறான விளக்கங்களை  தந்து நாற்பது நிமிடங்களை எங்களுக்காக ஒதுக்கினார். நேரம் மதியம் 2:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

விடைபெறும் முன் என் மனைவிக்கு மட்டும் சுமார் பத்து நிமிடங்கள் தலை மீது கையிட்டு தியானத்தின் அமைதியை உணர்த்தினார்.

 அது அவர் விடாது செய்து வரும் குருவார குரு பூஜையின் பலன் என்று நான் நினைத்துக் கொண்டேன். ( எனக்குத்தான் தகுதி இல்லையென்பதை ஆரம்பித்திலேயே உணர்த்தி விட்டாரே) .

அவரை நமஸ்கரித்து விடைபெற்ற பின் அவருடைய இல்லத்திலிருந்து நான்கைந்து கி மீ தூரத்திலிருந்த ஆஸ்ரமத்திற்கு ஒரு உதவியாளர் அழைத்துச் சென்று எங்களுக்கு மதிய உணவு அளித்தார். பெண்ணாற்றங்கரையில் அமைந்த அந்த ஆசிரமத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். நூறு சிறுவர் சிறுமியரை தினமும் பாலித்தல் வேண்டும் என்றால் இறைவனுடைய சங்கல்பம் இல்லாமல் முடியாது. 

மனதை ஒதுக்கி இதயத்தால் (அன்பினால்) மட்டுமே சாட்சாத்காரம் கிட்டும் என்பதை காணொளி நேர்காணலிலும் அவர் வலியுறுத்துவதைக் காணலாம்.

இந்த நிலையை அடைவதற்குத்தான் ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற பக்தியும் சரணாகதியும் தேவைப்படுகிறது.  

முழுவதுமாக பாருங்கள்  


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் 
                       தம்முயிர் போலெண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார், 
                                         யாவர் அவர் உளம் தான்
சித்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
                         இடமென நான் தெரிந்து கொண்டேன்
அவ்வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட 
                               என் சிந்தை மிக விழைந்ததாலோ- அருட் பிரகாச வள்ளலார்.

Those who are interested can also see more videos at his Youtube Channel 

அனைவருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துகள்

Saturday, August 06, 2022

காக்கையில் காண்பார் அப்பனை

 உலக வாழ்க்கையில்  பெரும்பாலும் நமது பேச்சும்   நடத்தையும்   முரண்படும் போது    நகைப்பிற்கு  இடம் கொடுக்கிறோம். அனைத்து கேலி சித்திரங்களும் -அரசியலாகட்டும், சமூக நடப்புகளாகட்டும்- இந்த முரண்பாட்டை  சுற்றியே  எழுகின்றன.  குழந்தைகள் எதிர்பாராதபோது உண்மைகளை போட்டுடைக்கும் போது  எழும் தர்மசங்கடங்களும் சிரிப்பை வரவழைப்பனவே.

வழிவழியாக  வரும் நம்பிக்கைகளை  அதன் தாத்பரியம் அறியாத மக்கள் கடைபிடிக்கும் போது அறியாத சிறு குழந்தைகள் போல் ஆகி விடுகின்றனர்.  ஒரு நிலையில் அவர்களின் செய்கை மூட நம்பிக்கை என்ற நிலைக்கு  ஆளாகிறது. 

உதாரணத்திற்கு கபீர் ஒரு பாடலில் சொல்வார் "கங்கையில் மூழ்குவது மோட்சம் என்றால் காசியின் எல்லா காகங்களுக்கும்  மோட்சம் சுலபமே"  என்று கேலி செய்வார். 

  இங்கே  அவர் கங்கையின் புனிதத்தைப் பற்றி கேலி செய்வதாகக் கொள்ளக் கூடாது.  ஏனெனில் அவர் ஒரு ஞானி. அவர் கண்டிப்பாக ரிஷி முனிகளின் வாக்கில் தவறு இருப்பதாக சொல்ல மாட்டார். அப்படியானால் அவர் சொல்ல வருவது என்ன?

 இதை விளக்க ஒரு கதை உண்டு. 

பார்வதி தேவிக்கும் இதே சந்தேகம் வந்தது. "கங்கையில் நீராடுபவர்கள் எல்லோருக்கும் பாவங்கள் கரைந்து விடுமா?"  என்று கேட்கிறாள்.  " சரி வா ! அதையும் பரீட்சை செய்யலாம் "  என்று  சொல்லி இருவரும் காசியை அடைந்தனர்.

      சிவன் கங்கை கரையில் ஒரு குஷ்ட ரோகியாய் வேஷம் எடுத்து படுத்திருக்க  பார்வதி  அவன் மனைவியாய் நாடகம் ஆடினர். கங்கைக்கு வருவோர் போவோரையெல்லாம் தன் கணவருக்கு 'பாவங்களை கழுவும்; ;கங்கையில் நீராட உதவ வேண்டுமாறு வேண்டிக் கொண்டாள். நூற்றுக்கணக்கான பேர் அவர்களை பொருட்டாகவே கருதவில்லை. ஒரு சிலர் கேலி செய்து கொண்டே சென்றனர். இன்னும் பலர் உதட்டளவில் அனுதாபம் காட்டினர். ஆனால் யாரும் அவரை நதி வரையில் தூக்கிச் செல்லவோ நீராட்டவோ முன் வரவில்லை.  எங்கோ சென்று கொண்டிருந்த  ஒரு கீழ் நிலை மனிதன் அவர்கள் மேல் அனுதாபம் கொண்டு அந்தரோகியின் கங்கையில் நீராடும் விருப்பத்தை நிறைவேற்றி  அவர்களை வணங்கிச் சென்றான்.

அப்போது சிவபெருமான் தேவியிடம் கூறினார் "இவ்வளவு ஜனங்களில் மோட்சத்தை பெறப் போவது இவன் மட்டுமே.  ஜீவகாருண்யம் இரக்கம் போன்ற பண்புகளுடன் விருப்பு வெறுப்பற்றவன், மேன்மேலும் பாவ செயல்களை செய்யாதவன் இவர்களுக்கு மட்டுமே மோட்சம் சித்திக்கும்.  அநேகம் பேர் இதை ஒரு குருட்டு போக்கில் சித்த சுத்தியின்றி செய்வதால் அவர்களுக்கு எவ்வித பயனும் இருப்பதில்ல. மேலும் சிலர் வெளி பகட்டாகக் காட்டிக் கொள்கின்றனர் " என்று  துவங்கி  உண்மையான பக்தனுக்கு தேவையான குணங்களைப் பற்றி  மிகவும் விஸ்தாரமாக விளக்கியதாக கதை செல்கிறது.

இந்த அடிப்படைத் தகுதியை மக்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கபீர்தாஸ் போன்ற ஞானிகள் இடித்துரைக்கின்றனர்.

அது போன்றே இன்னொரு இடித்துரை கபீர் சொல்வதும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

जिंदा बाप कोई न पुजे,  मरे बाद पुजवाया | 

मुठ्ठी भर चावल  लेके,  कौवे का  बाप  बनाया || 



அப்பனை  வாழ்க்கையில் மதியார், அவர் மரித்த பின்வழி படுவரே |

அங்கை நிறைய  சோறெடுத்து  காக்கையில்  அப்பனைக்  காண்பரே ||

மாற்று :

அப்பன்  வாழும்  போது மதியார், அவர்மரித்த பின்வழி படுவரே |

 அப்பனை காக்கை  யாக்கி, கைநிறைய  அமலை படைப்பரே ||  

{அமலை : வெண்சோறு, சோற்றுத் திரள் )

நம்முடைய முன்னோர்களுக்கு ஈமக்கடன் ( சிராத்தம்) செய்வது என்பது காலங்காலமாக  இருந்து வந்திருக்கிறது.  சங்க இலக்கியங்கங்களிலும்  காலமான முன்னோர்களை 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை தலையானது. 

திருவள்ளுவரும் 

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

என்று அன்றாடக்  கடமைகளில் முதலிடம்  முன்னோர்களுக்குத் தருகிறார்.

படைத்தல் அல்லது நிவேதனம் என்பது நமக்குள்ளே ஒரு பொறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சடங்கு என்பதை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவம் புரியும். நன்றி உணர்ச்சி பெருகும் இடத்தில் மட்டுமே சண்டை சச்சரவுகள் இன்றி அமைதி இருக்கும்.  ஒரு சிறு குடும்பமோ, நாம் சார்ந்த சமூகமோ ,வசிக்கும் நாடோ எதுவானாலும்  நம்முடைய மகிழ்ச்சிக்கும் வளமைக்கும் இந்த நன்றி உணர்ச்சியே அடிப்படையாகிறது. அது மனதில் குடிகொள்ளும்போது சுயநலம் மறைகிறது, விட்டுக் கொடுக்கும் பண்பு வளர்கிறது.

சூரியனுக்கு நன்றி சொல்ல பொங்கல் படைக்கிறோம். சூரியன் வந்து சாப்பிடுகிறானா என்ன என்று கேள்வி கேட்பவர்களுக்கு பரமாச்சாரியர் சொல்கின்ற அழகான பதிலை பாருங்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது சமூகத்திற்கு ஆற்றும் கடன். அதற்காக அவர்கள் மேற்கொண்ட கஷ்ட நஷ்டங்களை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்வதற்கான சடங்கே சிரார்த்தம்.  ஆனால் அவர்களின் முதிய காலத்தில் கவனிக்காமல் புறக்கணித்து முதியோர் இல்லங்களில் தனிமையில் கழிக்கவிட்டு அவர்களின் மரணத்திற்குப் பின் செய்யப்படும் ஈமக் கடனை நன்றி சொல்வதாக பொருள் கொள்ள முடியுமா என்ன? 

இந்த பிரச்சனை இன்று நேற்றல்ல கபீர்தாஸரின் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பது  அவருடைய மேற்கண்ட ஈரடியில் விளங்குகிறது.

கபீர், தயானந்தர், விவேகானந்தர், நாராயண குரு என்று எவ்வளவு சமூக சீர்திருத்தவாதிகள் வந்த போதிலும்  மனிதர்கள் போக்கில் பெரிதாக மாற்றம் தெரிவதில்லை. ஒருவேளை அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகப் போயிருக்குமோ என்னமோ !!