Sunday, March 25, 2007

குலம் தருமோ பெருமை ?

கல்விப்பெருமை, செல்வத்தின்கண் பெருமை, அதிகாரப்பெருமை மற்றும் வனப்பின் பெருமை இவையாவும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு பெரும் மாயையின் சக்தி. ஓரளவு இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பெருமை உண்டு. அது தான் குலப்பெருமை.

மனிதகுலம், காணும் எல்லாவற்றிலும் ஒரு உயர்ச்சி அல்லது தாழ்ச்சி கற்பிக்கிறது. இவைகளுக்கு குதிரை, பசு, காளை நாய் பூனை போன்ற விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கில் பணம் கொட்டி உயர் ஜாதி நாய்க் குட்டிகளை செல்வந்தர்கள் வாங்கி செல்வதை காண்கிறோம். அதனுடன் கணிணியில் பதிவு செய்யப்பட்ட அதன் மூதாதையர்களின் வரலாறும் உண்டு. எவ்விதத்திலும், எந்த நிலையிலும் அதன் உயர்ச்சிக்கு குறைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கவே இந்த ஏற்பாடு.

இப்படி இருக்கையில் தன் இனத்தை மட்டும் விட்டுவைப்பானா மனிதன். 'அவங்க ராஜா பரம்பரை' 'எங்கள் முப்பாட்டனார் திவான் பகதூராக்கும்' என்பன சில, கடந்த கால நிகழ்வுகளிலேயே, பெருமை பேசித்திரியும் பலரது போக்காகும். சாதி சண்டைகள் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இதற்கு எந்த ஒரு தேசமும் விதிவிலக்கு அல்ல. இது வேறுபாடு பாராட்டும் பாமர மனிதருடைய போக்கு. படைப்பு எல்லாவற்றிலும் ஒருமையை ஓர்ந்து, அன்பு போற்றும் ஞானிகள் இதை மாற்ற முயற்சிக்கின்றனர்.

ஆறறிவு கொண்ட மனிதனை அவன் பின்பற்றும் பண்பாடுகளையும் கொள்ளும் கோட்பாடுகளையும் கொண்டே தரம் பிரிக்க வேண்டுமே அன்றி பிராணிகளைப் போன்று பிறக்கும் குடியைக் கொண்டு அல்ல. அவைகளின் குணம் வெறும் மரபு வழியாக நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவனுடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளை ஒட்டியே குணங்களும் திறமையும் அமைகின்றது.

ஹரிபிரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. இவர் சிறுவனாக இருக்கும் பொழுதே அதை கற்க மிக்க ஆர்வம் கொண்டு பல சிரமங்களுக்கிடையே உழைத்து வெற்றி கண்டவர். சிரமங்களுக்கான காரணம் அவருடைய குடும்பத்தில் இசை என்பதின் வாசனை கூட கிடையாது. அவரது தந்தையார் ஒரு குத்து சண்டை வீரர். தன்னைப் போலவே தன் மகனும் அதில் தேர்ச்சி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த குடியிலே ஒரு இசை மேதை பிறக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம்.

நான்மணிக்கடிகையில் வரும் ஒரு பாடல்:

கள்ளி வயற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங்கடலுள்
பல் விலய முத்தம் பிறக்கும் ; அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி ?


நாம் பொதுவில் பயனற்றவையாகக் கருதும் முள் நிறைந்த கள்ளி, உப்பு கரிக்கும் கடல், காட்டில் வாழும் மான் ஆகியவை கூட பல மதிப்பற்ற பொருள்களை தர வல்லன. அதைப் போன்றே மேன்மக்கள் பிறக்கவேண்டிய குடி இதுதான் என்று எவரும் நிர்ணயம் செய்ய முடியாது.

ஒரு அபூர்வப் பிறவி வந்து தன்னுடய குலத்திற்கே பெருமை சேர்த்துப் போய்விடுகிறது. அதன் பின், சந்ததியினர் பொறுப்பு அதிகமாகிறது. இதை ஒரு நல்ல உதாரணத்துடன் கபீர் சுட்டிக் காட்டுகிறார்.

ऊंचॆ कुल मॆं जनमिया, करनी ऊंच न हॊय
सुबरन कलस सुराभरा, साधू निन्दा सॊय


ஊஞ்சே குல் மேன் ஜன்மியா, கர்னீ ஊஞ்சா ந ஹோய்
சுபரன் கலஸ் ஸுரா பரா, ஸாது நிந்தா ஸோய்


பிறப்பு தருமோ பெருமை, ஒருவர் செய்வினையாயின் கடை
சிறப்பு தருமோ பொற்கலம், உரவோர்க்கண் கள்ளாகும் கடை


(உரவோர் =மேன்மக்கள்; சுபரன் என்பது சுவர்ணம் என்பதன் திரிபு)

கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு, இன்னா சொல்லாமை போன்ற நற்குணங்களை மேன்மக்கள் வாழ்க்கையின் நியதியாகக் கொள்வர். அத்தகைய ஒருவர் விலையுயர்ந்த தங்கக் கலசத்திலேயே படைக்கப் பட்டாலும் கேடு விளைவிக்கும் கள்ளை நிந்திப்பர். அது போல் சமுதாயத்தில் ஒருவனுடைய செயல் கீழ்தரமானதாக இருப்பின் அவன் உயர் குடியில் பிறந்திருந்தாலும் அவன் நிந்தனைக்குரியவனே.

வள்ளுவர் சொல்வதும் அதுவே:

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை


ஆகவே நல்ல சந்ததியருக்கு அடையாளம் குடிப் பெருமைக்கு களங்கம் வராமல் நடந்து கொள்வதே.

சாதாரண மனிதர்களே சாதிபேதங்களில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சிறுமதியோர் சாதுக்களையும் ஞானிகளையும் விட்டு வைப்பார்களா ? அதிலும் கபீர் இந்த விஷயத்தில் சற்று அதிகமாகவே அடிபட்டவர். ஆனால் ஞானிகள் இத்தகைய சில்லறைத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அறிவுரைத் தேவைப்படுவது சாதாரண ஜனங்களுக்கே. அவர்களுக்கு கபீர் கூறுகிறார்.


जाति न पूछॊ साधु की, पूछि लीजिऎ ज्ञान
मॊल करॊ तलवार की, पडा रहन दॊ म्यान


ஜாதி ந பூசோ ஸாது கீ, பூசி லீஜியே ஞான்

மோல் கரோ தல்வார் கீ, படா ரெஹன் தோ ம்யான்


குலம் பொருட்டு ஆவது என், அடியவர் நிறை தெரிந்து ஏற்று
பலம் பொருட்டு குனை வாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு

(தடறு= ஆயுத உறை ; நிறை =மாட்சிமை ; ஏற்று= போற்று ; குனை வாள் = கூர்மையான வாள் )

போருக்கு புறப்பட்டிருக்கும் ஒருவன் எடுத்துச் செல்ல வேண்டிய வாளின் உறுதியையும் கூர்மையையும் பார்த்து தேர்ந்தெடுப்பானா அல்லது வாளின் உறையையும் அதன் வேலைப்பாட்டையும் பார்த்து எடுத்துச் செல்வானா? மனித உடல் வெறும் கூடு. ஒருவரின் ஆன்மீக சக்தியை இந்தக் கூட்டைப் பார்த்து முடிவு செய்தல் கூடாது. பிறப்பை ஒட்டி அந்த சக்தி நிச்சயிக்கப் படுவதில்லை. அது பல பிறவிகளின் மூலம் தவம் செய்து வந்திருக்கும் ஒரு சக்தி. அத்தகைய மாட்சிமை உடையவரின் குடிப்பிறப்பைப் பற்றி விவாதிப்பதே தவறு. தமிழ் மண்ணில் ஒரு நந்தனார், மகாராஷ்டிரத்தில் ஒரு நாமதேவர் (இவருடய தந்தை தையல் தொழில் செய்தவர்), கர்நாடகத்தில் குயவர்கள் குடும்பத்தைச் சார்ந்த கோரக்கும்பர் இப்படி இறை அனுபூதி பெற்ற மகான்கள் எண்ணிற்கடங்காது.


கண்ணன் கீதையில் சொல்வது (9-32) :

என்னை சரணடைந்தவர், பெண்ணோ, வைசியனோ அல்லது சூத்திரனோ யாராயிருப்பினும் மிக உன்னத நிலையை அடைந்தவர் ஆவர்.


மேற்கண்ட மகான்கள் கண்ணனின் கூற்றை மெய்ப்பித்தவர்கள். எனவே எத்தகைய சந்தர்பத்திலும் குலம் சாதி போன்ற எண்ணங்களை மனதுக்குள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக குறைந்த பட்சம் ஒன்றை நாம் கடைப்பிடிக்க முடியும். எங்கெல்லாம் சாதி மத சர்சைகள் நடக்கின்றதோ அவற்றை விட்டு விலகியிருந்தாலே ஆன்மீக மார்க்கத்தில் மேலும் ஒரு படி ஏறி விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.

Sunday, March 11, 2007

போதுமென்ற மனம்

எவ்வளவு பொருள் வேண்டும் ஒருவனுக்கு வாழ்க்கையில்?

மிதிவண்டியில் வேர்க்க விறுவிறுக்க வெய்யிலில் அலைந்த காலத்தில் ஒரு ஸ்கூட்டரோ மோட்டார் சைக்கிளோ இருந்தால் போதும். முன்னே உட்கார வைத்துக்கொள்ளும் குழந்தையின் தலை சாலையை மறைக்கும் பொழுது 'குடும்பம் பெரிசாச்சு இனி கார் தான் சரிபட்டு வரும்' என்று சொல்கிறது மனம். கஷ்டப்பட்டு வாங்கிய கார் பிரச்சனைகள் பண்ணும் போது "முன்னாலயே சொன்னேன். வாங்கும் போதே செலவைப் பார்க்காமே நல்ல மாடலா வாங்கி இருந்தா இப்படி ஏன் கஷ்டப்படணும்" என்று மகளோ மனைவியோ இடித்துரைக்கும் போது 'அதுவும் சரிதான் ஆனால் எவ்வளவு கடன் வாங்க முடியும். ஏற்கனவே வீட்டு கடனில் பாதி சம்பளம் போய்விடுகிறது இன்னும் காருக்கு வட்டி எவன் கட்டுவான்' என்று சலித்துக்கொள்ளும் உள்ளம்.

ஐந்தாயிரம் ரூபாயில் கடை வைத்திருப்பவனுக்கு இருபதாயிரம் ரூபாயில் கடைவைக்க ஆசை. ஐந்து கோடி முதலீட்டு தொழிலதிபருக்கு இருபது கோடி முதலீடு செய்து தொழில் நடத்த ஆசை.

இது தற்கால நிஜம் என்றால் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கபீர்தாஸ் காலத்தில் சிறிது வேறு பட்டிருக்கும்.ஆடு வளர்ப்பவன் மாட்டுக்கு சொந்தகாரனாக ஆசைப் பட்டிருப்பான். மாடு வைத்திருப்பவன் பண்ணை வைக்க ஆசைப் பட்டிருப்பான். நடந்து செல்பவன் பல்லக்கிலோ குதிரையிலோ பிரயாணம் செய்யும் யோசனை செய்திருப்பான். இப்படியாக மனம் தேவைகளை வளர்த்துக் கொள்ளுமளவு அதன் தேடலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. There is always enough for a man's need but never for his greed என்றார் மகாத்மா.

அப்படியானால் இறைவனிடம் என்ன தேவையை முன்வைப்பது ? இதைப் பற்றி கபீர் சொல்வதைப் பார்ப்போம்.

सांई इतना दीजिए, जामॆ कुटुम समाय
मैं भी भूखा ना रहूँ, साधु न भूखा जाय


ஸாயி இத்னா தீஜியே ஜாமே குடும் ஸமாய்
மேம் பீ பூகா நா ரஹூ, ஸாது ந பூகா ஜாய்


இத்தனை அருள்வாய் ஈசா, என்றும் எம்குடி நலம் கா
பத்தர் பசித்து ஏகாமலே, யானும் பசியாது இருக்கத் தா

(பத்தர் =பக்தர், அடியார்; ஏகாமல் =போகாமல்)

கபீர் பல்லக்கு கேட்கவில்லை. மாட மாளிகை கேட்கவில்லை. யாவரும் பசியின்றி இருக்க வேண்டுகிறார்.

தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வாசகங்களில் காணப்படும் கோபாவேசம் இதில் இல்லை. ஆயினும் பசியின் கொடுமையை முற்றுமாக அறிந்து அதை நீக்குவதே ஒருவரின் தலையாய கடமை என்பதை உணர்த்தும் வார்த்தைகள் இவை.

பொதுவாக சாதுக்களுக்கு விதிக்கப்பட்ட விதி இரந்துண்ணல். ஒரு சம்சாரியின் கடமை தன்னலமில்லா அத்தகைய சாதுக்களைப் போற்றுவதே ஆகும். வழிப்போக்கர்களாக வரும் அவர்கள், வீட்டை விட்டு கிளம்பும் பொழுது பசியுடன் செல்லக்கூடாது என்பது மிக முக்கியமான கொள்கையாக அக்காலத்தில் -எக்காலத்திலும்- இந்நாட்டில் இருந்து வந்திருக்கிறது.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு


(வேளாண்மை =உபகாரம்)

ஒருவன் பொருளீட்டி இல்வாழ்க்கை நடத்துவதே தேடிவரும் விருந்தினரை உபசரித்து அவர்கள் நலம் பேணுதற்கே என்று வள்ளுவரும் கூறுகிறார். விருந்தோம்பலுக்கென ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார்.

விருந்தோம்பல் தான் நாகரீகத்தின் உண்மையான அளவு கோல். மனித நேயத்தின் சின்னம். அதற்கு தடை என்பது வரக்கூடாது என்பதில் நம் முன்னோர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். எனவே கடவுளிடம் பிரார்த்திக்கும் போது கூட கபீர் விருந்தோம்பலுக்கு தடையில்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கொடு என்று கேட்கிறார்.

அளவுக்கு அதிகமான செல்வம் வரும் பொழுது அதுவே துயரத்தில் ஆழ்த்தக் கூடும். இதனை இன்னொரு தோஹாவில் அழகான உதாரணத்தோடு எடுத்துச் சொல்லுகிறார்.


जॊ जल बाढे नाव मॆं, घर मॆं बाढै दाम
दोनो हाथ उलीचियॆ, यही सयानॊं का काम

ஜோ ஜல் பாடே நாவ் மேன், கர் மே பாடை தாம்
தோனோ ஹாத் உலீசியே, யஹி ஸயானோங் கா காம்

படகில் புகுந்த நீரென்பர் மனையிற் புகுந்த சீரை
தடங்கண்டார் சொன்ன முறை, கரமிரண்டால் வாரியிறை
(தடம் கண்டார் = முக்தி நிலை பெற்றவர் ; சீர் = செல்வம்)

படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உட்புகும் போது எப்படி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு கைகளாலும் நீரை வாரி இறைப்பதற்கு முயற்சிப்பார்களோ அதுபோலவே நிறைந்து வரும் செல்வத்தையும் உடனுக்குடன் இரண்டு கைகளாலும் அள்ளி தானம் செய்வீர் என்று உவமித்து கூறுகிறார். இல்லாவிடில் படகில் புகுந்த நீர் எப்படி அதில் உள்ளவர்களை மூழ்கடித்து விடுமோ அது போல் ஒருவனிடத்தில் சேரும் செல்வம் அவனை உலக விசாரங்களிலேயே மேலும் மேலும் ஈடுபடுத்தி மாயையில் அழுத்தி விடும். அவனில் கடவுளைத் தேடும் ஆசையோ அல்லது ஆன்மீகத்திற்கான நாட்டமோ இருப்பதில்லை. இதிலிருந்து தப்ப வேண்டுமெனில் செல்வத்தை சேர்க்கும் மனப்போக்கை விட்டு யாவருடனும் இருப்பதை பங்கிட்டு வாழக் கற்றுக் கொண்டால் இறைவனை அடைவது எளிது என்று கபீர் கூறுகிறார்.

("ஸயானோங் கா காம்" அறிவுடையவர்கள் செயல் என்று பொருள் வரும். தோனோ ஹாத் உலீசியே என்பது இரண்டு கரங்களாலும் எடுத்து எறிவது என்றாகும்).

ஆகையால் பொருளீட்டும் இயலாமையினால் கபீர் எளிமையை போதிக்கவில்லை. ஆன்மீக முன்னேறத்திற்கு தடையாகிவிடும் என்ற காரணத்திற்காகவே பொருள் சேர்க்கும் எண்ணத்தை விலக்கச் சொல்கிறார் என்பது புரிகிறது. வேறொரு வகையில் பார்த்தோமானால் ஈகை குணம் இயல்பாக உள்ளவ்ர்களுக்கு ஆன்மீக மார்க்கம் விரைவாகக் கைகூடும்.

ஆன்மீகம் என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே இல்லை. சகல உயிர்களையும் சமமாக பாவித்து எல்லோரது முன்னேற்றத்துக்காகவும் உழைப்பவரெல்லாம் ஆன்மீகவாதிகளே. பிரஃபுல்ல சந்திர ரே (Prafulla Chandra Ray ) என்பவர் இந்திய சுதேசி முயற்சிகளின் முன்னோடி என்று கொள்ளத்தக்கவர். வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் அடைந்திருந்த முன்னேற்றத்தை வெள்ளையர்களுக்கும் (நம்மவர்களுக்கும்) உலகத்தவர்ககும் புரிய வைத்தவர். 1892-ல் Bengal Chemical & Pharmaceutical Works என்னும், முதல் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கல்கத்தாவில் நிறுவியவர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் இருப்பினும் தனக்கென அவர் வைத்துக் கொண்டது ரூபாய் இருநூறுக்கும் குறைவே. மீதம் உள்ளதை விஞ்ஞான மேம்பாட்டிற்காகவும், அனாதை குழந்தைகளுக்காகவும் கைம்பெண் நலவாழ்வுக்கெனவும் கொடுத்துவிடுவார். செய்யுந்தொழிலையே இறைவனாகவும் சமுதாய மேம்பாடே வழிபாடாகவும் கொண்ட இவரை கபீர் வழியில் சிறந்த ஆன்மீகவாதி என்று கொள்ளலாம்.