Monday, August 15, 2011

இச்சிறியேனால் ஆவது என்னே ?

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
பணிகின்றேன், பதியே, நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
உறங்குகின்றேன், உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ
இச்சிறியேனால் ஆவது என்னே ! (
இராமலிங்க அடிகள்)

ஆவுடையக்காள் பதிவை நிறைவு செய்யும் வகையில் அவரது சுபமங்களம் ஜெய மங்களம் என்று முடியும் ஒரு பாடலை வைத்து பூர்த்தி செய்திருந்தேன். அப்போதே மனதில் ஒரு குறுகுறுப்பு. இதுவே கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்திற்கும் இறுதியான பதிவு என்று வாசகர்கள் நினைத்துக் கொள்வார்களோ என்று. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள் அதை உண்மையாக்கி விடுவது போல் நடந்ததென்னவோ நிஜம். மகான்களின் வாக்கிற்கு என்றுமே அதிசய சக்தி உண்டு :))

புதிய ஊர்,மும்பை, புதிய சூழ்நிலை. கடந்த நான்கு மாதங்களாக இணைய வசதி இல்லாமை. அகலவழிப் பாதையும் ஒற்றை வழியாகிப் போனது. அதாவது ப்ராட் பேண்ட் உள்ள அலுவலகக் கணிணியில் தனி அஞ்சல்கள் வலைப்பூக்கள் மேய்வதற்கு தடை. தனிக் கணிணியில் அலை பேசி இணைய இணைப்பு மூலம் ஒரு சில அஞ்சல்களைப் படித்து பதில் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும் நத்தை வேகம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நிலைமை சீரடையலாம் என்று கருதுகிறேன்.

சரி இணையம் இல்லாவிட்டால் போகட்டும், கபீரின் கைங்கரியம் ஏதாவது செய்யலாமென்று நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்தது ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை தொகுத்து மென்னூலாக்குவது. அப்படியே, சுதந்திரத் தினத்தினுள் செய்து முடிக்கவேண்டும் என்ற முனைப்போடு கடந்த பத்து நாட்களாக முயன்று செய்து முடித்தாயிற்று. விருந்தினர் இடுகைகளைத் தொகுத்து அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூல் தயாரித்து e-snip வலை தளத்தில் ஒரு வழியாக ஏற்றிவிட்டேன். ஒரு MB கோப்பை வலையேற்ற எடுத்துக் கொண்ட நேரம் 54 நிமிடங்கள், அதுவும் பலமுறை முயற்சித்தப் பின்னரே கைகூடியது.

தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவோரும் இணையத்திலேயே முன்னோட்டம் காண விழைவோரும் கீழுள்ள சுட்டியினை பயன் படுத்தவும்

கபீரின் நிழலில்....... அன்பின் சங்கமம்

இந்தத் தொகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களை கலந்து வெளியிட விரும்பினாலும் மேலே சொன்ன காரணங்களால் இயலாமல் போனது. அழகான கட்டுரைகள், அருமையான நட்பு வட்டம் இவற்றைக் கருத்தில் கொண்டு இதற்கு யாரிடமும் மறுப்பு இருக்காது என்ற உரிமையுடன் செயல்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த இடுகைக்கான கபீர் ஈரடி ஒன்றைக் காண்போம்.



सातों शब्द जू बाजते, घरि घरि होते राग ।
ते मन्दिर खाली पडे, बैठन लागे काग ॥


சப்தசுர ராகம் தாளம், அலை அலையாய் கேட்டதொரு காலம்
கேட்பாரில்லா மாடம், அங்கேக் கூடிக் கரைவன காகம்.


வெறி பிடித்தவர்கள் போல் செல்வம் ஈட்டுவதில் உள்ள போட்டியும் அதன் காரணமாய் நடைபெறும் பெரும் ஊழல்கள் வன்முறைகள் யாவும் எதற்காக ? பெரிய மாளிகைகளைக் கட்டி அங்கே ஆடலையும் பாடலையும் ரசித்து அனுபவிக்கவா? அதற்குத்தான் பலருக்கு நேரமே இருப்பதில்லையே. அப்படியே அனுபவித்தாலும் கடைசியில் அவர்கள் கதியும் என்னாயிற்று ? வெறும் காகங்கள் அமர்ந்து கரையும் இடிபாடு நிறைந்த கட்டிடங்களாவன்றோ காலப்போக்கில் மாறி விடுகின்றன.

இப்படி நிலையற்ற உலக வாழ்வில் சுகத்தை நாடுவதை விட்டு நித்திய சுகம் தரும் இறைவன் கழல்களைப் பற்றிக் கொண்டால் உய்ய வழியுண்டு என்று சொல்லும் வள்ளலாரின் பாடலை இங்கு சேர்த்து நினைவுகூர்வோம்

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே,
கற்றதெல்லாம் பொய்யே, நீர் கணித்ததெல்லாம் வீணே
உண்டதெலாம் மலமே, உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே,
விண்டதனால் என் ? இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்,
இறவாத வரம் பெறலாம், இன்புறலாமே

---------------------
இன்று இந்திய சுதந்திரதினம் மாத்திரமன்று, மகான் அரவிந்தரின் ஜன்ம தினமும் கூட. நல்ல ஆன்மாக்கள் விரும்பும் சுதந்திரத்தை குறிக்க வந்த தினமாகவும் கொள்ளலாம். பாரதியார் இந்திய சுதந்திரத்தை விரும்பி ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றால் இராமலிங்க பெருமானும் ஆன்மாவிற்கான சுதந்திரத்தை துய்த்துப் பாடுகிறார்.

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்,
மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழை
அன்பினொடும் பாடிப் பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்,
எண்ணம் எலாம் நிரம்பினேனே.

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்.

இனி அடுத்த இடுகை எப்போது வருமோ தெரியாது !
இச்சிறியேனால் ஆவது என்னே !!!

Monday, March 28, 2011

கோட்டான் அறியுமோ மார்த்தாண்டன் மகிமை ?

(ஆவுடையக்காள் தொடர்ச்சி...4.)

மனதிற்கு உபதேசம் செய்வது உலக மக்களுக்கு உபதேசம் செய்வதற்கான ஒரு யுக்தி. ஆகையால் பல ஆன்றோர்கள் பாடல்களை மனதிற்கு உபதேசம் செய்வது போல அமைத்துத் தந்திருக்கிறார்கள். அவ்வகையில் தன்யாசி ராகத்தில் ஆவுடையக்காள் இயற்றிய ஒரு பாடலைக் காண்போம்.

பல்லவி
அவித்தை வசத்தை அடையாதே மனமே
ஆனந்தாப்தியில் அமர்ந்திராய் மனமே


அனுபல்லவி

கொஞ்சமாய் ஒரு வித்தை படித்தால்
பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ண மண்டலத்தில்
மிஞ்சின பேருண்டோ என்பார்
கொஞ்சியே கர்வத்தை அடைந்து கொக்கரிக்கும், மனமே


சரணம்
பக்த ஜனங்களான பேர்கள், மனமே
உத்தம சுலோகனை கீர்த்தனம் செய்தால்
கத்துகிறாளென்று சொல்லுவார்
ஸர்வகாலமும் காது கேட்கப்படாமல் கரிக்கும் ( அவித்தை)

ஸாதுக்கள் கதையைக் கேட்க, மனமே
சிரத்தை உள்ளவன் போலே வந்து தலையாட்டி கேட்கும்
வாதுக்காகிலும் இங்கே வருவார்
மகத்தானத் தர்க்கத்தால் வாய் மூட அடிக்கும் (அவித்தை)

அஞ்ஞானமானதோர் விருக்ஷம் மனமே, அதில்
அனுதினமும் காம குரோத லோப மோகங்கள் தளிர்க்கும்
ஞானமாகிற கத்தியாலே அதை வேரோடு வெட்டி
வெங்கடேசுவரரைச் சேராய் ( அவித்தை)


அவித்தையின் லட்சணத்தை சொல்வதன் மூலம் அஞ்ஞானிகளின் போக்கையும் படம் பிடிக்கிறார் அக்காள். சத்சங்கங்களுக்குள் வந்து தம்முடைய பாண்டித்தியத்தை தர்க்க வாதங்கள் மூலம் காட்டிக் கொள்ள முற்படுவோர் பலர்.

இறைவனுடைய புகழ் பாடுகின்ற இடத்தில் சுருதி, லயம், குரல் வளம் போன்ற இசை லட்சணங்களையே பிரதானமாய் வைத்து பாடத் தெரியாதவர்களை ’கத்துகிறாள்’ என்று குறைசொல்வதும் ஒருவகையில் பாண்டித்திய கர்வத்தையே குறிக்கும். தங்களை மிஞ்சிய பேர் கிடையாது என்று கொக்கரிக்கும் மனது உடையவர்கள் அவர்கள்.

அக்காள் சொல்வது போல் அனுதினமும் அவர்களுள் அஞ்ஞானம் விதவிதமாக துளிர்விட்டு பெரிய மரம் போல் வேர் விடுகிறது.

அவர்களுக்கு ஞானிகளின் உபதேசம் மனதில் ஏற்புடையதாகாது. அவர்களிடம் ஞானிகளின் பெருமைகளைப் பற்றி எடுத்துக் கூறினாலும் பயன் இருக்காது. உள்ளத்தில் அவ்வளவு இருட்டு. சகமனிதரை எடை போடுவது போலவே அவர்களையும் எடை போடுவார்கள். அவ்விஷயங்களை அவர்களிடம் பேசுவதே தவறு. ஏனெனில் அவர்கள் மகாத்மாக்களைக் குறித்து தவறாகப் பேசினால் அந்த பாவத்திற்கு அவர்களை இட்டுச் சென்ற குற்றமும் நம்முடையதாகி விடுமன்றோ !
அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்வது அர்த்தமற்றது என்பதை சொல்ல வரும் போது கோட்டான்களின் உதாரணத்தை சொல்கிறார் ஆவுடையக்காள்

ஜாதிக் குதிரையின் குணத்தை
வெகு வியாதி பிடித்த கிழக்கழுதை அறியுமோ
மூடிக் கிடக்கும் குடத்துள்ளே
வெண்கலத்து பிரதீதி தெரியுமோ
கோட்டான் சமூகமெல்லாம் கூடி
மார்த்தாண்ட ஸ்வரூபத்தின் மகிமையை அறியுமோ
கூத்தாடி கையில் குரங்கு போல்
தேட்டாளி அவித்தைக்கு வசப்பட்டு கிடக்கும்
........

(பிரதீதி , n.= 1. Clear apprehension or insight; அறிவு. 2. Fame; கீர்த்தி. 3.Delight; மகிழ்ச்சி ;
மார்த்தாண்டன்= சூரியன் : தேட்டாளி = ??)


கோட்டான் இரவிலே சுற்றுவது, பகல் வெளிச்சம் அதற்கு ஆகாது. ஏதாவது மரப்பொந்தின் இருட்டிலேப் பகலைக் கழித்து இரவு கவிந்ததும் வெளியே வரும் குணம் உடையது. அதற்கு சூரியனின் பெருமைப் பற்றித் தெரியாது. வேறு பறவைகள் அவன் பெருமையை எடுத்துக் கூறினாலும் அந்த சூரியன் இல்லாமலேயே நாங்கள் வாழவில்லையா என்று விதண்டா வாதத்தில் ஈடுபடக்கூடும்.

தம்முடைய இரவு வாழ்க்கையே ஆதவனின் வருகையால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையும் அவைகளுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை. அப்படி இருட்டிலேயே (அஞ்ஞானத்திலே) வாழ்ந்து, மறைந்து போகும் தன்மை உள்ளவர்களோடு தம் சக்தியை விரயமாக்க வேண்டியதில்லை என்பதை கபீர்தாஸரும் வலியுறுத்துகிறார்.

पशुवा सों पालौ पर्यो, रहु रहु हिया न खीज ।
ऊषर बीज न ऊगसी, बोव दूना बीज ॥


கருணையுடன் மேலோர் உரைப்பினும், செவிமடுக்கும் நீசனும் இல்லை
கரம்பையில் இரட்டிப்பு விதைப்பினும், முளைத்தெழும் விதையும் இல்லை

(கரம்பை =பாழ்நிலம்)

இரண்டு மடங்கு விதையைத் தூவினாலும் பாழ்நிலத்தில் விதை முளைக்காது.
அன்பு (அல்லது இரக்கம்) என்னும் ஈரம் இல்லாத மனதில் நல்ல புத்திமதிகளும் வழிகாட்டும் உரைகளும் பயனற்றவை ஆகின்றன. ஈரம் இல்லாத மண் இறுகும். அங்கங்கே வெடிப்புகள் தோன்றும். அது போல அன்பற்ற உள்ளங்களும் இறுகி சுயநலம், தற்பெருமை, பேராசை என்பனவாய் வெடித்து பாளம் பாளமாகக் காட்சியளிக்கும்.

”தமஸோர்மா ஜோதிர் கமயா” என்பது பிரார்த்தனை. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லவும் பெருங்கருணையாளனான கடவுளின் கருணை வேண்டும்.

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன்....


என்று மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறை சிவனை நினைத்துப் போற்றுவது போல் என்றாவது இறையருள் பொழியும் போது ஈரம் பிடிக்கும். பின் அன்பு சுரக்கும். அது வரை எது சொன்னாலும் அதற்கு பலன் இருக்காது.

மழையறிந்து விதைப்பவன் போல ஆன்றோர்கள் அந்த ஈர மனப்பக்குவம் அடைந்தவர்களுக்கே உபதேசம் செய்ய விரும்புவர். அது இல்லாதவரை உழவன் வறண்ட நிலத்தை ஒதுக்குவது போல் நம்மை நீசர்களாய் ஒதுக்கி வைப்பர். நாமும் கோட்டான்கள் போல அஞ்ஞான இருளிலே அலைந்து கொண்டிருப்பவராவோம்.

மித்தையை நம்பி விஷய போகம் புசித்து
சத்துருக்கள் சித்தம் தவிடு பொடியாக்குவித்து,
அஞ்ஞானத்தாலே அறிவிழப்பர் மானிடர்கள்
..........
இலக்கமற்ற ஜன்மத்தை எண்ணத் தொலையாது
மறித்துமிங்கு ஓடிவரும் மாயமிது ஏதென்றால்,
(அதை) அறிந்து விசாரிக்கின் ஆத்மாவே நாமென்னும்,
தேகமொடு போகம் ஸ்திரமென்றிருக்கிறவன்
மூடர்களில் மூடன் முழுதும் அஞ்ஞானி அவன்

ஞானசட்சு தான் விளங்கி நன்றாகவே அறிந்தால்
தோன்றுவது கானல் ஜலம் சிப்பியதில் வெள்ளியே போல்,
மோகம் விட்டுப் பார்க்கிறவன் மோக்ஷ ஸ்வரூபி கண்டாய்
(என்று) தாமரையாள் மார்பன் தனஞ்சயற்கு சொல்லி நின்றார்.


மேலே கண்டது கிருஷ்ணன் அருச்சுனனுக்கு சொல்வதாக ஆவுடையக்காள் இயற்றிய ஸ்ரீ பகவத்கீதா ஸாரஸங்கிரஹம் என்ற பாடற் தொகுப்பில் வருவது. தேகத்தை நிலையானது என்று நினைந்து உலக போகங்களுக்காக அல்லாடுபவர்களே பெரும் அஞ்ஞானிகள்.

மேலும் குரு இல்லாமல் அஞ்ஞானம் விலகாது என்பதையும் அழகிய உவமைகளோடு விளக்குகிறார்.

காதம் வழி சப்பாணி கடுகு நடந்தோடுதல் போல
ஊமை பல வார்த்தைகளும் உண்டென்று உரைத்தல் போல
செவிடனுக்கு கான வித்தை தெரியுமென்று கேட்பது போல

வருமெனக்கு என்று சொல்லி வாயடியாலே அடித்துத்
திரிகிறது மாத்திரமே, திடனாக ஆத்மாவை
அறியப் போகாது கண்டாய் ஆசாரியர் அன்றியிலே,
வந்தாலும் நில்லாது மரணஜன்மம் போகாது.

சிரவண பலத்தாலே சற்றுண்டு புண்ணியங்கள்
(என்று) உலகளந்த மாதவனார் உள்மானம் சொல்லி நின்றார்


(அறியப் போகாது கண்டாய் ஆசாரியார் அன்றியே = குரு இல்லாமல் அறிய முடியாது)


பகவத்கீதை சாரம் அன்றி, ஆவுடையக்காள் அவர்கள் ஞானகுறவஞ்சி நாடகம், ஞான வாஸிஷ்டத்தில் சொல்லப்படும் சூடாலை கதை, வேதாந்த கப்பல், ஸ்ரீ வித்யை சோபனம் போன்ற அபூர்வ பாடல்கள் திரட்டுகளை இயற்றியிருக்கிறார். அவரது அனுபோக ரத்னமாலை என்ற பாடல் தமது குருநாதர் பிரிவுக்காக இரங்கல் முறையில் பாடப்பெற்றிருக்கும் அற்புத அத்வைத சாரம்.

தன் குருவின் ஆணைப்படி மீண்டும் செங்கோட்டைக்குத் திரும்பி அவர் பலகாலம் மக்களுக்கு நல்வழிகாட்டியதாக சொல்லப்படுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பாடல்களெல்லாம் அப்போது திரட்டப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒரு ஆடி அமாவசையன்று குற்றாலமலையேறிச் சென்றவர் திரும்பவே இல்லையென்றும் எங்கு தேடியும் அவரது தேகம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சங்கரரைப் போலவும் மணிவாசகரைப் போலவும் விதேக முக்தி அடைந்தார் என்று கருதுவர் சிலர்.

பவபயங்கள் போக்கிவைத்து பரமபதம் தந்தவர்க்கு
பக்தி வைராக்கிய நிலை தந்தவர்க்கு
நேதி நேதி வாக்கியத்தால்;
நிச்சயங்கள் காட்டி வைத்த நிர்மலர்க்கு
ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.

[ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி அவர்களின் முயற்சியால் முதல் பாடல் திரட்டு 1953-ல் வெளிவந்தது. பாரதியாரை தாய்வழி சித்தப்பாவாக உறவு முறை கொண்ட ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் பல பாடல்களை செங்கோட்டை பகுதிகளில் பயணம் செய்து திரட்டி அவ்வப்போது ஆன்மீக சஞ்சிகைகளில் கட்டுரை வடிவில் வெளியிட்டு வந்தார். அவர்களிடமிருந்து அக்காளின் பாடல்களை பெற்று ஞானானந்த தபோவனத்தை சேர்ந்த நித்யானந்த கிரி ஸ்வாமிகள் இப்போது (2002) வெளியிட்டு இருக்கிறார்கள். விலாசம் : ஸ்ரீ ஞானானந்த நிகேதன், தபோவனம் அஞ்சல்,-605756,விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு]

Saturday, March 12, 2011

கோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்

ஆவுடையக்காள் தொடர்ச்சி.......

தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் ஒரு அத்வைத கருத்தரங்கத்தில் பங்கேற்று கருத்து சொல்ல முற்பட்டபோது ‘யாரிந்த மொட்டை’ என்று இளப்பமாய் அவரை பேச விடாமல் தடை செய்ய சிலர் முயன்றனர்.

‘யார் மொட்டை? என் உடலா, மனமா பிராணனா அல்லது என் ஜீவனா ? அல்லது என் ஆத்மாவா? நானென்பது என்ன ? நான் எப்படி மொட்டையாக முடியும் ? ( மொட்டை என்றால் பூரணமற்ற தன்மை, அறிவின்மை என்ற பொருளும் உண்டு)

பூரண ஞானமுள்ள அவரைப் பார்த்து அரைகுறைகள் கேட்ட பொருத்தமற்ற கேள்விக்கு தன் ஞான அனுபவத்தினாலேயே பதில் கூறி அவர்கள் வாயை அடைத்தார். அவருடைய பாடல்களில்தான் எத்தனை வகையான வேதாந்த விளக்கங்கள், அனுபவ விசாரங்கள், ராஜயோக ரகசியங்கள், நடைமுறை உதாரணங்கள்... சொல்லி மாளாது.

அன்னே-பின்னே : வேதாந்தசார கும்மியிலிருந்து சில கேள்வி பதில்கள்:

குருவாகி வந்தவன் ஆர்? சிஷ்யனாகி போனவன் ஆர்?
கூசாமல் எந்தனுக்குத் தெரியச் சொல் அன்னே
தத் எனும் பதம் குரு, த்வம் எனும் பதம் சிஷ்யன்
சோதித்தால் சப்தம் இரண்டும் சுத்தப் பொய் பின்னே

என்னிடத்திலே உதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி அன்னே
தன்னை மறந்தால் உருக்கும், தன்னை அறிந்தால் ஒளிக்கும்
சற்று நீ உற்றுப் பார்த்து சந்தோஷி பின்னே

ஜீவனிருந்தால் அன்றோ தேக இந்திரிய விஷயங்கள்
ஜெனித்து மரித்து அலையப் போகிறது அன்னே
பாவனை எனும் ச்ருதி யுக்தி அனுபவம் வந்தவர்க்கு
சொற்பனத்தில் கற்பிதம் போல தோற்றம் காண் பின்னே

-------------------------------
தொட்டில் பாட்டு ( அனுபவ விசாரம்)

ஆகமப் புராணங்களை அரைத்துக் குடித்தாலும்
உலகமெலாம் சஞ்சரிக்க யோகம் இருந்தாலும்
ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்
ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்

புத்தியில்லை மனமும் இல்லை அத்வைதம் தானே
முக்தியில்லை பந்தம் இல்லை என்று எனக்குச் சொல்லி
யுக்தி சொன்ன குரு வெங்கடேசுவரர் கிருபையால்
பக்தியுடனே பணிந்து அகண்டமானேன் சிவோஹம்
.
--------------------------------
மோஹன ராக கீர்த்தனையின் சில சரணங்கள்:
(நடைமுறை உதாரணங்கள்)
இருளை இரும்பு உலக்கையினால் அடித்து ஓட்டினால் போகுமோ
எருதைப் பிடித்து கறந்ததினால் ஒரு பிள்ளைக்கு பால் ஆகுமோ
அவனியில் உண்டான கர்மமெல்லாம் செய்தால் அதனால் அவித்யை போகுமோ
தத்வப் பொருள் ஸ்வானுபூதி இல்லாது சாஸ்திரத்தால் ஸ்வப்பிரகாசமாகுமோ

கையிலுள்ள நெல்லிக்கனியைக் காண கண்ணாடி பார்ப்பானேன்
மெய் ஆபரணம் கழுத்திலிருக்க வீடெங்கும் தேடுவானேன்
பொய் ஆன இந்தப் பிரபஞ்சத்தை தூர விரட்டியபின்
மெய்யாய் நிறைந்த பரபிரம்மம் தானென்றறிய அலைவானேன்?

-----------------------------------------
ஆரபி ராக கீர்த்தனை ஒன்றின் சில வரிகள்:
(ராஜயோக ரகசியங்கள்)
பிரணவ நிலையறிந்து பிராணாயமாம் செய்வாயானால்
பிறக்கவும் இறக்கவும் வேண்டி வருமோடா
................
மனதை ஜயிக்க ஜீவா உன்னாலே ஆகுமோடா
வாசி வசத்தாலே மனதை வசமாக்கடா
................
பூரகம் முப்பத்திரெண்டு கும்பகம் இரட்டியாகக் கொண்டு
ஈரண்டு ரேசகத்தை விட்டு நீ பாரடா- ஏழெட்டு
நாளைக்கெல்லாம் இவ்விதம் செய்வாயானால்
வாசி வசமாகும் நீ யோசனை செய்யாதேடா


முழு ஞானியான அவர் முன்னே வெறும் சாஸ்திர அறிவுள்ளவர்கள் எம்மாத்திரம்!! அவருடைய பெருமை புரிந்ததுமே பலர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினர்.

ஆனால் இன்றைய தினங்களைப் போலே செய்திகளை அந்நாட்களில் உடனுக்குடன் எல்லோருக்கும் எடுத்துச் செல்ல சாதனங்கள் இருக்கவில்லையே ! ஆவுடையக்காளோ அகங்காரமற்று தேகப் பிரக்ஞையின்றி உடலை சுமந்து திரிந்தவர். அதனால் அவரைப் புரிந்து போற்றியவர்கள் மிக மிக சொற்பமாகவே இருந்தனர்.

ஒருவருடைய பெருமை புரியாவிட்டாலும் போகட்டும், இழிவாக நடத்தாமலாவது இருக்கலாமில்லையா? ஆனால் நடந்ததென்னவோ அதுதான். அக்காள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து ஸ்ரீதர அய்யாவாள் ஆசிரமத்தை அடைந்து சிறிது காலம் அவரது வழிகாட்டுதலை வேண்டி நின்றார். அய்யாவாள் மனம் மகிழ்ந்து அவருக்கு ஆசிரமத்திலேயே தங்கி இருக்க ஏற்பாடு செய்தாலும் பிற ஆசிரமவாசிகளோ அவரைக் கண்டால் அலட்சியப் போக்கைக் கடைபிடித்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆசிரமத்தில் மரியாதைத் தரப்படாதது மட்டுமல்ல, அவர் நாயை விடக் கீழாக நடத்தப்பெற்றார். யாவரும் சாப்பிட்டு எஞ்சிய உணவே அவருக்கு வேண்டா வெறுப்பாக அளிக்கப்பட்டது. ஒரே பெண்மணி அதுவும் விதவைக் கோலம் என்பதனால் அவரோடு பேசுவதையே யாவரும் தவிர்த்தனர். இப்படி அவர் சந்திக்க வேண்டியிருந்த எதிர்ப்புகளும் அவமானங்களும் கபீர்தாஸ் அவர்களின் ஒரு ஈரடியை நினைவுபடுத்துகிறது.

साकट कहा न कहि चलै, सुनहा कहा न खाय ।
जो कौवा मठ हगि भरै, तो मठ को कहा नशाय ॥


அவநீதியோர் ஏசாத ஏச்சில்லை, அற்பமது தின்னாத பண்டமில்லை
காக்கைதன் எச்சத்தால் நிரப்பினும், கோபுரத்திற்கொரு பங்கம் இல்லை


(அவநீதி= நம்பிக்கையின்மை, அற்பம் =நாய்)


ஆணவத்தாலும் அறியாமையாலும் பேசுபவர்கள் அவநீதியோர். அவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது. நாத்திகர்களில் இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறருடைய நம்பிக்கைகளை மதித்து பொறுப்புடன் இனிமையாக பேசுவோர் உண்டு.

ஆனால் உண்மையை உள்ளபடி அறிய முயற்சிக்காமல் எல்லாம் அறிந்தவர் போல பொறுப்பின்றி பேச விழையும் அரைகுறை ஆத்திகர்களையே ’அவநீதியோர்’ என்ற சொல் குறிக்க வந்தது. கண்டதையெல்லாம் வாயில் கடித்து ருசி காண விழையும் நாயைப் போல அவர்கள் ’தமக்கு புரியாத விஷயங்கள் பற்றியும் அபிப்பிராயம் சொல்ல முற்படுபவர்கள்’ என்பதாக கபீர் சொல்ல வருவதை புரிந்து கொள்ளலாம். அவர்களுடைய பேச்சுக்கள் (அல்லது ஏச்சுக்கள்) காக்கைகள் எல்லாம் கூடி எச்சமிடுவதைப் போலவாம். அதனால் கோபுரம் சாய்ந்து விடுமா அல்லது அதன் பெருமைக்குத்தான் களங்கம் வருமா?

சான்றோர்கள் இப்பேற்பட்ட இழிவுரைகளால் மனம் சஞ்சலப்படாமல் தம் வழியே செல்கின்றனர்.

ஆவுடையக்காளை நடத்திய விதம் கண்டு சீடர்களுக்கு பாடம் புகட்ட மனம் கொண்டார் அக்காளின் குரு அய்யாவாள்.

ஒருநாள் தம் சீடர்களை அழைத்து காவிரி ஆற்றின் நடுவில் இருந்த மணல் மேட்டில் சென்று தியானம் செய்யுமாறு பணித்தார். அவர்களுடன் ஆவுடையக்காளும் இருந்தார். தியானத்தில் அமர்ந்திருந்த போது சீடர்களுக்கு ஆற்றின் நீரளவு உயர்ந்து வருவது புரிந்தது. அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். ஆனால் அக்காளோ தேக நினைவே இல்லாமல் சமாதியில் இருந்ததால் தன்னைச் சுற்றி நீர் சூழுமளவும் தியானம் கலையாமலே இருந்தார். கண்விழித்து பார்க்கும் போது தான் மட்டுமே சிக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. கரையில் இருந்த அய்யாவாள் ’அங்கேயே இரு’ என்னும் வகையில் தன் கரத்தை உயர்த்திக் காட்டினார். அவரும் குருவின் ஆணைப்படி அந்த இடத்தைவிட்டு அசையாது நின்றார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தார். என்ன ஆச்சரியம் ! அவருடைய காலடியில் இருந்த மணல் திட்டு மட்டும் வெள்ளத்தில் கரையவே இல்லை.

அந்த நிகழ்ச்சி மூலம் அக்காள் தமது குருபக்தியை மட்டுமல்லாமல் குருவின் பெருமையையும் அற்புதமாக உலகிற்குப் புரிய வைத்தார் எனலாம்.

(அக்காளைப் பற்றி எழுத ஆரம்பித்த பின்னர் எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்த இடுகையில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.)

ஆவுடையக்காளின் வரலாறு சுவாமி சிவானந்தா அவர்களின் "Lives of Saints" (Published by Divine Life Society, ISBN 81-7052-095-9) என்கிற புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது.

Tuesday, February 22, 2011

பளிங்கு மண்டபத்தில் நாய்

’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம். 
 
    பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும். 

    ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் ! வீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள். 

     இதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்? 

कबीर माया मोहिनी, भई अंधियारी लोय । 
जो सोये सो मुसि गये, रहे वस्तु को रोय ॥ 

இருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார் 
இருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார் 
  (இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி) 

 மாற்று : 
மருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம் 
பெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம் 

  மாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே! 

எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது, அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று புரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன? 

 குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்? அந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார். 

( ஆவுடையக்காள் பற்றிய முதல் பகுதிக்கு இங்கே சுட்டவும் )
 
ராகம் :ஸஹானா 
பல்லவி 
அதிக சாமர்த்தியம் மாயை உந்தன் வெகு வித நாட்டியம் 
அனுபல்லவி 
அகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை மறைத்தாய் தெரிய வொட்டாமல் 
சரணம் 
ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர
கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்
நானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய் (அதிக) 

சுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம் 
அஸத்தியம் ஜரையில்லை நரையில்லை 
ஜனன மரணமில்லை கரையில்லை 
உன்னுடைய காரிய விசித்திரங்கள் (அதிக) 

ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க 
ஸாமர்த்திய கர்த்தன் ஸர்வமும் பிரம்மமாய் 
தான் தானே ஸர்வமாய் 
ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே (அதிக)

(அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது) 

 நமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது. 

அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம். கண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது. 

பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.

என்ன ஒரு அழகான உதாரணம்! 

 ஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.

  ஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான் எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார். அதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே! போதுமே! இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா? இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே! அது திருப்தியாகாதா? “ என்று சகஜமாகக் கேட்டார். 

   அவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது “....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. என்ன செய்வது? அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.

இதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார். 

 அக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் ‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்” திகழ்ந்த ஞானி. 

 அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார். 

  माया तो ठगनी भई, ठगत फिरै सब देस ।
 जा ठग ने ठगनी ठगी, ता ठग को आदेस ॥

ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம் 
ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம் 

 அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.

  हम तो बचिगे साहब दया से, शब्द डोर गहि उतरे पार । 
कहत कबीर सुनो भाई साधो,  इस ठगनी से रहो हुसियार ।

”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே! கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“ என்று கபீர் இன்னொரு பாடலிலும் மாயையைப் பற்றி எச்சரிக்கிறார். 

 மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார். 

  எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன் 
கணக்கில்லாமல் போதமிழந்து விட்டேன் கிளியே, 
புத்தி மயக்கத்தினால போதம் தெளிவேனோடி 
போக்குவரத்தை விட்டுத் தேறித் தெளிவேனோடி கிளியே 
பரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு
 கிருபையால் பற்றிப் பிடிப்போமடி கிளியே 
இப்பவமும் துலையுமடி எட்டாத கொப்பு அடியோ
 என்னால் முடியுமோடி தட்டிப் பறிக்க என்றால் கிளியே 

ஸாதுக்கள் வேணுமடி ஆதி அந்தமற்ற ஆசாரியார்
 கிருபையினாலே எட்டிப் பறிப்போமடி கிளியே, 
எல்லோரும் புஜிப்போமடி பற்றிப் பறிப்போமடி கிளியே 
பிரம்ம ரஸத்தை எல்லோரும் புஜிப்போமடி கிளியே, 
எல்லோரும் புஜிப்போமடி
( போதம் = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் ) 

’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :( 

  (குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.srignanananda-niketan.org)

Thursday, February 10, 2011

சித்தமிசை இல்லை வேறு தெய்வம்

செங்கோட்டை சீமையிலே குடும்பப் பெண்கள் மத்தியிலே கலந்து விட்டிருந்த கும்மிப்பாட்டு கோலாட்டப் பாட்டு, பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

கோலாட்டப்பாட்டு :

ஆதியிலே ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே, வேதாந்தக் கோலே
...........
நத்தையாய் புழுவாய் நண்டாய் நரியாய் பரியாய் வண்டாய்
எத்தனை ஜென்மமோ கொண்டாய் என்னத்தைக் கண்டாய்

காசி ராமேசுவரம் சென்றாய் காகம் போல் முழுகியே நின்றாய்
உன்னாசை போச்சுதோ மூடா என்றால் ஆச்சுதோ நன்றாய்

போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது கூட வராது

புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே

ஆகாவழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்


----------------------------------------------
கும்மிப்பாட்டு
கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர ஸம்ஸார சாகரத்தில்
ஜென்மக் கடலை கடத்தினவர் பாதம்
சிந்தித்து கும்மியடியுங்கடி தினம்
வந்தித்து கும்மியடியுங்கடி


ஐந்து தத்வமும் ஒன்றாய் கூடி
ஒரு ஆள்ரூபம் அறிவுமில்லை
ஐந்து பூத விகாரத்தினுள்
ஸ்வபிரகாசத்தை
மேவியே கும்மிடியுங்கடி
மனம் தாவியே கும்மியடியுங்கடி

பாவ அபாவத்தை விட்டு அகன்று
பரிபூரணப் பால்குடித்து ஆனந்தமாய்
தேவாதிகளுக்கும் தெரியாத துரீயத்தை
தெரிந்து கும்மியடியுங்கடி
மனம் பூரித்து கும்மியடியுங்கடி

அறிவிலே அறிவால் அறிவாய்
அறிந்து அதை அறிவாய்
அறிவு மாத்திரம் ஆக இருந்ததை
அறிந்து கும்மியடியுங்கடி
தன்னை அறிந்து கும்மியடியுங்கடி

---------------------------------

எப்படி இருக்கிறது இந்த அத்வைத ரஸம் ? அது ஆவுடையக்காள் வடித்து வைத்திருக்கும் ஞானரஸம்.

மகாராஷ்ட்ரத்தில் ஜனாபாய் பக்தி ரஸத்தை நெல் இடிக்கும் போதும், மாவரைக்கும் போதும் களைப்பைக் களைய பெண்களுக்கு மத்தியில் எளிமையானப் பாடல்களாய் சொல்லிக் கொடுத்தார்.

ஆவுடையக்காளோ ஓய்வு நேர விளையாட்டாய் கும்மிப்பாட்டிலும் கோலாட்டப் பாட்டிலும் ஞானக் குறவஞ்சியாயும் பெண்கள் மூலமாய் வீட்டில் அனைவருக்கும் மிக உயர்ந்த அத்வைத கருத்துகளை எளிய உதாரணங்களால் புரிய வைத்த பெண் ஞானி. அவரை இன்னொரு ஔவையார் என்றும் குறிப்பிடுவதுண்டு.

அறியா பருவத்திலே திருமணம் நடந்து கணவனையும் இழந்த அபாக்கியவதி. அன்றைய நடைமுறைப்படி கைம்பெண்ணாக்கப்பட்டு பலத்தக் கட்டுபாடுகளுடன் வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருந்த அவலநிலை. அதிகாலை ஊர் விழிக்கும் முன்னே எழுந்து ஆற்றங்கரைக்கரைக்கு சென்று நித்திய கடன்களை கழித்து பொழுது புலரும் முன்னே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி உலகத் தொடர்பு அவ்வளவு தான். பல பூர்வ ஜென்ம தவங்களால் அவள் மனது இறைவனுடைய அருளுக்காக ஏங்கியிருந்தது. தனக்கு வழிகாட்ட யாராவது குரு ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று தவித்திருந்தது.

ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை இருட்டு நேரத்தில் ஆற்றின் படித்துறை அருகே கிடந்த ஒரு மாவிலைக் காம்பை எடுத்து பல் தேய்ப்பதற்காக வாயில் வைத்ததுமே ஒரு வினோதமான உணர்ச்சி தேகம் முழுவதும் வியாபித்தது. தேங்காய்க்குள் கழன்று கொண்ட கொப்பரை போலே தேகம் வேறு தான் வேறு என்ற எண்ணம் பலமாய் ஆட்கொண்டது. சற்று தூரத்தில் மரத்தடியே தியானத்தில் அமர்ந்திருந்த மகான் ஒருவரை கண்ணுற்று அவரது பாதத்தை அடைந்து சேவித்தார். அவரும் கருணை பொங்க அவளது தலை மேல் கைவைத்து “பிரம்மம் சத்யம்” என்ற சத்ய மொழியை சொல்லி அருள் பொழிந்தார். அக்கணமே ஆவுடையக்காளுக்கு சமாதி நிலை கூடியது.

ஸ்ரீதர அய்யாவாள் என அறியப்படும் அந்த மகான் பயன்படுத்திய மாவிலைக் காம்பின் மகிமையே ஆவுடையக்காளின் ஆன்மீகப் பயணத்தின் துவக்கமானது என்பர். வெங்கடேச குரு என்றும் சாந்த நரசிம்மர் என்றும் தவறாமல் ஒவ்வொரு பாடலிலும் குருவைப் பணிந்து போற்றும் அவருக்கு குரு அருளாலே வாணியின் அருளும் வந்தது.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஜனாபாயைப் போலவே அவ்வட்டார பேச்சு வழக்கிலே அத்வைத சித்தாந்தம் குற்றால அருவி போல் பாய்ந்து பெருகியது. ஞானிகளுக்கே உரிய கம்பீரத்துடன் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் அன்றைய சமுதாயத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.

ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்

இன்னொரு பாடலில்

அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தே தெய்வமென்று ஸாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விழுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்


என்பதாக புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் பலப்பல வழிபாடுமுறைகளின் தன்மையை வரிசைப் படுத்துகிறார்.

தன்னை உணர்ந்தவனுக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பதில் கபீரும் உடன் படுகிறார். அவையெல்லாம் குரு அருள் சித்திக்கும் வரையில்தான் என்பதை அடிக்கடி சொல்வார். அப்படிச் சொல்லும் ஒரு ஈரடி

और देव नहीं चित्त बसै, मन गुरु चरण बसाय ।
स्वल्पाहार भोजन करु, तृष्णा दूर पराय ॥


சித்தமிசை இல்லை வேறு தெய்வம், சித்தம் நாடுவதோ குருசரணம்
சொற்பமாய் போனதே போசனம், பற்பல இச்சையும் போயின தூரம்


மனமோ குருவின் வசமாகிவிட்டது, சித்தத்தில் வேறு தெய்வங்கள் கிடையாது. உணவின் தேவையோ மிகசொற்பம், உலக விஷயங்களில் ஆர்வமும் குன்றி போனது என்று உரைக்கிறார் கபீர். குருவின் திருவடியில் மனம் ஈடுபாடு கொண்டதால் தனக்குக் கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது ஆவுடையக்காளும் கபீரின் மொழியை உறுதி செய்கிறார். அத்வைத மெய்ஞான ஆண்டி என்கிற பாடலிலிருந்து சில வரிகள் :

என் சொல்வேன் என் சொல்வேன் இவன் எங்கிருந்து வந்தாண்டி
இன்னம் இன்னம் ஜன்மம் எடுக்கவே என்றிருந்தேண்டி

ஆறு வைரியை அவன் அண்டவிடாமல் அடித்தாண்டி
தாறுமாறக்காரன் அவன் துரீய நிலையைத் தந்தாண்டி

காமக்ரோதாதிகளை காறுவாறு தொடுத்தாண்டி
தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி

வெகுவான போகத்தை புசிக்கவே என்றிருந்தேண்டி
பார்வை ஒன்றினாலே போகத்தை மாற்றியே வைத்தாண்டி

பார்த்த இடமெல்லாம் பரிபூர்ணமாய் தோற்றி வைத்தாண்டி
வார்த்தைகளெதுவும் காணேன் மௌனமதாக்கி விட்டாண்டி


[காறுவாறு =காறுபாறு= கவனிப்பாயிருத்தல், மேற்பார்வை செய்தல்]

தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி
36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

(நன்றி : கௌமாரம்.காம்) ]


மெய்ஞானம் வாய்க்கப் பெற்றவருக்கு அதன் பின்னர் எதிலும் பிடிப்பு இருப்பதில்லையாம். கனவு கலைந்து எழுபவனுக்கு மீண்டும் கனவு பற்றிய கவலை உண்டோ ? திருப்புகழில் அருணகிரியாரும் இந்த உலக இச்சைகளை சூடான பொருட்களை கை உதறுவது போல் உதற விழைவதாக உரைக்கிறார். முப்பதும் (+)ஆறாறும் (6x6=36) (+)முப்பதும் வேறான என்னும் போது 96 தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட மோனநிலை அடைவது எப்போது என்று அவரும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார
துக்கமிலா ஞான சுகம் மேவிச்
சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு
சுத்த நிராதார வெளி காண
மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார
முட்டவு மீதேறி மதி மீதாய்
முப்பதும் ஆறாறு முப்பதும் வேறான
முத்திரையா மோன மடைவேனோ

............
அப்படி ஒரு மோன நிலையை தனக்குக் கொடுத்த குருவை எங்கிருந்து இவன் வந்தாண்டி என்று ஆச்சரியத்துடன் ஆவுடையக்காள் போற்றுகிறார். பார்வை ஒன்றினாலேயே போகத்திற்கான இச்சைகளை மாற்றி வைக்க வல்லவர் குரு என்பதையும் அவருடைய மெய்ஞான அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.

கபீர் குறிப்பிடும் உலக ஆசைகள் குறைவதையும் உணவின் மேல் பிடிப்பு இல்லாமல் போவதற்கும் இது தான் காரணம். ஆவுடையக்காளுக்கும் தேகப்பற்று நீங்கி விட்டது. ஆனால் இன்னமும் உயிர் அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்ற ஆச்சரியம். அந்த வினாவை தம் குருவிடமே வைக்கிறார்.

ஐயா ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ ?
தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே !

அம்மா ! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
சரீரமிருக்கிறது பலருக்கு உபகாரமன்றோ? என்று
காரணமூர்த்தி யுரைத்தார் கருணையுடன்;


பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுக்கு பல நூறு ஆண்டுகள் வழிகாட்ட வேண்டியவர் அல்லவா அவர் ! சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றி பெண்களுக்கும் அத்வைதம் சித்திக்கும் என்பதை வாழ்ந்து காட்டியவர். ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாமரனுக்கும் புரியும் வகையில் வேதாந்த கருத்துகளை பாடி வைத்திருக்கிறார். மிக சரளமாக, பல விதமான எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வதில் அவர் சமர்த்தராக இருந்தார்.

சிலவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.

அவரைப் பற்றிய மேலும் பல விவரங்களையும் பாரதியாரின் பாடல்களில் ஆவுடையக்காளின் தாக்கம் பற்றியும் நாஞ்சில் நாடன் அவர்களின் வலைப்பூவில் படிக்கலாம்.

Saturday, January 22, 2011

அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்

யாரை எங்கே
வைப்பது என்று
யாருக்கும் தெரியலே
அண்டங் காக்கைக்கும்
குயில்களுக்கும்
பேதம் புரியலே!
பேதம் புரியலே !!

பழைய திரைப்பாடலின் ஆரம்ப வரிகள் இது. ஆள் மாறாட்டத்தால் சிறையில் சிக்கி கதாநாயகன் பாடுவது போல் கதையில் சொல்லப்பட்டாலும் இந்த முரண்பாட்டை வாழ்க்கையிலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

அருமையான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. குடத்திலிட்ட விளக்கு போல அவர்கள் யாராலும் அறியப்படாமல் மறைந்து போகிறார்கள். மிக சாதாரணமானவர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மேலே முன்னேற போட்டிகள் அதிகம். திறமையை விட சாமர்த்தியம் தேவை. அதுவாவது பரவாயில்லை. ஏதோ அதிர்ஷ்டம் இல்லை, அவர்கள் கேட்டுக் கொண்டு வந்தது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதைவிட வருத்தமளிக்கும் காட்சிகளும் அவனுடைய நாடகத்தில் உண்டு.

ஒருவருடைய தகுதிக்கு மதிப்பளிக்காது தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மேலமர்ந்து ஆட்டிப் படைப்பதும் இன்று சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. பலமாதங்கள்- ஏன் வருடங்கள்- கடினமான தேர்வுகள் எழுதி நாட்டு நிர்வாகத்தில் பயிற்சி பெற்று வரும் நேர்மையான உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளூர் எம். எல். ஏக்களின் அல்லது அரசியல் புள்ளிகளின் ஏளனப் பேச்சுகளையும் மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலருக்கு மன அழுத்தம் அதிகமாகி பல்விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். அம்மாதிரி சமயங்களில் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியின் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும். பலர் தம் பொறுப்பைத் துறந்தும் சென்று விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

சரி, அரசாங்கம்தான் அப்படி, தனியார் நிறுவனங்களில் எப்படி? அங்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. நிறுவனத்தை கட்டி வளர்த்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறும்போது புதுமைகளை புகுத்துவோம் என்ற பெயரில் திறமையான விசுவாசம் மிக்க நிர்வாகிகளெல்லாம் புறக்கணிப்படுகின்றனர். அவர்களது அனுபவத்தை அணுகுமுறையை ''Old fashioned" என்று கேலி பேசி புதிதாக வெளிநாட்டு பட்டங்களுடன் வந்திறங்கும் இளைஞர்களுக்கு அதுவரை கேட்டிராத சம்பளங்களை கொடுத்து சாதனைகளை படைக்க முற்படுகின்றனர். அந்த ’பழமை’வாதிகளின் நிலையும் மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது

போகட்டும், கலையுலகம், எழுத்துலகம் போன்றவற்றையாவது இந்த முரண்பாடு விட்டு வைத்திருக்கிறதா ? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். எல்லாத் துறையிலும் உதாரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இறைவனுக்கே குயிலுக்கும் காக்கைக்கும் பேதம் புரியவில்லையா !!

சிவபோகசாரமோ அப்படி ஒரு கூற்றை ஒப்புக் கொள்வதில்லை

இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை
அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்
பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்
.

ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் கருத்துபடி எல்லாமே முன் கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. . அப்படியானால் மனிதர்களுடைய ’நேர்மை வெல்லும்’ ’உழைப்பு உயர்வு தரும்’ என்ற கூற்றுகளெல்லாம் பொய்யாக்குவது போல் தெய்வம் ஏன் நடந்து கொள்கிறது ?

தெய்வமா நடந்து கொள்கிறது, இது நமக்கு நாமே முடிந்து கொண்ட சிக்கல் என்று கபீர்தாஸர் சொல்கிறார்

अपने उरझै उरुझिया, दीखै सब संसार ।
अपने सुरझै सुरझिया, यह गुरु ज्ञान विचार ॥


தானே போட்ட முடிச்சு, தன்னைப் பிணைக்குது பூமியிலே
தானே பிரிக்கவும் முடியும்,குருமொழி ஞானம் பற்றிடினே


மாற்று:
சிக்கலை முடிந்தவ ரவரே,சம்சார சிக்கலில் தவிப்பவரே
சிக்கலை அவிழ்பவ ரவரே,ஐயனுரை கேட்டு உய்பவரே


ஐயன் உரை அல்லது குருமொழி என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் அவ்வழியில் நின்றால் வாழ்க்கையின் சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும் என்று கபீர்தாஸரின் தீர்ப்பு. இதுவும் மிகப் பொதுப்படையாக அல்லவோ இருக்கிறது! சம்சார சிக்கல்கள் யாவற்றிற்கும் நாமே காரணம் என்னும் வகையில் தானே இவரும் சொல்கிறார். குருமொழி என்று எதைக் கொள்வது?

எல்லா ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஆன்மீக வழி சொல்வது :
‘வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.

ஆனால் நாம் மேலே காணும் முரண்பாடு பல நல்லவர்களின் மனதை வாட்டுவதாகவே இருக்கிறதே. கடவுளை நம்பினாலும் ஏதும் தீர்வு தெரிவது இல்லையே. இதுதான் சிக்கல். இதை பிரிப்பது எப்படி ? நான் கண்ட இரண்டு அனுபவங்களால் விடை கிடைக்கிறதா பார்ப்போம்.

ஒரு புதிய இடத்தில் தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒவ்வொரு துறைக்கும் அதற்கான பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் கட்டுமானப் பணி மேற்பார்வை பார்த்தவர் ஒரு பன்முக வித்தகர். தேவையென்றால் எந்திர பராமரிப்பு, கணக்கெழுதுவது, எங்கே எது கிடைக்கும் என்று தெரிந்து தேவைப்பட்டவற்றை உடனுக்குடன் வரவழைப்பது கொடுப்பது என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதிகம் படித்திருக்காவிட்டாலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

இந்நிலையில் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் திடீரென்று வேறு வேலை கிடைத்து சென்று விட்டார். சற்றே தனது சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் தன்னுடைய பிற பொறுப்புகளுக்கு பங்கம் இல்லாதவாறு தானே அதனையும் கவனித்துக் கொள்வதாக பலமுறை அவ்வித்தகர் கூறி வந்தார். எனக்கும், இவருக்கு இருநூற்று ஐம்பது ரூபாய்கள் அதிகம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணக்கரின் சம்பளத்தில் ரூ 750 மிச்சம் ஆகுமே என்று தோன்றியது. எங்கள் இயக்குனரின் அனுமதி பெற மூன்று முறை முயற்சித்தும் அவர் அதை ஆதரிக்கவில்லை.’செலவு பற்றி கவலை வேண்டாம் வேறு ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்றே பதில் வந்தது. இதனால் நம் வித்தகருக்கு பெரும் மனவருத்தம், கோபம் எல்லாம் வந்தது. நிர்வாகம் சரியான முறையில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் தன் திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என்றும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு தனிமையில் இயக்குனரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்னது "We should not lead a good person in to his area of weakness "

ஆம். வித்தகர் பண விஷயத்தில் சற்று பலவீனமானவர்தாம். அவ்வப்போது நிர்வாகப் பணத்தை பல தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்வாகக் காரணம் காட்டி எடுத்து பயன்படுத்துவது, வாய்ப்பு இருந்தால் பேருந்தில் சென்று ஆட்டோவில் சென்றதாக கணக்கெழுதுவது இத்யாதி பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். ஆனால் என் எண்ணப்படி நல்லக் கண்காணிப்பில் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும் என்று நம்பினேன். மாறாக இயக்குனரோ அவர் மேல் இருந்த அன்பினால் அவர் தவறிழைப்பதற்கான வழியில் கூட அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. அதன் மூலம் எனக்கும் வித்தகருக்கும் இடையே பின்னால் எழுந்திருக்ககூடிய பலப் பிரச்சனைகளையும் தடுத்துவிட்டார். அதன் காரணமாக சம்பந்தப்பட்டவர் அதிருப்தி அடைந்திருப்பினும் இயக்குனர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. குழந்தை அழுது அடம் பிடித்தாலும் அதன் அன்னை ஒவ்வாதவற்றை கொடுக்க மறுப்பது குழந்தை மேல் உள்ள அன்பினால்தானே.

பல வருடங்கள் கழிந்தன. இப்போது வேறொரு நிறுவனம், வேறொரு தலைமை. நானும் எங்கள் நிதித்துறை செயலரும் சேர்மனோடு பல திட்டங்கள் பற்றி பேசி முடித்த பின், விற்பனைத்துறைப் பற்றிய சில புள்ளி விவரங்களை செயலர் அவரிடம் சமர்ப்பித்தார். பேச்சு வாக்கில் அவர்களின் செயல்முறை பற்றி நிதித்துறையின் அதிருப்தியை தெரிவித்தார். பல கோடிகள் புழங்கும் துறையில் இன்னும் சிறப்பான தணிக்கை முறையின் அவசியம் பற்றியும் கட்டுபாடுகள் அனுசரிக்க வேண்டிய அவசியத்தையும் அவரிடம் பரிந்துரைத்தார்.

புகைபிடித்தபடி யே எவ்வித சலனமும் இன்றி கேட்டுக் கொண்டிருந்த சேர்மன் ஓரிரு நிமிடங்கள் மவுனம் காத்தார். பின்னர் சிகரெட்டின் சாம்பலை ஆஷ்ட்ரேயுள் விரலால் தட்டியபடியே அமைதியாக சொன்னதன் சாராம்சம். “ They have submitted a budget and promised certain results within a time frame..... I don't like to restrain anyone nor police around.... May be they are experimenting with certain issues.... If we frequently question their decisions they may lose interest and later either blame you or me for not delivering the results. Any developmental activity needs certain degree of freedom.... It has some cost, I fully understand"

பேச்சினிடையே அவரது அணுகுமுறையை இன்னொரு சொற்றொடரால் குறிப்பிட்டார். 'Give them a long rope, they will hang themselves"

அவர் முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு தேவைப்படும் அதிகாரங்களும் முடிவெடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். முறைகேடுகளால் ஒருவேளை நஷ்டங்கள் வரினும் அதனால் நிர்வாகத்திற்கோ பிற பணியாளர்களுக்கோ பாதிப்பு இருக்காது என்பதையும் சொல்லாமல் சொல்லினார்.

கடவுளின் அணுகு முறையும் இதுதானோ ?

இரு நிர்வாகத் தலைமையிடமும் கடவுளின் இருவேறு நிலைபாடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது தனக்கு வேண்டியவர்கள் வழி தவறுவதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல் அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.

இரண்டாவது, சிலரை தகுதியற்றவர்கள் நாம் கருதினாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறான். அவர்களின் வழிமுறைகளின் நன்மை தீமைகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவன் பாதிக்கப்படப் போவதில்லை. Give a long rope என்பது போல விட்டுப் பிடிக்கிறான். அதிகாரம் வந்ததும் தலைகால் புரியாது ஆட்டம் போடும் அறிவிலிகளை யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் அவனும் வேடிக்கையை ரசிக்கிறான். அவனுக்குத் தெரியும் கடைசியில் இவர்களும் தன்னிடமே ஏதோ ஒரு பிறவியில் சரணடைய வேண்டியவர்கள் என்று.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்போது நமக்களிக்கப்பட்ட திறமைகளுக்கு வடிகால் எது? இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா? என் திறமைகளால் எனக்கே நன்மை இல்லாவிட்டால் அவை ஏன் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

சித்த புருஷர்களின் திறமை, அஷ்டமா சித்திகளை தம் வசப்படுத்தி இருப்பது. அதை மாயையின் சக்தி, அவற்றை உலக நன்மைக்கல்லாமல் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாகாது என்ற கட்டுபாடுடன் ஞானிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அது போலவே நம் ’திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.

திறமை என்பது ஒருவகையில் நம்முடைய மனதினுடைய ஆற்றல்தான். ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.

மன ஆற்றல் பற்றி ரமணரின் கண்ணோட்டத்தை ரமணாசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம்.
கோசாலைக்கு போகும் வழியில் கெஸ்ட் ரூம் வாசலில் மிக அழகாக மயில் கோலம் ஒன்று போடப்பட்டிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு அவ்வழியாக பகவான் போகும் போது ஒரு மயில் அந்த கோலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனெதிரே பொரி கடலை டப்பாவை வைத்தாலும் அதை சாப்பிடாமல் கோலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சலனமற்ற அதன் பார்வையை கண்ட பகவான்” என்னடா! நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா?” என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடனே டொக் டொக்கென்று டப்பாவிலுள்ள கடலையைக் கொத்தியது.

அந்த கோலத்தைப் பார்த்த பகவான் “இவர்களுக்கெல்லாம் ஆத்ம வித்தை மிகச்சுலபம். ஏனென்றால் இவர்களின் புத்தி நுட்பம் அவ்வளவு சூட்சுமமாயிருக்கிறது. ஆனால் அதற்கு போக மாட்டாளே” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது

எவ்வளவு நிஜம். பெரும்பாலும் நமக்குள்ள திறமைகளைப் பற்றி நாமே பெரிதாக நினைத்துக் கொள்வதால் ரமணர் சொன்னது போல் அதிலேயே மேன்மேலும் புத்தி போகும். அது வெளிமுகமான போக்கு. இதுவே நாம் இவ்வுலகில் பின்னிக் கொள்ளும் சிக்கல். லௌகீக லாபங்களைப் பற்றியது. நம் கணிப்புகள் எவ்வளவு சரியாக இருப்பினும், நம் பார்வையில் நியாயமாக இருப்பினும் இறைவனுக்கு அதன் எல்லை தெரியும். அது எப்போதும் நம் நலன் கருதியே இருக்கும். பகவான் ரமணர் சொன்னது போல் மனதை உள்முகமாக்கினால் அந்த உண்மை புரியும். இதையும் ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிகர் விளக்குகிறார்

அவரவருக்(கு) உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்று மானால் – அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.

(நாடுவது என் நெஞ்சமே = நினைப்பதும் ஏன் நெஞ்சமே)

நமக்கென்று உலகத்தில் சாதிக்க வேண்டியது ஒன்று இல்லாத பொழுது யார் நல்லவர், யார் பொல்லாதவர்? அவன்தானே யாவற்றையும் முன்னின்று நடத்துகிறான் என்றிருப்பது உள்முகம் ஆகும்.

நமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்.
அரவிந்தருக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அவன் திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன் பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது......
.....நீ அதிலே தொடர்வது என் சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்

அதை அரவிந்தர் புரிந்து கொண்டதால் சிக்கலில் இருந்து வெளிவந்தார். ஆனால் நமக்கு அந்த பக்குவம் இல்லாத போது சுய பச்சாதாபம், கோபம், பொறாமை போன்றவற்றால் சிக்கலை மேன்மேலும் சிக்காகிக் கொள்கிறோம். தீர்வு கிடைப்பதில்லை. இதுவே கரண மயக்கம்.

எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்
பொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க
வல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது
சொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.


கரண மயக்கத்தால் ஏற்படும் பொல்லாத சங்கற்பங்கள் எதுவும் நமக்கான வழியல்ல. இதுவே குருமொழி, செம்மொழி, சிக்கல் களைந்திடும் நல்வழி. கபீர்தாஸ் சொல்வது போல் சிக்கலை பிரிக்க வேண்டுமானால் குருவின் வழி புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது.

--------------------------------

அறிவிப்பு : சிறப்பு இடுககைகளை பல விருந்தினர்கள் நேரமின்மை காரணமாக அனுப்ப இயலாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

அவர்கள் மட்டுமல்லாது இதர பதிவர்களும் வாசகர்களும் எப்போது வேண்டுமானாலும் கபீரின் கருத்துகளை மையமாக வைத்து கட்டுரைகளை அனுப்பி யாவருடனும் பகிர்ந்து மகிழலாம். This is an open invitation.

வலைப்பூ ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

Saturday, January 08, 2011

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு-8

முதலில் புத்தாண்டு வாழ்த்து, அதுவும் முக்கிய விருந்தினரிடமிருந்து :)


(click the figure for larger view)

{என்ன இது? கபீர் வலைப்பூவிலே வந்து தன்னுடைய வலைப்பூவுக்கு ஆள் சேர்க்கிறாரே என்று யாரும் அவரைத் தப்பாக நினைக்க வேண்டாம். அது அவருடைய நகைச்சுவை உணர்வை சுட்டிக் காட்ட அவருடைய 2007 வருடத்து பதிவிற்கு நான் கொடுத்த புதுப் பொலிவு..ஹி ஹி அவ்வளவுதான். }

யானைக்குட்டியை கண்டதுமே விருந்தினர் யாரென்று தெரிந்திருக்க வேண்டுமே!
ஆயிரம் இடுகைகள் தாண்டிய பதிவர் திலகம், இதிகாசச் செம்மல், தாமிரபரணி கண்டார், திருக்கையிலாயம் கொண்டார், சிதம்பரம் வென்றார், அண்ணாமலையை ஆட்கொண்டார், இராம காதையுடனும் கண்ணன் கதையுடனும் இணைய உலகின் ஈடில்லாத் தானைத் தலைவி வருகிறார்,.... வருகிறார் .....பராக்.... பராக்
என்று கட்டியம் கூறி வரவேற்கப்பட வேண்டியவர் நம் தலைவி. அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வது கை விளக்கால் சூரியனை காட்ட முயல்வது போன்ற நகைப்பிற்கான விஷயம்.

ஆனால் சூரியனுக்கு நீராஜனம் காட்டினால் அது ஆசியை வேண்டுவது போலாகி விடுமல்லவா !

அதற்கான வாய்ப்பை நல்கிய இன்றைய சிறப்பு விருந்தினரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார வரவேற்கிறேன்.

இவருடைய பதிவு உலகப் பயணத்தைப்பற்றி தமது ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியில் கூறியிருக்கிறார், படியுங்கள்.

அவர் இடுகைகளை பிரசுரிக்கும் வேகம் கண்டு எப்போதும் பிரமிக்கிறேன்! தொடர்ந்து எழுதும் பழக்கம் இருக்கும் ஒரு பதிவர் வாரம் ஒரு இடுகை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பானவர் வாரம் இரண்டு இடுவர். வியாபார நோக்கத்தோடு எழுதும் ஒரு சிலர் தினம் ஒன்று கூட எழுதலாம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாரத்திற்கு ஒன்பது இடுகைகளை இடும் தலைவியின் எனர்ஜியை என்ன சொல்வது ? வாரத்திற்கு ஒன்பது இடுகைகள் !!!!!! நான் சொல்லவில்லை. கூகிள் ரீடர் சொல்கிறது. இது எண்ணங்கள் வலைப்பூவில்மட்டும். இன்னமும் மூன்று நான்கு வலைப்பூக்கள் , நான்கோ ஐந்தோ குழுமங்கள்; போதாதற்கு பஸ் (BUZZ) ட்ரெயின் என்று எங்கெங்கே பார்த்தாலும் கீதா மேடம் தான். அவர்கள் எழுதுவதை படிக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் முழிக்கிறோமே இவர் எப்படி இப்படி எழுதித் தள்ளுகிறார்? அவர் தொடாத துறையே கிடையாது எனலாம். ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !

எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன் செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.

இவர் எத்தனை வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்ற கணக்கு சரியாகத் தெரியாது. எனக்கு கிடைத்த வரையில் இவரது வலைப்பூக்களும் இடுகை எண்ணிக்கைகளும் வருமாறு.

எண்ணங்கள் (1125 +) கண்ணனுக்காக ( 36) சாப்பிடலாம் வாங்க (27) பேசும் பொற்சித்திரமே (38) என் பயணங்களில் (128 ) ஆன்மீகப்பயணம் (302) (பக்தி) ராம ஆஞ்சனேய பிரபாவங்கள் .....etc

நம் நாட்டின் புராண இதிகாசங்களையும் அதிகம் அறியப்படாத வரலாறுகளையும் ஆழமாகப் படித்து அவற்றை மெகா சீரியல்கள் போலவே அலுப்பில்லாமல் எழுதிக் குவிக்கிறார் கீதா சாம்பசிவம் அவர்கள். அதற்கு அவரே கொடுத்த விளக்கம் :
இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறிய வேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

ஜீவி ஐயாவைப் போலவே இவரும் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதை அவருடைய பல பதிவுகள் மூலம் அறியலாம். அதை, சிறு வயதில் அவர் படித்து மனதில் நின்று விட்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்:
....அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது

‘’ மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன். ’’

அந்த அன்பின் அதிசயம் அவரை மிக உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றையக் கட்டுரைக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பும் ‘அன்பெனும் அக்ஷயப் பாத்திரம்”. சென்ற இடுகையில் ஒளியேற்றிய அன்பு இந்த இடுகையில் அட்சயப்பாத்திரமாய் யாவர் மனதையும் நிறைக்க வருகிறது. கீதா சாம்பசிவம் அவர்களை வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.

இனி விருந்தினர் படைப்பு .....


அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான்.


இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது??

நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.

நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே


இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.


இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.

மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே


மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது.

ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல.

உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும்.

அன்பானது கொடுக்கும் பொருள்.

அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும்.

ஊற்றுக் கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனைக் குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.

அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.

ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.

நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.


எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"


என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப் பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.

இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது.

எல்லாரையுமெல்லலவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக் குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்கு மூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன்.

அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''


[நன்றி : ’அறிவுக்கனலே அருட்புனலே’ ரா. கணபதி, இராமகிருஷ்ணாமடம், சென்னை; பக்கங்கள் 698-700]


அன்புக் கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.

அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும்.


பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும்.

அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

------------------------------------------------------------------------
நன்றி நவிலல்

கீதா மேடம், இறைவன் என்றென்றும் எழுதுவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளட்டும். தங்களுடைய "எண்ணங்கள்" இன்று போல் என்றும் அட்சயப் பாத்திரமாய் நல்ல விஷயங்களை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கட்டும். சூரியனின் பல்வேறு நிலைகளில் வானம் பல வேறு வர்ணங்களை அள்ளித் தெளித்து நம் மனங்களை கொள்ளை கொள்வது போல் உங்களது எண்ணங்களும் பல ரசங்களையும் அள்ளித் தெளிக்கட்டும்.

Madam, what is the secret of your energy ? :))

என்னைப் போன்றவர்களுக்கு -இன்று இல்லை நாளை-ஏதாவது சந்தேகம் என்றால் ‘கீதா மேடம் கண்டிப்பாக இதை பற்றி எழுதியிருப்பார்கள், பார்ப்போம்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ”எண்ணங்களை” தேடி வருவோம். உங்கள் சேவை வாசகர்க்கு தேவை ! [ நானும் தொண்டன் தானே :))]

”இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது ரொம்ப பிசி , நேரமே கிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி....

என்றெல்லாம் 'பிசி' என்பவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படித்திருக்கிறோம். சொல்லிக் கொள்ளாமலே பிசியாக எப்போதும் இருக்கும் நீங்கள் பல குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே செய்து வரும் எழுத்துலக சேவைக்கு வாசகர்கள் கடமைப் பட்டவர்கள். இதனிடையே கபீர் வலைப்பூவிற்கும் எழுத நேரம் ஒதுக்கி இதனை சிறப்பித்திருக்கிறீர்கள். பணிவான வணக்கங்களுடன்,மிக்க நன்றி

தங்கள் குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.