Thursday, July 16, 2020

மனம் வெளுக்க வழியுண்டு

  எல்லோரையும் எல்லாக் காலத்தும் திருப்தி செய்ய இயலாது. அது வீடாகட்டும் வியாபாரமாகட்டும் அல்லது முக்கிய பொறுப்புள்ள அதிகாரம் ஆகட்டும் நம்மைச் சுற்றி அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்போது பலரிடமும் ஏச்சுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை எதிர் கொள்வது எப்படி.? 
வீட்டளவில் குடும்பத்தலைவன் கண்டிப்புக் காட்டி பிறர் வாயை அடக்கி விடலாம். அவனே அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்பவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு எதிர்பார்ப்பைவிட குறையும் போது நிர்வாகத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது அவர் விளக்கப் பேச்சைக் கேட்பவரும் உண்டு ஏற்காமல் ஏசுபவரும் உண்டு. வாங்கிய பொருளில் குற்றம் காணும் போது தயாரித்த கொழிலகம் எங்கோ இருக்க வேறொரு மூலையில் சர்வீஸ் அதிகாரி நுகர்வோரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார். இது யாவருக்கும் உள்ள அன்றாடப் பிரச்சனை.
 
சென்ற வருடம் மாணவர்களுடனான கலந்துரையாடலில் நமது பிரதமரிடம் கடினமாக உழைக்கும் அவர் புத்துணர்ச்சியோடு காணப்படுவதின் ரகசியம் என்ன என்ற கேள்வியை ஒரு மாணவன் எழுப்பினான். ‘நான் தினமும் மருந்து சாப்பிடுவதில்லை நிறைய வசவுகளை சாப்பிடுகிறேன் ( “கோலி நஹி, பஹுத் காலி காத்தா ஹூ” ; கோலி என்றால் மாத்திரை காலி என்றால் வசவு ) என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே வேடிக்கையாக பதில் சொன்னார். 

இந்த எதிர்ப்புகள் தான் ஒருவரின் சுய சோதனைக்கு வாய்ப்பாகும்.

.நிர்வாக மேலாண்மைப் பற்றி பேசும் போது திரு நாராயணமூர்த்தி, ஒரு தலைவர் எப்படி தம்மை மேன்மை படுத்திக் கொள்ளமுடியும் என்றால் அவர் தன் எதிர் தரப்பு வாதங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்.
இந்த சுய சோதனைக்காவே கபீரும் எதிராளிக்கிடையே உன் கூடாரத்தை அமைத்துக் கொள் என பரிந்துரைக்கிறார்.

निंदक नियरे राखिये, आँगन कुटी छवाय |
बिन पानी बिन साबुन, निर्मल करे सुभाव ||

நிந்தனை செய்வார் தம்மை அண்டை வீடாய் கொள்வீர்  
நீரில்லை சவுக்கா ரமில்லை உம்மனம் வெளுக்கக் காணீர்

 தேச நிர்வாகம் தொழில் நிர்வாகம் மட்டுமல்லாது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அது மிக மிக அவசியமானது.  ஆனால் முதற்படியாக அதை செவிமடுத்துக் கேட்க வேண்டும். சொல்லப்படும் குற்றங்களில் உள்ள நிறைகுறைகளை ஆராய வேண்டும். சொல்பவரின் தரம் மேலும் உள்நோக்கம் போன்றவற்றை கவனித்து தத்தமது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். 

பொறாமையாலும் சுயநலத்தாலும் எழும் எதிர்ப்புக்களை பொதுநலம் கருதி  விலக்கிவிட்டு காரியமே கண்ணாக வேண்டும். சொல்வது எளிது செய்வது சுலபமல்ல என்று தோன்றலாம். அதற்கு மனோபலம் வேண்டும். 

இந்த மனோபலத்தை இறைவனைப் பிடித்துக் கொண்டால் பெறலாம் என்பதை பல அடியவர் வாழ்க்கையில் இந்த தேசம் கண்டிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் மகாராஷ்ட்ராவின் சக்குபாய். அவள் கதையையும் பார்ப்போம்.
 
சக்குபாயின் ஊருக்கு பண்டரிபுரத்திற்கு செல்லும் யாத்திரிகர்கள் வந்து இருக்கிறார்கள். ஊரே திரண்டு அவர்களின் தேவையை கவனித்துக் கொள்கிறது. அந்த சேவையில் சக்குபாய்க்கும் சிறிது பங்கு கிடைத்தது. சிறுவயது முதலே விட்டலினடத்து ஈர்ப்பு இருந்ததால் அவளுக்கும் அவர்களோடு சேர்ந்து பண்டரிபுர தரிசனம் செய்ய மிக்க ஆசை.ஆனால் வீட்டின் நிலைமை அதற்கு இடம் கொடுக்காது எனத் தெரியும். கணவன் அனுமதித்தாலும் மாமியார் அனுமதிக்க மாட்டாள். 

அவள் மாமியாரை ஊரே ராட்சசி என்றது. சற்றும் ஈவு இரக்கமற்றவள். வாயில் வரக் கூடாத வார்த்தைகள் சரளமாக மழைப் போல் பொழியும். வாயுடன்  கைகளும் இணைந்து வேலை செய்யும். 

அவளுடைய கணவனே அவள் முன்பு பெட்டிப் பாம்பு. மகனோ தாய் சொல்லை தட்டாதபிள்ளை. போறாத குறைக்கு இருவரும் கஞ்ச மகா பிரபுக்கள். 
மொத்தத்தில் சக்குபாய் அந்த வீட்டில் எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு அடிமை. மாமியாரின் பல கொடுமைகளுக்கும் இடையே அவளைத் தாங்கி நின்றதே அவள் செய்து வந்த  விட்டலுனுடைய செபம் தான். 

சிறுமியாக தோழிகளுடன் தெருவில் மணல் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ‘விட்டல பக்தர்’ அதைத் தெரியாதவர் போல் மிதித்து இடித்து விட்டார். அவளுடைய துக்கத்தையும் கோபத்தையும் போக்க அவளுக்கு பாண்டுரங்கனின் சிறு விக்கிரகம் கொடுத்து அவன் நாமாவை விடாமல் செபித்தால் அவனையே பிடித்து விடலாம் என்று சமாதானப்படுத்தி சென்றார். (சிலர் தம்பூரா என்று சொல்கின்றனர்)

வளமான மண்,  பக்தி விதையை விட்டலன் ஊன்றிவிட்டான். சக்குபாயின்  உயிர் தெய்வமானான் பாண்டுரங்கன். பன்னிரண்டு வயதில் மணமாகி புக்கத்திற்கு வந்த போதும் அவள் பாண்டுரங்கனை விடவில்லை. அதுவே பல சமயங்களில் அவளை குற்றம் சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளவும் காரணமாயிற்று.

அந்த யாத்திரிகர் குழுவில் கபீரும் நாமதேவரும் இருந்ததாகக் கேள்வி. எப்படியாயினும் அடியார்கள் கூட்டத்தில் இணைவதே இன்பம் தானே. சக்குபாய்க்கு  வீட்டிற்கு செல்ல மனமே இல்லை.
நாம சங்கீர்த்தனத்தில் தன்னை மறந்தாள். பண்டரிபுரத்திற்கான யாத்திரை விவரங்களை விசாரித்தாள். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வீடு அல்லோலகல்லமாகியது.  கணவன் அவளை வந்து இழுத்துச் சென்றான். இவள் எங்கே அவர்களுடன் சென்று விடுவாளோ என்ற பயத்தில் மாமியாரும் கணவனும் அவளை ஒரு தூணில் கட்டிப்போட்டு படுக்கச் சென்றனர். 
 
உடலும் மனமும் துவண்டு போயிருந்த சக்குபாய் முன் கண்ணன் தோன்றினான். அவளைத் தேற்றி “கவலைப்படாமல் நீ போய்  யாத்திரை முடித்துக் கொண்டுவா. உன்னிடத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபயம் அளித்தான். அடுத்த வினாடி கட்டப்பட்டக் கயிறுள் கண்ணனும் வெளியே சக்குபாயுமென்று இடம் மாறினர். 

பண்டரிபுரத்தில் பக்தியில் சக்குபாய் தன்னை மறந்திருந்த நேரத்தில் தன் பக்தைக்காக அவள் மாமியாரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு அவள் வடிவில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தான் விட்டலன். இறைவன் இருக்கும் இடத்தில் வெறுப்பு வளருமோ? சிறிது சிறிதாக வீட்டாரின் போக்கில் மாற்றம் காணத் துவங்கியது. காரணம் அறியாமல் அவளை நேசிக்கத் தொடங்கினர்.    

அவ்வேளையில் யாத்திரைக்கு சென்றிருந்த அவ்வூர்காரர்கள் பாம்பு கடித்து சக்குபாய் பண்டரிபுரத்தில் உயிர் இழந்தாள் என்று துக்கமான செய்தியை கொண்டு வந்தபோது “இதென்ன அவள் எங்கே பண்டரிபுரம் போனாள் ?” என்ற வியப்போடு அவளைத் தேடினால் அதுவரை அவள் வடிவில் செயலாற்றிக் கொண்டிருந்த விட்டலன் மாயமாகிவிட்டான்.

ருக்மிணி தேவியின் அருளால் சக்குப்பாய் உயிர் பெற்று  திரும்பி வந்ததும் வீட்டார் மனம் திருந்தியதும் மீதம் உள்ள கதை. [விருப்பமுள்ளவர்கள் காணொளியில் காணலாம். ]

சக்குபாய் கதை அக்காலத்தில் மிகப்பிரபலமான நாடகக் கதையாகத் திகழ்ந்தது. பொறுமையும் பக்தியும் ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை அவள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம். 

அவள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்ட போதும் தனக்கு கேடு செய்பவர்க்கும் அவள் நல்லதையே வேண்டினாள். அதற்கான மனோபலம்    அவள் பற்றியிருந்த நாமஸ்மரணையால் கிடைத்தது. அதன் மூலம் அவளுடைய மனம் மிகவும் பரிசுத்தமாய் இருந்தது. அப்படிப்பட்ட தூய உள்ளத்தை கடவுள் தன் இல்லமாக குடி கொள்வதை யாவருக்கும் அறிவிக்கவே அவன் இவ்வகை பக்தர்களைக் கொண்டு  நாடகம் ஆடுகிறான். 

இராமலிங்க வள்ளலார் இந்த நிலைமையை இறைவனுடனான நட்பு என்னவகை  மாற்றங்களை விளைவித்தது என்பதை அருட்பெருஞ்சோதி அகவலில் எழுதுகிறார்.

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்டு 
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே

செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த 
குற்றமும் குணமாகக் கொண்ட என நட்பே
 
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நன் நட்பே  (1180)

(செற்றம்=பகைமை ;எள்ளுறு நெய் = எள்ளில் உள்ள எண்ணெய்; பேய் உலகோர் =மனம் பக்குவப்படாத உலகத்தவர்)

இதையே வேறொரு கண்ணோட்டத்தில் சொல்வதானால் மிகக் கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையில் நம்மை  இறைவன் வைத்திருப்பதே நம் அந்தரங்க சுத்திக்கென்று கொள்வதானால் அதை ஆன்மீக சாதனையின் ஒரு அங்கமாகக் கருதலாம். அப்படி ஒரு சாதனைக்காகவே கபீர்,  எதிர்பாளரைக் கண்டு விலகாது அவர்கள் நடுவே வசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்கிறார்.

Wednesday, May 27, 2020

வரும் ஒன்று போமொன்று- எதுவும் நிலையன்று


இம்முறை ஒரு மாறுதலுக்காக ஒரு சிறு கதை. திரு புதுமைப்பித்தனின் சொற்சித்திரம். அதன் பின்னர் இதையொட்டி  கபீர் வழியில் நம்  எண்ணவோட்டம்.

தெரு விளக்கு 

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. 

தனிமையாக ஏகாங்கியாக தனது மங்கிய வெளிச்சத்தை பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது. 

இளமை மூப்பு சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே தெரு விளக்கிற்கும் இப்போது மூப்புப் பருவம். 
நிற்கும் கல்-உடம்பு சிறிது சாய்ந்து விட்டது. 

Monday, May 04, 2020

உன் சூதே இது அருணாசல !


     தறிகெட்டு தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த உலகத்திற்கு ஒரு வேகத்தடை போட்டுள்ளது கொரானோ. விமானங்கள் இல்லை, புகைவண்டிகள் இல்லை பேருந்துகள் இல்லை. எல்லா நாடுகளிலும் ஊரடங்கு என்ற பெயரில் உலகமே முடங்கிக் கிடக்கிறது.

  அனைவரும் எப்படி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பது   என்று வல்லுனர்கள் தொலைகாட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும்  விவரிக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் தத்தம் தனித் திறமை வளர்த்துக் கொள்ள அற்புதமான வாய்ப்பு என்கின்றனர். நேரமில்லை என்று ஓடியவர்களை யோகாவும் தியானமும் செய்யுங்கள் என்று பிரதமர் முதல் தொலைக்காட்சி நெறியாளர் வரை யாவரும் நினைவு படுத்துகின்றனர்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

அப்பாடா ! இனி அங்கே இங்கே என்று யாரும் கூப்பிட மாட்டார்கள்.கலியாணம் கோவில் என்றெல்லாம்  சுற்ற வேண்டியதில்லை.  சாலை நெரிசலில் சிக்கி விழி பிதுங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம், எதையாவது உருப்படியாக செய்வோம் என்று நானும் திட்டம் தீட்டினேன். மீண்டும் கபீர் எழுத வேண்டும், புது புது யுக்திகளை படம் வரைவதில் கையாண்டு பார்க்க வேண்டும்.  இரமணரின் உபதேச சாரம் மனப்பாடம் செய்ய வேண்டும், குறைந்தது ஒரு அத்தியாயமாவது பகவத்கீதை படிக்க வேண்டும், தரவிறக்கம் செய்து  படிக்காமல்  இருக்கும் திருவாசகத்தை படிக்கத்  தொடங்க வேண்டும்    இத்யாதி

   மூன்று வாரங்களுக்கு பின் ஏதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன்.  திட்டத்தில் பத்து சதவீதம் கூட வெற்றியில்லை.  ஏதேதோ காரணங்கள்.  ஆனால் பெரிய காரணம் நான் வைத்திருக்கும் கைப்பேசி மூலம்  நம் மனதிற்குள் புகுந்துள்ள   வைரஸ் களான வாட்ஸ் ஆப், முகநூல் ட்விட்டர் போன்ற  மென்பொருட்களின்  மயக்கமே.

நேரத்தைக் கொல்லும் மானிடக் கொல்லிகள்.

அவைகள் நேரத்தைக் கொல்ல (Time pass, killing time)) உதவுகின்றன என ஒப்புக் கொண்டால்   கண்டிப்பாக நம் ஆயுளையும்  சேர்த்தே கொல்லுகின்றன என்பதை மறுக்க முடியாது. இதை சொல்வது  திருவள்ளுவர்.

நாளது ஒன்று போல் காட்டி  உயி(ர்) ஈரும் 
வாளது உணர்வார் பெறின்.

கால அளவாக காட்டப்படும் ஒவ்வொரு நாளும் உயிரை அறுக்கும் வாள் என்று கூர்ந்து அறியும் சான்றோர் உணர்வர்.

இந்த உண்மையும் வாட்ஸ்-ஆப்பில் வந்த ஒரு பகிர்வைப் பார்த்ததும் தான் உறைக்கிறது

மக்கள் செய்யும்  காலவிரயம் என்பது ஒரு மாயையின் விளையாட்டு என்பதை அக்ஷர மணிமாலையில் இரமணர்  "இறைவனின் சூது" என்று வருணிக்கிறார்.

"ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீயிலையோ அருணாசல 
  ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்? உன் சூதேயிது அருணாசல"

 உன்னை ஏமாற்றி கள்வர்கள் உள்ளே எப்படி உள்ளே வரமுடியும்? ஆகையால் நீ வேண்டுமென்றே இந்த ஐம்புலன்களை தந்து என்னை திசை திருப்புகிறாய்" என்று உரிமையுடன் இறைவனை சாடுகிறார். அவர் முழித்துக் கொண்டு கள்வர்களை விரட்டி அடிக்க வல்லவரானார். ஆனால் நாமோ இன்னமும் ஏமாந்து அமர்ந்திருக்கிறோம்.

கபீரும்இந்த ஏமாறுதலை பயிரைக் காக்காத விவசாயிக்கு ஒப்பிடுகிறார்.

बिन रखवारे बाहिरा, चिड़ियों खाया खेत |
अरधा परधा ऊबरे, चेति सके तो चेत ||

 விரட்டு வாரில்லா வயலிலே பறவைகள் தின்றன தினைதனை
 திரட்ட முடிந்தால் திரட்டிடு அரைகுறை யாயினும் விளைச்சலை

கள்வர்கள் என்று ரமணர் சொன்னதைத்தான்   பறவைகள் என்று கபீர் சொல்கிறார்.

நமக்கு தேவையான ஒன்றை இன்னொருவன் எடுத்து சென்றால் அதற்கு நம் கவனக் குறைவே காரணம்.

இங்கே நாம் இழப்பது நேரத்தை ; இறை சிந்தனையோடு கூடிய தர்ம காரியங்கள் செய்யாமல் கழிக்கும் நாட்களை. அதற்குக் காரணம் புலன் கவர்ச்சிகளால் நம் கவனம் தவறுவதே ஆகும்.

இந்த இயலாமை அப்பர் பெருமானையும் திருமங்கை ஆழ்வாரையும் கூட வாட்டுகிறது.

சக்கரத்து அண்ணலை வேண்டிக்கொள்ளும் ஆழ்வார் பாடல் :
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லக்கில்லேன்
கடவனாகி காலந்தோறும் பூப்பறித் தேத்த கில்லேன்
மடம் வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவு கின்றேன்  எங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?  (3305 )

[இடகிலேன் : இரப்பவர்க்கு எதையும் ஈவதறியேன்
 ஒன்று அட்டகில்லேன் : தாகமுற்றவர்க்கு நீர் தந்திலேன்
 கடவனாகி : நியதியுடையவனாகி  ; காலம் தோறும் உரிய காலங்களில்
 அயர்ப்பு ஆய்: அவ்விவேகி ஆகி ;  தடவுகின்றேன் : தேடுகின்றேன் ]

கோவலூரில் குடியிருக்கும் இறைவனை இறைஞ்சி அப்பர் பாடியது :
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.

கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பல மலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே ! ( நன்றி ; Thevaram.org)

இப்படி ஐம்பொறிகளை கட்டுப்படுத்தாமல் எந்தவித ஆன்மீக முன்னேற்றமும் இருக்கமுடியாது என்பதை சான்றோர்கள் யாவரும் சொல்லியிருக்கிறார்கள்.  உலக விஷயங்களிலே பற்று உண்டாவதற்கு காரணமே இவைதான்.

அது இன்றைய வாட்ஸ்-ஆப் வரைக்கும் வந்து விட்டது.  மகிழ்ச்சியை பகிர்கிறோம் என்ற பெயரில்  இது வணிகத்தைப்  பெருக்கி மனங்களை சுருக்கி காலத்தைக் கொன்று மனிதத்துவத்தையும் அழித்துக் கொண்டு வருகின்றது என்றால் மிகையில்லை. 

பற்றற்றான் பற்றை பற்ற பற்று விட வேண்டும் என்பதை  முதல் அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டார் வள்ளுவர்.

மீண்டும் கபீருக்கு வருவோம்.' திரட்ட முடிந்தால் திரட்டு' என்று ஒரு சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்?  அவருக்கு நன்கு தெரியும் மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது . இன்னும் எவ்வளவு நாட்கள் மீதி உள்ளனவோ தெரியாது. அதற்குள்ளாகவாவது மருட்சியை  விட்டு பெரியவர்கள் சென்ற பாதையில் சென்று பார் என்று உபதேசிக்கிறார்.

அதையே வள்ளல் பெருமானார் வார்த்தைகளில் பார்த்தால்
"அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் 
 மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே 
 அருட் பேறதுவே அரும் பெறற் பேறு
  இருட்  பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே  (990  அருட்பெருஞ்சோதி அகவல்)

கடவுளை சிந்தித்து இருந்தால்  மருள் நீங்கி விடும்.

இந்த உண்மைகளை சற்றாவது நினைத்துப் பார்க்க கொரானாவை  அனுப்பிய -யாவற்றையும் கடந்து நிற்கும்- அந்த  கடவுளுக்கு நன்றி.