Monday, October 25, 2010

கே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்

சிறப்பு இடுகை -1 ( இங்கே சுட்டவும் ) -தொடர்ச்சி


புதிரா புனிதமா : கபீர்

வணக்கம் மக்களே!
புதிரா புனிதமாவில் வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை!
நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க!
இருந்தாலும், வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் தேடல் கூட வாழ்த்துக்கள்! விடைகளை ஒவ்வொன்னாப் பார்க்கலாமா?

1. கபீரைப் போலவே இந்த நாயன்மார்! இவரும் ஒரு நெசவாளர்? யார் இவர்? = நேச நாயனார்!

சிறந்த சிவனடியாரான இவர், அடியார்களுக்கு ஆடை தைத்துக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்தார்! அன்னதானம் எல்லாரும் பண்ணறது தான்! ஆனால் ஆடைதானம் என்று மானங் காக்கும் தொண்டினை அன்றே செய்த நல்ல உள்ளம்!

Other Choices-இல் அமர்நீதி நாயனார், உங்களைக் குழப்பவென்றே கொடுத்தது! :)
அதான் எப்பமே பண்ணுவியே-ங்கிறீங்களா? ஹா ஹா ஹா! குழம்பிக் கிடைக்கும் தெளிவு தான் ரொம்ப நாள் நிக்கும்! Water "fills" only in empty glass :)
அமர்நீதி நாயனார் ஈசனுக்குக் கோவணம் காத்துக் கொடுத்தவர்! ஆனால் நெசவாளர் அல்ல!
தண்டியடிகள் பார்வையற்றர் - இருந்தும் குளம் கட்டுவித்து, தண்ணீர்த் தாகம் தீர்த்தவர்!
திருநீலகண்டர் குயவர்! மனைவியிடம் அல்லாது இன்னொரு இடத்தில் லேசு மாசாக நடந்ததற்கு, மனைவியின் சத்தியத்தால் மனைவியிடமே நெருங்காது, காலமெல்லாம் ஒழுக்கம் காத்து நின்றவர்!

2. கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்? = குரு அர்ஜூன் தேவ்

குரு நானக் முதல் சீக்கிய குரு! கபீரின் சமகாலத்தவர் என்றும் சொல்வார்கள்!
குரு கோவிந்த் சிங் கடைசி குரு!
குரு அர்ஜீன் தேவ் தான் ஐந்தாம் குரு! நடுவாக உதித்தவர்! இவரே தனக்கு முன்பிருந்த குருக்களின் வாய்மொழிகளை எல்லாம் திரட்டி, குரு கிரந்த சாகிப் என்று எழுதுவித்தவர்!

பின்னாளில் இதர குருக்களின் வாசகமும் இதில் ஒவ்வொன்றாகச் சேர்ந்தது! 10 சீக்கிய குருக்கள் அல்லாது 15 மகான்கள் (பகத்) சொன்னதும், இதில் இடம் பெற்றுள்ளது!

அதில் ஒன்று தான் கபீரின் பீஜக்!
இராமானுச வழிவந்த இராமனந்தரின் வாசகமும் குரு கிரந்த் சாகிப்பில் உண்டு!


3. கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்? = இராமானந்த தீர்த்தர்

இவரே கபீரின் மானசீக குரு!
கபீர் வளர்ப்பால் முஸ்லீம் என்பதால், சுற்றி இருந்த சில அக்ரஹார சீடர்கள் விலக்க, அவமானப்பட்ட கபீர், அழுது கொண்டே கங்கைப் படித்துறையில் படுத்துறங்கி விட்டார்!

விவரம் அறியாத இராமானந்தர், யாரோ இரண்டு வீர புருஷர்கள் (இராம-இலக்குவன்) தன் மடத்தை விட்டுப் போவதாக விடிகாலைக் கனவு கண்டு,
ஐயோ, பாகவத அபச்சாரம் (அடியார் பழித்தல்) நடந்து விட்டது போலிருக்கே என்று பதறி,

இதர வகுப்பாரை விசாரிக்க, உண்மை அறிந்து, எதற்கு கபீரை விரட்டினீர்கள் என்று மற்றவர்களைக் கடிந்து கொண்டார்!
உடனே கங்கைக் கரையில் குளிக்கப் போகும் போது, படியில் கால் வைக்க, அது கபீரின் மேல் பட்டு விட..."சீதாராம்" என்று இராமானந்தர் அலற, கபீர் எழுந்து வணங்க, அதுவே தாரக மந்திர உபதேசம் ஆயிற்று! கபீர் சீடர் ஆனார்!

4.

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்
என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி...
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;" என்று துவங்கும் ஒரு பெரும் தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ? = கம்பர்

கம்ப ராமாயணம் - கடைசிக் காண்டமான யுத்த காண்டத்தின் முதல் பாட்டு!

ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா!

சான்சே இல்ல-ல்ல? கம்பன் கவியே கவி! என்னமா நச்-ன்னு சொல்றாரு! உளதென்று உரைக்கின் உளதேயாம்! அப்படியே நம்மாழ்வார் பாசுரம் போலவே இல்ல? = உளன் எனில் உளன்!
பின்னாளில் கண்ணதாசன் இதைத் தான் எழுதினாரு! = உண்டென்றால் அது உண்டு!


5. கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

கபீர் + தாசர் = Great (Allah) + Servant = சிறப்பானவரின் அடிமை!
அல்லாஹ் என்னும் இறைவனின் திருப்பெயர்களுள், 37ஆம் திருநாமமாக, திருக்குர்ஆனில் வருவது கபீர் என்ற நாமம்!


6.கபீரின் சொந்த ஊர் எது? = காசி (வாரணாசி)

காசியில் வாழ்ந்த நெசவாளத் தம்பதிகள் (இணையர்கள்) நீரு-நீமா என்பவர்களின் பிள்ளையே கபீர்!
பிறப்பால் இந்து, முதல் மூன்று வருணத்துக்குள் பிறந்தவர் என்றெல்லாம் சில சாதி அபிமானிகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பார்த்தனர்!
கபீர் பிரபலமாகி விட்டார் அல்லவா! வள்ளுவரை மதத்துக்குள் அடைப்பது போலத் தான், கபீரை அடைக்கப் பார்த்தார்கள் போலும்! ஆனால் கபீர் இரு மதங்களின் மூட வழக்கங்களையும் போலியான சாஸ்திர-சம்பிரதாயங்களையும் சேர்த்தே தான் எதிர்த்தார்!

7. கபீரின் சமாதி எங்கு உள்ளது? = மகர், கோரக்பூர்

பண்டிதர்களால் காசியை விட்டுத் துரத்திய பின், கபீரின் இடம் இதுவானது!
பலரும் மகர் பாவப்பட்ட ஊர் என்று பேச, இறக்கும் தருவாயில் காசியில் இறந்தால், எவ்வளவு பாவியானாலும் ஸ்டெரெயிட் மோட்சம் என்று குறுக்கு வழிக் கால்குலேஷன்களைச் சொல்ல...
அதை மறுக்க நினைத்த கபீர், கோரக்பூர் அருகிலுள்ள இந்த மகரிலேயே சமாதியானார்! இன்றும் சமாதிக் கோயில் உள்ளது!


8. கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது!
வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!
இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக் கொடுத்தனர்? = சிக்கந்தர் லோதி

பல வெற்றிகள் கண்டு, இறுதியில் குவாலியர் மகாராஜா மான் சிங்கிடம் தோற்றுப் போன சிக்கந்தர் லோடியே இவர்! சமயப் பொறையாளர் அல்லர்! இன்று தில்லியில் உள்ள Lodi Gardens இவரின் சமாதியே!

கபீர், போலியான சாஸ்திர-சம்பிரதாய வழக்கங்களை நையாண்டி செய்து பாடுவதால், பொத்துக் கொண்டு வந்து விட்டது பல பேருக்கு!
கோள் சொல்லுதல் பாவம் என்பது தான் சாஸ்திரம்! ஆனால் கபீர் மேலுள்ள வெறுப்புக்காக, சாஸ்திரத்தை மீறத் துணிந்தனர்கள், அதே சாத்திரம் பேசுவோர்! அது தான் வேடிக்கை! :)

மேலும் சுன்னத் போன்ற சில சடங்குகளைப் பற்றியும் கபீர் பாடியதால், இவர்களும் சேர்ந்து போட்டுக் கொடுக்க, சிக்கந்தர் லோடியோ கபீர் பார்ப்பதற்கு முஸ்லீம் பெரியவர் போல இருந்ததால் விட்டு விட்டான்! ஈஸ்வர-அல்லா தேரே நாம் என்று சொன்ன துறவியின் உயிரை எடுத்த அவன், கபீரை மட்டும் கொல்லாது, ஊரை விட்டு மட்டும் அகன்று விடுமாறு சொல்லி விட்டான்! கபீரும் காசியை விட்டு, கோரக்பூர் சென்று தங்கலானார்!


9. கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா? அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா? = இல்லை!

கபீர் சைவ உணவு-அசைவ உணவு என்று எதையும் குறித்தோ, விலக்கியோ சொல்லவில்லை! ஜீவ காருண்யம் என்னும் உயிர்கள் பால் கருணை என்பது மட்டுமே பாடியுள்ளார்! அதையே சீக்கியர்களும் புலால் மறுத்தலாகத் தங்கள் நூலில் கொண்டுள்ளார்கள்!

10. இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?" - சொன்னது யார் ? = இயேசு பிரான்!

ஏழு ரொட்டித் துண்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்த மாயச் செயலினாலும்,
பின்பு பெத்செடாவில் பார்வையற்றவனைப் பார்க்க வைத்த பின்பும், சீடர்களிடம் தன் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே பேசும் போது, இயேசு பிரான் இவ்வாறு சொல்கிறார்!

இது புனித பைபிள் வாசகம்!
For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? Or what shall a man give in exchange for his soul? - Mark 8:36, Matthew 16:26
உலக ஆசையின் களிப்புக்காக பலதை விலை கொடுக்கலாம்! ஆனால் ஆன்மாவையே விலை கொடுத்து விட்டால்? அது லாபமா? நட்டமா?
- இது இயேசுபிரான் காட்டும் நமோ (எனதில்லை) என்னும் ஆன்ம சிந்தனை! அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்! அடைய நின்றனரே!

உஷ்ஷ்ஷ்...அப்பாடா...பதில் சொல்லியாச்சி பத்துக்கும்! என் பரிசு எங்கே?
---------------------------------------------------
பதில் சொல்லப்படாத ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமே!

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?


கே.ஆர்.எஸ் எவ்வளவுதான் தன்னை " மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது!, மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன்! :) சொல்லிக்கொண்டாலும் அவரால் தன்பெயரினுள்ளேயே கபீரை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை மறுக்க முடியாதே !

Kannabiran Ravishankar ஐ கொஞ்சம் மாற்றிப் போடுங்கள்
Kabirannan Ravishankar வருகிறதா இல்லையா !!! :))))
-------------------------------------------
வாசகர்களை கவரும் வகையில் ஒரு நல்ல இடுகையை தந்து இந்த வலைப்பூவை சிறப்பித்த கே.ஆர்.எஸ் வாழி வாழி.

தங்கள் எழுத்துப்பணி எப்போதும் போல் சிறப்பாகத் தொடரட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கபீர் வலைப்பூ வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி.

--------------------------

அடுத்து வரப்போவது யாரு ??????


4 comments:

  1. எங்கேயோ போயிட்டே(டீங்க) கண்ணா :) அப்பாடி. எம்புட்டு விஷயம் தெரிஞ்சிருக்கு. உங்க புண்ணியத்தில் நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன். நீடுழி வாழ்க!

    கபீரண்ணன் காரணத்தையும் ரசித்தேன் :)

    ReplyDelete
  2. ஆம்,பெயரை மாற்றிப் போட்டால் கபீரண்ணன் வருகிறார்.

    கபீரண்ணன் வாழ்க!

    அவர் எழுத்துப்பணி சிறக்க உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    அடுத்து யார் என்று அறிய ஆவல்.

    ReplyDelete
  3. Enjoyed the quiz. Thanks !! :-)

    ReplyDelete
  4. K.R.S = King of Research in Spirituality.
    :-)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி