Saturday, January 22, 2011

அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்

யாரை எங்கே
வைப்பது என்று
யாருக்கும் தெரியலே
அண்டங் காக்கைக்கும்
குயில்களுக்கும்
பேதம் புரியலே!
பேதம் புரியலே !!

பழைய திரைப்பாடலின் ஆரம்ப வரிகள் இது. ஆள் மாறாட்டத்தால் சிறையில் சிக்கி கதாநாயகன் பாடுவது போல் கதையில் சொல்லப்பட்டாலும் இந்த முரண்பாட்டை வாழ்க்கையிலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

அருமையான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. குடத்திலிட்ட விளக்கு போல அவர்கள் யாராலும் அறியப்படாமல் மறைந்து போகிறார்கள். மிக சாதாரணமானவர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மேலே முன்னேற போட்டிகள் அதிகம். திறமையை விட சாமர்த்தியம் தேவை. அதுவாவது பரவாயில்லை. ஏதோ அதிர்ஷ்டம் இல்லை, அவர்கள் கேட்டுக் கொண்டு வந்தது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதைவிட வருத்தமளிக்கும் காட்சிகளும் அவனுடைய நாடகத்தில் உண்டு.

ஒருவருடைய தகுதிக்கு மதிப்பளிக்காது தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மேலமர்ந்து ஆட்டிப் படைப்பதும் இன்று சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. பலமாதங்கள்- ஏன் வருடங்கள்- கடினமான தேர்வுகள் எழுதி நாட்டு நிர்வாகத்தில் பயிற்சி பெற்று வரும் நேர்மையான உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளூர் எம். எல். ஏக்களின் அல்லது அரசியல் புள்ளிகளின் ஏளனப் பேச்சுகளையும் மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலருக்கு மன அழுத்தம் அதிகமாகி பல்விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். அம்மாதிரி சமயங்களில் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியின் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும். பலர் தம் பொறுப்பைத் துறந்தும் சென்று விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

சரி, அரசாங்கம்தான் அப்படி, தனியார் நிறுவனங்களில் எப்படி? அங்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. நிறுவனத்தை கட்டி வளர்த்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறும்போது புதுமைகளை புகுத்துவோம் என்ற பெயரில் திறமையான விசுவாசம் மிக்க நிர்வாகிகளெல்லாம் புறக்கணிப்படுகின்றனர். அவர்களது அனுபவத்தை அணுகுமுறையை ''Old fashioned" என்று கேலி பேசி புதிதாக வெளிநாட்டு பட்டங்களுடன் வந்திறங்கும் இளைஞர்களுக்கு அதுவரை கேட்டிராத சம்பளங்களை கொடுத்து சாதனைகளை படைக்க முற்படுகின்றனர். அந்த ’பழமை’வாதிகளின் நிலையும் மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது

போகட்டும், கலையுலகம், எழுத்துலகம் போன்றவற்றையாவது இந்த முரண்பாடு விட்டு வைத்திருக்கிறதா ? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். எல்லாத் துறையிலும் உதாரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இறைவனுக்கே குயிலுக்கும் காக்கைக்கும் பேதம் புரியவில்லையா !!

சிவபோகசாரமோ அப்படி ஒரு கூற்றை ஒப்புக் கொள்வதில்லை

இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை
அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்
பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்
.

ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் கருத்துபடி எல்லாமே முன் கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. . அப்படியானால் மனிதர்களுடைய ’நேர்மை வெல்லும்’ ’உழைப்பு உயர்வு தரும்’ என்ற கூற்றுகளெல்லாம் பொய்யாக்குவது போல் தெய்வம் ஏன் நடந்து கொள்கிறது ?

தெய்வமா நடந்து கொள்கிறது, இது நமக்கு நாமே முடிந்து கொண்ட சிக்கல் என்று கபீர்தாஸர் சொல்கிறார்

अपने उरझै उरुझिया, दीखै सब संसार ।
अपने सुरझै सुरझिया, यह गुरु ज्ञान विचार ॥


தானே போட்ட முடிச்சு, தன்னைப் பிணைக்குது பூமியிலே
தானே பிரிக்கவும் முடியும்,குருமொழி ஞானம் பற்றிடினே


மாற்று:
சிக்கலை முடிந்தவ ரவரே,சம்சார சிக்கலில் தவிப்பவரே
சிக்கலை அவிழ்பவ ரவரே,ஐயனுரை கேட்டு உய்பவரே


ஐயன் உரை அல்லது குருமொழி என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் அவ்வழியில் நின்றால் வாழ்க்கையின் சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும் என்று கபீர்தாஸரின் தீர்ப்பு. இதுவும் மிகப் பொதுப்படையாக அல்லவோ இருக்கிறது! சம்சார சிக்கல்கள் யாவற்றிற்கும் நாமே காரணம் என்னும் வகையில் தானே இவரும் சொல்கிறார். குருமொழி என்று எதைக் கொள்வது?

எல்லா ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஆன்மீக வழி சொல்வது :
‘வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.

ஆனால் நாம் மேலே காணும் முரண்பாடு பல நல்லவர்களின் மனதை வாட்டுவதாகவே இருக்கிறதே. கடவுளை நம்பினாலும் ஏதும் தீர்வு தெரிவது இல்லையே. இதுதான் சிக்கல். இதை பிரிப்பது எப்படி ? நான் கண்ட இரண்டு அனுபவங்களால் விடை கிடைக்கிறதா பார்ப்போம்.

ஒரு புதிய இடத்தில் தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒவ்வொரு துறைக்கும் அதற்கான பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் கட்டுமானப் பணி மேற்பார்வை பார்த்தவர் ஒரு பன்முக வித்தகர். தேவையென்றால் எந்திர பராமரிப்பு, கணக்கெழுதுவது, எங்கே எது கிடைக்கும் என்று தெரிந்து தேவைப்பட்டவற்றை உடனுக்குடன் வரவழைப்பது கொடுப்பது என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதிகம் படித்திருக்காவிட்டாலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

இந்நிலையில் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் திடீரென்று வேறு வேலை கிடைத்து சென்று விட்டார். சற்றே தனது சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் தன்னுடைய பிற பொறுப்புகளுக்கு பங்கம் இல்லாதவாறு தானே அதனையும் கவனித்துக் கொள்வதாக பலமுறை அவ்வித்தகர் கூறி வந்தார். எனக்கும், இவருக்கு இருநூற்று ஐம்பது ரூபாய்கள் அதிகம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணக்கரின் சம்பளத்தில் ரூ 750 மிச்சம் ஆகுமே என்று தோன்றியது. எங்கள் இயக்குனரின் அனுமதி பெற மூன்று முறை முயற்சித்தும் அவர் அதை ஆதரிக்கவில்லை.’செலவு பற்றி கவலை வேண்டாம் வேறு ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்றே பதில் வந்தது. இதனால் நம் வித்தகருக்கு பெரும் மனவருத்தம், கோபம் எல்லாம் வந்தது. நிர்வாகம் சரியான முறையில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் தன் திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என்றும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு தனிமையில் இயக்குனரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்னது "We should not lead a good person in to his area of weakness "

ஆம். வித்தகர் பண விஷயத்தில் சற்று பலவீனமானவர்தாம். அவ்வப்போது நிர்வாகப் பணத்தை பல தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்வாகக் காரணம் காட்டி எடுத்து பயன்படுத்துவது, வாய்ப்பு இருந்தால் பேருந்தில் சென்று ஆட்டோவில் சென்றதாக கணக்கெழுதுவது இத்யாதி பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். ஆனால் என் எண்ணப்படி நல்லக் கண்காணிப்பில் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும் என்று நம்பினேன். மாறாக இயக்குனரோ அவர் மேல் இருந்த அன்பினால் அவர் தவறிழைப்பதற்கான வழியில் கூட அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. அதன் மூலம் எனக்கும் வித்தகருக்கும் இடையே பின்னால் எழுந்திருக்ககூடிய பலப் பிரச்சனைகளையும் தடுத்துவிட்டார். அதன் காரணமாக சம்பந்தப்பட்டவர் அதிருப்தி அடைந்திருப்பினும் இயக்குனர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. குழந்தை அழுது அடம் பிடித்தாலும் அதன் அன்னை ஒவ்வாதவற்றை கொடுக்க மறுப்பது குழந்தை மேல் உள்ள அன்பினால்தானே.

பல வருடங்கள் கழிந்தன. இப்போது வேறொரு நிறுவனம், வேறொரு தலைமை. நானும் எங்கள் நிதித்துறை செயலரும் சேர்மனோடு பல திட்டங்கள் பற்றி பேசி முடித்த பின், விற்பனைத்துறைப் பற்றிய சில புள்ளி விவரங்களை செயலர் அவரிடம் சமர்ப்பித்தார். பேச்சு வாக்கில் அவர்களின் செயல்முறை பற்றி நிதித்துறையின் அதிருப்தியை தெரிவித்தார். பல கோடிகள் புழங்கும் துறையில் இன்னும் சிறப்பான தணிக்கை முறையின் அவசியம் பற்றியும் கட்டுபாடுகள் அனுசரிக்க வேண்டிய அவசியத்தையும் அவரிடம் பரிந்துரைத்தார்.

புகைபிடித்தபடி யே எவ்வித சலனமும் இன்றி கேட்டுக் கொண்டிருந்த சேர்மன் ஓரிரு நிமிடங்கள் மவுனம் காத்தார். பின்னர் சிகரெட்டின் சாம்பலை ஆஷ்ட்ரேயுள் விரலால் தட்டியபடியே அமைதியாக சொன்னதன் சாராம்சம். “ They have submitted a budget and promised certain results within a time frame..... I don't like to restrain anyone nor police around.... May be they are experimenting with certain issues.... If we frequently question their decisions they may lose interest and later either blame you or me for not delivering the results. Any developmental activity needs certain degree of freedom.... It has some cost, I fully understand"

பேச்சினிடையே அவரது அணுகுமுறையை இன்னொரு சொற்றொடரால் குறிப்பிட்டார். 'Give them a long rope, they will hang themselves"

அவர் முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு தேவைப்படும் அதிகாரங்களும் முடிவெடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். முறைகேடுகளால் ஒருவேளை நஷ்டங்கள் வரினும் அதனால் நிர்வாகத்திற்கோ பிற பணியாளர்களுக்கோ பாதிப்பு இருக்காது என்பதையும் சொல்லாமல் சொல்லினார்.

கடவுளின் அணுகு முறையும் இதுதானோ ?

இரு நிர்வாகத் தலைமையிடமும் கடவுளின் இருவேறு நிலைபாடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது தனக்கு வேண்டியவர்கள் வழி தவறுவதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல் அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.

இரண்டாவது, சிலரை தகுதியற்றவர்கள் நாம் கருதினாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறான். அவர்களின் வழிமுறைகளின் நன்மை தீமைகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவன் பாதிக்கப்படப் போவதில்லை. Give a long rope என்பது போல விட்டுப் பிடிக்கிறான். அதிகாரம் வந்ததும் தலைகால் புரியாது ஆட்டம் போடும் அறிவிலிகளை யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் அவனும் வேடிக்கையை ரசிக்கிறான். அவனுக்குத் தெரியும் கடைசியில் இவர்களும் தன்னிடமே ஏதோ ஒரு பிறவியில் சரணடைய வேண்டியவர்கள் என்று.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்போது நமக்களிக்கப்பட்ட திறமைகளுக்கு வடிகால் எது? இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா? என் திறமைகளால் எனக்கே நன்மை இல்லாவிட்டால் அவை ஏன் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

சித்த புருஷர்களின் திறமை, அஷ்டமா சித்திகளை தம் வசப்படுத்தி இருப்பது. அதை மாயையின் சக்தி, அவற்றை உலக நன்மைக்கல்லாமல் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாகாது என்ற கட்டுபாடுடன் ஞானிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அது போலவே நம் ’திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.

திறமை என்பது ஒருவகையில் நம்முடைய மனதினுடைய ஆற்றல்தான். ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.

மன ஆற்றல் பற்றி ரமணரின் கண்ணோட்டத்தை ரமணாசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம்.
கோசாலைக்கு போகும் வழியில் கெஸ்ட் ரூம் வாசலில் மிக அழகாக மயில் கோலம் ஒன்று போடப்பட்டிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு அவ்வழியாக பகவான் போகும் போது ஒரு மயில் அந்த கோலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனெதிரே பொரி கடலை டப்பாவை வைத்தாலும் அதை சாப்பிடாமல் கோலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சலனமற்ற அதன் பார்வையை கண்ட பகவான்” என்னடா! நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா?” என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடனே டொக் டொக்கென்று டப்பாவிலுள்ள கடலையைக் கொத்தியது.

அந்த கோலத்தைப் பார்த்த பகவான் “இவர்களுக்கெல்லாம் ஆத்ம வித்தை மிகச்சுலபம். ஏனென்றால் இவர்களின் புத்தி நுட்பம் அவ்வளவு சூட்சுமமாயிருக்கிறது. ஆனால் அதற்கு போக மாட்டாளே” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது

எவ்வளவு நிஜம். பெரும்பாலும் நமக்குள்ள திறமைகளைப் பற்றி நாமே பெரிதாக நினைத்துக் கொள்வதால் ரமணர் சொன்னது போல் அதிலேயே மேன்மேலும் புத்தி போகும். அது வெளிமுகமான போக்கு. இதுவே நாம் இவ்வுலகில் பின்னிக் கொள்ளும் சிக்கல். லௌகீக லாபங்களைப் பற்றியது. நம் கணிப்புகள் எவ்வளவு சரியாக இருப்பினும், நம் பார்வையில் நியாயமாக இருப்பினும் இறைவனுக்கு அதன் எல்லை தெரியும். அது எப்போதும் நம் நலன் கருதியே இருக்கும். பகவான் ரமணர் சொன்னது போல் மனதை உள்முகமாக்கினால் அந்த உண்மை புரியும். இதையும் ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிகர் விளக்குகிறார்

அவரவருக்(கு) உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்று மானால் – அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.

(நாடுவது என் நெஞ்சமே = நினைப்பதும் ஏன் நெஞ்சமே)

நமக்கென்று உலகத்தில் சாதிக்க வேண்டியது ஒன்று இல்லாத பொழுது யார் நல்லவர், யார் பொல்லாதவர்? அவன்தானே யாவற்றையும் முன்னின்று நடத்துகிறான் என்றிருப்பது உள்முகம் ஆகும்.

நமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்.
அரவிந்தருக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அவன் திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன் பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது......
.....நீ அதிலே தொடர்வது என் சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்

அதை அரவிந்தர் புரிந்து கொண்டதால் சிக்கலில் இருந்து வெளிவந்தார். ஆனால் நமக்கு அந்த பக்குவம் இல்லாத போது சுய பச்சாதாபம், கோபம், பொறாமை போன்றவற்றால் சிக்கலை மேன்மேலும் சிக்காகிக் கொள்கிறோம். தீர்வு கிடைப்பதில்லை. இதுவே கரண மயக்கம்.

எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்
பொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க
வல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது
சொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.


கரண மயக்கத்தால் ஏற்படும் பொல்லாத சங்கற்பங்கள் எதுவும் நமக்கான வழியல்ல. இதுவே குருமொழி, செம்மொழி, சிக்கல் களைந்திடும் நல்வழி. கபீர்தாஸ் சொல்வது போல் சிக்கலை பிரிக்க வேண்டுமானால் குருவின் வழி புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது.

--------------------------------

அறிவிப்பு : சிறப்பு இடுககைகளை பல விருந்தினர்கள் நேரமின்மை காரணமாக அனுப்ப இயலாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

அவர்கள் மட்டுமல்லாது இதர பதிவர்களும் வாசகர்களும் எப்போது வேண்டுமானாலும் கபீரின் கருத்துகளை மையமாக வைத்து கட்டுரைகளை அனுப்பி யாவருடனும் பகிர்ந்து மகிழலாம். This is an open invitation.

வலைப்பூ ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

18 comments:

  1. //திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.//

    இறைவன் நல்ல தலைவன், அவன் யாரிடம் எந்த வேலையை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதன் படி கொடுக்கிறார் வாங்குகிறார்.

    ReplyDelete
  2. //வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.//

    ஆம் உண்மை. நடப்பது எல்லாம் அவன்செயல், நடப்பது எல்லாம் நாராயணன் செயல், அவனின்று ஒரு அணுவும் அசையாது. அன்று எழுதியதை அழித்தா எழுத போகிறான் என்ற முன்னோர்களின் நம்பிக்கைகள் நமக்கு உணர்த்தும் பாடமும் இதுதான் நாம் அனுதினமும் அவனை நினைப்போம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங் எங்கோ அழைவதை விட்டு நமகுள்ளே கடந்து சென்று கடவுளை கண்டால் நாளும் இன்பம் தான். நாம் குழந்தையாய் மாறி அவனை நோக்கி போனால் தாய் மாதிரி நம்மை அள்ளி அணைப்பான்.

    ReplyDelete
  3. // நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல் அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.//

    அருமையாக சொல்லி விட்டீர்கள்.
    மன அமைதியுடன் கடமைகளை ஆற்றுவோம்.
    அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் கபீரன்பன்.
    .

    ReplyDelete
  4. நமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்..//

    புரியாத ஒன்றைப் புரிய வைத்தது. நன்றி.

    ReplyDelete
  5. கிவ் தம் எ லாங் ரோப் என்பது ஒரு மானேஜரியல் பிரின்ஸிபிள் . ஆயினும்
    அதற்குள்ளே இன்னும் சில சப் கோட்ஸ் இருக்கின்றன.
    நெவர் டு போலிஸிங், பட் கீப் யுவர் ஆன்டன்னா வைட் ஓபன்.
    இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த எழுதாத விதிகள், அலுவலக, நிர்வாகத்
    துறையில் மட்டுமன்றி, ஒரு இல்லறத்தின் நான்கு சுவர்களுக்கு நடுவிலும்
    பொருந்துகிறது. இந்தியா போன்ற ஒரு ஃபெடரல் அமைப்பில், மத்திய அரசுக்கும்
    மா நில அரசுகளுக்கும் கூட இவ்விதி பொருந்துவது பார்க்கத்தக்கதே.
    அது சரி.
    ஈசனும் நம்மை படைத்தபின்னே இவற்றினையே தான் செய்கிறாரோ !!


    சுப்பு ரத்தினம்.
    வருக.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  6. நல்வரவு கோமதி மேடம்,

    ஆழ்ந்து படித்து சொன்ன கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. வாங்க கீதா மேடம்

    ///புரியாத ஒன்றைப் புரிய வைத்தது...//

    அன்னவினை
    அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்
    பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்


    செய்கிற வேலை இது :)

    தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  8. நல்வரவு சுப்புரத்தினம் சார்,

    //ஈசனும் நம்மை படைத்தபின்னே இவற்றினையே தான் செய்கிறாரோ //

    சட்டியில் இருப்பது அகப்பையில் வருமாம். அவன் சட்டி, மனிதர்கள் அகப்பை :))

    வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. // சட்டியில் இருப்பது அகப்பையில் வருமாம். அவன் சட்டி, மனிதர்கள் அகப்பை :)) //


    சித்தர்களின் உலகத்தைச் சித்தரிக்கும் தமிழ் வலை உலக பதிவாளர் தோழிஅவர்கள்

    இம்முதுமொழியை வேறு விதமாக கருத்துரைத்தது என் கவனத்தைக்
    கவர்ந்தது.

    சட்டி என்பது சஷ்டியைக்குறிக்கும்.
    அகப்பை என்பது ஒரு பெண்ணின் கர்பப்பையைக் குறிக்குமாம்.

    தனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டி ஒரு பெண் வேண்டுகையில்,
    அவளை, நீ சஷ்டி தோரும் விரதம் இருந்தால், உனக்குக் குழந்தை பிறக்கும் என்று
    சொல்கிறதாம் இந்த வசனம்.

    நிற்க.

    என்னதான் சட்டியிலே பால் பாயசமும், அக்கார வடிசலும், இருந்தாலும், நமக்கு
    டயபாடிஸ் இருந்தால், அகப்பை இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன ?
    நமக்கு லயித்தது தானே கிடைக்கும் ?
    பரியினும் ஆகாவாம் பாலல்ல
    உய்த்துச்சொரியினும் போகா தம
    என்று சொல்வதைப் பார்த்தால், நடப்பதெல்லாமே நம் வினைப்பயன் என்று தான்
    தோன்றுகிறது. மனதிற்கு உகந்தது நடக்கையில் ஏதோ நமது சாமர்த்தியத்தினால்
    கிடைத்தது போலவும், நாம் எதிர்பார்க்காதது நடக்கும்பொழுது மட்டும் வினைப்பயன்
    என்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம்.
    இந்த வங்கிக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் ஃபஸிலிடி இல்லை.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  10. //ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.//

    "இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி
    இன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை
    அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்
    பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்"
    -- ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்

    நமக்குப் புரிகிறகிற மாதிரி ஈசனின் வேட்கையை ஸ்ரீ இராமகிருஷ்ணர்
    வெளிப்படுத்தியிருக்கிறார் போலும்!

    செயல்பாட்டுக்கு மட்டுமின்றி அதனைச் செயல்படுத்த இறைவன் தேர்வு செய்தவரின் பெருமையையும் பொருத்திப் பார்த்து மகிழலாம்.

    அடியாரின் உள்உறைந்து அவனே சக்தியாய் சிறப்பதினால் உலக வழக்கிற்காக அடியாரின் பெருமையை நினைக்கிறோமே தவிர அடியாரை நினைக்கும் காலத்து அவனையே நினைத்தவர் ஆகின்றோம்.

    ReplyDelete
  11. //எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்
    பொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க
    வல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது
    சொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.//

    -- ஆஹா! அந்த கரண மயக்கத்தையும் எவ்வளவு அழகாக முடித்து வைக்கிறார், தேசிகர் சுவாமிகள்!

    இந்தப் பதிவு பகுதி பகுதியாக ரசித்து சுவைக்க வைத்தது என்றாலும் மலர்களைத் தொடுத்து மாலையாக்கிய விதம் வழக்கம் போல் அற்புதம்! மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  12. சட்டி என்பது சஷ்டியைக்குறிக்கும்.
    அகப்பை என்பது ஒரு பெண்ணின் கர்பப்பையைக் குறிக்குமாம்.//

    வாரியார் ஸ்வாமிகள் எப்போதும் இப்படியே குறிப்பிடுவார்.

    ReplyDelete
  13. @ சுப்புரத்தினம் சார்,
    @ கீதா மேடம்

    //சட்டி என்பது சஷ்டியைக்குறிக்கும்.
    அகப்பை என்பது ஒரு பெண்ணின் கர்பப்பையைக் குறிக்குமாம்....//

    ஆன்மீக ரீதியா ரொம்ப சரி, அதுவும் வாரியார் சுவாமிகள் சொன்னப் பிறகு அதுக்கு அப்பீல் இருக்க முடியுமா !

    நான் சொல்ல வந்தது நிஜமான சட்டி அகப்பை. சட்டி நிறைய இருக்கும் ஒரு பொருளின் ஒரு சிறு பகுதியை மட்டும் தானே அகப்பையால் எடுக்க முடியும். அவன் செய்யாததையா நாம் செய்து விட முடியும் ? அவன் ’சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ மனிதர்கள் வெறும் ‘சப் இன்டெலிஜென்ஸ்’ தான்.

    ReplyDelete
  14. நல்வரவு ஜீவி சார்,

    மிகவும் ரசித்துப் படித்து பாராட்டியிருக்கிறீர்கள். தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. பிரச்சார் சபாவில் இந்தி படித்த போது காபீர்தாசரின் தோஹா படித்திருக்கிறேன்.
    உங்கள் விளக்கமும் உடன் வரும் Management Techniques பற்றிய விசயங்களும் அருமை.

    ReplyDelete
  16. //”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது”//

    அப்பாடி. சில் தண்ணீரை எடுத்து முகத்தில் அடிச்சா மாதிரி இருந்தது. பல விஷயங்களுக்கு யோசிச்சிருக்கேன், எதுக்காக இதைச் செய்யறோம் அப்படின்னு... உள்முகமாகவும், எல்லாம் அவன் செயல்ங்கிற பக்குவம் பெறவும், சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் அவன் திசையில் செலுத்தவும், அவனே அருளணும். மிக அருமையான பதிவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. நல்வரவு சிவகுமாரன்,

    //உங்கள் விளக்கமும் உடன் வரும் Management Techniques பற்றிய விசயங்களும் அருமை //

    தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. வாங்க கவிநயா,

    //சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் அவன் திசையில் செலுத்தவும், அவனே அருளணும் //

    அருளினான், அருளிக் கொண்டிருக்கிறான், இன்னமும் அருளுவான் :))

    இடுகை பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி