இசுலாமியர்களின் கல்லறைப் பெட்டியில் அடிப்பக்கம் இருக்காது என்பது எனக்கு ஒரு புது தகவலாக இருந்தது. அதற்கு சொல்லப்படும் காரணம் மண்ணிலிருந்து வந்தவர்கள் மண்ணுடனே போக வேண்டும் என்பதாகும்.
[படத்தை சொடுக்கினால் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்.]
ஒருவேளை இதனால்தான் ”மாட்டீ கஹே கும்பார்-கோ” என்று கபீர் மண் பேசுவது போல் குறிப்பிட்டிருந்தாரோ!
குயவன் கைமண் கூறும், பிசைமின் பிசைமின் இன்று
கூடிய விரைவில் உம்மை,பிசைவேன் பிசைவேன் என்று
[இது ஏற்கனவே விளக்கப்பட்ட ஈரடி. அதைப் படிக்க இங்கே சுட்டவும்]
படைப்புத் தொழிலை குயவனுக்கு உதாரணமாக்கி சொல்லாத மொழிகளோ சமயமோ இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் மண்ணிலிருந்தே மனிதனுடைய தொழில் திறனும் கலைத்திறனும் வெளிப்படத் துவங்கியது.
நாம் யாவரும் அறிந்த கடுவெளிச் சித்தரின் பாடல் வரிகள்-
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி (நந்தவனத்தில்)
இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சீவாத்மா தனக்கென ஒரு உடல் வேண்டி பத்து மாதங்கள் கர்ப்பவாசமிருந்து உடலை பெற்று உலகில் வந்து சேர்கிறது. வந்த பின்போ வந்த வேலையை மறந்து புலனின்பங்களில் காலத்தைக் கழிக்கிறது. இறக்கும் தருவாயில் தவம் செய்து உய்யாமல் போனேனே என்ற வருத்ததுடன் உயிர் பிரிவதை ’போட்டுடைத்தாண்டி’ என்ற நையாண்டி செய்கிறார் சித்தர்.
இதையே கபீர்தாஸரும் சொல்கிறார்
आछें दिन पाछे गये, गुरु सों किया न हेत ।
अब पछितावा क्या करै, चिडियां चुग गई खेत ॥
கழிந்தன களியாட்டத் தினங்கள், குருவடி கண்டு கனிந்திலரே
கழிவிரக் கத்தால் பயனுமேது, புலத்தைப் புள்ளினம் தின்றனவே
(புள்ளினம் -பறவைகள்)
வேலையாள் ஒருவனை வயலில் காவல் காப்பதற்காக நிலத்தின் சொந்தக்காரன் அனுப்பி வைக்கிறான். அவனோ சீட்டாடுவதும், தின்பதும் பின்னர் ஒரு தூக்கமும் போடுவதாகக் காலத்தை கழித்தால் வயலில் விளைந்த தினையை பறவைகள் தின்று தீர்ப்பதில் ஆச்சரியம் ஏது?
நம் முற்பிறப்பின் நல்வினைகள் பொருட்டு மீண்டும் அவற்றை பாதுகாத்து பெருக்கிக் கொள்வதற்காக இறைவன் உடலைக் கொடுத்து அனுப்பி வைக்கிறான். வந்த பின்போ செல்வம், புகழ், பதவி போன்றவற்றை தேடும் கூத்தாட்டத்தில் வாழ்க்கையை கழித்தால் அது நம் பொறுப்பற்ற தன்மையைத் தானேக் குறிக்கும்.
இறைவனை நினைந்து உருகும் ஒரே கடமைதான் தலையாயது. அதை அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் உபதேசிக்கிறார்.
வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே
(இதண் =பரண் )
சுனைகளிடத்தும் அருவித் துறைகளிடத்தும், பசுமையான தினைப் புனத்திலும், பரணிடத்திலும் வள்ளிக்கு அருள் செய்யும் பொருட்டு திரிபவனே ! மனைவி மக்கள் என்று இல்லற வாழ்க்கையில் மயங்கிக் கிடப்பது தகுமோ ? (எமது) வினைகள் ஓடும் படி விரட்டும் வேலாயுதத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன்.
’குருவாய் வரும் குகன்’ தினைப்புலம் காத்த வள்ளியை அவள் தீராத பக்தியைக் கண்டு ஆட்கொண்டதன் உட்பொருளை நம்முடைய ’வினைப்புலம்’ காக்கச் சொல்வதன் மூலம் கபீர்தாஸரும் நமக்கு நினைவூட்டுகிறார்.
பிரார்த்தனைகள் மூலம் நம்முள் விளையும் ஆன்மீகப் பயிரை உலகவாழ்க்கை ஒட்டிய எண்ணங்களாம் பறவைகள் தின்று விடாமல் இருக்க குருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கபீர் அறிவுறுத்துகிறார்.
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டு எல்லாமறிந்து
குருவை அறிந்தே நினைத்துக் கும்பிடுவது எக்காலம் ?
- பத்திரகிரியார் ஞானப் புலம்பல்
இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்.
சிலர் ஹரி ஹரி என்றும் சிலர் ராம் ராம் என்றும், துர்கா, காளி, சாயி, அல்லா, நானக்,புத்த மஹாவீர் என்று எந்த பேரைச் சொல்லி பாடினாலும் புள்ளினம் ஓடிடும், இறை இன்பம் தேடி வரும்.
| Koyi Bole.mp3 |
( நன்றி: ஸ்ரீநிவாஸ் குழுவினரின் பஜன் )
அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு -2010- வாழ்த்துகள்