Tuesday, December 25, 2007

எறும்பின் பேராசை

ஞான ஸ்நானத்திற்குப் பின்பு ஏசு பிரான் பரிசுத்த ஆவியால் யாருமற்ற ஒரு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த நாற்பது நாட்கள் உணவும் நீருமின்றி இறைவனை இடைவிடாது தியானம் செய்து நோன்பு காத்தார். அப்போழுது அவரால் இறைவனின் சாந்நித்தியத்தை முழுவதுமாக உணர முடிந்தது. அவரின் ஆத்ம சுத்தி்யை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் ஒரு சோதனை நடத்தப்பட்டது.

உடல் தளர்ந்து போயிருந்த ஏசுபிரானை சாத்தான் அணுகியது. பசியுற்றிருப்பவனுக்கு முதல் தேவை உணவு தானே. "நீ கடவுளின் குழந்தை என்பது உண்மையானால் இதோ இங்கிருக்கும் கற்களை ரொட்டித் துண்டுகளாக மாற்று" என்றது சாத்தான். அவருக்கு அப்படி மாற்றும் சக்தி இருந்தது என்பதையும் அது அறிந்திருந்தது.

யோக மார்க்கத்திலே சித்தி பெற்றவன் அவைகளை தன் சுயநலத்திற்கு பயன்படுத்தும் போது நிலைதவறி சக்தியை இழப்பான் என்பது தொன்றுதொட்டு நம் ரிஷி முனிகள் சொல்வதை அப்படியே பரிசோதிப்பது போல் இருக்கிறது இந்நிகழ்சி.

அத்தகைய ஒரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் "ரொட்டி ஒன்றினால் மட்டுமே மனிதன் உயிர்வாழ்வதில்லை. கடவுளின் சித்தப்படிதான் (every word of God) உயிர் வாழ்கிறான்" என்று பதில் கூறினார். அதாவது தனக்குள்ள சித்தி ஆற்றலை தனக்காக பயன்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதிலிருந்து தன்னை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்துக் கொண்ட சரணாகதித் தன்மை தெரிகிறது.

அடுத்து அவரை மிக உயரத்திலிருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று "சாஸ்திரங்களில் கூறியிருப்பதை நீ அறிவாய். தன் தேவதைகளை அனுப்பி காக்க வல்லவன் இறைவன். என்வே நீ கடவுளின் குழந்தை என்பதானால் தேவதைகள் உன்னைக் காப்பாற்றும். இங்கிருந்து கீழே குதி" என்று சாத்தான் உரைத்தது. (satan quoting scriptures ).

" சாஸ்திரங்களிலே உன் கடவுளை நீ பரிசோதிக்கக் கூடாது என்பதையும் கூட சொல்லியிருக்கிறது" என்று பதிலுரைத்தார் சாஸ்திரத்தை முற்றும் அறிந்த ஏசு. இதிலிருந்து அவருக்கு பூரண ஞானம் இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

கடைசி முயற்சியாக ஒரு மலை சிகரத்திற்கு அழைத்து சென்று "இதோ பார். கீழே கண்ணுக்கெட்டும் தொலைவில் இருக்கும் எல்லா செல்வங்களுக்கும் ராஜ்ஜியத்திற்கும் நீதான் அதிபதி. ஒருமுறை என்காலில் விழுந்து என்னை தலைவனாக ஏற்றுக்கொள்" என்று ஆசை காட்டியது சாத்தான்.

(But Jesus loved His Father. He loved the people of this world, then and now. If Jesus fell down and worshipped Satan He would be turning His back on God.... Now was the time to preach the gospel and give His life in sacrifice before returning to God the Father.
Matt. 24:3, 36; Rev. 11:15; Rev. 20: 2-6.)


"இங்கிருந்து தொலைந்து போ சைத்தானே. கடவுள் மட்டுமே என் தலைவன். அவனது பணிவிடையே என் கடமை" என்று விரட்டிவிட்டார். வேறு வழியில்லாமல் சாத்தானும் அவரை விட்டு விலகியது.

இந்நிகழ்சியிலிருந்து அவருக்கு உலக சுக போகங்களில் பற்று சற்றேனும் இருக்கவில்லை என்பது புலனாகிறது. கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.

.......இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடுகிறார்.

இதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.

இந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.

चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
कहैं कबीर दो न मिलै, इकले दूजी डाल ॥
சிவுன்டி சாவல் லே சலி, பிச் மே மில் கயி தால்
கஹை கபீர் தோ ந மிலை, இக்லே தூஜி டால்

தினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்
உரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்
( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் )

அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.

எறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்

"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்"

என்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்

பரலோகம் வேண்டின் ஏசு பிரான் போல இகலோகத்தை கைவிட வேண்டும்.

அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துகள்.






Thursday, December 13, 2007

இளைத்தவர் சீற்றம் இடும்பைத் தரும்

நானூறு ஆண்டுகளுக்கு முந்தய கதை.

விஜய நகர சாம்ராஜ்யத்தின் வலிவு குன்ற ஆரம்பித்த காலம். அவர்களுக்கு கப்பம் கட்டிய அரசர்களெல்லாம் சற்றே சுயேச்சையாக செயல்பட ஆரம்பித்தனர். அவற்றுள் ஒன்று மைசூர் சமஸ்தானம். மன்னன் ராஜ ஒடையார் அருகிலிருந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த விஜயநகரத்து பிரதிநிதியான ஸ்ரீரங்கராயனை விரட்டிவிட்டு அதைக் கைப்பற்றிக் கொண்டான். அவனும் தன் சுற்றத்துடன் வடக்கே முப்பது மைல் தூரத்திலுள்ள காவிரிக் கரையின் அருகே மாலிங்கி, தலக்காடு என்று பிரபலமாயிருந்த பகுதிக்கு குடி பெயர்ந்தான். சில நாட்களிலே இறந்தும் போனான்.

அவனது இரண்டாவது மனைவி அலமேலு தன்னுடன், தேவி ரங்கநாயகிக்கு சாற்றி வந்த விலையுயர்ந்த நகைகளையும் எடுத்துச் சென்று விட்டாள். அவை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சொத்து. அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சி செய்த வரை ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் அவைகளை சாற்றி ரங்கநாயகிக்கு மிகவும் விமரிசையாக பூஜை செய்து வந்தனர். பிற நேரங்களில் அவை அலமேலம்மாவிடமே இருந்து வந்தது.

கோவில் தரப்பிலிருந்து இந்த விஷயம் ஒடையார் மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவர்கள் அதை எப்படி செய்தனரோ தெரியாது. மன்னன் அவை கோவிலுக்கு சொந்தமானது என்று நினைத்துவிட்டான் போலும். அவைகளை திரும்பப் பெறுவதற்காக பலமுறை முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. அலமேலம்மா ஒரே ஒரு பெரிய முத்தினால் ஆன மூக்குத்தியை மட்டும் கொடுத்து அனுப்பினாள். கடைசியாக தன் படையையே அனுப்பி அவற்றை பலாத்காரமாக கொண்டுவர ஆணையிட்டான். அலமேலு நிராதாரவாக நின்றாள். வெறும் தன்மானப் பிரச்சனை மட்டுமல்ல தன்னை சேர்ந்த சாம்ராஜ்யத்தின் மானமும் அதில் அடங்கியிருந்தது என்று நினைத்தாளோ என்னவோ.

ஒரு சமஸ்தானத்தின் அதிகார பலத்தின் முன்னே அவள் ஒரு துரும்பு. செய்வதறியாது வயிறெரிந்து சாபமிட்டாள்.

தலக்காடு மணற்காடு ஆகட்டும்; மாலங்கி மடுவாய் போகட்டும் ; மைசூர் அரசு வம்சமில்லாமல் போகட்டும்.

காவிரி கரையில் செழிப்பான விளைநிலமாக திகழ வேண்டிய இடத்தில் பத்து சதுர மைல்கள் விஸ்தீரணம் உள்ள ஒரு மணற்காடு உருவானதற்கு புவியியல் காரணங்களை விஞ்ஞானிகள் இன்றும் ஆராய்வதாகக் கேள்வி.
இந்த மணற்காட்டின் நடுவே தான் பஞ்ச லிங்க ஆராதனை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக நடைபெறுகின்றது. அங்குள்ள அதிக காற்றோட்டத்தால் மணற் குவியில் விரைவிலேயே அந்த கோவில்களை மூடிவிடுகிறது. ஆகையால் தினசரி பூஜைகளை கைவிட்டு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மூடிக்கொண்டிருக்கும் மணற் குவியலை விலக்கி விசேஷ ஆராதனைகள் நடத்தி வருகின்றனர்.

மாலங்கி மடுவாகட்டும் என்று சாபத்தின் விளைவாக காவிரி ஆறும் தன்போக்கை மாற்றிக் கொண்டு மாலங்கியை நீரில் மூழ்கடித்து மிக ஆழமான சுழலாக மாறியது என்பர். அந்த சுழலில் குதித்து அலமேலம்மா தன்னை மாய்த்துக்கொண்டாள் என்பது செய்தி. அதற்கு காரணம் எதிரிகள் கையில் தன் இறந்த உடல் கூட கிடைக்கக் கூடாது என்பதுதான்.

அந்த இரண்டு சாபங்களையும் நம்ப மறுக்கின்றவர்களும் மறுக்க முடியாத ஒரு சாபம் அரசு வம்சமில்லாமல் போனது.

ராஜ ஒடையாரின் மூன்று மகன்களும் சிறு வயதிலேயே மரணமுற்றனர். அதன்பின் அவனுக்கு புத்திர பேறு இருக்கவில்லை. கடந்த நானூறு ஆண்டுகளாக மைசூரில் அரசனாக அரியணையில் வீற்றிருப்பவருக்கு ஆண் சந்ததியினர் கிடையாது. ஒவ்வொரு முறையும் தத்து எடுத்துக் கொண்டே அரசனை முடிவு செய்திருக்கின்றனர். ( தத்து வந்தவருக்கு மகன் இருப்பினும் அவன் அரியணை ஏறியபின் அவருக்கு சந்தானமில்லாமல் போய்விடும்). சிறிது காலம் ஹைதர், திப்புவின் கை ஓங்கி ஆட்சி நிலவியதும் இந்த குழப்பத்தினால்தான். ஹைதரும் திப்புவும் மைசூர் அரண்மனையை கைப்பற்றவில்லை

பின்னர் ஆங்கிலேயர் ஒடையார் குடும்பத்திற்கு ஆதரவு தந்து ஆட்சியை பலப்படுத்திய பின்னரும் சாபம் தொடர்கிறது. இதைப் போக்கிக்கொள்ள இன்றைய அரச பிரதிநிதி ஸ்ரீகண்ட தத்த ராஜ ஒடையார் பல ஆராதனைகளை நடத்திவருகிறார். அவரும் புத்திர பாக்கியம் இல்லாதவர்.

(புதைபொருள் ஆராய்சி கழகம் The curse of Talakkad என்ற குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதைக்காண இங்கே சுட்டவும் )

என்னே அலமேலம்மாவின் சாபம்.

திருக்குறளும் இதைத்தானே சுட்டிக்காட்டுகிறது.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.

கபீர்தாஸர் இதையே ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் புரிய வைக்கிறார்.

दुरबल को न सताइये, जाकी मोटी हाय ।
मुई खाल की सांस से, सार भसम होई जाय ॥


துர்பல் கோ ந சாதாயியே, ஜாகி மோடி ஹாய்
முயீ கால் கீ ஸாஸ் ஸே, ஸார் பஸ்ம் ஹோயி ஜாய்


இளைத்தவர்க்(கு) இன்னா செய்யின், இன்னாங்கு தருமவர் சீற்றம்
உளுத்த விறகின் தணலும் கொள்ளும் அனைத்தும் பற்பம்

( இளைத்தவர் = வலிமையற்றவர், இன்னாங்கு =துன்பம்,
உளுத்தது = புழுவால் அரிக்கப்பட்டது , பற்பம் =பஸ்மம், சாம்பல்)


உளுத்துப் போன மரமானாலும் அதில் கனன்று கொண்டிருக்கும் தீயின் வலிமையை யாரும் குறைத்து மதிக்கமாட்டார்கள். "அக்கினிக் குஞ்சொன்று...... பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு" என்பது பாரதியின் வரிகள்.

வாழ்க்கையில் ஏதோ காரணமாக கஷ்ட தசையில் இருக்கும் நல்லவர்களை ஏமாற்றியோ, பலாத்காரத்தாலோ அவர்களுக்கு சொந்தமான பொருளை அபகரிப்பது அவர்களுக்கு சொல்லொணா மனவேதனைத் தரும்.

நல்லவன் ஒருவன் மனம் நொந்து கொண்டால் அதற்கு காரணமாயிருப்பவரின் குடும்பத்துக்கு கேடு வரும் என்பது தொன்றுதொட்டு இந்த மண்ணில் இருந்து வரும் நம்பிக்கை. "தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ " எவனொருவன் தர்மத்தை காக்கிறானோ அவனை தர்மமே காக்கிறது. அதர்மத்தால் அவதிபடுபவர்களின் நியாமான சீற்றம் சாபமாக மாறி அதர்மத்தில் உழல்வோருக்கு பாடம் புகட்டும் சக்தியாக மாறிவிடுகிறது.

தர்மம் என்பது நம்முள் உறையும் இறைவனின் குரல். அதை மனசாட்சி என்றும் சொல்வதுண்டு. வழிகாட்டும் விளக்காகப் பயன்படும் அது வழி தவறும் போது சுட்டெரிக்கும். அதையே வள்ளுவரும்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்

என்று குறிப்பிடுகிறார்.

உள்ளிருந்தும், வெளியிருந்தும் சுடுகின்ற சக்தி தர்மத்திற்கு உண்டு.


பிற்சேர்க்கை " 13-12-2007
பல இடங்களில் எழுதி வைப்பதால் சில சமயங்களில் மறந்து விடுகிறது.
உளுத்த விறகு என்ற பொருளில் எந்த வார்த்தையையும் ஹிந்தியில் கபீர் பயன்படுத்தவில்லை. பின்னர் முறையான மொழிபெயர்பு என்று நான் நினைத்து எழுதி வைத்ததை இங்கே தருகிறேன்.


சீறுமவர் சாபம் பொல்லாது, ஒறுத்தல் கூடா இளைத்தவரை
நீறுகாண் தணலும் எரிக்கும், பற்றிய எதையும் இறுதிவரை