Saturday, January 08, 2011

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு-8

முதலில் புத்தாண்டு வாழ்த்து, அதுவும் முக்கிய விருந்தினரிடமிருந்து :)


(click the figure for larger view)

{என்ன இது? கபீர் வலைப்பூவிலே வந்து தன்னுடைய வலைப்பூவுக்கு ஆள் சேர்க்கிறாரே என்று யாரும் அவரைத் தப்பாக நினைக்க வேண்டாம். அது அவருடைய நகைச்சுவை உணர்வை சுட்டிக் காட்ட அவருடைய 2007 வருடத்து பதிவிற்கு நான் கொடுத்த புதுப் பொலிவு..ஹி ஹி அவ்வளவுதான். }

யானைக்குட்டியை கண்டதுமே விருந்தினர் யாரென்று தெரிந்திருக்க வேண்டுமே!
ஆயிரம் இடுகைகள் தாண்டிய பதிவர் திலகம், இதிகாசச் செம்மல், தாமிரபரணி கண்டார், திருக்கையிலாயம் கொண்டார், சிதம்பரம் வென்றார், அண்ணாமலையை ஆட்கொண்டார், இராம காதையுடனும் கண்ணன் கதையுடனும் இணைய உலகின் ஈடில்லாத் தானைத் தலைவி வருகிறார்,.... வருகிறார் .....பராக்.... பராக்
என்று கட்டியம் கூறி வரவேற்கப்பட வேண்டியவர் நம் தலைவி. அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வது கை விளக்கால் சூரியனை காட்ட முயல்வது போன்ற நகைப்பிற்கான விஷயம்.

ஆனால் சூரியனுக்கு நீராஜனம் காட்டினால் அது ஆசியை வேண்டுவது போலாகி விடுமல்லவா !

அதற்கான வாய்ப்பை நல்கிய இன்றைய சிறப்பு விருந்தினரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார வரவேற்கிறேன்.

இவருடைய பதிவு உலகப் பயணத்தைப்பற்றி தமது ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியில் கூறியிருக்கிறார், படியுங்கள்.

அவர் இடுகைகளை பிரசுரிக்கும் வேகம் கண்டு எப்போதும் பிரமிக்கிறேன்! தொடர்ந்து எழுதும் பழக்கம் இருக்கும் ஒரு பதிவர் வாரம் ஒரு இடுகை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பானவர் வாரம் இரண்டு இடுவர். வியாபார நோக்கத்தோடு எழுதும் ஒரு சிலர் தினம் ஒன்று கூட எழுதலாம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாரத்திற்கு ஒன்பது இடுகைகளை இடும் தலைவியின் எனர்ஜியை என்ன சொல்வது ? வாரத்திற்கு ஒன்பது இடுகைகள் !!!!!! நான் சொல்லவில்லை. கூகிள் ரீடர் சொல்கிறது. இது எண்ணங்கள் வலைப்பூவில்மட்டும். இன்னமும் மூன்று நான்கு வலைப்பூக்கள் , நான்கோ ஐந்தோ குழுமங்கள்; போதாதற்கு பஸ் (BUZZ) ட்ரெயின் என்று எங்கெங்கே பார்த்தாலும் கீதா மேடம் தான். அவர்கள் எழுதுவதை படிக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் முழிக்கிறோமே இவர் எப்படி இப்படி எழுதித் தள்ளுகிறார்? அவர் தொடாத துறையே கிடையாது எனலாம். ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !

எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன் செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.

இவர் எத்தனை வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்ற கணக்கு சரியாகத் தெரியாது. எனக்கு கிடைத்த வரையில் இவரது வலைப்பூக்களும் இடுகை எண்ணிக்கைகளும் வருமாறு.

எண்ணங்கள் (1125 +) கண்ணனுக்காக ( 36) சாப்பிடலாம் வாங்க (27) பேசும் பொற்சித்திரமே (38) என் பயணங்களில் (128 ) ஆன்மீகப்பயணம் (302) (பக்தி) ராம ஆஞ்சனேய பிரபாவங்கள் .....etc

நம் நாட்டின் புராண இதிகாசங்களையும் அதிகம் அறியப்படாத வரலாறுகளையும் ஆழமாகப் படித்து அவற்றை மெகா சீரியல்கள் போலவே அலுப்பில்லாமல் எழுதிக் குவிக்கிறார் கீதா சாம்பசிவம் அவர்கள். அதற்கு அவரே கொடுத்த விளக்கம் :
இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறிய வேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

ஜீவி ஐயாவைப் போலவே இவரும் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதை அவருடைய பல பதிவுகள் மூலம் அறியலாம். அதை, சிறு வயதில் அவர் படித்து மனதில் நின்று விட்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்:
....அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது

‘’ மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன். ’’

அந்த அன்பின் அதிசயம் அவரை மிக உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றையக் கட்டுரைக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பும் ‘அன்பெனும் அக்ஷயப் பாத்திரம்”. சென்ற இடுகையில் ஒளியேற்றிய அன்பு இந்த இடுகையில் அட்சயப்பாத்திரமாய் யாவர் மனதையும் நிறைக்க வருகிறது. கீதா சாம்பசிவம் அவர்களை வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.

இனி விருந்தினர் படைப்பு .....


அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான்.


இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது??

நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.

நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே


இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.


இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.

மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே


மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது.

ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல.

உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும்.

அன்பானது கொடுக்கும் பொருள்.

அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும்.

ஊற்றுக் கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனைக் குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.

அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.

ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.

நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.


எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"


என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப் பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.

இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது.

எல்லாரையுமெல்லலவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக் குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்கு மூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன்.

அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''


[நன்றி : ’அறிவுக்கனலே அருட்புனலே’ ரா. கணபதி, இராமகிருஷ்ணாமடம், சென்னை; பக்கங்கள் 698-700]


அன்புக் கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.

அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும்.


பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும்.

அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

------------------------------------------------------------------------
நன்றி நவிலல்

கீதா மேடம், இறைவன் என்றென்றும் எழுதுவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளட்டும். தங்களுடைய "எண்ணங்கள்" இன்று போல் என்றும் அட்சயப் பாத்திரமாய் நல்ல விஷயங்களை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கட்டும். சூரியனின் பல்வேறு நிலைகளில் வானம் பல வேறு வர்ணங்களை அள்ளித் தெளித்து நம் மனங்களை கொள்ளை கொள்வது போல் உங்களது எண்ணங்களும் பல ரசங்களையும் அள்ளித் தெளிக்கட்டும்.

Madam, what is the secret of your energy ? :))

என்னைப் போன்றவர்களுக்கு -இன்று இல்லை நாளை-ஏதாவது சந்தேகம் என்றால் ‘கீதா மேடம் கண்டிப்பாக இதை பற்றி எழுதியிருப்பார்கள், பார்ப்போம்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ”எண்ணங்களை” தேடி வருவோம். உங்கள் சேவை வாசகர்க்கு தேவை ! [ நானும் தொண்டன் தானே :))]

”இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது ரொம்ப பிசி , நேரமே கிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி....

என்றெல்லாம் 'பிசி' என்பவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படித்திருக்கிறோம். சொல்லிக் கொள்ளாமலே பிசியாக எப்போதும் இருக்கும் நீங்கள் பல குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே செய்து வரும் எழுத்துலக சேவைக்கு வாசகர்கள் கடமைப் பட்டவர்கள். இதனிடையே கபீர் வலைப்பூவிற்கும் எழுத நேரம் ஒதுக்கி இதனை சிறப்பித்திருக்கிறீர்கள். பணிவான வணக்கங்களுடன்,மிக்க நன்றி

தங்கள் குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

30 comments:

  1. //ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !//

    அந்த ஆபீசில் இருக்கவங்களுக்கு சம்பளம் + போனஸ் கூட உண்டு! :)

    ReplyDelete
  2. //நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை//

    :)

    //அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை//

    என்ன கீதாம்மா, என்னைய இப்படி அறிவில்லை-ன்னு சொல்லிட்டீங்க! ஆனாலும் அது உண்மை தான்! :)

    ReplyDelete
  3. கீதாம்மா, கலக்கல் பதிவு! திரும்பிய மூலையெல்லாம் திருமூலரைக் கண்டேன்! வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  4. //திரும்பிய மூலையெல்லாம் திருமூலரைக் கண்டேன்! //

    மனம் எங்கும் திரும்பாமல் இருக்கும்போது நான் அந்த
    ரூலரைக் கண்டேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. தலைவிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  6. //மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே //

    இதை விட எளிமையான நல்ல விளக்கம் இருக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்.

    ’ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்’ என்று திருமூலர் சொன்னதும், ஆசை என்ற அளவிலே அங்கு தன்னலம் குடிகொண்டு ஒரு ’கண்டிஷனல்’பக்தி போல செயல்படுவதை குறிப்பிடுகிறாரோ என்று தோன்றுகிறது.

    ஐயோ நான் இவ்வளவு விரதம் இருந்தேனே..கடவுள் கண் திறக்கலையே என்கிற வகையில் மனம் துக்கப்படும் போது அதுவும் மனதைப் பிடித்து ஆட்டும் “மாயை” என்று கொள்ளலாம். எதிர்பார்ப்புகள் மனதில் இருக்கும் போது அது ஆசை என்ற அளவில் நின்று விடுகிறது. அன்பாக மலர்வதில்லை.

    விவேகானந்தரின் மேற்கோள் சுட்டிக்காட்டியபடி
    ///நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன் ///

    என்கிற மனப்பக்குவம் வந்தபின் தன்னலம் முற்றுமாகப் போய் அன்பு நிலை ஒன்றே எஞ்சியிருக்கிறது. மனதில் எதிர்பார்ப்புகள் இல்லாதபோது அவை மனதை பிடித்து ஆட்டுவதில்லை. அப்போது அது மாயையின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

    நாயிற்காக பயந்து கேட் வெளியே பலர் நின்றிருக்கின்றன்ர். நிதி வசூல் செய்ய வந்த அவர்களிடம் எஜமானன் வாசலில் நின்றபடியே பேசி சிறிது உதவி கொடுத்து அனுப்பி விடுகிறான். அவர்கள் போகும் வரை நாய் குரைத்துக் கொண்டே இருக்கிறது. அதுவே அவருக்கு மிக வேண்டியவர் ஒருவர் வரும்பொழுது தானே நாயை இழுத்து கட்டி நாய்க்கு ஒரு அதட்டல் போடுகிறார். அதுவும் புரிந்து கொண்டது போல் அமைதியாகி விடுகிறது. வருபவற்கு ஏதும் சங்கடம் வராத மாதிரி பார்த்துக் கொள்கிறார்.

    இறைவன் எஜமானன்,மாயை நாய். நாம் கொடை வேண்டுபவரா அல்லது இறைவனுக்கு அன்பரா ?

    ReplyDelete
  7. /அந்த ஆபீசில் இருக்கவங்களுக்கு சம்பளம் + போனஸ் கூட உண்டு! :)//

    கண்ணபிரான் ஸார்! ஏதாவது அது மாதிரி ஒரு வேலைக்கு என்னை
    ரெகமன்ட் பண்ணுங்களேன் !!

    சம்பளம் + போனஸ் எது கொடுத்தாலும் சரி !!
    ஒரு மணிக்கு ஒரு தரம் ஒரு டம்ளர் திக் காபி கொடுத்தா போதும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  8. கீதாம்மா பற்றிய முன்னுரை இரசிக்கும்படியாக இருந்தது!

    ReplyDelete
  9. அன்பின் அவசியத்தை வலியுறுத்தி இருந்ததையும்,
    அன்புதான் பக்தி என்பதும் வெள்ளிடை மலையாய் வெளிப்பட்டது, நன்றிகள் கீதாம்மா.

    ReplyDelete
  10. //அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை//

    என்ன கீதாம்மா, என்னைய இப்படி அறிவில்லை-ன்னு சொல்லிட்டீங்க! ஆனாலும் அது உண்மை தான்! :)//

    கேஆரெஸ், நீங்க இளைஞர்னு நான் எப்போச் சொன்னேன்?? நான் சொன்னது இளைய தலைமுறையைத் தானே?? :P

    ReplyDelete
  11. @கேஆரெஸ், திரும்பிய மூலையெல்லாம் திருமூலரைக் கண்டேன்!//

    அதிர்ஷ்டம் தான்! காண முடிஞ்சதுக்கு வாழ்த்துகள். எனக்கு ஒண்ணுமே தெரியலை! :(

    ReplyDelete
  12. @சூரி சார், வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  13. @கோபி, தேடிப்பிடிச்சு வந்து வாழ்த்திடறீங்க எங்கே இருந்தாலும், உங்களோட இந்த அன்புக்குக் கைம்மாறே செலுத்தப் போறதில்லை! :))))))

    ReplyDelete
  14. @கபீரன்பரே, ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க, இத்தனை புகழ்ச்சிக்கு நான் பாத்திரமானவள் இல்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்றாலும் உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  15. //ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ...நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும்.//

    அழகாக எழுதியிருக்கிறீர்கள். நிதானமாகப் படித்தேன். இலயிப்புடன் படித்தேன் என்றே சொல்ல வேண்டும்.

    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    உண்மையான பக்தி என்பது என்னவென்று புரிந்துவிட்டால்,ஆழ்ந்த பக்தி செலுத்துவது என்பது ரொம்பவும் சிரமமான காரியம் என்பது தெரியும். அது கைவரப்பெறின், எதிரிலிருக்கும் கடவுளின் திருவுருவச் சிலைகள், படங்கள் போன்றவை கண் பார்வையிலிருந்து மறைந்து போய் சிந்தையில் நிறைந்து விடும். பூசலார் போல இதயத்தில் அவரை இறுத்திக் கொள்ளலாம். அப்படியான ஒரு அடுத்த சித்திக்கு ஆரம்ப பாடமே, ஒரு கோபுரத்தையோ, கோயிலையோ, படத்தையோ பார்த்தால் தான் இறைவன் நினைவு வரும் என்கிற இந்த ஏற்பாடு. பல்வேறு திசைத் திருப்பல்களில் அல்லலுற்று அவஸ்தைப்படும் மனம், இந்த விஷயத்தில் பொருந்துவதற்கே இந்தப் பயிற்சி.

    ஒரு பட்டாம்பூச்சி பூவின் மேல் வெறுமனே அமர்ந்திருக்கிற நிலையே இந்த பக்தி நிலை. அந்த ஞானம் தான் தேன். இல்லை, வாசுகியை கயிறாக்கிக் கண்ணன் கடைந்தெடுத்துத் தந்த அமுதம். வாழும் வாழ்க்கையில் அமுல் படுத்தி ஆனந்தம் காண இறைவன் அளித்த பிரசாதம். அந்த ஞானம், கர்மாக்களை (வினையான செயல்பாடுகளை) சரிவரச் செய்ய
    தோன்றாத் துணையாய் இருந்து வழிப்படுத்தி வழிகாட்டும். நல்வினை என்கிற நாவாயில் ஏறித்தான் இறைவன் அடிபற்றும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.

    இதையே,
    'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்' என்பார் தெய்வப்புலவர்.

    நல்லதொரு வாசிப்பனுவத்தைத் தரும் பதிவைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி, கீதா மேடம்.

    ReplyDelete
  16. மிக்க மகிழ்ச்சி கீதாஜி.
    அருமையான பதிவு.
    உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுக்களுக்கு நீங்கள் முற்றிலும் உரியவர்.
    கபீரன்பனுக்கு நன்றி.
    உங்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

    --
    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
    ---------------------------------------------------
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ----------------------------------------------------
    வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
    வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

    ReplyDelete
  17. ///@கபீரன்பரே, ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க, இத்தனை புகழ்ச்சிக்கு நான் பாத்திரமானவள் இல்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும் ///

    மேடம், நல்லா கவனிச்சுப் பாருங்க. நான் கொடுத்திருப்பது வெறும் புள்ளி விவரக் கணக்குதான். Hard facts. அதிலே எதுவும் என் கற்பனை கிடையாது. உங்கள் தொண்டன் ஆனதினாலே உங்கள் ’பாணி’யில் ஒரு கட்டியம் கூற ஆசைப்பட்டேன். கடைசியா தலைவியின் சேவை நாட்டுக்கு தேவை என்று முடிக்க வேண்டியதும் தொண்டனின் கடமை.

    ReplyDelete
  18. கீதா மாமிய பத்தி சொல்றதுக்கு எனக்கு வயசும் கிடையாது அறிவும் கிடையாது.... அவங்களுக்காக ஒரு பதிவு போட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  19. வருக பாலாஜி வெங்கட்,

    //அவங்களுக்காக ஒரு பதிவு போட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி..//

    ஒரு சின்ன திருத்தம். அவங்கதான் எனக்காக ஒரு பதிவு போட்டிருக்காங்க :))

    ReplyDelete
  20. பாலாஜி அங்கிள், என்னதான் வயசாச்சுன்னாலும் பதிவைக் கூடவாச் சரியாப் படிக்க முடியாது?? இப்படிக் கவுத்துட்டீங்களே?? நிதானமாப் படிங்க, அப்புறமா கமெண்டுங்க! :)))))))))))

    ReplyDelete
  21. //எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன் செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.//


    சிறப்பு இடுகையை சிறப்பாக்க வந்த
    கீதா சாம்பசிவம் அவர்களைப் ப்ற்றி கபீரன்பன் நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.

    அவருக்கு இந்த புத்தாண்டில் எல்லா வளங்களும், நலங்களும் இறைவன் அருள்வார்.

    ReplyDelete
  22. //அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.

    ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.//

    கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை
    நினைத்துப் பார் பார் அது தரும் தென்பை. என்றப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    நீங்கள் சொல்வது போல் அன்பை கொடுக்க கொடுக்க நம் மனம் நிறைந்து இருக்கும் போது எந்த எதிர்ப்பார்ப்பும் இருக்காது.

    எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இருக்காது.

    ReplyDelete
  23. //இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.//

    உண்மை!

    மாயை மனதை விட்டு அகலதான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இறை நாமாக்களைச் சொல்லி.

    ReplyDelete
  24. //இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.//

    பிரார்த்திப்போம்.
    கூட்டுப் பிராத்தனைக்கு நல்ல பலன் உண்டு.

    எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    உங்கள் எழுத்துப் பணி மேல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. எளிமையான விஷயங்கள் தான் மனதை கவர்கின்றன. அருமையானதொரு வாசிப்பனுபவம். முன்னுரை படிச்சி ஆடி போயிட்டேன். நமஸ்காரம் மட்டும் சொல்லிக்கறேன்.
    //ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !//
    உண்மையாவே அப்படி எதாவது இருந்தா தயவு செய்து சொல்லுங்கள். எனக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் காபி/டீ தந்தால் போதும். :-)
    எல்லோருக்கும் இனிய பொங்கல் !

    ReplyDelete
  26. // சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது. //
    Kudos to Naren ! Real hero !!

    ReplyDelete
  27. The Great கீதாம்மா பற்றி கபீரன்பர் எழுதியிருப்பதும், அன்பைப் பற்றி கீதாம்மா எழுதியிருப்பதும், எல்லாமே Great!

    பணிவான வணக்கங்களும், மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளும்.

    (கீதாம்மா ஆபீசில் எனக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லதுதான் :)

    ReplyDelete
  28. //நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். //
    எவ்வளவு உள்ள தூய்மை இருந்தால் இப்படி ஒருவரால் தைரியமாக சொல்ல முடியும் !! We join you Naren.
    ~
    Radha
    p.s:இன்று சுவாமி விவகானந்தரின் பிறந்த நாள்.

    ReplyDelete
  29. பின்னூட்டங்களில் வாழ்த்திய சூரி சார், ஜீவி சார், அஷ்வின் ஜி,கோமதி அரசு மற்றும் கவிநயாவுக்கு நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி