ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(
நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.
कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥
வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே
(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)
ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.
புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”
கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது
ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது
ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே
யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.
कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥
கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்
[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]
தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !
அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே. (977)
உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே ( )
[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]
அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.
துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.
அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:
“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”.
பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.
இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.
மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!
ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு