“பகவான்! ஜனனக் கட்டுப்பாடு (birth control) பற்றிய தங்கள் கருத்து என்ன ?”
பதிலேதும் வராமல் போகவே கேள்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். பின்னரும் ஏதும் பதில் வரவில்லை. ஒரு வேளை தான் சரியாகச் சொல்லவில்லையோ என்று மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ஓய்ந்து போனார். அந்த அறையில் மீண்டும் அமைதி நிலவியது.
இப்போது ரமணரின் குரலில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது.
”உமக்கு மரணக் கட்டுப்பாடு ( death control) பற்றித் தெரியுமா ?”
[இரமணருடைய எதிர் கேள்வி ஆழமானது. மரணத்தை ஒழித்தால் பிறப்பும் கூட ஒழிந்து விடுமன்றோ !
‘கருப்படுத்தி என்னை எமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?
‘என்னை ஒரு கருப்பைக்குள் வைத்து பிறப்பு தந்து பின்னர் எமன் பிடித்துச் செல்லும் முன் நின் வடிவாய் உருசெய்து பிறப்பு இறப்பற்ற வீட்டுலகை பெற திருவருள் வருவது எப்போதோ’ என்று ஜனன மரணத்தை ஒழிக்கும் வகை வேண்டுகிறது பத்திரகிரியாரின் அருட்புலம்பல்]
மரணத்தை வெல்வது தானே ஆன்மீகத்தின் நோக்கம். இப்படி தனக்குள்ள பிரச்சனையை சிந்திப்பதை விட்டு உலகத்தைத் திருத்தும் கவலைகள் அர்த்தமற்றவை என்பதை பகவான் குறிப்பால் உணர்த்தினார்.
அன்பரிடமிருந்து பதில் வரவில்லை.
இப்படி யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்று புரியாமல் பல சமயங்களில் தடுமாற்றம் மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்போது தம்முடைய கேள்விகளாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.
தாம் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானத்தின் மேல் உள்ள அபார பற்றுதலும் பெருமையுமே இதற்கு முக்கிய காரணம். கபீர்தாஸருடைய காலத்திலும் அப்படிப் பட்டவர்கள் இருந்திருப்பார்கள் போலும் !
ज्ञानी से कहिये काह, कहत कबीर लजाये ।
अंधे आगे नाचते, कला अकारथ जाय ॥
ஞானிக்கு உரைப்பது மென்னே, கபீரும் நாணம் கொள்வனே
நாட்டியமோ அந்தகன் முன்னே, அதனால் ஆவதும் என்னே
மாற்று:
பண்டிதர் பாடம் கேட்டார், நாணம் கொண்டான் கபீரும்
அந்தகர் முன்னே ஆடற்கலை, வீணாய் போச்சுது பாரும்
ஞானி என்பதற்கு பொதுவாக முற்றும் அறிந்தவர் என்று பொருள் கொள்வோம். ஆனால் இங்கே சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர் என்ற பொருளில் வருகிறது. அடக்கமற்றவர்களாயின் அவர்களுக்கு எதை எடுத்துரைத்தாலும் எடுபடாது.
பிறவிக் குருடனுக்கு சித்திரக்கலையோ ஆடற்கலையைப் பற்றியோ சொல்லினால் எப்படி விளங்காதோ அது போல அஞ்ஞானிகளுக்கு ஞானிகளின் சமீபம் கிட்டினாலும் பயன் இருக்காது. இதை மாற்றுவதும் முடியாது.
சிவாய நம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் இல்லை என்பது ஔவையாரின் வாக்கு. சிந்திப்பதை விட்டு அறிஞர்கள் ஆராய்ச்சியில் இறங்கினால் என்னவாகும். பட்டினத்தார் சொல்கிறார்:-
நகார மகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
வகார யகாரம் என்பார் வகையறியார் பூரணமே
இறைவனின் திருநாமத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இயல்புகளைச் சொல்லி அவற்றின் மேன்மையை பல்வகையாய் விளக்குவார்கள் ஆனால் அதன் மூலம் உன்னை அடையும் வழியை மட்டும் அறியமாட்டார்களே என்று விசனப்படுகிறார் பட்டினத்து அடிகள்.
மாந்தோப்பில் நுழைந்து மரங்களின் உயரம், காய்களின் எண்ணிக்கை, இலைகளின் அளவு இப்படி பலப்பல கணிப்பில் ஈடுபட்டவர்களை விட ஒரு பழத்தைப் பறித்து சுவைப்பவன் புத்திசாலி என்று பரமஹம்ஸர் கூறுவாராம்
கபீர்தாஸர் குறிப்பிடும் அறிவுக் குருடர்கள் இவர்கள். இதற்கான தீர்வை ஏற்கனவே கபீர் சொல்லியிருக்கிறார்
செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே
இன்று சரசுவதி பூஜை. கிரந்தம் படிப்பது வீணே என்று சொல்ல என்னமோ போலிருக்கிறது. கபீர் சொல்ல வருவதும் பொருளறியாமல் செய்யப்படும் செயல்களைத்தான் வீண் என்கிறார்.
இதற்கு கவியரசர் கம்பனும் உடன்படுகிறார். அவளை அண்டினால் எது செய்ய வேண்டினும் அது சித்தியாகும், முக்தி உள்பட !
சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள், எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலா முறப் போதிக்கலாம், சொன்னதே துணிந்து
சாதிக்கலாம் மிக பேதிக்கலாம் முத்திதான் எய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லி பொன் தாளை அடைந்தவரே
யாவருக்கும் அன்னை சரசுவதியின் அருள் சித்திக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நவராத்திரி நல்வாழ்த்துகள்.
-----------------------------------------------
பலரும் விரும்பிய கட்டுரைத் தொகுப்பு -முதல் பாகம் -கபீரின் நிழலில்... என்ற பெயரில் வலையேற்றப்பட்டுள்ளது.
வேண்டுபவர் அதை Scribd வலைப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Kabirin_nizhalil
(இங்கேயே படிக்க விரும்புவர்கள் வலது பக்க மேல் மூலையில் Toggle Full screen மெனுக் குறியை பயன்படுத்தி படிக்கலாம். கூகிள் ரீடரில் இந்த விட்ஜெட் காண்பிக்கப்படுவதில்லை )
கீழே உள்ள இணப்பின் மூலமும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
![]() |
கபீரின் நிழலில்...... |
Hosted by eSnips |