Monday, July 12, 2010

உள்ளவர் சிவாலயம் செய்வர்

மந்திரி ஒருவர் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது. மதுவரசா என்னும் அந்தணரின் பெண்ணுக்கும், ஹரளய்யா என்னும் தாழ்குலத்தவர் மகனுக்கும் திருமணம். அவர்கள் இருவரும், மந்திரியார் நடத்தி வந்த “அனுபவ மண்டப”த்தின் உறுப்பினர்கள். அது சிவனடியார்களுக்கான அமைப்பு. அவர்கள் சிவசரணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அங்கே ஜாதி வேற்றுமைகள் இல்லை. யாவரும் தமக்கென ஒரு தொழில் செய்து பிழைக்கவேண்டும் ஜங்கமர்கள் எனப்படும் ஊரூராய் யாத்திரை செய்யும் சிவனடியார்கள் நலன் பேண வேண்டும். இறைவன் முன்பு யாவரும் ஒன்று என்னும் கொள்கையை ஏற்கும் எவரும் அதில் இணைந்து பணியாற்றலாம்.

இன்றைய நிலையாயிருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவமும் விளம்பரமும் வேறு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் மந்திரியோ அறிவிற் சிறந்தவர் மிக உயர்ந்த சிவனடியார். மன்னரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். போதாதற்கு அனுபவ மண்டபத்தின் செலவுகள் எதுவும் அரசாங்கத்தை எதிர்பார்த்தது அல்ல. அடியார்களின் உழைப்பில் வளர்ந்தது அது. ஆகையால் அது வரை எதிர்ப்புகளில் அதிக வலுவிருக்கவில்லை.

அந்த அமைப்பின் சட்டதிட்டங்கள்படி அந்தத் திருமணம் முழுவதுமாக ஏற்புடையதானது. ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு -முதன் முறையாக ஜாதிவிட்டு ஜாதி- திருமணம் நடந்த பொழுது அது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதில் மந்திரியாரின் எதிரிகளுக்கு பெரும்பங்கு இருந்தது. பலத்த வாத பிரதிவாதங்களுக்குப் பின் அரசன் மந்திரிக்கு அனுபவ மண்டபத்தைக் கலைத்துவிட்டு அரசாங்க அலுவல்களில் கவனம் செலுத்துமாறு ஆணயிட்டான். பதவிக்காக அலைபவரா மந்திரி? பதவியைத் துறந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து சிவசரணர்கள் துன்புறுத்தப்பட்டதும் கொல்லப்பட்டதும் பிஜாலா மன்னனின் ஆட்சிக்கு ஒரு பெரும் களங்கமாகும்.

மனம் உடைந்த மந்திரியார் 'கூடல சங்கம தேவா' நீயேத் துணை யென்று சிவனடியார்களோடு இணைந்து தன் கடைசி காலத்தை கழித்தார்.

கிருஷ்ணா நதியுடன் மலப்பிரபா நதி கூடுமிடம் கூடல சங்கமம்.

(படம் நன்றி : விக்கி பீடியா)

அந்த புரட்சிகரமான மந்திரியின் பெயர் கிராந்தி பஸவேசுவரா ! கி.பி.1132- 1196 (கிராந்தி என்றால் புரட்சி என்று பொருள்)

12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் சாளுக்கியர்கள் ஆட்சியில் பிஜாலா என்பது ஒரு குறுநில அரசு. அதன் தலைநகர் கல்யாண். அந்த சமஸ்தானத்தில் ஒரு மிகப்பெரும் ஆன்மீக ரீதியான சமூகப் புரட்சியை உண்டு பண்ணியவர் பஸவேசுவரர். மேற்குலத்தில் பிறந்திருப்பினும் தன் மனதுக்கு ஒவ்வாமல் போன வழி முறைகளைத் துறந்து பதினாறு வயதிலேயே சிவனடியார்கள் குழுமத்தில் சேர்ந்து குரு சங்கமேசுவரரின் உபதேசம் பெற்றவர். கூடல சங்கமத்தில் பலவருடங்கள் அவர்களுடனே இருந்து ஆன்மீக சாதனை செய்தவர். சிவனே எல்லாமுமாய்க் கண்டவர்.

அரச வாழ்வைத் துறந்து எவ்வகை நிதியமும் இல்லா சிவனடியாருடன் வாழ்வைக் கழித்த பஸவேசுவரர், கபீர்தாஸரின் ஒரு ஈரடியை நினைவூட்டுகிறார். 
 
राम जपत दरिद्रि भला, टूटी घर की छान । 
कंचन मन्दिर जारि दे, जहा न सतगुरु ज्ञान  

வறியவனின் இராமசெபம் நன்று, வசிப்பது(ம்) அவன் ஓட்டைக் குடிசையிலே எரித்தல் தகுமே பொன்மாளிகையும், தம்குரு மொழி செபிக்காது கழித்திடினே 

மாற்று 
இராமனை செபிக்கும் வறியவன் மேலாம், ஓட்டை குடிலேயவன்  வசிப்பிடமே 
எரித்தல் தகுமே  பொன்மாளிகை ஆயினும், குருவழி  நில்லார்தம் வசிப்பிடமே 

பொன்மாளிகை ஆயினும் எரித்து விடு என்று மிகவும் கடூரமாக சொல்லியிருக்கிறாரே என்று தோன்றலாம். ஒரு மாணவன் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளாது தப்பும் தவறுமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தால் அவன் ஆசிரியர் அவனை எப்படி கண்டிப்பார் ?.

“உன் ’நோட்’டை குப்பையில போட்டுக் கொளுத்து

சில ஆசிரியர்கள் வெளித்தோற்றத்திற்கு கண்டிப்பு மிக்கவர்களாகத் தோன்றினாலும் உள்ளே அன்பு தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

உண்மையை எவ்வளவு எடுத்துக் கூறினும் புரிந்து கொள்ளாத மனிதர் போக்கை கண்ட மன உளைச்சலில் கபீர்தாஸ் பொன் மாளிகையானாலும் எரித்து விடுஎன்று சொல்லியிருப்பதாக கொள்ளலாம். அன்புக்குக் குறைவில்லை, உளைச்சலின் வெளிப்பாடு. குருவின் தொடர்பு அல்லது அருள் இல்லாத இடம் பொன்மாளிகையாக இருந்தாலென்ன கோவிலாக இருந்தாலென்ன, அது பயனற்றதே. இதே கருத்தை திருநாவுக்கரசரும் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு 
வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர் செல்வம்
 மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே 
காந்தர் அல்லா ராகில் அங்கமெலாம் குறைந்த அழுகு 
தொழு நோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும் 
கங்கை வார் சடைக்கரந்தார்க் அன்பராகில் 
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரனிடம் நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் உண்டு. அவற்றை வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.(http://sivanarul-sivamayam.blogspot.com/). அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை சங்கநிதி பதுமநிதி என்னும் என்னும் பெருநிதிகள். பல கோடிக்கணக்கான பொன் மதிப்புப்பெற்றவை. அவைகள் கிடைக்கப்பெற்றாலும் மகாதேவருக்கு அவர் அடியவர் இல்லையென்றால் எமக்கு அது தேவையில்லை. அதைவிட இறந்த பசுத்தோலை உரித்துத் தின்னும் புலையரோ அல்லது தொழுநோய் பீடித்தவரானாலும் அவர்களுக்கு சிவனிடத்தில் அன்பு இருந்தால் அவர்களே எமது கடவுள் என்று திருத்தமாகக் கூறுகிறார் அப்பர் பெருமான். 

(கபீருடைய ஈரடிக்கு பொருத்தமான தமிழ் அருளாளர் பாடல் ஒன்றை சிந்தித்துக் கொண்டிருந்தபோது மேற்கண்டப் பாடல் மின்னஞ்சலில் ரத்னமாலைக் குழுமக் கட்டுரை ஒன்றில் வந்த போ்து அவனருள் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்ற வியப்பு ஏற்படுகிறது ) 

 அப்பர் சுவாமிகள் மற்றும் கபீரின் வாக்கை வாழ்ந்து காட்டியவர் பஸவேசுவரர். அடியார்களின் மகிமையை வாழ்நாளெல்லாம் போற்றி வளர்த்தவர். அவருடைய மிகப்பிரபலமானப் பாடல் ஒன்று


  
"உள்ளவரு ஷிவாலயவ மாடுவரு" .

 உள்ளவர்கள் சிவாலயம் செய்வார்கள்
என்னால் செய்ய முடிவதும் என்னே- ஏழைநான் 

என்னுடைய கால்களே தூண்கள் 
தேகமே கருவறை
சிரமே பொற்கலசமாகும் (ஐயா) 
  கூடல சங்கம தேவா கேளய்யா 
ஸ்தாவரத்திற்கு அழிவுண்டு 
ஜங்கமத்திற்கு அழிவில்லை !

(ஜங்கமம் என்பது ஒரு இடத்தில் நில்லாது சிவக்ஷேத்திரம் செல்லும் அடியார்களை குறிப்பது ) 
 என்னுடைய உடலே உனக்கு ஆலயம் என்று சொல்லியிருப்பது உள்ளம் பெருங்கோவில் ஊனடம்பு ஆலயம் என்கிற திருமூலர் பாடலையும் நினைவூட்டுகிறது. 

இறைவனுக்கு மனிதர்களின் பகட்டுத் தேவையில்லை. வைரமுடியோ, பொன்னால் வேய்ந்த ஓடுடைய கூரையோ கேட்கவில்லை. அவன் வேண்டுவதெல்லாம் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. அதனால் தானே மனதால் மிகவும் உழைத்து நீண்ட நாட்கள் கட்டிய பூசலாரின் திருக்கோவிலுக்கு முதலிடம் கொடுத்து தொண்டை மன்னன் கட்டிய கோவில் குடமுழுக்குக்கு வேறு ஒரு நாள் குறிக்குமாறு சொன்னான்.

நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த  

நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் ;நீயிங்கு 

ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் 

என்று கொன்றைவார் சடையார் 

 தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்

ஆம் பூசாலார் தம் உள்ளுக்குள்ளே சிவாலயம் செய்தார். உள்-அவரு சிவாலயவ மாடிதரு.(செய்தார்)என்று பசவேசுவரர் பாடலை சற்று மாற்றிப்பாடினாலும் வெகு பொருத்தமே.

கடவுளின் பக்தியில் தோய்ந்த மகான்கள் சொல்லும் யாவும் சத்தியமாய் நின்றுவிடுகின்றன.

பசவேசுவரைப் பற்றி மேலே தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

13 comments:

  1. வழக்கம்போல் அருமையான கட்டுரை. பஸவேசுவரர் பற்றி அறியத் தந்ததுக்கு நன்றி. சுட்டிக்கும் நன்றி.

    ReplyDelete
  2. நல்வரவு கீதா மேடம்,
    பஸவேசுவரர் பற்றி இன்னும் சொல்ல நினத்தேன். நீளம் காரணமாகக் குறைத்து விட்டேன். பின்னர் எப்போதாவது காண்போம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. அற்புதம். உங்கள் பதிவை படிப்பது ஒரு சிறந்த ஹரி கதா கேட்பது போல் உள்ளது. பசவேஸ்வரர் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி

    ReplyDelete
  4. அருமை ஐயா, தங்களைபோல் ஒரு அடியாரின் புகழை அழகாக எழுதிவிட வேண்டும் என்று எனக்கு ஆசை தான், ஆனால் அனுபவக் குறைவு.

    அசத்தலான நேர்த்தி !!

    ReplyDelete
  5. வருக bandhu,

    //பசவேஸ்வரர் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்..//

    அவருடைய சில நல்ல பாடல்களை சமயம் வரும்போது பதிகிறேன்.

    அவரது வாழ்க்கை வரலாறை இடுகையில் இருக்கும் இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    தங்களுக்கு பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி

    ReplyDelete
  6. வாருங்கள் தேவன்,

    //...எனக்கு ஆசை தான், ஆனால் அனுபவக் குறைவு//

    ஆர்வம் இருக்கும் பொழுது அனுபவமும் வந்துவிடும். :)

    //அசத்தலான நேர்த்தி !!//

    பாராட்டுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. இந்தக் கட்டுரை அருமையான அனுபவமாக அமைந்தது, கபீரன்ப!
    பஸவேசுவரர் பற்றி சொல்ல ஆரம்பித்து எவ்வளவு செய்திகள்! அத்தனையும் அற்புதம். தகுந்த இடத்தில் பூசலாரும் நினைவில் நின்று சேர்ந்து கொண்டார்.

    //கூடல் சங்கம தேவா கேளய்யா..//

    தமிழகத்திலும் மூன்று ஆறுகள் கூடும் முக்கூடல் சங்கமம் ஒன்று உண்டு;
    திரிவேணி சங்கமம் மாதிரி.

    தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியிலுள்ள கூடுதுறை இது. காவிரி, பவானி, புலனுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடம் கூடுதுறை.
    படித்துறைக்கு பக்கத்தில் சங்கமேஸ்வரருக்கு ஆலயம் உள்ளது.
    அம்மன் பெயர் வேதநாயகி அம்மன்.
    அருணகிரி நாதர், திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு. மிக்க நன்றி. :)

    ReplyDelete
  9. வருக ஜீவி ஐயா,

    //தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியிலுள்ள கூடுதுறை இது. காவிரி, பவானி, புலனுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடம் கூடுதுறை//

    அந்த கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டே சென்றிருக்கிறேன். நேரமின்மை காரணமாக. எப்போதாவது வருமோ என்னவோ ? :)

    அனுபவித்து வாசித்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  10. நல்வரவு ராதா அவர்களே,

    //அருமையான பதிவு. மிக்க நன்றி. //

    நன்றி சொல்வது என்கடன். வாசித்து கருத்து சொல்வது வாசகர் கடன். :)))

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. //राम जपत दरिद्रि भला, टूटी घर की छान ।
    कंचन मन्दिर जारि दे, जहा न सतगुरु ज्ञान ॥//

    இந்த தோஹா நான் படித்தது இதுவோ !! நினைவு இல்லை. அல்லது இது போலவும் ஒரு தோஹா இருக்கிறதோ ?

    राम् जपत दालॆद भला, टूटी घर् की छानि
    ऊनचे मन्दिर् जालि दे, जहान् भगति न सारन्गपानि


    இரண்டாவது வரி சொல்வது:
    எங்கு தனுர்தாரியான ராமனின் பக்தி பரவி இருக்கவில்லையோ , அப்படிப்பட்ட உயர்ந்த கோவில்களையும் ( மந்திர் என்பதற்கு பொருள் மஹல் எனக் கொண்டால், மாளிகைகளையும் ) எரித்து விடுங்கள்.

    ராம ஜெபம் செய்கையில் ஏழ்மையும் நன்றே. வசிக்கும் குடிசையின் கூரை இடிந்து இருந்தாலும் என்ன ?

    அற்புதமான தோஹாவை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.

    இன்னொன்று:
    நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு நான் 1985 வருடம் சென்றிருக்கிறேன். ஆயினும் இந்த விவரங்கள் அறியவில்லை.
    பஸவீஸ்வரர் பற்றிய நான் இதுவரை படித்தறியா தகவல்களை இன்று அறிந்தேன். நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  12. உள்ளவரு ஷிவாலய மாடுரு என்னும் பாடல் மதுவந்தி ராகத்தில்.
    மிகவும் ரசித்தேன். இப்பாடலை,
    மதுவந்தி ராக லக்ஷணங்கள், மற்றும் ஏனைய பாடல்களுடன்,
    எனது வலைத் தளம்
    http://movieraghas.blogspot.com
    ல் கேட்கலாம். பார்ககலாம்.
    கூடிய விரைவில்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  13. வருக சுப்புரத்தினம் ஐயா,

    பஸவேசுவரரின் பாடலைத் தேடிக் கொடுத்ததற்கு எல்லோர் சார்பிலும் நன்றி. என்னிடம் இது ஹம்ஸத்வனி ராகத்தில் H K. நாராயணா அவர்கள் குரலில் உள்ளது, நேரம் இன்மைக் காரணமாக ஒலிநாடாவிலிருந்து மாற்றிக் கொடுக்க முடியவில்லை. எப்போதாவது செய்தால் தெரிவிக்கிறேன்.

    பல கபீர் தோஹாக்கள் ஒரே கருத்தை சிற்சில வார்த்தை வேறுபாடுகளுடன் சொல்வதுண்டு. சிலர் சிலவற்றை காலப்போக்கில் ஏற்பட்ட திரிபு என்றும் சொல்வர்.

    சாரங்கபாணி என்னும் வகையில் ராமனை கபீர் வேறு எங்காவது குறிப்பிட்டு இருக்கிறாரா என்பது தெரியவில்லை. தேடிப்பார்த்துச் சொல்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி