Saturday, July 24, 2021

சத்குருவிடம் சரணாகதி

 இன்று குரு பூர்ணிமை. (24 ஜூலை 2021)

குருவின் பெருமைகளை போற்றாத ஞானிகளே இருக்க முடியாது. கபீரின் குருபக்தியையையும்  நாம் பல கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். 

இன்றைக்கும்    ஒரு ஈரடியில்  அவர் கூறுவதைப் பார்ப்போம்.

यह तन विष की बेलरी , गुरु अमृत की खान  |

सीस दिये जो गुर मिलै, तो भी सस्ता जान     ||

இந்த உடல் ஒரு விஷப்பை. இதனுள்  மதம், மாச்சரியம், காமம், லோபம்  போன்ற  நச்சுப் பொருட்கள் நிரம்பி உள்ளன.  ஆனால் ஞானியோ  ஒரு அமிர்த சுரங்கம்.  அவர் அந்த விஷங்களையெல்லாம்  எல்லாம் நீக்கக் கூடிய மருந்து வைத்திருக்கிறார். அவர் மட்டும் அருள் செய்வாரானால் உன்னுடைய உயிரையும்  (தலையையும்) அவரிடம் ஒப்படைத்து விடு. அப்படி ஒரு குரு கிடைப்பதற்கு நீ கொடுக்கும்  அந்த விலை கூட மிக மிக மலிவே என்பதை உணர்ந்து கொள் என்கிறார், கபீர்தாஸ். 

கபீர்தாசரைப் போலவே நாமசெபத்தின்  பெருமையை  மகாராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் எடுத்துச் சொல்லி  மக்களை நல்வழி படுத்திய  பிரசித்தமான ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தவர்  ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம சைதன்யர். அவர்  கோண்டாவாலே என்ற ஊரை சேர்ந்தவராதலால் கோண்டாவாலேகர்  என்றும் அறியப்படுகிறார். 

அவரைப்பற்றி  மேலும் அறிய  இணைய தளத்தின்  இணைப்பில்  காணலாம் 

சுவாமி பிரம்ம சைதன்ய மஹராஜ் -கோண்டாவாலேகர்  (19-02-1845 ; 23-12-1913)   அவருடைய  சொற்பொழிவு ள் அடங்கிய புத்தகத்திலிருந்து  இன்றைய தேதியில்  தரப்பட்டிருக்கும்  கட்டுரையின்  தமிழாக்கம் . இதை இந்த வருடத்து குரு வாணியாகக் கொள்வோம்.

நிபந்தனையற்ற சரணாகதி

      வாழ்க்கை நடத்துவதற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் யாராவது தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் வருமானம் உள்ளது என்று சொன்னது உண்டா ?  உண்மையில் கிடையாது.  நான் கேட்பதெல்லாம் முடியாத இலட்சியத்திற்காக கஷ்டப்படுபவர்கள், கடவுளுக்காக -ஆனந்த வாரியாக திகழ்பவரை - அடைய ஏன் கஷ்டப்படக்கூடாது?

 தபஸ்விகள் சொன்ன மார்க்கத்தில்  ஒரு சரியான முயற்சி செய்து பார்.  ஒரு சத்குருவை கண்டு திடமான நம்பிக்கையுடன் அவர் சொல்லும் சாதனையை செய்.  சத்குருவை ஸ்தூல  வடிவில் சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  குருவும் கடவுளும் வேறல்ல.  அவர் சொல்லி வைத்திருக்கும் சாதனை பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்து வர வேண்டும். அது கண்டிப்பாக கடவுளிடம் இட்டுச் செல்லும். எந்த சத்குருவும்  சொல்லும் ஒரே பயிற்சி நாமஸ்மரணை ஆகும். அதை முழு மனத்துடன் விடாது பழக வேண்டும். எவர் உண்மையாக முயற்சிக்கிறாரோ அவருக்கு முன்னேற படிகள் தாமாக கைகூடும். உண்மையான சாதகன் கர்த்தா பாவனை  இல்லாமல் சத்குருவிடம் முழு சரணாகதி அடைந்து சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பான்.

இறைவனுக்காக தணியாத ஆர்வம் இருப்பது மிகப் பெரிய கொடுப்பினை. அப்பேர்ப்பட்ட உண்மையான சாதகனை காணும் சத்குரு பெரு மகிழ்ச்சி அடைவார். ஸ்ரீராமச்சந்திரர் வசிஷ்டரை அணுகியபோது அத்தகைய மகிழ்ச்சி  வசிஷ்டருக்கு ஏற்பட்டது.

எல்லா தபஸ்விகளும் தத்தம் குரு சொன்ன வழியை கடைபிடித்து தமது இஷ்ட தேவதா வடிவங்களில் சாட்சாத்காரம் அடைந்தவர்களே. அதனால் நாமும் நாமஸ்மரணையில் ஆழ்ந்து விட வேண்டும்.  தன் குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும்போது விளையாடி மகிழும் தந்தை அது அழ ஆரம்பிக்கும் போது அதன் தாயிடம் ஒப்படைக்கிறான். அவளும் பல விதமாக அதை சமாதானப்படுத்தி அதன் மனக்குறையை போக்குகிறார். தபஸ்விகள் தாயைப் போலே. கடவுளும் தந்தையைப் போல் நடந்து கொள்கிறார்.

பனிக்கட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து விடு பின் எஞ்சுவது எதுவுமில்லை. தபஸ்விகள் அன்பே வடிவானவர்கள். கடவுளின் பிரேமை வடிவே அவர்கள். அவர்களுடன் சத்சங்கம் கொள்வதே முக்திக்கான ராஜபாட்டை. அவர்கள் சொற்படி நடப்பதே சத்சங்கம் என்பதின் முழு பொருளாகும். அதன் பயன் என்னவென்றால் பக்தனின் மனது பரிசுத்தம் ஆகிவிடும்.

---------------------------------------------------------------------------------------
 இப்போது  கபீரின்  ஈரடியை தமிழில்  காண்போம் 

நச்சுப்  பையாம்  இத்தேகம் , வற்றா அமிழ்தமே  குருகாண் |
சிரம் தருவதால் குரு கிட்டின் , அவ்விலையும்  மலிவே  காண் ||

கபீர், குருவின் ஞான இருப்பை ஒரு சுரங்கத்திற்கு உவமையாக்கியிருக்கிறார் . தமிழாக்கத்தில்  அதை வற்றாத ஊற்றுக்கு ஒப்பிட்டிருக்கிறேன். 

சத்சங்கத்தை  ஒரு சாயி பஜனுடன் நிறைவு செய்வோம் . வாசகர்கள் அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்  என்று பிரார்த்திக்கிறேன்

 

4 comments:

  1. குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும்போது விளையாடி மகிழும் தந்தை அது அழ ஆரம்பிக்கும் போது அதன் தாயிடம் ஒப்படைக்கிறான். அவளும் பல விதமாக அதை சமாதானப்படுத்தி அதன் மனக்குறையை போக்குகிறார். தபஸ்விகள் தாயைப் போலே. கடவுளும் தந்தையைப் போல் நடந்து கொள்கிறார்.//

    மிக அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்
    அருமையான பதிவு, அருமையான பாடல்.
    நன்றி நன்றி.

    ReplyDelete
  2. நச்சுப் பையாம் இத்தேகம் , வற்றா அமிழ்தமே குருகாண் |
    சிரம் தருவதால் குரு கிட்டின் , அவ்விலையும் மலிவே காண் ||

    கபீர், குருவின் ஞான இருப்பை ஒரு சுரங்கத்திற்கு உவமையாக்கியிருக்கிறார் . தமிழாக்கத்தில் அதை வற்றாத ஊற்றுக்கு ஒப்பிட்டிருக்கிறேன்.//

    அருமையான விளக்கம் .

    நன்றி.

    ReplyDelete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  4. குருவின் ஞான இருப்பு ஒர் சுரங்கம்

    அருமை,ஆனந்தம் நன்றி சார் 🙏

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி