Showing posts with label கோண்டாவாலேகர். Show all posts
Showing posts with label கோண்டாவாலேகர். Show all posts

Wednesday, July 02, 2025

சத்குருவிடம் சரணாகதி (2)

 இந்த தலைப்பில் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். இந்தப்பதிவிலும் அதே குருவைப்பற்றி பேசப்போகிறோம். சமீபத்தில் அவரது சொற்பொழிவுகளின்  மொழி பெயர்ப்பை தட்டச்சு செய்து நிறைவு செய்யும் வேளையில்  இதை இந்த ஆண்டு குரு பூர்ணிமைக்கு  (ஜுலை 10) சமர்பணம் செய்ய விழைகிறேன்.

சற்று விவரமாக சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ பிரம்ம சைதன்ய மஹராஜரைப் பற்றித்  தெரிந்து கொள்ள வேண்டும். அவர் மஹாராஷ்ட்ராவில் சதாரா ஜில்லாவில்  கோண்டாவாலே  என்ற ஊரில் 19 நூற்றாண்டில் வசித்த மகான். அதனால் அவரை கோண்டாவாலேகர் என்றும் அழைப்பர்.

அவர் வாழ்ந்த காலம் 19/2/1845 - 22/12/1913  

எளிய நாமசெபத்தின் அருமையை கபீர் போலவே மீண்டும் மீண்டும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை ராம நாமத்தில் ஈடுபடுத்தி ஒரு ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.

அவருடைய சொற்பொழிவுகளை தொகுத்து தினசரி ஒரு பக்கம் என்னும் வகையில்-பாராயணத்திற்கும் சத்சங்கத்திற்கும் ஏற்ற முறையில்-கோண்டாவாலே சமஸ்தானம் புத்தகமாக குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.  ஒரு வருடம் முழுவதும் படிக்கும் வகையில் ஜனவரி -1 முதல் டிசம்பர்-31 வரை  தேதியிட்டு ஒவ்வொரு நாளுக்கும் தலைப்பு கொடுத்து மிக அழகாக தொகுத்து இருக்கிறார்கள்.

அதனை 2017 ஆண்டு ஒவ்வொரு தினமும் அன்றைய தினத்திற்கான உரையை தமிழில் மொழி பெயர்த்து, பயன்படுத்துவாரின்றி கிடந்த பழைய டையரி ஒன்றில் எழுதி வந்தேன். இதை இரண்டு காரணங்களுக்காக தொடர்ந்து செய்தேன். மொழிபெயர்க்கும் போது ஒரு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டியிருக்கிறது. அதனால் கருத்தாழம் மனதில் பதிந்து, ஒருவகையில் அந்த மகானுடன் சத்சங்கம் செய்ததாகிறது. இரண்டாவது எழுதுவதால் கையில் எழுதும் பழக்கமும் தமிழும் மறக்காமல் இருக்கிறது. புது புது தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

 குரு அருளால் அந்த வேலையை செய்து முடிக்க முடிந்தது. அதன் பின்னர் அந்த கையெழுத்துப் பிரதியை கோண்டாவாலேக்கு எடுத்துச் சென்று அவர் வாழ்ந்த சமஸ்தானத்தில் சமர்பணம் செய்வது பொருத்தமாகும் என்று தோன்றியது. ஆனால் இன்று வரை அதற்கான வேளை வரவில்லை.

ஸ்ரீ பிரம்மசைதன்யரை போலவே நாமசெபத்தின் பெருமையை வளர்த்த பப்பா ராமதாஸ் அவர்களின் காஸர்கோடு ஆனந்தா ஆசிரமத்திற்கு எடுத்து சென்று அவரது காலடிகளில் சமர்ப்பித்து ஓரளவு ஆறுதல் அடைந்தேன். (விசிறி சாமியார் என அன்புடன் அழைக்கப்பெற்ற யோகி ராம்சூரத் குமார் அவர்களின் குரு பப்பா ராமதாஸ் என்பதையும் இங்கே நினைவு கூர்வோம்).  

சிறிது காலம் அந்த டையரி அப்படியே இருந்தது. பக்கம் பக்கமாக (400 பக்கங்கள்) தட்டச்சு செய்வதற்கு மிக மலைப்பாக இருந்தது.

2022-ல்  Samsung drawing pad ஒன்றை வரவழைத்தேன். முக்கியமாக டிஜிடல் வரைபடத்திற்கு ஏதுவாக (கையடக்கமாக) இருக்கும் என்பது என் நோக்கமாக இருந்தது.  அதை பயிற்சி செய்த அதே காலத்தில் இது voice typing செய்வதற்கும் உபயோகமாக இருப்பதைக் கண்டு கொண்டேன்.  தமிழில் மிகச் சுலபமாக ஐந்தே நிமிடங்களில் ஒரு பக்கத்தை முடிக்க முடிந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் பிழைத் திருத்தம் செய்ய வேண்டியதாயிற்று. இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு செய்யலாம். இப்படியாகநேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அத்தனைப் பக்கங்களையும் -உரக்க வாசித்து -தட்டச்சு செய்து நேற்று முடித்தேன். இனிமேற்கொண்டு செய்ய வேண்டியதற்கும் அந்த சத்குருவே வழிகாட்டுவார் என் நம்புகிறேன்.  இதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் நம்முடைய முயற்சிகள் எதுவும் வீண்போகாமல் அதற்குரிய நேரத்தில் தகுந்த வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.  அதையே குரு அருள் என்று பெரியவர்கள் சொல்கின்றனர். 

சுயபுராணத்திற்கு மன்னிக்கவும். இப்போது பிரம்ம சைதன்ய மஹாராஜ் பற்றி சிந்திப்போம்.

 “யாரைப்பற்றியும் நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை. ஏனென்றால் மனிதனாகப் பிறந்த எவரும் ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் கடவுளை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் “

என்று ஒரு குரு பூர்ணிமை உரையில் கோண்டாவாலேகர் கூறியிருப்பதன் மூலம் எப்படி மகான்கள் அனைவரையும் சமபாவத்துடன் நடத்துகின்றனர் என்பது புரிகிறது.

இந்த மொழிபெயர்ப்பின் போது பல சமயங்களில் அவர் குரு மகிமையை கூறும் போதும் நாமசெபத்தின் பெருமையை சொல்லும் போதும் கபீர்தாஸரின் கருத்துகளை எதிரொலிப்பது நன்றாகவே புரிந்தது.  கபீரை நினைவு படுத்தும் வகையில் அவருடைய  டிசம்பர் 31ஆம் தேதி உரையில் கீழே உள்ள வரிகள்  முடிவுரையாக வந்தது.

 “எப்படி தன்னுடைய கன்று செல்லும் இடத்திற்கெல்லாம் தாய் பசு செல்லுமோ அப்படி குருவானவர், நாம செபத்தில் தோய்ந்த பக்தர்களை பின் தொடருகின்றார்.”

நீதி வெண்பா பாடல்  ஒன்றில் இதே கருத்து வெளிப்பட்டு இருப்பதை ஏற்கனவே (2008-ல்) கண்டிருக்கிறோம். ( கன்றைச் சுற்றும் பசு) 

அதையே கபீர்தாஸரும் சொல்லுகிறார் :

கபீர் மனது நிர்மலமானது தூய கங்கை நீர் அன்னே

கபீர் கபீரென்றே ஹரி குழைவான் இவன் பின்னே பின்னே

மனித உடல் எடுத்து குருவாக வந்து  கடவுளை காட்டுவதால் குருவும் இறைவனும் ஒன்றே என்பதை எல்லா மஹான்களும் சொல்லுகிறார்கள்.

அப்படி ஹரி ( அல்லது குரு ) தன் பக்தனின் பின்னே சுற்றுவதற்கு காரணம் என்ன?  பக்தன் நாமசெபத்தை விடாமல் செய்யும் போது அது மனதை பரிசுத்தமாக்குகிறது. தூய மனமே இறைவனின் குடியிருப்பு. இதையும் கோண்டாவாலேகார் சொல்லுகிறார். அவருடைய மொழியிலேயே காண்போம்.


( click the picture to see larger one)

இறைவனின் நாமஸ்மரணத்தை விடாமல் பிடித்துக் கொள்வதே கலியுகத்திற்கான முக்கிய, மிக எளிய சாதனம் என்பதை காலங்காலமாக எல்லா மஹான்களும் சொல்லி வருகின்றனர். வருகின்ற  ஜுலை 10 ஆம் தேதி குரு பூர்ணிமை.  அனைவரும் குருவின் அருளுக்காக நாம செபத்தை -அவரவர்க்கு பிடித்த கடவுளின் பெயரை- பிடித்துக் கொண்டு முயற்சி செய்வோம். அந்த முயற்சி இல்லாமல் தகுதி வராது. அருளுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வதே முதற்படி.  குரு கடாக்ஷம் பரிபூர்ணம்.

ஸ்ரீ பிரம்ம சைதன்ய மஹராஜ்  சமஸ்தான வலைத்தளத்தில் அவரைப்பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு : கபீரின் கனிமொழிகள் (2008) கட்டுரைகள் புத்தக வடிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையே அச்சிடப்பட்டுள்ளது. தங்களுடைய சத்சங்கங்களில் உதவும் என்று நினைப்பவர்களும், மின் வடிவில் தேடி படிக்க இயலாதவர்களுக்கும்  கீழே உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டால்  இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கிறேன். இது விற்பனைக்கு அல்ல . 184 பக்கங்கள் கொண்டது.

தொடர்புக்கு :  ஒன்பது  நான்கு  எட்டு  பூஜ்யம்  நான்கு  நான்கு  மூன்று  பூஜ்யம் ஏழு  பூஜ்யம்

Saturday, July 24, 2021

சத்குருவிடம் சரணாகதி

 இன்று குரு பூர்ணிமை. (24 ஜூலை 2021)

குருவின் பெருமைகளை போற்றாத ஞானிகளே இருக்க முடியாது. கபீரின் குருபக்தியையையும்  நாம் பல கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். 

இன்றைக்கும்    ஒரு ஈரடியில்  அவர் கூறுவதைப் பார்ப்போம்.

यह तन विष की बेलरी , गुरु अमृत की खान  |

सीस दिये जो गुर मिलै, तो भी सस्ता जान     ||

இந்த உடல் ஒரு விஷப்பை. இதனுள்  மதம், மாச்சரியம், காமம், லோபம்  போன்ற  நச்சுப் பொருட்கள் நிரம்பி உள்ளன.  ஆனால் ஞானியோ  ஒரு அமிர்த சுரங்கம்.  அவர் அந்த விஷங்களையெல்லாம்  எல்லாம் நீக்கக் கூடிய மருந்து வைத்திருக்கிறார். அவர் மட்டும் அருள் செய்வாரானால் உன்னுடைய உயிரையும்  (தலையையும்) அவரிடம் ஒப்படைத்து விடு. அப்படி ஒரு குரு கிடைப்பதற்கு நீ கொடுக்கும்  அந்த விலை கூட மிக மிக மலிவே என்பதை உணர்ந்து கொள் என்கிறார், கபீர்தாஸ். 

கபீர்தாசரைப் போலவே நாமசெபத்தின்  பெருமையை  மகாராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் எடுத்துச் சொல்லி  மக்களை நல்வழி படுத்திய  பிரசித்தமான ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தவர்  ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம சைதன்யர். அவர்  கோண்டாவாலே என்ற ஊரை சேர்ந்தவராதலால் கோண்டாவாலேகர்  என்றும் அறியப்படுகிறார். 

அவரைப்பற்றி  மேலும் அறிய  இணைய தளத்தின்  இணைப்பில்  காணலாம் 

சுவாமி பிரம்ம சைதன்ய மஹராஜ் -கோண்டாவாலேகர்  (19-02-1845 ; 23-12-1913)   அவருடைய  சொற்பொழிவு ள் அடங்கிய புத்தகத்திலிருந்து  இன்றைய தேதியில்  தரப்பட்டிருக்கும்  கட்டுரையின்  தமிழாக்கம் . இதை இந்த வருடத்து குரு வாணியாகக் கொள்வோம்.

நிபந்தனையற்ற சரணாகதி

      வாழ்க்கை நடத்துவதற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் யாராவது தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் வருமானம் உள்ளது என்று சொன்னது உண்டா ?  உண்மையில் கிடையாது.  நான் கேட்பதெல்லாம் முடியாத இலட்சியத்திற்காக கஷ்டப்படுபவர்கள், கடவுளுக்காக -ஆனந்த வாரியாக திகழ்பவரை - அடைய ஏன் கஷ்டப்படக்கூடாது?

 தபஸ்விகள் சொன்ன மார்க்கத்தில்  ஒரு சரியான முயற்சி செய்து பார்.  ஒரு சத்குருவை கண்டு திடமான நம்பிக்கையுடன் அவர் சொல்லும் சாதனையை செய்.  சத்குருவை ஸ்தூல  வடிவில் சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  குருவும் கடவுளும் வேறல்ல.  அவர் சொல்லி வைத்திருக்கும் சாதனை பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்து வர வேண்டும். அது கண்டிப்பாக கடவுளிடம் இட்டுச் செல்லும். எந்த சத்குருவும்  சொல்லும் ஒரே பயிற்சி நாமஸ்மரணை ஆகும். அதை முழு மனத்துடன் விடாது பழக வேண்டும். எவர் உண்மையாக முயற்சிக்கிறாரோ அவருக்கு முன்னேற படிகள் தாமாக கைகூடும். உண்மையான சாதகன் கர்த்தா பாவனை  இல்லாமல் சத்குருவிடம் முழு சரணாகதி அடைந்து சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பான்.

இறைவனுக்காக தணியாத ஆர்வம் இருப்பது மிகப் பெரிய கொடுப்பினை. அப்பேர்ப்பட்ட உண்மையான சாதகனை காணும் சத்குரு பெரு மகிழ்ச்சி அடைவார். ஸ்ரீராமச்சந்திரர் வசிஷ்டரை அணுகியபோது அத்தகைய மகிழ்ச்சி  வசிஷ்டருக்கு ஏற்பட்டது.

எல்லா தபஸ்விகளும் தத்தம் குரு சொன்ன வழியை கடைபிடித்து தமது இஷ்ட தேவதா வடிவங்களில் சாட்சாத்காரம் அடைந்தவர்களே. அதனால் நாமும் நாமஸ்மரணையில் ஆழ்ந்து விட வேண்டும்.  தன் குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும்போது விளையாடி மகிழும் தந்தை அது அழ ஆரம்பிக்கும் போது அதன் தாயிடம் ஒப்படைக்கிறான். அவளும் பல விதமாக அதை சமாதானப்படுத்தி அதன் மனக்குறையை போக்குகிறார். தபஸ்விகள் தாயைப் போலே. கடவுளும் தந்தையைப் போல் நடந்து கொள்கிறார்.

பனிக்கட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து விடு பின் எஞ்சுவது எதுவுமில்லை. தபஸ்விகள் அன்பே வடிவானவர்கள். கடவுளின் பிரேமை வடிவே அவர்கள். அவர்களுடன் சத்சங்கம் கொள்வதே முக்திக்கான ராஜபாட்டை. அவர்கள் சொற்படி நடப்பதே சத்சங்கம் என்பதின் முழு பொருளாகும். அதன் பயன் என்னவென்றால் பக்தனின் மனது பரிசுத்தம் ஆகிவிடும்.

---------------------------------------------------------------------------------------
 இப்போது  கபீரின்  ஈரடியை தமிழில்  காண்போம் 

நச்சுப்  பையாம்  இத்தேகம் , வற்றா அமிழ்தமே  குருகாண் |
சிரம் தருவதால் குரு கிட்டின் , அவ்விலையும்  மலிவே  காண் ||

கபீர், குருவின் ஞான இருப்பை ஒரு சுரங்கத்திற்கு உவமையாக்கியிருக்கிறார் . தமிழாக்கத்தில்  அதை வற்றாத ஊற்றுக்கு ஒப்பிட்டிருக்கிறேன். 

சத்சங்கத்தை  ஒரு சாயி பஜனுடன் நிறைவு செய்வோம் . வாசகர்கள் அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்  என்று பிரார்த்திக்கிறேன்