Showing posts with label அலெக்ஸாண்டர். Show all posts
Showing posts with label அலெக்ஸாண்டர். Show all posts

Friday, December 05, 2008

மரணமில்லா பெரு வாழ்வு

இந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான்.

தனக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற அவனை அந்த சாது ’உன் வழியே நீ போ’ என்று சர்வ சாதாரணமாகக் கூறியதைக் கேட்டதும் கோபத்துடன் வாளை உறுவி அவரை கொல்ல எத்தனித்தான். அவரோ எவ்வித சலனமும் இல்லாமல் “எனக்கு மரணம் இல்லை.நான் ஆத்மாவில் உறைபவன்” என்று பதிலுரைத்தார். அவரது தன்னம்பிக்கையும் பயமற்ற நிலையும் மாவீரனுடைய கோபத்தையும் பணிய வைத்தது.

தக்ஷசீலத்தின் மன்னன் போரஸ்-ஸுடன் நடந்த போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அலெக்ஸாண்டரின் படைபலம் வெகுவாக குன்றி விட்டிருந்தது. மாஸிடோனியாவிலிருந்த கிளம்பிய படையில் கால் பாகமே எஞ்சியிருந்தது. அவனுக்கு மிகவும் அத்யந்தமாக இருந்த குதிரையும் இறந்து விட்டது. தன் உயிர் நண்பன் ஒருவனை இழந்தது போல் துக்கம் அவனை வாட்டியது. எல்லோருடைய வற்புறுத்தலின் பேரில் படைகளை திருப்பினான் அலெக்ஸாண்டர்.

வழியில் பெர்ஷிய மன்னன் சமாதியிருந்த நினைவு மண்டபத்தைக் கடக்க நேர்ந்தது. அதிலிருந்த வாசகம்;

“நான் தான் சைரஸ்.இந்த பெரும் பெர்ஷிய ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவன். நீங்கள் யாராயிருப்பினும்,எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இதோ,என்னை மூடியிருக்கும் இந்த மண்ணை மட்டுமாவது எனக்காக விட்டு வையுங்கள் “

அரசும் புகழும் எவ்வளவு நிலையற்றது என்பதை அறிந்த அலெக்ஸாண்டர் மனம் மிகவும் கலங்கியது.

அந்த தினங்களில் இந்தியாவிலிருந்து அலெக்ஸாந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பல அறிஞர்களும் அவனுடன் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் (அவர் பெயரை Calnus-என்கிறது ஆங்கில குறிப்பு) தன் இறுதி தினம் வந்ததைப் புரிந்து கொண்டு ஒரு சிதையை மூட்டச் சொன்னார். தனக்குரிய இறுதி சடங்குகளை தானே செய்து தன் கிரேக்க நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “மன்னனிடம் சொல்லுங்கள்.விரைவிலேயே பாபிலோனில் சந்திப்போம்” என்று அவர்களிடம் சொல்லி அமைதியாக சிதையில் அமர்ந்து நெருப்போடு கலந்து போனார்.

பலமாதங்கள் தொடர்ந்த பயணத்தில் மேன்மேலும் துர்சகுனங்கள் காணப்பட்டன. முன் கோபத்தால் அலெக்ஸாண்டர் தன் நெருங்கிய நண்பனையே மதியிழந்து கொன்றுவிட்டான். அதை நினைத்து வருந்தி நாளெல்லாம் உணவும் நீரும் இன்றி அழுது கொண்டிருந்தான்.

எப்போதுமே வெற்றிகளுக்கு நாயகனாக இருப்பினும் அலெக்ஸாண்டர் மனம் துன்பத்தால் வாடியது. அளவுக்கு அதிகமாகக் குடித்தான். பாபிலோனை அடைந்தபோது அவனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டது. பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வைத்தியங்கள் பலனளிக்காமல் கி.மு 326 ஜூன் 10ஆம் தேதி அவன் மரணமடைந்தான்.

பஞ்சாப்-சாதுவின் தீர்க்கமும், சைரஸ்ஸின் வாசகமும், சிதை புகுந்த அறிஞனின் அமைதியான மரண வரவேற்பும், நண்பனைக் கொன்றதும் அவனுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னுடைய சவ அடக்கத்தின் போது சவப்பெட்டிக்கு வெளியே கைகள் இரண்டும் ஆகாயத்தை பார்த்தவாறு வெளியே தெரியட்டும் என்றும் “இந்த மாவீரன் கடைசியில் கொண்டு சென்றது எதுவும் இல்லை என்பதை யாவரும் அறிந்து கொள்ளட்டும்” என்றும் சொல்லியிருந்தானாம் அலெக்ஸாண்டர்.

சைரஸ்ஸைப் போலவும் அலெக்ஸாண்டரைப் போலவும் வந்து சென்றவர்கள் எத்தனையோ பேர். மரண தேவனின் பிடியிலிருந்து தப்பியவர் எவருமில்லை.

மனிதப்பிறவி தரப்பட்டிருகும் நோக்கத்தை மறந்து வாழ்நாளில் அவர்கள் போடுகின்ற ஆட்டம் ஞானிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. கபீரின் வரிகளிலே சொல்வதானால்,

चहूँ दिस ठाढ़े सूरमा,हाथ लिये तलवार ।
सबही यह तन देखता, काल ले गया मार ॥


நாற்புரம் காத்தனர் வீரர், கையில் ஏந்திய வாளொடு
பார்த்து நின்றனர் பாரோர்,பிராணன் போனது நமனொடு

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி.

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)

மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு உழக்கு அன்னம்,சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே. மேலும் சொல்கிறார் ஔவையார்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். (நல்வழி -15)

உபாயம் இதுவே மதியாகும்! எதுவே? சிவாய என்று சிந்தித்திருப்பதே அறிவுள்ள செயலாகும். விதியை மாற்ற நினைக்கும் எந்த முயற்சியிலும் ’விதியே மதியாகிவிடும்’. அதாவது விதியினுடைய வழியே ஓங்கி நிற்கும். இதை விளக்கும் ஒரு சுஃபி கதை.

காலிஃப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் போது மரணதேவனின் தூதன் நின்றிருந்தான். “உனக்கு என்ன வேலை ?”என்று வினவினான் காலிஃப். ”இன்றைய பொழுதே உன் நண்பனுக்கு கடைசி தினம்”என்று பதில் வந்தது. கவலை கொண்ட காலிஃப் அரண்மனைக்குத் திரும்பி நண்பனை அழைத்து தன்னுடைய சிறந்த குதிரையை அளித்து ’மாலைக்குள் பாக்தாத் போய்விடு’ என்று விரட்டினான். மீண்டும் பூங்காவிற்கு வந்த போது தூதன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.”மாலை வரை காத்திருக்க வேண்டுமா ?”என்றான் காலிஃப். “அவனுக்கு மரணம் பாக்தாத்தில் அல்லவோ! அவனுக்காக பாக்தாத்தில் இன்னொரு தூதன் காத்திருக்கிறான். அவன் இன்னமும் இங்கேயே உள்ளானே என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்” என்று சொல்லி மறைந்தான் தூதன். விதி காலிஃபாவின் மதியுள் புகுந்து வென்றுவிட்டது. விதியே மதியாகிவிட்டது !

ஆனால் கடவுளையே நம்பினவர்க்கு இந்த கவலை இல்லை. தன்னையே எக்காலும் சிந்தித்திருந்த மார்க்கண்டேயனுக்காக கூற்றுவனையும் எட்டி உதைத்த சிவனை போற்றி தாயுமானவரும் மரணபயம் பக்தனுக்கேது என்று பாடுகிறார்.

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப்
பார்க்கின் அன்பெர்க்கென்ன பயங்காண் பராபரமே

(மறலி=எமன்) - பராபரக்கண்ணி 128

பரமனை சிந்தித்திருப்பதே சிறந்த வழி என்று ஔவை சொன்னதும் அதனாலேயே. கபீரின் கருத்தும் அதுவே

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥


பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரும் ஒருநாள்
தனையாள் இராம மந்திரம் செபிக்கும் கபீரனுக் கில்லை இறுநாள்


(தீர்த்தவன்= பிணி தீர்த்தவன் ; இறுநாள்= மரண நாள்)

அப்படி இடைவிடாது சிந்தித்து இருக்கும்போது மரணமற்ற நிலை தானே வந்தெய்துகிறது. எப்படி நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வித சிரமும் இல்லாமல் கொடியிலிருந்து தானே பிரிந்து விடுமோ அதுபோல் இறைப் பற்றில் பழுத்த ஜீவனும் உலகப்பற்றை விட்டு பரமனடி சேர்கிறது. எல்லோராலும் அறியப்பட்ட மிருத்யுஞ்ஜெய மந்திரத்தின் சாரமும் அதுவே.

மிருத்யுஞ்செயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். ஆர்வமுள்ளவர்களுக்காக மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्द्धनम्
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தநான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


ஊர்வாருகம் +இவ என்பது ’வெள்ளரிப்பழத்தைப் போல’ என்று ஒரு பொருள் வரும். ஊர்வ +ஆரூகம் என்று பிரித்துக் கொண்டால் பெரும் வியாதி என்று இன்னொரு பொருள் கிடைக்கும். இந்த காரணத்தினால்தான் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளவர்களுக்காக பிறர் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊர்வ ஆரூகம் இவ பந்தனான் (பெரும் வியாதி போன்றத் தளை) என்பது பிறவிப் பிணியை குறிப்பதாகக் கொள்ளலாம். அப்போது அமிர்தம் அளித்து மோக்ஷத்தை அளி என்ற கோரிக்கை வியாதியஸ்தர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக யாவருக்கும் பொருந்தும்.