Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

Monday, July 02, 2018

கொடுப்பதே திரும்பி வரும்


  அமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம். 1892-ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற்றா குறைவால் படிப்பைத் தொடருவது சிரமமாக இருந்தது. ஒரு இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டினால் என்ன என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியது.   
   அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த  பியானோ கலைஞர் இக்னேஸி ஜே. படேரெஸ்கி என்பவரை அணுகினர். அவருடைய மேனஜர், ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 2000 டாலர்கள் கண்டிப்பாகக் கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு ஒப்புக் கொண்டு தேவையான விளம்பர வேலைகளில் இறங்கினர்.  அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி நன்றாக நிறைவேறினாலும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மொத்தம் வசூலானத் தொகை 1600 டாலர்களே.

Friday, December 05, 2008

மரணமில்லா பெரு வாழ்வு

இந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான்.

தனக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற அவனை அந்த சாது ’உன் வழியே நீ போ’ என்று சர்வ சாதாரணமாகக் கூறியதைக் கேட்டதும் கோபத்துடன் வாளை உறுவி அவரை கொல்ல எத்தனித்தான். அவரோ எவ்வித சலனமும் இல்லாமல் “எனக்கு மரணம் இல்லை.நான் ஆத்மாவில் உறைபவன்” என்று பதிலுரைத்தார். அவரது தன்னம்பிக்கையும் பயமற்ற நிலையும் மாவீரனுடைய கோபத்தையும் பணிய வைத்தது.

தக்ஷசீலத்தின் மன்னன் போரஸ்-ஸுடன் நடந்த போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அலெக்ஸாண்டரின் படைபலம் வெகுவாக குன்றி விட்டிருந்தது. மாஸிடோனியாவிலிருந்த கிளம்பிய படையில் கால் பாகமே எஞ்சியிருந்தது. அவனுக்கு மிகவும் அத்யந்தமாக இருந்த குதிரையும் இறந்து விட்டது. தன் உயிர் நண்பன் ஒருவனை இழந்தது போல் துக்கம் அவனை வாட்டியது. எல்லோருடைய வற்புறுத்தலின் பேரில் படைகளை திருப்பினான் அலெக்ஸாண்டர்.

வழியில் பெர்ஷிய மன்னன் சமாதியிருந்த நினைவு மண்டபத்தைக் கடக்க நேர்ந்தது. அதிலிருந்த வாசகம்;

“நான் தான் சைரஸ்.இந்த பெரும் பெர்ஷிய ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவன். நீங்கள் யாராயிருப்பினும்,எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இதோ,என்னை மூடியிருக்கும் இந்த மண்ணை மட்டுமாவது எனக்காக விட்டு வையுங்கள் “

அரசும் புகழும் எவ்வளவு நிலையற்றது என்பதை அறிந்த அலெக்ஸாண்டர் மனம் மிகவும் கலங்கியது.

அந்த தினங்களில் இந்தியாவிலிருந்து அலெக்ஸாந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பல அறிஞர்களும் அவனுடன் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் (அவர் பெயரை Calnus-என்கிறது ஆங்கில குறிப்பு) தன் இறுதி தினம் வந்ததைப் புரிந்து கொண்டு ஒரு சிதையை மூட்டச் சொன்னார். தனக்குரிய இறுதி சடங்குகளை தானே செய்து தன் கிரேக்க நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “மன்னனிடம் சொல்லுங்கள்.விரைவிலேயே பாபிலோனில் சந்திப்போம்” என்று அவர்களிடம் சொல்லி அமைதியாக சிதையில் அமர்ந்து நெருப்போடு கலந்து போனார்.

பலமாதங்கள் தொடர்ந்த பயணத்தில் மேன்மேலும் துர்சகுனங்கள் காணப்பட்டன. முன் கோபத்தால் அலெக்ஸாண்டர் தன் நெருங்கிய நண்பனையே மதியிழந்து கொன்றுவிட்டான். அதை நினைத்து வருந்தி நாளெல்லாம் உணவும் நீரும் இன்றி அழுது கொண்டிருந்தான்.

எப்போதுமே வெற்றிகளுக்கு நாயகனாக இருப்பினும் அலெக்ஸாண்டர் மனம் துன்பத்தால் வாடியது. அளவுக்கு அதிகமாகக் குடித்தான். பாபிலோனை அடைந்தபோது அவனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டது. பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வைத்தியங்கள் பலனளிக்காமல் கி.மு 326 ஜூன் 10ஆம் தேதி அவன் மரணமடைந்தான்.

பஞ்சாப்-சாதுவின் தீர்க்கமும், சைரஸ்ஸின் வாசகமும், சிதை புகுந்த அறிஞனின் அமைதியான மரண வரவேற்பும், நண்பனைக் கொன்றதும் அவனுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னுடைய சவ அடக்கத்தின் போது சவப்பெட்டிக்கு வெளியே கைகள் இரண்டும் ஆகாயத்தை பார்த்தவாறு வெளியே தெரியட்டும் என்றும் “இந்த மாவீரன் கடைசியில் கொண்டு சென்றது எதுவும் இல்லை என்பதை யாவரும் அறிந்து கொள்ளட்டும்” என்றும் சொல்லியிருந்தானாம் அலெக்ஸாண்டர்.

சைரஸ்ஸைப் போலவும் அலெக்ஸாண்டரைப் போலவும் வந்து சென்றவர்கள் எத்தனையோ பேர். மரண தேவனின் பிடியிலிருந்து தப்பியவர் எவருமில்லை.

மனிதப்பிறவி தரப்பட்டிருகும் நோக்கத்தை மறந்து வாழ்நாளில் அவர்கள் போடுகின்ற ஆட்டம் ஞானிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. கபீரின் வரிகளிலே சொல்வதானால்,

चहूँ दिस ठाढ़े सूरमा,हाथ लिये तलवार ।
सबही यह तन देखता, काल ले गया मार ॥


நாற்புரம் காத்தனர் வீரர், கையில் ஏந்திய வாளொடு
பார்த்து நின்றனர் பாரோர்,பிராணன் போனது நமனொடு

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி.

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)

மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு உழக்கு அன்னம்,சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே. மேலும் சொல்கிறார் ஔவையார்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். (நல்வழி -15)

உபாயம் இதுவே மதியாகும்! எதுவே? சிவாய என்று சிந்தித்திருப்பதே அறிவுள்ள செயலாகும். விதியை மாற்ற நினைக்கும் எந்த முயற்சியிலும் ’விதியே மதியாகிவிடும்’. அதாவது விதியினுடைய வழியே ஓங்கி நிற்கும். இதை விளக்கும் ஒரு சுஃபி கதை.

காலிஃப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் போது மரணதேவனின் தூதன் நின்றிருந்தான். “உனக்கு என்ன வேலை ?”என்று வினவினான் காலிஃப். ”இன்றைய பொழுதே உன் நண்பனுக்கு கடைசி தினம்”என்று பதில் வந்தது. கவலை கொண்ட காலிஃப் அரண்மனைக்குத் திரும்பி நண்பனை அழைத்து தன்னுடைய சிறந்த குதிரையை அளித்து ’மாலைக்குள் பாக்தாத் போய்விடு’ என்று விரட்டினான். மீண்டும் பூங்காவிற்கு வந்த போது தூதன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.”மாலை வரை காத்திருக்க வேண்டுமா ?”என்றான் காலிஃப். “அவனுக்கு மரணம் பாக்தாத்தில் அல்லவோ! அவனுக்காக பாக்தாத்தில் இன்னொரு தூதன் காத்திருக்கிறான். அவன் இன்னமும் இங்கேயே உள்ளானே என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்” என்று சொல்லி மறைந்தான் தூதன். விதி காலிஃபாவின் மதியுள் புகுந்து வென்றுவிட்டது. விதியே மதியாகிவிட்டது !

ஆனால் கடவுளையே நம்பினவர்க்கு இந்த கவலை இல்லை. தன்னையே எக்காலும் சிந்தித்திருந்த மார்க்கண்டேயனுக்காக கூற்றுவனையும் எட்டி உதைத்த சிவனை போற்றி தாயுமானவரும் மரணபயம் பக்தனுக்கேது என்று பாடுகிறார்.

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப்
பார்க்கின் அன்பெர்க்கென்ன பயங்காண் பராபரமே

(மறலி=எமன்) - பராபரக்கண்ணி 128

பரமனை சிந்தித்திருப்பதே சிறந்த வழி என்று ஔவை சொன்னதும் அதனாலேயே. கபீரின் கருத்தும் அதுவே

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥


பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரும் ஒருநாள்
தனையாள் இராம மந்திரம் செபிக்கும் கபீரனுக் கில்லை இறுநாள்


(தீர்த்தவன்= பிணி தீர்த்தவன் ; இறுநாள்= மரண நாள்)

அப்படி இடைவிடாது சிந்தித்து இருக்கும்போது மரணமற்ற நிலை தானே வந்தெய்துகிறது. எப்படி நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வித சிரமும் இல்லாமல் கொடியிலிருந்து தானே பிரிந்து விடுமோ அதுபோல் இறைப் பற்றில் பழுத்த ஜீவனும் உலகப்பற்றை விட்டு பரமனடி சேர்கிறது. எல்லோராலும் அறியப்பட்ட மிருத்யுஞ்ஜெய மந்திரத்தின் சாரமும் அதுவே.

மிருத்யுஞ்செயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். ஆர்வமுள்ளவர்களுக்காக மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्द्धनम्
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தநான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


ஊர்வாருகம் +இவ என்பது ’வெள்ளரிப்பழத்தைப் போல’ என்று ஒரு பொருள் வரும். ஊர்வ +ஆரூகம் என்று பிரித்துக் கொண்டால் பெரும் வியாதி என்று இன்னொரு பொருள் கிடைக்கும். இந்த காரணத்தினால்தான் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளவர்களுக்காக பிறர் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊர்வ ஆரூகம் இவ பந்தனான் (பெரும் வியாதி போன்றத் தளை) என்பது பிறவிப் பிணியை குறிப்பதாகக் கொள்ளலாம். அப்போது அமிர்தம் அளித்து மோக்ஷத்தை அளி என்ற கோரிக்கை வியாதியஸ்தர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக யாவருக்கும் பொருந்தும்.

Wednesday, September 24, 2008

பழையதை தின்று சும்மா கிட

திருமணம் ஆகி குழந்தை பிறந்திருப்பினும் இல்வாழ்க்கையில் விருப்பமின்றி துறவி போல வாழ்க்கையை நடத்தியவர் ஆனந்தம்மாள். ரமணபகவானின் திருவடிகளிலே தவம் செய்து காலம் கழித்தார். ஒருநாள் கனகம்மாள்- இன்னொரு பக்தை-அவரைக் கண்டுவரச் சென்றார். கண் மூடி தியானத்திலிருந்த ஆனந்தம்மாள் சத்தம் கேட்டு திரும்பினார். கனகம்மாளைக் கண்டதும் தன்னருகில் அமருமாறு அழைத்தார். அருகிலமர்ந்த கனகம்மாள் அவரிடம் ஒரு சிறிய தின்பண்டப் பொட்டலத்தை நீட்டினார்.

“என்ன அது! என்ன கொண்டு வந்தே “

“ஒன்றுமில்லை. சாதுக்களுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. கொஞ்சம் பக்கோடா செய்து கொண்டு வந்திருக்கிறேன்”

அதை பிரித்துப் பார்த்துவிட்டு “சரி சரி ரொம்ப நல்லாயிருக்கு! சாதுக்களுக்கு இதெல்லாம் வேண்டுமா! அதோ அந்த மூலையைப் பார். தனம் ஊரிலில்லை. இரண்டு நாளைக்கு வேண்டிய சாதத்தை அந்த பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கும்படி சொன்னேன். பசிக்கும் போது எடுத்து சாப்பிடுவேன். அதற்கு மேல் என்ன வேண்டும். அப்படியே சும்மா இருக்க வேண்டியதுதானே ! எண்ணம் வந்ததாம்! அதற்காக செய்து கொண்டு வந்தாளாம்! கண்ணை மூடிண்டு சும்மா கிடப்பியா ! அதை இதை செய்துண்டு அலைவியா. பகவான் என்ன சொல்லித்து, எதையும் நினைக்காமல் சும்மா கிடக்கும்படித்தானே சொல்லித்து.அதை விட்டு விட்டு நீ ஏன் நேரத்தை வீணாக்குகிறாய். அவன் சன்னிதியில் கண்ணை மூடிண்டு கிடக்க வேண்டியது தானே” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

தாயுமானவரின் கீழ்கண்ட வரிகளை படித்தவுடன் மேலே சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே

(இச்சித்து =விரும்பி)


கடவுளின் பற்று அதிகமாகுமளவும் உலகக் கடமைகளை அவன் குறைத்து விடுவானாம், இது கீதை சொல்லும் வழி.

அப்படி குறைத்து வருவதை அறியாமல் மீண்டும் மீண்டும் புதுப் புது ப்ரவ்ருத்திகளை உண்டாக்கிக் கொள்வது வலையில் சிக்கிக் கொண்ட பறவையைப் போலவே ஆகும். “பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும். புது விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளுமளவும் ‘நேரம் வீணாகிறது’அதாவது பிறவி வீணாகிறது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் எவ்வளவு பொருள் பொதிந்த கருத்துகள்.

போகட்டும், நாம் செய்ய முனையும் காரியங்கள் எதுதான் நம் விருப்பப்படி நடக்கிறது ! தாயுமானசுவாமிகள் ஆராய்கிறார் பாருங்கள்.

ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார். சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

பிரம்மனிலிருந்து தொடங்கி, சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க விரும்பும் சாதாரண பக்தன் வரை யாருடைய செயலின் முடிவும் அவர்கள் கையில் இல்லை என்பதை ஒரு நகைச்சுவை ரஸத்தில் விவரித்திருக்கிறார். கண்கூடாக இதை காலந்தோறும் கண்டும் நமக்கு ஏனோ புரியாமல் போகிறது. அதை ஔவையாரும் சொல்லி வியக்கிறார்.

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

எல்லாமே ஈசன் செயல் என்றுதான் கபீரும் சொல்கிறார். தான் வெறும் ஒரு சூத்திர பொம்மை. சூத்திரத்தை கையில் வைத்து ஆட்டுவிப்பவன் எங்கோ இருக்கிறான்.

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ

ஓரொரு சமயம் நாம் நினைப்பது நடந்து விடுகிறது. உதாரணம் கபீரின் வலைப்பூ. அப்போது ”செய்விப்பவன் அவன் யாரோ’என்ற வரியை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. ஔவை சொல்வது போல் ‘அது வரினும் வந்தெய்தும்’

எப்படியோ இந்தவலைப்பக்கம் ஐம்பத்தியொரு பதிவுகளுடன் இரண்டாம் வருடத்தை நிறைவு செய்கிறது. பல முறை பல தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் அவன் இதை நடத்திக்கொண்டு வருகிறான். ”பழையதை தின்று சும்மாக் கிடக்காமல்” பதிவுகளை எழுத மனம் பரபரக்கும் போது பல மனக்குழப்பங்கள், குற்ற உணர்வு.

எல்லாவற்றையும் மீறி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தனி மடல்களிலும் பின்னூட்டத்திலும் வாசகர்கள் காட்டிய பரிவும் அன்புமே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

குருவருள் அவர்களுக்கு என்றும் பெருகட்டும்.
__________________________________________________

இதுவரை வெளியாகியிருக்கும் ஈரடிகளை தேடவும் புதிதாக காணப் பெறுவோர்க்கு அவர்கள் அறிந்திருக்கும் தோஹாக்களின் மொழிபெயர்ப்பைத் தேடவும் வசதியாக கூகிள் தேடு பொறி ஒன்று பக்கப்பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே தமிழ் அல்லது ஹிந்தி இரண்டிலும் உள்ளீடு செய்யலாம். தேடலுக்கான விடை புதிய பக்கத்தில் தரப்படும். இதைத் தவிர அந்த ஈரடிகள் அதன் ஹிந்தி மூலத்துடன் ஒரு சிறு மின்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அதற்கான இணப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


மின்புத்தகத்தை இங்கேயே படிப்பதற்கு வசதியாக அதை முழுத் திரைக்கு விரித்துக் கொள்ளலாம். எழுத்துகளை பெரிதாக்கிக்கொள்ளவும் இதில் + - மெனுக்கள் உள்ளன. இதை புத்தகம் போல பக்கங்களை புரட்டவும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது மேலிருந்து கீழே நகர்த்திச் செல்லத் தேவையில்லை.

மென்புத்தக்கதைப் பற்றியும் அதை மேம்படுத்தவும் தங்கள் கருத்துகளை பின்னூட்டமாகவோ தனி மடலிலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தரவிறக்கம் செய்ய விழைவோர் இந்த esnip சுட்டியை பயன்படுத்தவும்.