Monday, July 02, 2018

கொடுப்பதே திரும்பி வரும்


  அமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம். 1892-ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற்றா குறைவால் படிப்பைத் தொடருவது சிரமமாக இருந்தது. ஒரு இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டினால் என்ன என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியது.   
   அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த  பியானோ கலைஞர் இக்னேஸி ஜே. படேரெஸ்கி என்பவரை அணுகினர். அவருடைய மேனஜர், ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 2000 டாலர்கள் கண்டிப்பாகக் கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு ஒப்புக் கொண்டு தேவையான விளம்பர வேலைகளில் இறங்கினர்.  அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி நன்றாக நிறைவேறினாலும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மொத்தம் வசூலானத் தொகை 1600 டாலர்களே.
    இரு மாணவர்களும் படேரெஸ்கியிடம் தங்களிடம் சேர்ந்த 1600 டாலர்களையும் கொடுத்து மீதி 400 க்கு ஒரு காசோலையும் கொடுத்து கூடிய விரைவில் அந்த பணத்தை செலுத்தி விடுவதாக வேண்டிக் கொண்டனர். அவர்களின் நிலையை கேட்டறிந்த அந்த கலைஞர் அந்த காசோலையை கிழித்தெறிந்து வசூலான தொகையில் அவர்களுக்குத் தேவையான தொகையை வைத்துக் கொண்டு  மீதியை தருமாறு கூறினார். அவர்களுடைய கல்வியை நல்ல முறையில் தொடரும்படி அறிவுறுத்தி சென்று விட்டார்.  இரு இளைஞர்களும் வாயடைத்து நின்றனர்.
      ஆண்டுகள் பல கழிந்தன. படேரெஸ்கி தன் சொந்த நாடான போலந்துக்கு சென்று அரசியலில் ஈடுபட்டார். அதன் பிரதம மந்திரியும் ஆனார். அப்போது முதலாம் உலகப் போர் ஏற்பட்டு போலந்தின் நிதி நிலை சீர்குலைந்தது. சுமார் 15 லட்சம் ஜனங்களுக்கு உணவளிக்கவும் நிதி பற்றவில்லை. யாரிடம் வேண்டுவது என்று திகைத்த படேரெஸ்கி அமெரிக்க உணவு நிவாரண நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதன் தலைவர், ஹெர்பர்ட் ஹூவர், உடனடியாக  அந்த கோரிக்கையை ஏற்று போலந்துக்குத் தேவையான கோதுமை, உலர்த்தியப் பால்பொடி முதலியவற்றை அனுப்பிவைத்தார்.  நாட்டை எதிர் நோக்கிய ஒரு பெரும் சோதனை தீர்ந்தது.
     படேரெஸ்கி அமெரிக்கா சென்று,  நன்றி சொல்ல  ஹூவரை சந்தித்தார்.  அவரைக் கண்டதுமே ஹூவர், “மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களே! எனக்கு நீங்கள் நன்றி தெரிவிப்பதை விட  நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களுக்கு நினைவில்லாமல் போகலாம். பல வருடங்களுக்கு முன் ஸ்டான்ஃபோர்டில் படிப்பைத் தொடர நீங்கள் உதவி செய்த இரு மாணவர்களில் நான் ஒருவன்என்றார்.   ஹெர்பர்ட் ஹூவர் பின்னாளில் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றார்.
  மறைகள் பொய்ப்பதில்லை. விவிலியத்தின் வாசகங்கள் எவ்வளவு உண்மை!. உன்னுடைய அளவையைக் கொண்டே உனக்கு கொடுக்கப்படுவது உன் மடியில் கொட்டப்படுகிறது
Luke 6:38 –  Give and it will be given to you, a good measure pressed down, shaken together and running over, will be poured into your lap.  For with the measure you use, it will be measured to you
      கொடுத்ததே திரும்பி வரும், அதுவும் பல மடங்காய். இது காலம் சொல்லும் பாடம். இந்த உண்மையை நல்ல முறையில் கபீர் அறிந்திருந்ததால் தான்  கர்ணனையும் திரௌபதியையும் உதாரணமாக வைத்து சொல்கிறார்.
कंचन दिया करन ने,  द्रौपदी  दिया  चीर  ।
जो दिया  सॊ पाइया , ऐसे कहै  कबीर  ॥

கர்ணனும் தந்தான் கஞ்சனமே,  பாஞ்சா லியுந்தன்  சீலையே
கபீரனும் சொல்வான் இங்கே, கொடுத்ததே திரும்பும் புவியிலே
( கஞ்சனம் = பொன் ; புவி = உலகம்)

மாற்று:

கொடுத்தான் கர்ணன் கஞ்சனமே,  திரௌபதியும் தன் சீலையே
கொடுத்ததே அவரும்  பெறுவரே,  கபீரன்  சொல்வதும் அதையே
  பொன்னையும் பொருளையும் கேட்டவர்க்கெல்லாம் வாரி வழங்கிய கர்ணனை போரின் இறுதி கட்டத்தில் தர்ம தேவதை காத்து நிற்கிறாள். அவனைக் கொல்ல அர்சுனனால் முடியவில்லை.  பின்னர் கண்ணன், அவனுடைய  புண்ணியத்தையல்லாம் ஒரு வேதியன் வடிவில் சென்று யாசகமாகப் பெற்றுக் கொண்ட பின்பே அர்சுனனால் நினைத்த காரியத்தை முடிக்க முடிந்தது. கர்ணனும் கண்ணனோடு ஐக்கியமாகி பரமபதம் சேர்ந்தான்.
  திரௌபதி ஒரு சமயம் கிருஷ்ணர் விரலில் அடிபட்டு இரத்தம் வெளிப்பட்ட போது   தான் உடுத்தியிருந்தது விலை உயர்ந்த சீலை என்றும் பாராமல்  ஒரு பகுதியை கிழித்து உடனே கட்டுப்போட்டாள்.  இது தர்மரின் சூதாட்டத்திற்கு  முன்பு நடைபெற்றது. அதன் எதிரொலியாகத்தான் பாஞ்சாலி கண்ணனுக்காக கூவியதும் அவளுடைய சீலை வளர்ந்து கொண்டே இருந்தது.  இந்த நிகழ்ச்சியைத்தான் கபீர் குறிப்பிடுகிறார்.
  அளவற்ற கருணையினால் எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த தானங்களே கர்ணனுக்கு அவன் வேறு ஆன்ம சாதனையின்றி முக்தியைப் பெற்றுத் தந்தது. கிருஷ்ணருக்கு ஏற்பட்ட துன்பத்தை விலக்க பதைத்த தூய உள்ளத்தினாலேயே பாஞ்சாலிக்கு துச்சாதனன் களைத்து போகும் அளவுக்கு சீலையை வளரவிட்டது.  
   இயற்கையின் நியதியே  நாம் கொடுப்பதை பல மடங்கு பெருக்கிக் கொடுப்பதுதான். ஒரு விதையை பூமித்தாயின் மடியில் ஊன்றுகிறோம். அவள் அதை பலநூறு மடங்காக பெருக்கித் தருகிறாள்.  பசுவிற்கு குறைந்த மதிப்புள்ள புல்லையும் புண்ணாக்கையும் போட்டு லாபம் காண்கிறான் பண்ணை நடத்துபவன். இங்கே பசு அவன் முதலீட்டை பல மடங்காக்கித் தருகிறது.
  குறுநில மன்னன் பாரியின்  கொடை சிறப்பை பாராட்ட கபிலர் என்ற புலவர்க்கு  இயற்கையின் துணையையே நாட வேண்டியிருந்தது.
பாரி பாரி என்று பல ஏத்தி 
ஒருவர் புகழ்வர்  செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே (புற நானூ 107)
 பாரி பாரி என்று ஒருவனையே  புலமை மிக்கவர் புகழ்வர். ஆனால் பாரி ஒருவன் மட்டுமே உலகை வாழ்விப்பவன் அல்லன். இங்கே மழை மேகங்களும் உண்டு என்று வஞ்ச புகழ்ச்சியாக அவனைப் போற்றிப் பாடுகிறார்.  வேற்றுமை பாராட்டாது உதவுவது மழையின் பண்பு. அது போன்றவனாம் பாரி என்று சொல்ல வருகிறார் புலவர்.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழைஎன்று ஔவையார் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது.  
  அளப்பரிய தருவதே இயற்கையின் குணம்.  ஆனால் இந்த நியதி செயல்பட வேண்டுமானால் ஓரளவாவது மனித முயற்சி இருக்க வேண்டும். ‘என்னை நோக்கி ஒரு அடி வைத்தால் நான் உன்னை நோக்கி பத்து அடி வைக்கிறேன்என்று இறைவன் சொல்வதும் அந்த முயற்சியை எதிர்பார்த்து தான்.
மனிதனுடைய முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் மாதா அமிர்தானந்தமயீ  கொடுத்திருக்கும் இந்த அற்புத விளக்கமும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ( முழு கட்டுரையைப் படிக்க படத்தை சொடுக்கவும்)
மாதா அமிர்தானந்த மயி விளக்கம்

   ஈகை என்பது மனிதனுக்கு உரிய அடிப்படை பண்பு. பிறர் துன்பத்தை காணப் பொறுக்காது அதைக் களைய விழைபவன் கடவுளுக்குப் பிரியமானவன்.  நம்முடைய முன்னேற்றத்திற்கு காரணமே நாம் சார்ந்திருக்கும் சமூகமானதால் அதன் முன்னேற்றத்தில்  நமக்கு பல மடங்கு பொறுப்பு அதிகமாகிறது. அப்படி முனைபவர்க்கு இறைவனே துணை செய்வான் என்பதை வள்ளுவரும் உணர்த்துகிறார்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும் (1023)
 எம் குடிமக்களை மேன்மேலும் உயர்த்தப் பாடுபடுவேன் என்று செயலாற்ற முனைவோர்க்கு  தெய்வங்களும் தன் உடையை மடித்து இறுகிக் கட்டிக் கொண்டு அவன் செயலிறங்குவதற்கு முன்பே செயலில் இறங்கி விடும்.
கொடுப்பதால் குறையாதது  கல்வி மட்டுமல்ல, தானமும் தர்மமும் கூட
இறைக்கும் கிணற்றில் தான் நீர் ஊறும் என்பது போல கொடுக்கும் கரங்களில் தான் சீர் பெருகும்.

6 comments:

  1. //இறைக்கும் கிணற்றில் தான் நீர் ஊறும் என்பது போல கொடுக்கும் கரங்களில் தான் சீர் பெருகும்.//

    உண்மை.

    ReplyDelete
  2. கர்ணன், பாரி, பசு, இயற்கை என்று விரிவாக கொடுப்பதே திரும்பி வரும் என்று அழகாய்
    சொன்னீர்கள்.

    பதிவை திரும்ப திரும்ப படிக்கிறேன். அருமை.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. நல்வரவு கோமதி மேடம். விடாது படித்து உற்சாகமூட்டும் தங்களின் வாசகத்தன்மைக்கு தலை வணங்குகிறேன். நான் படிப்பது குறைந்து போயிருப்பதால் எழுதுவதும் குறைந்து போயிருக்கிறது. தொடர முயற்சிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  4. நல்ல பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  5. நல்வரவு பட்டாபி சார்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  6. Your means of telling all in this post is truly fastidious,
    all be capable of easily be aware of it, Thanks a lot.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி