Wednesday, May 27, 2020

வரும் ஒன்று போமொன்று- எதுவும் நிலையன்று


இம்முறை ஒரு மாறுதலுக்காக ஒரு சிறு கதை. திரு புதுமைப்பித்தனின் சொற்சித்திரம். அதன் பின்னர் இதையொட்டி  கபீர் வழியில் நம்  எண்ணவோட்டம்.

தெரு விளக்கு 

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. 

தனிமையாக ஏகாங்கியாக தனது மங்கிய வெளிச்சத்தை பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது. 

இளமை மூப்பு சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே தெரு விளக்கிற்கும் இப்போது மூப்புப் பருவம். 
நிற்கும் கல்-உடம்பு சிறிது சாய்ந்து விட்டது. 


சிரத்தில் இருந்த கண்ணாடி சில் ஒரு பக்கம் உடைந்து விட்டது. அந்த சிறுவன் விளையாட்டாக கல்லை எறிந்த போது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா?

காற்று அடித்தால் உயிரை ஒரே அடியாகவாவது போக்கி விடுகிறதா? 

குற்றுயிராய் அதைத் துடிக்க வைத்துக் கொல்லுகிறதே! கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்த காற்றிற்கு நன்றி இருக்கிறதா? பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்? அது காற்றிற்கு தெரியுமா? 

இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம்! அதை எடுத்து விட வேண்டுமாம்! 

 அதற்கு ஒரு தோழன்- ஒரு கிழவன். ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும்! 




இதிலென்ன அதிசயம் ! விளக்கிற்கு கிழவன், கிழவனுக்கு விளக்கு. 

விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்பது கிழவனுக்குத் தெரியாது. அவனுக்கு எப்படித் தெரியும்? 

 அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா? வயிற்றுக்கில்லாமல் உயிர்வாழ முடியுமா? 

 தெரு விளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மனநிம்மதியை அளித்தது. 

 அன்று சாயங்காலம் வந்தான் வெறும் குழி ஒன்றுதான் இருந்தது. இருள்! இருள் !! பற்றுக்கோலை யாரோ தட்டிப்பிடுங்கிய குருடன் நிலைமை. 

 அன்று அவன் உலகம் சூனியமாய் பாழ்வெளியாய் அர்த்தமற்றதாய் இருந்தது. சாந்தி? அது எங்கிருந்து வரும்? உடைந்த தெருவிளக்குதான்! ஆனால் கொஞ்சமாவது அவனைத் தேற்றி வந்ததே ! 

வெளிச்சமில்லாவிட்டாலும் ஸ்பரிசித்துப் பார்த்து ஆறுதலடைய வெறுங்கல்லாவது இருந்ததே! 

மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.
*********************************************

 இப்பொழுது ஒரு புது விளக்கு ! மின்சார விளக்கு. 

 அதன் கீழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் 

அவர்களுக்கு பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றி கவலையென்ன? 

 ஒருகாலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள். அதற்கென்ன? எங்கும் எப்பொழுதும் அப்படித்தான். 

 பழையன கழியும், புதியன வரும் இது உலக இயற்கையாம் !

 ஊழியன் 24-08-1934 
___________________________________
    எண்பத்தியாறு வருடங்களுக்கு முன் மிகவும் மனதைத் தொடும் வகையில் எழுதப்பட்ட , எளிய நடையில் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.  இதைப் படித்ததும் கபீர்தாசின் ஈரடிதான் நினைவுக்கு வந்தது. 

वृक्ष बॊला पात सॆ सुन पत्तॆ मॆरी बात
इस घ्रर के यह रीति है एक आवत एक जात


தரு உரைத்ததுத்  தளிரிடம்  என் சொல் கேளாய் பிள்ளாய்
வருமொன்று போமொன்று அறி நீ இம்மனை முறையாய்

(தரு=மரம் ; போம்= போகும் ; முறை= நியதி )
பருவ மாற்றங்களின் போது மரம் முதிர்ந்த இலைகளை உதிர்த்து புதிய இலைகள் துளிர்ப்பது யாவரும் காணும் காட்சி. அப்படி வெளி வரும் துளிருக்கு மரம் சொல்லும் அறிவுரையாக நிலையாமைப் பற்றி கபீர் சித்தரிக்கிறார். ஒவ்வொரு இலையும் மரத்தின் வளர்ச்சிக்காக ஒளிச்சேர்க்கை செய்து கொண்டே இருக்கின்றன, அதன் காலம் முடிந்ததும் அது உதிர்ந்துவிட தயாராகின்றது.
அப்படி உதிரப்போகும் ஒரு இலையும் தன் பங்கிற்கு ஒரு தத்துவத்தை விளக்குகிறது கபீர் அவர்களின் பார்வையில்.
पत्ता बोला वृक्ष से, सुनो वृक्ष बनराय।
अब के बिछुड़े ना मिले, दूर पड़ेंगे जाय।|
எம்சொல் கேட்பீர் வனராயனே, முதிர் இலை சொன்னது மரத்திடம்
நம்பிரிவில் இனி சந்திப்பு இல்லை, நானும் போவதோ வெகுதூரம்
மாற்று
உதிர் இலையும் சொன்னது மரத்திடம், விடைதருவீர் ஐயனே எனக்கே
உதிர்ந்த பின் நமக்கென்றும் பிரிவே, நானும் போவது தொலை தூரமே
இலை உதிர்ந்தபின் அதன் பயணம் என்ன என்பது அதற்குத் தெரியாது. அது போன்றே இவ்வுலகை விட்டு அகலும் ஜீவாத்மாவின் பயணம் என்ன என்பதும்  அதற்குத் தெரியாது. மீண்டும் சந்திப்பு நிகழுமா எந்த வடிவில் எப்பொழுது என்பது விதியின் ரகசியமாகவே இருக்கிறது.
அப்படி ஒருவேளை நிகழ்ந்தாலும் கழிந்த பிறவியின் நினைவுகள் இருப்பதில்லை.  தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு புதிய தொடக்கம் புதிய பிறவியாக கொடுக்கப்படுகிறது. அதில் நமக்கென சில கடமைகள் எழுகின்றன. அவற்றை செவ்வனே நிறைவேற்றி இறையடியை அடைவதே பிறவியின் பயன். இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை  நீந்த முடியாது என்பதை வள்ளுவரும் குறிப்பிடுகிறார். 

பழைய நினைவுகள் புதிய தொடக்கத்தில் இடைஞ்சல் தரும் என்பதால் அது மனிதருக்குக் கொடுக்கப்படுவதில்லை. நினைவில் வைக்க வேண்டியதெல்லாம் மரத்தின் முதல் கட்டளை. 
“வரும் ஒன்று போமொன்று”  எதுவும் நிலையன்று.
இந்த நிலையாமை எனும் உண்மை மனதில் ஊன்றி விட்டால் பின் நம் செயல்கள் யாவும் இறைவனடிக்கு இட்டுச் செல்லும் படிகற்களாகுமே தவிர நம்மை கீழ் நிலைக்குத் தள்ளாது.  
இதன் தொடர்ச்சியாக, 2006-ல் பிரசுரித்த கட்டுரையில் இயற்கையின் சூசனைகள் என்ற பெயரில் வேறு சில ஈரடிகளிலும் கபீர்  நிலையாமையை சுட்டிக் காட்டுவதை படிக்கலாம்.

வெறும் புதுமைப்பித்தன் கதையை பிரசுரித்தால் என் உழைப்பு என்ன என்ற கேள்வி மனதில் எழுந்ததன் விளைவே மேலே உள்ள சித்திரம். பிரத்யேகமாக வரைந்தேன். படத்தை சொடுக்கினால் பெரிதாகத் தெரியும். அவர் கதையை பிரசுரித்தபோது அதற்கு சித்திரம் இருந்ததோ இல்லையோ எண்பத்தியாறு ஆண்டுகளுக்குப் பின் தெரு விளக்கிற்கு  ஒரு வடிவம் கிடைக்கிறது. :))  

4 comments:

  1. புதுமைப்பித்தன் அவர்கள் கதையும் அதற்கு நீங்கள் வரைந்த ஓவியமும்
    மிக அருமை.எண்பத்தியாறு வருடம் கழித்து கதைக்கு ஓவியம் வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்.


    //பழைய நினைவுகள் புதிய தொடக்கத்தில் இடைஞ்சல் தரும் என்பதால் அது மனிதருக்குக் கொடுக்கப்படுவதில்லை. நினைவில் வைக்க வேண்டியதெல்லாம் மரத்தின் முதல் கட்டளை.
    “வரும் ஒன்று போமொன்று” எதுவும் நிலையன்று.
    இந்த நிலையாமை எனும் உண்மை மனதில் ஊன்றி விட்டால் பின் நம் செயல்கள் யாவும் இறைவனடிக்கு இட்டுச் செல்லும் படிகற்களாகுமே தவிர நம்மை கீழ் நிலைக்குத் தள்ளாது.//

    நன்றாக சொன்னீர்கள் விளக்கம். ஒவ்வொரு செயலும் இறைவனை நோக்கி அழைத்து செல்லும் படிகற்கள்தான்.

    இன்றைய நாள் நல்ல பதிவை படிக்க வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. புதுமைப்பித்தனின் கதையையும் மகான் கபீரின் வாய்மொழிகளையும் மனச்சங்கிலியாய் பிணைத்திருக்கிறீர்கள். அருமை.

    இந்த முயற்சியால் இரட்டை விஷயங்களைத் தெரிந்து கொள்வது சாத்தியமாகியிருக்கிறது.

    கதைக்கான படமும் உங்களது தான்; சங்கிலிப் பிணைப்பும் உங்களின் உழைப்பில் விளைந்தது தான்.

    அந்த உழைப்பு விளைவிக்கும் பலன் தான் பொது நன்மைக்காகிறது. அதில் விளையும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணையே இல்லை.

    ReplyDelete
  3. நல்வரவு மேடம் எப்பொழுதும் போல் உற்சாகத்துடன் படித்து ஊக்கம் தருகிறீர்கள். மிக்க கடமைப்பட்டுள்ளேன். நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் ஜீவி ஐயா,
    //...அதில் விளையும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணையே இல்லை// இந்த முனைப்பிற்கும் தங்களைப் போன்ற பெரியவர்களின் சத்சங்கமும் ஆசிகளுமே காரணம்.அது எப்போதும் தொடர வேண்டும். நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி