Showing posts with label திருஞான சம்பந்தர். Show all posts
Showing posts with label திருஞான சம்பந்தர். Show all posts

Friday, November 15, 2019

பரோபகாரம் பரமன் வடிவம்



     ’தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்று தமிழ் மூதாட்டி உலகில் எல்லாவற்றைக் காட்டிலும்  மிகப் பெரியது தொண்டர்களின் பெருமை என்று பாடி வைத்தார்.  இறைவன் தன்னை இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வான் ஆனால் தம் தொண்டரை இகழவோ துன்புறுத்தவோ செய்தால் பொறுக்கமாட்டான் என்று அம்பரீசன் பிரகலாதன் போன்றவர்கள் கதைகள் சொல்லி புரிய வைக்கின்றனர் பௌராணிகர்கள்.

தொண்டு நெறி என்பது இறைவனை அடைய ஒரு சுலபமான பாதையாக ஞானிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள். அனைத்திலும் இலங்குபவன் இறைவன். ஆகையால் ஜீவகாருண்யமும் தந்நலமற்ற சேவையும் கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனையாகவே கருதப்படுகிறது. தொண்டு நெறியில் நின்று அடியார்களுக்கு சேவை செய்தவர்கள் ஏராளம். அடியார்களுக்கு இலவச திருவோடு வழங்கிய திருநீலகண்டர், யார் எதைக் கேட்பினும் இல்லையென்னாத இயற்பகை நாயனார், சிவனடியார்களின் ஆடைகளை சலவைசெய்து கொடுப்பதையே சேவையாக செய்த திருக்குறிப்புத் தொண்டரடிகள், பார்வையற்றவராக இருந்தும் திருக்குளத்தை சீரமைத்த தண்டியடிகள், கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதையே தொண்டாக செய்த நமிநந்தியடிகள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Wednesday, October 05, 2016

குழலுடைந்தால் எழுமோ நாதம்?

முதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை.  ஒன்றல்ல இரண்டு.

ராபர்ட் கிரேவ்  என்பவரின்  ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நல்ல தத்துவத்தை போதிப்பதாக  எனக்குப்பட்டது. அந்த பகுதியை மட்டும் சுமாராக மொழிபெயர்த்த வரிகள் :

பனித்துளி ஒன்று தன்னுள் அடக்கியது
மலையும் வனமும், விசும்பும் கடலும்
பருவம் ஒட்டி பல்விதமாய் காட்டியது
ஆனால்
விலையிலா வைரத்தில்  அவை யாவும்
சிதர்ந்ததே எத்திக்கும்  மின் மினி ஒளியாய்
ஒருங்கி ணைத்து காண்பவர் இலர்
இயற்கையின் அழகை எல்லாம்.

’வழியிருந்தால் கடுகுள்ளே மலையை காணலாம்’ என்பது நிஜமோ இல்லையோ பனித்துளியின் பிரதிபலிப்பில் மலையையும் வானத்தையும் காண்பது என்னவோ நிஜம். ஆனால் வைரமோ ஒளிக்கூறுகளை சிதைத்து ஜொலிக்குமே அன்றி ஒரு முழு மையான பிரதிபலிப்பைக் கொடுக்காது.
இப்போது அதே பனித்துளியையும் வைரத்தையும்  மையமாகக் கொண்ட ஒரு கதை

புல் தரையில் அதிகாலை வேளை மெல்ல ஊர்ந்து வந்தது ஒரு புள்ளி வண்டுயாரோ தவற விட்டிருந்த ஒரு கண்ணைப் பறிக்கும் வைரக்கல்லைப் பார்த்ததுமே அது பெரிய இடத்தை சேர்ந்த சம்பந்தம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வணக்கம் போட்டது.



( கபீர் வலைப்பூவுக்கென  பிரத்யேகமாக ஃபோட்டோஷாப்-பில்  தயாரிக்கப்பட்ட படம்)

அதுவும் அதை ஒரு நமட்டு சிரிப்புடன் அதை ஏற்று கொண்டதுசற்று மேலே ஒரு செடியின் கிளை நுனியில் பனித்துளிகள்  சூரிய ஒளியை  அழகாக  வெளிக்காட்டின.  “ அவரும் தங்களுக்கு உறவோ? “ என்று வினவியது வண்டு.  “அது வெறும் நீர். இன்னும் சிறிது நேரத்தில் காற்றில் ஆவியாகி விடும்.”  என்று ஏளனமாக பதிலளித்தது வைரம். ஏனெனில் பெரிய மனிதர்கள் அதைப் போற்றி பொக்கிஷமாக காத்து நிற்பராதலால்  தவற விட்டிருப்பவர்கள் சற்று நேரத்தில் தன்னைத் தேடி வருவர் என்பது அதற்குத் தெரியும். அப்போது தனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையும் எண்ணி செருக்குக் கொண்டிருந்தது.

பனித்துளி அமைதியுடன் இருந்ததுஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த வானம்பாடி பறவை  அந்த வைரத்தை ஒரு கொத்து கொத்தி துப்பியது. “ இது வெறும் கல் என் தாகம் தீர்க்கப் பயன்படாதுஎன்று சொல்லிக் கொண்டே தத்தித்  தத்தி, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தது.
நண்பனே என்னால் உன் தாகம் தீருமெனில் என்னை ஏற்றுக் கொள்என்றது பனித்துளிவானம்பாடியும் தாகம் தீர்ந்து சந்தோஷமாய் பறந்தது

சிறிது நேரத்தில் அங்கு வந்த கால்நடைகளின் காலில் மிதிபட்டு மண்ணுக்குள் அழுந்தி  யார் கண்ணிலும் படாமலே ஒரு பயனுமில்லாமலே புதையுண்டு போனது அந்த வைரக்கல்.

இது இறுமாப்பின் இறுதி நிலைமனிதநிலைக்கும் இறை நிலைக்கும் இடையே உள்ள திரை இது தான். இது நம்முள் தோற்றமெடுப்பதற்கு காரணம் வேண்டியதில்லைநாரதர் போன்ற தேவர்களே கூட தன்னிலும் சிறந்த பக்தரில்லைஎன்ற மயக்கத்திற்கு ஆளாவதுண்டு என்று பரமஹம்சரின் கதைகள் கூறுகின்றன.

இராவணன் போன்ற சிறந்த சிவபக்தன் இல்லை. அவனுக்கும் அந்த இறுமாப்பு வந்தபோது   கயிலாய மலையையே பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை தன் சுண்டு விரலால் அடக்கினார் சிவனார் என்பது நாயன்மார்களால் பெரிதும் போற்றப் படுகிறது.  ஞானசம்பந்தர் பெருமான் திருவையாற்று தியாகராஜரைப் போற்றும் போது
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்.
என்று பாடுகிறார்.

மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த

என்று நாவுக்கரசர் தில்லை சிவனை போற்றும் போது குறிப்பிடுகிறார்.
இப்படி  சைவ இலக்கியம் முழுவதும்  இந்நிகழ்ச்சிபலவேறு  பாடல்களில், இறுமாப்பினால் வரும் இடரை உணர்த்த எடுத்துக்காட்ட வருகிறது.

இதனை கபீரும் எளிமையாகச் சொல்கிறார். எவ்வளவு எளிமையான வரிகள்.


तिमिर गया रवि देखते ,कुमति गई गुरु ज्ञान  ।
सुमति गई अति लोभ ते ,भक्ति गई अभिमान ।। 

கதிரவன் கண்டு காரிருள் விலகும் , கெடுமதி ஓடும் குரு ஞானம் கண்டு மதி,நெறி தவறும் பேராசை கொண்டு, பக்திநெறி போகும் பெருமிதம் கண்டு

மாற்று:-

1.       இருளும் போச்சு இரவியைக் கண்டே  மருளும் போச்சு குருஞானம் கண்டே
பெருநெறியும் போச்சு பேராசை கொண்டே, பக்தியும் போச்சு இறுமாப்பு  கொண்டே

 [ குமதி- சுமதி ( कुमति- सुमति) அஞ்ஞானி மற்றும் நல்வழி அறிந்தவர் என்று கொள்ள வேண்டும்]

சத்குரு என்பவர் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கியவர். பனித்துளிகள் சூரியனின் வரவைக் காத்திருப்பது போல அவரும் இறைக்காட்சிக்காக காத்து கிடப்பவர். இடையிலே அருள் தாகம் கொண்டு வரும் ஆன்மீக அடியார்களின்  தாகத்தையும் தீர்க்க வல்லவர்.  உலகிற்காக தன்னையும் தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்அடக்கம் உள்ள இடத்தில் தான் ஞானம் வரும்.

ஆனால்  மனிதரை ஏதேனும் ஆசை பீடிக்கும் பொழுது  சத்குரு சொல்லும் நன்னெறிகள் மறைந்து போய் இறுமாப்பு குடி கொள்ளும்.  அதனால் நமது ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் மிக்க கவனம் கொள்ள வேண்டும்

அடக்கம் இருக்கும் போது மட்டுமே குருவை கண்டால்  இருக்கும் கொஞ்ச நஞ்சம் குறைகளும் விலகிடும்இல்லாவிட்டால் குரு அருகிலேயே இருந்தாலும்  ஞானம் வராது அதைப்பற்றியும் கபீர் சொல்வதை  கடைசியில் பார்ப்போம்.

கபீர் குறிப்பிடும் பேராசை  என்பது தன் தகுதிக்கு மீறிய  ஆசை. அப்படி ஆசையின் வலையில் வீழ்ந்தவன் பற்றிய ஒரு கதை

தேவதத்தன் பகவான் புத்தரின் நெருங்கிய உறவினன். அவரை அடைக்கலம் புகுந்து அவரது சீடன் ஆனவன். மன்னன் பிம்பசாரனின்  மகன் அஜாதசத்ருவின் அசையா நம்பிக்கை பெற்று அவனுக்கு குரு போல விளங்கியவன்புத்தரிடத்தில் பிம்பசாரனுக்கு  இருந்த அபார மதிப்பும் கௌரவமும்  கண்டு அவன் மனதில்  தானும் ராஜ குரு ஆகவேண்டும்  என்கிற பேராசையை உருவாக்கியது.

புத்தரை அணுகி தன்னை தலைவனாக்கும்படி கேட்டுக் கொண்டான். புத்தரோஅது ஒருவர்  இன்னொருவருக்கு கொடுத்து வருவதல்ல.  உழைப்பினாலும் முயற்சியினாலும் தகுதி வரும் பொழுது தானே வருவதுஎன்றுரைத்த நல்லுபதேசம் அவன் புத்தியில் ஏறவில்லை

அஜாத சத்ருவை தன் கைப்பாவையாக்கிக் கொண்டு பிம்பசாரனை சிறையில் அடைக்கச் செய்கிறான்.   மூன்று முறை  கௌதமபுத்தரை, தன்னுடைய குருவையே, கொலை செய்ய முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கிறான்

பிற பிக்ஷுக்கள் புத்தரிடம் தம் கவலையை தெரிவித்த போதுஒருவருடைய உயிரை இன்னொருவர் பறிக்க முடியாது. அவரவர் வாழ்நாள் முடியும் வரையில் பூமியில் இருக்கத்தான் வேண்டும். ஆகையால் இதைப் பற்றிய கவலையை விடுங்கள்”  என்று மரணத்தைப் பற்றிய கவலையின்றி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அன்பின் நெறியிலே  பிம்பசார மன்னனையும் அவன் ராஜ்ஜியத்தையும் திருப்பிய புத்தராலே கூட தன் நெருங்கிய சீடனை திருத்த முடியவில்லைஇப்போது குற்றம் எங்கே

இதை கபீர் இன்னொரு ஈரடியிலே  திருத்த முடியாத, முயற்சி இல்லாத சீடனுக்கு ஒப்பிடுகிறார்.

गुरु बिचारा क्या करे,  सिक्खहि माहिं चूक।

भावे त्यों परबोधिये , बास बजाये फूँक ॥

சீடனில்  உள்ளது தோசம், குருவும் என்செய்வார் பரிதாபம் 
பாடம் எப்படி சொல்லியும், குழலில் எழவில்லை சுகநாதம் 

தேவதத்தன் ஒரு  உடைந்த குழல்.   திருத்த முடியாத சீடன். ஏனெனில் பேராசையினால் நன்னெறி அவனை  விட்டு விலகியது

எப்பேர்பட்ட குருவுக்கு இப்படி ஒரு சீடனா என்று  நாம் வியக்கிறோம். ஆனால் நிழலில்லாமல் ஒளியின் அழகு தெரிவதில்லைஆகையால் இறைவன்  பெரியார்களின் பெருமையை உலகுக்கு புரிய வைக்க கூடவே தேவதத்தன் போன்றவர்களையும் அனுப்புகிறானோ என்னவோ

[  फूँक  என்பதற்கு ஊதுதல் அல்லது வாயால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இந்த ஈரடிக்கு பரவலாக உடைந்த குழலில் இசை வராது என்ற அடிப்படையில் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் குழலிசையை முயன்றவன் என்ற அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவெனில்  மூச்சை முறையாக குழல் வழியே செலுத்தத் தெரியாதவனுக்கும் இசை வராது. வெறும் புஸ் புஸ் என்று காற்றுதான் வரும். அதை குருவானவர் சொல்லிக் கொடுத்தாலும் மாணவனின் சுயமுயற்சி யில்லாமல் முன்னேற முடியாது. கபீர் இந்த ஈரடியில் குழல் உடைந்தது என்ற வகையில் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வில்லை. ஆகவே குழலில் குற்றமில்லை, குருவில் குற்றமில்லை மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம் என்ற வகையில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ] 

Robert Grave's original lines
..........
The dew-drop carries in its eye
Mountain and forest, sea and sky,
With every change of weather;
Contrariwise, a diamond splits
The prospect into idle bits
That none can piece together. 

Thursday, October 09, 2008

கற்றவர் படும் பாடு

நமக்கு இருக்கும் கல்வியறிவே நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாய் விடுகிறது என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது. அது இறைவனிடமிருந்து நம்மை தூர விலக்கி வைத்து விடுகிறது. அதனால் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன என்பதை உணர முடியாத அளவுக்கு ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறது.

அதன் முக்கிய காரணம் அன்பு அறிவை விட மேலானது என்பதை மறந்து போவதே. அன்பின் அடிப்படையில் அல்லவோ இறைவன் உலகை இயக்குகிறான்.

ஆற்றோரம் நடந்து செல்லும் இரண்டு மெத்தப் படித்த அறிஞர்களிடையே ஒரு உரையாடல்

முதல் நபர் : ”ஆற்றில் மீன்கள் எவ்வளவு ஆனந்தமாக நீந்துகின்றன

இரண்டாம் நபர் : “நீ என்ன மீனா ஆனந்தம் என்பதை சொல்ல ?”

முதல் நப்ர் : “நீ என்ன நானா? எனக்குத் தெரியும் தெரியாது என்று சொல்ல

( நன்றி : இராமகிருஷ்ண விஜயம் ஜூன் 2008)

சாதுர்யமான பேச்சுகளின் மேலுள்ள நாட்டத்தால் நம் சந்தோஷத்தை எப்படி இழந்து விடுகிறோம் என்பதை சுட்டிக்காட்டும் துணுக்கு அது.

கூடவே நாம் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் அன்னியமாகி எப்படி அன்பை இழந்து விடுகிறோம் என்பதையும் காட்டுகிறது.

இப்படிப்பட்ட புத்தியுள்ளவர்கள் தம்மைச் சுற்றி ஒரு சிறு உலகை படைத்துக் கொண்டு அதிலேயே ஆனந்தம் காண்பார்கள். அவர்களுடைய உள்ளம் ஒரு மூடிய கதவு. அங்கே புதிய கருத்துகளுக்கோ பரிமாற்றங்களுக்கோ வகையில்லை.

அவர்கள் பெரும் சாதுக்களையோ ஞானிகளையோ அணுகும் போதும் அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதில்லை. அவர்களின் நிலை பற்றி கபீர் சொல்வது

साधु शब्द समुद्र है, जामे रतन भराय ।
मन्द भाग मुटठी भरै, कंकर हाथ लगाय ॥


சாது என்பவன் சமுத்திரம், கிடைக்கும் அங்கே இரத்தினம்
மூடரோ விரும்பிக் கொள்வர், கை நிறைய கல்லும் மண்ணும்.

கடலுக்குச் சென்றவன் அங்கே கிடைக்கூடிய முத்து ரத்தினத்தைப் பற்றி கவலைப் படாமல் வெறும் கல்லையும் மண்ணையும் அள்ளி வருபவன் போலே, பெருமளவிலான மக்கள் ஞானிகளையோ சாதுக்களையோ வெறும் மேற்போக்காகக் கண்டு அல்லது கேட்டு அவர்களைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபாடு கொள்வர். அந்த விமரிசனங்களால் ஆகப் போவது ஒன்றும் இல்லையென்றாலும் பலர் அதில் ஈடுபடுவதன் மூலம் அற்ப மகிழ்ச்சி கொள்கின்றனர். இதைப் பற்றி ஞானிகளும் கவலைப் படுவதில்லை.

இப்போது உண்மையிலே இழந்தவன் யார்? இழந்தது என்ன ?

திறந்த உள்ளம் இல்லாமல் குறைகாணுவதில் ஈடுபட்ட மனம், தான் என்னும் எண்ணத்திலே திளைத்திருக்கிறது. அதனால் அது இழந்தது ஆன்மீக முன்னேற்றம்.

அப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களை தவிர்க்கவே ஞானசம்பந்தர் உபதேசிக்கிறார்.

நீ நாளும் நன்னெஞ்சே நினைக் கண்டாய், யாரறிவார்
வா நாளும் சா நாளும் - சாய்காட்டு எம் பெருமாற்க்கே
பூ நாளும் தலைசுமப்ப புகழ் நாமம் செவி கேட்க
நா நாளும் நவிந்தேற்ற பெறலாமே நல்வினையே.

(சாய்காட்டுப் பெருமான்= திருச்சாய்க்காடு என்னும் தலத்தில் இருக்கும் சிவன்)

ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் !

அப்படியானால் போலிகளுக்கிடையில் அசலைக் கண்டறிவது எப்படி ?

அண்மையில் நெருங்கிய உறவினரோடு மைசூர் அருகே புதிதாக உருவாகி வரும் ஒரு ஆசிரமத்தை கண்டுவரச் சென்றோம். உறவினர் தேவி உபாசகர். வயதில் மிகப் பெரியவர், ஆழ்ந்த பக்தி உடையவர். சாதுக்கள் என்றாலே வயதைப் பொருட்படுத்தாமல் காலில் விழுந்து ஆசி கோருபவர்.

எதிர்பாராத விதமாக ஆசிரம அதிபதியின் தரிசனமும் அன்று கிடைத்தது. அவர் ஆசிரம திட்டங்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் எப்படி இறைவனே அதற்கான தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதையும் கூறினார். எல்லாம் முடிந்து வீடு திரும்புகையில் பலமான சர்ச்சை. அவர்களுக்கு பணம் எவ்வாறு வருகிறது, இந்த படாடோபம் அவசியம்தானா, கள்ளப் பணத்தை ஒளிக்கும் வழியிது இப்படி பலவாறான பேச்சு எங்களிடையே ஏற்பட்டது.

அப்போது அந்த பெரியவர் சொன்னது
”மனசுக்கு ஒட்டினா திரும்பவும் போங்க. இல்லேன்னா விட்டுங்க. கடவுளோட சித்தத்தில ஒரு சில காரியங்களை ஒரு சிலரை வச்சு ஏதோ ஒரு வகையில நடத்தணும்-னு இருக்கும். அதைப் புரிஞ்சுக்க நம்மால முடியாது.

அவதூறான பேச்சினால் அவங்களை நாம மாத்த முடியாது.
ஆனால் கடவுளின்
பார்வையில் நம்மை நாமே தாழ்த்திக்கிறோம் என்பது மட்டும் நிஜம்.
காலப்போக்கிலே
நல்லது நிற்கும்,அல்லாதது அடிச்சிகிட்டு போயிடும்.
நாம பேசி என்ன பிரயோசனம்?”


நம்முடைய பகுத்தறிவிற்கு கடிவாளம் எங்கே இருக்கிறது என்பதை அவர் நன்றாகச் சுட்டிக் காட்டினார் என்றே நினைக்க வேண்டியிருந்தது.

தங்களை மகான்களாகக் காட்டிக் கொண்டவர்கள் பலரும் எந்த மகிமையும் இல்லாமலே மறைந்து விட்டனர்.

அதே சமயம் எந்த மகானைத்தான் சமூகம் எள்ளி நகையாடாமல் விட்டிருக்கிறது?

உண்மையான மகாத்மாவுக்கு சமூகத்தின் அங்கீகரிப்பால் ஆவது ஒன்றும் இல்லை.

ஆகையால் இவற்றை பற்றி நாம் செய்யும் எந்த ஒரு தீர்மானமும் நடுநிலைமை இல்லாமல் போய்விடும். நடு நிலைமை இல்லாத சொற்களால் செயல்களால் கெடுதல் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.

கண்டிப்பாக சாதகனின் நோக்கம் அதுவல்ல. அப்படியானால், பெரியவர் சொன்னது போல வாய்மூடி மௌனியாக யாவும் இறைவன் செயல் என்றிருப்பதே உத்தமம்.

அப்பப்பா ! இந்த ஆராய்ச்சி செய்யும் மனதினால் எவ்வளவு சிக்கல்கள்.

படிப்பறிவற்ற எளிய மனம் படைத்தவனுக்கு நம்பிக்கையின் பலத்திலேயே இறைவன் காட்சி கிட்டும். ஆனால் அறிவினால் வரும் ஆராயும் மனப்பான்மை, நம்பிக்கையின் மூலம் எழும் விசுவாசத்தை தகர்த்து முதலுக்கே மோசம் உண்டாக்குகிறது. மகான்களின் முன்னிலையில் இத்தகைய குதர்க்க புத்தியோடு போனால் நாம் மூடர்கள் தாமே. எனவே மூடர்கள் என்று கபீர் சொல்வதில் தவறேதும் இல்லை.

வாசலில் செருப்பை கழற்றிவிட்டு கோவிலுக்குள் செல்வது போல் ஆன்மீகத்தை அணுகும்போது அறிவு தரும் ஆணவத்தை கழற்றிவிட்டு உள்ளே புக வேண்டும். செருப்பு காலுக்கு தரும் பாதுகாப்பு வெளியே வீதிக்கு மட்டுமே. அதுபோல் அறிவு தரும் பாதுகாப்பு வெளி உலக விவகாரங்களுக்கு மட்டுமே. இறை உலகத்திற்கு உள்ளே தேவைப்படுவது நம்பிக்கை ஒன்றே.

எவ்வளவு நாள் வாழ்ந்திருப்போம் எப்போது மரணம் வருமோ தெரியாது. சிவனே என்று அவன் புகழைக் கேட்டு, பாடி அர்ச்சித்தாலே நல்வினை பெருகி அவனடி சேரலாமே பின்னெதற்கு வீணாக உன்னைப் பற்றிய எண்ணங்களிலே உழல்கிறாய் என்று சம்பந்த பெருமான் மனதுக்கு (நமக்கு) செய்யும் உபதேசமும் அந்த நம்பிக்கையை பலப்படுத்தவே.

இங்கு அன்பே பிரதானம். அதனால் அதில் வெற்றி நிச்சயம்.

யாவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்