Showing posts with label நம்மாழ்வார். Show all posts
Showing posts with label நம்மாழ்வார். Show all posts

Monday, April 12, 2010

பதைப்பில் கழியும் இரவுகள்

பஞ்சவடி என்பதாக ஐந்துவகைத் தருக்கள் கொண்ட அந்த தோப்பு மயானத்திற்கு அருகே இருந்தது. பகல் போதில்கூட அணுகப் பயங்கரமாக இருந்த அந்த இடத்தில் கதாதரருக்கு நடுநிசியில் என்ன வேலை இருக்கும்?

பல முறை கதாரரர் அறியாமலேயே அவரை ஹிருதயர் பின்பற்றினார். எனினும் காட்டை நெருங்கப் பயந்து திரும்பி விடுவார். ஒரு நாள் முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு கடைசி வரையில் ‘சின்ன மாமா’வைத் தொடர்ந்தார்.

கதாதரர் புதர்களையும் குழிகளையும் குட்டைகளையும் நெருக்கமான மரங்களையும் கடந்து பஞ்சவடி சேர்ந்தார். மயான பூமியிலிருந்து அவரை மீட்க வேண்டும் என்று எண்ணி அவரை பயமுறுத்துவதற்காக ஹிருதயர் மறைவிடத்திலிருந்து கற்களை விட்டெறிந்தார். ஆனால் கதாதரரோ லட்சியமே செய்யவில்லை. மேரு பர்வதத்தைப் பருக்கைக் கற்களால் அசைக்க முடியுமா என்ன?

நெல்லி மரம் ஒன்றின் அடியை அடைந்தார் கதாதரர்.

இதென்ன கூத்து ? அவர் ஏன் தம் ஆடைகளைக் களைந்துக் கொள்கிறார்?

சின்ன மாமாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன ? ஏன் பூணூலையும்கூடக் கழற்றி விட்டார் !

ஏதோ பெரிய பாரம் நீங்கினாற்போல அமைதியுடன் நெல்லி மரத்தடியில் தியானம் புரிகிறாரே!

ஆகா, அண்ட சராசரங்கள் புரண்டு வந்து மோதினாலும் கவலையில்லை போல், எத்தகைய சாந்தத்துடன் அவர் தியானம் புரிகிறார்!

“மாமா, அதென்ன உங்கள் உடையையும் பூணூலையும்கூட எடுத்துவிட்டு தியானம் செய்தீர்களே! என்று மறுநாள்
தம்மை அடக்க மாட்டாமல் கதாதரரை கேட்டுவிட்டார் ஹிருதயர்.

‘கட்டுகளை எல்லாம் விலக்க வேண்டியதுதானே ! நிர்வாணம் என்று நீ கேலி செய்யலாம். அதுவே மகா நிர்வாணத்திற்கு உதவியாயிருக்கிறது’ என்றார் கதாதரர்.

கதாதரரின் இறைத் தாகத்தை கபீரின் வார்த்தைகளில் சொல்வதானால்,

अनराते सुख सोवना, राते नींद न आय़ ।
ज्यों जल छूटी माछरी, तलफत रैन बिहाय ॥


நித்தம் துயில்சுகம் கொள்வதோ, துயிலவும் இயலாது இரவிலே
மச்சம் நீர்விட்டு விழுந்ததுபோல், பதைப்பில் கழிவன இரவுகளே

[ மச்சம்= மீன் ]
பரமஹம்ஸரைப் போலவே நடுஇரவில் நம்மாழ்வார் திருமாலை நினைந்து கண்விழித்து அமர்ந்திருக்கிறார். அவர் கண்களுக்கு கரிய வானில் பறந்து செல்லும் நாரை தென்படுகின்றது. தன் ஏக்கத்தை ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார். ’பிரிவு நோயாலும் பசலை நோயாலும் அவதிப்படுகின்ற என்னைப் போல் நீயும் திருமாலை நினைந்து வருந்துவதால் உறங்கவில்லையோ’ என்கிற கருத்தை நாயகி பாவத்தை முன்னிறுத்தி பாடுகின்றார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்,
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்,
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே

(ஆயும்= தாயும்; அமருலகம் =தேவலோகம் ; பயலமை= பசலை நோய்)

இறைவன் அருள் கிடைக்கவில்லையே என்ற பதைப்பு தாயின் முகத்தைக் காணத் தவிக்கும் குழந்தையின் பதைப்பைப் போன்றது. நம் அன்பிற்குரியவர்கள் காலாகாலத்தில் வீடு திரும்பாமல் போனால் நம் மனதில் ஏற்படும் பதைபதைப்பை ஒத்தது. அப்போது உறக்கம் கொள்ள முயன்றாலும் உறக்கம் கொள்ள இயலாது. இந்த அனுபவத்தை எல்லா ஞானிகளின் ஆன்மீகத் தாகத்திலும் காண்கிறோம். தாயுமானசுவாமிகளும் பலவாறாய் இந்த பதைப்பைப் பாடுகிறார்.

சொல்லாலே வாய் துடிப்பது அல்லால், நெஞ்சம்
துடித்து இருகண் நீர் அருவி சொரியத் தேம்பிக்
கல்லாலே இருந்த நெஞ்சுங்கல்லால் முக்கட்
கனியே நெக்கு உருகிடவும் காண்பேன் கொல்லோ

தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே

உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான் ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே

நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
பாராதது என்னோ பகராய் பராபரமே


இப்படித்தான் கதாதரரும் அழுதார், அரற்றினார், பித்துப் பிடித்தவர் போல் செயலாற்றினார்.

இரவு கால பூஜை முடிந்த பின்னும் அவருக்கு அமைதி கிடையாது. சுடுகாட்டுக்கே ருத்ர பூமி என்று பெயரளித்த பசுபதியின் பத்தினியாகிய பரமேசுவரியை நினைந்து ,பசித்தக் குழந்தை தாயை எண்ணி எப்படி வறண்ட தொண்டையுடன் கதறுமோ, அப்படி பசித்த உள்ளம் வெடிப்பு வெடிப்பாகப் பிளந்துகொள்ள பவானிக்காக கூவுவார்.

அன்ன ஆகாரமின்றி இளைத்த உடலும் அழுதழுது சிவந்த கண்களுமாகத் தவிக்கும் பட்டாசாரியாரின் போக்கு யாருக்குமே புரியவில்லை.

அவருக்கும் புரியவில்லை.

’தேவி நான் இவ்வாறு மனம் வெந்து மடிந்தும் நீ தரிசனம் தராதது எதனால் என்று எனக்கு புரியவில்லை. இப்படி அவதிப்பட்டிக் கொண்டிருக்க என்னால் முடியாது’ என்று ஒருநாள் இரவு தேவியின் சன்னிதியில் மொழிந்த கதாதரரின் கண்கள் அருகிலிருந்த ஏதோ ஒன்றின் மீது பட்டதும் நிலைத்து நின்றன. உடனே அந்த சிவந்த கண்களில் ஒரு அமைதியும் திருப்தியும் நிறைந்தன.

வாள்! காளியின் சன்னிதியில் தொங்குகிற வாள்!

காளி என் துயரைத் தீர்க்கவில்லை என்றால் இந்த வாள் தீர்க்கட்டும் !

பவதாரிணி உன்னைக் காணாமல் என்னால் உயிர் வாழ முடியாது. இதோ என் உயிரை உன் காலடியிலேயே விடுகிறேன். உனக்கு நான் அளித்த மற்ற நிவேதனங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த ஆத்ம நிவேதனத்தையாவது நீ ஏற்றுக்கொள்’ என்று ஆன்மாவின் அந்தரங்கத்திலிருத்து குழைந்து பேசிய கதாதரர் வெறி பிடித்தார் போல வாளை உருவ ஓடினார்.

அதிசயம் நிகழ்ந்து விட்டது.

ஓடிய பாதம் ஸ்தம்பித்தது.

இத்துணைக் காலம் தத்தளித்த இதயமும் ஸ்தம்பித்தது.

இதென்ன ஆலயத்தில் மின்சார வெள்ளம் பாய்கிறதா ?

இல்லை இது உடலையும் உள்ளத்தையும் மரத்துப் போகச் செய்யும் மின்சாரம் இல்லை.

உடலையும் உள்ளத்தையும் மலர்த்தும் இன்சாரம் அது!

ஆம் ! அதிசயம் நிகழ்ந்தே விட்டது

இனிமையின் சாரமாகிய அம்பிகை அவர்முன் நின்றாள்.

(நன்றி :அறிவுக் கனலே அருட்புனலே : ரா.கணபதி, இராமகிருஷ்ணா மடம்,சென்னை , (2008) ; ISBN 81-7120-490-2 pages 134 - 139)

Picture courtesy : (http://www.rkmrajkot.org)

Tuesday, January 26, 2010

அவன் கொல்லன், நான் இரும்பு

அப்துல்லா ஷா முகமது நபியின் வழித்தோன்றல். அவரது தந்தை ஷா முகமது தெர்விஷ் அரேபிய மற்றும் பெர்ஷியன் மொழிகளிலும் புனித குரான் ஓதுவதிலும் அரிய தேர்ச்சி பெற்றிருந்தார்.

இளவயதிலேயே ஆன்மீகத் தாகம் கொண்டவராகத் திகழ்ந்தார் அப்துல்லா. அவரது மூத்த சகோதரி அவருக்கு தியானம் செய்வதில் பயிற்சி அளித்தார். தந்தையிடம் அரபி மற்றும் பர்ஷிய மொழிகளின் இலக்கியங்களைக் கற்று தேர்ச்சி அடைந்தார். சில சுஃபி ஞானிகளின் தொடர்பினால் சித்திகள் சிலவும் கைவரப் பெற்றது. ஆனால் தன்னை உணர வேண்டும் என்ற அவா பூர்த்தியாகவில்லை. அது அவரை தேடலில் ஈடுபடுத்தியது. அதற்கான வழிகாட்டி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரது நிலையை கபீரின் வரிகளில் சொல்ல வேண்டுமானால்

जैसा ढूंढत मै फिरुं, तैसा मिला न कोय ।

ततवेता तिरिगुन रहित, निरगुन सो रत होय ॥

எவரைத் தேடி அலைவனோ, அவரை இன்னம் கண்டிலேன்

எவரும் திரிகுணம் கடந்து, நிர்குணம் தோய்ந்து நின்றிலர்

(திரிகுணம் = தமஸ்,ரஜஸ், சத்துவம்)

சுஃபி க்வாத்ரி எனப்படும் தேடல் வழிமுறைக்கும் அத்வைத வழிமுறைக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. அநல் ஹக் ( நானே அவன்) என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுஃபி முறை. அஹம் பிரம்மாஸ்மி ‘சிவோஹம்என்பதற்கு நிகரானது.

தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கப்பெறும் “ என்ற உண்மைக்கு ஏற்ப தேடுவது மிக அரிய உண்மையானால் அதற்கான அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆனால் கிடைக்காமல் விடாது.

“புல்லா நீ லாகூர் அருகே தோட்டம் போட்டு கறிகாய்கள் பயிர் செய்யும் இனாயத் ஷாவை போய் பாரேன். அவர் பரம்பொருளின் உண்மை தெரிந்தவர் என்று சொல்கிறார்கள் என்று யார் மூலமோ தெய்வம் வழிகாட்ட லாகூருக்கு பயணமானார் புல்லா ஷா என்று பின்னாளில் அழைக்கப்பட்ட அப்துல்லா ஷா.

தோட்டத்தினுள் இனாயத் வெங்காயப் பயிரிடையே எதையோ கவனித்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மாமரத்திலிருந்து ஒரு காய் அவரது காலருகே விழுந்தது. மந்திரத்திலே விழுந்த மாங்காய் அது.

அகாலத்தில் பழுக்காமல் காய் தானே விழுவது சாத்தியமல்லவே என்று தலை நிமிர்ந்துப் பார்த்தார் இனாயத் ஷா. வெளியே புல்லா ஷா நின்றிருந்தார்.

“ஏனப்பா என் தோட்டத்தில் விளையாடுகிறாய் ?என்று வினவினார் தோட்டக்காரன்.

“ ஐயா நான் மரம் ஏறவும் இல்லை கல்லெறியவும் இல்லைஎன்று பணிவாக பதிலுரைத்தார் புல்லா.

“ஓ! நீ புத்திசாலித் திருடன். வா உள்ளே“ என்று தன் சீடனை உள்ளே அழைத்தார் இனாயத். கடவுளின் பெயரைச் சொல்லித் திருடலாமா என்று செல்லமாக கடிந்து கொண்டே “தலையை ஏன் கவிழ்த்துக் கொள்கிறாய்? நிமிர்ந்து பார் “ என்று குரு அருளினார்.

புல்லாவின் கண்கள் குருவின் கண்களை நேருக்கு நேர் கண்டதுமே உள்ளொளி பாய்ந்தது. அவர் தன்னை மறந்தார், சூழ்நிலையை மறந்தார். அதுவரை அறியாத ஆனந்த பரவசம் அவரைப் பற்றிக் கொண்டது.

நரேந்திரருக்கும் பரமஹம்ஸருக்கும் ஏற்பட்ட உறவு போல் அது ஒரு தெய்வீக உறவு. நரந்திரனைப் போலவே குருவை பரீட்சித்து பார்த்தார் சீடன் புல்லா ஷா. அதை மகிழ்ச்சியாக ஏற்று பரமஹம்ஸரைப் போலவே சீடனின் தகுதியறிந்த குரு இனாயத். ஆனால் இந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்கவில்லை சீடனுக்கு.

அந்த ஊரின் மௌல்விகளுக்கு, உயர்குலமான சையது வழியில் பிறந்த புல்லா ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த அர்யன் னோடு சுற்றுவது பிடிக்கவில்லை. புல்லாவின் வீட்டிலும் இதற்கு ஏக எதிர்ப்பு.

அவருக்கு தன் குரு மீது இருந்த பக்தியும் தம்மைச் சார்ந்தவர் படுத்திய பாடும் பல பாடல்களில் ஒலித்த்து.

ஓ புல்லா,

என் தலைவன் இனாயத் அன்றோ

என் இதயத்தின் தெய்வம் அவன்

நான் இரும்பு, அவன் கொல்லன்

நீச்சல் தெரிந்த வீரன் அவன்

வகையறியா அபலை நான்

அவனே துணைக்கு வருவான்

கரை சேர்ப்பான் திண்ணம்.

எனக்கு ஏனிந்தப் பற்று (அவனிடம்) ?

வசைகளும் வம்புகளும் கேட்கவோ

வசைபாடுவர் மன்னியும் சோதரியும்

அலியின் புகழுக்கு களங்கமா என்று ?

ஓ புல்லா,

உன்னை

இறைவன் இணைத்தான் இனாயத்துடன்

மரகதம் ரத்தினம் பூட்டினான் அவன்

வசந்தத்தின் அழகை விரும்பினால்

இனாயத்தின் அடிமை ஆவாய்

தனக்கு குரு இனாயத் ஷா மூலம் கிடைத்த மகிழ்ச்சியை ஆபரணங்கள் பூட்டி மகிழ்ச்சி கொள்ளும் பெண்ணிற்கு ஒப்பிடுகிறார் புல்லா ஷா.

இறைவனைத் தேடுவதே பிறவிக்கு வசந்தம். அதன் அழகை, பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமானால் முறையான குருவை சார்ந்திருக்க வேண்டும்.

அதற்கு பலவித சோதனைகள் வரும். அதில் ஒன்று குடிப்பிறப்பை சுட்டிக்காட்டி சமூகம் செய்யும் கேலிக் கூத்து.

நம்மூரிலே நம்மாழ்வரும் அதை ஒரு பாசுரத்திலே இடித்துரைக்கிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை

நலந்தான் இலாத சண்டாள சண்டாளார்கள் ஆகிலும்

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கா என்று உள்

கலந்தார், அடியார் தம்அடியார் எம் அடிகளே

இறைவனுடைய அடியவன் என்றால் அவன் எத்துணை கீழ் பிறப்பின்னாக இருப்பினும் அவனது அடியார் யாமே என்று உருகி உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

கபீரும் இதை குலம் பொருட்டு ஆவதன், அடியவர் நிறைதெரிந்து ஏற்று

பலம் பொருட்டு குனைவாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு

என்று ஏற்கனவே சொல்லியதைக் கண்டுள்ளோம்.

இது புல்லா ஷாவுக்கு சோதனைகளின் ஆரம்பம். இதன் தொடர்ச்சியை அடுத்த இடுகையில் காண்போம்.  தொடர்ச்சியை படிக்க இங்கே சுட்டவும்.

அது வரை புல்லா ஷாவின் அருமையான பாடல் ஒன்றை பொருள் விளக்கத்துடன் கீழுள்ள இணைப்பில் கண்டும் கேட்டும் மகிழவும்.

Tuesday, January 05, 2010

பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்

ஒரு காலத்தில் ஐரோப்பிய மத குருமார்கள் சிலர் சுவர்கத்திற்கு பயணச் சீட்டு வழங்கினராம் ! அவரவர் வசதிக்கு ஏற்ப அங்கே ஒரு இடத்தை முன்பணம் கட்டி பதிவு செய்து கொண்டுவிட்டால் மரணத்திற்குப் பின் கவலைப் படத் தேவையில்லை.

[ஒருவேளை அப்படி ஏதாவது சொன்னால்தான் பணத்தை கொடுக்க முன்வருவார்கள், தேவாலயத்தின் பணிகளுக்கு நிதி கிடைக்கும் என்று அதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தி இருக்கலாம். இல்லாவிட்டால் சுய நலத்தில் ஊறிக் கிடக்கும் சமுதாயம் தர்ம காரியங்களுக்கென்று கொடை கொடுக்க முன்வருவதில்லையே :(
]

புது இடத்திற்கு போவது என்றாலே யாவருக்கும் ஒரு கவலை. அதுவும் மரணத்திற்குப் பின் போகும் இடம் எப்படியோ!

"நீ ரங்கநாதன் ஸ்டீரிட்க்கு போடி, அம்மா அப்பா-வத் தவிர எல்லாத்தையும் வாங்கிட்டு வரலாம்”. முதன்முறையாக சென்னைக்கு புறப்பட்டிருந்த பெண்மணிக்கு சென்னையை நன்கு அறிந்த நண்பி, எங்கே எது கிடைக்கும் என்பது பற்றி கொடுத்த மிக சுருக்கமான வழிகாட்டும் தகவல்.

’அப்பா அம்மாவைத் தவிர’ என்பது அவர்கள் காட்டும் அன்பைப் பற்றியதாகும். அன்பு என்பது கடையில் கிடைக்கும் சரக்கு அல்ல. தாய் தந்தையர் அன்பு தன்னலமற்றது. அதற்கு விலை கிடையாது. ஆனால் கபீர், யாரோ அன்பை விற்பதாக கேள்விப்பட்டார். அதற்கான விலையையும் கேட்டறிந்தார். அதைப் பற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம்.

प्रेम बिकाता मैं सुना, माथा साटै हाट ।
पूछत बिलम न कीजिये, तत छिन दीजै काट ॥


பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்; சிரமே அதற்கு விலையாம்
பேரத்தில் பொழுதைப் போக்காதீர்; சிரம்த ருவதும் தகுமேயாம்

(சிரம்=தலை)

பேரின்ப நெறிக்கு "தன்னலமற்ற அன்பே" முன்பதிவுச் சீட்டு. அச்சீட்டுக்கு எவ்விலை வேண்டுமாயினும் கொடுக்கலாம். அதற்கு தலையே கொடுப்பதானாலும் தவறில்லை என்பது கபீரின் வாக்கு. அதை மெய்பித்தவன் குமணன் என்னும் குறுநில மன்னன். தலையைக் கொடுக்க முன்வந்த வள்ளல் குமணனின் பெயரை சொல்லி கொங்கு மண்டலத்தின் பெருமை பாடுகிறார் கார்மேகக் கவிஞர்.

நாட்டினைத் தம்பிக் கொ(ள்)ளக், காடு சென்று நலிவுறு நாள்
பாட்டு இசைத்து ஓர் புலவன் வேண்ட என் தலைபற்றி அறுத்
தீட்டி என் தம்பி இடத்து ஈயின், கோடி பொன் எய்தும் என்று
வாட்டம் கை தரும் அக்குமணன் கொங்கு மண்டலமே


புலவர் பெருந்தலைச் சாத்தனாரின் வறுமை நிலையும் அதைக் கேட்ட குமணனின் மன வாட்டத்தையும் தன் தலையை கொய்து சென்று தம்பிக்கு காட்டி பொன் பெற்று வறுமை தீர்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்ட குமணன் கதையை மிக அழகாக சொல்லியிருக்கிறார் தமிழாசிரியர் திருமதி ருக்மணி சேஷஸாயி பாட்டி சொல்லும் கதைகள் என்ற வலைப் பக்கத்தில். அவசியம் படிக்கவும்.

கபீர் வேறொரு பார்வையிலும் அன்பிற்காக உயிரையும் கொடுப்பது மனிதருக்கு இயல்பான பண்பு என்பதை கூறுகிறார்

प्रेम न बाडी उपजै , प्रेम न हाट बिकाय ।
राजा परजा जो रुचै, शीश देय ले जाय ॥


செய்யதிலே விளைவதில்லை பேரன்பு, சந்தையிலே விற்ப வருமில்லை
சுவைக்கண்ட கோமகனோ குடிமகனோ, சிரமும் தரத்தயங் குவதில்லை

(செய் அதிலே= வயலிலே )

மனிதப் பிறவிக்கு மட்டுமே அன்பை ஒரு குணமாக போற்றும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது, மலையில் பிறந்து மலையிலேயே மறைந்து போகும் சிறு சிறு நீரோடைகள் போல, தாய் தந்தை, மகன் மகள் என்பது போன்ற நம்முடைய சிறு வட்டத்துள்ளே உற்பத்தியாகி மறைந்து போகிறது.

கோமகனுக்கான உதாரணத்தை குமணனுடைய வாழ்க்கையில் காண்கிறோம். குடிமக்களும் அதே அளவு அன்பின் நிறைவு உடையவர்களே.

பொதுவாக சிறுவர்களிடையே, அவர்களுடைய கபடமற்ற உள்ளத்தாலோ என்னவோ, அன்பின் பெருக்கு காட்டு வெள்ளம் போல் திடீரென்று வெளிப்படுவதை காணலாம்.

பிராசி சந்தோஷ் ஸென் என்கிற பத்து வயது சிறுமி நான்கு குழந்தைகளை மின்சார விபத்திலிருந்து காப்பாற்றினாள். அந்த துணிச்சலான காரியத்தில் மின்சாரத் தாக்குதலினால் அவளது இடது கை கருகி விரல்கள் துண்டிக்கப் பட வேண்டியதாயிற்று.(2008)

ரதுல் சந்திர ராபா மற்றும் ரிதுபர்ணா போரோ என்ற இருவரும் உல்ஃபா தீவிரவாதிகளை துரத்திச் சென்று ஒருவனை பிடித்தனர். ”எங்கள் கண்ணெதிரிலேயே எங்கள் ஆசிரியரை கொல்லும் போது நாங்கள் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?” என்பதே அவர்களின் சாகசத்திற்கான காரணமாகச் சொல்லினர் (2005).

கந்தகுமார் என்ற பதினொரு வயது தமிழ்நாட்டு சிறுவன் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட ஊர்தியிலிருந்து இரண்டு சகமாணவர்களைக் காப்பாற்றிய பின் மூன்றாமவனை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை இழந்தான் (2004)
(நன்றி : http://en.wikipedia.org/wiki/National_Bravery_Award)


தன் உயிருக்கு பாதகம் வரும் போது எதிர்த்து போராடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயற்கை தரும் சக்தியை அட்ரினல் சக்தி என்பர் விஞ்ஞானிகள். பிறருக்காக தன்னுயிரை துறக்கத் துணியும் இந்த சக்தியை எந்த பெயர் கொண்டு அழைப்பது? அன்புனல் சக்தி (அன்பின் புனல்) என்று சொல்லலாமா ? .

தினந்தோறும் இந்த அன்புனல் சக்தி பல நூறு ஜீவன்களில் வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. உலகை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அன்பின் விலையாக தம் உயிரையே கொடுத்து சரித்திரத்தில் அமரர்களாக ஜீவிக்கின்றனர் பலர். அவர்கள் தாம் உண்மையான ஜீவிகள். கபீரின் மேற்கண்ட ஈரடியை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இயல்பாக இருக்கக்கூடிய இந்த அன்பு என்கிற உணர்ச்சியை பெருக்கிக் கொள்வது எப்படி? நம் உள்ளம் வற்றாத ஒரு அன்பின் ஊற்றாக மாறுவது எப்படி என்பன போன்ற கேள்விகள் கூடவே எழுகின்றன.

அந்த அன்பு வெளிப்படாமல் போவதற்கு காரணம் நம்மிடமுள்ள ‘பிறரை எடைப் போடுவது’ என்கிற குறையே ஆகும். இந்த காரணத்தால் எதற்கெடுத்தாலும் பிறரிடம் குறைகளைக் காணும் தீயகுணம் ஒட்டிக் கொள்கிறது.

‘Judge not, that ye be not judged என்கிற வாசகம் விவிலியத்தில் வருவது.[மத்தேயு(7:1)].

'When we judge others we don't have time to Love them' என்பது அன்னை தெரஸா அவர்களின் அணுகுமுறை. அதை அடிப்படை கோட்பாடாக கொண்டால் விரைவிலேயே நம்முடைய அந்தக் குறைபாடு நீங்கி அவரைப் போலவே அனைவரையும் நேசிக்கும் அன்பு புனல் நம்மிடமிருந்து தொடர்ந்து பெருகும்.

அந்த அணுகுமுறை நம்முள் உறுதிப்பட வேண்டுமானால், குற்றம் குறைகளற்ற, இறைவனைத் துணை கொள்ள வேண்டும்.

மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது.

கேட்பவருக்கு நாம் சொல்வது பிடிக்காமல் போகலாம், நம்மை தூற்றலாம். அப்போது நமக்கு இருப்பது இறைவனின் துணையே ஆகும். ஏசு பெருமான் போல ‘ Father, forgive them, for they know not what they do. (Luke 23:34) என்று பிரார்த்தித்துக் கொள்ளும் வகையில் அவர்கள் மீதுள்ள நம் அன்பை விட்டுவிடாமல் இருக்க முடியும். அதற்கு கடவுளை விட பெரும் துணை யாரிருக்க முடியும்?

இந்த பயிற்சி தொடருமானால் நமது அன்பு, ஆற்றுப் பெருக்கு போல பெருகி வழியெங்கும் புத்துணர்வு பாய்ச்சி இறைவனாம் பெருங்கருணைக் கடலை சேரும். அப்படிச் சேர்ந்தவர்களே ஞானிகள். அந்த அன்புப் பெருக்கு ஏற்படும் போது அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை நம்மாழ்வார், மணிவாசகர் போன்ற பேரருளாளர்களின் அனுபவத்தால் அறியலாம்.

காணுமாறு அருளாய் என்றென்றே கலங்கிக்
கண்ணநீர் அலமர, வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!
தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே! பெரிய தண் புனல்சூழ்
பெருநிலம் எடுத்த பேராளா !


உன் காட்சிக்கென அருள் வேண்டி உள்ளம் கலங்கி, கண்ணீர் சொரிந்து துன்புறுகிறேன். வினைத்துன்பத்தில் சிக்கியுள்ள என்னை பேணுமாறு பலவிதமாய் உன் பெயரை பிதற்றி துன்புறுகிறேன். ராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்தவனே ! தொண்டர்களுக்கு கற்பகக் கனியே, ஆழியில் மூழ்கிய பூமியை மீட்டெடுத்தவனே எனக்கு காட்சி அருள்வாய் -- நம்மாழ்வார்

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரைஆர் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.


(விரையாற் கழல் = மணம் நிறைந்த திருவடி ; கைதான் நெகிழ விடேன்= ஒழுக்கத்தை விடமாட்டேன்; உடையாய்= தலைவனே, இறைவனே)

இறைவா! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக! - மாணிக்கவாசகர்

சமுத்திரத்தை நோக்கிய பயணத்தில் வழியிலே பல கோடி ஜீவன்களுக்கு வாழ்வளிக்கும் ஆற்றுப் பெருக்கு போல ஞானிகளின் அன்பு பெருக்கு மற்றவர்களையும் உய்விக்கிறது. கபீராகவும் மணிவாசகராகவும் நம்மாழ்வாரகவும் பலப் பல ஜீவ நதிகள் இந்த பூமியை வளப்படுத்தி வருகின்றன.

Monday, October 12, 2009

அவரவர் இறையவர் குறைவிலர்

தொழிற்சாலைகளில் பல இயந்திரங்களை இயக்கும் மின்சக்தி மோட்டர்கள் ஏராளமாக வொர்க் ஷாப்பில் கிடப்பில் கிடக்கும். பல வேலை செய்யாது;ஒரு சில ஸ்டாண்ட்‍‍ ‍பை என சொல்லப்படும் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும். வேடிக்கை என்ன வென்றால் எதற்கான ஸ்டாண்ட் பையோ அதற்கான தேவை வராது. வேறு ஏதோ ஒரு மோட்டருக்கான அவசியம் வந்துவிடும். அந்நிலையில் வொர்க் ஷாப்பில் தேடல் துவங்கும்.

சார், இங்கே NGEF-5 H.P. மோட்டர் இருக்குது சார். பொகஞ்சு போனதும் அஞ்சு ஹெச்.பி. தான சார் ?

அது கிர்லோஸ்கர் மோட்டர். என்ன ஸ்பீட் போட்டிருக்கான் பாரு"

ஆவாது சார், இது 2800 . நமக்கு 1440 இல்ல வேணும்.

அதோ அந்த க்ராம்டன் மோட்டர பாருப்பா. அது கூட 5 h.p. தான் நெனக்கிறேன்.

அது பேஸ் ஃபிரேம் (base frame) செட் ஆவாது சார். போறாததுக்கு போனவாட்டி ரீவைண்ட் பண்ணி வந்ததிலேந்து சுகமில்ல சார். அடிக்கடி ட்ரிப் ஆவுது.

அரைமணி முக்கால் மணி தேடிய பிறகு உதவியாளருக்கு ஒரு ஐடியா. "சார், ஒரு கூலிங் டவர் சும்மா தான இருக்கு. அதுல இருக்கிற மோட்டரும் 5, 1440 தான். பேஸ் ஃப்ரேம் கூட செட் ஆயிடும். ஆனா கப்ளர் ஷாப்ட் மட்டும் கடைஞ்சி போட வேண்டியிருக்கும். லேத் க்கு ஆள அனுப்பினா மதியத்துக்குள்ள தயார் பண்ணிடலாம். அப்புறமா ரெண்டு நாள்ல கூலிங் டவருக்கு வேற ஒண்ணு செட் பண்ணிடலாம்"

கொஞ்சம் யோசித்து, “அப்படியா சொல்ற. அதுல கைவைக்க வுடுவாங்களாய்யா? சரி மேனஜர் சார் கிட்ட பேசிப் பாக்குறேன். நீ ஒடனே லேத்துக்கு போன் பண்ணு.”


இது தினசரி வாடிக்கை. பார்ப்பதற்கு இந்த மோட்டர்களெல்லாம் ஒன்று போலவே இருக்கும். ஆனால் அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை நுணுக்கம் அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.

சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.

மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.

குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)

ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

கபீர்தாஸ் மிக எளிமையாக இந்த வேற்றுமையை தினசரி நிகழ்விலிருந்து படம் பிடித்துக் காட்டுகிறார்.

मांगन को भल बोलनो, चोरन को भल चूप ।
माली को भल बरसनो धोबी को भल धूप ॥


இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்


மாற்று :
பிச்சைக்கு உரத்தக் குரல் நன்று, திருட்டுக்கு மவுனமே நன்று
உழுகைக்கு மழையே நன்று, வண்ணாரத் திற்குவெயில் நன்று.


அடிப்படையில் கபீர் குறிப்பிடும் நால்வரது நோக்கமும் வயிற்றுப்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதுதான். ஆனால் அவர்களின் தேவைகளில்தான் எவ்வளவு வித்தியாசம்.

இதன் உட்பொருள் எல்லா சாதகர்களின் நோக்கமும் இறைவனை அடைவது தான் என்றாலும் அவர்களுக்குரிய காலமும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது தான்.

தவசிகள் அனைவருமே ஒரு வகையில் இல்லறத்தாரை சார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்தாம். வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.

இவர்கள் யாவரையுமே அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய விதத்தில் தடுத்தாட்கொண்டு முக்தி அளித்து பெருமை படுத்த தவறவில்லை இறைவன்.

அவரவருக்கான சூழ்நிலைக்கேற்ப கடமைகள் வெவ்வேறானவை. சிறப்பாக கடமை செய்வதிலே கருத்து இருந்தால் ஞானமும் காலாகால‌த்திலே வரும். அவன் இறைச்சி விற்கும் வியாதனாக இருப்பினும் சரி அவனிடத்து செல்ல வேண்டி வழிகாட்டும் இல்லத்தரசியாக இருப்பினும் சரி ஞானவான்களாக திகழ்வார்கள்.

(ரம்யா அவர்கள் ஏற்கனவே இந்த கதையை சுவையாகக் கூறி விட்டிருப்பதால் மீண்டும் இங்கே எழுதுவது அவசியம் இல்லை)

இவ்வாறு பல உதாரணங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை நம்மாழ்வர் தொகுத்து ஒரே பாடலில் சொல்லி விடுகிறார்.

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறை அவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.


ஒவ்வொருவரும் படைப்பிலே மாறுபட்டு இருப்பதையும் அவர்களுக்கான மார்க்கங்கள் வெவ்வேறு என்பதை தமதமது அறிவு அறி வகைவகை என்று அழகாக அடுக்குத் தொடர் இட்டு உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

அறிவு அறி வகைவகை என்பது ஒரே குறிக்கோளுக்கு பல வகை வழிகள் இருப்பதும் ஏற்பு உடையதே என்பதையும் உணர்த்துகிறது.

அவரவர் இறையவர் குறைவிலர்’ என்பதை அதிகம் அறியப்படாத ஒரு தோட்டக்காரன் கதை மூலம் பார்போம்.

ஒரிஸ்ஸாவின் புரீ ஜகன்னாதனிடம் அளவற்ற அன்பு பூண்டவன் மணிதாஸ். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மேலானவன்.யாவரிடமும் இனிமையாக பேசுபவன் உண்மை தவறாதவன். தன் தோட்டத்தில் விளைந்த மலர்களை தொடுத்து அன்புடன் ஜகன்னாதனுக்கு சாற்றி மகிழ்ந்தவன்.

அருளாசையின் விளைவாகப் பணத்தாசை துறந்தவனானதால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதனால் பாட்டு சுலபமாக வந்தது. எப்போதும் இறைவன் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பான். பாடுவது மட்டுமல்ல தன்னை மறந்து ஆடவும் செய்வான். அப்போது அருகே இருப்பவர் யார் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது.

ஒரு முறை ஜகன்னாதரின் சந்நிதி முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பெரும் பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவரை அப்பால் போகச் சொல்லியும் பலன் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் அவனை அறிந்தவர்கள் ஓரளவு முயற்சி செய்து பார்த்தும் அவனுடைய பரமார்த்திக நிலையிலிருந்து விடுபடவில்லை. ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தவில்லை. கடைசியில் கூட்டம் கூடி அவனை அடித்து விரட்டினர்.

சுயநினைவுக்கு வந்த மணிதாஸுக்கு கூட்டத்தினர் மீது கோபம் வரவில்லை. ஜகன்னாதன் மேல் வந்தது. தன்னுடைய பாடல் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போகட்டும், தான் யார் நினைவாக பாடுகின்றனோ அவனுக்கும் கூட பிடிக்கவில்லை போலும்;இல்லாவிட்டால் அவர்களின் நடத்தையை தடை செய்திருப்பானல்லவா? அவர்களை விட்டு அடித்து துரத்தி விட்டதன் மூலம் அவனுக்கும் பிடிக்கவில்லை என்றே ஆயிற்று; இப்படி எல்லாம் நினைத்து கோபம் அதிகமாகி கோவிலை விட்டு வெளியேறி ஒரு மடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். எதுவும் சாப்பிடவில்லை.

புரீ மன்னனுக்கு இரவில் ஜகன்னாதர் கனவில் வந்து “வேந்தனே இன்றைய சாயங்காலப் பூஜை எனக்கு நிறைவளிக்கவில்லை. என் அன்பன் மணிதாஸின் பாடலைக் கேட்கவிடாமல் உன் பிரஜைகள் அவனை அடித்து துரத்திவிட்டனர். அவன் மனவலியால் உணவும் அருந்தாது கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறான். நீ உடனடியாக அவனை அழைத்து வா. இனிவரும் உபன்யாசங்கள் லட்சுமி மந்திரில் நடத்தப் படட்டும். என் அடியார்கள் என் தரிசனத்திலேயே சந்தோஷப்படட்டும்” என்று சொல்லி மறைந்தான். அரசனுக்கு கனவை வெறும் கனவென்று ஒதுக்க முடியவில்லை. உடனே ஆட்களை அனுப்பி மணிதாஸை கண்டு அழைத்து வரும்படி பணித்தான்.

அதே நேரத்தில் மணிதாஸின் கனவில் வந்த பெருமான் அன்புடன் தலையை வருடிக் கொடுத்து “நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குத் தெரியுமா, நான் கூட இன்று சாப்பிடவில்லை. நீ பசித்திருக்கும் போது என்னால் எப்படி சாப்பிட முடியும் ? “ என்று சொல்லி மறைந்தான். கண் விழித்த மணிதாஸின் முன்னால் பிரசாதத் தட்டு நிறைய உணவு இருந்தது. மணிதாஸனும் பசியாறினான்.

அரண்மனையிலிருந்து வந்த பரிவாரம் முழுமரியாதையோடு அவனை அழைத்துச் சென்று ஜகன்னாதன் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்தது. அன்றிலிருந்து மணிதாஸின் பாடல்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. சொற்பொழிவுக்கான அரங்கமும் ஜகன்னாதர் சந்நிதியிலிருந்து லெட்சுமி தேவி கோவிலுக்கு மாற்றப்பட்டது.

இது தோட்டக்காரனுடைய தோட்டத்தில் (அருள் )மழை பெய்த கதை.

அவனே ஒரு பெரும் தோட்டக்காரன். வண்ண வண்ண உலகை நிர்மாணித்து காலாகாலத்தில் மழையும் வெயிலும் தந்து, மவுனமாய் பக்தர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனாகி, அவர்கள் ஆடியும் அரற்றியும் உரத்து அருளுக்காக கூவுவதை வேடிக்கைப் பார்ப்பவன் !!

இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே


வரும் தீபாவளி நன்னாளில் யாவருக்கும் அந்த கண்ணனின் அருள் பெருகுவதாக.

அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.