Thursday, September 20, 2007

பாரதியும் கபீரும் -பாகம்-2

போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவிலும் கபீர் மற்றும் பாரதியின் கருத்தொற்றுமைகளை சிலவற்றைப் பார்ப்போம்.

துறந்தார் பெருமை பற்றி சொல்லுகையில் கபீர் இப்படிச் சொல்லுகிறார்.

अब कोई चाहत नहीं, तो चिन्ता नहीं ।
चिन्ता नही तो मन पर कोई भार नहीं ॥

அப் கோயி சாஹத் நஹீ, தோ சிந்தா நஹீ
சிந்தா நஹீ தோ, மன் பர் கோயீ பார் நஹீ

வேட்கைக ளில்லை இனிமேல், அதனால் கவலையும் இல்லை
கவலைகள் போனபின் மனதில், அழுத்தும் சுமைகளும் இல்லை

வியாதிகள் பலவுக்கும் காரணம் மன அழுத்தம் அல்லது கவலைகளின் பெருஞ்சுமை. எதையாவது சாதிக்க அல்லது சம்பாதிக்க வாழ்க்கையில் ஓய்விலா ஓட்டம். சில கூடிவரும். பல கூடாமல் போகும். கூடாதவற்றை நினைத்து காலம் முழுதும் மனம் அழுது புலம்பும். மனித வர்க்கத்துக்கே உரித்தான இம்மாயையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பலரும் பல காலமாக சொல்லி வருகின்றனர். பாரதியாரும் குள்ளச்சாமி புகழில் தாம் பெற்ற உபதேசத்தை இப்படி உரைக்கிறார்.

மற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.

"தம்பிரானே; இந்த தகைமை என்னே ?
முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ
மூட்டை சுமந்திடுவதென்னே ? மொழிவாய் " என்றேன்

புன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:
"புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே
இன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்.
...............................
எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா !
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் ;

கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள் என்பதை எவ்வளவு ஆணித்தரமாக பாரதியார் உணர்த்துகிறார்.

Less Luggage More Comfort. ஆசைகளை விட்டு விட்டால் சுமைகள் குறைந்து விடும். அப்படி ஆசையைக் கடந்தவர்கள் நிலை என்ன ? அவர்களை ஷாஹ்-இன்-ஷாஹ் என்கிறார் கபீர்.

चाह गयी चिन्ता मिटी, मनवा वेपरवाह ।
जिन को कुछ ना चाहिये वो ही शहन्शाह ॥

சாஹ் கயீ, சிந்தா மிடீ, மனுவா வேபர்வாஹ்
ஜின் கோ குச் நா சாஹியே வோ ஹீ ஷாஹ்-ன்-ஷாஹ்

இச்சையும் போச்சு, கவலையும் போச்சு, லேசாச்சு மனமே
எச்சுமையும் இல்லாதவனே, பூவில் கோலோச்சும் கோனே

(பூவில் = பூமியில்; கோன்= சக்ரவர்த்தி)

ஷாஹ்-இன்-ஷாஹ் என்பது அரசர்களுக்கு அரசன் என்று பொருள் படும். எல்லாவித ஆசைகளையும் துறந்தவன் யாரிடமும் அடிமைத்தனம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவனை விட சுதந்திரமானவன் கிடையாது. ஆனால் அரசர்களின் அரசனுக்கு அடிமைத்தனம் இல்லாவிட்டாலும் அரசாட்சியின் பொறுப்புகளோடு அவனுக்கு வரும் கவலைகளுக்கு முடிவு கிடையாது. ஆகையால் கவலையற்ற துறவி அரசனை விட மேம்பட்டவனாகிறான். இதே கருத்தை பாரதியின் வரிகளிலே காண்போம். அவரும் இரண்டே வரிகளில் இந்த கருத்தை அடக்கி விடுகிறார்.

ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)

’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன? தவமா ! பாரதி ஏளனம் செய்கிறார்.

சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)

தவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)

இறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்.

पोथी पढ़- पढ़ जग मुआ, पंडित भया न कोय ।
ढ़ाई आखर प्रेम का, पढै़ सो पंडि़त होय ॥

போதி பட்-பட் ஜக் முவ்வா, பண்டித் பயா ந கோய்
டாய் ஆகர் ப்ரேம் கா, படை ஸொ பண்டித் ஹோய்

(ஆகர்=அக்ஷர் அல்லது அட்சரம் என்பதன் திரிபு)

அளப்பிலா நூல்பலக் கற்றே, ஆன பண்டிதர் இலையே
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே

ஹிந்தியில் டாய் (4ஆவது ட). -என்றால் இரண்டரை. ப்ரேம் என்ற வார்த்தைக்கு தேவையான எழுத்துக்கள் அல்லது மாத்திரை காலங்கள் இரண்டரையாகும். எவனொருவன் இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் அறிந்தவனாகிறானோ அவனே உண்மையில் எல்லாமறிந்த பண்டிதன். இரண்டரை எழுத்துகளுக்குள் அடங்கிய இந்த ரகசியத்தை விட்டு மலை மலையாய் சாத்திரங்களை கரைத்துக் குடித்தும் உண்மையறியாமல் இவ்வுலக மக்கள் மடிகின்றனரே (ஜக் முவ்வா) என்று கபீர் வருந்துகிறார்.

அன்பே உலகின் இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சுருதி. சங்கீத கலைஞனுக்கு தம்புராவில் சுருதி கூட்டியதுமே எப்படி மனம் அதிலேயே லயித்து விடுமோ அது போல ஞானிகளின் இறையுணர்வு, அன்பிலேயே கரைந்து நிற்பதாகும். இராமகிருஷ்ணர் இதை பாவசமாதி என்பார். அந்நிலையில் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது. எல்லாம் சக்தி மயம்.

செய்க தவம் ! செய்க தவம் ! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்- வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு (விநாயகர் நான்மணி மாலை)

1 comment:

  1. அன்பே உலகின் இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சுருதி. சங்கீத கலைஞனுக்கு தம்புராவில் சுருதி கூட்டியதுமே எப்படி மனம் அதிலேயே லயித்து விடுமோ அது போல ஞானிகளின் இறையுணர்வு, அன்பிலேயே கரைந்து நிற்பதாகும். இராமகிருஷ்ணர் இதை பாவசமாதி என்பார். அந்நிலையில் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது. எல்லாம் சக்தி மயம்.

    எளிய உண்மை!!!!

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி