Showing posts with label குமரகுருபரர். Show all posts
Showing posts with label குமரகுருபரர். Show all posts

Sunday, March 31, 2024

ஞானமெனும் வேழம்

திருவண்ணாமலையில் ஒரு "பிச்சைக்காரன்". 

பல வருடங்கள் அவரை அப்படியே பொது மக்கள் கருதினர். இன்னும் சிலர் பைத்தியம் என்றனர். அவனை ஹிந்தி காரன் என்று ஊரை விட்டே விரட்டும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். அவனது அல்ப சொல்ப உடமைகளை பறித்துக் கொண்டதோடு அடித்தும் ஏன் கொலை செய்வதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் மலையின் ஏதாவது ஒரு பகுதியிலோ கோவில் மண்டபத்திலோ அமர்ந்து நாம செபத்தில் ஆழ்ந்து விடுவதே அவன் வழக்கம்.

அந்த பிச்சைக்காரனைப் பிடித்திருந்தது ஞானப் பைத்தியம். அந்த மாதிரி பைத்தியங்களுக்கு 'பெரிய ஆசுபத்திரி' திருவண்ணாமலையை விட்டால்  வேறு எது?

சுவாமி ஞானாநந்த கிரி, பெரியசாமி தூரன், கிவா ஜகன்னாதன் போன்றவர்களின் அற்புத கண்டுபிடிப்பு அந்த பைத்தியத்தை யோகி ராம்சுரத்குமார் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 

இந்த பைத்தியத்தைத் தேடி  சுதாமணி என்ற  இன்னொரு பைத்தியம் கேரளாவின் ஒரு மீனவ குப்பத்திலிருந்து வந்தது. அந்த மாதரசி  கிருஷ்ணனின் பரம பக்தை. நாம் மீராவின் பக்தியையும்  ஆண்டாளின் பக்தியைப் பற்றியும் படித்தும் கேட்டும் இருக்கிறோம். அவர்களுடைய பக்திக்கு எவ்விதத்திலும் சளைக்காத பக்தி அவரை ஒரு பைத்தியமாகவே ஆக்கியிருந்தது.  அதை புரிந்து கொள்ள இயலாத அவருடைய சுற்றத்தாரும் ஊராரும், பைத்தியத்தைக் கண்டு பேசிய பேச்சுகளும் அதை விடுவிக்க செய்த காரியங்களும் பெரும் மனத்துன்பத்தைத் தருபவையாயிருந்தன.   அவருடைய வரலாறை அறிய இந்த இணைப்பை சுட்டவும்.


கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.  தன்னுடைய மகள் வயது ஒத்த 'அன்னை' அமிருதானந்தமயியைக் கண்டதும்  பிச்சைக்காரன்  அவரை அமர வைத்து தன் கையில் எப்போதும் இருக்கும் விசிறியால்  அவருக்கு  காற்றை வீசி தன்னுடைய அளவற்ற அன்பை வெளிகாட்டினார். 

இருவரை பற்றியும்  சரியான முறையில் தெரிந்து கொள்ள உலகத்துக்கு பலகாலம் பிடித்தது.

இந்த உலகோரின் போக்கே விசித்திரம். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் அறியாத குழந்தைகள் போல மாயையின் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். அதைக் கண்டு குமரகுருபர சுவாமிகள் சொல்லிய பாடல்:

பரபரப்பினோடே பலப்பல செய்தாங்கு 
இரவு பகல்  பாழுக்கிறைப்ப - ஒரு ஆற்றான்
நல்லாற்றில் நூக்கில்  பதறி  குலை குலைப
எவ்வாற்றான் உய்வார் இவர் ?  -       நீதி நெறிவிளக்கம் (89)

பாழுக்கிறைப்ப = வீணில் கழித்து
ஒரு ஆற்றான்      = ஒரு வகையில்
நல்லாற்றில்         = நல்ல வழியில்
நூக்கில்                  =ஈடுபடுத்தினால்
பதறி குலை குலைப  = பதறி நடுங்குவர்
எவ்வாற்றான்       = எந்த வகையில்
உய்வார் இவர்     = இவர் இறைவனை அடைவர் 

உலகினர் இரவு பகலாக மனம் வாக்கு காயம் மூன்றினாலும் மேன்மை தராத பலப்பல காரியங்கள் செய்து மன அமைதியின்றி வீணில் கழிக்கின்றனர். ஒரு சான்றோன் வந்து, ஒரு வேளை, அவர்களை நல்ல வழியில் ( இறை சிந்தனையில்) ஈடுபடச் சொன்னாலும் அவர்களது மனம் அதை ஏற்காது. பதறி மெய் நடுக்கம் கொள்வர்.  இவர்கள் முன்னேறுவதற்கான வழியேது என்று விசனப்படுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த பிரச்சனை எல்லாக் காலத்திலும் உள்ளது. புத்தர் ஏசு நானக் கபீர் காணாத எதிர்ப்புகளா ?  அதனால் கபீர் ஆத்ம சாதகனுக்கு  தைரியம் தரும்அறிவுரை "எதைப்பற்றியும் கவலைப்படாதே. யானையைப் போல முன்னேறு"

हस्ती चढ़िए ज्ञान कौ, सहज दुलीचा डारि |
स्वान रूप संसार है, भूँकन दे झख मारि ||

ஞானெமெனும் வேழம் மேல்  மோனமெனும் இருக்கை ஏறிடு |

சுவானம் போலும் உலகம், குரைத்தே அடங்கிடும் கண்டிடு ||

(சுவானம் = நாய் ; மோனம் = நிர்விகல்ப சமாதி )

ஞானத்தின் லட்சணமே சமதிருஷ்டி. அதைக் கண்டவர்க்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம் கிடையாது. அந்த நிலையை அடைந்தவரை உலகத்தின் போக்கு எவ்விதத்திலும் பாதிக்காது. அதனால் ஞானத்தை யானைக்கு ஒப்பிடுகிறார் கபீர். அந்த ஞானியின் விருப்பம் என்ன ? சதா சர்வ காலமும் ஆனந்த நிட்டையில் ஆழ்ந்திருப்பது தான்.  உரையற்ற அந்த நிலையையே மோனநிட்டை எனும் இருக்கை என்று குறிப்பிடுகிறார். 

இறைவன் மகான்களை மனிதரிடையே அவர்களை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்ல அனுப்பிக் கொண்டே இருக்கிறான். அவரவர் வினை வழியில் தக்க காலத்தில் குரு அருள் கிட்டுகிறது. 

கீழே காணும் சித்திரம் இந்த பதிவிற்காக பிரத்யேகமாக வரையப்பட்டது. அந்த படம் இந்த பதிவை மறக்கவிடாது :)))


ஜெய் குரு தேவ் 

Thursday, June 25, 2009

குஞ்சரம் சிதர்த்த சிறுகவளம்

வரவுக்கும் செலவுக்கும் முடிச்சு போடுவதுதான் பட்ஜெட். பலர் சிக்கனத் திலகங்கள், கணக்கு போட்டு் செலவு செய்வார்கள். வேண்டிய செல்வம் இருந்தும் செலவே செய்ய விரும்பாத மகோதையர்களும் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு கையிலே காசு நிற்கவே நிற்காது, பாரதியார் போல.

இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை சமன்படுத்த வந்த அரசியல் வழியமைப்புகள் எல்லாம் தோற்று விட்டன.
சட்டத்தால் சாதிக்க முற்படுவது எதுவும் பயத்தை அடிப்படையாகக் கொண்டது. அது நிலைத்து நிற்காது. சுயநலம் என்ற எலி சட்டத்துள் இருக்கும் பொத்தல்களுக்கு இடையே புகுந்து தன்னிச்சையை பூர்த்தி செய்து கொள்ளும்.

அதுவே அன்புணர்ச்சியை தூண்டிவிட்டு அந்த எலி புத்தி தலையெடுக்காமல் செய்தால் ஏற்றத்தாழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் பெருகும். அதை காலம் காலமாக நமது நாட்டில் பெரியவர்கள் நடைமுறை படுத்தி வந்திருக்கின்றனர். இங்கே ஒரு நல்ல உதாரணத்தை சொல்கிறார் குமரகுருபரர்.

முருகன் அருளால் வாக்சித்தி பெற்ற குமரகுருபரர் காசியிலேயே திருபனந்தாள் மடம் நிறுவி வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை பெற்றவர்.
அவர் பல அரிய கருத்துகளை சொல்லி வைத்திருக்கிறார். அதில் ஒன்று

வாங்கும்
கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கது கொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும்
கிளையோடு அயின்று

(தூங்கும் களிறு= அசைந்து கொண்டிருக்கும் யானை)

”தன் உணவில் ஒரு சிறு கவளம் சிதறினால் யானைக்குப் பெரிய நட்டம் எதுவும் இல்லை. ஆனால் அது எறும்பு போன்ற எத்தனை கோடி ஜீவன்களுக்கு வாழ்வளிக்கிறது என்பதை நினைத்து வசதி படைத்த பெரும் தனவந்தர்கள் தங்கள் செல்வத்தை மனமுவந்து சமூகத்தின் நற்காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதால் அவர்களின் பெரும் நிதிக்கு எந்த குறைவும் வந்துவிடாது” என்ற கருத்தை வலியுறுத்துகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த உண்மை புரியாத ஸ்ரீனிவாஸ நாயக்கனோ ஒரு அந்தணன் கேட்ட ஒரு சிறிய உதவி செய்ய மனமின்றி அவரை அலைக்கழித்தான். நவ கோடி நாராயணன் என்று பண்டரிபுரத்தருகே புகழ்பெற்ற வைர வியாபாரியாக இருந்த அவன் உதவினால் தன் பேரனின் பூணூல் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று அந்தணன் ஒருவன் ஒரு நாட்காலையில் அவன் கடை வாயிலில் நின்றான்.

’நாளை வாரும்’ என்று அனுப்பி வைத்தான் ஸ்ரீனிவாஸன். அடுத்த நாளோ காலையிலிருந்து அந்தி கடைமூடும் வரை அவரது கடையிலேயே ஓர் ஓரமாக கால்கடுக்க நின்றிருந்தான் அந்த அந்தணன். அன்று முழுவதும் அரண்மனையிலிருந்து வருவோரும் போவோருமாக இருந்தனர். கடை மூடும் சமயத்தில் அவரை அப்போதுதான் பார்ப்பது போல “ லெட்சுமி வருகின்ற நேரத்தில் ஏதும் தர இயலாதே. நாளை அஷ்டமி. நீங்கள் தசமி தினம் வாருங்கள் பார்ப்போம்” என்று சொல்லி அனுப்பினான் கொடாக்கண்டன் ஸ்ரீனிவாஸன்.

பல தசமிகள் வந்து போயின. விடாக் கண்டனான அந்தணன் சளைக்கவில்லை.

கடைசியாக ஸ்ரீனிவாஸனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. சில காசுகளை பையில் போட்டு அந்தணன் கையில் கொடுத்தான். அதைப் பிரித்து பார்த்த போது புரிந்தது எல்லாம் செல்லாத காசுகள் என்பது. “ ஐயா ! இவை செல்லாக் காசுகள்” என்று தயங்கியபடியே உரைத்தான் அந்தணன். “ செல்லும், செல்லும்.. செல்ல வேண்டிய இடத்தில் செல்லும்” என்று முகத்தை திருப்பியபடியே பேச்சில் விருப்பமில்லாதவனாய் பதிலளித்தான் வைர வியாபாரி ஸ்ரீனிவாஸ நாயக்கன்.

அந்தணனுக்கு தான் ’செல்ல வேண்டிய இடம்’ எதுவென்று புரிந்தது. வியாபரியின் வீட்டை அடைந்து மனைவியார் சரஸ்வதி பாய்-ஐக் கண்டு முறையிட்டான். அவரும் தன் கணவரின் செயலுக்காக வெட்கினார். ஆயினும் அவரை மீறி அவருக்கு விருப்பமில்லாததை தான் எதுவும் செய்ய இயலாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அந்தணன் நயமாக ஒரு கருத்தை முன் வைத்தான். தந்தை கொடுத்த சீதனம் முறைப்படி அவருக்கு உரியதுதானே. அதனை தானம் செய்வதால் தவறேதுமில்லை என்று சொன்னான். அதுவும் உண்மைதான் என்று மனதிற்குப் படவே தன் வைர மூக்குத்தியை கழற்றி அவருடைய சுப செலவுகளுக்கென கொடுத்து விட்டாள்.

அந்தணனுக்கோ பணம் வேண்டும். அதை நேரே அந்த வியாபாரியின் கடைக்கே கொண்டு சென்று இதை வைத்துக் கொண்டு பணம் தாரும் என வேண்டினான். அது தன் மனைவியுடையது என்று அடையாளம் கண்டு கொண்ட ஸ்ரீனிவாஸன் “எங்கு கிடைத்தது?” என்று வினவினான்.

” நல்ல மனம் படைத்த அன்பர் ஒருவர் கொடுத்து உதவினார்” என்றான் அந்தணன்.

“ மிகவும் சுமாரான வைரம். அம்பது தங்கக் காசுகள் பெறும்” என்று சொல்லி கொடுத்தான். அந்தணனுக்கு வந்த காரியம் முடிந்தது. அந்தணன் கிளம்பியதும் கடை ஆள் ஒருவனை அவரை பின் தொடர்ந்து எங்கு செல்கிறார் என்பதை கண்டு வர அனுப்பினான் ஸ்ரீனிவாஸன்.

பின்னர் அந்தணர் கொடுத்த மூக்குத்தியை பெட்டியில் பத்திரப்படுத்தி வீட்டுக்கு விரைந்தான். அந்த நேரத்தில் கணவரை சற்றும் எதிர்பார்க்காத சரஸ்வதி அம்மையாருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. மூக்குத்தி எங்கே என்ற கேள்விக்கு எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனவள் இறைவன் முன்னே நின்று அழுதார்.
“அந்த பிராமணனை ஏன் அனுப்பினாய்? என்னால் என் கணவரிடத்து பொய் சொல்ல முடியாது. எனக்கு முன்னே இருக்கும் ஒரே வழி உயிரைப் போக்கிக் கொள்வதுதான்” என்ற எண்ணங்களுடன்,காதில் அணிந்திருந்த தோடிலிருந்து ஒரு வைரக்கல்லை பொடித்து விஷமாக அருந்தத் தலைப்பட்டார்.

ஆச்சரியம்! அந்த குவளையின் உள்ளே ஏதோ உலோகச் சத்தம் கேட்டது. துளாவிப் பார்த்ததில் அந்தணருக்கு கொடுத்த அதே மூக்குத்தி. மகிழ்ச்சியுடன் கணவரிடம் கொண்டு சென்றார். வாயடைத்து நின்றான் ஸ்ரீனிவாஸ நாயக்கன். காதில் வைரக் கல்லை காணவில்லை. அவனுக்கு என்ன நடந்தது என்று புரிந்து விட்டது. குற்ற உணர்வால் அவள் உயிரை மாய்த்துக் கொள்வதை அவனால் தாங்க முடியவில்லை. சரஸ்வதி அம்மையாரும் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறினார்.

உடனே கடைக்கு ஓடினான் ஸ்ரீனிவாஸன். அவன் பத்திரப்படுத்தி வைத்த மூக்குத்தி மாயமாகி விட்டிருந்தது. அதே நேரத்தில் அவன் அனுப்பிய ஆள் வந்து அந்த அந்தணன் பாண்டுரங்கன் சந்நிதியில் மாயமாய் மறைந்து போனதை சொன்னான்.

இப்போது ஸ்ரீனிவாஸ நாயக்கனின் அகக்கண் திறந்தது. பாண்டுரங்கனே தன்னை இடைவிடாது துரத்தித் துரத்தி ஆட்கொண்டிருக்கிறான் என்பதை நினைக்க நினைக்க அவன் மனம் மருகியது. எப்பேர்பட்ட பாவியாகி விட்டேன். யாருக்கும் கிடைக்காத விட்டலன் என் வீட்டிற்கும் கடைக்குமாக நடையாய் நடந்திருக்கிறானே. என் அறிவீனத்தைப் போக்குவதற்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறான் ! செல்லாக் காசை வாங்கிக் கொண்டு எல்லாவற்றிலும் பெருநிதியான அருட்செல்வத்தை வாரி வழங்கிவிட்டானே என்று பலவாறாக துயருற்று அரற்றினான்.

பின்னாளில் அவன் மனம் வருந்தி பாடிய பாடல் ஒன்று

தப்புகளெல்லா நீனு ஒப்பி கொள்ளோ
நம்மப்ப, - காயபேகு திம்மப்பா நீனே


(தப்புகளையெல்லாம் நீ ஒத்துக்கொள் என்னப்பனே - காத்திடல் வேண்டும் திம்மப்பனாகிய நீனே )
.............
அதிதிகளெந்து பந்ரெ மனெகெ -நா
தியில்ல, கூடது எந்தெ

(அதிதி என்று வந்தால் வீட்டிற்கு, நான் கதியில்லை (அவர்களுக்கு உணவளிக்கக்) கூடாது என்றேன்)

யதிகள கூட நிந்திஸிதெ கொனெகெ- ஸ்ரீ
பதி த்ருஷ்டியிடு ஈ பாபி கடெகெ


(சாதுக்களையும் கூட இறுதியில் நிந்தித்தேன் ;ஸ்ரீபதியே உன் கடைக்கண்ணை இந்த பாவியின் பக்கம் இடு)
..........
எஷ்டு ஹேளலி அவகுண ளெல்லா -அவு
அஷ்டு இஷ்டு எந்து எணிகெ இல்லா
த்ருஷ்டி யிந்லி நோடோ தீனவத்ஸலா- ஸர்வ
ஸ்ருஷ்டிகெடை புரந்தர விட்டலா


(அவகுணங்களை எவ்வளவு என்று சொல்வேன் -அவைகள் இவ்வளவு அவ்வளவு என்று எண்ணிக்கையில் இல்லை
கருணையுடன் பார் தீனவத்ஸலா- சர்வ சிருஷ்டிக்கும் உடையவனாகிய புரந்தர விட்டலனே )


(கன்னட சொற்கள் : காய பேகு =காப்பாற்ற வேண்டும் ; திம்மப்பா =இறைவனை செல்லமாக குறிப்பது ; மனெகெ=வீட்டிற்கு; கொனேகெ=இறுதியாக; கடெகெ= பக்கமாக ; நோடு= பார்; ஒடைய =உடையவன் சொந்தக்காரன்; எணிகெ= எண்ணிக்கை)

ஸ்ரீனிவாஸ நாயக்கன் புரந்தரதாஸனாக மாறிய கதை இது.

பாண்டுரங்கனின் பெரும் அருள்நிதி கிட்டியதும் உலகில் அவர் ஈட்டிய பெருஞ் செல்வமல்லாம் யானையின் சிறு கவளத்தின் சிதறல் போன்றாகி விட்டது. அது எம்மாத்திரம் என்று தன் செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டார். வெறும் கட்டிய துண்டுடன் மனைவி மக்களுடன் கிளம்பி விஜயநகரத்தை அடைந்து வியாசராயரின் சீடராகி- புரந்தரதாஸனாகி - ஹரி சேவையிலேயே காலம் கழித்தார்.

குமரகுருபரர் போல பண்டிதர் அல்லர் கபீர்தாசர், ஆனால் காலத்தால் முந்தையவர். மிக சுலபமாக எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவரும் அதே உதாரணத்தை சொல்லியிருக்கிறார்.

कुंजर मुख से कन गिरा, खुटै न वाको आहार ।
कीडी कन लेकर चली, पोषन दे परिवार


குஞ்சரம் சிதர்த்தது சிறுவத்தம், குஞ்சரத்துக் கில்லை நட்டம்
சஞ்சரித்த எறும்பின் கூட்டம், கண்டதோர் உணவின் தேட்டம்


(குஞ்சரம் =யானை; சிதர்த்தல்= சிந்துதல் ; வத்தம்= சோறு ; தேட்டம்=சம்பாதனை)

தானம் செய்வதில் மனிதர்கள் தயக்கம் கொள்ளக்கூடாது என்ற வகையில் இதற்கு பொதுவாக பொருள் கொள்ளலாம்.

மிக செல்வந்தர்களான புரந்தரதாஸருடைய வாழ்க்கையும் பட்டினத்தார் வாழ்க்கையும் காட்டுவது, ஞானம் வந்தபின் அதுவே பெருஞ்செல்வமாகி விடுகிறது. அந்நிலையில் எவ்வளவு உலகச் செல்வமானாலும் அது தூசு போல கணக்கற்று போகிறது.

இன்னுமொரு வகையில் பார்த்தாலும் அவர்கள் யானையை போன்று ஆன்மீகத்தில் உயர்ந்து நிற்பவர்கள். நாம் எறும்புகள் போல் அவர்கள் காலடியில் ஊர்ந்து கொண்டிருக்கிறோம்.

கர்னாடக சங்கீதத்திற்கே இலக்கணம் வகுத்தவர் என்று போற்றப்படுபவர் புரந்தரதாஸர். வெங்கடாசல நிலையம், பாக்யத லக்ஷ்மி பாரம்மா, ஆடிசிதளு யசோதா போன்றவை மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். இறைவனை போற்றுவது மட்டும் அல்லாமல் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பல தத்துவ பாடல்களையும் இயற்றியவர்.

புரந்தரர் 475000 பாடல்கள் பாடியதாக சொல்லப்படுகிறது. அது அவர் பெற்ற அருள் நிதியிலிருந்து நமக்காக சிந்தியது. அதி்லும் நமக்கு கிடைத்திருப்பது சுமார் 800 பாடல்களே. எறும்புகளாகிய நாம் அவற்றை ஜீரணித்து கொள்ளவே எவ்வளவு காலம் பிடிக்குமோ !

Wednesday, May 27, 2009

அந்தபுரம் சுற்றும் பூனை

பள்ளியில் யாவருக்கும் சொல்லிக் கொடுக்கப்படும் பிரபலமான ஆங்கில குழந்தைப் பாடல் ஒன்று:

Pussy cat pussy cat where have you been
I had been to London to look at the queen
pussy cat pussy cat what did you do there
I frightened a little mouse under the (queen's) chair

பூனை ஒன்று அரசவையில் நுழைவதால் அதற்கு பெருமை ஏதும் இல்லை. ஆனாலும் இவ்வுலகில் ஆதாயம் ஏதேனும் கிடைக்குமா என்ற தன்னலத்தால் பல பெரும்புள்ளிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவோர் அனேகம். பல்லிளித்து கால்பிடித்து தகுதிக்கு மேல் புகழ்ந்தேனும் செல்வாக்கு உடையவரின் நல்லெண்ணத்தை சம்பாதித்து கொள்ள துடிக்கிறது அவர்கள் மனம்.

இதற்கானக் காரணம் பிறரை வைத்து தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனமே.

நம்மை சுற்றி இருப்பவர் சிறப்பாக வாழ்கின்றனர் எனக் கருதினால் நாமும் அவர் போல் ஆவதற்கு விரும்புகிறோம். அப்போது அதற்கான வழி முறைகளை தேட ஆரம்பிக்கிறது உள்ளம்.

அதன் முதல்படியாக நம் விருப்பங்களுக்கு ஊக்கம் கிடைக்கும் சூழ்நிலைகளையோ நண்பர்களையோ நாடுகிறது. அவர்கள் செய்யும் பல காரியங்கள் ஏற்புடையாதாகிறது. ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் “ஊரோடு ஒத்து வாழ்” என்பது போன்ற பழமொழிகளின் துணைகொண்டு ஏற்புடையதாக்கிக் கொள்கிறோம். செல்வாக்கு உள்ளவர்கள் ஆதரவைத் தேடி சமூகத்தில் நமது செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எல்லாக் காலத்திலும் எல்லாத் துறையிலும் கண்டு வரும் மனித இயல்பு இது.

கபீர்தாஸரும் இத்தகைய சந்தர்பவாதத்தை கேலி செய்கிறார்.

स्वारथ कू स्वारथ मिलै, पडी पडी लंबा बूब ।
निस्प्रेही निराधार को, कोय न रांखै झूंब ॥


தன்னலம் மிக்கார் கூடின், நீண்டு முழங்குதே ஆரவாரம்
தன்னல மில்லாத் தீனருக்கோ, ஏது மில்லை புகழாரம்

(மிக்கார்= மிகுந்தவர்கள் )
மாற்று:
கட்டித் தழுவி கவிபுனைவர் தன்னல நெஞ்சர் சேர்கையிலே
எட்டித் தள்ளி விலகிடுவர் தியாகச் செம்மல் வருகையிலே

சுயநல அடிப்படையில் எழும் நட்பில் எவ்வித ஆழமும் இருப்பதில்லை என்பதை யாவரும் அறிவர். ஏனெனில் ஒருவன் கஷ்ட தசையில் சிக்கிக் கொள்ளும் போது முன்பு கூடி குலாவிய நண்பர்கள் காணாமல் போய் விட்டிருப்பார்கள். இந்த உறவு காரண காரியங்களோடு கூடியது.

குளத்திற்கும் பறவைகளுக்கும் உள்ள உறவு போன்றது.

“வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது;
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது “

என்பது திரைப்படப் பாடல் ஒன்றில் வரும் மிகவும் பொருள் பொதிந்த வரிகள்.

சான்றோர்கள் நிலை முற்றிலும் மாறானது. அவர்கள் கொள்ளும் நட்பு வலுவானது. பிரதிபலன் கருதாதது. பிறர் தம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் என்பது பற்றிய சிந்தை யில்லாதவர்கள். உலகத்தவரால் கவனிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு சிறுமை ஏதும் வந்துவிடுவதில்லை. அவர்களை அரண்மனைக்கு வெளியே கட்டப்பட்டிருக்கும் யானைக்கு ஒப்பிடுகிறார் குமர குருபர சுவாமிகள்.

வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கை களிறு.

{கந்துகொல் பூட்கை = கட்டுத்தறியை உடைக்கும் வலிமை உடைய ; புறங்கடைய களிறு= வெளியே நிற்கும் யானை (போல) வேத்தவை =வேந்தன் அவை ; மிகல் மக்கள் காவார்= அரசவைதான் பெருமையென்று மேன்மக்கள் காத்திருக்கமாட்டார்: வேறுசிலர் = மேன்மக்கள் அல்லாதவர் ; மாத்தகைய அந்தபுரத்து பூஞை= பெருமைக்குரிய அரண்மனை அந்தபுரத்தை சுற்றிவரும் பூனை (போல்) காத்துக் கொண்டாங்கு உவப்பு எய்தார்= பயன் கருதி காத்திரு்ப்போரும் மகிழ்வு அடைவதில்லை. }

அரண்மனைக்கு வெளியே நிற்பதால் யானைக்கு சிறுமை உண்டாவதில்லை. அரண்மனைக்குள்ளே சுற்றித் திரிவதால் பூனைக்கு யாதொரு பெருமையும் இல்லை. அந்தபுரம் என்று சொல்ல வந்தது ’யாரும் நுழைய முடியாத இடத்திலும்’ புகும் தன்மை உடையது பூனை என்பதை குறிக்க வந்ததாகும்.

கபீரும் குருபரரும் சொல்ல வருவது ஒன்றே. சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். அதனால் எவரும் பயனடைவதில்லை. காலம் வீணே போய்க்கொண்டிருக்கும் என்பதே.