Showing posts with label நாலடியார். Show all posts
Showing posts with label நாலடியார். Show all posts

Wednesday, May 19, 2010

பேச்சால் வளருது ஏச்சு

வங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் கூட்டம் போல அன்று (அதாவது 2-6-1900) வடமொழி பாண்டித்திய அங்கீகாரம் பெறுவதற்காக நாடெங்கிலுமிருந்து பண்டிதர்கள் குழுமியிருந்தனர். அவர்களுள் ஒருவர் கணபதி முனி . முக்கிய தேர்வு பொறுப்பில் இருந்தவர் வங்காளத்தைச் சேர்ந்த அம்பிகா தத்தர். வங்காளத்தில் அவரை அறியாத பண்டிதரே கிடையாது எனலாம்

முதல் கோணல் முற்றும் கோணல் என்பர்.

அவரை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் சென்ற அன்பரிடம் அம்பிகா தத்தரின் காதில் விழும்படியாகவே “யாரிந்த பெரியவர் ?” என்று கேட்டார் கணபதி முனி.

தத்தரும் சிரித்துக் கொண்டே ஒரு கவிதை வடிவில் ‘கவுட பாகத்திலிருந்து வந்திருக்கும் ஆசுகவி அம்பிகா தத்தன் யான்’ என்று சொல்லி நிறுத்தினார். இப்போது கணபதி முனியின் முறை. கவிதைக்கு கவிதையிலே பதில் சொல்ல வேண்டும்.[கவுடதேசம் வங்காளத்தில் ஒரு பகுதி]

“நீரோ அம்பிகையின் தத்தர், நானோ அவள் புத்திரன் கணபதி, தட்சிணத்தவன், கவி பாடுவதில் திறமையுள்ளவன்”
என்று சிறிதும் யோசிக்காமல் பதில் கவி சொன்னார். தத்தர் என்றால் வளர்ப்பு மகன் என்றும் பொருள் கொள்ளலாம். என்ன இருந்தாலும் தத்து மகன் சொந்த மகனைவிட ஒரு மாற்று குறைவு தானே !

கவிதையிலேயே பொருள் விடுவிக்கும் சமஸ்யங்கள் (புதிர்கள்) ஆரம்பித்தது

“ மருமகள் மாமனாரை இச்சித்து முந்தானை விலக்கினாள், ஆனால் கற்பில் தவறாதவள் அவள்....” ?????

“ சந்திரனை முத்தமிடும் எறும்புகள் .....“????

“ வருடத்தில் ஒரு நாள் சிவன் முகம் பார்க்காத பார்வதி...???’’

எல்லாப் புதிர்களுக்கும் சமத்காரமாக கவிதையிலேயே பதில்களை சொல்லிக் கொண்டு வந்த போது நடுவிலே ஸார்வசாம் என்பதற்கு பதிலாக ஸர்வேசாம் என்று சற்று வார்த்தைகள் மாறி விழுந்தன கணபதி முனிக்கு. உடனே திருத்திக் கொண்டு தொடர முற்படுகையில் அம்பிகா தத்தர் குறுக்கிட்டார்.

”கவிதை அருமை, உரையும் அருமை பேச்சிலே மட்டும் குழறல் ஏன்? தாரா வை வழிபட மறந்தனையோ” என்று குத்தலாக கேட்டார். அது கணபதி முனிக்கு மனவருத்தத்தை அளித்தது. ஆனால் அம்பிகா தத்தர் சொன்ன அந்த கவிதையிலே ஒரு இலக்கணப் பிழை இருந்தது.

அந்தப் பிழையை சுட்டிக்காட்டி கணபதி முனி பதிலடி கொடுத்தார். இப்போது அம்பிகா தத்தர் தன் நடுநிலை தவறினார்.

“பெருமை வேண்டாம் யானையே,[ஆனை முகத்தான்] யானையின் மூளையைத் தின்ன சிங்கம் [அம்பிகையின் வாகனம்] காத்திருக்கிறது “ என்று பொருள் வருமாறு தன்னை சிங்கமாகவும் கணபதிமுனியை யானையாகவும் இடித்துரைத்தார். அதிலும் ஒரு இலக்கணப் பிழை.

தட்சிணத்து கவி விடுவதாயில்லை

”காகமே! மாமரத்தில் அமர்வதானால் வாயை மூடிக்கொண்டு இரு. அப்போதாவது மக்கள் உன்னை குயில் என்று நினைக்கக் கூடும் “ என்று இன்னொரு பாடலில் சூடாக பதில் சொன்னார். யானையும் சிங்கமும் போய் குயிலும் காகமும் வந்தன.

தத்தருக்கு கோபம் எல்லை மீறியது.

”அடே ! மின்மினிப் பூச்சியே இரவில் மட்டும் தானே உன் மினு மினுப்பெல்லாம் “.

பறவைகளை விட்டு பூச்சி அளவுக்கு இறங்கி விட்டார். விடுவாரா கணபதி!

“ வீட்டுக்குள்ளே மட்டும் தானே விளக்கு ; வெளியில் வந்தால் காற்றால் அலைகழிக்கப்பட்டு அணைவது தானே அதன் இயல்பு “

”பட்டர்களெல்லாம் [தென்னிந்திய அந்தணர்கள்] குடித்துவிட்டு உல்லாசமாய் கணிகையரோடு விழுந்து கிடப்பவர்கள்”

“ கவுடர்களெல்லாம் மீன் ருசிக்காக செல்வத்தையும் வாழ்வையும் தொலைப்பவர்கள்”

உவமான உவமேயங்கள் தேய்ந்து நேரடியான பரஸ்பர தாக்குதலுக்கு இறங்கி விட்டனர் பண்டிதர் இருவரும்.

இந்த நிலையை படித்தபோது கபீரின் ஈரடி ஒன்று நினைவுக்கு வந்தது.

आवत गारी एक है, उलटत होय अनेक ।
कहैं कबीर नहीं उलटिये, वही एक की एक ॥


ஏச்சு ஒன்று பாய்ந்தது, எதிர்பேச்சால் அது பலவானது
பேச்சு வேண்டாம் கபீரா, போகட்டும் தனிமை யிலது


மாற்று
ஏச்சு வருவதோ ஒற்றையாய், எதிர்பேச்சால் வளருது பலவாய்
பேச்சால் பயனில்லை கபீரா, போகட்டும் விடு அதைத் தனியாய்


மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த பேச்சு என்கிற வரம் முறை தவறி பயன்படுத்தப்படுவது போல வேறெந்த கரணமும் இல்லை என்றே கூறலாம். இதனால் வருகின்ற இடர்கள்தான் எத்தனை எத்தனை !!.

வாதங்களில் தனது வாதமே கடைசியாக இருக்கவேண்டும், அடுத்தவனின் வாயை அடைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசத்துடன் பலரும் விடாது வார்த்தைகளை வளர்த்துக் கொண்டே போவர். நேரம் செல்லச் செல்ல பொருள் குறையும், கோபம் அதிகமாகும். அத்தகையவர்களின் போக்கை நாலடியார் சித்தரிக்கிறது.

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்; -கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்பது அறியார்
பல உரைக்கும் மாந்தர் பலர்
.

[சொற்றாற்றுக் கொண்டு = சொற்களை ஆயுதமாகக் கொண்டு; சுனைத்தெழுதல் காமுறுவர் =வம்பு சண்டைக்கு போவதை விரும்புதல் ; செலவுரைக்கும் ஆறு= மனதில் பதிய வைக்கும் வகை ]

பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற ஆதங்கத்தில், அவசரத்தில், கோபத்தில் பேசப்படும் அதிகமான எதிர்பேச்சுகள் அர்த்தமற்றவைகளாக முடிகின்றன. அத்தகைய நேரங்களில் மௌனத்துடனோ அல்லது ஒரு மென்மையான மறுப்புடனோ நிறுத்திக் கொள்ளவோ தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாலடியாரின் பார்வையில் சொல்வதானால் தோற்பது அறிய வேண்டும்.

அதற்குத் தேவையானது அவசியமற்ற பேச்சில் ஆர்வமின்மை. இரண்டாவதாக எப்போது பேச்சு அனாவசியாமான திசையில் திரும்புகிறது என்பதை கண்டு கொள்ளும் விவேகம். இது இரண்டும் இருந்து விட்டால் மௌனத்தின் அருமை தானே புரிய ஆரம்பிக்கும். மௌனம் கூடாவிட்டால் இறை செபம் வாய்க்காது. இறைசெபம் இல்லாமல் இறையருள் வாய்க்காது.

பரமஹம்ஸ தேவர், கபீரின் இந்த கருத்தை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்குவார்.

கங்கையில் படகு ஒன்றில் சில போக்கிரிகள் குடித்துவிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீரோட்டத்தில் மிதந்து வந்த ஒரு காலியான படகு அவர்களுடைய படகுடன் மோதியது. அதில் மட்டும் யாரேனும் இருந்திருந்தால் சண்டை மூண்டிருக்கும். யாரும் இல்லாது போனதால், அங்கே இவர்களின் கும்மாளம் மட்டுமே தொடர்ந்தது. அது போல் நம்முள் அகங்காரம், கோபம் என்ற பயணிகள் இல்லாமல் போனால் எந்த மோதலிலும் ஏச்சுகளினால் நம் அமைதி கெடுவதில்லை.

கணபதி முனியை அங்கேயே விட்டுவிட்டீர்களே ! அவருடைய சொற்போர் என்ன ஆச்சு என்று வாசகர் நினைப்பது புரிகிறது.

மீன் சுவையை குறிப்பிட்டதுமே வங்கத்து அம்பிகா தத்தருக்கு முகம் மலர்ந்து விட்டது. அதிலும் கணபதி முனி அந்த கவிதையில் சொற்களை கையாண்ட விதம் அவருடைய வடமொழிப் புலமையை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு உயர்த்தி விட்டது. அம்பிகா தத்தர் எழுந்து சென்று அவரைத் தழுவிக் கொண்டார். இருவரும் பரஸ்பரம் வாக்கு வாதத்திற்காக வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

கணபதி முனி அவர்களுக்கு பதினான்கு பண்டிதர்கள் ’காவ்யகண்ட கணபதி சாஸ்திரி’ என பட்டம் கொடுத்து கையெழுத்திட்ட சர்வகலாசாலையின் அங்கீகாரமும் கிடைத்தது.

சரி, அந்த மூன்று புதிர்களுக்கும் என்ன விடை என்று கேட்க நினைப்பதும் புரிகிறது. கணபதிமுனி அளித்த விடைகளை கீழே தருகிறேன்

” மருமகள் மாமனாரை விரும்பி முந்தானை விலக்கினாள், ஆனால் கற்பில் தவறாதவள் அவள்....” ?????

பீமனின் மனைவியான ஹிடும்பை புழுக்கம் அதிகரித்ததன் விளைவாக காற்று வாங்குவதற்காக தன் மேலாடையை விலக்கினாள். [வாயுதேவன் பீமனின் மானசிக தந்தை ஆதலால் ஹிடும்பைக்கு மாமனார் முறை ஆகவேண்டும்].

“ சந்திரனை முத்தமிடும் எறும்புகள் .....“????

தட்சணின் யாகத்தில் பார்வதி தீக்குளித்தாள் என்று அறிந்த சிவன் மயங்கி விழுகிறான். அப்போது அவன் முடியிலிருக்கும் பிறைசந்திரன் பூமியை தொடுகிறது. அந்நிலையில் அங்கே ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் சந்திரனை முத்தமிட்டன.

“ வருடத்தில் ஒரு நாள் சிவன் முகம் பார்க்க மறுக்கும் பார்வதி...???’’

விநாயக சதுர்த்தியன்று சந்திரனைக் கண்டால் அபவாதம் வரும் என்பதால் பிறை சூடிய சிவன் முகத்தை காண மறுக்கிறாள் பார்வதி.

அனைத்து புதிர்களுக்கும் ஆசுகவியாய் கவிதையிலேயே பதில் சொல்லி சபையோரை வியப்பில் ஆழ்த்தினார் கணபதி முனி.


[படம் : நன்றி ஷ்யாம், பிகாஸா வெப் ஆல்பம்]

பிற்காலத்தில் நாயனா என்று யாவராலும் அழைக்கப்பட்ட கணபதி முனி பகவான் ரமணருடைய அன்புக்கு பாத்திரமான சிஷ்யர். வேத சாஸ்திரங்களை பிழையற கற்றறிந்த அவருக்கு ரமணர்தான் ஞானகுரு. ஆனால் இவர் ரமணாஸ்ரமத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து கடுந்தவம் புரிந்தார். குடும்ப பொறுப்பை நிர்வகிக்க சில காலம் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பணியாற்றினார். அப்போது மாணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு தூண்டினார் என்று பலரும் குற்றம் சாட்டினர். போலீஸ் கண்காணிப்பும் இருந்தது.

ஆனால் அவரது போராட்ட முறை ஆன்மீக வழியானது. அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சமஷ்டி மந்திர செபத்தாலேயே ஆங்கிலேயரது ஆட்சியை நீர்த்துப் போக செய்ய முடியும் என்று நம்பினார். பல மாணவர்களுக்கு இது பற்றி சந்தேகம் எழுந்தது.

அவர்கள் ஒருமுறை அவரை அணுகி தம் சந்தேகத்தை தெரிவித்தனர். அப்போதுதான் தம் செபத்தை நிறைவு செய்திருந்த கணபதி முனி தம் கண்களை மூடிக்கொண்டார். சற்றும் எதிர்பாராத விதமாக மாணவர்களில் ஒருவன் உரத்தக் குரலில் அவரது செப மந்திரத்தை சொல்லத் தொடங்கினான். யாவரும் ஆச்சரியத்துடன் அவனை கவனிக்கத் தொடங்கினர். கண்களை மூடிக் கொண்டு அவன் உலக நினைவு இல்லாதவனாய் செபத்தை சொல்லிக் கொண்டிருந்தான்.

கணபதி முனி தம் கண்களைத் திறந்ததும் அவன் சொல்வதும் நின்று விட்டது. அது மட்டுமன்றி தான் என்ன சொன்னேன் என்பதும் அவனுக்கு நினைவிருக்கவில்லை.

சங்கல்பத்துடன் செபிக்கப்படும் மந்திரம் எதிராளியின் உள்ளத்தில் புகுந்து மாற்றத்தை செய்ய வல்லது என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. அப்படி நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒரு முனைப்புடன் செபிக்கத் தொடங்கினால் விடுதலையும் சாத்தியமே என்பது கணபதிமுனி அவர்களின் எண்ணம். அதற்காக அவர் கொடுத்த மந்திரம் ”உமாம் வந்தேமாதரம்”

மந்திரத்திற்கு இந்த சக்தி இருப்பதனால்தான் ஞானிகள் பேசுவதில் ஈடுபாடு கொள்வதில்லை. தமது மௌனமான செபத்தினாலேயே தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றனர்.

கபீர் சொன்னது போல் பாய்ந்து வரும் ஏச்சு வலுவிழந்து வீழ்ந்து போகிறது.

{இந்தக் கட்டுரை Dr. G.Krishna அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் Ganapathi Muni என்ற அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டது. இது ஒரு தனியார் பிரசுரம். இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட மின் புத்தகம். இணைய இணைப்பு நினைவில்லை. மன்னிக்கவும். }

Wednesday, September 17, 2008

நாவாய் இன்னும் நடுக்கடலில்...

ஆணவமலம் என்பது எல்லா நிலைகளிலும் வெவ்வேறு பரிணாமங்களில் எப்போதும் கூடவே இருப்பது.மனம் இருக்குமளவும் அதுவும் இருக்கும். வேறொரு வகையில் சொல்வதானால் அது தான் மனதின் செயற்பாட்டுக்கே தளமாகிறது.

மகரிஷி நாரதரையும் அது விட்டு வைக்கவில்லையாம். சர்வ சதா காலமும் நாராயண மந்திரம் செபிக்கும் அவருக்கும் எங்கோ மனதின் ஒரு மூலையில் தன்னைவிட ஒரு பெரிய பக்தன் இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது. அந்த நாராயணனிடமே தன் சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்கிறார்.பூலோகத்தில் ஒரு பால்காரனை சுட்டிக்காட்டி அனுப்புகிறார் பெருமாள்.

மிகவும் ஆர்வத்துடன் அவனது நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகிறார் நாரதர். இருள் விலகும் முன்பே நாராயண நாராயண என்று சொல்லிக் கொண்டே எழுந்த அவன் தன் தினசரி வேலைகளான பசுக்களைக் குளிப்பாட்டுவது, தீனி வைப்பது, பால் கறப்பது, கறந்த பாலை வீடு வீடாக கொண்டு சென்று விற்று வருவது, மதியத்தில் பசுக்களுக்கு புல் அறுத்து வருவது மீண்டும் மாலை பால் கறப்பது,விற்பது இப்படி மூச்சு விட நேரமில்லாமல் வேலையில் ஆழ்ந்து விட்டான். இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை நாராயண நாராயண என்று சொல்லிக் தூங்கிப் போய் விட்டான்.

இவன் எப்படி பெரும் பக்தனாக முடியும் ?

ஏதும் புரியாமல் பெருமாளிடம் மீண்டும் வந்தார் நாரதர். சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு எண்ணெய் வழியும் கிண்ணம் கொடுத்து ”ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகத்தை ஒரு முறை சுற்றி வாரும்” என்றார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் நாரதர்.

’என்ன புரிந்ததா’ என்று வினவினார் பெருமாள்.இல்லை என்று தலையசைத்தார் நாரதர். “சரி சுற்றி வரும் பொழுது எவ்வளவு முறை செபித்தீர்கள்?” என்று கணக்கு கேட்டார்.

’நீங்கள் சொட்டு எண்ணெய் கூட சிந்தக்கூடாது என்றதனால் என் கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. உங்கள் நாம செபம் செய்யும் மனநிலை இருக்கவில்லை’ என்று உண்மையை ஒத்துக்கொண்டார் நாரத ரிஷி.

“அப்பா! இந்த சிறிய வேலையினாலேயே உன் கவனம் என்னைவிட்டு அகன்று விட்டதே, அந்த பால்காரனுக்கோ ஆயிரம் கஷ்டம், குடும்ப பாரம், உடற்நலப் பிரச்சனைகள். அதனிடையேயும் அவன் மறக்காமல் இருமுறை என்னை நினைத்துக் கொள்கிறானே. அவனும் என்னுடைய சிறந்த பக்தன் தானே” என்றாராம் நாராயணன்.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொல்லிய கதை இது.

கர்வபங்கம் என்பது இறைவன் பக்தரை தடுத்தாட்கொள்ளும் விதமாக செய்யும் ஒரு லீலை.அதனால் உண்மையான பக்தன் சிறுமைப்படுவதில்லை. பதிலாக அவன் தடை நீங்கப் பெற்று இன்னும் வேகமாக முன்னேறுகிறான்.

இறை வடிவமான குருவிடம் பூரண சரணாகதி என்பது இதற்கான ஒரு உபாயமே. பாதையை தவறவிடாது மேலே செல்ல வழி காட்டுபவர் குரு. அதைக்குறித்து கபீர் சொல்வது

लेने को गुरु नाम है ,देने को अन्न दान ।
तरने को आधीनता, बूडन को अभिमान ॥


லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்ன தான்
தர்னே கோ ஆதீனதா, பூடன் கோ அபிமான்


கொள்வ தற்கு குருநாமம், கொடுப்ப தற்கு அன்னதானம்
பணிவதால் மிதத்தல் கூடும்,கர்வத்தால் கலம் மூழ்கும்

(மிதத்தல் =ஆன்மீகப் பயணம்; கலம் மூழ்கல்=ஆன்மீகப் பயணத்தில் தோல்வி)

பேச்சு வழக்கில் ”லேனா தேனா” என்றால் எடுத்தலும் கொடுத்தலும் என்பதைக் குறிக்கும்.நம் உலக வாழ்க்கைகான அச்சு லேனா-தேனா.அதைச் சுற்றியே வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. எதையாவது எடுத்துக்கொண்டால் பதிலாக வேறு எதையாவது கொடுக்க வேண்டியிருக்கிறது.

பழைய திரைப்படப் பாடல் ஒன்று.

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான்
அதில் ஆயிரமாயிரம் பொருள் குவித்தான்
அவரவர் தகுதிக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்.

ஆசைப்படும் வாழ்க்கைக்கு ஏற்ப விலை தர வேண்டும். சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

பெரும்பாலானோர் ஆசைப்படாத ஆனால் விலை மதிக்கமுடியாத பொருள் ஒன்று உண்டு. அதுவே குருவருள். அதற்கு தர வேண்டிய விலை மிக சுலபம்.பிற உயிர்களின் பசியாற்றுதலும் அன்பு பாராட்டுதலுமே ஆகும். எளிமையாக இவைகளை போற்றி வாழ்ந்தாலே குருநாமம் சித்தியாகி பிறவி கடலை கடந்து கரை சேர்ந்து விட முடியும். மனதில் ஆயிரமாயிரம் பொருட்களுக்கான ஆசையை விலக்கி “லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்னதான்” என்பது எவ்வளவு சுலபமான வழி ! நேர்வழியே ஆனாலும் அபாயம் இல்லாமல் இல்லை. குரு கபீர் அதையும் உணர்த்துகிறார்.

அதுவே நம்மை அறியாமல் உள்ளே புகுந்து கொள்ளும் கர்வம்.பணிவான மனம் உடையவன் வெற்றிகரமாக மிதந்து கரை சேர்ந்து விடுவான். ஆனால் கர்வம் என்ற குணம் பிறவிக் கடலை கடக்க வொட்டாமல் நடுவிலேயே மூழ்கடித்துவிடும். அது எப்பேர்பட்டவரையும் ஏமாற்றி உட்புகுந்து விடும். அதை சுட்டிக்காட்டுவதே மேற்குறிப்பிட்ட ராமகிருஷ்ணரின் கதை.

இன்னுமொரு ஈரடியிலும் இதே உதாரணத்தைக் கையாளுகிறார் கபீர்.

कबीर गर्व न कीजिएं, रंक न हसिये कोय ।
अजहूं नाव समुद्र में , ना जानैं क्या होय ॥


கபீர் கர்வ் ந கீஜியே ரன்க் ந ஹஸியே கோய்
அஜ்ஹூ நாவ் ஸமுத்ர் மே, நா ஜானை க்யா ஹோய்


காவாய் கர்வம் கபீரா, எளியரைக் கண்டே எள்ளாய்
நாவாய் இன்னும் நடுக்கடலில்,நடப்பதை முன்னம் ஏதறிவாய்

(காவாய்= காத்துக்கொள்வாய்; எள்ளாய் =இகழாதே, நாவாய்= படகு)

கர்வம் என்கிற பிணியிலிருந்து எப்போதும் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். ஏனெனில் அது உள்ளே புகுந்துவிட்டால் அவரிடம் உள்ள பல நல்ல குணங்களை பறித்துக் கொள்ள வாய்ப்புண்டு. பின்னர் கீழான செயல்களில் மனம் இறங்கும். கீழான மனம் எந்த நிலைக்கு தாழ்ந்து போகும் என்பதை நாலடியார் சொல்கிறது.

கடுக்கென சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர் மாட்டு வைக்கும் அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம்,விறன்மலை நன்னாட !
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் (348)

எப்போதும் கடுஞ்சொல் பேசுவது, இரக்கமற்றிருப்பது,பிறர்க்கு துன்பம் செய்து மகிழ்வது, மீண்டும் மீண்டும் கோபப்படுவது ஆகியவை கீழ்மக்கள் குணங்களாகும். அவற்றை விடமுடியாது, விடச் சொல்பவரை இகழவும் செய்வர்.

அப்படி பிறருக்கு ஏற்படுத்தும் மனத்துன்பத்தின் பின் விளைவு எப்போது எந்த வடிவத்தில் அவரிடமே திரும்புமோ சொல்ல முடியாது. அதனால் தடைப்படப் போவது அவரது பயணம் தான்.

கடல் நடுவே பெரும் சுழல்களும் உண்டு,சூறாவளிகளின் அபாயமும் உண்டு. கரை சேரும் வரை எதுவும் நிச்சயமில்லை. தீவினைப்பயன்கள் அத்தகைய சுழலாகவோ சூறாவளியாகவோ வந்து தாக்கக்கூடும். அதைக் குறிப்பிடவே நாவாய் இன்னும் நடுக்கடலில் என்று கபீர் குறிப்பிடுகிறார்.

கண்ணாடி மாளிகையுள் இருந்து கொண்டு பிறர் மீது கல் வீசலமா?

ஒருவனுக்கு நல்ல காலம் பிறந்து நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அவனுக்கு ஏற்றம் வந்துவிடுகிறது. அதனோடு கூடவே அவன் அகங்காரமும் பெரிதாக வளர்ந்து விடுகிறது. உற்றார் பலரும் விட்டு விலகி போகின்றனர். அதைப்பற்றிக் கவலைப்பட நேரமும் அவனுக்கில்லை. போனால் போகிறது.

குறைந்தபட்சம் எதிரிகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா? காலப்போக்கில் நண்பர்கள் குறைந்தது மட்டுமின்றி எதிரிகள் பெருகி நிம்மதியை குலைத்தது.

புராணத்திலும் வரலாற்றிலும் இப்படிஅல்லலுற்ற அசுரர்கள், சக்ரவர்த்திகள்,செல்வந்தர்கள்,பண்டிதர்கள் மற்றும் கலைஞர்கள் எத்தனையெத்தனையோ !

அவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை மன உளைச்சலில் கழிக்கின்றனர்.

குறுகிய அறைக்குள் புழுக்கம் அதிகரிக்கிற்து.உட்கார முடிவதில்லை.கர்வத்தால் குறுகிப் போன மனதிலும் இதே நிலைமைதான்.மனப்புழுக்கம்.

வாழ்க்கையை தமக்குத் தாமே நரகமாக்கிக் கொள்கின்றனர் மக்கள். அறையை விட்டு வெளியே வந்தால் குளிர்ந்த காற்று வரும். செருக்கு என்ற தாழ்பாளை நீக்கி வெளி வந்து மனம் குளிர்ந்து யாவருடனும் உறவாட ஆரம்பித்தால் உறவினரும் நண்பரும் தாமே தேடி வருவர். இதையே வள்ளுவர்

தமராகி தற்றுறந்தார் சுற்றம், அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு தமக்கு உறவினாராயிருந்து தாமாகவே தன்னை விட்டுப் பிரிந்து சென்ற சுற்றத்தார், அதற்குரிய காரணம் நீங்கப் பெறின் தாமாகவே பகையின்றி மீண்டும் வந்து சேர்வர் என்று உரைக்கிறார். பிரிந்து செல்வதற்கான காரணம் ஒருவனுடைய செருக்கு. அதை அழித்து விட்டால் பிரிவதற்கான காரணம் நீங்கப் பெற்று மீண்டும் உற்றார் வந்து உறவாடுவர். கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

जग में बैरी कोई नहीं, जो मन शीतल होय ।
यह आपा तो डाल दे, दया करे सब कोय ॥


ஜக் மே பைரீ கோய் நஹி, ஜோ மன் ஷீதல் ஹோய் |
யஹ் ஆபா தோ டால் தே, தயா கரே ஸப் கோய் ||


செருநர் சகத்தில் இல்லை, சீதள மாயின் மனமே
செருக்கு செத்தப் பின்னே,செறிஞர் சேருவர் தாமே

(செருநர்=எதிரிகள்; சகம்= உலகம் சீதளம்=குளிர்ச்சி,ஆணவமில்லா நிலை; செருக்கு= ஆணவம்; செறிஞர்=உற்றார்)

ஆபா தோ டால் தே ’ என்பது “ நான் என்ற எண்ணத்தை
தூக்கி எறிந்து விட முடிந்தால் ...” தயா கரே ஸப் லோக் யாவரும் அன்பு பாராட்டுவர் என்று பொருள் படும். அது “செருக்கு செத்த பின்னே, செறிஞர் சேருவர் தாமே என்பதாக மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .
____________________
பிற்குறிப்பு:

ஆரம்பத்தில் கண்ட ”லேனே குரு நாம் ஹை” என்ற தோஹாவில் கபீர் சொல்ல விழையும் உட்பொருளை முதலில் எழுதி வைத்திருந்தேன். ஆனால் அது வெளிப்படையாக சொல்லப் படாததால் மேலே அதற்குரிய முறையான மொழி பெயர்ப்பை தந்துள்ளேன். கீழே உட்பொருளை பிரதிபலிக்கும் ஈரடியை தருகிறேன்.

துணைக்கொள் ளகுரு நாமம், ஈவதற்கு அன்ன தானம்
கரை சேரவே தயை வேண்டும், கலம் கவிழ கர்வம் தானே

Monday, May 05, 2008

விளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்

கோல்கொண்டா பிரதேசத்தின் சுல்தான் தானி ஷா இரவு உணவு முடித்து தாம்பூலம் தரித்து சயனிக்கும் வேளை. இரண்டு இளைஞர்கள் அவனை எழுப்பி, கோபண்ணா என்பவன் அரசாங்கத்திற்கு பட்டிருக்கும் கடனைத் தீர்க்க வந்திருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் யார், எப்படி உள்ளே வந்தனர் என்ற கேள்வியெல்லாம் எழுவதற்கு பதிலாக அவர்களின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கி அவர்கள் சொன்னதற்கெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டவன் போல் செயலாற்றுகிறான் சுல்தான். தங்க நாணயங்களை எண்ணி கணக்கு ஒப்புவித்தபின் சுல்தானிடம் ரசீது வேண்டினர்.

எழுதும் மை வைக்கப்பட்டிருக்கும் இடமா அது, அதுவும் அந்த அகால வேளையில்! 'உங்கள் தாம்பூல எச்சில் சாயத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள் போதும்' என்று சொல்லி ரசீது பெற்று செல்கின்றனர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு கோபண்ணாவுக்கு திடீரென்று விடுதலை. அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை பத்ராசலத்து ராமன் கோவில் கட்டுவதற்காக செலவிட்டு விட்டார் என்று தண்டனை அனுபவித்து வந்தார். பணத்தை திருப்பிக்கட்டும் வரையில் சிறைவாசம் விதிக்கப் பட்டிருந்தது.
இவர் ஆந்திர மாநிலத்து மணிவாசகப் பெருமான்.

மறுநாள் காலை பத்ராசலராமன் கோவில் ராமன் காலடியில் அந்த ரசீது காணப்பட்டது. பக்தனுக்காக ஒரு மானுடனின் எச்சிலையும் சுமந்தான் இராமன். கோபண்ணாவின் பக்தியை உணர்ந்த தானி ஷா அந்த நிதியை மீண்டும் கோவில் செலவுக்கென கொடுத்து விடுகிறான்.

பத்ராசல ராமதாஸர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கோபண்ணாவுக்கு மனதில் ஒரு சந்தேகம்.

தான் பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன? அதே ராமனின் கருணை இன்னும் முன்பே வந்திருக்கலாமே. பின்னொரு நாளில் அவருக்கு கூறப்பட்ட காரணம், பிந்தைய சென்மம் ஒன்றில் அவர் ஒரு கிளியை பன்னிரெண்டு நாட்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்தாராம். அந்த கிளியின் மனத்துன்பம் இந்த சென்மத்தில் தொடர்ந்து வந்து பீடித்தது என்று அறிந்து கொண்டாராம்.

தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான் நூறு
கோடி கல்பம் சென்றாலும் கோதையே! செய்த வினை
நாடி நிற்கும் என்றார் நயந்து.

என்கிறது நீதி வெண்பா. நம் செய்கைகளின் நல்லதும் கெட்டதும் அதற்குரிய பலனை கொடுக்காமல் விடாது. நிழலைப் போலே பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

करता था तो क्युँ रहा, अब काहे पछताये ।
बोये पेड बबूल का , आम कहा से खाये ॥


கர்தா தா தோ க்யூ ரஹா, அப் காஹே பச்தாயே |
போயே பேட் பபூல் கா, ஆம் காஹா ஸே காயே
||

செய்வினை விளையாட்டு வேடிக்கை, பின்னாலே வேதனையே வாடிக்கை
செய் அதிலே விளைந்ததோ ஆமிலம், பின் இவரும் விழைவரே ஆமிரம்.

(செய்வினை= செய்கின்ற செயல்கள், செய்= வயல்; ஆமிலம்= புளியமரம் ஆமிரம் =மா மரம்)
கபீர் சொல்லும் பபூல் என்பது கருவேல மரத்தை குறிப்பது. சொல் நயத்திற்காக ஆமிரம் ஆமிலம் என்று கையாளப்பட்டிருக்கிறது.

What you sow, so you reap. கருவேல மரத்தை (அல்லது புளிய மரத்தை) வளர்த்து விட்டு பின்னர் அதில் மாங்காய் வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி முடியும் ?
நாம் அனுபவிக்கக் கூடிய சுகதுக்கங்களுக்கான முழு பொறுப்பும் நம்முடையதே. இப்போது வெறுக்க தக்க சூழ்நிலைகளில் இடர்படுகிறோம் என்றால் எப்பொழுதோ அது போன்ற வெறுக்கத்தக்க சூழ்நிலையை பிறர்க்கு நாம் உண்டாக்கியிருக்க வேண்டும், பத்ராசலர் கதையில் கண்டது போல.

மனித உடலை விளைநிலத்திற்கு ஒப்படும் வழக்கம் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது வினைநிலம்.

'ஐவருக்குமாம் ஒரு செய் விளைந்தது....' என்பார் திருமூலர்.

'நெஞ்சப்புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து' ...என்பார் பட்டினத்து அடிகள்

பல்வேறு வினைகளால் வந்திருக்கும் உடல், மீண்டும் நல்ல வினைகளை ஆற்றி பிறவித் துன்பத்திலிருந்து கரை காண்பதற்கான ஒரு வாய்ப்பு. ஆகவே திருவள்ளுவரும் கூறுவார்.

துறப்பார்மன் துப்புர(வு) இல்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அனுபவிக்க வேண்டிய துன்பங்களெல்லாம் அனுபவித்து, அனுபவிப்பதற்கு எதுவும் இல்லாதவன் நிலையான இன்பமாகிய வீடு பேறு அடைய வேண்டிய துறவியாவான்

மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.

நல்ல உழவன் பாடுபட்டு நிலத்தை சீர் திருத்தி நீர்பாய்ச்சி நல்ல விதைகளை ஊன்றி களை பறித்து தனக்கும் சமூகத்திற்கும் உபயோகமாகும் பொருட்களை உற்பத்தி செய்கிறான்.

மனிதன் செய்யக் கூடிய தர்ம காரியங்கள்தான் நல்ல விதைகள். அவன் மனதில் உருவெடுக்கும் தீய எண்ணங்களும் ஒரு வகை விதைகளே. அவைகள் அதிகம் வளர்ந்தால் முறையான பயிரை தலையெடுக்க விடாத களைகள் எனப்படும்.
களைகளை வளர விட்டு பின்னால் துன்பமுறும் பொறுப்பற்ற உழவன் போல் தீய வினைகளின் பலன் வரும் போது அறிவற்றவன் மனம் துன்பத்தை அனுபவிக்கிறது. கபீரின் இன்னொரு ஈரடி அந்த அறியாமையை கண்டு எள்ளுகிறது.

काया खेत किसान मन, पाप पुन्न दो बीब ।
बोया लूनै आपना, काया कसकै जीब ॥

காயா கேத் கிஸான் மன், பாப் புன் தோ பீப் |
போயா லூனை ஆப்னா, காயா கஸ்கை ஜீப் |
|

காயமே நிலம், மனமே உழுநன், பாவ புண்ணியமே வித்தாம்
முன்னதை விதைத்தவன் நீ, பின்னதை என்னோ நோவதாம்

(காயம்=உடல்; முன்னதை = முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள பாவத்தை ; பின்னதை = பின் +அதை = சில தினங்களுக்குப் பிறகு+ செய்த காரியத்தை ; நோவதாம் =வருந்துதல் )

நம் மனதில் ஏற்படும் மிகச்சிறிய எண்ண ஓட்டங்களும் மிக வலுவானவை. அவை அழியாது நின்று அதற்குண்டான வடிவத்தைப் பெறும் என்பதற்கு பாகவதத்தில் பூதனையின் செயலை உதாரணமாகச் சொல்வர்.

உருவில் பச்சிளம் பாலகன், அந்த அந்தண சிறுவன் மகாபலியை யாசகத்திற்காக அணுகிய போது அருகே இருந்த அவன் மகளுக்கு மனதில் தாய்பாசம் பொங்கியது. அவனை அள்ளியெடுத்து உச்சிமுகர வேண்டும் போலிருந்தது. விரைவிலேயே அச்சிறுவனால் தன் தந்தையின் பெருமை சிறுமைபட்ட பொழுது அவனை ஒரேயடியாக அழித்து விடத் துடித்தது அவள் மனது.

மிகச் சிறிய இடைவெளியில் ஏற்பட்ட அந்த மனவோட்டத்தில் எத்தனை வேறுபாடு. இரண்டும் நேரெதிர் துருவங்கள். யுகங்கள் கழிந்தன. இப்போது மகாபலியின் மகள் பூதனை என்ற அரக்கியாக சென்மம் எடுத்திருந்தாள். கம்சனால் ஏவப்பட்ட பூதனை பாலூட்டும் வகையில் குழந்தை கிருஷ்ணனை அழித்துவிடப் பார்க்கிறாள்.

முதலில் எந்த விஷ்ணு அவதார குழந்தையைக் கண்டு எண்ணங்கள் உருக்கொண்டனவோ பின்னர் அதே விஷ்ணுவின் அவதாரத்தில் அதே
எண்ணங்கள் செயல் வடிவம் பெறுகிறது. அவனாலேயே அந்த செயல் வடிவமும் முற்றுப் பெறுகிறது.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அழிவதில்லை. நாமே மறந்து போயிருப்பினும் தக்க காலத்தில் உருப் பெற்று நமக்கு இன்பமோ துன்பமோ கொடுக்கின்றன. இக்கருத்தை சொல்லும் ஒரு நாலடியாரின் பாடலோடு நிறைவு செய்வோம்.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு (110)

குறையாது கூடாது முறை மாறி போகாது. வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும் எவராலும் அதை தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும் போதே உயிர்க்கு விதிக்கப்பட்டு விட்ட உண்மை . இது உணர்ந்து கொள்ளாமல் துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்தி என்ன பயன் ? (பரிவு- வருத்தம் )