Showing posts with label இராமலிங்க அடிகள். Show all posts
Showing posts with label இராமலிங்க அடிகள். Show all posts

Thursday, July 16, 2020

மனம் வெளுக்க வழியுண்டு

  எல்லோரையும் எல்லாக் காலத்தும் திருப்தி செய்ய இயலாது. அது வீடாகட்டும் வியாபாரமாகட்டும் அல்லது முக்கிய பொறுப்புள்ள அதிகாரம் ஆகட்டும் நம்மைச் சுற்றி அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்போது பலரிடமும் ஏச்சுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை எதிர் கொள்வது எப்படி.? 
வீட்டளவில் குடும்பத்தலைவன் கண்டிப்புக் காட்டி பிறர் வாயை அடக்கி விடலாம். அவனே அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்பவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு எதிர்பார்ப்பைவிட குறையும் போது நிர்வாகத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது அவர் விளக்கப் பேச்சைக் கேட்பவரும் உண்டு ஏற்காமல் ஏசுபவரும் உண்டு. வாங்கிய பொருளில் குற்றம் காணும் போது தயாரித்த கொழிலகம் எங்கோ இருக்க வேறொரு மூலையில் சர்வீஸ் அதிகாரி நுகர்வோரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார். இது யாவருக்கும் உள்ள அன்றாடப் பிரச்சனை.
 
சென்ற வருடம் மாணவர்களுடனான கலந்துரையாடலில் நமது பிரதமரிடம் கடினமாக உழைக்கும் அவர் புத்துணர்ச்சியோடு காணப்படுவதின் ரகசியம் என்ன என்ற கேள்வியை ஒரு மாணவன் எழுப்பினான். ‘நான் தினமும் மருந்து சாப்பிடுவதில்லை நிறைய வசவுகளை சாப்பிடுகிறேன் ( “கோலி நஹி, பஹுத் காலி காத்தா ஹூ” ; கோலி என்றால் மாத்திரை காலி என்றால் வசவு ) என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே வேடிக்கையாக பதில் சொன்னார். 

இந்த எதிர்ப்புகள் தான் ஒருவரின் சுய சோதனைக்கு வாய்ப்பாகும்.

.நிர்வாக மேலாண்மைப் பற்றி பேசும் போது திரு நாராயணமூர்த்தி, ஒரு தலைவர் எப்படி தம்மை மேன்மை படுத்திக் கொள்ளமுடியும் என்றால் அவர் தன் எதிர் தரப்பு வாதங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்.
இந்த சுய சோதனைக்காவே கபீரும் எதிராளிக்கிடையே உன் கூடாரத்தை அமைத்துக் கொள் என பரிந்துரைக்கிறார்.

निंदक नियरे राखिये, आँगन कुटी छवाय |
बिन पानी बिन साबुन, निर्मल करे सुभाव ||

நிந்தனை செய்வார் தம்மை அண்டை வீடாய் கொள்வீர்  
நீரில்லை சவுக்கா ரமில்லை உம்மனம் வெளுக்கக் காணீர்

 தேச நிர்வாகம் தொழில் நிர்வாகம் மட்டுமல்லாது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அது மிக மிக அவசியமானது.  ஆனால் முதற்படியாக அதை செவிமடுத்துக் கேட்க வேண்டும். சொல்லப்படும் குற்றங்களில் உள்ள நிறைகுறைகளை ஆராய வேண்டும். சொல்பவரின் தரம் மேலும் உள்நோக்கம் போன்றவற்றை கவனித்து தத்தமது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். 

பொறாமையாலும் சுயநலத்தாலும் எழும் எதிர்ப்புக்களை பொதுநலம் கருதி  விலக்கிவிட்டு காரியமே கண்ணாக வேண்டும். சொல்வது எளிது செய்வது சுலபமல்ல என்று தோன்றலாம். அதற்கு மனோபலம் வேண்டும். 

இந்த மனோபலத்தை இறைவனைப் பிடித்துக் கொண்டால் பெறலாம் என்பதை பல அடியவர் வாழ்க்கையில் இந்த தேசம் கண்டிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் மகாராஷ்ட்ராவின் சக்குபாய். அவள் கதையையும் பார்ப்போம்.
 
சக்குபாயின் ஊருக்கு பண்டரிபுரத்திற்கு செல்லும் யாத்திரிகர்கள் வந்து இருக்கிறார்கள். ஊரே திரண்டு அவர்களின் தேவையை கவனித்துக் கொள்கிறது. அந்த சேவையில் சக்குபாய்க்கும் சிறிது பங்கு கிடைத்தது. சிறுவயது முதலே விட்டலினடத்து ஈர்ப்பு இருந்ததால் அவளுக்கும் அவர்களோடு சேர்ந்து பண்டரிபுர தரிசனம் செய்ய மிக்க ஆசை.ஆனால் வீட்டின் நிலைமை அதற்கு இடம் கொடுக்காது எனத் தெரியும். கணவன் அனுமதித்தாலும் மாமியார் அனுமதிக்க மாட்டாள். 

அவள் மாமியாரை ஊரே ராட்சசி என்றது. சற்றும் ஈவு இரக்கமற்றவள். வாயில் வரக் கூடாத வார்த்தைகள் சரளமாக மழைப் போல் பொழியும். வாயுடன்  கைகளும் இணைந்து வேலை செய்யும். 

அவளுடைய கணவனே அவள் முன்பு பெட்டிப் பாம்பு. மகனோ தாய் சொல்லை தட்டாதபிள்ளை. போறாத குறைக்கு இருவரும் கஞ்ச மகா பிரபுக்கள். 
மொத்தத்தில் சக்குபாய் அந்த வீட்டில் எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு அடிமை. மாமியாரின் பல கொடுமைகளுக்கும் இடையே அவளைத் தாங்கி நின்றதே அவள் செய்து வந்த  விட்டலுனுடைய செபம் தான். 

சிறுமியாக தோழிகளுடன் தெருவில் மணல் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ‘விட்டல பக்தர்’ அதைத் தெரியாதவர் போல் மிதித்து இடித்து விட்டார். அவளுடைய துக்கத்தையும் கோபத்தையும் போக்க அவளுக்கு பாண்டுரங்கனின் சிறு விக்கிரகம் கொடுத்து அவன் நாமாவை விடாமல் செபித்தால் அவனையே பிடித்து விடலாம் என்று சமாதானப்படுத்தி சென்றார். (சிலர் தம்பூரா என்று சொல்கின்றனர்)

வளமான மண்,  பக்தி விதையை விட்டலன் ஊன்றிவிட்டான். சக்குபாயின்  உயிர் தெய்வமானான் பாண்டுரங்கன். பன்னிரண்டு வயதில் மணமாகி புக்கத்திற்கு வந்த போதும் அவள் பாண்டுரங்கனை விடவில்லை. அதுவே பல சமயங்களில் அவளை குற்றம் சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளவும் காரணமாயிற்று.

அந்த யாத்திரிகர் குழுவில் கபீரும் நாமதேவரும் இருந்ததாகக் கேள்வி. எப்படியாயினும் அடியார்கள் கூட்டத்தில் இணைவதே இன்பம் தானே. சக்குபாய்க்கு  வீட்டிற்கு செல்ல மனமே இல்லை.
நாம சங்கீர்த்தனத்தில் தன்னை மறந்தாள். பண்டரிபுரத்திற்கான யாத்திரை விவரங்களை விசாரித்தாள். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வீடு அல்லோலகல்லமாகியது.  கணவன் அவளை வந்து இழுத்துச் சென்றான். இவள் எங்கே அவர்களுடன் சென்று விடுவாளோ என்ற பயத்தில் மாமியாரும் கணவனும் அவளை ஒரு தூணில் கட்டிப்போட்டு படுக்கச் சென்றனர். 
 
உடலும் மனமும் துவண்டு போயிருந்த சக்குபாய் முன் கண்ணன் தோன்றினான். அவளைத் தேற்றி “கவலைப்படாமல் நீ போய்  யாத்திரை முடித்துக் கொண்டுவா. உன்னிடத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபயம் அளித்தான். அடுத்த வினாடி கட்டப்பட்டக் கயிறுள் கண்ணனும் வெளியே சக்குபாயுமென்று இடம் மாறினர். 

பண்டரிபுரத்தில் பக்தியில் சக்குபாய் தன்னை மறந்திருந்த நேரத்தில் தன் பக்தைக்காக அவள் மாமியாரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு அவள் வடிவில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தான் விட்டலன். இறைவன் இருக்கும் இடத்தில் வெறுப்பு வளருமோ? சிறிது சிறிதாக வீட்டாரின் போக்கில் மாற்றம் காணத் துவங்கியது. காரணம் அறியாமல் அவளை நேசிக்கத் தொடங்கினர்.    

அவ்வேளையில் யாத்திரைக்கு சென்றிருந்த அவ்வூர்காரர்கள் பாம்பு கடித்து சக்குபாய் பண்டரிபுரத்தில் உயிர் இழந்தாள் என்று துக்கமான செய்தியை கொண்டு வந்தபோது “இதென்ன அவள் எங்கே பண்டரிபுரம் போனாள் ?” என்ற வியப்போடு அவளைத் தேடினால் அதுவரை அவள் வடிவில் செயலாற்றிக் கொண்டிருந்த விட்டலன் மாயமாகிவிட்டான்.

ருக்மிணி தேவியின் அருளால் சக்குப்பாய் உயிர் பெற்று  திரும்பி வந்ததும் வீட்டார் மனம் திருந்தியதும் மீதம் உள்ள கதை. [விருப்பமுள்ளவர்கள் காணொளியில் காணலாம். ]

சக்குபாய் கதை அக்காலத்தில் மிகப்பிரபலமான நாடகக் கதையாகத் திகழ்ந்தது. பொறுமையும் பக்தியும் ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை அவள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம். 

அவள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்ட போதும் தனக்கு கேடு செய்பவர்க்கும் அவள் நல்லதையே வேண்டினாள். அதற்கான மனோபலம்    அவள் பற்றியிருந்த நாமஸ்மரணையால் கிடைத்தது. அதன் மூலம் அவளுடைய மனம் மிகவும் பரிசுத்தமாய் இருந்தது. அப்படிப்பட்ட தூய உள்ளத்தை கடவுள் தன் இல்லமாக குடி கொள்வதை யாவருக்கும் அறிவிக்கவே அவன் இவ்வகை பக்தர்களைக் கொண்டு  நாடகம் ஆடுகிறான். 

இராமலிங்க வள்ளலார் இந்த நிலைமையை இறைவனுடனான நட்பு என்னவகை  மாற்றங்களை விளைவித்தது என்பதை அருட்பெருஞ்சோதி அகவலில் எழுதுகிறார்.

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்டு 
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே

செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த 
குற்றமும் குணமாகக் கொண்ட என நட்பே
 
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நன் நட்பே  (1180)

(செற்றம்=பகைமை ;எள்ளுறு நெய் = எள்ளில் உள்ள எண்ணெய்; பேய் உலகோர் =மனம் பக்குவப்படாத உலகத்தவர்)

இதையே வேறொரு கண்ணோட்டத்தில் சொல்வதானால் மிகக் கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையில் நம்மை  இறைவன் வைத்திருப்பதே நம் அந்தரங்க சுத்திக்கென்று கொள்வதானால் அதை ஆன்மீக சாதனையின் ஒரு அங்கமாகக் கருதலாம். அப்படி ஒரு சாதனைக்காகவே கபீர்,  எதிர்பாளரைக் கண்டு விலகாது அவர்கள் நடுவே வசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்கிறார்.

Saturday, July 12, 2014

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள  இன்றைய பலப் பிரச்சனைகள் தலையெடுக்காமலே போயிருக்கும். இதை புரிந்து கொள்வதற்குத் தான் எத்தனை விதமான மனத்தடைகள். எப்பொழுதெல்லாம் சுயநலம் குறுக்கே வருகிறதோ அப்போதெல்லாம் உள்ளத்தில் மாசு ஏறி தூசி படிந்த இரும்பு போல அன்பெனும் காந்தத்தினால் ஈர்க்கப்படும் தன்மையை இழந்து நிற்கிறது. ஆனாலும் இறைவன் அருள் இருந்தால் நம் பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று நம்பி கோயில் குளம் என்று பல தீர்த்தங்களுக்கு போய் வருகிறோம். இன்னும் சிலர் பலவிதமான யோக முறைகளைக் கற்று மன இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள முயல்கிறார்கள். இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக மனித வர்க்கத்தை பீடித்திருக்கும் நோய்.

மகான்களுக்கும் சித்தர்களுக்கும் இது நகைப்பிற்கான காரியம் என்று தோன்றுகிறது. திருமூலர் வரிகளில் காண வேண்டுமானால்

இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டோ அறியில்?
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனைப் புறம்பு என்று அரற்றுகின்றாரே !
( அவன் -இறைவன்; இவன் -சீவன்)  -2650

சிவவாக்கியரோ நமது முட்டாள்தனத்தைப் பார்த்து அடா புடா என்று திட்டித் தீர்க்கிறார் .

கோயிலாவது ஏதடா, குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
 (குலாமர் -அடிமைகள், பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்கள்)

இவர்களைப் போலவே கபீர்தாஸரும் தீர்த்தங்களை நாடித் திரிவோர்க்கு ஒரு உபதேசம் செய்கிறார்.

भावै जाओ बादरी, भावै जावहु गया ।
कहै कबीर सुनो भाई साधो, सब ते बडी दया ॥
பதரிக்குத்தான் போவீரோ அன்றி கயைக்குத்தான் போவீரோ
எதற்கு சோதரா! கபீருரைக் கேள், தயைக்கு மேல் ஒன்று உண்டோ?

பதரிநாத் கேதார்நாத் கயை காசி போன்ற புண்ணியத்தலங்களில் கடவுளை தேடி வழிபடுவதை விட நம் உள்ளத்துள்ளே தயை என்கிற ஒரு குணம் குடிகொண்டுவிட்டால் போதும். அப்போது இறைவனே அங்கு குடி வந்து விடுவான் என்கிறார் கபீர்.

மனதில் சிலருடைய கஷ்டங்களைப் பார்க்கும் போது இரக்கம் தோன்றலாம். அவர்களுக்கு உதவிட முன்வரலாம்.  அது தயை ஆகுமா? அதில் நான் உதவுகிறேன் என்கிற எண்ணம் கலந்து விட்டால் அது வெறும் இரக்கம் என்ற அளவில் நின்று போகிறது. சமீபத்தில் நண்பர் ஒருவர் தமது பால்ய சினேகிதனுக்கு அறுவை சிகிச்சைக்காக (சற்று  பெரிய அளவில்) பொருளுதவி செய்தார். அது அவருக்கு மிக்க மகிழ்ச்சியளித்ததாகவும் சொல்லினார். அவருடைய நிலைமையில் நம்மை வைத்துக் கொண்டால் நமது  பால்ய சினேகிதன் அல்லது நெருங்கிய உறவு அல்லாத ஒருவருக்கு இதே போன்று உதவி செய்ய முன் வருவோமா? உடனே நமது மனது “ அப்படி ஆரம்பிச்சா அவ்வளவுதான்! எவ்வளவு பேருக்கு செய்ய முடியும்? பொழுது விடிஞ்சு பொழுது போனா யாருக்காவது ஆபரேஷன், பணத்தேவை இருந்து கொண்டே தான் இருக்கும் அதுக்காக எல்லோருக்கும் செய்ய முடியுமா? அவங்கவங்க தலையெழுத்துப்படி நடக்கும்’  என்று ஒரு சமாதானத்தை எழுப்பி அந்த இரக்கம் என்கிற உணர்வை தலையெடுக்க விடாமல் செய்து விடும்.  

இந்த தயை என்ற குணத்தை கண்டு கொள்வதெப்படி? எப்போதெல்லாம் நம் உணர்வுகள் பிறர் உணர்வுகளோடு ஒத்த உணர்வுடன் செயல் படுகிறதோ அப்போது அதை தயை

என்று கூறலாம். இரமணர் ஒரு முறை “ யாரோ என் கையை வெட்டறாப் போல இருக்கே” என்று சொன்னாராம். அப்போது தோட்டத்தில் எங்கோ ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனாராம். அந்த ஒத்த உணர்வு சகல சீவன்களையும் உள்ளடக்கியது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று இராமலிங்கர் வாடியது போல அது . இறைவன் படைப்பில் எல்லா நிலைகளிலும் விரவி நிற்பது.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சித்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ

என்று மனிதருள்ளே இறைவன் குடி கொண்டிருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறார். ஒத்துணர்வு உடைய உள்ளங்களே இறைவனின் கோவில்.

தயை என்கிற உணர்வின் முழுப்பரிமாணம் அறிய வேண்டுமானால் மகாபாரதத்தில் திரௌபதியின் பாத்திரத்தின் மூலம் அறியலாம். தர்மத்திற்குப் புறம்பாக நடு நிசியில் அவளுடைய ஐந்து புத்திரர்களையும் வஞ்சகமாகக் கொன்ற அசுவத்தாமனை தேடிப் பிடித்து வந்து அவளது காலடியில் தள்ளி அவள் கண்முன்னேயே பழி தீர்க்க முயல்கிறான் பீமன். துச்சாதனின் இரத்தத்திற்காக பதிமூன்று ஆண்டுகள் காத்திருந்தவள் திரௌபதி. அவளே இப்போது பழிவாங்கும் மன நிலையில் இருக்கவில்லை. அவளுடைய துக்கம் அளவு கடந்து பொங்கி வருத்தினாலும் அசுவாத்தமனை கண்ட மாத்திரத்தில் அவளுக்கு அவனுடைய தாயார் கிருபியின் நினைவு  வருகிறது. “வேண்டாம் அவனை கொல்லாதீர்கள். நான் அனுபவிக்கின்ற துன்பத்தை அவனுடைய தாயாருக்குக்கும் தர என் மனம் ஒப்பவில்லை. அவளும் என் போல தன் மகனை இழந்து வாழ்நாளெல்லாம் வாடுவது முறையாகாது. மேலும் உங்களுக்கெல்லாம் குருவான துரோணாச்சாரியரின் மகன். அதனால் அவனை மன்னித்து விட்டு விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதுவே ஒத்துணர்வுக்கு சிறந்த உதாரணம் ஆகும்.

Compassion என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த தயை உள்ளம் பழி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. இறைவன் அதனாலேயே குடி கொள்ள விழைகிறான். The heart full of compassion is the temple of God என்பார் ஸ்ரீ சத்ய சாயி.

         [ படத்தில் எழுதியுள்ளதைப் படிக்க படத்தை சுட்டவும்.] 
இந்த தயை என்கிற அடித்தளம் அமைந்து விட்டால் பின்னர் ஆன்மீக வளர்ச்சி என்பது மிக எளிதாகிறது என்பதையும் கபீர் வலியுறுத்துகிறார்.
दया का लच्छन भक्ति है, भक्ति से होवै ध्यान ।
ध्यान से मिल्ता ञान है, यह सिद्धान्त उरान ॥
தயையின் இலட்சணம் பக்தி, பக்தியால் வருமே தியானம்
தியானம் கூட்டுமே ஞானம், சித்தாந்தம் இதுவே பிரமாணம்

இன்று குரு பூர்ணிமை. இந்நன்னாளில் மகான்களின் வாக்கை நினைவு கூர்ந்தால் நன்மை பயக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை எழுதியுள்ளேன். தயை உணர்ச்சி பெருகி எதிர்மறை எண்ணங்கள் அகற்றி இறைவனுடைய கோவிலாக மாற்ற இராமலிங்கர், திருமூலர், கபீர், சிவவாக்கியர், சாயி போன்ற குருமார்களின் அருளை வேண்டுவோம்.

Monday, August 15, 2011

இச்சிறியேனால் ஆவது என்னே ?

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
பணிகின்றேன், பதியே, நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
உறங்குகின்றேன், உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ
இச்சிறியேனால் ஆவது என்னே ! (
இராமலிங்க அடிகள்)

ஆவுடையக்காள் பதிவை நிறைவு செய்யும் வகையில் அவரது சுபமங்களம் ஜெய மங்களம் என்று முடியும் ஒரு பாடலை வைத்து பூர்த்தி செய்திருந்தேன். அப்போதே மனதில் ஒரு குறுகுறுப்பு. இதுவே கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்திற்கும் இறுதியான பதிவு என்று வாசகர்கள் நினைத்துக் கொள்வார்களோ என்று. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள் அதை உண்மையாக்கி விடுவது போல் நடந்ததென்னவோ நிஜம். மகான்களின் வாக்கிற்கு என்றுமே அதிசய சக்தி உண்டு :))

புதிய ஊர்,மும்பை, புதிய சூழ்நிலை. கடந்த நான்கு மாதங்களாக இணைய வசதி இல்லாமை. அகலவழிப் பாதையும் ஒற்றை வழியாகிப் போனது. அதாவது ப்ராட் பேண்ட் உள்ள அலுவலகக் கணிணியில் தனி அஞ்சல்கள் வலைப்பூக்கள் மேய்வதற்கு தடை. தனிக் கணிணியில் அலை பேசி இணைய இணைப்பு மூலம் ஒரு சில அஞ்சல்களைப் படித்து பதில் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும் நத்தை வேகம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நிலைமை சீரடையலாம் என்று கருதுகிறேன்.

சரி இணையம் இல்லாவிட்டால் போகட்டும், கபீரின் கைங்கரியம் ஏதாவது செய்யலாமென்று நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்தது ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை தொகுத்து மென்னூலாக்குவது. அப்படியே, சுதந்திரத் தினத்தினுள் செய்து முடிக்கவேண்டும் என்ற முனைப்போடு கடந்த பத்து நாட்களாக முயன்று செய்து முடித்தாயிற்று. விருந்தினர் இடுகைகளைத் தொகுத்து அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூல் தயாரித்து e-snip வலை தளத்தில் ஒரு வழியாக ஏற்றிவிட்டேன். ஒரு MB கோப்பை வலையேற்ற எடுத்துக் கொண்ட நேரம் 54 நிமிடங்கள், அதுவும் பலமுறை முயற்சித்தப் பின்னரே கைகூடியது.

தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவோரும் இணையத்திலேயே முன்னோட்டம் காண விழைவோரும் கீழுள்ள சுட்டியினை பயன் படுத்தவும்

கபீரின் நிழலில்....... அன்பின் சங்கமம்

இந்தத் தொகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களை கலந்து வெளியிட விரும்பினாலும் மேலே சொன்ன காரணங்களால் இயலாமல் போனது. அழகான கட்டுரைகள், அருமையான நட்பு வட்டம் இவற்றைக் கருத்தில் கொண்டு இதற்கு யாரிடமும் மறுப்பு இருக்காது என்ற உரிமையுடன் செயல்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த இடுகைக்கான கபீர் ஈரடி ஒன்றைக் காண்போம்.



सातों शब्द जू बाजते, घरि घरि होते राग ।
ते मन्दिर खाली पडे, बैठन लागे काग ॥


சப்தசுர ராகம் தாளம், அலை அலையாய் கேட்டதொரு காலம்
கேட்பாரில்லா மாடம், அங்கேக் கூடிக் கரைவன காகம்.


வெறி பிடித்தவர்கள் போல் செல்வம் ஈட்டுவதில் உள்ள போட்டியும் அதன் காரணமாய் நடைபெறும் பெரும் ஊழல்கள் வன்முறைகள் யாவும் எதற்காக ? பெரிய மாளிகைகளைக் கட்டி அங்கே ஆடலையும் பாடலையும் ரசித்து அனுபவிக்கவா? அதற்குத்தான் பலருக்கு நேரமே இருப்பதில்லையே. அப்படியே அனுபவித்தாலும் கடைசியில் அவர்கள் கதியும் என்னாயிற்று ? வெறும் காகங்கள் அமர்ந்து கரையும் இடிபாடு நிறைந்த கட்டிடங்களாவன்றோ காலப்போக்கில் மாறி விடுகின்றன.

இப்படி நிலையற்ற உலக வாழ்வில் சுகத்தை நாடுவதை விட்டு நித்திய சுகம் தரும் இறைவன் கழல்களைப் பற்றிக் கொண்டால் உய்ய வழியுண்டு என்று சொல்லும் வள்ளலாரின் பாடலை இங்கு சேர்த்து நினைவுகூர்வோம்

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே,
கற்றதெல்லாம் பொய்யே, நீர் கணித்ததெல்லாம் வீணே
உண்டதெலாம் மலமே, உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே,
விண்டதனால் என் ? இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்,
இறவாத வரம் பெறலாம், இன்புறலாமே

---------------------
இன்று இந்திய சுதந்திரதினம் மாத்திரமன்று, மகான் அரவிந்தரின் ஜன்ம தினமும் கூட. நல்ல ஆன்மாக்கள் விரும்பும் சுதந்திரத்தை குறிக்க வந்த தினமாகவும் கொள்ளலாம். பாரதியார் இந்திய சுதந்திரத்தை விரும்பி ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றால் இராமலிங்க பெருமானும் ஆன்மாவிற்கான சுதந்திரத்தை துய்த்துப் பாடுகிறார்.

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்,
மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழை
அன்பினொடும் பாடிப் பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்,
எண்ணம் எலாம் நிரம்பினேனே.

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்.

இனி அடுத்த இடுகை எப்போது வருமோ தெரியாது !
இச்சிறியேனால் ஆவது என்னே !!!

Monday, December 06, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5

ஆசிரியர் அறிமுகம்

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்ள முன் வந்த முதல் வலைப்பதிவர். அது மட்டுமல்லாமல் தமது வலைப்பூவில் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள் பட்டியலில் இணைத்தும் அவ்வப்போது தமது இடுகைகளில் மேற்கோள் கொடுத்தும் பலருக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தியவர். ஆன்மீகத்திலும் இசையிலும் அளவு கடந்த ஆர்வம் உள்ளவர். ரமணரின் ஆத்மபோதத்தையும் கீதையின் சாரத்தையும் மிகவும் சிரத்தையாக விளக்கியவர். அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல்களை எழுத்துருவுடன் இவருடைய வலைப்பக்கங்களில் கேட்டு ரசிக்கலாம். மார்கழி இசை உற்சவத்தை தம் பதிவுகளிலே இணைப்பு கொடுத்து இசையைக் கொண்டாடுபவர். ஆரம்ப காலங்களில் அவரே ”டாப் டென்” திரைப்படப் பாடல்களையும் சில வருடங்கள் தொகுத்து வந்தார். தமிழ் ஆர்வம் மிகுந்து வெண்பா எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அவருடைய வாசகம் என் வாசகம்”. இதைத் தவிர அருள் என்னும் வலைப்பூவிலும், இசை இன்பம் என்ற வலைப்பக்கத்திலும் தன் எழுத்துப் பணியை நடத்திவருகிறார்.

ஜீவா வெங்கடராமனை அறியாத சீனியர் பதிவர்கள் இருக்க முடியாது. அவர் ஊட்டம் ஊட்டி வளர்த்த வலைப்பூவில் அவரே பங்கேற்க வந்திருப்பது மட்டில்லா மகிழ்ச்சி தருகிறது. கபீரை பற்றி அவர் எழுதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கபீருடையக் கவிதைகள் பற்றி மூன்று நான்கு இடுகைகள் என் வாசகத்திலும்’ ( மன ஊஞ்சல், இவ்வுலகம் ),
அருள் வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன. எனவே அவருக்கு கபீரும் புதியவர் அல்லர். இம்முறை கபீர்தாஸாரின் மூன்று பாடல்களை எடுத்துக் கொண்டு நமக்காக அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகவே இருக்கும். சுருங்கக் கூறின் இந்த வலைப்பூ அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

இனி ஜீவா ...

-----------------------------------------------
பீரின் கனிவான கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.
எளிமையானவை. இரசிக்கத் தக்கவை. அவற்றுக்கு விரிவுரையோ, விளக்கங்களோ தேவையில்லை. இடராமல் ஓடி வரும் தெளிந்த சிற்றோடை.
பொதிந்த கருத்துக்களை அள்ளித் தரும் வற்றா அருள் ஓடை.
"இது தான் என் மதம்! இப்படித்தான் இருக்க வேண்டும்!" போன்ற தடைக்கற்களை தாண்டிய நீரோடை.

அக்கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளின் தமிழாக்கம்.
---------------------------------------------------------------------

1. "பழந்துணி வெளுத்த குரு"

சீடன் என்பவன் பழந்துணி போல,
குரு அத்துணியினை வெளுப்பவர்.
தியானம் என்னும் கல்லில் அடித்து அவர்
துவைக்கையில் துலங்குது என் சொரூபம்;
அஞ்ஞான அப்பழுக்குகள் அகன்றன முழுவதும்.

அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;
பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.
மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,
கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.

தனது குருவை மனிதனாய்ப் பார்ப்பவன் குருடன்;
தன் வாழ்நாள் முழுதும் அவன் மகிழ்ச்சி அடையான்;
இறந்தபின்னும் அவன் இருளிலேயே இருப்பான்.

கபீரா, குருடராய் இருக்கும் சீடர்களால்
குருவினை இறைவனாய்க் காண இயலுவதில்லையே.

இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்
அதைத்தணிக்க குருவால் இயலும்.
அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்
யாரால் என்ன செய்ய இயலும்?

குருவின் பெருமையும், குருவருளின் இன்றியமையாமையும் இக்கவிதையில் தெளிவாகிறது.
குரு-சீடன், என்றவுடன் நமக்கு இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------

2. "மலர்வது காய்க்கத்தான்"

என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.
அந்நிலவும் பகலவனும் கூட என்னுள்ளேயே இருந்தும்.
என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா.

"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?
எப்போது "நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ
அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.
ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு
ஞானம் பெற்றுத் தருவதுதான்.
ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.
மலர் மலர்வது காய்க்கத்தான்.
காய்த்த பின் மலர் சருகாவதுபோல்.

[ இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]

க்கவிதையை முடித்த விதம் உங்களையும் ஏதோ செய்தால் அதற்கு கபீர் தான் பொறுப்பாவார்!
"நான் ஏன் நாத்திகன்?" என்பதற்கு எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லிடலாம்.
ஆனால் ஆத்திகனாவதற்கு, இயற்கையைத் தவிரை வேறெதைச் சொல்வது!

மலர்வது காய்க்கத்தான்.
மனம் மலர்வது,
அவனைக் காணத்தான்.

அன்பெனும் நாரெடுத்து அதில் மனமெனும் மலர் கொண்டு தொடுத்த மாலையும் மணம் வீசும்.
சுடர்கொடி கோதை சூடிக்கொடுத்த மாலை போலே.
இயற்கை என்பார் சிலர்.
இறைவனின் வேலை என்பார் சிலர்.
இரண்டும் வேறில்லை என்பார் இன்னும் சிலர்! :-)
------------------------------------------------------------------

3. "எப்படிச் சொல்வேன்?"

எப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்?
இறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்?
அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.
அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.

உள்ளுலகத்திற்கும் வெளியுலகத்திற்கும் இடையே
வேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.
அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.
அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.
என்ன பார்க்கிறீர்கள்?
அவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.

[இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]

ள்ளதெல்லாமிலும் உறைபவன், உள்ளையும் புறத்தையும் ஒன்றெனச் செய்பவன்.
ஒன்றென உறைபவன். ஒன்றென்றில் வேறில்லை. ஓம்.

இறைவன் யாரென வெளிப்படுத்தும் அழகான கவிதை.
மேலோட்டமாக படித்துப் பார்த்தால் - ஈதென்ன, இதில் இயலாமை தானே இருக்கிறது எனலாம்.
இறைவன் வெளிப்படுத்தக்கூடாத இரகசியமோ, வெளிப்படுத்த இயலாத இரகசியமோ இல்லை.
ஆனால் அகத்தைச் சுற்றி புறம் எழுப்பிய சுவர்களால் மறைக்கப்பட்ட இரகசியம்.
அச்சுவர் இருக்கும் வரை அகத்தால் அனுபவிக்கப்படுவது இரகசியமாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அது இரகசியம்.

அன்பால் மட்டுமே அச்சுவரினை இடித்து இறைவனை இவனேயென இன்புற்றிட இயலும்.

கபீரைப் போன்ற மகான்கள், ஞானியர், பக்தியில் கரை கண்டவர் எனப்பலர், அவர்கள் கண்ட ஆனந்தத்தை இதுபோன்ற கவிதைகளிலும், பாடல்களிலும், கதைகளிலும், உபதேசங்களிலும் உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணத்திற்கு பள்ளிப் பருவத்தில் படித்த வள்ளலாரின் பாடல் அப்படியே கபீரின் கருத்துகளை பிரதிபலிக்கிறது.

எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்

எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே

எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறையவனே.

அப்படிப்பட்டோர் போன பாதையை மறந்து போகலாமா?
அவர்கள் கண்ட ஆனந்தம் என்றென்றும் நிலை பெற்றிருப்பது.
தில்லைக்கூத்தன் எப்போதும் அம்பலம் என்னும் ஆனந்த வெளியில் தாண்டவம் ஆடுவதை ஒத்தது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்

---------------------------------------------

பல அலுவல்களுக்கிடையேயும் நேரம் ஒதுக்கி ஒரு சிறப்பான பதிவை வழங்கிய ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

கண்ணன் காட்டும் கரும யோகம் என்கிற இடுகை ஒன்றில் அவர் இறுதியாக சொல்லியிருக்கும் வரிகள் :

பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

நமக்கு அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்து இடுகையின் பலனை அற்புதமாக பூர்த்தி செய்திருக்கிறார். இப்படியே அவருடைய எழுத்துப் பணி மேன்மேலும் நல்லமுறையில் தொடரட்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துவோம்.

Tuesday, April 27, 2010

கொட்டிலை அடையாப் பட்டிமாடு

ஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம்

" போறும் சார், எங்கப் போனாலும் பேசினதையே பேசிகிட்டு,சொல்றதுக்கோ கேக்கறதுக்கோ புதுசா ஒண்ணும் இல்லே. நெஜமா ரிசர்ச் பண்றவங்க யாரும் இப்படி கான்ஃபரன்ஸ்,செமினார்-ன்னு அலையறது இல்லே. பத்து வருஷம் இருபது வருஷம் தபஸ் மாதிரி செய்யணும். வேணான்னாலும் விடறது கிடையாது. யாரோ பணம் குடுக்கறான் என்கிறதுக்காக சும்மாவாச்சும் ஒரு கும்பலைக் கூட்டி அரைச்ச மாவை அரைக்கிறதே ரொம்ப பேருக்கு தொழிலாப் போச்சு. கடைசியிலப் பார்த்தா வெறும் வேஸ்ட் ஆஃப் டைம், டிராவல் அண்ட் எனெர்ஜி.... "

இப்படி சொன்னவர் சாதாரண கல்லூரிப் பேராசியர் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஒரு ஆராய்ச்சியாளர். அவருடைய துறையிலே அவர் ஒரு ஜாம்பவான். அவருடைய பெயரை அழைப்பிதழில் போட்டாலே கருத்தரங்கம் வெற்றி பெற்றுவிடும், கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சுலபமாக திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் அவருடைய பெயரை பயன்படுத்திக் கொள்ள விழைந்த காலம் அது. அவருடையத் துறையில் அவர் ஒரு மிக முக்கியப் புள்ளி. வருடத்தில் ஆறுமாதங்கள் வெளி நாட்டுப் பயணங்களிலேயே கழிந்தது.

பெயரும் புகழும் பெருமளவில் இருந்தும் ஒரு நிலையில் விரக்தி மனதில் புகுந்து கொண்டு விடுகிறது. முன்னேற்றமின்மை என்பது தடையாகத் தெரிகிறது. நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம், இவற்றின் அர்த்தமென்ன என்றெல்லாம் மனம் கேள்வி எழுப்புகிறது.

அரிய ஆய்வுகளில் ஈடுபட்டு தொண்டாற்றும் விஞ்ஞானிகளுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையைப் பற்றி என்ன சொல்வது ?

இந்த நிலையை இராமலிங்க சுவாமிகள் "உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ வீணே சுழன்று மெலிகின்றேன்" என்று மனம் வருத்தப்பட்டு உரைக்கிறார்.

அவரைப் போலவே கபீர்தாஸரும் அர்த்தமின்றி காலம் கழிவதை சுமை எருதுடன் ஒப்பிட்டு சொல்கிறார்.

बनजारे के बैल ज्युं , भरमि फिर्यो चहुंदेस ।
खांड लादि भुस खात हैं, बिन सतगुरु उपदेश ॥


சரக்கு வண்டி மாடு போல், நாற்திசையும் சுற்றித் திரிவரே
சரக்கோ கரும்பு தின்பதோ புல், சத்குரு மொழி நாடாதவரே

மாற்று :

கரும்பை சுமந்துத் திரியினும்,வைக்கோல் தின்னுது எருது
குருமொழி கேளா உலகோர், கழிப்பரே வீணில் பொழுது


பிறவியின் முழு சாரமே குருவைப் பிடித்துக் கொண்டு இறைநாமத்தின் ருசியை அறிவதுதான். ஆனால் பெரும்பாலோர், வைக்கோற்புல் தின்றே வாழ்க்கையைக் கழிக்கும் எருது போல், சாரமற்ற உலகியல் ஆசைகளில் காலத்தை கழிக்கின்றோமே என்கிற பரிதாபத்தினால் கபீர் உரைக்கிறார்.

கபீர்தாஸருடைய கருத்தை விளக்குவது போல் வள்ளலார் பெருமான் பாடுகிறார்.

கானல் இடை நீரும், ஒரு கட்டையில் கள்வனும்
காணுறு கயிற்றில் அரவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்த பித்தளையின் இடையும்
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை
மாயையில் கண்டு வீணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாழ்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள் என்றும் வெளி என்றும்வான்
உலகென்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை
உண்மை அறிவித்த குருவே
தானமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே


சாரமற்ற வைக்கோற் புல்லை வள்ளலாரும் எப்படியெல்லாம் விளக்கி விட்டார்!

மனை, மகவு, உறவுகள், மானம், நிதி, உடல் போன்ற எனது எண்ணங்களெல்லாம் கற்பனையில் தோன்றியவையே. அவை, கானலில் நீர் போலவும், இரவு நேரத்தில் வேலிக் கட்டையை கள்வனாகப் பாவிப்பதும், வழியில் குறுக்கே கிடக்கும் கயிற்றை பாம்பாக நினைத்து அஞ்சுவது போலும் அர்த்தமற்றவைகளாகும். வெறும் கிளிஞ்சலை வெள்ளி என்றும் பித்தளையை தங்கம் என்றும் நினைக்கின்ற அறியாமையைச் சேர்ந்தது ஆகும்.

இறைவன் அருள் என்னும் தங்கத்தின் முன்னே உலக வசியங்களெல்லாம் பித்தளையைப் போன்றதே ஆகும்.

மேலும் அவர் குருவருளை தேடாத கால விரயத்தை கபீரைப் போலவே சொல்லி வருத்தப் படுகிறார்.

காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல் தலைமேல்
பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே! இன்னல் மிகச்சுமக்கும்
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே


தூண் கட்டடத்தின் பாரம் சுமப்பதற்காகவே கட்டப்படுவது. உணர்ச்சியற்றது. கபீர் சொல்லும் எருதுக்காவது சற்று உணர்வுகள்- கஷ்ட சுகங்கள் இருக்குமோ என்னவோ. கல் தூணுக்கு அப்படி எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட உணர்ச்சியற்ற கல்தூணைப் போல வெறும் துன்பங்களை சுமப்பதற்காகவே பிறவி எடுத்து விட்டேனோ? உனது அடியார்கள் சிறப்பைப் போற்றத் தெரியாமல் பொய்களைப் பேசி உலகில் வீணாகக் காலத்தைப் போக்குகின்றேனே என்று வருந்தி சொல்லும் போது ஞானிகளுக்கிடையே உள்ள கருத்து ஒற்றுமை பளிச்சிடுகிறது.

கபீர் சரக்கு இழுக்கும் மாடுக்கு மனிதரின் போக்கை உதாரணம் சொன்னால் இராமலிங்க அடிகள் பட்டி மாடுக்கு ஒப்பிடுகிறார்.

கொட்டிலை அடையாப் பட்டிமாடு அனையேன்
கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
அறவுண்டு குப்பை மேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
நினைத்திடேல் காத்தருள் எனையே


(அட்டில்= சமையற்கட்டு; கங்குல்= இரவு; பூஞை = பூனை நெட்டிலை= நீண்ட வாழை இலை)

பட்டி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் திரிய அனுமதிக்கப்பட்ட இடம். கொட்டிலை போல அங்கே மழை வெயில் பாதுகாப்பு கிடையாது. மாலையானதும் கொட்டிலைச் சேராமல் திரியும் மாட்டை பட்டிக்குள் விரட்டி சேர்ப்பர். ஆகையால் அடங்காமல் திரியும் மாட்டை பட்டி மாடு என்று சொல்லும் வழக்கு வந்தது. கொட்டைகள் பரப்பி... கடையனேன் என்பது அழகாக அலங்கரிக்கப் பட்ட மஞ்சத்தில் சுகம் காண விரும்பும் கடை குணம் உள்ளவன் என்று பொருள்படும். அடுக்களையைச் சுற்றிவரும் பூனையின் குணம் ஒத்தவனாகும் என்னை, குப்பை மேல் வீசி எறியப்படும் எச்சில் இலை போன்றவனாயினும் வேறாக நினைக்காமல் என்னைக் காத்தருள்வாய் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்.

கபீரும் வள்ளலாரும் போன்ற மகான்கள் நம் கால விரயத்தை பலவாறாக சுட்டிக்காட்டி நம்மை இறைவன் பக்கம் திருப்ப விழைகிறார்கள். ஆனால் நம்முடைய புத்தியோ பட்டிமாடு போலவே அலைகிறது.

Sunday, February 03, 2008

தூங்காதே தம்பி தூங்காதே

இறைவனின் படைப்பில் இரண்டு விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் உலகமே ஒரு பெரிய மனநோய் மருத்துவமனை போல் இருந்திருக்கும். அது என்ன இரண்டு விஷயங்கள் ? மறதியும் தூக்கமும். இவையிரண்டையும் மிகப் பெரிய வரமாகக் கருதுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள். தூக்கம்,சக்தியின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே தேவி மஹாத்மியம் அவளை “யா தேவி ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”என்று போற்றுகிறது.

ஆனால் 'ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை'என்று புலம்புவோர்களுக்கு இடையே,'சே சனியன் புடிச்ச தூக்கம்! சீக்கிரம் எழுந்திருக்கவே முடியல'என்று திட்டிக் கொண்டே அரக்க பரக்க காலையில் பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க ஓடுபவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். வயது கூடக் கூட தூக்கம் குறைந்த பெருசுகள், தூங்குவதே சுகம் என்று காலை பத்து மணியானாலும் படுக்கைவிட்டு எழாத இளசுகளை கண்டு பொருமுகிற காட்சி இன்று வீட்டுக்கு வீடு காணலாம். பலருக்கு தைராய்ட் போன்ற சுரப்பிகளின் குறைபாடு. சுறு சுறுப்பில்லாமல் எப்போதும் ஒரு தூங்கி வழியும் நிலை. போதாத குறைக்கு ‘கால் சென்டர்'போன்ற புது குழப்பங்கள் வேறு. மாறிவரும் வாழ்க்கை முறையில் மன அழுத்தம்தான் மிச்சம்.

தியானம் செய்தால் மனஅழுத்தம் குறையும். அதனால் இரவில் தூக்கம் நன்றாக வரும் என்று யாரோ சொல்ல தியான வகுப்பில் சேர்ந்தாச்சு. கழுத்தும் முதுகுதண்டும் ஒரே நேர்கோட்டில் வருமாறு சுகாசனத்தில் மிடுக்காக அமர்ந்து மூன்றுமுறை ஆழ்சுவாசம் செய்து பின், மெல்லிய குரலில் கட்டளைகள் தரும் மாஸ்டர் ரிலாக்ஸ்..ரிலாக்ஸ் என்று சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே நம்மை மறக்கும் ஆனந்தம் பற்றிக்கொள்கிறது. அடுத்துத் தெரிவது கோலால் முதுகில் ஒரு மெல்லிய தட்டு. கண் திறந்தால் புரிகிறது; பழங்கள் பழுத்த மரத்தின் கிளைகள் வளைந்து தாழ்ந்து விடுமாமே அப்படி, தலையும் மார்பும் வளைந்து பூமியை தொடும் நிலையை அடைந்து விட்டிருப்பது. தியானம் பழுக்கவில்லை, தூக்கம் பழுத்து விட்டது. 'பாழும் தூக்கம்'வேண்டாத இடத்தில் வந்து எல்லோர் முன்னும் மானத்தை வாங்குகிறது.

இதையே “The spirit is willing but the flesh is weak" என்று பைபி்ள் சொல்கிறது. ஏசுநாதர் பீட்டரையும் அவனுடன் இருந்த இரு சகாக்களையும் விழித்திருக்கும்படி பலமுறை கேட்டுக் கொண்ட பின்னரும் அவர்கள் இயலாமை கண்டு அவர் கூறுவதாக வரும் வாசகம் இது. (மத்தேயு-26:42)

இப்படி புத்தியும் உடலும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்காத நிலையில் இறைவனின் சிந்தனை எப்படி கைகூடும்?

தேகத்தில் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளபோதே ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள வேண்டும். வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் மனம் சண்டி மாடு போல பணியாது, உடல் ஒத்துழைக்காது என்பது அனுபவம் மிக்க ஞானிகளின் வாக்கு.

பிரம்மமுஹூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து செய்யப்படும் பிரார்த்தனையும் தியானமும் ஆன்ம பலம் சேர்க்கும் என்று எல்லா ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்கள் இடைவிடாமல் போதித்தாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்காகவே முடிகிறது. தன் பங்குக்கு கபீரும் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறார்.

कबीरा सोया क्या करे, उठि न भजे भगवान ।
जम जब घर ले जाएँगे, पडा रहेगा म्यान ॥


கபீரா சோயா க்யா கரே, உடி ந பஜே பக்வான் |
ஜம் ஜப் கர் லே ஜாயேங்கே, படா ரஹேகா ம்யான் ||


துஞ்சுவான் கபீர் என் செய்ய, விழித்தும் விளியான் பரமனை
அஞ்சும் போய்த் துஞ்சிய பின், விழைவார் இல்லை இக்கூட்டினை

(துஞ்சுதல் =உறக்கம், விழித்தல்= கண் விழித்தல், விளியான் =கூப்பிட மாட்டான், பரமன்= இறைவன், விழைதல்= விருப்பப் படுதல்)

இன்னும் சற்று மோனை அதிகம் வரலாமென்றால்

துஞ்சுவான் கபீரென் செய்ய, துஞ்சரித்தும் துதியான் பரமனை
அஞ்சும் போய்த் துஞ்சியப் பின், துதிப்பாரில்லை இக்கூட்டினை
(துஞ்சரித்தல்= கண் விழித்தல்; துதித்தல்=போற்றுதல்)

'அஞ்சும் போய் துஞ்சுதல்'என்பது மரணத்தைக் குறிப்பதற்காக வந்தது. ஐந்து புலன்களும் அடங்கிப் போகும் பெரும் தூக்கம்.

காலாகாலத்தில் எழவில்லைதான்,போகட்டும். ஆனால் எழுந்த பின்னாவது இறைவனை துதி செய்கின்றனரா மக்கள். அதற்கும் நேரமில்லை. காலன் அழைத்துப் போகும் காலத்தில் உடன் வரக்கூடிய சற்கருமங்களை சம்பாதிக்காமல் போனால் எதற்கு பிறவி ? உயிர் போனபின் இந்த உடலுக்கு மதிப்புதான் ஏது என்று வினவுகிறார் கபீர்.

ஆனால் அருளாளர்கள் உலகம் எப்போது அடங்கும், எப்போது ஏகாந்தத்தில் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்போடு இரவை எதிர் நோக்கி யிருப்பார்களாம். இராமலிங்க அடிகளுக்கும் தூக்கம் போய் விட்டது. இறைவனே அவனை எழுப்பி அருள் செய்கிறானாம். அந்த பேரின்பத்தை தன்னைப் போலவே யாவரும் பெற வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாதி இரவில் எழுந்தருளிப்
பாவியேனை எழுப்பி யருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது;என் போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே

அடுத்து வரும் ஒரு ஈரடியிலும் நாளுக்கு நாள் நம்மை துரத்தும் காலனை கபீர் நினைவூட்டுகிறார். கடவுளை துதிக்காமல் போன நேரம் விரயமே. ஆகையால் மீதமுள்ள நேரத்தையாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கம் அவர் வரிகளிலே தெரிகிறது.

नींद निशानी मौत की, उठ कबीरा जाग ।
और रसायन छांडि के, नाम रसायन लाग ॥


நீந்த் நிஷானீ மௌத் கீ, உட் கபீரா ஜாக் |
ஔர் ரசாயன் சாடி கே, நாம் ரசாயன் லாக் ||


தூக்க மென்பது காலனின் சுவடு, கபீரா விரைந்து விழித்திடு
ஊக்கமோ டருந்து நாமரசம், விட்டுவிடு வேறு விடயரசம்
(விடயம் =விஷயம், ரசம்= ருசி, இன்பம்; புலனின்பங்கள்.)

'உட்' என்பது எழுந்திடு என்று பொருள் படும். ‘ஜாக்' என்பது உணர்வால் விழித்துக் கொள்வது அல்லது புரிந்து கொள்வது. உலக விஷயங்களில் ஏற்படும் நாட்டத்திலிருந்து விடுபட இறைவன் நாமத்தை துணை கொள்ள வேண்டும். அதற்கான காரணத்தை திருமூலர் பொருத்தமாகச் சொல்கிறார்.

நெஞ்சு நிறைந்து அங்கிருந்த நெடுஞ் சுடர்
நஞ்செம் பிரான் என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே

(நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் நம் செம்பொருளான சிவம்; அஞ்சு=ஐம்புலன்கள்; அற்று விட்டது =கட்டுப்பாடு இல்லாமல் போனது)

இரவில் தூங்கச் செல்லும் வரையிலும் இறைவனை தொழுது கொண்டே இருங்கள். அப்படிச் செய்யத் தவறினால் யானையின் பலத்துடன் ஐம்புலன்களும் நம்மை அலைக்கழித்து விடும் என்கிறார். “விழித்தும் விளியான் பரமனை” என்று கபீர் கவலைப் படுவதற்கான காரண மூலம் நமக்கு புரிகிறது.

இரட்டை மாடுகளால் இழுக்கப்படும் வண்டி, இந்தப் பிறவி. மனம் புத்தி இவையிரண்டும் தான் இரட்டை மாடுகள். இரண்டிற்கும் மூக்கணாங்கயிறு உண்டு, வைராக்யம் மற்றும் விவேகம்.

ஆரம்பக் காலத்திலிருந்தே ஜோடி மாடுகளாக்கி பழக்கினால்தான் பயணத்திற்கு பயன்படும். சேர்ந்து பழகாத மாடுகள் வண்டி இழுக்கவோ ஏர் உழவோ பயன்படாது. விவேகத்தையும் வைராக்கியத்தையும் முறையாக பயன்படுத்தி அவற்றை பழக்க வேண்டும் என்பது பெரியவர்கள் நமக்கு சொல்லி வைத்திருக்கும் வழிமுறை. மனம் தன் போக்கில் ஐம்புலன்கள் துணையோடு பலவித வாசனைகளுக்கு அடிமையான பின்பு புத்தி அதை வழிபடுத்த முனைந்தால் அது ஒத்துழைக்குமா? எனவே தான் 'உட் கபீரா,ஜாக்' (எழுந்து உணர்ந்திடு) என்று கபீர் ஆதங்கத்தோடு நம்மை அறியாமையிலிருந்து தட்டி எழுப்புகிறார்.

Sunday, May 27, 2007

கீழே வந்தவன் திளைத்திருப்பான்

மலையடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் யானைகளின் தொந்தரவு அதிகமாகி விட்ட படியால் அவைகளைத் தடுக்க மின்வேலி அமைத்துக் கொண்டிருந்தனர் சில விவசாயிகள். அதைப்பற்றி கேட்ட பொழுது அவர்கள் சொன்னது "எல்லாம் தண்ணியத் தேடிதாங்க கீழ வருது. மலை மேல தண்ணி கெடச்சதுன்னா அதுங்க மேலேயே சுத்திக்கிட்டு இருக்குமுங்க. மனுசங்க இருக்கிற எடத்துக்கு வராதுங்க " என்றனர். பொறிதட்டினாற் போல
கபீரின் ஒரு தோஹாவுக்கு சட்டென்று விளக்கம் கிடைத்தது.

ऊँचे पानी ना टिके नीचे ही ठहराय
नीचा होय सो भरी पिये, ऊँचा प्यास जाय


ஊன்சே பானீ நா டிகே, நீசே ஹீ டஹராய்
நீசா ஹோய் ஸோ பரீ, ஊன்சா ப்யாஸ் ஜாய்


உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)

முதலில் படித்து மொழி பெயர்த்தபொழுது இது இன்றய நடைமுறைக்கு பொருந்துமா என்ற கேள்வி மனதில் தோன்றியது. தற்காலத்தில் மின் வசதிகள் பெருகிவிட்ட நிலயில் தண்ணீர் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப் படுகிறது.

இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத்தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.

உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?

ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக்கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக்கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப்பாறைகள். அத்தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்கவைத்துக்கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.

கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது நன்றி தெரிவிப்பவர்கள்.(இணைப்பைச் சுட்டவும்). அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோ



எளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.


மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.