Showing posts with label தோஹா. Show all posts
Showing posts with label தோஹா. Show all posts

Friday, February 22, 2008

கன்றைச் சுற்றும் பசு

பெரியவர்கள் பலரும் கூடியிருக்கும் வேளை. பேசுவதற்கு ஒன்றும் பெரிதான விஷயமும் இல்லை. சொல்லப் போனால் ரொம்ப 'டல்'அடிக்கிற பொழுது. அவ்வேளை ஒரு இளம் தம்பதியினர் இரண்டு வயது குழந்தையோடு வந்து சேர்கின்றனர். அதன் சூட்டிகையான பேச்சும், கேள்விகளுக்கு பதில் சொல்லும் போக்கும், வெட்கப்படாமல் செய்து காட்டிய ஆட்டமும் பாட்டமும் எல்லோரையும் கட்டிப்போட்டு விட்டது. அனைவரது முகத்திலும் உற்சாகம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.அத்தம்பதியினர் கிளம்பும் போது மனமே இல்லாமல் யாவரும் கூடி வழி அனுப்புகின்றனர். அவர்கள் போனபின்னும் வெகு நேரம் வரையிலும் அதே பேச்சு.

இது பலமுறை நாமெல்லோரும் பார்க்கும் ஒரு காட்சி.

இந்த ஈர்ப்பு குழந்தைகளிடத்தில் எப்படி ஏற்படுகிறது ? யாவரும் சொல்வது அவர்களின் கள்ளம் கபடம் அற்ற மனதே காரணம் என்பதே. அவர்களோடு இருக்கும் பொழுது பெரியவர்களும் குழந்தைகளாகி விடுகிறோம். நம்மை மறக்கும் அந்த கணங்களிலே நம் இதயமும் தூய்மையாய் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.

ஞானிகளையும் குழந்தைகளின் வகையிலேயே சேர்க்கின்றனர் பெரியோர்.அவர்களுக்கும் பேத பாவங்கள் கிடையாது. இறைவனின் கையில் தம்மை குழந்தையாய் பாவிப்பதால் செயலாற்றல் அவசியம் கிடையாது. அதனால் உண்டாகும் பாவபுண்ணியங்களும் கிடையாது. இந்த மனநிலையை நிர்மலம் என்று கூறுவர்.நிர்-மலம், மன அழுக்குகள் அற்ற நிலை.

அந்நிலையில் பெரியவர்கள் குழந்தையைச் சுற்றி வருவது போலே இறைவனும் தன் அடியவரை சுற்றி வருவானாம்.

நீதி வெண்பாவிலே வரும் ஒரு பாடலைப் பாருங்கள்.

சிவனே சிவனே சிவனே என்பார் பின்,
சிவன் உமையாளோடுந் திரிவன் -சிவன் அருளாற்
பெற்ற இளங்கன்றை பிரியாமற் பின்னோடிச்
சுற்று(ம்) பசு போல் தொடர்ந்து. (58)

(சிவனே என்பார் பின் = சிவனே என்பவர்கள் பின்னால்)

தாய் பசு எப்படி தன் கன்றை விட்டுப் பிரிய முடியாமல் அதன் பின்னே சுற்றுமோ அது போலவே இறைவனும் தன் பெயரை உள்ளன்போடு நினைப்பவர் பின்னே திரிவானாம். இதே நிலையை கபீரும் அனுபவிக்கிறார்.

कबीर मन निर्मल भया, जैसे गंगा नीर ।
पाछे पाछे हरि फिरे, कहत कबीर कबीर ॥


கபீர் மன் நிர்மல் பயா, ஜைஸே கங்கா நீர் |
பாசே பாசே ஹரி ஃபிரே, கஹத் கபீர் கபீர் ||


கபீர் மனது நிர்மலமானது, தூய கங்கை நீர் அன்னே
கபீர் கபீரென்றே அரி,குழைவான் இவன் பின்னே பின்னே

(அன்னே = போலே ; அரி =ஹரி ; குழைதல்= நெகிழ்தல்)

எப்போதும் இறைவன் தன்னுடனேயே இருக்கிறான் என்பதை தன் பின்னாலே அவன் சுற்றுகிறான் என்ற பொருளிலே சொல்கிறார். (பாசே பாசே என்பது பீசே பீசே என்று சொல்வதன் திரிபு.)

இரண்டாம் அடியில் ஹரி ஃபிரே என்பதற்கு பதிலாக ஹர் ஃபிரே என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. அப்படி வைத்துக்கொண்டால் “கபீர் கபீரென யெவரும், திரிவார் இவன் பின்னே பின்னே” என்று மொழி பெயர்க்க வேண்டி வரும்.

பொருள் கொள்வதில் சற்று வித்தியாசம் வரும். ஆரம்பத்தில் கண்ட படி நிர்மலமான மனதுக்கு யாவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு என்பதால் நிர்மலமான கபீர் யாவரையும் கவர்ந்திழுக்கிறார் என்று கொள்ள வேண்டும்.

ஹரி என்பதே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் கபீர் போன்ற மகான்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்களின் அங்கீகாரத்திற்காக கவலைப்பட்டவர்கள் அல்லர்.


மகாபாரதம் எழுதி முடித்த வியாசருக்கு மனதில் அமைதி குலைந்து விட்டது. மெகா சீரியல்கள் போல போட்டி பொறாமை, சூது வஞ்சம் என்று இவற்றைப் பற்றிய கதையை சொன்னதால் அதன் பாதிப்பு அந்த மகரிஷிக்கும் வந்துவிட்டது.அப்போது நாரதரின் அறிவுரைப்படி கிருஷ்ணரின் பால்ய லீலைகளைப் போற்றும் பாகவதத்தை எழுதினார். பாலகிருஷ்ணனின் குறும்புகளையும் லீலைகளையும் சொல்லச் சொல்ல அவர் மனம் மீண்டும் நிர்மலம் ஆகி அமைதி கொண்டார் என்று அறிகிறோம்.

“மன ஏவ மனுஷ்யானம்”. நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதுவே ஆகிவிடுவோம் என்று அதனால் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். நற்சிந்தனைகளிலேயே மனதை செலுத்தும் பொழுது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளும் நன்றாகவே அமைவதைக் காண்கிறோம்.

Friday, November 23, 2007

சிரிப்பு பாதி அழுகை பாதி

பலருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு திரைப்படப் பாடல். எங்க வீட்டுப்பெண் படம். முதல் வரி் "சிரிப்பு பாதி அழுகை பாதி, சேர்ந்ததல்லவோ மனித ஜாதி".

உலக நியதியின் படி இன்பம் துன்பம் என்பது மாறி மாறி வருவதே. அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. நாம் விரும்பும் வகையில் நிகழ்சிகள் நடக்கும் போது எல்லாம் மகிழ்சியே. அப்படி இல்லாத போது துன்பமே.

உலகின் பெரும்பாலான மக்கள் சிறு குழந்தைகள் போல. தூங்கி எழுந்து பசியாறி வேறு தேவைகள் இல்லாத நிலையில் விளையாட்டில் மனம் ஈடுபட்டு தன்னை மறந்து இருக்கும் ஒரு குழந்தை. அப்பொழுது வீட்டின் ஞாபகமோ தாயின் ஞாபகமோ அதற்கு இருப்பதில்லை. அதுவே விளையாடும் போது அடிபட்டால் உடனே "அம்மா அம்மா" என்று அழுது தீர்த்துவிடும். அதனுடைய தாய் வந்து ஒரு பெரும் முயற்சி எடுத்து சமாதானம் செய்வதற்குள் பிறருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

வாழ்க்கையில் நமக்கு சிறு துன்பம் வந்துவிட்டால் உடனே இறைவனின் ஞாபகம் வந்துவிடும். யாருக்கும் இல்லாத துன்பம் நமக்கு மட்டுமே ஏற்பட்டு விட்டது போல் துடித்து விடுவோம். உலகில் நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வரையில் கடவுளின் அவசியம் தெரிவதில்லை. இந்த இயல்பை கபீர் இப்படி உரைக்கிறார்.

सुख के माथे सिल परै, राम हृदय से जाय ।
बलिहारी व दुखकी, पल पल राम रटाय ॥


ஸுக் கே மாதே ஸில் பரை, ராம் ஹ்ருதய் ஸே ஜாய்
பலிஹாரி வ துக்கீ, பல் பல் ராம் ரடாய்


மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்
விதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்


ஹிந்தியில் पल पल (பல், பல்) என்றால் ஒவ்வொரு கணமும் என்று பொருள். கஷ்டகாலத்தில் ஒவ்வொருகணமும் இடைவிடாது இராமனை செபிக்கக் கூடியவர்கள், சுகமான காலத்தில் கல்நெஞ்சக்காரர்கள் ஆகிவிடுவார்களாம்.

ஒரு வணிகனுக்கு கடன் தொல்லை மிகுதியாகி ஒரு சமயம் பெருமாளிடம் வேண்டிக்கொண்டானாம். "பெருமாளே நீ என் வியாபாரத்தை நல்ல முறையில் பெருக்கிக் கடன் தொல்லையைத் தீர்த்துவிடு. பதிலுக்கு என்னுடைய நிலத்தில் ஒரு காணியை விற்று உனக்கு காணிக்கையாக உண்டியலில் சேர்த்து விடுகிறேன்." அதாவது நிலத்தை விற்றுத் தீர்க்கக்கூடிய கடன் அல்ல. அதை விடவும் பல மடங்கு பெரிது. ஆகவே பெருமாளுக்கு ஒரு சிறிய கமிஷன்.

பெருமாளின் அருளால் விரைவிலேயே அவன் நிலைமை முன்னேறி வியாபாரம் செழித்தது. கடனெல்லாம் தீர்ந்தது. வணிகனின் மனைவி அவனுக்கு வேண்டுதலைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். நிலத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. வணிகனுக்கோ காணி நிலம் விற்றுவரக்கூடிய பணம் இப்பொழுது மிகப் பெரிதாகத் தெரிந்தது. கடவுளையும் [மனைவியை என்று கொள்க :))] திருப்தி படுத்தவேண்டும். பணத்தையும் இழக்கக்கூடாது என்கிற நிலை. பல நாள் யோசனைக்குப் பின் அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தரகர்களிடம் "என் நிலத்தை வாங்குபவர்கள் அதில் காவலுக்கு இருக்கும் நாயையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். நிலத்தின் விலை ஒரு தங்கக் காசு. நாயின் விலை ஆயிரம் தங்கக் காசுகள்" என்று சொல்லி வைத்தான். எப்படி அவன் தந்திரம் !! இதைத்தான் கபீர் ’சுகத்தில் மதியும் இறுகிடும்’ என்கிறாரோ? (माथे -புத்தி, அறிவு, सिल परै- கல் போலாதல்).

வேறு சில துன்பங்கள் கர்ம வினைகளை ஒட்டி வருவன. பிறவி ஊனம், பெரும் பிணிகள் போன்றவற்றிற்கு இறைவனையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவைகளை பரமஹம்ஸர் குடிக்கூலி என்பார். குடியிருக்கும் வீட்டிற்கு ஒருவன் வாடகை கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து விடுதலை எப்போது? தாயுமானவர் இவற்றை ஒரு பொருட்டாக கருதவில்லை. இறைவனின் அருள் வெள்ளம் பெருகும் போது அதன் முன்னே இந்த கர்மாக்கள் என்ன செய்ய முடியும் எனக் கேட்கிறார்.

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு
கல்லின் முன் எதிர் நிற்குமோ
கர்மமானவை கோடி முன்னே செய்தாலும் நின்

கருணைப் பிரவாக அருளைத்

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ ... (எங்கும் நிறைகின்ற பொருள்-6)


கர்ம வினைகளெல்லாம் வெறும் காக்கை கூட்டம் போலனவாம். இறைவனின் திருநாமம் என்ற ஒரு கல்லை வீசுங்கள் போதும் அவையெல்லாம் பறந்து போகும் என்கிறார். அந்த உண்மையை உணர்ந்த கபீருக்கும் அதனாலேயே துன்பப் படுபவர்களைக் கண்டால் ஆச்சரியம் தோன்றுகிறது.

दुख में सुमिरन सब करे, सुख में करे न कोए ।
जो सुख में सुमिरन करे, दुख काहे को होए ॥


துக் மே சுமிரன் ஸப் கரே, ஸுக் மே கரே ந கோய் |
ஜோ ஸுக் மே சுமிரன் கரே, துக் காஹே கோ ஹோய் ||


துயரில் துய்வர் அவன் நாமம்,
உயர்வில் உன்ன மறப்பரே

உயர்விலும் உன்னுவராயின்
துயரின் சாயலும் தொலையுமே

(உன்னுதல்= இடைவிடாது நினைத்தல்)

துக் காஹே கோ ஹோய் "என்றால் "துன்பம் எதற்காக வரும்" என்று பொருள்.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"


கடவுளின் சிந்தையில் மூழ்கியவனுக்கு பிறருக்கு தீங்கு செய்தல் என்பது இல்லை. அப்புறம் அவனுக்கு துன்பம் எதற்காக வரும். தெய்வ ப்ரீதி, பாப பீதி என்று இதையே ரத்தின சுருக்கமாக சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியவர்கள்.

Saturday, July 21, 2007

எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்.

நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் எடுத்த காரியத்தில் தொடர்ந்து பல தடங்கல்களை கண்ட அனுபவம் இருக்கும். அது வியாபாரத் தொடர்பானதாகவோ, திருமண விஷயமோ அல்லது உத்தியோக உயர்வு வீடு கட்டுதல் இத்யாதி காரணங்களுக்காக இருக்கலாம்.. சில அற்ப காரணங்களுக்காக கூடி வரும் போல இருந்தது கூட தட்டிப் போவதும் உண்டு. அத்தகைய நேரங்களில் -குறிப்பாக இந்திய மண்ணில் -நம்மை நாமே தேற்றிக் கொள்ள சொல்லிக் கொள்ளும் பொன்மொழி "எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்".

பல நாட்களுக்குப் பிறகு பின்னோக்கிப் பார்க்கையில் அப்படித் தட்டிப் போனதே வேறொரு வகையில் நல்லதாய் போனது என்று சந்தோஷப் படுவதும் உண்டு.

Many a time we are blessed by not getting what we desired.

வாழ்க்கையை ஒரு தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கற்றுக் கொள்ளும் போது மன உளைச்சலைப் பெருமளவு தவிர்க்கலாம். காலம் கனிவதன் அவசியம் தெரியாத போது நம் முயற்சிகளெல்லாம் வீணாகப் போனதாக எண்ணி மனம் துன்பப் படுகிறது. காலமறிந்து செயலாற்றுதலின் முக்கியத்துவத்தை வள்ளுவரும் ஒரு அத்தியாயம் முழுவதுமாக உரைக்கிறார்.

கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.


பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த பொழுது கொக்கு விரைந்து குத்துதல் போல விரைந்து செயல்பட வேண்டும்.

உள்ளத்தில் அமைதி இருக்கும் போதுதான் காலம் கனிந்து வருவதை அறியும் விவேகம் இருக்கும். அமைதி கொள்ளும்படி கபீர் மனதிற்கு உபதேசிக்கிறார். அதுவும் எப்படி ? ஒரு அழகிய உதாரணத்துடன்;

धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए ।
माली सीचे सौ घडा, ऋतु आये फल होए ॥


தீரே தீரே ரே மனா, தீரே ஸப் குச் ஹோயே
மாலீ ஸீசே ஸௌ கடா, ருது ஆயே பல் ஹோயே


நிறைவுறும் காரியம் யாவுமே, மெல்ல மெல்லவே மனமே
இறைப்பினும் குடந்நூறு தினமே காலத்தே வரும் பலனே


தாவரங்களுக்கு தண்ணீர் இன்றிமையாததுதான். தோட்டக்காரன் நாள் முழுவதும் நீர் இறைக்கலாம். ஆனால் தண்ணீர் ஒன்று மட்டும் செடி கொடிகளின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்லையே. தோட்டக்காரனின் அவசரத்திற்காக அவை காய்த்து விடுவதில்லை. அதற்குரிய பருவம் வரும் பொழுது பூப்பூத்து காயாகி பின் கனியாகவும் தருகிறது. நம் முயற்சிகளுக்கான பலன் என்ன என்பதையும் எப்பொழுது தரவேண்டும் என்பதையும் காலம் அறியும்.

சீனாவில் ஒரு குறிப்பிட்ட மூங்கில் வகையைப் பற்றிச் சொல்வதுண்டு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் அதன் விதைகள் நேர்த்தி செய்து பாதுகாக்கப்பட்டால் பன்னிரெண்டாவது வருடத்தில் அது முளைவிடும். அடுத்த ஆறு மாதங்களில் அதன் வளர்ச்சி சுமார் தொன்னூறு அடிகள் ! இது நம் ஊரின் குறிஞ்சி பூக்களைப் போல் பன்னிரெண்டு வருட சுழற்சியை ஒத்ததாக இருக்கிறது இல்லையா! பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு நடக்க வேண்டிய அந்த வெளிப்பாட்டுக்காக உரிய மாற்றங்கள் ஏதோ அந்த விதைக்குள்ளே (அல்லது செடிக்குள்ளே) தொடர்ந்து நடைப்பெற்றிருக்க வேண்டும். நம் புற கண்களுக்கு அவை தெரிவதில்லை அவ்வளவுதான்.

ஒரு வருடத்திற்குள்ளான பருவ மாற்றங்களை பூகோள ரீதியாக தெரிந்து வைத்திருக்கிறோம். பல வருடங்களுக்குட்பட்ட உயிரியல் சார்ந்த பருவங்கள் பற்றி- மேலே சொன்ன உதாரணங்களைப் போல- வெகு குறைவாகவே நாம் அறிவோம். பல ஜென்மங்களில் தொடர்ந்து வரும் வினைவழி சார்ந்த வெளிப்பாடுகளை (பலன்களை) யாரே அறிவார்?

கபீர் ஒரு வகையில் ஔவையாரின் கருத்துக்களை (மூதுரை 05) எதிரொலித்திருக்கிறார் எனலாம்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா.

ஆனால் யாரும் தமது முயற்சியின்மைக்கு, தள்ளிப் போடும் சுபாவத்திற்கு நேரம் வரவில்லை என்பதை ஒரு போலியான காரணமாகக் கொள்ளக் கூடாது. முயற்சியின்மையை வன்மையாகக் கண்டிக்கிறார் கபீர். அதை வேறொரு சமயம் பார்ப்போம்.

Tuesday, February 20, 2007

வேடதாரிகளின் வேடிக்கைகள்

உலகம் ஒரு நாடக மேடை. நாடகம் என்றால் நவரசங்களும் வேண்டும். சோகக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் நகைச்சுவையும் இறைந்து கிடக்கிறது நாம் எந்த கண் கொண்டு பார்க்கிறோம் என்பதைப் பொருத்து. பொதுவாக நகைச்சுவை என்பது பிறருடைய அனுபவமாகவோ அல்லது பிறர் சம்பந்தப் பட்ட விஷயங்களாக இருக்கும் போது ருசி அதிகம். அதனால் நமக்கு பாதிப்பு இல்லை பாருங்கள் ! Hypocrisy எனப்படும் சொல்வதற்கும் செய்வதற்கும் சம்பந்தமில்லாமல் நடந்து கொள்பவர்கள் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். "படிக்கிறது ராமாயாணம் இடிக்கிறது பெருமாள் கோவில் " என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி.

ஒரு சிலர் அறியாமையால் அப்படி நடந்து கொண்டால் வேறு சிலர் தம்மை பிறரை விட அதி புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு நகைப்புக்கு இடமளிக்கிறார்கள். கபீர் குறிப்பிடும் கீழ் கண்ட மனிதன் ஒரு அறிவிலி. அவனுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

अहिरन की चोरी करै करॆ सुई का दान
ऊंचा चटिकर दॆखता कॆतिक दूर विमान


அஹிரன் கீ சோரீ கரை கரே ஸுயீ கா தான்
ஊஞ்சா சடிகர் தேக்தா, கேதிக் தூர் விமான்


உலைக்கல்லே திருடுவான், செய்வனே ஊசி யளவு தானம்
உயரே ஏறித் தேடுவான், எதுவரை வந்தது விமானம்

அஹிரன் என்பது கொல்லன் உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் உலைக்கல். இதுவும் இரும்பால் ஆனது. மிகவும் எடையுள்ளது. காய்ச்சிய இரும்புத் துண்டை இதன் மேல் வைத்தே சம்மட்டியால் அடித்து விரும்பிய வடிவமைப்பை கொண்டு வருவர். இதை ஆங்கிலத்தில் anvil என்று உரைப்பர்.

அடிப்படையில் நம் கவிதை நாயகனுக்கு கொஞ்சம் திருட்டுகுணம் அதிகம். எங்கே வேண்டுமானாலும் சென்று எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக தூக்கிக் கொண்டு வந்து விடுவான். அவனுக்கு உலைக்கல் போன்ற தூக்குவதற்கே சிரமமான பொருள் ஒன்றும் பெரிய விஷயமில்லை. அத்தகையவன் எப்பொழுதோ ஒரு கதை கேட்க நேரும் பொழுது ஏழைகளுக்கு தானம் செய்பவர்களை வைகுண்டத்திற்கு புஷ்பக விமானத்தில் விஷ்ணு தூதர்கள் அழைத்து செல்வார்கள் என்று கேள்விப் பட்டிருந்தான். அவனுக்கும் ஏதோ ஒரு நாளில் ஒரு ஏழைக்கு சிறிய தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைத்து விட்டதாகவே நினைக்கிறான். அவன் வீட்டு மாடி ஏறி வைகுண்டம் வானத்தில் எந்த திசையில் உள்ளது என்று தேடுகிறான். விஷ்ணு தூதர்கள் எந்த பக்கத்திலிருந்து வரக்கூடும் என்றும் ஆராய்கிறான். கண்டிப்பாக இவன் புத்திசாலியாக இருக்க முடியாது. அவன் தன் கற்பனை உலகில் வாழ்பவன். ஆனாலும் நகைச்சுவைக்கு குறைவில்லை.

அதிபுத்திசாலிகளின் விதம் இன்னொரு வகை.

माला तिलक तॊ भॆष है , राम भक्ति कुछ और
कहैं कबीर जिन पहिरिया, पाँचॊं राखै ठौर

மாலா திலக் தோ பேஷ் ஹை, ராம் பக்தி குச் ஔர்
கஹை கபீர் ஜின் பஹிரியா, பான்ஞ்சோ ராகை டௌர்

திலகம் மாலை வேடமோ பலே, இராம பக்தியே வேறே
திகழும் பக்தி அவருளே கபீரா, ஐந்தும் அடக்குவார் உள்ளே


'ஐந்தும் அடக்குவாருள்ளே' என்பது ஐம்புலன்களையும் தம் கட்டுக்குள் வைத்திருப்பவர்களை குறிப்பதாகும்.

பலரும் பெரும் பக்திமான்கள் போல திருநீறு அல்லது திருமண், ருத்திராட்ச மாலைப் போன்ற பல சமயச் சின்னங்களைப் பகட்டாக வெளிக்காட்டிக் கொண்டு தினம் முழுவதும் வலம் வருவார்கள். ஆயின் உள்ளத்திலே சிறிதளவும் கட்டுப் பாடின்றி புலன் வழி போக்கிலேயே காலத்தைக் கழிப்பர். இவர்களைப் பொருத்தவரை இறைவன் அவனுடைய இடத்திலிருந்து நமது பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டு நமக்கு அருள் புரிபவன் (ஒரு வேளை அது அவனுடைய கடமை என்றும் நினப்பார்களோ). நாம் வேளைக்கு தக்கபடி கிடைத்ததை அனுபவிப்போம் என்ற வகையில் அவர்கள் போக்கு இருக்கும். செய்கின்ற உபதேசத்திற்கும் செயலுக்கும் ஒரு தொடர்பும் இருக்காது.

ராமகிருஷ்ணர் சொல்லிய கதையில் ஒரு பகுதி. ஒரு பசு தோட்டத்தில் நுழைந்து செடிகளையெல்லாம் மேய்ந்து விடுகிறது. அந்தத் தோட்டம் ஒரு பிராமணனுக்கு சொந்தமானது. அவனுக்கு வந்த கோபத்தில் அடி அடியென்று அடித்து அந்த பசு இறந்து விடுகிறது. பசுவின் சொந்தகாரன் வந்து '"கடவுளுக்கு அருகே" இருக்கும் ஒரு பிராமணனுக்கு இப்படி ஏன் புத்தி போயிற்று என்று சண்டைக்கு வருகிறான். பிராமணன் சளைத்தவனா என்ன ? இதோ பார். மனிதனின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு தேவதை அதிபதி. கண்ணுக்கு சூரிய சந்திரர்கள், கையிற்கு இந்திரன், காதுக்கு வாயு இத்தியாதி. ஆகவே உன் பசுவை கொன்றது கைக்கு அதிபதியான இந்திரனே. அவனைப் போய் கேள்." என்று சண்டைக்கு வந்தவனை மடக்கினான். சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, இத்தகைய அதிபுத்திசாலிகளுடன் பேசுவதில் தன் நேரம் விரயமாகும் என்றுணர்ந்த மாட்டின் சொந்தக்காரன் பிராமணனைத் திட்டிக் கொண்டே சென்றுவிட்டான். கோபம் என்ற உணர்ச்சியின் மீது சிறிதும் கட்டுப் பாடற்ற தன் செயலை அந்த பிராமணன் நியாயப் படுத்த முனைவதுதான் நகைப்பிற்கு உள்ளாகிறது. வெளிப்பார்வைக்கு சாத்வீகன் போல காட்சியளித்தாலும் உள்ளே குரூர மனப்பான்மையும் பொய் பேசுதலும் குணமாகக் கொண்ட இத்தகையவர் எப்படி இறைவன் அருளுக்கு பாத்திரமாக முடியும் என்பதே கபீரின் கேள்வி.

உண்மை பக்தியை, சிவ போகத்தை, வளர்த்துக் கொள்ளும் முறையை பட்டினத்தார் கூறுகிறார்.

அஞ்சக் கரம் எனும் கோடாலி கொண்டு இந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்காட்டை வேர் அற வெட்டி வளங்கள் செய்து
விஞ்சத்திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை இட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே


(அஞ்சக்கரம் = நம: சிவாய என்ற நாமம், ஐந்து அட்சரம்; அக்ஷரம் என்பது அக்கரம் ஆகும்
வஞ்சப் புலக் காட்டை = ஐம்புலன்கள் வஞ்சகம் செய்து மனதை திசைதிருப்பும் இவ்வுலகப் பற்றை
புஞ்சக் களை= காமம் என்கின்ற களை)


தூய்மையான பக்தி ஒருவருள் வளரவேண்டுமானால் ஐம்புலன்களையும் வெட்டித் திருத்த வேண்டியது அவசியம் என்பது பட்டினத்தடிகளின் வரிகளிலிருந்தும் தெளிவாகிறது.