Wednesday, July 02, 2025

சத்குருவிடம் சரணாகதி (2)

 இந்த தலைப்பில் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். இந்தப்பதிவிலும் அதே குருவைப்பற்றி பேசப்போகிறோம். சமீபத்தில் அவரது சொற்பொழிவுகளின்  மொழி பெயர்ப்பை தட்டச்சு செய்து நிறைவு செய்யும் வேளையில்  இதை இந்த ஆண்டு குரு பூர்ணிமைக்கு  (ஜுலை 10) சமர்பணம் செய்ய விழைகிறேன்.

சற்று விவரமாக சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ பிரம்ம சைதன்ய மஹராஜரைப் பற்றித்  தெரிந்து கொள்ள வேண்டும். அவர் மஹாராஷ்ட்ராவில் சதாரா ஜில்லாவில்  கோண்டாவாலே  என்ற ஊரில் 19 நூற்றாண்டில் வசித்த மகான். அதனால் அவரை கோண்டாவாலேகர் என்றும் அழைப்பர்.

அவர் வாழ்ந்த காலம் 19/2/1845 - 22/12/1913  

எளிய நாமசெபத்தின் அருமையை கபீர் போலவே மீண்டும் மீண்டும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை ராம நாமத்தில் ஈடுபடுத்தி ஒரு ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.

அவருடைய சொற்பொழிவுகளை தொகுத்து தினசரி ஒரு பக்கம் என்னும் வகையில்-பாராயணத்திற்கும் சத்சங்கத்திற்கும் ஏற்ற முறையில்-கோண்டாவாலே சமஸ்தானம் புத்தகமாக குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.  ஒரு வருடம் முழுவதும் படிக்கும் வகையில் ஜனவரி -1 முதல் டிசம்பர்-31 வரை  தேதியிட்டு ஒவ்வொரு நாளுக்கும் தலைப்பு கொடுத்து மிக அழகாக தொகுத்து இருக்கிறார்கள்.

அதனை 2017 ஆண்டு ஒவ்வொரு தினமும் அன்றைய தினத்திற்கான உரையை தமிழில் மொழி பெயர்த்து, பயன்படுத்துவாரின்றி கிடந்த பழைய டையரி ஒன்றில் எழுதி வந்தேன். இதை இரண்டு காரணங்களுக்காக தொடர்ந்து செய்தேன். மொழிபெயர்க்கும் போது ஒரு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டியிருக்கிறது. அதனால் கருத்தாழம் மனதில் பதிந்து, ஒருவகையில் அந்த மகானுடன் சத்சங்கம் செய்ததாகிறது. இரண்டாவது எழுதுவதால் கையில் எழுதும் பழக்கமும் தமிழும் மறக்காமல் இருக்கிறது. புது புது தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

 குரு அருளால் அந்த வேலையை செய்து முடிக்க முடிந்தது. அதன் பின்னர் அந்த கையெழுத்துப் பிரதியை கோண்டாவாலேக்கு எடுத்துச் சென்று அவர் வாழ்ந்த சமஸ்தானத்தில் சமர்பணம் செய்வது பொருத்தமாகும் என்று தோன்றியது. ஆனால் இன்று வரை அதற்கான வேளை வரவில்லை.

ஸ்ரீ பிரம்மசைதன்யரை போலவே நாமசெபத்தின் பெருமையை வளர்த்த பப்பா ராமதாஸ் அவர்களின் காஸர்கோடு ஆனந்தா ஆசிரமத்திற்கு எடுத்து சென்று அவரது காலடிகளில் சமர்ப்பித்து ஓரளவு ஆறுதல் அடைந்தேன். (விசிறி சாமியார் என அன்புடன் அழைக்கப்பெற்ற யோகி ராம்சூரத் குமார் அவர்களின் குரு பப்பா ராமதாஸ் என்பதையும் இங்கே நினைவு கூர்வோம்).  

சிறிது காலம் அந்த டையரி அப்படியே இருந்தது. பக்கம் பக்கமாக (400 பக்கங்கள்) தட்டச்சு செய்வதற்கு மிக மலைப்பாக இருந்தது.

2022-ல்  Samsung drawing pad ஒன்றை வரவழைத்தேன். முக்கியமாக டிஜிடல் வரைபடத்திற்கு ஏதுவாக (கையடக்கமாக) இருக்கும் என்பது என் நோக்கமாக இருந்தது.  அதை பயிற்சி செய்த அதே காலத்தில் இது voice typing செய்வதற்கும் உபயோகமாக இருப்பதைக் கண்டு கொண்டேன்.  தமிழில் மிகச் சுலபமாக ஐந்தே நிமிடங்களில் ஒரு பக்கத்தை முடிக்க முடிந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் பிழைத் திருத்தம் செய்ய வேண்டியதாயிற்று. இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு செய்யலாம். இப்படியாகநேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அத்தனைப் பக்கங்களையும் -உரக்க வாசித்து -தட்டச்சு செய்து நேற்று முடித்தேன். இனிமேற்கொண்டு செய்ய வேண்டியதற்கும் அந்த சத்குருவே வழிகாட்டுவார் என் நம்புகிறேன்.  இதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் நம்முடைய முயற்சிகள் எதுவும் வீண்போகாமல் அதற்குரிய நேரத்தில் தகுந்த வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.  அதையே குரு அருள் என்று பெரியவர்கள் சொல்கின்றனர். 

சுயபுராணத்திற்கு மன்னிக்கவும். இப்போது பிரம்ம சைதன்ய மஹாராஜ் பற்றி சிந்திப்போம்.

 “யாரைப்பற்றியும் நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை. ஏனென்றால் மனிதனாகப் பிறந்த எவரும் ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் கடவுளை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் “

என்று ஒரு குரு பூர்ணிமை உரையில் கோண்டாவாலேகர் கூறியிருப்பதன் மூலம் எப்படி மகான்கள் அனைவரையும் சமபாவத்துடன் நடத்துகின்றனர் என்பது புரிகிறது.

இந்த மொழிபெயர்ப்பின் போது பல சமயங்களில் அவர் குரு மகிமையை கூறும் போதும் நாமசெபத்தின் பெருமையை சொல்லும் போதும் கபீர்தாஸரின் கருத்துகளை எதிரொலிப்பது நன்றாகவே புரிந்தது.  கபீரை நினைவு படுத்தும் வகையில் அவருடைய  டிசம்பர் 31ஆம் தேதி உரையில் கீழே உள்ள வரிகள்  முடிவுரையாக வந்தது.

 “எப்படி தன்னுடைய கன்று செல்லும் இடத்திற்கெல்லாம் தாய் பசு செல்லுமோ அப்படி குருவானவர், நாம செபத்தில் தோய்ந்த பக்தர்களை பின் தொடருகின்றார்.”

நீதி வெண்பா பாடல்  ஒன்றில் இதே கருத்து வெளிப்பட்டு இருப்பதை ஏற்கனவே (2008-ல்) கண்டிருக்கிறோம். ( கன்றைச் சுற்றும் பசு) 

அதையே கபீர்தாஸரும் சொல்லுகிறார் :

கபீர் மனது நிர்மலமானது தூய கங்கை நீர் அன்னே

கபீர் கபீரென்றே ஹரி குழைவான் இவன் பின்னே பின்னே

மனித உடல் எடுத்து குருவாக வந்து  கடவுளை காட்டுவதால் குருவும் இறைவனும் ஒன்றே என்பதை எல்லா மஹான்களும் சொல்லுகிறார்கள்.

அப்படி ஹரி ( அல்லது குரு ) தன் பக்தனின் பின்னே சுற்றுவதற்கு காரணம் என்ன?  பக்தன் நாமசெபத்தை விடாமல் செய்யும் போது அது மனதை பரிசுத்தமாக்குகிறது. தூய மனமே இறைவனின் குடியிருப்பு. இதையும் கோண்டாவாலேகார் சொல்லுகிறார். அவருடைய மொழியிலேயே காண்போம்.


( click the picture to see larger one)

இறைவனின் நாமஸ்மரணத்தை விடாமல் பிடித்துக் கொள்வதே கலியுகத்திற்கான முக்கிய, மிக எளிய சாதனம் என்பதை காலங்காலமாக எல்லா மஹான்களும் சொல்லி வருகின்றனர். வருகின்ற  ஜுலை 10 ஆம் தேதி குரு பூர்ணிமை.  அனைவரும் குருவின் அருளுக்காக நாம செபத்தை -அவரவர்க்கு பிடித்த கடவுளின் பெயரை- பிடித்துக் கொண்டு முயற்சி செய்வோம். அந்த முயற்சி இல்லாமல் தகுதி வராது. அருளுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வதே முதற்படி.  குரு கடாக்ஷம் பரிபூர்ணம்.

ஸ்ரீ பிரம்ம சைதன்ய மஹராஜ்  சமஸ்தான வலைத்தளத்தில் அவரைப்பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு : கபீரின் கனிமொழிகள் (2008) கட்டுரைகள் புத்தக வடிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையே அச்சிடப்பட்டுள்ளது. தங்களுடைய சத்சங்கங்களில் உதவும் என்று நினைப்பவர்களும், மின் வடிவில் தேடி படிக்க இயலாதவர்களுக்கும்  கீழே உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டால்  இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கிறேன். இது விற்பனைக்கு அல்ல . 184 பக்கங்கள் கொண்டது.

தொடர்புக்கு :  ஒன்பது  நான்கு  எட்டு  பூஜ்யம்  நான்கு  நான்கு  மூன்று  பூஜ்யம் ஏழு  பூஜ்யம்

Thursday, October 31, 2024

"ஸப் கா மாலிக் ஏக் ஹை "

 சென்ற பதிவில் ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில்  குறிப்பிடப்பட்டிருந்த காட்கே மஹராஜின் வரலாற்றைக் கண்டோம்.

இந்த பதிவில், அதே புத்தகத்தில் வாரிஷ் அலி ஷா என்னும் மற்றுமொரு மஹானின் அவதாரக் குறிப்பும் அவரைப் பற்றிய தகவல்கள் எப்படி உண்மையாகியுள்ளன என்பது பற்றியும் பார்ப்போம்.

சரிதாம்ருதத்தின் 45 ஆவது அத்தியாயத்தில் திசீலா என்ற ஊரில் ஒரு இசுலாமிய குரு சாயிநாத் என்ற பெயரில் அவதரிக்கப் போவதையும் .அவருக்கு வெங்குசா என்னும் பெரியவர் இந்து மதத்தின் குருவாகவும் முஸ்லீம் மத குருவாக வாரிஷ் அலி ஷா என்பவரும் வருவார்கள் என்றும் ஸ்ரீபாதர் தெரிவிக்கிறார். [அதே சமயத்தில் தான் சுவாமி சமர்த்தராக அவதரிப்பதாகவும் சாயிநாதனுக்கு தன்னுடைய சக்தியை மாற்றம் செய்து தன் அவதாரத்தை நிறைவு செய்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்]



 ஷிரடி சாயி சரிதத்தை பார்க்கும் போது அவர் ஒரு இசுலாமிய தம்பதியரால் நான்கு வயது வரை வளர்க்கப்பட்டு பின்னர்  நான்காம் வயதிலிருந்து 16 ஆம் வயது வரை  வெங்குசா என்றழைக்கப்பட்ட கோபால் ராவ் தேஷ்முக் என்பவரின் அரவணைப்பில் ஆன்மீகப் பயிற்சி பெற்றார் என்றும்  தெரிய வருகிறது.   தினமலர்  வலைத்தள இணைப்புக்கு  சுட்டவும்

இதில் சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ள கணிப்பில் குரு வெங்குசா பற்றிய பகுதி நிஜமாகியிருப்பது தெரிகிறது.

1851 -இல் முதன் முதலாக ஷிரடியில் ஒரு வேப்பமரத்தடியில் ஆழ்ந்த தவ நிலையில் உள்ள இளைஞனாக காட்சியளித்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

அதன் பின் 1854 முதல் 1858 வரை அவருடைய இருப்பிடம் வாழ்க்கைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 1858 -ல் ஒரு திருமண கோஷ்டியுடன் ஷிரடிக்கு வந்தவர் அங்கேயே தங்கி விட்டார் என்பது அவருடைய சரிதத்தில் உள்ளது.

இதிலிருந்து அந்த நான்கு அல்லது ஐந்து வருட கால இடைவெளியில் சாயிபாபாவிற்கு வாரிஷ் அலி ஷா வின் தொடர்பு ஏற்பட்டு இசுலாமிய வழிமுறைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கிறது என்று அனுமானிக்க முடிகிறது.

 ஆனால் இந்த முஸ்லீம் குரு ஹாஜி வாரிஷ் அலி ஷா (1817-1905 ) பற்றி நான் எதுவும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அவரைப் பற்றிய தேடல் துவங்கியபோது முதலில் கண்ணில் பட்டது விக்கிப்பீடியா ( தரவு பக்கம்) அவருடைய பாட்டனார், ஈரான் பிரதேசத்திலிருந்து லக்னௌ அருகே தேவா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். இன்று அது ஒரு முக்கிய யாத்திரைத் தலமாக இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் விளங்குகிறது.

    அவர் ஒரு சுஃபி மார்க்கத்தில் ஆன்மீகத்தின் -அன் அல் ஹக் எனப்படும் (அஹம் பிரம்ஹாஸ்மி)- உச்சத்தை எட்டியிருந்த ஒரு மகான் என்பது தெரிய வந்தது.

   தமது இரண்டாம் வயதில் தந்தையை இழந்த அவர் அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பிற குழந்தைகள் போலல்லாமல் அமைதி மிக்கவராய் காணப்பட்டார். ஐந்து வயதில் குரான் படிக்க ஆரம்பித்த அவர் இரண்டே வருடங்களில் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார். உயர் கல்வியை லக்னௌ நகரில் உறவினர் வீட்டிலிருந்து கற்றார். அரபு, பாரசீக மொழிகளில் அற்புத தேர்ச்சி பெற்று சமய போதனைகளையும் விளக்கங்களையும் பண்டிதர்களே வியக்கும் வண்ணம் கொடுக்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றி சீடர்கள் சேர ஆரம்பித்தனர். 1838 -இல் அவர் புனித  ஹஜ் பயணம் மேற்கொண்டார். எவரையும் உடன் அழைத்துச் செல்ல மறுத்து பாத யாத்திரையாக ஆக்ரா ஜெய்பூர், வழியாக மும்பை அடைந்தார். மும்பையிலிருந்து ஜெத்தா வரையிலுமான பயணத்தை கப்பலில் கடந்தார்.

மீண்டும்  கால்நடையாகவே மெக்கா மெதினா  எகிப்து, துருக்கி, ஜெர்மனி இங்கிலாந்து வரை பயணம் செய்தார் என்பதும் தெரிய வந்தது. இந்த பயணத்தில். சுமார் பதினான்கு ஆண்டு காலம் பலமுறை ஹஜ் யாத்திரை செய்து ஆன்மீக வழிகாட்டினார்.   

துருக்கி ஆட்டோவான் அரசர், ஜெர்மனியில் பிஸ்மார்க், இங்கிலாந்து அரசி விக்டோரியா முதலியோர்களை சந்தித்ததாக சொல்லும் போது அவருக்கு அக்காலத்திலிருந்த மதிப்பை அறிய முடிகிறது.

பீர் (Pir) எனப்படும் இசுலாமிய குரு மிகுந்த எளிய வாழ்க்கை வாழ்பவனாகவும், நாளைக்கென எதையும் சேர்த்து வைக்காதவனாகவும் அனைவரையும் சமகண்ணோட்டத்துடன் நடத்த வேண்டுமென்பதிலும் அவர் மிகுந்த கவனுத்துடன் நடைமுறையில் கடைபிடித்தார்.  அவரது வாழ்க்கையை கவனித்த ஆங்கில சரித்திர ஆசியர்கள் “ஹாஜி வாரிஷ் அலி ஷா  ஜீஸஸ் போன்றே ஒரு தூய இறை தூதர்” என்று போற்றுகின்றனர்.

விக்கிபீடியா பக்கத்தில் ஹாஜி வாரிஷ் அலி ஷா வின் பெரிய சீடர்களின் பட்டியலில் ஷிரடி சாயிபாபாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கபீர்தாஸ், வாரிஷ் அலி ஷா மற்றும் சிரடி சாயிபாபா மூவருமே இந்து-இசுலாமிய மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட உழைத்த பெரும் ஞானிகள். அவர்களின் உபதேசங்களிடையே பெரும் ஒற்றுமையை காணலாம். 

கபீர்தாஸரின் அறிவுரைகள் எப்படி ‘ ஹாஜி வாரிஷ் அலி ஷா’ வின் உபதேசங்களுடன் பொருந்தி வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள். (https://sufinama.org/poets/haji-waris-ali-shah/quotes )

1)  Not a breath should he pass without the remembrance of God

काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं |
सास-सास सुमिरन करॊ,और यतन कुछ नाहिं ||  ( Kabir)
நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு  |
மூச்சிலும் செபிநாமம், முயல்வதற் கில்லை வேறெதுவும்  ||

2)  Distance does not count in love, I am with you even if you are at a distance of thousands of miles

कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर

பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்

(அகோரமணி, இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை. தவறாமல் படிக்கவும். 

https://kabeeran.blogspot.com/2012/02/blog-post.html )

 

3)  It is no use going to Kaaba for those who cannot see God here

मोको कहाँ ढूढे रे बन्दे?    என்னைத் தேடுவதும் எங்கே
मैं तो तेरे पास में         
நானிருப்பதோ உன் அருகே

ना तीर्थ में ना मूर्त में      தீர்த்தங்களிலோ மூர்த்தங்களிலோ இல்லை
ना एकान्त निवास में       
தனிமைத் தேடும் ஏகாந்தத்தில் இல்லை

ना मंदिर में ना मस्जिद में   கோவிலிலோ, மசூதியிலோ  இல்லை
ना काबे कैलास में           
காபாவிலோ கைலாயத்திலோ இல்லை  

मैं तो तेरे पास में           நானிருப்பதோ உன் அருகே

4)  A true faqir never wants anything

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं

धन का भूखा जो फिरै, सो  तो साधू नाहीं

அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை |

பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை ||

 

தன்னைத் தேடி வந்த பக்தரிகளிடையே எவ்வித பாகுபாடும் வாரிஷ் அலி காட்டவில்லை. யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. அவரவர் மதநம்பிக்கைகளையே கடைபிடிக்கச் சொன்னார். ஏனென்றால் இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அதனையே “சப் கா மாலிக் ஏக் ஹை” என்று ஷிரடி பாபாவும் மீண்டும் மீண்டும் சொன்னார்.

இன்று தீபாவளித் திருநாள். அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைக்கட்டும் என்பதை நினைவுபடுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழா. ஆனால் அதர்மமே தர்மத்தின் போர்வை போர்த்துக் கொண்டு எப்படி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மது விற்பனையையும் ( லக்ஷ்மி பூஜை என்ற பெயரில்)  சூதாட்டமும் நடைபெற வைக்கிறது என்பதை ஒரு போலீஸ் அதிகாரி நம் தேசத்து மக்களின் அறியாமை கண்டு மனம் வெதும்புகிறார்.

அவர் பெயர் ஷைலஜாகாந்த் மிஷ்ரா, உத்திரபிரதேசத்தில் DGP ஆக பணியாற்றியவர்

கபீரும், ஹாஜி வாரிஷ் அலியும், ஷிரடி சாயி போதிக்கும் சர்வமத சம்மத கருத்துகளை அந்த அதிகாரி குரான், வேதம் மற்றும் பைபிள் மேற்கோள்கள் மூலம் அழகாக எடுத்துரைக்கும் போது என்று தான் இந்த உலகம் திருந்தப்போகிறது என்ற ஆதங்கம் மேலோங்குகிறது.

இவ்வுலகின் போக்கை நிர்ணயிப்பவன் அவன். மணிவாசகப் பெருமான் சொல்வது போல் “ நன்றே செய்வாய் பிழைசெய்வாய், நானோ இதற்கு நாயகமே “ என்று தான் ஆறுதல் தேட வேண்டியிருக்கிறது.

இரமண பகவானின் “ உன்னைத் திருத்திக் கொள், உலகம் தானே சரியாகும்” என்பதின் கருத்தாழத்தை பிடித்துக் கொண்டால் இந்த தீபாவளியின் பயன் அடைந்ததாகக் கருதலாம்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Sunday, July 21, 2024

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே

 திருமலதாஸ் என்பவன் ஒரு சலவைத் தொழிலாளி. 

இது சுமார் 700 ஆண்டுகள் பழைய சரித்திரம்.  ( click here for details )

அவனுடைய பேறு  ஸ்ரீபாத  ஸ்ரீவல்லபரின் குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.  தொடர்பு மட்டுமல்ல  அவருடைய அருளும் இருந்தது. 

அதன் பயனாக முதிர்ச்சி அடைந்திருந்த அவனுடைய ஞானம், சங்கர்பட்டிடம் தன்னுடைய அடுத்த பிறப்பின் ரகசியத்தை வெளியிட்டது. அதுவும் ஸ்ரீபாதரால் அவருக்கு தெரியப்படுத்தப் பட்டதே.

அதை  ஸ்ரீபாத சரிதாம்ருதத்தின் கீழுள்ள பக்கங்களில் காணலாம். ( while reading on mobile screen click on the image to expand for better readability)

  


ஸ்ரீபாதரின் சரிதாம்ருதத்தை மொழி பெயர்க்கும் போதே ' யாரிந்த காட்கே மஹராஜ்' என்ற எண்ணம் எழுந்தது.  அந்த சரிதாம்ருதத்தில் வந்த  பல கூற்றுகள்  வித்யாரண்யர், ராமலிங்க சுவாமிகள்,  சிவாஜி, சமர்த்த ராமதாஸர் ராகவேந்திரர், ஷிரடி சாயி போன்றவர்களின் வருகைகள் முன் கூட்டியே சொல்லப்பட்டு அவைகள் நிஜமானதைக் கண்டு  இந்த காட்கே மஹராஜ் பற்றியும் அறிய ஆவல் எழுந்தது.

இணையத்தேடலின் போது ஒரு பெரும் பொக்கிஷமே கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் மஹாராஷ்ட்டிரத்தில் நன்கு அறியப்பட்ட பெரும் சீர்திருத்தவாதி. 

  அமராவதி பகுதியில் ஷேண்காவ் என்ற கிராமத்தில் வண்ணாரக் குலத்தில் பிறந்தவர். இயற் பெயர் தேபூஜி  ஜிங்ராஜி  ஜானோர்கர்.  தீண்டாமை, வறுமை போன்ற காரணங்களால்  முறையான எழுத்தறிவு பெற முடியாவிட்டாலும் கிராமத்து சிறுவர்களை சேர்த்துக் கொண்டு பஜன் மண்டலி அமைத்து விழாக் காலங்களில் கீர்த்தனங்கள் செய்வதில் சுற்றுப்புற வட்டாரங்களில் மிகவும்  பிரபலமானார்.

அவர் பிறந்தது  பிப்ரவரி 23, 1876

குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட அவருடைய தந்தையை இளவயதிலேயே இழந்த அவருள்  சமுதாய மாற்றத்திற்கான அவசியம் ஆழப்பதிந்தது.

பதினெட்டு வயதில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமானார். 
தாய்மாமனுடன் விவசாயத்தில் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றிய போதும் தன் கீர்த்தனங்களை நிறுத்தவில்லை.  அவரது 29 வது வயதில் ஒரு  கடன் பத்திர மோசடி மூலம் தன் நிலத்தையும் இழக்க நேர்ந்த போது எழுத்தறிவுக் கல்வியின் அவசியம் புரிந்தது. அதற்கெனவே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு குடும்ப வாழ்வை துறந்தார்.

ஊர் ஊராக சென்று தனி மனித விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். கையில் எப்பொழுதும் ஒரு விளக்குமாறு,  தலைமேல் கவிழ்க்கப்பட்ட -உடைந்த -மண் ஓடு (காட்கே- Gadge).  இதுதான் அவருடைய அடையாளங்கள். (தற்கால மொழியில் சொல்வதானால் 'பிராண்ட் இமேஜ்' ).

ஒரு கிராமத்தை அடைந்ததும் தெருவுகளையும்,  சாக்கடைகளையும் சுத்தம் செய்ய ஆரம்பிப்பார். உடன் சேர்ந்து கொள்பவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப் படுவதில்லை. யாரேனும் உணவளித்தால் மண் ஓடு பிட்சை பாத்திரமாகும்.  மாலையில் கீர்த்தனங்கள். இடையிடையே கேள்வி பதில் பாணியில் சீர்திருத்தக் கருத்துகள். இவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அடுத்த நாள் மற்றொரு கிராமம்.

அவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஈடுபாடு கொள்ளவில்லை. ஆனால் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நலிந்தவருக்கும் வறியவர்களுக்கும் சேவை செய்வதில் அக்கறை காட்டினார். 

அவர் கபீரைப் போலவும் வள்ளலாரைப் போலவும் தெய்வத்தை உயிருள்ள ஜீவனில் கண்டார். கல்லில் காணவில்லை.  அவருடைய கீர்த்தனங்களில்  நாமதேவரின் அபங்கங்களும்  கபீரின் தோஹாக்களும்  மிக அதிகமாக இடம் பெற்றன.  


கபீர் சொல்வது போல பேசாத சிலைகளை விட நடமாடும் ஆத்மாக்களிடையே இறைவனைக் காண்பாய் என்பதை அவர் நடைமுறையில் செய்து காட்டினார்.

कबीर जेता आतमा , तेता सालिगराम  | 
बोलनहारा पूजिये,  नहीं पाहन सो काम ||

நேரடி மொழி பெயர்ப்பு
கபீர், ஜீவித ஆத்மா அதுவே சாளக்கிராமம் |
உயிரோட்டத்தைத் தொழு, கற்பூசனைகள் ஆகாது||

மிகச் சுருக்கமாக கூறப்பட்டுள்ள கபீரின் ஈரடிக்கு சற்றே விளங்கும் வகையில் நீளமான தமிழ் மொழி பெயர்ப்பு :

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே, இத்தேகமே சாளக்கிராமம்,  கபீரா |
மன்னுயிரில் அவனை வணங்கு,  மூர்த்தி பூசனை எதுவும் பயன் தரா  ||

[ அகம் = குடியுள்ள வீடு ;  சாளக்கிராமம் = கண்டகி நதியில் கிடைக்கும் திருமாலின் அம்சம் உள்ள விசேஷமானக் கல் '; மன்னுயிர் =உலகில் உள்ள உயிர்கள் ; மூர்த்தி பூசனை = விக்கிரக ஆராதனை.]

தொன்று தொட்டு சாளக்கிராம கற்களை பூஜை அறையில் வைத்து பூஜிப்பது  நம் நாடெங்கும் உள்ள வழக்கம். பெருமாள் உள்ள கல் புனிதமானால், அவனே குடியிருக்கும் ஜீவன்கள் இன்னும் எத்தனை புனிதமானவை !! அவற்றிற்கு செய்யப்படும் சேவை நிஜத்தில் பெருமாளுக்கே செய்த பூஜையாகும் என்பதை இந்த தோஹாவில் கபீர் வலியுறுத்துகிறார்.

காட்கே மஹராஜ் மூட நம்பிக்கைகளை வெறுத்தார். ஆனால் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. அவருடைய கீர்த்தனங்களில் மிகவும் பிரபலமானது " கோபாலா கோபாலா தேவகி நந்தன கோபாலா "  என்பதாகும்.

விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காட்கே மஹராஜரினுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மானவ சேவையே  மாதவன் சேவை  என்பதில் அவர் குறியாக இருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தையும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதிலும்,  யாத்திரிகர்களுக்கு அன்ன சத்திரங்கள், மருத்துவ மனைகள், கோசாலைகள், தொழுநோயாளிகளின் சிகிச்சை கூடம், அபலையர் நலிவுற்றோர் இல்லம் கட்டுவதில் செலவிட்டார்.
ஏழைகளோடு ஏழையாகவே வாழ்ந்தார்.

அவருடைய வாழ்க்கையை இன்னொரு கபீரின் ஈரடி அழகாக படம் பிடிக்கிறது.

दीन  गरीबी  बंदगी  साधून  सौं   आधीन  | 
ताके  संग  मैं यौं  रहूं , ज्यौं पानी संग  मीन  || 

விழைவேன் ஏழையின் எளிமை, செய்வேன் சாதுவிற்கு பணிவிடை |
மகிழ்வேன் அவர்தம்  உறவில்,  திளத்திருக்கும் மீன்போல் நீரிடை  ||

மீனுக்கு நீரில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அப்படி  சத்சங்கத்தில், சாதுக்களுக்கு பணிவிடை செய்யவும் எளிய மக்களுடன் கூடியிருப்பதுமே தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்ற கபீர் வரிகளுக்கு மஹராஜ் இலக்கணமாகத் திகழ்ந்தார். 

பண்டரிபுரத்தில்  அவர் கட்டிய சத்திரத்தை  டாக்டர் அம்பேத்கரின்  People's Education Society க்கென நன்கொடையாக கொடுத்து விட்டார். அம்பேத்கரும் அவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒருவர் செயலை மற்றொருவர் போற்றினர். தனது கீர்த்தன சொற்பொழிவுகளில் அடிக்கடி அம்பேத்கர் அவர்களின் கல்வியையும், உழைப்பையும் மேற்கோள் காட்டி ஒவ்வொரு சிறுவனும் அவர் போல் முன்னுக்கு வர வேண்டும்  என்பதை வலியுறுத்துவார். 

பாடத்திட்டத்தில் தொழிற் கல்விக்கு  அதிமுக்கியத்துவம் கொடுத்தார். இதனால் தன்னம்பிக்கை உள்ள  இளைய தலைமுறை பெருகியது.  அவர் மஹாராஷ்ட்ராவில்  நிறுவிய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களில் 36 கல்விக் கூடங்கள்  அடங்கும்.

டாக்டர் அம்பேத்கர் 06/12/1956 -ல் இயற்கை எய்திய போது  பெரிதும் துக்கமடைந்தார் மஹராஜ்.  சரியாக இரண்டு வாரங்களில் ( 20/12/1956) மஹராஜும் இறைவனடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது எண்பது. அவர் டாக்டர் அம்பேத்காரை விட பதினைந்து வருடங்கள் மூத்தவர். இருப்பினும் அவர் கீர்த்தனங்களின் போது  அம்பேத்கரை கடவுளுக்கு சமமாக மதித்தார். தன்னை ஒரு போதும் முன்னிறுத்திக்  கொள்ளவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதியான காட்கே மஹராஜுக்கு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது  கொடுத்து அந்த விருதிற்கு பெருமை சேர்த்தது இந்திய அரசு.   

1983-ல் நாக்பூர் பல்கலைகழகத்திலிருந்து பிரித்து  "சந்த் பாபா காட்கே அமராவதி பல்கலைகழகம்" என்ற பெயரில் புதிய பல்கலைகழகத்தை துவக்கினர்.  ஆனால் காட்கே மஹராஜோ தன் மரணத்திற்குப் பின் தனக்கு சமாதி, சிலை வைப்பது எதுவும் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். 

எந்த ஒரு தன்னலமற்ற சேவையும் காலத்தால் போற்றப்பட வேண்டும். அடுத்து வரும் தலமுறைகளை நல்வழியில் நடத்த அவை வழிகாட்டும் என்பதை வைத்து பார்க்கையில் மஹராஜின் வார்த்தைகள் மீறப்பட்டதாக நினைக்க வேண்டியதில்லை. திருவள்ளுவர் கூறுவது போல் 
  
நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது  புத்தேள் உலகு   

ஒருவன் நிலவுலகத்தில் நிலையான புகழ் தரும்  செயல்களை செய்வானாயின் தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டும் சிறந்தவரை விரும்பாது. 

இன்று ( 21-07-2024) குரு பூர்ணிமை. காட்கே மஹராஜ் போன்ற கர்மயோகிகளை போற்றி நினைப்பதும் குரு வந்தனையாகும்.  அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்.

ஜெய் குருதேவ்.

Sunday, March 31, 2024

ஞானமெனும் வேழம்

திருவண்ணாமலையில் ஒரு "பிச்சைக்காரன்". 

பல வருடங்கள் அவரை அப்படியே பொது மக்கள் கருதினர். இன்னும் சிலர் பைத்தியம் என்றனர். அவனை ஹிந்தி காரன் என்று ஊரை விட்டே விரட்டும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். அவனது அல்ப சொல்ப உடமைகளை பறித்துக் கொண்டதோடு அடித்தும் ஏன் கொலை செய்வதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் மலையின் ஏதாவது ஒரு பகுதியிலோ கோவில் மண்டபத்திலோ அமர்ந்து நாம செபத்தில் ஆழ்ந்து விடுவதே அவன் வழக்கம்.

அந்த பிச்சைக்காரனைப் பிடித்திருந்தது ஞானப் பைத்தியம். அந்த மாதிரி பைத்தியங்களுக்கு 'பெரிய ஆசுபத்திரி' திருவண்ணாமலையை விட்டால்  வேறு எது?

சுவாமி ஞானாநந்த கிரி, பெரியசாமி தூரன், கிவா ஜகன்னாதன் போன்றவர்களின் அற்புத கண்டுபிடிப்பு அந்த பைத்தியத்தை யோகி ராம்சுரத்குமார் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 

இந்த பைத்தியத்தைத் தேடி  சுதாமணி என்ற  இன்னொரு பைத்தியம் கேரளாவின் ஒரு மீனவ குப்பத்திலிருந்து வந்தது. அந்த மாதரசி  கிருஷ்ணனின் பரம பக்தை. நாம் மீராவின் பக்தியையும்  ஆண்டாளின் பக்தியைப் பற்றியும் படித்தும் கேட்டும் இருக்கிறோம். அவர்களுடைய பக்திக்கு எவ்விதத்திலும் சளைக்காத பக்தி அவரை ஒரு பைத்தியமாகவே ஆக்கியிருந்தது.  அதை புரிந்து கொள்ள இயலாத அவருடைய சுற்றத்தாரும் ஊராரும், பைத்தியத்தைக் கண்டு பேசிய பேச்சுகளும் அதை விடுவிக்க செய்த காரியங்களும் பெரும் மனத்துன்பத்தைத் தருபவையாயிருந்தன.   அவருடைய வரலாறை அறிய இந்த இணைப்பை சுட்டவும்.


கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.  தன்னுடைய மகள் வயது ஒத்த 'அன்னை' அமிருதானந்தமயியைக் கண்டதும்  பிச்சைக்காரன்  அவரை அமர வைத்து தன் கையில் எப்போதும் இருக்கும் விசிறியால்  அவருக்கு  காற்றை வீசி தன்னுடைய அளவற்ற அன்பை வெளிகாட்டினார். 

இருவரை பற்றியும்  சரியான முறையில் தெரிந்து கொள்ள உலகத்துக்கு பலகாலம் பிடித்தது.

இந்த உலகோரின் போக்கே விசித்திரம். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் அறியாத குழந்தைகள் போல மாயையின் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். அதைக் கண்டு குமரகுருபர சுவாமிகள் சொல்லிய பாடல்:

பரபரப்பினோடே பலப்பல செய்தாங்கு 
இரவு பகல்  பாழுக்கிறைப்ப - ஒரு ஆற்றான்
நல்லாற்றில் நூக்கில்  பதறி  குலை குலைப
எவ்வாற்றான் உய்வார் இவர் ?  -       நீதி நெறிவிளக்கம் (89)

பாழுக்கிறைப்ப = வீணில் கழித்து
ஒரு ஆற்றான்      = ஒரு வகையில்
நல்லாற்றில்         = நல்ல வழியில்
நூக்கில்                  =ஈடுபடுத்தினால்
பதறி குலை குலைப  = பதறி நடுங்குவர்
எவ்வாற்றான்       = எந்த வகையில்
உய்வார் இவர்     = இவர் இறைவனை அடைவர் 

உலகினர் இரவு பகலாக மனம் வாக்கு காயம் மூன்றினாலும் மேன்மை தராத பலப்பல காரியங்கள் செய்து மன அமைதியின்றி வீணில் கழிக்கின்றனர். ஒரு சான்றோன் வந்து, ஒரு வேளை, அவர்களை நல்ல வழியில் ( இறை சிந்தனையில்) ஈடுபடச் சொன்னாலும் அவர்களது மனம் அதை ஏற்காது. பதறி மெய் நடுக்கம் கொள்வர்.  இவர்கள் முன்னேறுவதற்கான வழியேது என்று விசனப்படுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த பிரச்சனை எல்லாக் காலத்திலும் உள்ளது. புத்தர் ஏசு நானக் கபீர் காணாத எதிர்ப்புகளா ?  அதனால் கபீர் ஆத்ம சாதகனுக்கு  தைரியம் தரும்அறிவுரை "எதைப்பற்றியும் கவலைப்படாதே. யானையைப் போல முன்னேறு"

हस्ती चढ़िए ज्ञान कौ, सहज दुलीचा डारि |
स्वान रूप संसार है, भूँकन दे झख मारि ||

ஞானெமெனும் வேழம் மேல்  மோனமெனும் இருக்கை ஏறிடு |

சுவானம் போலும் உலகம், குரைத்தே அடங்கிடும் கண்டிடு ||

(சுவானம் = நாய் ; மோனம் = நிர்விகல்ப சமாதி )

ஞானத்தின் லட்சணமே சமதிருஷ்டி. அதைக் கண்டவர்க்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம் கிடையாது. அந்த நிலையை அடைந்தவரை உலகத்தின் போக்கு எவ்விதத்திலும் பாதிக்காது. அதனால் ஞானத்தை யானைக்கு ஒப்பிடுகிறார் கபீர். அந்த ஞானியின் விருப்பம் என்ன ? சதா சர்வ காலமும் ஆனந்த நிட்டையில் ஆழ்ந்திருப்பது தான்.  உரையற்ற அந்த நிலையையே மோனநிட்டை எனும் இருக்கை என்று குறிப்பிடுகிறார். 

இறைவன் மகான்களை மனிதரிடையே அவர்களை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்ல அனுப்பிக் கொண்டே இருக்கிறான். அவரவர் வினை வழியில் தக்க காலத்தில் குரு அருள் கிட்டுகிறது. 

கீழே காணும் சித்திரம் இந்த பதிவிற்காக பிரத்யேகமாக வரையப்பட்டது. அந்த படம் இந்த பதிவை மறக்கவிடாது :)))


ஜெய் குரு தேவ் 

Saturday, December 30, 2023

நாகமொன்றை மண்ணால் செய்தே ...

இயற்கையில் நமக்கு புரியாத புதிர்கள் ஏராளம். அவற்றிற்கெல்லாம்  விடைகாண இயலாது. ஆனால் மனிதர்களின் செயல்களுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவைகளும் பல சமயங்களில் அர்த்தமின்றி செய்யப்படும் போது- குறிப்பாக சமய வழக்கங்களில் - மூட நம்பிக்கையாகிறது. 

நாக பஞ்சமியன்று  பாம்புப் புற்றினுக்கு பால் ஊற்றுவது நம் நாடெங்கும் பரவலாகக் காணப்படுவது. பால் குடிக்காத பாம்பிற்கு எதற்குப் பால்?  பல வருடங்களாக என்னைக் குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு விஞ்ஞான ரீதியான  விளக்கம் ஒன்று  கறையான் புற்றுகளை பற்றி எழுதும் போது  எனக்கு தோன்றியது.  அதை  கட்டுரையின் கடைசியில் காண்போம். 

இந்த நம்பிக்கை உள்ளவர்களின் நடத்தை அவர்களின் நிஜ வாழ்க்கைக்கு முரணாகப் போகும் போது சான்றோர்களின் நகைப்பிற்கு ஆளாகிறார்கள்.

கபீர்தாஸ்  இதை இப்படி கேலி செய்கிறார்'

माटी का एक नाग बनाके, पूजे लोग लुगाया ।

जिन्दा नाग जब घर में निकले, ले लाठी धमकाया ।।

நாகமொன்றை மண்ணால் செய்தே உலகோர் செய்வார் பூசை |

நாகமோ உயிருடன் அகம் புகுந்தால் தடியால் விழுமே பூசை ||

( அகம் = இல்லம் ; பூசை என்பதற்கு பலத்த அடி என்ற பொருளும் உண்டு

இங்கே நம்பிக்கை வேறு நடப்பு வேறு என்பது வெளிப்படை.  இந்த இடைவெளி பெரிதாகும் போது நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை ஆகிறது.

இதே கருத்தை கர்நாடகத்தில் பக்தி புரட்சி  செய்த பஸவேசுவரர்  "கல்ல நாகர கண்டரே"  என்னும் பாடலில் சொல்லியிருக்கிறார்.  இவர் 400 வருடங்கள் கபீர்தாஸருக்கும்  முந்தயவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (1134- 1196 )

ಕಲ್ಲ ನಾಗರ ಕಂಡರೆ ಹಾಲನೆರೆಯೆಂಬರು,
ದಿಟದ  ನಾಗರ ಕಂಡರೆ ಕೊಲ್ಲೆಂಬರಯ್ಯಾ 
ಉಂಬ ಜಂಗಮ ಬಂದಡೆ ನಡೆಯೆಂಬರು 
ಉಣ್ಣದ  ಲಿಂಗಕ್ಕೆ ಬೋನವ ಹಿಡಿಯೆoಬರಯ್ಯಾ
ನಮ್ಮ ಕೂಡಲಸಂಗನ ಶರಣರ ಕಂಡು 
            ಉದಾಸೀನವ ಮಾಡಿದಡೆ 
ಕಲ್ಲ  ತಾಗಿದ ಮಿಟ್ಟಿಯಂತಪ್ಪರಯ್ಯಾ     ।।

 நாகம் கல்லானால் பாலை அதன் மேல் சொரிவார் 

நாகம் உயிர்த்து வந்தால் உடனே அதைக் கொல்வார் 

உன்னத அடியார்களிடம்  பாராமுகம் கொள்வார்

உண்ணாத லிங்கத்திற்கு நிவேதனம் படைப்பார்.

கூடல சங்கம தேவா 

உன் பக்தரை உதாசீனம் செய்வோரெல்லாம் 

மண்கட்டி  பாறையில் மோதியது போலாவார் 

இந்த பாடல் சிவனடியார்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. 

அவர்கள்,மன உறுதியில்,  பாறையைப் போன்றவர்கள். வெளியுலக ஏற்றத் தாழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை.  அவர்களின் பெருமை அறியாதவர்கள் மண்கட்டி போன்றவர்கள். அந்த சிறுமதியாளர்கள் தாம் செய்யும் உதாஸீனத்தால் பாதிப்பு தங்களுக்கே என்பதை அறியாதவர்கள். எப்படி மணற்கட்டியை  பாறை மேல் வீசினால் தூள்தூளாகிப் போகுமோ அது போன்றே அஞ்ஞானிகள் சான்றோர்களுக்கு செய்யும் அவமதிப்பால் தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்கின்றனர் என்பதே இதன் மையக்கருத்து.

 ஆன்மீகத்தின் முதற்தேவை மன அடக்கம் அடுத்த கட்டம் சாது சத்சங்கம். தற்பெருமையால் மன அடக்கம் குன்றும் போது தவறுகள் பெரிதாகும் வாய்ப்பு அதிகம். அப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது. இதனால் நஷ்டம் நமக்கே ஒழிய சாதுக்களுக்கு ஒன்றுமில்லை. அதைத்தான் மண் உருண்டை உதாரணத்தின் மூலம் மிகவும் நாசூக்காக பஸவேசுவரர் சொல்லியிருக்கிறார்.

------------------------------------------------------------------------------

என் சிற்றறிவுக்கு எட்டியபடி :

பாம்பின் (கறையான்) புற்றிற்கு பாலூற்றுவது ஏன்? 

மக்குத்திம்மன் பதிவு ஒன்றில் 'கறையான் புற்றில் பாம்பு' பற்றி டிவிஜி யின் பாடலை (#371) மொழி பெயர்த்திருந்தேன். அப்போது அந்த புற்றுகளை அவைகள் எப்படி அமைக்கின்றன என்பதைப் பற்றி பல கட்டுரைகளை படிக்க நேர்ந்தது.  முக்கியமாக மண்துகளை பிணைக்கும் அவற்றின் உமிழ்நீர் ஒரு சிறப்பான ரசாயனத்தன்மை கொண்டது. எப்படி சிலந்தியின் வலை அதன் உமிழ்நீரால் பின்னப்படுகிறதோ அதேபோல் கறையான் எறும்புகள் தம்முடைய உமிழ்நீரால் கூட்டை கட்டுகின்றன. அந்த ரசாயனத்தின் தன்மை என்னவெனில் மழைக் காற்று இவற்றை தாக்கு பிடிக்கும் அளவு உறுதியானது மட்டுமின்றி அந்த கூட்டைச் சுற்றி பிற வகை தாவிரங்கள்  பெரிய அளவில் எதுவும் தலையெடுக்காமல் தடுக்கும். ஏனெனில் அவற்றின் வேர் கூட்டை அடைந்தால் அவைகளின் பாடு பெரும்பாடு ஆகிவிடும். அதனால் புற்றுகள் மிகுந்த பகுதி வறண்டு கள்ளிச் செடிகளும் முட்புதர்களுமாக காணப்படுகின்றன.  நாளடைவில் இப்புற்றுகளில் அடியில் உள்ள குளிர்ச்சி காரணமாக பாம்புகள் குடி புகுகின்றன. அதனால் அவை பாம்பு புற்று ஆகிவிடுகின்றன.

இயற்கை விவசாயத்தை பரிந்துரைப்போரின் முக்கிய கவனமெல்லாம் மண்ணை வளப்படுத்தும் பாக்டீரியாக்களை மண்ணில் அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு பசுந்தாள் உரம் அதிகம் மண்ணில் சேர்த்து  யூரியா போன்ற ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரசாயன உரங்கள் நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கு விஷம் போன்றவை.

இப்போது வீட்டுத் தோட்டத்திலோ விவசாய நிலத்திலோ ஒரு கறையான் புற்று காணப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அவைகளின் பெருக்கத்தை தடைசெய்ய அல்லது நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க பால் தயிர் போன்ற புரதம் கூடிய திரவங்களை மண்ணில் சேர்த்தால்  அவைகள் விரைவாக செயல்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாட்டை துரிதப்படுத்தும்.  இதனால் தாவரங்களுக்கு வேண்டிய ஊட்டச் சத்து கிடைக்க வழி பிறக்கும். புற்றுக்கு பால்  ஊற்றுவதன் காரணம் இதுவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

இதை ஒருவகை soil reclamation என்று கூட சொல்லலாமோ !

இது என்னுடைய மேலோட்டமான புரிதல். இதில் எவ்விதமான ஆன்மீக உள்ளுணர்வும் கிடையாது. 

ஆனால் சர்ப்ப வழிபாட்டில் கண்டிப்பாக ஆழமான பொருள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ சத்குருவின்  வார்த்தைகளில் கேளுங்கள்.

Wednesday, December 27, 2023

நாமம் தோய்ந்த மூச்சு

 இன்று திருவாதிரை( 27-12-2023)

விறகு வெட்டியான சேந்தனாரின் பக்திப் பெருமையை தில்லை பெருமான் உலகறியச் செய்த நாள்.  அவருடைய எளிய வீட்டிற்கே சிவனடியாராகச் சென்று அவர் படைத்த களியை விரும்பி ஏற்று களிக்கு  திருவாதிரைக் களி என்று ஏற்றம் கொடுத்த நாள். களிநடனம் புரிபவன் களியில் களி கண்டான்.

பின்னர் அவரை பல்லாண்டு பாடும்படி பணித்து அதன் பின் தேரோட்டம் தடையின்றி சென்றதாக அவருடைய வரலாறு சொல்கிறது.

அப்போது அவர் பாடிய "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்" என்று தொடங்கி " பல்லாண்டு கூறுதுமே" என்று முடியும் பதிமூன்று பாடல்களும் ஒன்பதாம் திருமுறையாக சைவத் திருமுறை பகுப்பில் போற்றப் படுகிறது.

என்னிடத்தில் இருக்கும் தமிழ் வேதத் திரட்டிலிருந்து ஒருமுறை அதைப் படித்து விட்டு என்னுடைய திருவாதிரை வழிபாட்டை  நிறைவு செய்த திருப்தியில் வேறு சில பக்கங்களைப் புரட்டினேன். 

அப்போது  மணிவாசகப் பெருமானின் "யாத்திரைப் பத்து" கவனத்தைக் கவர்ந்தது.  அதில் நான்காவது பாடலில் 'அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடுமின் விளையாட்டை....' என்ற வரிகள் ஏனோ என்னை தடுத்து நிறுத்தியது.

இப்போது நான் செய்து கொண்டிருக்கும் தோத்திரம் எல்லாமே வெறும் விளையாட்டு தானோ?  எனக்கு சேந்தனாரைப்போலவும் பிற அடியார்களைப் போலவும் பக்தி எப்போது வரும்?  

'செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான் பொடி சேர்  மேனி புயங்கன் தன் பூவார் கழற்கே'  என்று அவர் நமக்கு உறுதி மொழி அளித்தாலும் நமக்கு அதற்கான தகுதி வேண்டாமோ! 

அத்தகுதியை அடைந்த மாணிக்கவாசகர் அத்தகைய பக்தர்களின் நிலையை வருணிப்பதை பார்ப்போம். 

நல்காது ஒழியான் நமக்கு என்று உன்
நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா
வணங்கா மனத்தால் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி
அருளாய் என்னை உடையானே.  ( கோயில் மூத்தத் திருப்பதிகம் )

( மல்கா என்பதை மல்கி என்றும்  வாழ்த்தா என்பதை வாழ்த்தி என்றும் குழறா என்பதை குழறி என்றும் வணங்கா என்பதை வணங்கி என்றும் பொருள் கொள்ள வேண்டும் )

இறைவனிடம் ' உன் நாமம் பிதற்றி' என்று சொல்லும் போது அடியார்கள் அதைத் தவிர வேறொன்றையும் நினைக்கவோ பேசவோ மாட்டார்கள் என்பது புரிகிறது.  அடுத்து வரும் வரிகள் அத்தகைய பக்தர்களின் உடல் மற்றும் மனநிலையை விவரிக்கின்றன.

அவர் சொல்லும் எந்தத் தகுதியும் என்னிடம் இல்லை என்பதை உணரும் போது ஏனிந்த நிலைமை என்று ஆராயத் தோன்றுகிறது.  "அகலவிடுமின் விளையாட்டை" என்று  அவர் போதிப்பதை கடைபிடிக்காததால் வரும் விளவுதான் என்கிற காரணமும் புரிகிறது.

கபீர்தாஸரின் ஈரடி ஒன்று இதை உரைகல் போல மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

सांस  सुफल सो  जानिये ,जो सुमिरन में जाय | 

और सांस यौं ही गये , करि करि बहुत उपाय  || 

இதன் பொருள் "நீ விடுகின்ற மூச்சு பயனுள்ளதாயிற்று இறைநாமத்துடன் கூடிவந்தால்.  இல்லாவிடில்  ஏதேதோ வெளிவிவகாரங்களினால் வீணாய் போய்விட்டது. "

யத் யத் கர்ம கரோமி  தத் தத் அகிலம் சம்போ தவ ஆராதனம் என்று சிவ மானஸ ஸ்துதியில் சொல்வது போல்  அவனுடைய நினைவாகவே என் கடமைகளை செய்கின்றேனா என்றால் இல்லையென்பதே உண்மை.

ஒருநாளைக்கு மனிதர்களின் சுவாசம் 21000 முறை நடைபெறுகிறதாம். கபீர் சொல்வது போல் 21000 முறையும்  கடவுள் சிந்தனையோடிருந்தால் கண்டிப்பாக சேந்தனாரைப் போலவோ மாணிக்கவாசகர் போலவோ அந்த உயர் நிலையை அடையலாம்.  ஆனால் உலக நடப்பில் மனம் உழன்று அது சாத்தியமின்றி நம்மை அலைகழிக்கிறது

தமிழில் மொழி பெயர்ப்பு

நாமம் தோய்ந்த மூச்சோ ? நாளெல்லாம் நல்லதாச்சு |

நாமம் சேராத மூச்சோ ?  பொழுதெல்லாம் வீணாய் போச்சு ||

2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து கொண்டிருக்கிறது.

புதிய வருடத்திலாவது சற்று முன்னேறுவதற்கான சத்சங்கங்களைத் தேடிப் பிடிப்போம்.

அனைவருக்கும் குரு அருளும் இறையருளும் பெருகட்டும்.

Friday, December 23, 2022

குருவைத் தேடி.....

குருவின்றி ஞானம் இல்லை என்பது ஆன்மீகத்தின் அரிச்சுவடி பாடங்களில் ஒன்று. கபீர் தாஸ் அவர்களின் ஒரு ஈரடி இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

कबीरा ते नर अन्ध है, गुरु को कहते और ।
हरि रूठे गुरु ठौर है, गुरु रुठै नहीं ठौर ॥

மனிதரில் அவனே குருடன், கபீரா, குருவை அறியாதவன் | 

அரி முனிந்தால் குருவுண்டு, குரு முனிந்தால் யாருண்டு ||

( அரி = ஹரி  ;  முனி = கோபம், வெறுப்பு)

கடவுளே நமது கர்மங்களினால் நம்மீது வெறுப்படைந்திருந்தாலும்  குருவானவர் நமக்கு அடைக்கலம் தந்து அவற்றின் கடுமையை தணிக்கச் செய்ய வல்லவர். ஆனால் அத்தகைய குருவிற்கே நம்மீது கோபம் ஏற்பட்டுவிட்டால் அப்போது அந்த கடவுள் கூட துணை வரமாட்டான். அப்படிப்பட்ட குருவை புரிந்து கொள்ள முடியாத மனிதரெல்லாம் குருடருக்கு ஒப்பானவர் என்பதே இதன் பொருள். (ஹிந்தியில் ठौर (டௌர்) என்றால் அடைக்கலம். )

நானும் சில வருடங்களாக எனக்கேற்ற குருவை எப்படிக் கண்டறிவது என்ற சிந்தனையிலேயே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். சுவாமி ஓம்காரானந்தாவை சென்று சந்திக்க ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அவர் திடீரென்று கோவிட் தொற்றில் சமாதி அடைந்து விட்டார். என் தேடல் தொடர்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு  ஒரு யூட்யூப் காணொளியில் ஸ்ரீ வி. வி. பிரம்மம்  என்பவரை பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆந்திராவில் தாடிபத்ரி யில் அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சிறு வயதிலிருந்து பஞ்சாட்சிர செபம் செய்து திருவண்ணாமலை ரமணருடைய சமாதி முன் ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவர். இது நடந்தது அவருடைய இருபத்தியெட்டாம் வயதில். தற்போது 79 வயதாகியுள்ள ஸ்ரீ பிரம்மம்  ஒரு விருத்தாஸ்ரமும் அனாதைகளுக்கான இல்லத்தையும் ஸ்ரீ ரமணரின் பெயரில் தன் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி நடத்தி வருகிறார். யாரிடமும் நிதி கேட்டு செல்வதில்லை. அவருடைய பிள்ளைகளும் மருமகனும் இவைகளை கவனித்துக் கொள்வதில்அவருக்கு பேருதவியாக இருக்கின்றனர்.

" அவருடைய சொற்பொழிவை கேட்க அறையில் நுழைந்த உடனே என்னை ஒரு பேரமைதி கவ்விக் கொண்டது. அப்போது இன்னமும் அவர் அறைக்குள் வந்திருக்கவில்லை. சொற்பொழிவிற்குப் பின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இருந்தது. பலரும் பற்பல கேள்விகளுடன் வந்திருந்தனர்.  ஆனால் அவர் பேசி முடித்ததும் எல்லோருடைய சந்தேகங்களும் மறைந்து போயின. கேள்விகள் இல்லாமலே அவரவர்களுக்கு தேவையான பதில் கிடைத்திருந்தது.  எந்த அமைதியை வாழ்நாளெல்லாம் நான் தேடினேனோ, குருஜியின் சந்திப்பிற்குப் பின் அதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அனுபவித்தேன்"  

மேற்கண்ட அனுபவத்தை சொல்லியிருப்பவர்  "யங்கா" என்னும் செக்கோஸ்லோவேகிய அன்பர். அந்த காணொளியை பதிவின் கடைசியில் காண்போம்.

இப்படி பலவாறாக தூண்டப்பெற்று  அப்பெருமானை சந்தித்து ஆசிகள் பெற்று வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்ற மாதம் 23 ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து கிளம்பி, என் மனைவி மகனுடன், அவருடைய இல்லத்தை சென்றடைந்தோம்.   அவரை நமஸ்கரித்த பின் அவருடைய முதல் கேள்வி ( எல்லாம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்)

" எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்" ? 

" தங்களுடைய ஆசிகளை பெற்றுச் செல்லலாம் என்று....."

" எங்கிருந்து வருகிறீர்கள் ?"

"புட்டபர்த்தி "

"சத்யஸாயியே ஒரு அவதாரம். அவர் சொன்னதை கடைபிடித்தால் போதும். அதைவிட்டு ஏனிப்பிடி சுற்றுகிறீர்கள்? "

 ( அமைதி)

 "ஆசி வேண்டுமென்றால் அதற்கு தகுதி வேண்டுமல்லவா?"

(பொட்டென்று முகத்தில் யாரோ அறைந்தது போலிருந்தது. )

" சரி, தியானம் செய்வது உண்டா?"

"குருஜி,  காலை மாலை காயத்ரி செபம் செய்வேன், அடிக்கடி நாமசங்கீர்த்தனம், குருவார பூஜை என்று வீட்டில் ஏதாவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்...."

"அவைகளெல்லாம் வெறும் மனதை சுத்தப்படுத்துவதற்கே அல்லாமல் அவற்றால் சாட்சாத்காரம் கிடைக்காது.  It is all play of the mind . The ego will not go. தியானம் செய்யுங்கள். தினமும் விடாது செய்யுங்கள்" என்று அறிவுறுத்தினார்.  

'நமது இயற்கை குணமே ஆனந்தம், ஒரு குழந்தைக்கு உள்ளது போல. யாவும் மனதின் சலனம். அதில் அமைதியை தேடுவதும் அடங்கும்'. 

காயத்ரி செபம் செய்யும் போது  அதன் மூலத்தில் எழும் சப்தத்தை கவனி. 

( இதைத்தான் மாணிக்கவாசகர் " ...உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா " என்று சிவ புராணத்தில் கூறுகிறாரோ !)

 என்று பலவாறான விளக்கங்களை  தந்து நாற்பது நிமிடங்களை எங்களுக்காக ஒதுக்கினார். நேரம் மதியம் 2:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

விடைபெறும் முன் என் மனைவிக்கு மட்டும் சுமார் பத்து நிமிடங்கள் தலை மீது கையிட்டு தியானத்தின் அமைதியை உணர்த்தினார்.

 அது அவர் விடாது செய்து வரும் குருவார குரு பூஜையின் பலன் என்று நான் நினைத்துக் கொண்டேன். ( எனக்குத்தான் தகுதி இல்லையென்பதை ஆரம்பித்திலேயே உணர்த்தி விட்டாரே) .

அவரை நமஸ்கரித்து விடைபெற்ற பின் அவருடைய இல்லத்திலிருந்து நான்கைந்து கி மீ தூரத்திலிருந்த ஆஸ்ரமத்திற்கு ஒரு உதவியாளர் அழைத்துச் சென்று எங்களுக்கு மதிய உணவு அளித்தார். பெண்ணாற்றங்கரையில் அமைந்த அந்த ஆசிரமத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். நூறு சிறுவர் சிறுமியரை தினமும் பாலித்தல் வேண்டும் என்றால் இறைவனுடைய சங்கல்பம் இல்லாமல் முடியாது. 

மனதை ஒதுக்கி இதயத்தால் (அன்பினால்) மட்டுமே சாட்சாத்காரம் கிட்டும் என்பதை காணொளி நேர்காணலிலும் அவர் வலியுறுத்துவதைக் காணலாம்.

இந்த நிலையை அடைவதற்குத்தான் ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற பக்தியும் சரணாகதியும் தேவைப்படுகிறது.  

முழுவதுமாக பாருங்கள்  


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் 
                       தம்முயிர் போலெண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார், 
                                         யாவர் அவர் உளம் தான்
சித்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
                         இடமென நான் தெரிந்து கொண்டேன்
அவ்வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட 
                               என் சிந்தை மிக விழைந்ததாலோ- அருட் பிரகாச வள்ளலார்.

Those who are interested can also see more videos at his Youtube Channel 

அனைவருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துகள்

Saturday, August 06, 2022

காக்கையில் காண்பார் அப்பனை

 உலக வாழ்க்கையில்  பெரும்பாலும் நமது பேச்சும்   நடத்தையும்   முரண்படும் போது    நகைப்பிற்கு  இடம் கொடுக்கிறோம். அனைத்து கேலி சித்திரங்களும் -அரசியலாகட்டும், சமூக நடப்புகளாகட்டும்- இந்த முரண்பாட்டை  சுற்றியே  எழுகின்றன.  குழந்தைகள் எதிர்பாராதபோது உண்மைகளை போட்டுடைக்கும் போது  எழும் தர்மசங்கடங்களும் சிரிப்பை வரவழைப்பனவே.

வழிவழியாக  வரும் நம்பிக்கைகளை  அதன் தாத்பரியம் அறியாத மக்கள் கடைபிடிக்கும் போது அறியாத சிறு குழந்தைகள் போல் ஆகி விடுகின்றனர்.  ஒரு நிலையில் அவர்களின் செய்கை மூட நம்பிக்கை என்ற நிலைக்கு  ஆளாகிறது. 

உதாரணத்திற்கு கபீர் ஒரு பாடலில் சொல்வார் "கங்கையில் மூழ்குவது மோட்சம் என்றால் காசியின் எல்லா காகங்களுக்கும்  மோட்சம் சுலபமே"  என்று கேலி செய்வார். 

  இங்கே  அவர் கங்கையின் புனிதத்தைப் பற்றி கேலி செய்வதாகக் கொள்ளக் கூடாது.  ஏனெனில் அவர் ஒரு ஞானி. அவர் கண்டிப்பாக ரிஷி முனிகளின் வாக்கில் தவறு இருப்பதாக சொல்ல மாட்டார். அப்படியானால் அவர் சொல்ல வருவது என்ன?

 இதை விளக்க ஒரு கதை உண்டு. 

பார்வதி தேவிக்கும் இதே சந்தேகம் வந்தது. "கங்கையில் நீராடுபவர்கள் எல்லோருக்கும் பாவங்கள் கரைந்து விடுமா?"  என்று கேட்கிறாள்.  " சரி வா ! அதையும் பரீட்சை செய்யலாம் "  என்று  சொல்லி இருவரும் காசியை அடைந்தனர்.

      சிவன் கங்கை கரையில் ஒரு குஷ்ட ரோகியாய் வேஷம் எடுத்து படுத்திருக்க  பார்வதி  அவன் மனைவியாய் நாடகம் ஆடினர். கங்கைக்கு வருவோர் போவோரையெல்லாம் தன் கணவருக்கு 'பாவங்களை கழுவும்; ;கங்கையில் நீராட உதவ வேண்டுமாறு வேண்டிக் கொண்டாள். நூற்றுக்கணக்கான பேர் அவர்களை பொருட்டாகவே கருதவில்லை. ஒரு சிலர் கேலி செய்து கொண்டே சென்றனர். இன்னும் பலர் உதட்டளவில் அனுதாபம் காட்டினர். ஆனால் யாரும் அவரை நதி வரையில் தூக்கிச் செல்லவோ நீராட்டவோ முன் வரவில்லை.  எங்கோ சென்று கொண்டிருந்த  ஒரு கீழ் நிலை மனிதன் அவர்கள் மேல் அனுதாபம் கொண்டு அந்தரோகியின் கங்கையில் நீராடும் விருப்பத்தை நிறைவேற்றி  அவர்களை வணங்கிச் சென்றான்.

அப்போது சிவபெருமான் தேவியிடம் கூறினார் "இவ்வளவு ஜனங்களில் மோட்சத்தை பெறப் போவது இவன் மட்டுமே.  ஜீவகாருண்யம் இரக்கம் போன்ற பண்புகளுடன் விருப்பு வெறுப்பற்றவன், மேன்மேலும் பாவ செயல்களை செய்யாதவன் இவர்களுக்கு மட்டுமே மோட்சம் சித்திக்கும்.  அநேகம் பேர் இதை ஒரு குருட்டு போக்கில் சித்த சுத்தியின்றி செய்வதால் அவர்களுக்கு எவ்வித பயனும் இருப்பதில்ல. மேலும் சிலர் வெளி பகட்டாகக் காட்டிக் கொள்கின்றனர் " என்று  துவங்கி  உண்மையான பக்தனுக்கு தேவையான குணங்களைப் பற்றி  மிகவும் விஸ்தாரமாக விளக்கியதாக கதை செல்கிறது.

இந்த அடிப்படைத் தகுதியை மக்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கபீர்தாஸ் போன்ற ஞானிகள் இடித்துரைக்கின்றனர்.

அது போன்றே இன்னொரு இடித்துரை கபீர் சொல்வதும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

जिंदा बाप कोई न पुजे,  मरे बाद पुजवाया | 

मुठ्ठी भर चावल  लेके,  कौवे का  बाप  बनाया || 



அப்பனை  வாழ்க்கையில் மதியார், அவர் மரித்த பின்வழி படுவரே |

அங்கை நிறைய  சோறெடுத்து  காக்கையில்  அப்பனைக்  காண்பரே ||

மாற்று :

அப்பன்  வாழும்  போது மதியார், அவர்மரித்த பின்வழி படுவரே |

 அப்பனை காக்கை  யாக்கி, கைநிறைய  அமலை படைப்பரே ||  

{அமலை : வெண்சோறு, சோற்றுத் திரள் )

நம்முடைய முன்னோர்களுக்கு ஈமக்கடன் ( சிராத்தம்) செய்வது என்பது காலங்காலமாக  இருந்து வந்திருக்கிறது.  சங்க இலக்கியங்கங்களிலும்  காலமான முன்னோர்களை 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை தலையானது. 

திருவள்ளுவரும் 

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

என்று அன்றாடக்  கடமைகளில் முதலிடம்  முன்னோர்களுக்குத் தருகிறார்.

படைத்தல் அல்லது நிவேதனம் என்பது நமக்குள்ளே ஒரு பொறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சடங்கு என்பதை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவம் புரியும். நன்றி உணர்ச்சி பெருகும் இடத்தில் மட்டுமே சண்டை சச்சரவுகள் இன்றி அமைதி இருக்கும்.  ஒரு சிறு குடும்பமோ, நாம் சார்ந்த சமூகமோ ,வசிக்கும் நாடோ எதுவானாலும்  நம்முடைய மகிழ்ச்சிக்கும் வளமைக்கும் இந்த நன்றி உணர்ச்சியே அடிப்படையாகிறது. அது மனதில் குடிகொள்ளும்போது சுயநலம் மறைகிறது, விட்டுக் கொடுக்கும் பண்பு வளர்கிறது.

சூரியனுக்கு நன்றி சொல்ல பொங்கல் படைக்கிறோம். சூரியன் வந்து சாப்பிடுகிறானா என்ன என்று கேள்வி கேட்பவர்களுக்கு பரமாச்சாரியர் சொல்கின்ற அழகான பதிலை பாருங்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது சமூகத்திற்கு ஆற்றும் கடன். அதற்காக அவர்கள் மேற்கொண்ட கஷ்ட நஷ்டங்களை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்வதற்கான சடங்கே சிரார்த்தம்.  ஆனால் அவர்களின் முதிய காலத்தில் கவனிக்காமல் புறக்கணித்து முதியோர் இல்லங்களில் தனிமையில் கழிக்கவிட்டு அவர்களின் மரணத்திற்குப் பின் செய்யப்படும் ஈமக் கடனை நன்றி சொல்வதாக பொருள் கொள்ள முடியுமா என்ன? 

இந்த பிரச்சனை இன்று நேற்றல்ல கபீர்தாஸரின் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பது  அவருடைய மேற்கண்ட ஈரடியில் விளங்குகிறது.

கபீர், தயானந்தர், விவேகானந்தர், நாராயண குரு என்று எவ்வளவு சமூக சீர்திருத்தவாதிகள் வந்த போதிலும்  மனிதர்கள் போக்கில் பெரிதாக மாற்றம் தெரிவதில்லை. ஒருவேளை அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகப் போயிருக்குமோ என்னமோ !!